எழுத்து

நகரம் கவிதைகள்- 1 அழுக்காக இருக்கிறதா

பாடல்(அழுக்காக இருக்கிறதா)

–ஃப்ராங்க் ஓ ஹாரா

அழுக்காக இருக்கிறதா
அழுக்காக தெரிகிறதா
அதைப் பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்

அழுக்குப்போல தோன்றுகிறதா
அதை பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
சுவாசிக்க மறுப்பதில்லைதானே, நீங்கள்.

யாரோ தீய குணத்துடன் வருகிறார்
வசீகரமாகத் தோன்றுகிறார். நிஜமாகவா. ஆமாம், மிகவும்
அவர் வசீகரமாகயிருக்கிறார், தீய குணத்துடன் இருப்பதால். அப்படியா. ஆமாம்

அதைப் பற்றிதான் நினைப்பீர்கள் நீங்கள் நகரத்தில்
பாசி-படராத மூளையைக் கோதி பாருங்கள்
அது ஒரு எண்ணமல்ல அது கரித்துகள்

ஒருவர்மீதிருந்து நிறைய அழுக்கை அகற்றினால்
அவர் குணத்தின் கேடு குறைகிறதா. இல்லை. அது தொடர்ந்து வளர்கிறது
சுவாசிக்க மறுப்பதில்லைதானே, நீங்கள்.

சந்திப்புள்ளிகளே இல்லாத இந்த கவிதையில் அழுத்தமான ஒரு தாளம் இருக்கிறது. அது நம் எண்ணங்களுடன் இயைகிறது. பெருநகரம் என்பது தொடர்ந்து விரிந்துகொண்டே இருப்பது. அது புழுதியைக் கிளப்பியவாறு இடிந்துகொண்டும் எழுந்துகொண்டும் இருப்பது. நகரத்தின் காற்றுடன் புழுதி கலந்திருக்கிறது.

முதன்முதலில் நகரத்தை எதிர்கொள்ளும் மனம், அதன் அழுக்குகளுடனே மோதுகிறது. நகரம் அதன் தன்னிச்சையான இயக்கத்தினுள் நம்மை இழுத்துக்கொள்ளும்வரை. தெருவோரங்களிலெல்லாம் அப்பட்டமான அழுக்கு குவியல்கள். அவற்றின் நடுவிலேயே வாழும் மனிதர்கள். மூர்க்கமாக இல்லாவிட்டால் நகரில் பிழைக்க முடியாது. ஒருவர் எத்தனைக்கெத்தனை மூர்க்கமாக இருக்கிறாரோ அத்தனைக்கத்தனை சாமர்த்தியமாக இருக்கிறார். பிளாட்பாரக் கடைக்காரர்களிலிருந்து வீட்டு உரிமையாளர், பேருந்து நடத்துனர் என எல்லோரும் சாமர்த்தியமாக இருக்கிறார்கள். அவர்களது அந்த கள்ளத்தனமான சாமர்த்தியம்தான் எத்தனை வசீகரமாக இருக்கிறது. நகரத்தின் குடியுரிமை வேண்டுமென்றால், இந்த சாமர்த்தியத்துடன் போட்டியிடத்தான் வேண்டும். இந்த தெளிவிற்குப் பின், உங்கள் நினைப்பு உங்களது அல்ல. ஒரு நகரவாசியினுடையது. நகரம் உங்கள்மீதும் புழுதியை போர்த்தி, உங்களைத் தனதாக்கிக்கொண்டுவிடுகிறது. இனி, புழுதி என்பது கண்ணிற்கு புலப்படுவது அல்ல. அது உங்கள் சுவாசத்துடனே கலந்திருப்பது. அழுக்கற்றவை என நகரத்தில் எதுவும் இல்லை என்றே நம்ப தொடங்குவீர்கள்.

இக்கவிதையில், ஓ ஹாரா, நகர நெரிசலின் தனிமையில் இருக்கும் தனது வாசகரிடம் மிக மெதுவாக பேசுகிறார். தினமும் பேருந்துகளிலும் இரயில்களிலும் சில மணி நேரங்களாவது பயணிக்கும் வாசகரிடம், அவர் கடந்து சென்றுகொண்டிருக்கும் நகரவெளியைப் பற்றி, அப்பயணத்தின் அசைவமைதியுடன் சொல்கிறார். அந்த கடைசி கேள்வியின் இறுதி நிறுத்தத்தில், ஒரு கணம் நாம் மீண்டும் நகரிலிருந்து அன்னியப்பட்டு மீள்கிறோம்.

மூலக்கவிதை : http://www.frankohara.org/fohaudio05/song.html

அதிகாரத்தின் ஆடுகளமாகும் உறவுகள்

– அஜய் ஆர். – 

அதிகாரம் என்பது நாட்டின் தலைவராகவோ, அல்லது வேறு உயர் பதவியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்கையை மாற்றும் சக்தியோடு இருப்பதோ, ஒரு இனக் குழு மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதோ மட்டும்தான் என்றில்லை. ‘சாதாரண மனிதர்களான’ நாம், நம் அன்றாட வாழ்க்கையில், நம்மையறியாமலேயே சக மனிதர் மீது அதிகாரம் செலுத்துபவராக இருக்கிறோம். பிள்ளைகளின் நன்மைக்காக என்று சொல்லி, படிப்பு முதல் திருமணம் வரை தங்களின் ஆசைகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர், மனைவியின் உடை, பேச்சு, வேலைக்கு செல்லும் அவள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் கணவன், தன் உயரதிகாரியின் அதிகாரத்திற்கு கூழை கும்பிடு போட்டு, அந்தக் கோபத்தை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மீது காட்டுபவர் என அதிகாரம் எல்லா உறவுகளிலும் பரவி உள்ளது. (more…)

ரகசிய வரலாறு – டானா டார்ட்

– அஜய் ஆர். – 

tartt

டானா டார்ட்டின் முதல் நாவலான “ரகசிய வரலாறு” (The Secret History) தலைப்பை பார்த்தோ, பின்னட்டை ‘டயோனிசியச் சடங்குகள்’ (‘Dionysian rites’) என்று குறிப்பிடுவதைப் பார்த்து மர்மக்கதை என்றோ த்ரில்லர் என்றோ எண்ணினால் அது தவறாகும்.

ஆம், இந்த நாவலின் துவக்கத்திலேயே ஒரு கொலை நடக்கிறது, ஆனால் கொலைகாரர்கள் யார் என்பது நமக்கு அப்போதே தெரிந்துவிடுகிறது. நாவல் அதைத் தொடர்ந்து பின்னோக்கிச் சென்று கொலைக்குக் காரணமான நிகழ்வுகளைப் பேசிவிட்ட, அந்தக் கொலைக்குப் பின்னான நிகழ்வுகளையும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதையும் விவரிக்கிறது, என்பதால் இந்த நாவலை ‘bildungsroman’ நாவல் என்றும் கல்லூரி வாழ்க்கை பற்றி பேசுவதால், ‘Campus Novel’ என்றும் குறிப்பிடலாம். குற்றம், அதற்கான காரணம், அந்த குற்றம் எப்படி குற்றம் செய்தவர்களையே பாதிக்கிறது என்று பேசுவதால் உளவியலைப் பற்றிய நாவல் என்றும் சொல்லலாம். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் மட்டுமே பொருத்தப்படக் கூடிய நாவல் அல்ல இது. மர்மக் கதையை எதிர்பார்த்து இதை வாசிக்கத் துவங்கினால் ஏமாற்றமளிக்கும். (more…)

கவியின்கண் – 10 : “விலை, மதிப்பல்ல.”

– எஸ். சுரேஷ் –

‘தன்விபரக் குறிப்பு எழுதுதல்

என்ன செய்ய வேண்டும்?
விண்ணப்பப் படிவத்தை நிரப்பி
தன்விபரக் குறிப்பு இணைக்க வேண்டும்.

எத்தனை காலம் வாழ்ந்திருந்தாலும்
தன்விபரக் குறிப்பு சுருக்கமாய் இருத்தல் நலம்.

திட்டமான, தேர்ந்தெடுத்த தகவல்கள் அவசியம்.
நிலத்தோற்றத்தின் இடத்தில் முகவரிகள்,
தடுமாறும் நினைவுகளுக்கு, அசைக்க முடியாத தேதிகள். (more…)

அதிநாயகர்களின் அந்திப்பொழுது – டெபோரா ஐஸன்பெர்க்

– அஜய் ஆர். – 

டெபோரா ஐஸன்பெர்க் கதைகள் சிறுகதைகள் என்று குறிப்பிடப்பட்டாலும், அவை கால/ பக்க அளவில் நெடுங்கதைகளே. 30-50 பக்கங்கள் நீளும் கதைகள் என்பதால், ஓர் புள்ளியில் இருந்து ஆரம்பித்து நேர்கோட்டில் சென்று கச்சிதமாக முடியும் கதைகள் அல்ல இவை. ஒரு கதையில் பல இழைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, பல சித்திரங்கள் வாசகர் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவற்றைக் கொண்டு தமக்கான சித்திரத்தை வாசகர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். (more…)