கவிதை

மீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை

​பறையடிக்கும் போது
துள்ளிய மீன்களுக்கு
எந்தத் தெருவின்
கடலுக்குள் நுழைவது என்று
மிகப்பெரிய குழப்பம் வந்துவிட்டது.

ஊரின் நடுவேயுள்ள கடலை
அவ்வளவு நேர்த்தியாகப் பிரித்திருந்தார்கள்
வீட்டின் வாசல்களில் மிதந்த திண்ணைகள்
கம்பி வலைகளைப் பதித்திருந்தன.

அழகாகத் துள்ளி ஆடினாலும்
மீன்கள்  நாறும் என்பதால்
வீடுகள்
ரகசியமாகக்
கடலுக்குள் மூழ்கி யோசித்து
ருசிக்காக மட்டும் ஏற்றுக் கொண்டன.

இசை நகர்ந்து
வேறு கடலுக்கு சென்றதும்
வீட்டுக்குள் நுழைந்த மீன்கள்
உள்ளே ததும்பும்  கடல்
பல்வண்ண அடுக்குகளாக
பிரிந்திருந்தது கண்டு
செவுள்கள் வீங்க அழ ஆரம்பித்தன.

மீன்களைத் தடவியபடியே
துள்ளலின் போது முறுக்கிக் கொண்டிருக்கும்
நரம்புகளின் வேரை அவிழ்த்த வீடுகள்
வாய்க்குள் கைவிட்டு
முதுகெலும்பை உருவி
உருள விட்டு ரசித்தன.

தவழும் மீன்களையே
ஊரின் நடுவேயுள்ள கடல்
எப்போதும் விரும்பியது.

பசி வந்ததும்
கதவை மூடிய வீடுகள்
மீன்களின் கதறலை
இசையென்று அறிவித்த போது
நிம்மதியில்
மலர்ந்து கொண்டிருந்தது பெருங்கடல்.

என்னதான் செய்வது? – காஸ்மிக் தூசி கவிதை

சிறிதாகிவிட்ட சட்டை
தம்பிக்கு.
மீந்து விட்ட
இட்டிலியை
இட்டிலியை விடவும்
மேலான உப்புமாவாக
ஆக்கி விடும்
பாட்டியின்
மந்திரக்கை.

கெட்டுபோன உணவை
கொட்டிடலாம்
விரும்பாத புத்தகத்தை
இன்னொருவர் கைபிடிக்க
விட்டிடலாம்

எங்கேயும்.
பிளாஸ்டிக் துண்டுகள்
பிளாஸ்டர் ஆஃப் பாரீஸால் ஆன
திண்டுகள்
களிமண் வடிவங்கள்
கண்ணாடிச்சில்லுகள்
கான்கிரீட் குண்டுகள்
மரச்சீவல்கள்
உலோகப்பட்டைகள்
மற்றும்
வெட்டி மீந்தவை
அட்டையால் ஆனவை
குருதியில் நனைந்தவை
உருவற்றவை
என,
திருப்தியாக வராத
கவிதைகளை
என்ன செய்வது?

அன்பு மழை – கா.சிவா கவிதை

ஒவ்வொரு துளியாக
ஆவியாகிறது எப்போதும்
அதற்கிணையான
வெம்மையை அளித்துவிட்டு
உயிரே  வெந்து
ஆவியாகும் கணத்தில்
மெல்லிய சாரலாய் தொடங்கி
துளித் துளியாகவே
பொழிகிறது
முந்திவரும் சில துளிகளே
உள்நுழைந்து உயிரையும்  நனைத்துவிட
தொடர்ந்து பொழிந்து வழிவதை
சேமிக்க முயலாமல்
மனம் குளிரக் காண்கிறேன் …
வேறு வேறல்ல
மழையும் அவளன்பும்

பாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்

பாடல் நான்

பறவையைப் பாடும் பாடல் நான்.
நிலத்தை வளர்க்கும் இலை நான்.
நிலவை நகர்த்தும் அலை நான்.
மணலை நிறுத்தும் ஓடை நான்.
புயலை விரட்டும் மேகம் நான்.
சூரியனுக்கு ஒளியூட்டும் பூமி நான்
கல்லை உரசும் நெருப்பு நான்
கையை வடிக்கும் களிமண் நான்.
மனிதனைப் பேசும் வார்த்தை நான்.

மூலம்:
https://lyricstranslate.com/en/charles-causley-i-am-song-lyrics.html

நள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை

இடைவெளி இல்லாமல்
கூடிக் கிடக்கும் உடல்களை
சட்டென்று கிழித்துப் பாய்கிறது ​​
ஆம்புலன்ஸ் சைரனின் சிவப்பொளி.
திகிலடையும் நள்ளிரவின் பாதை
மரங்களின் வேர்களை எழுப்புவதால்
அயர்ந்துறங்கும் பறவைகள்
நெஞ்சிலடித்துக் கொள்கின்றன.
இலைகள்
இதயங்களாகத் துடிக்கின்றன.
நகரத்தின் கடைசியாகப் பூட்டப்படும்
தேநீர்க் கடை வாசலில் நிற்பவன்
இறப்பிலிருந்து தப்பிக்கும் படகு
ஆவி பறக்கும்
குவளைக்குள் இருக்கிறதா என
உற்றுப் பார்க்கிறான்.
சர்க்கரை தின்ற எறும்பொன்று
செத்து மிதக்கிறது.
அத்தனை கொடிய தருணத்திலும்
நடைபாதையில் உறங்குபவர்களின் காமத்தை
அனுமதியற்று  நுகருகிறான்.
ஆம்புலன்ஸிற்காக வழி விடுகிறவர்கள்
இறப்பிலிருந்து விலகி
வாழ்வின் வாகனக் கரங்களை
இறுக்கமாகப் பிடித்தபடி
வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
சைரன் ஒலி
தூங்கும் சகல ஜீவராசிகளையும்
உலுக்கி எழுப்புகிறது.
எல்லோர் ரத்தத்திலும்
அப்போது
ஒரு ஆம்புலன்ஸ்
ஓடிக் கொண்டிருக்கிறது.