எழுத்து

ஜீவன் பென்னி கவிதைகள்

1.
எந்தப் பெரிய காரணங்களுமில்லாமல் இந்நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன.
அவ்வொவ்வொரு பிரகாசத்தையும் பின்தொடர்ந்திடும் போது
இந்த இரவு மிகுந்த சந்தோசங்கள் மட்டுமே கொண்டதாகி விடுகிறது.
அதன் இருள் தன் புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்த்திடும் போது
ஒரு அதிகாலைத் தானாகப் புலர்கிறது,
பிறகு அது எப்போதும் போலாகிவிடுகிறது.
இப்பிரபஞ்சத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதென்பது இவ்வளவு
நெருக்கமாக இக்கூழாங்கல்லை கைகளில் பிடித்துக்கொண்டிருப்பது தான்.

2.
உலகத்திடம் வேப்பம் பூக்களை காண்பித்துக்கொண்டிருக்கிறது இக்கோடை
ஒரு புல் தனது பச்சையை இழந்திருக்கிறது
சருகான தன் கடைசி அன்பை ஒரு மரம் பேசுகிறது
காய்ந்து கிடக்கும் கூழாங்கல் உங்களின் நிழலை வேண்டிக்கொண்டிருக்கிறது
உங்கள் முன் உதிர்ந்து கிடக்கும் வாழ்வுகளில்
உங்களுக்கான ஒன்றை எடுத்துப் பத்திரப்படுத்துகிறீர்கள்.
இக்கோடையின் வெப்பம் இன்னும் ஆழமிக்கதாக மாறிவிடுகிறது.

3.
இன்னும் தொடங்கிடாத உலகின் முதல் கூழாங்கல்
கைகளுக்குள்ளிருக்கிறது.
இப்பிரபஞ்சத்தின் அனைத்து மகிழ்ச்சிகளும் எனக்குள்ளிருக்கின்றன.
இவ்வளவு நெருக்கத்தில் அதனன்பு சொல்லவே முடியாததாகயிருக்கிறது
சிறிது சிறிதாய் அது ஒரு உலகினை அருகினில் கொண்டுவருகிறது.
பழையவைகளனைத்தும் ஒரு தொலைவில் தனித்து விடப்பட்டிருக்கின்றன.

களைதல் – கா.சிவா சிறுகதை

சிறு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவிலுக்கு சங்கரும் குமாரும் சென்றபோது காழாஞ்சியை வாங்கிச் செல்வதற்காக ஊர்க்காரர்கள் கூட ஆரம்பித்திருந்தார்கள்.

என்ன மச்சான், எல்லாரோட மொகத்திலயும் ஒரு தெளிச்சி தெரியுது என சங்கர் குமாரிடம் கேட்டான்.

திருவிழாக்கு தேதி குறிச்சதிலேர்ந்து எல்லாரோட மனசுலயும் சந்தோசத்தோட, திருநா நல்லபடியா முடியனுமேன்னு கொஞ்சம் பதட்டமும் இருந்துச்சு. இன்னக்கி சாயந்தரம் மது, பாரியெல்லாம் ஊரணியில கொட்டிட்டு அங்கேயிருந்து தண்ணி மொண்டுக்கிட்டு வந்து இந்தக் கோயில் பலிக்கல்லுல ஊத்துனதோட திருவிழா முடிஞ்சிடுச்சில்லஅதான் எல்லோரட மொகமும் கனிஞ்ச மாதிரியிருக்கு“.

முக்கால் வட்டமாய் கோவிலைப் பார்த்து அமர்ந்திருந்த கூட்டத்தில் இடத்தைத் தேர்ந்து அமர்ந்த குமாரின் அருகில் சங்கரும் அமர்ந்தான். ” ஏன் இங்க வந்து ஒக்காந்த. அங்க கூட எடமிருக்கேஎன சங்கர் கேட்டான்.

சுத்தி இருக்கறவனெல்லாம் என் வயசுப் பசங்க. என் சேக்காளிங்க. மஞ்சவெரட்டு, சேவச்சண்டைக்கெல்லாம் சேந்துதான் போவோம். அங்க போயி அந்த பெருசுகக்கிட்ட ஒக்காந்தா வாயமூடிக்கிட்டு தேமேன்னுதான் இருக்கனும்என்றான் குமார்.

இப்ப எதுக்கு மச்சான் இங்க வந்திருக்கோம். பெரியாத்தாதான் ஓங்கூட கோயில் வரைக்கும் போயிட்டு வாப்பான்னு அனுப்புச்சு“.

காழாஞ்சி வாங்கறதுக்காக வந்திருக்கோம்

காழாஞ்சியா

இந்தத் திருவிழா நடத்த தேவப்படுற பணத்தை கணக்குப் பண்ணி ஒவ்வொரு புள்ளியும் இவ்வளவு பணம் தரனும்னு முடிவு பண்ணுவாங்க

புள்ளியா

வெளியூர்ல இருக்கறதால எதுவுமே தெரியாமத்தான் இருக்கிறியா. ஒவ்வொரு குடும்பத்திலேயும் இருக்குற ஒவ்வொரு கல்யாணமான ஆம்பளயும் ஒரு புள்ளி. அப்படி வரி கொடுத்து திருவிழா நல்லபடியா முடிஞ்சதுக்கு நன்றி சொல்ற மாதிரி ரெண்டு பழம், ஒரு மூடி தேங்கா, சாமிக்கி போட்ட பூவுல ஒரு இணுக்கு, வெத்தல பாக்குன்னு எல்லாருக்கும் கொடுப்பாங்க“.

.”இதான் காழாஞ்சியா. இதுக்கா வந்து காத்துக்கிட்டிருக்கோம்

இதோட பண மதிப்பு கம்மியா இருக்கலாம். ஆனா இது ஒரு கௌரவம். சபைக்கு நடுவுல கூப்பிட்டு நிகழ்ச்சி நல்லபடி நடந்ததுக்கு நீயும்தான் காரணமுன்னு சொல்றது பெரிய மரியாதைதானே என்றான் குமார்.

அப்போது மூன்று பேர் கோவிலுக்குள் இருந்து வெளிவந்து கூட்டத்தின் முன்பாக கூட்டத்தைப் பார்த்து அமர்ந்தார்கள். அமர்ந்திருந்தவர்களெல்லாம் சற்று நிமிர்ந்தார்கள். ” இவங்கதான் திருவிழா கமிட்டியா என்று கேட்டான் சங்கர்.

கமிட்டியில்லநம்மவூர்ல டிரஸ்டினு சொல்வாங்க . அவங்கள்ல மூத்தவர் செங்கல்வராய அம்பலம் . பக்கத்துல இருக்கிறவர் கணேசக் கோனார். ரெண்டு பேரையும் விட. எளசா சுறுசுறுப்பா இருக்கிறவர் மணிப்பிள்ளை

பரவாயில்லையே மூனு சாதியிலேயும் ஒவ்வொருத்தரப் போட்டுட்டாங்களா

ஆமாம்மா. இந்த மாதிரி விசயங்கல்ல பிரச்சனை வந்துடக் கூடாதில்ல. ஒரு பேரு விட்டுப் போனாக்கூட அடுத்த வருசத் திருவிழா சந்தேகந்தான்என்றான் குமார்.

சற்று தள்ளி விரிந்து படர்ந்திருந்த இலுப்பை மரத்தில் சிறு வெண்கதையைப் போல மலர்ந்து தொங்கிய பூக்களிலிருந்து பரவிய வாசம் கூட்டத்தினரிடம் மெல்லிய கிறக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

அத்தனை புள்ளிகளுக்குமான காழாஞ்சி பிரிக்கப்பட்டு கொடுக்க தாயாரானபோது அமர்ந்திருத்த ஆண்களுக்கு மத்தியில் இருந்து கந்தன் எழுந்தான். அவன் முகம் கோபத்தில் கொந்தளித்தது. முகத்தினை சரியாக கவனிக்காத செங்கல்வராய அம்பலம்

பேரக் கூப்பிடறதுக்கு முந்தி ஏப்பா எந்திரிக்கிற என கேட்டார்.

தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள் நிமிர்ந்து அம்பலத்தையும் கந்தனையும் நோக்கினார்கள்.

அய்யா, நான் ஒரு பிராது கொடுத்திருக்கேன். அத பைசல் பண்ணின்டு அப்பறம் காழாஞ்சியக் கொடுங்கஎன்றான் கத்தன்.

என்ன பிராது. யார்க்கிட்ட சொன்னஎன்றவாறு திரும்பி மற்ற டிரஸ்டிகளைப் பார்த்தார் அம்பலம்.

கணேசக் கோனார் அவர் காதருகே குனிந்து இவம் பொண்டாட்டி கைய செந்தியம்பலம் மவன் பாலன் இழுத்துட்டானாம். அத விசாரிக்கனும்னு மூனு நாளைக்கு முன்னாடி சொன்னான். நாந்தான் செவ்வா முடிஞ்சதும் விசாரிச்சுக்கலாம்னு சொல்லி அடக்கி வச்சேன்என்றார்.

கூட்டத்தில் கலவையான ஒலி எழுந்தது. விபரம் தெரியாதவர்கள் என்னாச்சு என அருகிலிருந்தவர்களிடம் கேட்க தெரிந்தவர்கள் நடந்ததை விளக்க முயல , பெருகி வரும் காட்டாற்றின் ஓசையென சத்தம் வேகமாக உச்சத்தை நோக்கிச் சென்றது.

செங்கல்வராய அம்பலம் கையை உயர்த்தி அமைதியா இருங்கப்பா. விசாரிப்போம்.. அமைதியா இருங்கஎன ஓங்கிக் கூறியதும் சத்தம் மட்டுப்பட்டது.

கூட்டத்தினரைப் பார்த்து செந்தியம்பலம் மவன் பாலன் இங்க வந்திருக்கானா எனக் கேட்டார். அமர்ந்திருந்த. செந்தியம்பலம் எழுந்து வரலிங்கய்யா, வீட்லதான் இருக்கான்என்றார்.

அப்படீன்னா அவஞ் சேக்காளிங்க ரெண்டு பேரு போயி அவனக் கூட்டிக்கிட்டு வாங்கஎன்று கட்டளையாகக் கூறினார். கூட்டத்தின் வெளிவட்டத்திலிருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்து ஊருக்குள் சென்றார்கள்.

சீக்கிரம் வாங்கப்பா.. இந்த பிரச்சனையை முடிச்சுட்டுதான் அடுத்த வேலைக்கு போக முடியும்என்று கூறிவிட்டு கந்தா நீ உக்காரு. அவன் வந்ததும் விசாரிப்போம்என்றதும் கந்தன் அமர்ந்தான்.

கூட்டத்தின் நடுவிலிருந்த

குமார் , தலையை குனித்தபடி கல்யாணம் பண்ணி விட்டுட்டு போயிடறது. ஒரு வருசத்துக்கு அப்பறம் வந்து அவன் கையப் பிடிச்சான். இவன் அங்க தடவுனான்னு சொல்றதுஎன்று அருகிலிருந்த சங்கரிடம் கூறினான்.

ஊர்க்காரங்கள நம்பித்தானே விட்டுட்டு போறாங்க. ஊர்தானே பாதுகாப்பு கொடுக்கனும்

ஒவ்வொருத்தருக்கும் வேறவேற ஆசையும், கொணமுமிருக்கும். எல்லாத்தையும் ஊர் கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா. பிராதுன்னு வந்தாத்தான் தலையிட முடியும்

குமாருக்கு முன்பாக இருந்த பேன்ட் சட்டை அணிந்திருந்த சந்திரன் திரும்பி இந்த மாதிரி பிரச்சனைக்கு போலீஸுக்கிட்ட போகாம ஏன் இங்க சொல்றாங்கஎனக் கேட்டான்.

போலீசு நாளு முச்சூடும் அந்தப் பொண்ணுக்கு பந்தோபஸ்து கொடுக்க முடியுமாஎன சிரித்தபடி கேட்டுவிட்டு வலப்பக்கம் அமர்ந்திருந்த சிங்காரத்தை நோக்கி நீ ஏன் மச்சான் ரொம்பத் துடிக்கிறஎனக் கேட்டான்.

நானே ஆறு மாசத்துக்கப்புறம் இப்பதான் வந்திருக்கேன். ரெண்டு நாளு கோயில்லேயே போயிடுச்சு. இன்னிக்கும் இவனுவ விட மாட்டானுங்க போலருக்கேஎன்றான் சிங்காரம் சலிப்புடன். ராமன் சங்கரின் பக்கம் திரும்பி சத்தமின்றி சிரித்தான்.

காழாஞ்சி பிரித்துக் கொடுத்தவுடன் ஊரின் தெருவிலெல்லாம் போட்டிருந்த குழல் விளக்குகளை கழட்டலாம் என காத்திருந்த சின்னய்யா கோவிலோரம் படுத்திருந்த அவன் வேலையாட்களை வேகமாக எழுப்பி டேய், ஊருக்குள்ள போட்டிருக்கிற பல்புகளையெல்லாம் உடனே கழட்டுங்கடாஎன்று கூறித் துரத்தினான். இரண்டு வருடங்களுக்கு முன் நிலம் தொடர்பான பிராதை இதேபோல விசாரித்தபோது இரு தரப்பின் கைகலப்பில் ஐம்பது பல்புகளுக்கும் மேல் உடைந்திருந்தது.

பாலனை அழைக்கப் போனவர்கள் மட்டும் மெதுவாக நடந்து வந்தனர்.

ஏய் வேகமா வாங்கன்னா ஆடி அசஞ்சுக்கிட்டு வர்றீங்க. அவன் எங்கேஎன செங்கல்வராய அம்பலம் வந்தவர்களைக் கேட்டார்.

அவன் ஒடம்பு சுகமில்லாம படுத்திருக்கான். அவனால எந்திரிக்க முடியலங்கய்யாஎன்று ஒருவன் சொன்னான்.

இதனைக் கண்டதும் கந்தனின் அருகிலிருந்த அவன் பங்காளிகளில் சிலர் வேகமாக எழுந்து நாங்க போயி இழுத்துக்கிட்டு வர்றோம்என்று கூறியபடி தாவினார்கள்.

ஏய்பொறுங்கப்பா. லேய் செந்தீ நீ போயி உடனே ஒம் மவனக் கூட்டிக்கிட்டு வா. இல்லேன்னா வேற முடிவு எடுக்க வேண்டியிருக்கும். அது ஒங்குடும்பத்துக்கு நல்லதில்ல ஆமா…” என்று செந்தியம்பலத்திடம் கூறினார் செங்கல்வராயன்.

இந்தா.. கூட்டியாறேன்யா என்று செந்தி எழுந்தவுடன்

ஏப்பா, யாராவது சைக்கிளக் கொடுங்கப்பா. இவன் சீக்கிரம் வரட்டும் என்று கூறவும் சாலையின் மேல் நின்றிருந்த சைக்கிளை ஒருவன் தள்ளிக் கொண்டுவந்து செந்தியிடம் கொடுத்தான். வேகமாகத் தள்ளியபடி ஓடி குதித்தமர்ந்து ஓட்டிச் சென்றார்.

கூட்றதுக்குப் போனவனுங்க , நேரத்தக் கடத்துறதுக்காக மெதுவாப் போயிட்டு வந்தானுங்க. இப்ப இவரு போயி கூட்டிட்டு வர்றப்ப இன்னும் நேரமாயிரும்குமார் சங்கரிடம் கூறினான்.

ஆனா என்னசங்கர் கேட்டான்.

நேரமாயிடுச்சுன்னா ஆவுஆவுன்னு விசாரிச்சு வேகமா முடிச்சிடுவாங்கல்ல“.

சரியா தீர்ப்பு சொல்லுவாங்களா

சரியா இருக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா தப்பா இருக்காது. காலங்காலமா எப்படி சொல்றாங்களோ அப்படியே இருக்கும்சொல்லியபடி கைகளை நீட்டி சோம்பல் முறித்து, கால்களை முன்பக்கம் அமர்ந்திருந்தவர்களுக்கிடையே நீட்டினான். முன்னால் இருத்தவர் முறைத்தார்.

கொஞ்சம் தள்ளிக்க மாப்ளே. ரொம்ப நேரமா ஒக்காந்து காலு மரத்துப்போற மாறி இருக்குஎன்றான் கொஞ்சம் குழைந்தவாறு.

கூட்டம் முழுக்கவே கை கால்களை நகர்த்தியும் நீட்டியும் சோம்பல் முறித்தது பெரிய அலையொன்று புரள்வதுபோலத் தோன்றியது. கோவிலுக்கும் இலுப்பை மரத்திற்கும் இடையே வடக்கிலிருந்து வந்த காற்று அமர்ந்திருந்தவர்களின் உடலில் துளிர்த்திருந்த வியர்வையின்மீது பட்டு அவர்களுக்கு மெல்லிய மயிர்க் கூச்சத்தை அளித்தது.

கந்தனைச் சுற்றியிருந்தவர்களும் சாலையோரமாக நின்றிருந்த பாலனின் நண்பர்களும் சிறு வட்டமாக தனித்தனியாகக் குழுமி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

பின்பக்கம் சைக்கிளின் அரவம் கேட்டதும் எல்லோருமே திரும்பிப் பார்த்தார்கள். செந்தியம்பலம் பின்னால் அமர்ந்திருக்க பாலன் ஓட்டிக்கொண்டு வந்தான்.

அங்க பாரு, எந்திரிக்க முடியாம கெடந்தவன்தான் இப்ப சைக்கிள ஓட்டிக்கிட்டு வர்றான்என்றான் குமார்.

பாலன், பேன்ட் சட்டை அணிந்திருந்தான். சட்டையில் பாதி பொத்தான்கள் போடப்படவில்லை. முடியை முன்பக்கம் ஒட்ட வெட்டி பின்பக்கம் தொங்கவிட்டிருந்தான்.சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு யாருக்கும் பயப்படாத தன்மையுடன் நடந்துவந்து நின்றான்.

அவனை நோக்கிய செங்கல்வராய அம்பலம் கூப்பிட்ட உடன வரமாட்டீயா. சைக்கிள் வச்சு அழச்சாத்தான் வருவியாஎனக் கேட்டார்.

அதான் வந்தாச்சுல்ல. என்ன விசயம்னு சொல்லுங்க என்றான்.

பாலனின் நடத்தை கந்தனின் துணைவர்களிடம் சிறு கொதிப்பை உண்டாக்கியது. ” பஞ்சாயத்துல கூப்பிட்டு இருக்காங்க. கொஞ்சம் மரியாதயா பேசுஎன்று ஒரு குரல் எழுந்தது.

மரியாத கொடுத்துதான் வந்திருக்கு. விசயத்தச் சொல்லுங்க தூக்கம் வருதுல்லஎன்றான் கேலித் தொணியில்.

ஏப்பா, பேச்ச நிறுத்துங்கப்பா. கந்தா ஒன்னோட புகாரச் சொல்லு

போன புதன்கெழம அன்னிக்கி என் பொண்டாட்டி ராணி கம்மாய்ல குளிச்சிட்டு வந்திருக்கா. அப்போ இந்தப் பய எதிரே வந்திருக்கான். இவன் வர்றானேன்னு அவ ஒதுங்கி நின்னுருக்கா. இவன் அவ கையப் பிடிச்சு வாயேன் இன்னொருதரம் குளிக்கலாம்னு கூப்பிட்டுருக்கான். எம் பொண்டாட்டி கையப் பறிச்சிக்கிட்டு ஓடி வந்துட்டாளாம். அன்னயிலேர்ந்து குளிக்கிறது தொவக்கிறது எல்லாமே வீட்லதான். வெளிய போகவே பயந்துக்கிட்டு வீட்லேயே கெடக்கிறா.நான் ஊர்லேர்ந்து வந்தவுடனே சொன்னா.போயி இவன வெட்டனும்னுதான் தோணுச்சு. ஆனா புள்ளங்களப் பார்த்து மனச மாத்திக்கிட்டேன். நீங்கதான் கேக்கனும்என்று கோபமாகவும் தழதழப்பாகவும் சொல்லிமுடித்தான்.

கந்தன் சொல்லிக் கொண்டிருந்தபோது , பாலன் எதையும் கேட்காத பாவனையில் கூட்டத்தையும் காற்றிலாடிய மரக்கிளைகளையும் பார்த்தபடி இருந்தான்.

கந்தனின் உடனிருந்தவர்களில் ஒருவன் தாயோளி.. இவனை ஊரவிட்டு ஒதுக்கி வைக்கனும். இவன் ஊருக்குள்ளே இருந்தா பொண்டு புள்ளங்க எப்படி வாழ்றதுஎன்று பாலனை அடிப்பது போலப் பாய்ந்தான்.

பாலனின் நண்பனொருவன் நீ மூடிக்கிட்டு இருடா. சபைக்கு நடுவுல பெரிய இவனாட்டம் பேச வந்துட்டான். நீ என்னென்ன பண்றேன்னு எங்களுக்குத் தெரியாதா என்றபடி எகிறி வந்தான்.

கணேசக் கோனார் எழுந்து குறுக்கே வந்து ஏய் ஆளாளுக்குப் பேசாம சும்மா இருங்கப்பா.. ஒக்காருங்க.. ஒக்காருங்கப்பா என்று அமரவைத் கைகலப்பு ஆகாமல் தடுத்தார். செங்கல்வராய அம்பலம் பாலனைப் பார்த்து கந்தன் சொல்றது நெசந்தானா. அவம்பொஞ்சாதி கையைப் பிடிச்சியாஎனக் கேட்டார்.

கையையெல்லாம் புடிக்கல. சாயந்திர நேரமாயிருந்துச்சு. கம்மாயில யாரும் இருக்கமாட்டாங்கன்னு தோணுச்சி. எனக்கு தனியா குளிக்கப் பயமாயிருந்ததால அவங்கள தொணக்கி கூப்புட்டேன். இது பெரிய தப்பா. இதுக்குப் போயி பஞ்சாயத்து வேறஎன்று விட்டேத்தியாக கேட்டான் பாலன்.

டேய்.. ஒன்னய அன்னிக்கே வெட்டிப் போட்டிருக்கனும். வெட்டியிருந்தா என்ன தப்புன்னு இப்பக் கேப்பியாஎன்று கந்தன் பாய்ந்தான். பாலனின் நண்பர்கள் குறுக்கே வந்து கந்தனைப் பிடித்து தடுத்தார்கள். ” போய் உக்காரு. விசாரிக்கிறாங்கல்லஎன்று பின்னால் தள்ளினார்கள்.

கணேசக் கோனார் எழுந்து ஏலே..வெலகுங்கப்பா. கந்தா நீ ஒக்காரு. விசாரிக்கிறமுல்ல.. ஒக்காரு என்று அமர வைத்தார்.

ஏப்பா கந்தா இவன் கையப்பிடிக்கலைனு சொல்றானேப்பாஎன்று அம்பலம் கந்தனைக் கேட்டார்.

பொய் சொல்றான்ங்க. கையப் பிடிச்சத இந்த சுப்பையாவும் பாத்திருக்கான்என்று ஆவேசமாகக் கூறினான் கந்தன்.

ஆமாங்க. நான் வயல்லயிருந்து வீட்டுக்கு போயிட்டு இருந்தப்ப பாலன், கந்தன் பொஞ்சாதியோட கையப் பிடிச்சு இழுத்ததப் பாத்தேன்என்றான் கந்தனுக்கு அருகிலிருந்த சுப்பையா.

குமார் குனிந்தபடி அதானே பாத்தேன். விசயம் ஏன் வெளிய வந்துச்சுன்னுஎன்றான் சங்கரிடம்.

ஏலே பாலா. இப்ப என்ன சொல்ற. சுப்பையா பாத்தேன்னு சொல்றானேஎன்றார் அம்பலம்.

பயத்துல அவசரமா கூப்பிட்டப்ப கை லேசா மேல பட்டிருக்கும். இப்ப அதுக்கென்ன. இது அவ்ளோ பெரிய குத்தமாஅசராமல் பதில் சொன்னான்.

டேய் என்னடா பேசற. பண்றதயும் பண்ணிட்டு இவ்ளோ திமிரா அதுக்கென்னங்கிறகூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்ததும் மொத்தக் கூட்டமுமே அதானேஎன வழிமொழிந்தது.

சாதாரணமாக இம்மாதிரி பஞ்சாயத்துகளில் இரு தரப்புக்கும் ஏறக்குறைய சமமான ஆதரவுக் குரல்கள் எழும். இப்போது கூட்டம் ஒட்டு மொத்தமாகவே ஒரே தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டதாகத் தெரிந்தது. இது தீர்ப்பிலும் எதிரொலிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

கூட்டத்தின் குரலைக் கேட்டதும் சற்று நடுக்கத்துடன் எழுந்த செந்தியம்பலம் தன் மகனை நோக்கி எலே பாலா செஞ்சது தப்புதான்னு ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டுர்றாஎன கை கூப்பியபடி கெஞ்சினார்.

இவரு ஏன் இப்படி நடுங்குறாருஎனக் குமாரிடம் கேட்டான் சங்கர்.

தப்ப ஒத்துக்கிட்டு மன்னிப்புக் கேட்டா தண்டனை கம்மியாயிருக்கும். இப்படியே திமிறிக்கிட்டு நின்னா ஊருக்குள்ள வரக்கூடாதுங்கற மாதிரி பெரிய தண்டனையா கொடுத்திடுவாங்க. அத நீக்கனும்னா அதுக்கு ஒரு வருசங்கூட ஆயிடும்என்றான் குமார், சங்கருக்கு மட்டும் கேட்குமாறு.

கைகூப்பிக் கெஞ்சிய தன் தந்தையைப் பார்த்தபோது பாலனின் உடல் பாவனை சற்று மாறியது. “இல்லையினே சொல்லு, அவங்களால என்ன செஞ்சிட முடியுமென நண்பர்கள் உறுவேற்றக் கூறியவையெல்லாம் மனதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது . எந்த வம்புக்கும் போகாமல் எல்லோரும் மதிக்கும் வகையில் வாழ்பவர் அப்பா. எவ்விதமான சுவாரசியமும் இல்லாத அவரின் வாழ்க்கையைப் பார்த்து இவனுக்கு ஏளனமாகத் தோன்றும். அதனாலேயே அவர்மீது பெரிதாக இவனுக்கு மதிப்பில்லை. இவ்வளவு நாளாக அப்பாவின் பேச்சைக் கேட்டதேயில்லை. அவர் சொல்கிறார் என்பதற்காகவே படிப்பின் மீது வெறுப்பு வந்தது. போகக் கூடாதென்று அவர் கூறியதாலேயே திருப்பூருக்குச் சென்று பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். இரண்டு மாதம் வேலை செய்து வாங்கிய சம்பளத்துடன் ஊருக்கு வந்து அடுத்த இரண்டு மாதம் பசங்ளுடன் சேர்ந்து செலவு செய்வான். அப்பாவை பிடிக்காமல் போனதேன் என பலமுறை யோசித்திருக்கிறான். அப்போதெல்லாம், இது நல்லதை மட்டுமே போதிப்பதனால் வந்த வெறுப்பு என்ற முடிவுக்குதான் அவனால் வரமுடிந்தது. அப்பாவின் மீதான அவன் வெறுப்பு அந்தரங்கமானது ஆனால், இவ்வளவு கூட்டத்தின் நடுவே அப்பா கெஞ்சியதைப் பார்த்ததும் இதுவரை தோன்றாத கூச்சம் ஏற்பட்டது. தன் மேலேயே கடும் வெறுப்பு உண்டானது. உடலில் இருந்த மிதப்பு மறைந்து லேசான பணிவு தோன்றியது.

தன் அப்பாவைப் பார்த்து நீ உக்காருப்பா..உக்காரு. நான் மன்னிப்புக் கேக்குறேன்என்று கூறிவிட்டு டிரஸ்டிகளை நோக்கி கைகூப்பிய பாலன் அய்யா .. நாந் தெரியாம செஞ்சுட்டேன் என்னய மன்னிச்சிடுங்கய்யா

என்றான்.

செங்கல்வராய அம்பலம் கந்தனை நோக்கி ஏப்பா கந்தாசெஞ்சது தப்புதான்னு மன்னிப்புக் கேக்குறானே நீ என்ன சொல்றஎன்றார்.

அய்யா, ஒத்துக்கிட்டா செஞ்சது சரின்னு ஆயிடுமாங்கய்யா. இன்னொரு தடவை செய்யாத மாதிரி தண்டனை கொடுக்கனுங்கஎன்றான் கந்தன்.

மற்ற இரண்டு டிரஸ்டிகளையும் நோக்கி நீங்க என்ன சொல்றீங்கஎனக் கேட்டார் பெரிய அம்பலம்.

சின்னப் பயதான். ஏதோ புரியாம செஞ்சிட்டான். அவராதம் கட்டச் சொல்லலாம் என்றார் கணேசக் கோனார்.

அவராதம் மட்டும் பத்தாது. இதுமாரி இன்னொருத்தன் செய்யாம இருக்கனும்னா தண்டனையும் கொடுக்கனும் என்றார் மணிப்பிள்ளை.

கூட்டத்தைப் பார்த்தார் செங்கல்வராய அம்பலம். பாலனின் நண்பர்களெல்லாம் அபராதம் மட்டும் போடுங்க எனக் கூவினார்கள். கந்தனைச் சுற்றியிருந்தவர்கள் தண்டனை கொடுக்கனும் என்றார்கள். கூட்டத்திலிருந்து கலவையான குரல்கள் எழுந்தன. கூட்டத்தினரை முழுமையாக நோக்கியபின் அமைதியா இருங்கப்பா என்று கூறி கையாலும் சைகை செய்தார்.

மரத்தினை சிறிது நேரம் பார்த்துவிட்டு கோவில் பக்கம் பார்த்து உதடுகள் அசைய மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

கூட்டம் முழுக்க அவரின் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தது. அவரது தீர்க்கமான முகம் அவர் என்ன சொல்வதென்று முடிவு செய்துவிட்டார் என்பதைக் காட்டியது. அனைவரும் அவர் கூறப்போவதை கேட்க ஆயத்தமானார்கள். காற்றோசை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

செங்கல்வராய அம்பலம், கூட்டத்தையும் கந்தனையும் ஒருமுறை பார்த்துவிட்டு, பாலனைப் பார்த்து அடுத்தவன் பொஞ்சாதிய தப்பான நோக்கத்தோட கையைப் புடிச்சு இழுத்ததால அபராதமா இந்த மாரியம்மனோட உண்டியல்ல நூறு ரூபாயப் போடனும்என்று கூறி நிறுத்தினார்.

பாலனின் ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சி தென்பட்டது. கந்தன் தரப்பினரிடேயே இறுக்கமான கையறு நிலை புலப்பட்டது.

கைகளால் அமைதியாக இருங்க என சைகை செய்த அம்பலம் தனது தீர்ப்பை தொடர்ந்தார் இது மாதிரி தொடரக் கூடாதுங்கிறதுக்காக இந்த பாலன் கந்தனோட பொஞ்சாதியோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்க வேணும்னு இந்தப் பஞ்சாயத்து முடிவு பண்ணியிருக்கு என்று முடித்தார்.

பாலன் முகம் அவமானத்திலும் கோபத்திலும் வெளிறியது. கணத்தில் முகத்தில் வியர்வை கொப்பளித்து தாடையிலிருந்து வழிய ஆரம்பித்தது. அவன் நண்பர்களும் அதிர்ச்சியில் ஒருகணம் உறைந்து பின் சற்று சுதாரித்து பாலனை அணுகி அவன் தோளை ஆதுரத்துடன் பற்றிக்கொண்டு முகத்தை துண்டால் துடைத்தார்கள். செந்தியம்பலம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் உடல் லேசாகக் குலுங்கியது.

கந்தன் தரப்பில் லேசான திருப்தியுடன் குழப்பமும் தெரிந்தது. கந்தன் எழுந்து அய்யா , இந்த நேரத்துல ராணியை எப்படிக் கூட்டியாரதுஎன்று பெரிய அம்பலத்தை நோக்கிக் கேட்டான்.

அவள ஏன் இங்க கூட்டியார. அவ சார்பா நீ அவன் மன்னிப்ப வாங்கிக்கஎன்று கூறிவிட்டு மணிப்பிள்ளையை நோக்கி ஏலம் விடுறதுக்கு வச்சிருக்கிற அம்மனோட பூசைச் சாமான்களோட இருக்கிற அம்மனுக்குச் சாத்துன சேலய எடுத்துக்கிட்டு வா. போன வருசம் ஏலம் போன தொகைக்கே இப்ப கந்தன் ஏலம் எடுத்ததா எழுதிக்கஎன்றார்.

மணிப்பிள்ளை கோவிலுக்குள் சென்று எலுமிச்சம் பழ மாலை, பூமாலை, தாம்பாளத் தட்டு வாழைப்பழம், பூசணிக்காய் என பரப்பி வைத்திருத்த இடத்திலிருந்த லேசான ஒளியில் மின்னிய வெள்ளிச் சரிகையிழைத்த சிவப்புக் கரையுடன் கூடிய பச்சைப் புடவையை எடுத்து வந்தார்.

போன வருசம் ஏலம் போன தொகை என்னன்னு நோட்டப் பாத்து பிறகு சொல்றேன்என்றபடி கந்தனிடம் நீட்டினார். கத்தன் எழுந்து அம்மன் இருக்கும் திசையை நோக்கி வணங்கியபின் குனிந்து புடவையை வாங்கிக் கொண்டான்.

கந்தா அந்தப் புடவையைக் கொண்டுக்கிட்டு இங்க வா என பெரிய அம்பலம் அழைத்தார். புடவையை கட்டிக் கொள்ளச் சொல்வாரோ என்ற யோசனையுடனேயே அவர் அருகில் சென்றான் கந்தன்.

பயப்படாதகட்டிக்க வேண்டாம். தோள்ல இருந்து உடம்புக்கு குறுக்கால முந்தானை மாதிரி போட்டுக்கிட்டு அந்த ஓரமா நில்லுஎன. கோவிலின் ஓரத்தை கைகாட்டினார்.

கந்தன் புடவை மடிப்பை நீள வாட்டமாகப் பிரித்து முந்தானையைப் போல தோளிலிட்டு இடுப்பு பெல்ட்டை தளர்த்தி புடவைக்கு மேல் பொருத்தி இறுக்கினான்.

தீர்ப்பை முதலில் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தாலும் ராணியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டாம், கந்தனிடம் கேட்டாலே போதுமென்றதும் ஆசுவாசமடைந்தான் பாலன். புடவையை மேலில் போர்த்தியதைப் பார்த்தபோது வேடிக்கையாக இருந்தது. புடவை இருந்தாலும் அவன் கந்தன்தானே. எந்தத் தயக்கமும் இல்லாமல் மன்னிப்புக் கேட்க தயாரானான்.

பெரியம்பலம் ஏன் இப்படியெல்லாம் பண்றாரு. இப்படி மன்னிப்புக் கேக்கிறதுல எந்த அர்த்தமும் இல்லஎன்று முனங்கிய சங்கரைப் பார்த்து ஏனிப்படி சொல்ற எனக் கேட்டான் குமார்.

கந்தன் பாலனவிட மூத்தவருதான். படிச்ச மரியாதைக்குரியவர்தான். அவர்கிட்ட எந்தத் தயக்கமும் இல்லாம மன்னிப்புக் கேட்டுவான் பாலன் என்றான் சுந்தரம்.

இதுலதான் அனுபவத்தோட பக்குவத்த நீ உணரனும். மன்னிப்புக் கேக்க வச்சிட்டோம்னு இவங்களும் மன்னிப்புக் கேட்டாலும் மீசையில மண்ணொட்டலையின்னு அவனும் நெனக்கிற மாதிரி தீர்ப்புக் கொடுத்தாலும் தேவையான பலனும் கெடச்சிடுமில்ல

அதென்ன தேவையான பலன்

பாத்துக்கிட்டேயிருஉனக்கே புரியும் என்று சொல்லிவிட்டு அமைதியானான் குமார்.

தண்டனை பெற்றதன் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி நினைத்த பெண்ணுக்கே தாலிகட்ட தயாராயிருப்பவனின் மலர்ச்சியான எதிர்பார்ப்புடன் இருந்தான் பாலன். இந்தச் சடங்கு எப்போது முடியும் எப்போது வீட்டில் போய் படுப்பது என்று எண்ணத் தொடங்கினான். செங்கல்வராய அம்பலம் பாலனை அழைத்தார். இதோ முடியப் போகிறது என்று ஆவலுடன் அருகில் சென்றான்.

கந்தனப் பாரு. இப்ப அவன் கந்தனில்ல. நம்ம அம்மனோட சேலையக் கட்டியிருக்கிற கந்தம் பொஞ்சாதி ராணி. அத மனசில நிறுத்திக்க

அங்க நிக்கிற ராணியோட காலத்தொட்டு இனிமே எம் பொஞ்சாதியத் தவிர வேற பொண்ணத் தொட மாட்டேன்னு சொல்லி மூனுதடவ விழுந்து கும்பிட்டுட்டு நூறு ரூபாய உண்டியல்ல போட்டுட்டு வாஎன பாலனை நோக்கிக் கூறினார்.

கூட்டத்தினர் எந்தச் சத்தமும் எழுப்பாமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கந்தனை நெருங்கும் போதே பாலனின் முகம் மலர்ச்சியெல்லாம் வடிந்து இறுகியது. புடவையை அருகில் பார்த்தபோது ராணி இழுத்துச் செருகியிருப்பது நினைவில் தோன்றியது. ராணியை நினைக்கக் கூடாது. இது கந்தன்தான். என்னைவிட மூத்தவர். ஆசீர்வாதம் பெறுவது போலத்தான். எந்தத் தாழ்வும் இல்லை. எதுவும் மாறப் போவதில்லை என அழுத்தமாக மனதிற்குள் கூறிக்கொண்டிருந்தபோதே அவள் சிரிக்கும் போது உயர்ந்து இழுபடும் புருவம் அணுக்கத்தில் தெரிந்தது. லேசாக புன்னகைக்கும்போது மடியும் கீழுதடின் கோடுகள் நெளிந்தன.

பாலா ஏன் நிக்கிற. வேகமா ஆகட்டும் வேல கெடக்குதுஎன்று கணேசக் கோனார் பாலனின் தோளை அழுத்தினார்.

கீழே குனிந்து இனிமே எம் பொண்டாட்டியத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் தொடமாட்டேன்என்று கூறியவாறு காலைத் தொட்டான். மிளிரும் கரு வண்ணத்தின் பூசினாற் போன்ற இடையுடன் ஒரு காலை நேராகவும் மற்றொரு காலை சற்று வளைத்தபடியும் நின்று கொண்டிருந்தாள்.

திடுக்கிட்டு நின்றவனைப் பார்த்து பாலனின் நண்பன் அருகில் வந்து என்ன மச்சான். யோசிச்சிக்கிட்டு நிக்கிற. நம்ம நெனச்ச மாதிரிதானே நடக்குது. எதுவும் மாறாது. சட்டுனு முடிஎன்று காதோடு கூறி தோளில் தட்டினான்.

தலையை உலுக்கிக் கொண்டு வேகமாகக் குனிந்து இனிமே எந்தப் பொண்ணையும் தொடமாட்டேன் என்றபோது கட்டை விரலைவிட நீண்ட பக்கத்து விரலில் இருந்த மெட்டி ஒளிர்ந்து கரண்டைக் காலின் வளவளப்பு தெரிந்தது.

வேகமாக நிமிர்ந்தபோது கந்தன் லேசாக நகர கோவிலுக்குளிருந்த அம்மனின் முகம் தெரிந்தது. ஒரு கணம் மின்னல் வெட்டியதென அருகில் நிற்பவளெனத் தோன்ற, உடல் நடுங்கியது.

நண்பன் மீண்டும் முதுகை அழுத்தியவுடன் அம்மா தாயே, என்ன மன்னிச்சிடு இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன் என்றவாறு நெடுஞ்சான்கிடையாக விழுந்தான். அவன் நண்பன்தான் அவனை தூக்கி கையில் நூறு ரூபாயைக் கொடுத்து மணிப்பிள்ளை நீட்டிய உண்டியலில் போட வைத்தான். போட்டதும் கைத்தாங்களாக பெரியம்பலத்திடம் கூட்டி வந்தான். “இனிமே ஒன் வாழ்க்க குறையில்லாம இருக்கும் என்று கூறியபடி கையிலிருந்த திருநீறை பூசினார். அவன் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க தப்பு பண்ண மாட்டேன் .. தப்பு ..பண்ணமாட்டேன்என உதடு துடித்துக் கொண்டிருந்தது. செந்தியம்பலமும் எழுந்து அவன் தோள் மேல் கை போட்டபடி கூட்டிச் சென்றார்.

பாலன் சோர்ந்து கலங்கியபடி மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்த கந்தனின் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்ட சுப்பையா நிம்மதியாக உணர்ந்தான்.

என்னதான் ஆச்சு பாலனுக்கு எனக் கேட்ட சங்கரிடம் அதையெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது எனக் கூறிவிட்டு பெரியம்பலத்தைப் பார்த்து அய்யா, காழாஞ்சியக் கொடுக்க ஆழம்பிங்கய்யா.. நேரமாச்சு என்று குரல் கொடுத்தான் குமார்.

ரா. கிரிதரனின் காற்றோவியம் நூல் குறித்து பானுமதி

காற்றிசை ஆறு. பொங்குமாங் கடல் போன்ற பிரமிக்கவைக்கும் பிரவாகம்.

அகலமும், ஆழமுமான இசையறிதலெனச் சொல்லலாம். வரலாறும், இசைப் பிரிவுகளும், இசையின் நுணுக்கங்களைப் பற்றிய அறிவுமின்றி இதை எழுத முடியாது. இக்கட்டுரை பல நினைவுகளை எழுப்பியது.

பள்ளி இளம் பருவத்தில் சினிமாப் பாடல்களும், வானொலி கச்சேரிகளும், வீதியில் வரும் கல்யாண ஊர்வலங்களில் வாசிக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் பேண்ட் இசையும், சிவன் கோயில் ஓதுவார் பாடும் தேவரங்களுமென இசை ஒரு சிறு வட்டத்தில் இருந்தது. சென்னை வானொலி ‘பி’ ஒலிபரப்பிய ஆங்கில மேற்கத்திய இசை’அல்ஜீப்ரா’ போல பயமுறுத்தியது. ஆனால், கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்துஸ்தானி இசையும், பாப், ராக்,,பீட்டில்ஸ் போன்றவற்றிலும் பிடித்தம் வந்தது. திரையரங்குகளில் காட்சிக்கு முன் இசைக்கப்படும் ஆங்கிலத் திரைப்பட இசை கால்களால் தாளமிட வைத்தது. ஆனால், அது தொடரவில்லை. எப்படியோ விட்டுப் போய்விட்டது. பங்கஜ் உதாஸ், ரவிசங்கர், பனாரஸ் கரானா மற்றும் குவாலியர் கரானா, குமார கந்தர்வா, பீம் சென் ஜோஷி, ஜஸ்ராஜ், கௌசிகா சக்ரவர்த்தி, சுபா முத்கல், மன்னா டே, முகம்மது ரஃபி, சங்கர் மஹாதேவன், பிஸ்மில்லா கான், அல்லாராக்கா,(இடம் கருதி பலப் பெயர்களைக் குறிப்பிடவில்லை) சில நேரங்களில் ரவீந்திர நாத்தின் சங்கீதம் எல்லாமே, ஆகாஷ்வாணி சங்கீத சம்மேளனத்தில், முடிந்த போது கேட்டவை தான். தமிழகத்தில் பெரும் தலைகளைத் தவிர எம்.பி சீனிவாசன் போன்ற பரிசோதனையாளர்களும் அதிகம் கவர்ந்தார்கள். பால முரளி க்ருஷ்ணா, எம்.எஸ் கோபாலக்ருஷ்ணன், குன்னக்குடி, எம் எல் வி போன்றவர்கள் எப்போதுமே பிடித்தமானவர்களானார்கள். அதிலும் கிரஹ பேதம், ஸ்ருதி பேதம், தாள மாற்றம் செய்வது பாலமுரளிக்குக் கைவந்த கலை. அவர் அதைச் செய்கிறார் எனப் புரிவதற்கே எனக்கு நேரமெடுக்கும். ஆனாலும், தமிழ், ஹிந்தி திரையிசைப் பாடல்களும், கர்னாடகசங்கீதமும் தான் மிகப் பிடித்தமாக இன்று வரை இருக்கின்றன.

இனி ரா. கிரிதரனின் நூலைப் பற்றி.

செல்லோ இசைப் புரட்சி: மிகவிரிவாகவும், தெளிவாகவும்,எழுதப்பட்டுள்ள சிறந்தகட்டுரை இது. பார்சலோனா, பாப்லோ கசல்ஸ் என்ற பேராளுமை உருவெடுக்க உதவுகிறது. பாக்கின் செல்லோவைத் தேடிய கடும் பயணம் மெய் சிலிர்க்க வைத்தது. பாரிஸ் ஒபரா அரங்கத்தின் வெளியே அவர் வாசித்தது எனக்கு தில்லானா மோகனாம்பாளில் மதுரை மணியின் நோட்ஸை ஷண்முக சுந்தரம் வாசித்ததை நினைவு படுத்தியது.

அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் சூழல்களிலிருந்து கலைஞன் தப்பிப்பது சற்றுக் கடினம். கசல்ஸ் விதிவிலக்கல்ல. இன்றளவும் காடெலோனியா தனித்தன்மையைக் கோரிக்கொண்டு இருக்கிறது. அவரது ‘Expressive Intonation’ பற்றி ஒரு சிறு சித்திரம் மனதில் எழுந்தது. நான்கு தந்திகளிலும் விரல்களை ஒருங்கே வைத்து வெவ்வேறு ஸ்தாயீயில் வீணை வாசித்த பாலசந்தர் நினைவிற்கு வந்தார். உலகப் போர்களும், தாய் நாட்டுப் பற்றும் கசல்சை அலைக்கழித்ததில் வியப்பில்லை, பெரும் வருத்தம்தான். உலகம் இப்படித்தான்; கலையை அவனது திறனிற்காக மதிக்காது ‘இஸம்’களின் பின்னே ஒட்ட வைக்கும் மனிதப் புரிதல். கானிக்யூ மலையடிவாரம் அவரை ஆற்றுப்படுத்தியிருக்கும். அலெக்ஸாண்டர் ஸ்னெய்டர் செய்த அருஞ்செயலால் இன்று கசல்ஸ், பாக், அதைப் பற்றி எழுதும் கிரிதரன் ராஜகோபாலனைத் தெரிந்து கொண்டேன்.

மாபெரும் ஆபரா

நம் சேர்ந்திசையில் மேல் கீழ் ஸ்ருதியில் பாடுவது வழக்கம் தான். சரியான ஒத்திசைவு இல்லாவிட்டால் அது ஒலிக்கேடாகிவிடும். நம் இசை நாடகங்கள் தேய் மொழி,தொல் கதையில் சிக்குண்டு கால மாற்றங்களைக் கருத்தில் கொள்ளவில்லையெனத் தோன்றுகிறது. பள்ளியில் இசையைப் பயிற்றுவிப்பது சீனாவைப் போல் இங்கே கட்டாயமாக்கப்பட்டால், அரசியல் வெகு வேகமாக அதில் நுழைந்து விடும். கனவுகளுக்குத் தடையில்லை, அவ்வளவுதான். ஒரு கருத்து சொல்லியிருக்கிறார் ஆசிரியர் – இந்திய இசை மேற்கிசை பாணியைப் பின்பற்றினால் மட்டுமே ஆபரா எனும் வடிவத்தில் அமரும். ஏ.ஆர். ரெஹ்மானுக்குக் கேட்கிறதா?

லண்டன் கலை நிகழ்ச்சிகள்

முதலில் கட்டுரையாளரின் அலுவலுகத்தை நினைத்து பொறாமை வந்தது. பின்னர் தோன்றியது- நேரமிருந்தாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் வேண்டுமே? இசைக்கெனவே கட்டப்பட்டுள்ள தேவாலயப் பகுதிகள், கேட்பதை அனுபவமென மாற்றும் அந்த நோக்கம் மிகச் சிறந்தது. ஆதார ஸ்ருதியும், மற்ற ஸ்வரங்கள் அதிலிருந்து கிளம்பி திசை மாறிப் பயணித்து பின்னர் ஆதாரத்தில் சேர்வதை அழகாக எழுதியுள்ளார்.

மொசார்ட் உலக அளவில் அறியப்பட்டவர்- என்னைப் போன்றவர்களுக்கு பெயர் மட்டும் தெரியும். செயிண்ட் சான்ஸ் பெத்தொவனுக்கு இணையானவர் என்று இதில் அறிந்து கொண்டேன். ‘அடோனல்’ என்ற பெயரே கற்பனைக் கதவுகளைத் தட்டுகிறது. வயலினும், பியானோவும் உரையாடுவதை, குன்னக்குடியும், ராஜேஷ் வைத்யாவும், சஞ்சய் சுப்ரமணியமும் தங்கள் கச்சேரிகளில் செய்து வருகிறார்கள்.

லட்சண இசை, லட்சிய இசை இரண்டைப் பற்றிய விளக்கம் சிறப்பு.

டெபுஸியின் இசையைக் கேட்பதற்கே ஒரு மன நிலை தேவைப்படும் போலிருக்கிறதே! வாக்னர் பின்பற்றிய பாணியல்லவா? எதுவாக இருந்தாலும் அபஸ்வரத்தை மேற்கிசை என்பதால் இரசிக்க முடியுமா என்ன? கால் மாத்திரை ஸ்ருதி விலகினாலே இந்துஸ்தானியில் பொறுக்க மாட்டார்கள். ‘ச’வில் தொடங்குவது ‘ரி’ யில் தொடங்கலாம், ஆனால், ஆதாரத்தை விட்டு விலகக் கூடாதல்லவா? இந்திய சங்கீதத்தின் அடிப்படை சாம வேதம் என்று சொல்வார்கள். இராகங்கள், அதன் ஸ்பரூபங்கள், கமகங்கள், பிர்க்காக்கள், தொனி, லயம் போன்றவை கிருதிகளுடன் இணைந்து நம்முள் கலந்து விடுகின்றன. இந்துஸ்தானி சங்கீதத்தில் விளம்ப காலமும், மூன்று ஸ்தாயிகளும் அடிப்படை. ஆதார ஸட்ஷமம்தான் (ச) தொடக்கம் என்பதில்லை அதில். ஆனால், ஸ்வர ஸ்தானங்கள், அதாவது அந்த இராகத்தின் ஜீவ தாதுக்கள், அனுஸ்வரங்கள் மிக மிக முக்கியம். ஒரு கச்சேரி கேட்ட நினைவு; பாடகரும், ஆர்மோனியமும் பாடவும், வாசிக்கவும் நடுவில் சந்தூர் புகுந்து அதிசயமான கோர்வையைக் கொடுத்தது. சரத்(பாலமுரளியின் சீடர்), சேஷ கோபாலன் இவ்வகையைக் குரலிலேயே கொண்டு வரும் விற்பன்னர்கள். வட இந்திய இசையின் தோடி நமது சுபபந்துவராளி; நம்முடைய தோடி அங்கே பைரவி தட். சில ஸ்வரங்கள் சேரும் இராகங்களை எடுத்துக்கொண்டு இரு இசைப் பிரிவைச் சேர்ந்தவர்களும் ஃப்யூஷன் இசையை முயற்சிக்கிறார்கள். ஜுகல் பந்தியில் இராக ஒற்றுமைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அசாத்தியமாக ஸ்ரீராம் பரசுராம் ‘காந்தம் ஸ்கொயர்’ என்று ஒரு நிகழ்ச்சியில் கர்னாடக, ஹிந்துஸ்தானி பாடல்களை ஜோடியாய் இணைந்த இராகங்களிலும், ஸ்வரங்களிலும் பாடிப் பரவசமூட்டினார்.(முத்ரா நிகழ்ச்சி டிச 2019)

திரும்ப நினைவுபடுத்தக்கூடிய சொற்கட்டுகள், இசைத் துணுக்குகள் அடிப்படைத் தேவையே! ஹிந்தோள ராகமா, மாமவது ஸ்ரீ ஸரஸ்வதி பாட்டா, இரண்டில் எது சுலபமாக நினைவில் நிற்கிறது? இளையாராஜா, ஷூபர்டின் முடிவடையாத சிம்பொனி பற்றிய குறிப்பு அபாரம்.

வாக்னர், மாஹ்லர் போன்றவர்கள் வட துருவமென்றால், மாக்ஸ் ஜேகப், புலென், ராஜா தென் துருவமெனப் புரிந்து கொண்டேன். நவீன டாங்கோ பகுதியில் இடம் பெற்றுள்ள பேட்டி சிறியதாக இருந்தாலும் முக்கியமான கேள்விகளும், பதில்களுமாக நிறைவாக இருந்தது.

லண்டன் கலைமையம் அமைந்துள்ள இடத்தைப் பற்றிய இவரது வர்ணனைகள் உள்ளே இருக்கும் எழுத்தாளரின் கைவண்ணம். டேட் காலரி வாசலில் பிள்ளையார் கோயில்! விரைவில் வந்தாலும் வந்துவிடும். தேங்காய் பழக் கூடையுடன் அடுத்தமுறை தயாராகச் செல்லுங்கள்!! கிளாரினெட் தரும் இறுக்கம் சற்று அதிகம் தான் எப்போதும்.

‘ஹெள டு நேம் இட்?’ வந்த போது என் சகோதரி அந்த வயலினைக் கேட்டு அழுது விட்டாள். அவள் தான் அதை முழுதாக உள் வாங்கியவள் எங்கள் குடும்பத்தில். ஆனால், ஒரு உறவினருடன், வி.எஸ். நரசிம்மனை அவரது சென்னை இல்லத்தில் பல வருடங்களுக்கு முன் நேரில் சந்தித்தது நான் தான். என் உறவினரும் அவரும் இசை நுணுக்கங்களை விரிவாக விவாதித்துக்கொண்டிருக்க நான் கருவறை முன் நிற்கும் பாமரனாக இருந்தேன். கடைசி வரை ஒரு வார்த்தை என்னால் பேச முடியவில்லை. அவருடனான ஆசிரியரின் பேட்டி ஒரு பொக்கிஷம். நரசிம்மனை நான் சந்தித்ததும் ஒரு முறைதான். ஹார்மெனியும், மெலடியுமான கலவை அவர்.

எஸ்.ராஜம் மிக அபூர்வமானவர். முழுமையான கலைப் பார்வை கொண்டவர். இன்றும் கர்னாடக மும்மூர்த்திகளை அவரது ஓவியத்தின் வழிதான் அறிகிறோம். சிலப்பதிகார ஆபரா, சத்யஜித் ரே இயக்கிய பால சரஸ்வதி படம் போல எடுபடவில்லை போலிருக்கிறது. ராஜத்தைப் பற்றிய அரிய செய்திகளை இக்கட்டுரையின் மூலம் தெரிந்து கொண்டேன்.

கலைஞன் மண் சார்ந்தவன்; ஆனால், கலை அப்படியல்ல. இதை வாக்னரின் நிலை உணர்த்துகிறது. இசை நாடக உலகின் தந்தை, ஹிட்லர் விரும்பிய இசையாளர், நிகரற்ற பெய்ஹோய்ட் அரங்கத்தை அமைத்தவர், இனச் சார்பு தன்மையால் யூத வெறுப்பாளரென அடையாளப் படுத்தப் படுபவர், ஆனாலும் அவர் கலைஞர்.

தொழில் நுட்பம் சார்ந்த சவால்களால் நிரம்பியிருக்கும் சிம்பொனியில் ஜீவன் இருக்குமா என்பது எனக்குப் புரியாத ஒன்று. வடிவமைக்கப்பட்ட இசையில் கச்சிதம் இருக்கலாம், இனிமை இழையலாம், லயங்கள் பொருந்தலாம், மனோதர்மம் வடிவமைக்கையில் இருந்திருக்கலாம், அதில் ‘ஸ்பான்டேனிடி’ இருக்குமா எனக் கேள்வி எழுகிறது. ஆனால், நான் சிம்பொனி ஒன்றைப் பொருந்திக் கேட்டதில்லை. என் கேள்விகள் தவறாக இருக்கலாம். விரிவாக்கம் என்பது இதற்கு மிக அவசியம் எனப் புரிந்து கொள்கிறேன்.

இளையராஜாவை கர்னாடக சங்கீதக்காரர்கள் பலரும், ஒரு சிலரைத் தவிர நேசித்துக்கொண்டே வெறுத்தார்கள், வெறுத்துக்கொண்டே நேசித்தார்கள். அந்த மாபெரும் கலைஞனின் அபார ஞானம் இவர்களைப் பயமுறுத்தியிருக்கலாம். நாட்டுப்புற இசை, இராக சங்கீதம், மேற்கத்திய இசை என சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து திரையிசையின் போக்கினையையே மாற்றியவர். இராக ரூபம் சிதையாமல் சிறு மாற்றம் செய்து அதையே மெலடியெனக் காட்டியவர். ஒரே பாடலில் பலராகங்கள் வரும், ஆனால், ராக மாலிகை அல்ல. அவரது திரைப் பாடல்களைப் போல், தனியான ஆல்பங்கள் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. திருவாசகம் கூட அருமையான படைப்பு. சுஜாதா ‘நான் ஏற்கெனவே ஆழ்வாரில் மயங்கியதால், வாசகத்திற்கு உருகவில்லை’ என்று அனியாயமாக எழுதினார். ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை, அல்லவா? கல்யாணி ராகத்தை ராஜா பலவிதமாகக் கையாண்டுள்ளார். தியாகராஜ ஸ்வாமிகளை அவர் வரவேற்ற ‘Chamber welcomes Thyagaraja’ என்ற குறிப்பு நெகிழ்த்தியது.

ராகசாகா எனக்கு மிகவும் பிடித்த பகுதி. பட்டிணப் பிரவேசம் என்ற படத்தில் வான் நிலா நிலா அல்ல என்ற ஒரு பாடலில் வயலின் தான் பிரதானம். அதை இசைத்தவர் நரசிம்மனா? முதலில் மட்டுமல்ல இன்றும் இனிக்கும் இசை அது.

சிபேலியஸ் கட்டுரையில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. ரசனைகள் விமர்சனங்களால் உருவாக்கப்படுகின்றன. இசை ஆர்வலர்களின் தற்சார்பிற்கும் அதிக இடம் இதில் உள்ளது. அவர் வாழ்வு பாம்பு-ஏணி ஆட்டமாக ஆகிவிட்டது. அன்னப் பறவைகளைக் கண்டு அவர் அமைத்த சிம்பொனி பற்றிய செய்தி எனக்கு இயற்கை ஒலிகளைக் கொண்டு இயற்கைச் சூழலில் டி.எம்.க்ருஷ்ணா பாடிய ஒரு இசைத் தொகுப்பை நினைவில் கொண்டு வந்தது.

நிசப்தத்திலிருந்து சப்தத்திற்குச் செல்லும் இசை, மனதின் சத்தத்தைக் குறைத்து அமைதிப்படுத்துவது ஆச்சர்யம். இசை வழி சமாதானம் ஏற்படலாமே? இஸ்ரேல்- பாலஸ்தீன அரசியல் களேபரங்களின் இடையே அவ்விரண்டு இசையையும் இணைக்கும் முயற்சி மகத்தானது. இசை ஒருங்கிணைப்பாளர்களின் பங்கு இவ்வகையில் அத்தியாவசியமானது.

கலை வேர்களைக் கண்டறிந்து வெளிக் கொணர்பவர்கள் காலத்தை நம்முன் நிகழ்த்திவிடுகிறார்கள். ஜி.என்.பியின் நூற்றாண்டு மலர் பற்றிய கட்டுரை சுவையானது.

நல்ல இசையமைப்பாளராக வந்திருக்க வேண்டியவர், நல்ல இசை ஒருங்கிணைப்பாளராக ஆகிப்போனார் என்ற எண்ணம் சுபின் மேத்தா கட்டுரையில் எனக்கு வந்தது.

சூசன் டோம்ஸ் மென்மையாகப் பியானோவைத் தொட்டதைப் படிக்கையில் வயலின் தந்திகளை அளவிற்கு அதிகமாக அழுத்தி சுகத்தைக் கெடுக்கும் சிலர் நினைவிற்கு வந்தனர்.

மெதுவாகத் தொடங்கி நிதானமாகப் பயணித்து மத்திம காலம் அமைத்து சரணத்தில் சிறு சரணத்தை வேகமாக அமைத்து முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஒவ்வொரு பாடலிலும் இசைப் பகுதிகளை மாறுபட அமைத்துள்ளார். வட இந்திய இராகங்களை, கர்னாடக இசைக்குக் கொண்டு வந்தவர் அவரே. பல்வேறு தாளக்கட்டுகளை தனது நவக்ரஹ கிருதிகளில் அமைத்துள்ளார். இவரது கிருதிகள் மற்றும் அமைப்பு முறைகளை எடுத்துக்கொண்டு சரத், ஸ்ரீராம் பரசுராம், சிக்கில் குருசரண், பாம்பே ஜெயஸ்ரீ, மாண்டலின் ராஜூ மற்றும் அவர் மனைவி நாகமணி, புல்லாங்குழல் ஷசாங், கிடார் பிரசன்னா, ரவிகிரண், கணேஷ் குமரேஷ், ராஜேஷ் வைத்யா, கடம் கார்த்திக், மிருதங்கம் சிவராமன், சௌராசியா, சிவகுமார் பண்டிட், கௌசிகா சக்ரவர்த்தி, ஜாஹீர் ஹூசேன், செல்வ கணேஷ் போன்றவர்கள் இணைந்து செயல்பட்டால் நம்மால் ஒரு ஆபராவைக் கொண்டு வர முடியலாம்.

இசை கேட்டால் மட்டுமல்ல, இசையைப் பற்றி தரமாக எழுதினாலும் கூட, புவி அசைந்தாடுமென அறிந்து கொண்டேன். கட்டுரைத் தொகுப்பில் ஃப்யூஷன், ஜூகல்பந்தி போன்றவற்றைப் பற்றி ஒரு பகுதி வந்திருக்கலாம். இசைப்பவர்கள், இசை விமர்சகர்கள், இசை ஆர்வலர்கள், இசை அமைப்பாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாக இதைச் சொல்வேன். அட்டை முகப்புப்படமும், கட்டுரைகளின் இறுதியில் இடம் பெற்றுள்ள காணொலி இணைப்புகளும் நூலோடு இணக்கமாக உள்ளன.

காற்றோவியம் என்னைப் புரட்டிப் போட்டது. என் மன அலைவுகளைப் பதியச் சொன்னது.

புத்தகம் வாங்க: அமேசான் கிண்டில்

சலோமி – ம.கிருஷ்ணகுமார் கவிதை

​​சலோமி​​ எனக்கு நெருக்கம்

காக்காவுக்கும் குருவிக்கும் கல்யாணம் நடந்த ஒரு மழை நாளில்
பேருந்தின் சன்னலை சாத்தும் போது  அவளை கண்டுகொண்டேன்

சலோமி
மலர்ந்தது 07/07/1987
உதிர்ந்தது 13/06/2020

கழுத்தின் அளவை வைத்து பார்க்கும் போது உயரம் அநேகமாக 152 செண்டி மீட்டர் இருக்கலாம்
சிவப்புச் சேலையில் எண்ணெய் மொழுகிய  இசக்கி அம்மன் சாயல்
அன்னை மேரியின் சாயல்  என்போரும் உண்டு
வழுவழுப்பான வண்ணத் தாளில் நிறுத்தப்பட்டிருந்த இரங்கல் தட்டியில் இருபுறமும் மெழுகுவர்த்திகள் கண்ணீர் உகுக்க அவளை முதன்முதலில் சந்திக்கிறேன்

வெளியிலிருந்து வீடு திரும்பும் அப்பாவைக்  கண்ட குழந்தை போல கையில் ஏறி அமர்ந்து கொண்டது சோகம் அவளைக் கண்டதும்
மூடிய சன்னலின் வழி நேரம் சொட்டு சொட்டாக வடிகிறது
இறக்கிவிடவும் மனம் வராது இறங்கவும் மறுக்கும் குழந்தையை யாரிடம் கைமாற்ற?

ராய் மாக்ஸமின் ‘உப்பு வேலி’ நூல் குறித்து அக்களூர் இரவி

காந்தியின் தண்டி யாத்திரை, வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகம் பற்றி முகநூலில் தொடர்ச்சியான பதிவுகளும் அவற்றிற்கான பின்னூட்டங்களும் ’உப்பு வேலி’ புத்தகத்தை வாசிக்கத் தூண்டின. நண்பர் எழுத்தாளர் யுவன் அவர்கள் புத்தகம் கொடுத்துதவினார். இந்த மொழிபெயர்ப்பிற்குத் தூண்டுகோலாக எழுத்தாளர் ஜெயமோகன் இருந்திருக்கிறார்.

பழைய புத்தகக்கடை ஒன்றிலிருந்து வாங்கிவந்த புத்தகத்தில் அவர் படித்த அடிக்குறிப்பு ராய் மாக்ஸமின் கவனத்தை ஈர்க்கிறது. அந்தக் குறிப்பு இதுதான்: இந்தியாவில் உப்பு வரியை நீண்ட காலமாக விமர்சனம் செய்துகொண்டிருந்த சர் ஜான் ஸ்ட்ரேச்சி, ‘உப்பு மீதான சுங்கத்தை வசூலிக்க பெரும் பூதாகரமான அமைப்பு உருவாகி வந்தது…நாகரிகமடைந்த எந்த நாட்டிலும் இதற்கு இணையான ஒன்றைக் கண்டுபிடிப்பது இயலாத ஒன்று… முள் மரங்களால் ஆன பெரும் புதர்கள் அந்த வேலியில் முக்கியப் பங்கு வகித்தன’ என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்குப்பின் ராய், ஒரு பெருந்தேடலில் இறங்குகிறார். ’பிரிட்டானிய போலிப் பெருமிதத்தின் விசித்திரமான சாட்சியங்களில்’ ஒன்றைத் தேடி மூன்று முறை அவர் இந்தியாவிற்கு வருகிறார். 1996, 1997, 1998.

ராய் மாக்ஸம் லண்டன் பல்கலைக்கழக நூலகத்தில் காப்பாளராக பணிபுரிந்தவர். குறிப்பில் காணப்பட்ட புதர்வேலிக்கான ஆதார நூல்களை, ஆவணங்களை, வரைபடங்களைத் தேடியலைகிறார். இந்திய ஆவணங்கள் குறித்த அலுவலகம், பிரிட்டிஷ் நூலகம், தனியார் ஆவணக் காப்பகங்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வேலி இருந்த பாதையை, பகுதியைக் காட்டும் வரைபடத்தைத் தேடுகிறார்.

கிடைத்த ஆவணங்கள், வரைபடங்களுடன், ஒரு ஜி.பி.எஸ் கருவியும் ஏற்பாடு செய்துகொண்டு இந்தியாவில் புதர்வேலியைத் தேடத் தொடங்குகிறார். இந்திய நண்பர்கள் சிலர் அவருக்கு உதவி செய்கின்றனர். அந்த வேலி இருந்ததாக வரைபடம் சொல்லும் பல இடங்களுக்கு, மின்விளக்குகளோ, டாய்லெட் வசதிகளோ இல்லாத அந்தக் குக்கிராமங்களுக்குs சென்று, அங்கு தங்கி வேலியைத் தேடுகிறார். 1996ல் தொடங்கிய தேடலுக்கு இறுதியில் நவம்பர் 1998ல் விடை கிடைக்கிறது. ’பர்மத் லைன்’ என்ற சுங்கவேலியின் மிச்சத்தைக் கண்டுபிடித்தத் திருப்தியுடன் நாடு திரும்புகிறார்.

வங்காளப் பிரதேசத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் கிழக்கிந்திய கம்பெனி, சிறிதுசிறிதாக தன்னைப் பலப்படுத்தி, விரிவாக்கிக் கொள்கிறது. பிளாசி யுத்தத்திற்குப் பின் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுக்கிறது. உப்பு, பாக்கு, நெய், அரிசி, நாணல், மூங்கில், மீன், சணல் ஆகியவற்றை நான்கில் ஒருபங்கு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கிறது. வங்காளத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சர்க்கரைக்கும் வரி விதிக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியும், கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்ஸ் வரையும் சாதாரண ஆங்கிலேய அலுவலர்களும், அவர்களுக்கு அடிவருடிய முதலாளிகளும் இந்தியர்களைச் சுரண்டிக் கொழுத்தனர்.

. மௌரியப் பேரரசர் சந்திரகுப்தர் காலத்திலிருந்து, பிரிட்டிஷாருக்கு முன் ஆண்ட மொகாலயர்களும் சாதாரண மக்களும் பயன்படுத்தும் உப்பிற்கு வரி விதித்துக் கொண்டுதான் இருந்தனர். அதை ஆங்கிலேயர்களும் விடாமல் தொடர்ந்தனர் ஆனால், அவர்களைப்போல் செலுத்தக் கூடியதாக இல்லாமல், பன்மடங்கு அதிகமாக வரி விதித்தனர். ஆகவே, சாதாரண மக்கள் வேறு வழியின்றி விற்ற விலைக்கு உப்பை வாங்க வேண்டியதாயிற்று. இந்த நிலை தான் நாடு முழுவதும்.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் சில பகுதிகளில் குறிப்பாக மேற்கிலும், தெற்கிலும்தான் உப்பு உற்பத்தி இயல்பாக நடந்தது. குறிப்பாக ராஜாக்கள் ஆளும் சுதந்திர பிரதேசங்களில் நடந்தது. அவ்விடங்களில் இருந்துதான் வங்காளப்பகுதிக்கு, ஆங்கிலேயர் ஆண்ட பகுதிக்கு இறக்குமதியானது. இந்தப் பகுதியில் உப்பு உற்பத்தி மிகவும் குறைவு. இந்தப் புவியியல் குறைபாடுதான் இந்தியாவிற்குள் உப்பின் போக்குவரத்தை வேலி போட்டு தடுத்தது. உப்பின் விலை ஏற ஏற, உப்புடன் வேறு சில பொருட்களும் கடத்தப்பட்டு கம்பெனியின் ஆட்சிப்பகுதிக்குள் வர ஆரம்பித்தன. உப்பின்மீது வரி விதித்து வருமானம் பார்த்த ஆங்கிலேய நிர்வாகம், இடைஞ்சலாக இருந்த கடத்தலைத் தடுக்க சுங்கச் சாவடிகளை உருவாக்கியது. கண்காணிப்பையும் தீவிரமாக்கியது. காலப்போக்கில் அது நீண்ட பிரும்மாண்டமான சுங்க வேலியாக மாறியது.

இதன் முக்கிய நோக்கம் உப்புக் கடத்தலை தடுப்பது. அத்துடன் போதைப்பொருட்கள் கடத்தலையும் தடுப்பது.

இமயமலை அடிவாரத்திலிருக்கும் அன்றைய பஞ்சாபின் தர்பேலாவில் அந்த வேலி தொடங்குகிறது. முல்தான், சட்லெஜ் நதி, பசில்கா, பின் தென்கிழக்கில் திரும்பி, டில்லிக்கு மேற்காக சென்று, ஆக்ரா, அங்கிருந்து ஜான்ஸி, சாகர், ஹோசங்காபாத், காந்த்வா, புர்ஹான்பூர், மகாராஷ்ட்ரம்மத்தியப்பிரதேச எல்லையைத் தொட்டு, பின் கிழக்கே திரும்பி, வங்கக் கடல் நோக்கி ஒரிஸ்ஸா வழியாகச் சென்று முடிகிறது. ஏறத்தாழ 2504 மைல்கள் நீளம். சுமார் 4030 கி.மீ. லண்டனுக்கும் இஸ்தான்புல் நகருக்கும் இடையிலான தூரம்.

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 1869-70ம் ஆண்டு அறிக்கையில் ”ஹெர்குலிஸ் சுமக்கும் சுமையைப்போல் பெரும் உழைப்பு இது… … பெரும் உழைப்பிலும் பாதுகாப்பதிலும் சீனாவின் பெருஞ்சுவருக்குச் சமம்” என்கிறார். அழிந்துபோகாமல், காப்பாற்றப்பட்டு அப்படியே இருந்திருந்தால், சீனப் பெருஞ்சுவர் மாதிரி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சரித்திர சின்னமாக இருந்திருக்கக் கூடும் என்கிறார் ராய்.

உயிருள்ள செடிகள், காய்ந்த முட்புதர்கள், வேலி அமைக்கமுடியாத இடத்தில் கற்களால் ஆன சுவர் என்பதாக சுங்க வேலி அமைக்கப்பட்டது அந்தந்தப் பிரதேசங்களில் விரைவாக வளரும் முட்செடிகள், கருங்காலி, இலந்தை மரங்கள், கிலாக்காய், சப்பாத்திக் கள்ளி போன்ற பல்வேறு கள்ளிச் செடிகள். இவற்றை ஒன்றாக இணைக்க கழற்சிக்கொடிகள் வளர்க்கப்பட்டன. குறைந்த பட்சம் பத்தடி அகலமும், அதிகபட்சம் இருபதடி உயரமுமாக இந்த சுங்கவேலி அமைந்திருந்தது.

ஏழை மக்களுக்கு அவசியமான பொருள், சுவைகூட்டி, உப்பு. அதன்மீது கம்பெனி மிக அதிகமாக வரிவிதித்தது; உப்பளத்தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது. அத்துடன் முடியவில்லை என்கிறார் ராய் மாக்ஸம். அதாவது 1870களுக்கு முன்னும் பின்னும், அதாவது சுங்கவேலி கைவிடப்பட்ட கடைசி பதினைந்து ஆண்டுகளில் வடமேற்கு மாகாணங்களில் 37,61,420 பட்டினிச்சாவுகள் நடந்தன என்பது அரசாங்க கணக்கு. உண்மையான கணக்கு 50 லட்சமாக இருக்கலாம் என்கிறார் ராய். வெயிலிலும் பட்டினியாலும் வாடிய ஏழைகள் காய்ச்சலிலும் வயிற்றுப்போக்கிலும் இறந்தபோது அவர்களின் சாவை உப்புச் சத்துக் குறைபாடு துரிதப்படுத்தியது என்கிறார் ராய் மாக்ஸம். எவ்வளவு பெரிய கொடூரம்! மனித உடலுக்கு உப்பின் முக்கியத்துவத்தை விளக்க ஒரு அத்தியாயமே அவர் ஒதுக்கியுள்ளார். ஆசிரியரின் இந்தத் தகவல் வேதனைகொள்ள வைக்கிறது. கதிகலங்க செய்கிறது. ஆட்சியாளர்கள் சாதாரண மக்களைப் பற்றி என்றும் கவலை கொண்டதில்லை.

பிரிட்டிஷாரின் திமிர்த்தனமான போக்காலும் நடவடிக்கைகளாலும் தவிர்க்கமுடியாமல் அரங்கேறிய 1857ம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்குப்பின், கம்பெனி ஆட்சி விலக்கப்பட்டு, மகாராணியின் நேரடி ஆட்சி கொண்டுவரப்பட்டது. . கல்கத்தாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் 1869ல் துண்டு துண்டாக இருந்த சுங்க வேலியை ஒன்றாக இணைக்கும்படி உத்தரவிட்டது. அதிக பட்சம் 14,000 காவலாளிகள் இந்த சுங்க வேலியை காவல் காத்திருக்கிறார்கள். நான்கு கி.மீக்கு ஒன்றாக ’சோக்கி’ எனப்படும் சுங்கச் சாவடி; பிரிட்டிஷ் வாரண்ட் ஆபிஸருக்கு இணையான ஒரு இந்தியர், ஜமேதார் பொறுப்பில். அவருக்கு கீழே பத்து பேர். அரைமைல் தூர ரோந்துக்கு ஒரு ஆள். சுங்கக்காவலாளிகளின் முக்கியப் பணி உப்புக் கடத்தப்படுவதை எக்காரணம் கொண்டு தடுப்பது. ஆனால், 1870ல் சுங்கவேலி கைவிடப்படுகிறது.

புத்தகத்திலிருந்து சில சுவாரஸ்யமான தகவல்கள்:

  • ஒரு சாதாரண இந்தியக் கூலியின் குடும்பத்திற்கு அரை ’மாண்ட்’ உப்பு தேவைப்பட்டது. 1788ல் இதன் விலை இரண்டு ரூபாய். அவனது இரண்டு மாத சம்பளம்

  • ஆங்கிலேயர் வரும்வரை உப்பின்மீதான வரி குறைவு.

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் உப்பின் விலை அரிசியின் விலைக்குச் சமமாக இருந்தது.

  • வங்காள மாகாணத்தில் 1781-82இல் உப்பு மூலம் வருவாய் ரூ.29,60,130. வரி உயர்த்தியதும், 1784-85ல் வருவாய் ரூ.62,57,470.

  • 1869-70ல் சுங்க எல்லையில் மொத்த வரி வசூல் ரூ.4,35,00,000. பராமரிப்புச் செலவு ரூ.16,20,000.

  • 1876-78 பஞ்சத்தில் பிரிட்டிஷார் ஆண்ட பிரதேசத்தில் மட்டும் குறைந்தது 6,50,000 பட்டினி சாவு.

  • ஆக்டேவியன் ஹியூம் கூறுகிறார்: “எங்கள் பணியாளர்கள் 3,50,000 மைல்கள் ரோந்து போயிருக்கிறார்கள். ஞாயிறு ஓய்வே கிடையாது உலகில் இப்போது இதுபோன்று ஆட்சி நடக்கும் எந்த நாட்டிலும் இந்த ஊதியத்திற்கு வேறெந்த நிர்வாகமும் இவ்வளவு கடின உழைப்பை வாங்கியிருக்காது.

  • கடத்தல்காரர்கள் எல்லா சாதிகளையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும்.

  • ஒரு கட்டத்திற்குப் பின், இந்தியாவில் பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு இங்கிலாந்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டது.

சம்பல் பள்ளத்தாக்கின் சகநகர் என்ற இடத்தில் நாபல் சிங் என்ற பெரியவர் மூலம் சுங்கவேலி (’பர்மத் லைன்’) இருந்ததை உறுதிசெய்யும் ராய் மாக்ஸம், மனது கேளாமல் மறு நாளும் சகநகர் வருகிறார். ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் துணையோடு மிச்சமிருந்த பர்மத் லைனை, இருபது அடி அகலமுள்ள வேலியின் மிச்சங்களைக் கண்டுபிடிக்கிறார். ‘ஒருவர் குரல் கொடுத்தால் கேட்கும் தொலைவில்தான் அடுத்த ஆள் இருப்பான். ஏதாவது செய்தி யாருக்காவது சொல்லவேண்டும் என்றால், இப்படியே குரல் கொடுத்தே சொல்லிவிடலாம். ஆக்ராவுக்குக் கூட, ஏன் டில்லிக்கும் கூட’ என்று மூதாதையர் சொல்லக் கேள்வி என்கிறார் அந்த பேராசிரியர். வேலியைப் பாதுகாக்க பிரிட்டிஷார் செய்திருந்த ஏற்பாடு பிரமிப்பைத் தருகிறது.

ஒரு சாகசத் தேடலைப் போல விறுவிறுப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ராய். சுவாரஸ்யம் குன்றாத, எளிய நடையிலான மொழிபெயர்ப்பு நம்மையும் அந்தத் தேடலில் ஈடுபடுத்துகிறது.

ஒரு பெரும்பணியை ராய் செய்துள்ளார் என்கிறார் முன்னுரையில் திரு.ஜெயமோகன். இந்திய மக்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டு இந்தியா கொள்ளையடிக்கப்பட்டு அதன் செல்வ வளம் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்படுவதை ‘drain of wealth theory’ மூலம் 1867ல் திரு.தாதாபாய் நவ்ரோஜி ஆவேசமாக எடுத்துரைத்தார். ராய் மாக்ஸம் இந்த நூலில், உப்பு வரி, சர்க்கரை வரி மூலம் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்களாக இருந்த கிளைவ் தொடங்கி வாரன் ஹேஸ்டிங்கஸ், ஆக்டேவியன் ஹ்யூம் வரையிலும் கோடிகளைக் கொண்டுசென்றதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

இந்திய மண்ணின் பண்பாட்டுக் கூறுகளை, உணவோ, பழகுவதோ, போக்குவரத்தோ, டிக்கெட் ரிசர்வேஷனோ, ரயில் பயணமோ, குதிரை வண்டியோ, டோங்கா, ஷேர் ஆட்டோ பயணமோ, கோவிலோ, பழங்கால கட்டிடங்களை தங்குமிடங்களாக பயன்படுத்துவதோ, கிராமங்களின் பெருசுகள் அன்போடு நடந்துகொள்ளும் முறையோ, உபசரிப்பதோ இவற்றையெலாம் ஆங்காங்கே சிரிப்போடும், ஆதங்கத்தோடும், வருத்தப்பட்டும், பாராட்டியும் ராய் பேசுவது, ’எப்படியாவது இன்று புதர் வேலியைக் காட்டிவிடு’ என்று கடவுளிடம் அவர் வேண்டுவது உட்பட நூலிற்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.

காந்தி உப்பு வரிக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியபோது, அவருடன் இயக்கத்திலிருந்தவர்கள் இந்த முன்மொழிவைக் கேட்டு வியப்புற்றதாகப் படித்திருக்கிறோம். காந்திக்கு, ‘காற்றுக்கும் நீருக்கும் அடுத்து உப்புதான் அதிமுக்கியமானது. அது ஏழைகளுக்கான ஒரே சுவையூட்டி…. இது சூழ்ச்சித் திறன் கொண்ட மனிதன் சுமத்தும் உச்சபட்ச மனிதத் தன்மையற்ற வரி.’

1931 காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் போது, இந்தப் போராட்டம் குறித்துப் பேசப்பட்டது. உப்பின் மீதான வரி விலக்கப்படும் என்று காந்தி நம்பினார். 1946 செப்டம்பரில் அமைந்த இடைக்கால அரசிடம் இது பற்றி குறிப்பு ஒன்றையும் காந்தி கொடுத்தார். ஆங்கிலேயர்கள் 1947, பிப்ரவரி 28ல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு ஆறுமாதங்களுக்குமுன் இந்த வரி விலக்கப்பட்டது. சந்திரகுப்தர் காலத்திலிருந்து ஏழைகளைத் துரத்திய உப்புவரி ஒரேயடியாகத் தொலைந்துபோனது.

துணைக்கண்டத்தின் குறுக்காக இப்படி ஒரு வேலி அமைத்தது, பிரிட்டானியரின் பெரும் சாதனையே: ஆனால் பஞ்சத்தால் வாடியவர்கள் உப்புக்காக எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.”

ஒரு ஆங்கிலேய மடமையின் ஆதாரமாகத்தான் வேலியை நினைத்திருந்தேன்; உண்மையில் ஆங்கிலேய அடக்குமுறையின் அசுர முகமாக அதைக் கண்டடைந்தேன்; அதிர்ச்சியுற்றேன்” –ராய் மாக்ஸம்.

இந்தியா குறித்த ஒரு முக்கிய ஆவணம் இந்தப் புத்தகம்.