கவிதை

நினைவுநாள் – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

1

செடிகள் யாவும்
கூச்சலிட்டிருந்தபோது
நீ வந்தாய்
பிரமையோ நிஜமோயென
அனுமானிக்க முடியாதபடிக்கு
உன்னை என்ன செய்வதென்றே
தெரியவில்லை
இந்த இரவு காமத்தையும்
வரையப்பட்ட காமம்
மீண்டும் இரவையும் வரைகிறது
எதிலும் வண்ணமில்லை
வெளியை நிறைக்கிறது இருட்டு
மரணம் பிரிவா என்ன
கரையானால் அரிக்கப்பட்ட சின்னஞ்சிறிய சாக்கு
இந்நெடிய இன்மைக்கு பிறகு
உன்னிடம்
எது கூடியிருக்கிறதோ இல்லையோ
புதிர்த்தன்மை கூடியிருக்கிறது
பெய்கிற மழை எண்ணங்களை நனைக்கிறது
அதை எங்கு உலர்த்துவது
மண்டைக்குள் புழுங்கிய நாற்றமடிக்கிறது
இப்பொழுது தோன்றுகிறது
என் வெற்றுப் பீடிகைகள்
சகட்டுமேனிக்கு
உன்னை ஏமாற்றியிருக்கக்கூடும்

2

தனிமையின் நிவாரணியே
என் குற்றவுணர்ச்சியின் கிணறே
உதிரும் சிற்றிலையும்
உன்னை
ஞாபகப்படுத்திவிடுகிறது
உடலுக்குள்ளிருக்கும் பூரான்கள்
துடிகொண்டு
அலைகின்றன அங்கும் இங்கும்
மூளைக்கும் இதயத்திற்குமான
பாலத்தில் கனரகவாகனங்கள்
கடந்தகாலத்தை ஏற்றிக்கொண்டு
தாறுமாறாக திரிகின்றன
நடுக்கம் ஏன் துருப்பிடித்த ஏக்கத்துடன்
பேசிக்கொண்டிருக்கிறது இப்போது
சன்னதிகளில் காமம் ஏன்
இப்படி கரைபுரண்டோடுகிறது
இந்த வாழ்க்கையே உனக்கான காணிக்கைதான்
இருப்பு இன்மை என்பதெல்லாம் கட்டுக்கதையென
சொல்லத்தான் வந்தாயோ
வில்லென இவ்வுடலைப்பிடி
நினைவின் நாணிலேற்றிவிடு வாழ்வை
அதோ அந்த நட்சத்திரத்திற்கு குறிவை
தவறினாலும் பிசகில்லை தேவி
ஞாபகம் என்ன ஒற்றையிலை மரத்தின் நிழலோ
இல்லை இலையற்ற மரத்தின் துயரமோ

3

இருந்தாலும்
காலம் இப்படி
அரிக்கப்பட்டிருக்கக்கூடாது
சீரழிவு அச்சுறுத்துகிறது
வழித்துணையாக வந்திருக்கலாம் நீ
இப்படி சுக்குநூறாய்
உடைந்திருக்க நேர்ந்திருக்காது
சீழ்நதியும் வற்றியிருக்கும்
எந்த அறிவும் எனக்கு உதவவில்லை
இந்த அறிவை தீவைத்து எரிக்கமுடியுமா
அதற்கொரு வழியுண்டா
மனதை தோண்டத் தோண்ட
காதலின் எலும்புக்கூடுகளை
கண்டெடுக்கும் துயரத்தை
என்னவென்று சொல்வேன்
பிரமைகளை கத்தரித்து
எடுக்கப்பார்க்கின்றது காலம்
உன்னை குறித்த பிரமைகளை
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
ஏழு மலை ஏழுகடல் தாண்டியிருக்கும்
என் இன்னொரு உடலின் நிலவறைக்குள்
வெளியே காவலுக்கு பணித்திருக்கிறேன் பூரான்களை
இனி விசனப்பட வேண்டாம்

4

இச்சையின் நெளியும்
சாலைகளினூடாக
எங்கெங்கோ செல்லும் நம் ஊழ்வினையை
எப்படி விபத்துக்குள்ளாக அனுமதித்தோம்
உன் வெறிபிடித்த வெற்றிடத்தை
எதையெதையோ
இட்டு நிரப்ப முயற்சித்தேன் இதுகாறும்
அத்தனையும் தங்கள் தோல்வியை
விடியும் முன்னதாகவே
சொல்லிச்சென்றுவிட்டன
உன்னை இவ்வளவு தனியாக
விட்டுச் சென்றிருக்கக்கூடாது
வெளவால்களும் இருட்டும்
மோதிப்பறக்கும் குகைவிழிகளையோ
நன்மையும் தீமையும்
சறுக்கிவிளையாடும் பின்னங்கழுத்தையோ
விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது
குறைந்தப்பட்சம் கடலோரங்களில்
கொடும்புயலாய் கனக்கும்
உன் குரலையாவது வாங்கிவந்திருக்கவேண்டும்
பிரம்மாண்ட எலும்புத்துண்டொன்று
வானில் மிதக்கிறது இப்பொழுது
சன்னலை சாத்திவிடவா
இந்த இரவின் சிற்பம் தள்ளாட
எதிரொலிக்கிறது உன் வளையோசை
உன் மாயையை எதிர்கொள்ள இயலுமோ
இன்னது இன்னதென விதிக்கும்
உன் உள்மனதை அறியமுடியுமோ
இந்நாளில் இப்படி
வந்துநிற்கும் உன்னை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

ஹூஸ்டன் சிவா கவிதைகள்

ஹூஸ்டன் சிவா

புகைப்படம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
கடக்கும் கணம்
துள்ளும் சிறுமி
எத்துப் பற்கள்
மின்னும் கண்கள்
பறக்கும் கூந்தல்
மிதக்கும் மழைத்துளிகள்
காலம் இமைக்கவில்லை
இன்னும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்

oOo

தனியில்லை

இன்று அதிகாலை துயில் விழிப்பில்
விழிகளில் நீர் கோர்த்து வழியவில்லை
சுயபச்சாதாபத்தில்
எப்போதும் போல்
தனிமையில் வராது போனது ஏனென்று
யோசித்து பின் உறங்கி மதியம் எழுந்து
கண்ணாடியில் முகம் பார்க்கையில்
விழிகளில் நீர் கோர்த்து வழிந்தது
சுயபச்சாதாபத்தில்
எப்போதும் போல்
தனிமையில் வராது இனி

oOo

தகப்பன் பிள்ளை

நீண்ட நெடிய தகப்பன்களைக்
கண்டு வியக்கும் பிள்ளைகள்
அத்தகப்பன்களின் தோள்களிலேறி
நின்று பயக்கூச்சலிடுகிறார்கள்
கீழே தம் அம்மாக்களைக் கண்டு
கூவிக் கொக்கரிக்கிறார்கள்
பின் அம்மாக்களின் மார்ப்பகங்களில்
முகம் புதைத்து உறங்குகிறார்கள்
கனவுகளில் அத்தகப்பன்களை
வெல்கிறார்கள் சண்டைகளில்
கொல்கிறார்கள் சிலசமயம்
விழித்தவுடன் விதிர்த்து அழுது
ஓடுகிறார்கள் அத்தகப்பன்களிடமே

மந்திரம் கவிதைகள்

மந்திரம்

21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி

நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.

8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.

ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.

வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.

எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.

எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.

சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.

oOo

கீழ்மையின் ஒளி

அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.

முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது

கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.

தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.

அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது

உனது பிரதியாய் – ஏ. நஸ்புள்ளாஹ் கவிதை

ஏ. நஸ்புள்ளாஹ்


ஔியுள்ள இடத்தில்
முளைக்கத் துவங்குகிறது ஆன்மா
ஒரு விநாடியேனும்
ஔியற்ற இடத்தில் அது
வாழ விரும்பவில்லை

இறுகி விலங்கிடப் பட்ட
இதயத்தின் மேல்
ஔி பட்டுப்பட்டு விலகும் போதெல்லாம்
ஆதியில் விடுபட்டுப் போன எல்லாம் அறியப்படாத புலத்திலிருந்து
ரேகைகளைத் தடவிப்பார்க்கின்றன

அடர் துயர்
கனத்த வலி
மிக எளிதாக ஆன்மாவுள்ளே
நுழைய முடியாமல்
ஔி பறந்து திரிந்து பசுமையின்
உச்சம் தருகிறது

நீ கோப்பையில் வழங்கிய
நஞ்சின் ருசியும்
ஔி ஊடுருவும் சிறு கணத்தில்
நிறமுமற்று சுவையுமற்று உனது பிரதியாய்
காதல் விதைத்து நிற்கிறேன்.

00

சருகு – ம. கிருஷ்ணகுமார் கவிதை

ம. கிருஷ்ணகுமார்

கொஞ்சந் தான்
எதிரெதிர் தான்
இடைவெளி தான்
ஒரு காலை உள்ளே விட்டு
இப்படியும் அப்படியும் உடலைக் குறுக்கி
வெளி வந்துவிடும் காலஅளவு தான்
காலம் சருகைப் போல் உதிரக் கூடியது
ஒரு கணம்
ஒருசில நினைவுத் துளிகள்
உள்ளிழுக்கும் கடல் அலையில்
புதைந்து விடும் பழைய தடங்கள்