மந்திரம்
21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி
நான் ஒரு நாடோடி
என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு.
இரண்டு தொடுதிரை கைபேசிகள்
ஒன்று அலுவலுக்கு.
மற்றது அந்தரங்கத்திற்கு.
8மணி நேரம் தண்டுவடம் மடித்து
பணம் பண்ணுகிறேன்
மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி
ஆம் திருமணமாணவன் -கரணம்
நான் ஒரு 90களின் சிறுவன்.
ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே
இன்னொரு கையால் தற்படம் எடுத்து
நிலை தெரிவிக்கும் விநோதன்.
வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன்
எப்போதும் விருத்தங்கள் வேண்டி
வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன்.
எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஒரு மணிபிளாண்ட் மனிதன்.
எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன்
என் மகனின் நினைவுகளோ
ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும்.
சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில்
என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும்,
நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும்,
என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும்
பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம்.
oOo
கீழ்மையின் ஒளி
அகாலமாய் நீள்கிறது நாட்கள்.
நான்கு சுவர் ஒரு கூரை
கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை.
பெருவிரலின் அசைவுகளில்
தொடுதிரையில்
நுற்றுக்கணக்கானவர்களின் காலம்
உயிர் பெறுகிறது.
காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை.
முகப்புத்தகத்தின்
இடுகைகளில்
மின்னும் விருப்பக்குறிகளில்
பொறாமையின்
இயலாமையின்
நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது
கீச்சுகளின் கருத்துலகில்
உரையாடும் மறுமொழிகளில்
வக்கிரத்தின்
விரசத்தின்
ஆழ்மன முகமூடி
கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது.
தேடுபொறியின்
வலை வரலாற்றில்
அந்தரங்கங்களின் ரகசியங்கள்
வால் தீண்டும் நாகமென
தீரா காமத்தின் பின்னிரவுகளை
முடிவற்று சூழ்ந்திருக்கிறது.
அணையா இருண்மையின்
கீழ்உணர்ச்சிகள்
கரும் இரவின் போர்வையாக
எல்லா அறைகளிலும்
திரையிட்டிருக்கிறது.
ஆதி மிருகத்தின் உயிர்விசையை
அத்திரையொளி
தனித்த சுடர் போல்
நகரின் எல்லா மனிதருக்குள்ளும்
ஒளிர செய்து கொண்டிருக்கிறது