எழுத்து

வழித்தடங்கள்

(ஆடன் மொழிபெயர்த்த நூலின் சில மேற்கோள்கள்)

oOo

மிக நீண்ட பயணம்
உள்நோக்கிப் பயணித்தல்.
தன் விதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவன்
தன் தேடலைத் நோக்கிப் பயணிப்பவன்,
தன் இருப்பின் ஆதாரத்தைத் தேடிச் செல்கிறான்.

oOo

ஒரு புள்ளியில் எல்லாமே எளிதாகிவிடும்; இதுவா அதுவா என்ற கேள்விகளெல்லாம் அப்போது இருக்காது. ஏனென்றால், திரும்பிப் பார்த்தால் நீ பணயம் வைத்தவை உனக்கு இல்லாது போகும். வாழ்வின் திரும்ப முடியாத புள்ளி.

oOo

நம் விதியின் சட்டகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள நமக்கு உரிமையில்லை. ஆனால், அதனுள் நாம் இடுவதெல்லாம் நமதே.

oOo

உன் ஆசைகளை கவனிக்கச் சொல்லி நீ மன்றாடுவது கடவுளிடம் என்பதற்காக, மனித மிருகமான உன் தாபங்கள் பிரார்த்தனை ஆகாது.

oOo

நமக்கென்று உள்ள தெய்வத்தின்பால் நாம் நம்பிக்கை இழந்த அன்றே மரிப்பதில்லை கடவுள். ஆனால் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் உள்ள அதிசயம், நிலையான அந்த ஆதாரப் பிரகாசம், அது ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்வைப் புதுப்பித்துக் கொண்டிருக்கவில்லை என்றால், அந்த நாளே நாம் செத்தோம்.

oOo

மரணத்தைத் தேடிப் போகாதே. மரணம் எப்படியும் உன்னைக் கண்டடையும். ஆனால், வரப்போகும் மரணம் நிறைவாக இருக்குமாறு உன் பாதையை நீ தேடிக் கொள்.

oOo

கண்ணியமாக இறப்போமானால் குறைந்தபட்சம் கண்ணியமாவது பிழைத்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.

oOo

வாழ்வையும் மனிதர்களையும்
இறைவன் நேசிப்பது போல் நேசிக்க வேண்டும் –
அவர்களது எண்ணற்ற சாத்தியங்களுக்காக,
அவனைப் போல் காத்திருக்க வேண்டும்,
அவனைப் போல் நீதி வழங்க வேண்டும் –
எந்தத் தீர்ப்பும் எழுதாமல்,
கட்டளை கிடைத்ததும் கீழ்ப்படியவும்
கணப்போதும் திரும்பிப் பாராது செல்லவும்.

oOo

ஒரு தேனீயைப் போல், அமிழ்திலிருந்து விஷத்தைப் பிரித்தெடுத்துக் கொள்கிறோம், நம்மைக் காத்துக் கொள்ள – தன் கொடுக்கைப் பயன்படுத்தும்போது அந்தத் தேனீ என்னவாகும் என்பதும் நமக்கு நன்றாகத் தெரியும்.

oOo oOo

தமிழாக்கம் :  பீட்டர் பொங்கல்

தொடர்புடைய பதிவு : ஆடனின் ரகசிய வாழ்க்கை

ஆடனின் ரகசிய வாழ்க்கை – எட்வார்ட் மென்டல்ஸன்

நான் எதிர்பாராமல் அறிய வந்த விஷயம் இது. நானோ வேறு பிறரோ அறிந்திருப்பதைவிட மிக அதிக அளவில் இது போன்ற நிகழ்வுகள் இருந்திருக்கலாம்.

விருந்தொன்றில் ஒரு முறை நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். 1950களில் ஆடன் ந்யூ யார்க்கில் வழிபட்டு வந்த செயின்ட் மார்க்ஸ் இன் த பவரி எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் வழிபாடுகள் செய்துவந்த பெண் அவர். அதன் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்தவர்களில் ஒரு மூதாட்டி கடுமையான அச்சம் காரணமாக உறக்கம் வராமல் அவதிப்படுவதாக ஆடனுக்குத் தெரிய வந்தது என்றார் அந்தப் பெண். எனவே ஆடன் ஒரு கம்பளியை எடுத்துச் சென்று, அவரது அபார்ட்மெண்ட் கதவுக்கு வெளியே இருந்த ஹால்வேயில் உறங்குவதைப் பழக்கப்படுத்திக் கொண்டார். அந்த மூதாட்டியின் அச்சம் நீங்கும்வரை ஆடன் அங்குதான் உறங்கினார். (more…)

நாள்

பகல் முடிகிறது
இரவு கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே வருகிறது

பகலில் நகரெங்கும்
அலைந்து திரிந்த பேருந்து
தான் சேகரித்த
​வெப்ப​​த்தை
தன் பயணிகள் மீது கொட்டுகிறது

பள்ளியில் நடந்த கதைகளைச்
சொல்வதற்காக குட்டிக் குழந்தைகள்
தங்கள் அப்பாவின் வருகைக்காக
காத்துக் கொண்டிருக்கின்றன

அலுவலகத்தில் தொடங்கிய கணக்குகள்
கர்த்தாவின் மீது நம்பிக்கையிழந்து
தங்களைத் தீர்க்க சுயமாக
முயன்றுகொண்டிருக்கின்றன

எத்தனை விரட்டினாலும் பின்னாலேயே
வந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்
கோவில் பிச்சைக்காரியைப் போல
நாள் நம்மை
துரத்திக் கொண்டேயிருக்கிறது.

உல்லு

– சிகந்தர்வாசி – 

“டேபிளில் முட்டிக் மோதிக் கொண்டு ஒருவன் சிட்டி லைட் ஹோட்டலிலிருந்து வெளியே ஓடி வந்தான்,” என்று சொல்லிக் கொண்டே அக்பர் ஹோட்டலில் இருந்த சூர்யாவின் முன் உட்கார்ந்தான் வெங்கட். “இரு டம்ப்ளர்கள் உருண்டு விழுந்து நொறுங்கின. தரையெல்லாம் தண்ணீர். அதிர்ச்சியில் ஒரு பெரியவர் தான் குடித்துக் கொண்டிருந்த டீயைக் கொட்டிவிட்டார். ஓடி வந்தவன் நேராக என் மீது வந்து மோதினான். நாங்கள் இருவரும் கீழே விழுந்து உருண்டோம். என்னை அழுத்திக் கொண்டிருந்தவன் எழுந்திருக்கப் பார்த்தான், நான் விடவில்லை. ஒரு ஆள் வந்து அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகும்வரை நான் என் பிடியை விடவில்லை. அவன் யார் தெரியமா? யூகிக்க முடிகிறதா பாரேன். இழுத்துக் கொண்டு போனவன் மஃப்டியிலிருந்த போலீஸ்காரன். என்னுடன் மோதியவன் ஒரு தாதா. யார் என்று சொல்ல முடியவில்லையா? ஹஹா! நான் யாரைப் பிடித்துக் கொடுத்தேன் என்று உன்னால் கண்டுபிடிக்கவே முடியாது – ஜகாங்கீர்கான்! ஹஹா!” (more…)

மனம்

– எஸ். சுரேஷ்

 

மரத்தடியில் உட்கார்ந்திருந்தேன்.
பக்கத்தில் ஒரு ஆப்பிள் விழுந்தது.
கையில் எடுத்தேன்.
ஆதாம் ஏவாள்,
நியூட்டன், கலீலியோ, காபேர்நிகஸ்,
பூமியைச் சுற்றும் சூரியன்,
தட்டை உலகம்,
சர்ச்சும் அதன் தண்டனைகளும்,
விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் மத்தியில்
நிகழும் போராட்டம்,
என்று சிந்தனை பல இடங்களை அடுத்தடுத்து
தொட்டுக் கொண்டிருக்கும்பொழுது
மரத்திலிருந்து இறங்கிய மந்தி
என் கையிலிருந்த ஆப்பிளை பிடுங்கிக் கொண்டு
தலையில் ஓங்கிக் குட்டிவிட்டு
விழுதை பிடித்துத் தாவி ஊஞ்சலாடியது.