– பெருந்தேவி –
பொதுக் கழிவறைச் சுவர்களில்
கலை ஆர்வத்தோடு
கணவனைப்
படம்போட்டு பாகம் குறிக்க
எந்தக் கண்மணிதான்
நினைப்பதில்லை?
– பெருந்தேவி –
பொதுக் கழிவறைச் சுவர்களில்
கலை ஆர்வத்தோடு
கணவனைப்
படம்போட்டு பாகம் குறிக்க
எந்தக் கண்மணிதான்
நினைப்பதில்லை?
– மோனிகா மாறன் –
எதற்காக எழுதுகிறேன்? இதற்கு தனிப்பட்ட முறையில் என் பதில்- சிறந்த எழுத்து வாசிப்பவரைத் தொடர்ந்து சிந்திக்கவும் எழுதவும் வைக்கும் என்பதே. ஆக என் வாசிப்புகளின் தொடர்ச்சியே என் எழுத்து. எழுதி எழுதியே நம் தரவுகளை உருவாக்கிக் கொள்ள இயலும். அந்த வகையில் எழுத்து எனக்கு ஆக்கப்பூர்வமான தரவுகளையும் வாழ்வியல் வரைமுறைகளையும் உருவாக்குகிறது.
வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களை இச்சமூகம் எளிதில் ஏற்பதில்லை. என்னைப் பொருத்தவரையில் மிகச் சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகிற்கு வந்துவிட்டேன். எனவே நான் வாசித்த மிகப்பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றியே என் செயல்கள், பேச்சுகள் இருக்கும். ஆனால் நம் சமூகத்தின் பொதுவெளியில் அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக அவர்களின் காலங்காலமான நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிவிட இயலாது. அது மதமோ சினிமாவோ இலக்கியமோ அரசியலோ எதுவாக இருந்தாலும் நம் எண்ணங்களை வெளிப்படையாக இயம்புதல் எளிதானதன்று. இவ்விடத்தில் ஒரு பெண்ணாக இதனை நான் தீவிரமாக கூற இயலும்.
பொதுவாக, இதைப் பற்றியெல்லாம் நீ ஏன் பேசுகிறாய் என்ற பாவனையே எனக்கான எதிர்வினையாக இருக்கும். இத்தகைய சூழலில் எழுத்துலகம் எனக்கு முழுமையான வெளியாகவே உள்ளது. என் நினைவுகளை, சிந்தனைகளை மிக உண்மையாய் கட்டுப்பாடுகளற்று வெளிப்படுத்தும் தளம் எழுத்துதான். அத்தகைய விடுதலையை வேண்டியே நான் எழுதுகிறேன்.
தீவிர வாசிப்பும் நுண்மையும் கொண்ட எனக்கு எழுத்து என்பது என் இருத்தலின் ஆகச்சிறந்த உளவியல் வெளிப்பாடு. எழுதுவதால் என் கருத்துகள், கொள்கைகள் மேலும் மேலும் வலுப்பெற்று என்னை உருவாக்குகின்றன. சில வேளைகளில் நான் எழுதும் படைப்புகளை எந்த இதழுக்கும் அனுப்பாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் அவை எனக்காக எழுதப்பபட்டவை. உண்மையில் பிரசுரமானவற்றைவிட பிரசுரமாகாத படைப்புகள் என்னிடம் நிறைய உள்ளன.
எந்த இதழுக்கு அனுப்பினாலும் இல்லையென்றாலும் தினமும் எதையாவது எழுதுவது என் இயல்பு.. எப்படி வாசிப்பின்றி என் நாள் நிறைவுறாதோ அதே போன்று ஒரு பக்கமாவது எழுதாமல் முடிவுறுவதில்லை. எத்தனை பணிகள் இருப்பினும் எந்தச் சூழலிலும் என்னால் எழுத இயலும் என்பதை தன்னம்பிக்கையுடன் கூற இயலும்.ம ஏனெனில் இன்று அதிகம் பேர் நேரமில்லை, சூழல் சரியாக இல்லை என்றெல்லாம் காரணங்கள் கூறுகிறார்கள்.
எனில் எப்படி என்னால் எழுத இயலுகிறது? தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், இணையம் என்று பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில் இலக்கியம், தீவிர வாசிப்பு என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலோட்டமாக அதிகபட்ச கவன ஈர்ப்பாக பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் கூர்ந்து நோக்குவதற்கு நிறைய பேருக்கு விருப்பமில்லை. இவையெல்லாம் தெரிந்தும் எதற்காக எழுதுகிறேன்? எழுத்து என் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வழி மட்டுமன்று. அது என் வாழ்வின் அனைத்து செயல்களிலும் உள்ளது என்றே கூறுவேன். நான் எழுதுவதாலேயே பிறருடன் என் உறவுகள் மிகச்சீராக உள்ளன. அந்த புரிதலை உண்டாக்குவது என் எழுத்தே. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உண்மையான இயல்பு பிறர் நடத்தும் பாவனைகள், மெலோடிராமாக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள அடிப்படை நான் எழுதுவதே.
பொதுவாக நான் மிக இயல்பாக, எளிதாக அனைவரிடமும் பழகும் இயல்புடையவள். என் நட்பு வட்டம் மிகப்பெரியது. என் கருத்துகளுடன் முரண்பட்டாலும் என்னுடன் பழக மிக விருப்பத்துடன் உள்ள நண்பர்களே அதிகம். நிறைய பேர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் விருப்பத்துடன் கேட்கும் வகையில் உண்மையுடன், கூரிய தரவுகளுடன், நண்பர்களிடமும் உறவுகளிடமும் சுவாரசியமாக பேசும் உற்சாக மனநிலை என் எழுத்தின் வாயிலாக நான் அடைந்ததே. எவரிடமும் பொய் முகம் காண்பிக்காமல் உண்மையாய் இருப்பது எத்தனை கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும்.
இத்தகைய சூழலில் பூச்சுகளற்று உண்மையுடன் வாழ எனக்கு அடிப்படையாக உள்ளது என் எழுத்தே. அந்த உண்மைத்தன்மையை, நட்புணர்வை, எவரையும் நேசிக்கும் பண்பட்ட மனதை எனக்களித்தது என் எழுத்தே என்று நான் உணர்ந்திருக்கிறேன். சமூகம், உறவுகள் சார்ந்த என் உள எழுச்சிகளை, கோபங்களை நான் எவரிடமாவது நேரடியாகக் கூறியிருந்தால் இன்று நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்திருப்பேன். மனச்சீற்றங்களை என் எழுத்தில் கொட்டித் தீர்ப்பது என்னளவில் மிக இயல்பான மன நிறைவு என்பேன்.
எழுத்தின் வாயிலாக நான் உணரும் மனித மனங்களின் நுண்ணுணர்வுகள் வாழ்வில் அவர்களுடன் பழக எளிதாக உள்ளது. சோர்வுகளற்று, புலம்பல்களற்று, முணுமுணுப்புகளற்று, பேராசைகளின்றி வாழ்வின் எளிய மகிழ்வுகளையும் உன்னத அனுபவங்களையும் உற்சாகமாய் எதிர்கொண்டு பிறருக்கும் அந்த மனநிலையைக் கடத்தும் அளவிற்கு என்னை வைத்திருப்பது என் எழுத்தே. பிறரிடம் எனக்கான இடத்தை அளித்ததும் எழுத்துதான் என மகிழ்வுடன் பகிர்கிறேன்..
oOo
(மோனிகா மாறனின் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதைகள் மற்றும் சில கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இவரது நாவல் ஒன்று எழுதி முடிக்கப்பட்டு வெளியாக உள்ளது. செவ்வியல் மற்றும் தீவிர இலக்கிய வாசிப்பில் அதிக நாட்டம் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் பல முக்கிய புத்தகங்களுக்கு விமர்சனங்கள் எழுதியுள்ளார். வேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்).
அடர்
ஆதி வெம்மையினின்று
ஒழுகி வந்த
ஒற்றை முலையமுதம்
ச்யாமளம்
கனவின் ஆழம்
அறியமுடியா உன்னதம்
பேதமறியா
அந்தக உலகின்
அந்தமில்லா வாசி
சியாமளீ
இன்னும் பின்னும்
தேடியடைய
விழையும் கருக்கூடு
ஆடி அடங்கும் புலன்
சாயும் மடி ச்யாமளம்

ஏன் எழுதுகிறேன்? வருகிறது, செய்கிறேன். சுவாசம் போல. மறக்கையில் நிற்கும். எழுத்தும்.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… எனத் தொடங்குகிறது ஆற்றல் பானத்திற்கான ஓர் விளம்பரப் பேச்சு. எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்தே… நான் எழுதி வருகிறேன். வீட்டு முற்றத்தின் செம்மண் படிக்கோலத்தின் மீது நெல் கொட்டி, அதில் கிழக்கு பார்த்து தாத்தாவின் மடியில் இருந்தவாறு சூரியன் சாட்சியாக முதல் எழுத்தை ‘அ’ என விரலினால் எழுதினேன். அறியாது எழுத்தறிவிக்கப்பட்ட இதற்குப் பல வருடங்களுக்குப் பின்னரே எழுத்து ஆ என்றானது எனக்கு. இடையில் தலையெழுத்தில் கையெழுத்து மறைந்து மின் திரையெழுத்து மிளிர்ந்துவிட்டது, மலிந்து விட்டது.
பிடித்தவை இரண்டு வகை. நமக்குப் பிடித்தவை. நம்மைப் பிடித்தவை.
குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு, கோட்-சூட் பிழைப்பு இன்னபிற பழகப் பழக நமக்குப் பிடித்தவை என்றாகியிருப்பவை. முகநூல் மொக்கைகள் பலதும் இன்று லைக் பெற்று நமக்குப் பிடித்தவை என்றாகிறது.
வளர்கையில் பிறரது பாராட்டும் அங்கீகாரமும் அவற்றினால் கிடைக்கப்பெற்ற பிரபலத்துவமும் (எவ்வளவு சிறிய கால இட அளவுகளில் என்றாலும்) நமக்குப் பிடித்தவை என்பதில் சேர்ந்துகொள்ளும். பெற்றோர் பரிந்துரையில் அல்லது கெடுபிடியில் பரிச்சயமற்ற விருந்தாளிகள் முன்னிலையில் ட்விங்கிள் ட்விங்கிள் என்று அவ்வையை யார் என மழலையில் நாம் வண்டர் செய்வது, கிடைக்கும் பாராட்டை நமக்குப் பிடித்தவற்றினுள் வரிக்கத் தொடங்குவதால். பிறிதொரு நாள் மேலாளர் கட்டளைகளைக் கெடுவிற்குள் சிறப்பாய் முடித்துவிட்டதாய்க் காட்டிக்கொள்ளப் பழகுவது பிழைப்பிற்கு என்றாலும், மழலையில் மனத்துள் வரித்த பிறரிடமான அங்கீகாரப் பாராட்டு பெறுதல் இன்று நம்மை இறுகப் பிடித்துவிட்டது என்பதாலுமே. பிழைப்பதற்கும், சார்ந்த துறையில் வளர்வதற்கும் இவ்வகை அங்கீகாரப் பாராட்டுக்கள் மூலதனம்.
பாராட்டைப் பெறுவது பழக்கமாகிவிட, அதைத் தொடர்ந்து பெற்றிடும் வழிகளில் ஒன்றாய்ப் பிறருக்குப் பிடித்தமானதை எழுதவும் தொடங்குவோம். படித்துவிட்டுப் பாராட்டுவார்களே என்று. சில காலமாவது இச்செயல்பாட்டின் குடுக்கல் வாங்கல்கள் நம்மில் சிலருக்குத் திருப்திகரமாக அமைந்து விடலாம். ஆனால் இவ்வகை எழுத்தில் படிப்பவர்களுக்குப் பிடித்தமானது எதுவென்று எழுதும் நமக்குத் தெரியாது போனாலோ, படித்தவருக்குத் தான் படித்தது தனக்குப் பிடித்துள்ளதா என்பதே தெரியாதுபோனாலும், நாம் எதிர்பார்த்த பாராட்டு நமக்குக் கிடைக்காது. அல்லது கிடைக்கும் பாராட்டு நாம் எழுதியதற்கா என்பது புரியாது. இவ்வாறு ஆகுகையில்… எழுதுவதை நிறுத்திவிடுவோம். நமக்குப் பிடித்த பிறரது அங்கீகாரப் பாராட்டைப் பெறுவதற்காகவே நமக்குப் பிடித்துப்போனதாய் ஆக்கிக்கொண்ட எழுத்துதானே.
நமக்குப் பிடித்தவை பலதும் இவ்வகையே. சந்திக்கும் முதல் இடர், குழப்பம், நிர்பந்தம், நமக்குப் பிடித்தவற்றை விடச் செய்துவிடும். குஞ்சாலாடு, கோணேஸ்வரர் ஆலயம், குடமுருட்டி ஆறு… காலத்தில் விட்டுவிட முடிந்தவைதானே.
நம்மைப் பிடித்தவை வேறு வகை. பேய், பெருமாள், பெண்மை, பேதமை, போதாமை, பையித்தியம், பொருண்மை ஈர்ப்பு… சிறு வயது பழக்கங்கள் பல இவ்வகை. அவற்றுள் ஓரிரண்டு நல்லவை என்றாவதும் உண்டு. எழுத்து எனக்கு அதில் ஒன்று.
எப்படித் தெரியும் என்றால், அது எனக்கு நன்றாய் வருகிறது என்பதை மற்றவர் உணரும் முன்னரே அது எனக்கு இயல்பாய் வருகிறது என்பதை உணரமுடிந்ததால்.
பிடித்த வேலை இல்லை எழுத்து, பிடிக்கவில்லை என்றதும் விட்டு விட. பிழைப்பு இல்லை, இது அழைப்பு. அரிப்பு. நமைத்தல். அழைப்பின் தனித்தன்மை அதைச் செயலாக்குவதற்குப் பலனாய் பெரும்பாலும் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். வேலை என்பதற்கான வருமானம் போல. துறை என்பதற்கான வளர்ச்சிநிலைகள் சாதனைகள் போல. பிறரது அங்கீகாரப் பாராட்டு போல. நமக்கான அழைப்பிற்கு இணங்காமல் நம்மால் உயிர்வாழ முடியாது. அவ்வளவே. அழைத்தது எழுத்து. ஏற்றது மட்டுமே என் முடிவு. ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்கிற உணர்தலே ஏற்றது எனக்கான அழைப்பை என்பதையும் உணர்த்தியது.
நான் தனிமை விரும்பி. சிறுவயது முதல் எண்ணங்களை எழுத்திலேயே வெளிப்படுத்தினேன். வாசிக்கப்போகும், வாசித்து என்னை அப்படியே புரிந்துகொள்ளப்போகும், புரிந்துகொண்டு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளப்போகும் அந்த என் முகமற்ற நண்பருக்கு, மனித உருவற்ற மனத்திற்கு. பள்ளிப் பருவத்தில் தொடங்கி அம்மனத்திற்குதான் எழுதுகிறேன். இம்மனத்தையும் அம்மணத்தையுமே எழுதிவைத்துள்ளேன். அன்றென்ன இன்றென்ன என்றுமே அப்படி ஒருவர்/ஒரு மனம் இருக்கப்போவதில்லை என்று தெரிந்துபோன பிறகும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் புரிந்ததது; எனக்குப் பிடித்தது இல்லை எழுத்து, என்னைப் பிடித்துக்கொண்டது அது என்று.
எனக்குப் பிடித்தவற்றை என்னால் விட முடியும். முகநூல் மொக்கைகளை அன்-லைக் செய்ய வழி உண்டு. முகநூலையே அப்பீட் ஆக்க வழி உண்டு (அட நிசமாலுமே உண்டுமா…). எழுத்தை விடுவதற்கு வழி என்னிடம் இல்லை. லைக்-கை அன்-லைக் செய்யலாம். (மனச்) சாய்வை நிமிர்த்த வழி இல்லை. எழுத்து இவன் பிறவிக் கூன். பணிந்தே ஏற்கிறேன். பயின்றே உயர்கிறேன்.
பிறர் வாசிக்க அளிப்பதற்கு என்று இல்லாத பலவற்றையும் எழுதுகிறேன். என் பல எண்ணங்கள் உருப்பெறுவதே அவற்றை எழுதப் போகையில் தான். உணர்வுகளின் வடிகால் என்பதால், எழுதுகையில்தான் அவற்றை அனுபவித்ததை உணர்ந்துள்ளேன். தெளிவடைய எழுதியுள்ளேன் என்பதையே எழுதித் தெளிவடைந்த மனமே உணர்த்துகிறது.
பிழைப்பு, சார்ந்த துறை இவற்றில் இன்று எழுதிக் குவிக்கிறேன். இதை உணர்ந்தே இப்பிழைப்பை தேர்வு செய்தேன். பிறர் வாசிக்க, ஏற்க, கருத, பரிசீலிக்க, புரிந்துகொள்ளவே இப்பணியில் அறிவியல், ஆய்வுகள், விளக்கங்கள் என்று எழுதுகிறேன். இங்கும் எழுதிய அனைத்தையும் வெளியிடுவதில்லை. படித்ததை புரிந்துகொள்ள, செய்த ஆய்வைப் புரிந்துகொள்ள, எடுக்க வேண்டிய வகுப்பிற்கான விளக்கங்களைத் தொகுத்துக்கொள்ள… பலவற்றையும் எழுதித்தான் தெளிந்துகொள்கிறேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை. எனக்கானது. என் சிந்தனையை உருவாக்கித் தொகுப்பது எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.
கோபம் வருகையில் எழுதுகிறேன். மகிழ்ச்சியில் வருத்தத்தில் ஆங்காரத்தில் அவலத்தில்… நாட்டின் பெருந்தலைவர் கொலையுண்ட போதும் எழுதியுள்ளேன்; என் தாத்தா இறந்த போதும் எழுதியுள்ளேன். மகன் என்று நினைத்த என் மகள் பிறந்தபோதும் எழுதியுள்ளேன். அம்மகளை ஈன்றவளை என் மனைவி என்று (அதற்கு ஒரு வருடம் முன்னால்) அறிந்துகொள்வதற்கும் எழுதினேன். மற்றவருக்கான எழுத்தல்ல இவை என்பேன். எனக்கானதும் இல்லை. என் ஆளுமையை உரித்துப் புதிதாய் உருவாக்கும் எழுத்து. என்னைப் பிடித்த எழுத்து.
பிறருக்கும் எழுதுகிறேன். அதாவது, மேலே கூறிய வகைகளில் எழுதியதில் சிலவற்றை மற்றவருக்கும் காட்டுகிறேன். வாசிக்க அனுமதிக்கிறேன். பொய்யை முடிந்தவரை உண்மை போலவே புனைவென்று அளிக்கிறேன். உண்மையா என்று பலவற்றைப் பரிசீலித்துப் புனைவற்றதாய் அளிக்கிறேன். சிலவற்றை புத்தக வடிவில். பலவற்றை — இன்று அவ்வாறு முடிவதால் — இணையத்தில். முடிந்தவரை விலையற்றதாய். ஏனெனில், நம்மைப் பிறரிடம் வெளிப்படுத்துவதற்கானதே கலை; இப்புரிதலின் தேய்நிலை, நாம் வெளிப்படுத்துவதெல்லாம் கலை எனும் புரிதல்.
பிறர் வாசிப்பதற்கு எழுதுவதால் அவர்களது அங்கீகாரம் கிடைக்கப் பெறலாம். இது பக்க விளைவு. எழுத்தே செயல். அதைச் செய்வதே அதற்கான விளைவும். அங்கீகாரத்திற்கு, பாராட்டிற்கு என்று எழுதுவது பிழை. நம்மைப் பிடித்ததை நமக்குப் பிடித்ததாய் மாற்றிவிடும் செயல். உலகில் எஞ்சும் ஒரே மனிதனுக்கு அவசியமற்றது எழுத்து, கலை எனலாமா?
உணர்வுகளை நம்மில் இருந்து, நம்மை விட்டுக் கடத்தும் கருவிகள் பல. எழுத்தைப் போல. எழுத்துக் கலை சார்ந்த பல்வகைக் கலைகள் உள்ளனவே. பொதுவாக்கினால், வெளிப்படுத்தல். சிந்தையை உணர்வை எழுத்து, ஓவியம், இசை, நாட்டியம் என்று ஏதோ கருவி வழியே மற்றவரிடம் வெளிப்படுத்தல். அக்கருவியே கலை என்பார் தொல்ஸ்தோய். வெளிப்படுத்தலே வாழ்வு என்று ஒரு கூற்று உண்டு. வெளிப்படுத்தல் ஒரு போர். மனப் போர். அதைச் செய்திருப்பதே வாழ்வு. போரும் வாழ்வும் கலையாவது மனத்தின் அழைப்பில்.
வருமானத்திற்கு எனச் செய்யப்படாமல் இருக்கையிலேயே கலை நேர்மையாய் வெளிப்படுகிறது என்பார் தொல்ஸ்தோய். அப்போதுதான் கலை பிரதிபலன் வேண்டா மனத்தின் அழைப்பாய் உயர்கின்றது எனலாம். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தாயுமானவரின் அழைப்பு. என் பணி கலை செய்து கிடப்பதே என்பது தொல்ஸ்தோய் போன்றோரின் அழைப்பு.
ஆனால் தொல்ஸ்தோய் கௌண்ட். பிரபு. வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமையில் (போரில் பங்குபெற்று) வருமான வேலை செய்தாலும் நாளடைவில் மாளிகையில் அமர்ந்து தனக்கான அழைப்பைச் செயல்படுத்தினார். அனைவருக்கும் அவ்வாறு அமையாது. அமைந்தாலும் அத்தனை அன்னா கரனீனாக்களை உலகம் தாங்குமோ தெரியாது.
நல்லவேளையாக எழுத்தையே பொருளீட்டும் தொழிலாகக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை என்னை வைக்கவில்லை. எனக்குப் பிடித்த வேலை தரும் வருமானம், எனக்கான அழைப்பில் அதைத் தேட வைக்கவில்லை. நான் எழுதுவது அது என் அழைப்பு என்பதால். இதன் மறுபக்கம், அவ்வெழுத்திற்கு உகந்த வாசகனுக்கு மட்டுமே அதனை வாசிப்பது அழைப்பாகும். நான் வெளிப்படுத்தும் எழுத்து அனைவருக்கும் அன்று. உங்களின் அழைப்பிற்கு மட்டுமேயானது. உங்கள் அழைப்பை நீங்கள் ஏற்கையில் என் அழைப்பின் பலனைக் கண்டடைவீர்கள்…
…என்று என் அழைப்பைப் பற்றி எழுதிவைக்கும் இதுவும் உங்கள் வாசிப்பு அழைப்பிற்கே.
oOo
(அருண் நரசிம்மன் ஒரு பேராசிரியர். சென்னைவாசி. ஶ்ரீரங்க விசுவாசி. ஆங்கிலத்திலும் தமிழிலும் இசைக் கட்டுரைகளும், சில அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளார். ‘அமெரிக்க தேசி’ இவரது முதல் தமிழ் நாவல். இணைய தளம் http://arunn.me/)
– வெ. கணேஷ்–

“எதற்காக எழுதுகிறேன்?”
நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்றுதான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவுதான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார் புலம்புகிறார்.
“ஆத்ம திருப்தி” என்ற ஒன்றா ? என்னுடைய எழுத்தில் எனக்கு திருப்தி கிட்ட வேண்டுமென்றால் பல தசாப்தங்கள் பிடிக்கும். இல்லை, அவ்வளவு நிச்சயமாக சொல்லி விட முடியாது. “திருப்தி” என்பது நம் கையில் கிடைக்காமல், நழுவித் தப்பித்துப் போய்க் கொண்டிருக்கும் ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன்.
“புகழ் பெற வேண்டும்” என்ற ஆசையா? ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம்! முப்பது வருடங்களாக கடும் உழைப்பைக் கொண்டு எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும்போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த்தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த குணங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல்!) சில வாரங்களுக்கு, சில மாதங்களுக்கு, அல்லது சில வருடங்களுக்கு என “புகழில்” நிலை நிறுத்த வைக்கும் ஜனத் தொடர்பு முகவர்கள் இருக்கிறார்கள். “புகழ்” என்பது வாங்கக் கூடிய பொருளாகிவிட்டது.
“நான் மக்களுக்கு சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்ற இலட்சியம்? இந்த வாக்கியத்தைப் படிக்கும்போது சிரிப்பு வராவிடில் உங்களுக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தம்!
பணம், திருப்தி, புகழ், இலட்சியம் – இவைகளெல்லாம் ஒருவரை எழுதத் தூண்டுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது. இறையருள், வரப்பிரசாதம் – என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களும் நம்பிக்கைகள் மட்டுமே.
கவிதை எழுதுவதற்கும் ஒரு புது வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கும் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்கும் அல்லது நாவல் எழுதுவதற்கும் இரண்டு வருடங்களில் விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கும் அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. திறன், ஆர்வம் – இவற்றைப் பொறுத்தே சாதனைகள் அமைகின்றன.
சலிப்பு அல்லது அலுப்பு? என்னைப் பொறுத்தவரை என்னை எழுத வைத்த காரணிகளில் (மற்ற காரணிகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்) மிக முக்கியமானவை இவைதான். பல வருடங்களாக விற்பனைத் துறையில் ஈடுபட்டிருப்பதாலோ என்னவோ என்னை விட்டு நான் தூரமாகப் போகிறேன் என்ற எண்ணம் அடிக்கடி என்னை படுத்திக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை நான் சலிப்பு என்றுதான் பெயரிடுவேன். இயங்கி வரும் துறையில் நான் கண்ட அபத்தங்கள் மற்றும் பாசாங்குகள் – இவைகள் தாம் அந்த சலிப்பை எனக்கு தந்ததாய் புரிந்து கொண்டேன். அந்த அபத்தங்களையும் பாசாங்குகளையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல்தான் என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம்.
மொழியை காதலிப்பவனுக்கு எழுத்தே “Orgasm” – என்று டிவிட்டரில் யாரோ எழுதியிருந்தார்கள்! உந்துதல், மொழி வாயிலாக எண்ணத்தை வெளிப்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் – இவ்விரண்டுமே எழுத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள்.
அபத்தங்கள், பாசாங்குகள் – இவற்றை மட்டுமே எழுதுதல் எழுத்தை புலம்பல்களாக மாற்றிவிடுகின்றன என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டேன். புலம்பல் தன்மையை மீறிய ஒன்றை – ஒரு செய்தியை, உணர்வை – பகிர்வதும் நல்ல எழுத்தின் இலக்கணம் எனப் புரிந்தது. அந்தப் பகிரல் நீதிக்கதையின் தொனியில் கூறப்படாமல் அழகியல் துணை கொண்டு நுட்பத்துடன் கூறப்படவேண்டும். பகிரப்படும் செய்தி அல்லது உணர்வு மனிதநேயத்தை வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் ; சார்பு மற்றும் பாரபட்சங்களை விலக்கியதாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நான் எழுதத் தொடங்கிய பிறகு கற்றுக்கொண்டவை.
அடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. என்னுள்ளில் இருக்கும் வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.
இதுவரை நான் எழுதியவற்றில் அதிகமும் பயணங்கள் பற்றிய கதைகள். பயணங்கள் தொடரும். பயணத்தின் முடிவில் இலக்கு என்று ஏதும் கிடையாது. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறிய வேண்டியது.
oOo
(லால்குடியில் பிறந்த வெ கணேஷ் தற்போது புது தில்லியில் வசிக்கிறார். விற்பனைத் துறைக்கு மட்டுமே உரிய அழுத்தங்கள் மற்றும் தொழில் சார்ந்த பயண அனுபவங்கள் இவர் சிறுகதைகள் பலவற்றின் தனித்துவமாக இருக்கின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் பசும்பிரதேசத்துக்கு உரியவர்களாய் நாமறிந்த விற்பனைத்துறை நிர்வாகிகள், அதிலும் குறிப்பாக பெண்கள், அதன் இரக்கமற்ற வெட்டுக்கத்தியின் கூர்முனையில் நாளும் எதிர்கொள்ளும் அகநசிவை இயல்பாக, எந்தவித நாடகத் தருணமுமற்ற கதைகளில் சித்தரிப்பவர் வெ. கணேஷ். ஜப்பானிய செவ்வியல் திரைப்படங்கள் இவரது பொழுதுபோக்கு, பௌத்த தத்துவம் பயில்தல் இவரது பேரவா. வெ. கணேஷின் முதல் சிறுகதை தொகுப்பு இவ்வாண்டு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது.)