கவிதை

முகம் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

ஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது
எல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி
விசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்
இந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக
அதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்
ஒரு முறையென்ன ஒருமுறை
உங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்
யார் கேட்பது
எடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்
எனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்
வடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி
அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்
எடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்
அந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்
நான் எடுக்கவில்லை
நான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்
அப்படி வைத்துக் கொண்டேன்
இல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது
எடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது
அசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது
ஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்
இவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது
அந்த அசால்ட்டு
இப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்
உண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா
அவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது
யார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ
இது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென
கையை வைத்து உருளையான ஒன்றை
உருட்டியுருட்டிச் சரிசெய்வது போல
என் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி
கோட்டித்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்
அதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு
நானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்
சந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்
அதிகாரி அவர்களே
நான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட
என்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்
இது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது
அதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்
உங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை
உங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்
உண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா
ஆமென மண்டையை ஆட்டிவிட்டால்
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்
இதையாவது முகம் காட்டியதேயென
எனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா

ஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்

ஹூஸ்டன் சிவா

ஆழ்வகுப்பு

வகுப்பில் அன்றுவரை அமையாக் கவனம்
அவளில் கூர்மை கொண்டிருந்தது
அங்கே
ஆண்பெங்குவின்கள் அடைகாத்தன
வானவில்லின் வண்ணங்கள் கட்டவிழ்ந்தன
பூகோள அட்சரேகைகள் நிரைவகுத்தன
இருபடிச் சூத்திரங்கள் பொலிவு பெற்றன
வேதிச் சமநிலைகள் இறுக்கமடைந்தன
வெண்பாக்கள் வெளிச்சம் கொண்டன
சூரியனின் குறுக்கே கோள்கள் ஓடின
கருந்துளைகள் நட்சத்திரங்களை உண்டன
ஆழ் கிணற்றில் மட்டுமே அமையும்
சலனமின்மை அருகமைய
தன்னைச் சுற்றிப் பார்த்தாள்
வகுப்பெங்கும் அரவங்கள் அமர்ந்து
அசையா விழிகளுடன் பாடம் கேட்டன
சாளரக் கம்பிகளில் சுற்றியிருந்த
அன்னையின் வால்நுனி சுருண்டவிழ்ந்தது
அவள் படம் கூரை மேல் கவிந்திருந்தது
நேற்றிரவு கடவுள் கனவில் தோன்றி
என்ன வேண்டுமென கேட்டபோது
தன்னையும் தன் அன்னையையும்
பாதாள உலகமொன்றில்
அடைத்து விட வேண்டியிருந்தாள்
இவ்வுலகம் மிகவும் பிடித்துப் போயிற்று
இங்கேயே இருந்து விடுவதாக
முடிவெடுத்து விட்டாள்

உயிர்க் கனம்

புதிதாய்ப் பிறந்த ஈசல்கள்
விரைந்தெழுந்து விண்மீன்களை
விழுங்கத் தொடங்கின
விண்மீன்கள் குறைந்த கருவெளி
தன்னை நிரப்பிக் கொள்ள
மேலும் விண்மீன்களைப் பிறப்பிக்க
புதிதாய் பிறந்த விண்மீன்களை
தொடர்ந்து விழுங்கின ஈசல்கள்
பெரும் வெளிச்சக் குவியல் ஒன்று
பிரபஞ்சமெங்கும் அலைந்து திரிந்தது
நிலைகுலைந்து திகைத்த கருவெளி
ஈசல் கூட்டத்துடன்
ஒரு உடன்படிக்கை மேற்கொண்டது
ஈசல்கள் அனைத்தையும்
விண்மீன்களாக மாற்றி
அழியா வரம் அளிப்பதாக
ஒரு நிபந்தனை மட்டுமே;
இடம் பெயரால் ஓரிடத்தில் இருந்து
ஒளிர்ந்து கொண்டே இருப்பது தான் அது.
பெரும் ஆர்ப்பரிப்புடன் எழுந்து
விண்ணை நிரப்பின ஈசல்கள்
தமக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்
நிலைபெற்று ஒளிரத் தொடங்கின
இயங்காமையின் இயலாமையில்
ஒரு கணத்திலேயே மனம் பிரண்டன
பிரபஞ்ச விதியின் மூர்க்கம்
உயிரின் துள்ளலை நிறுத்திய
அதே கணத்தில்
விண்மீன்களை உமிழ்ந்து
மடிந்து கருவெளியை நிரப்பின
மேலும் மேலும் விண்மீன்கள்
பிறந்த வண்ணம் இருந்தன

வாராணசி – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

புறப்படுதல்

வாழ்வின் மண்டபத்தில்
அபத்த சங்கீத பிரவாகம்
பின்தொடரும் இனியதோல்வியை
சுயம்வரித்துக் கொண்டேன்
நோயுற்ற காக்கையாய்
ப்ளாட்பாரங்களில்
கூச்சலிட்டது இதயம்
அதோ ஒரு துருப்பிடித்த ரயில்
தொலைந்துபோவதற்காக
அதன் ஏதோவொரு சன்னலோர இருக்கையில்
ஒடுங்கியிருக்கும்
அடக்கமுடியாத ஆசைதான் நானா

பயணம்

ஒரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளி
அந்த இன்னொரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளியென
விரைகிறது ரயில்.
ஒவ்வொரு நிலவெளியும்
ரயிலை
ஒவ்வொரு விதமாய் வரவேற்கிறது.
நிலவெளி ஏதுமற்ற நிலத்தை
ரயில் அடையும் போது
அந்த ரயிலே
ஒரு நிலவெளியாய் மாறி விரைகிறது
இன்னொரு நிலவெளியை நோக்கி

வாராணசி சித்திரங்கள்

0

மைந்தன் கனலுக்கு
காத்திருக்கிறான்
காலை மத்தியானமாக
மலர்ந்துவிட்டது
அந்தப்பக்கமாக நானே
இரண்டு மூன்று முறை
சென்றுவிட்டேன்
இன்னும் கனல்
கிடைக்கவில்லை போலும்
அன்னாரின் உடல்
வருத்தத்திலிருக்கிறது
சாயும்காலமும்
நெருங்கிவிட்டது தன் பத்து தலைகளுடன்
சற்றுதொலைவில் காத்திருந்தேன்
எனக்கு மட்டும்தான்
தெரிந்ததாயென தெரியவில்லை
அந்திச்சூரியனுக்கு பக்கத்தில்
எண்ணற்ற கரங்கள் கனலோடு நிற்க
தன் தந்தையை சுமந்துபடி
அவன் விண் ஏகிக்கொண்டிருந்தான்

0

யாத்ரீகர்கள் பராக்குப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
குரங்களும் பசுக்களும் கூட
சவம் சுடலையில் காத்திருக்கிறது
இனி பிறக்கவே கூடாது என்ற
வைராக்கியமும் அதற்கிருக்கிறது
நல்லதுதான்
விறகுகளை கம்பளித்துணியைப்போல
போர்த்துகிறார்கள்
பின்பு காத்திருந்து பெற்ற நெருப்பை
விறகின் மேல்
உட்காரவைத்தார்கள்
நீங்களும் நானும்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்
நீங்கள் உங்கள் நிலக்கடலை பொட்டலத்தை
பிரிக்கிறீர்கள்
நான் என்னுடையதை
பிறகு நாம் நம் அழகிய புட்டங்களை
எழில்பட ஆட்டினோம் மரணத்தின் முகத்திற்கெதிராக

0

மல்லாந்து படுத்திருக்கிறது வாராணசி
காலம் அதன் கழுத்தில் ஆபரணமாய்
அமரத்துவம் அதன் தலையணையாய்
வாராணசி இன்னும்
தூங்கிக் கொண்டிருக்கிறது
ஏழு ரத சூரியனும்
வந்துவிட்டது
வாராணசியை எழுப்பவேண்டாமா
ஆளுக்கொரு திசையில்
திகைத்து நிற்கின்றன
ஆலய மணிகள்

0

துறவிகள் பயணிகள் திருடர்கள்
ஆய்வாளர்கள் நீங்கள், நான்
என எல்லோரும்
குழுமியிருக்கிறோம்
கங்கைக்கு தீபாராதனை
பெண்கள் விளக்குகளை
மிதக்கவிடுகிறார்கள்
நரிகள் பரிகளான கதையாய்
அத்தனையும் ஓடங்களாக உருதிரிய
அதிலொன்றில் கேமராக்களுடன்
ஆய்வாளர்கள் ஏறிக்கொள்கிறார்கள்
பிறிதொன்றில்
உள்ளூர்வாசிகள் குழாம்
நான் இன்னொன்றில்
ஏறிக்கொள்ளப்போகிறேன்
நீங்களும் வருகிறீர்களா

திரும்புதல்

எங்கிருந்தோ ஒலிக்கின்றன
பூசாரிகளின் உச்சாடன குரல்கள்
முதலைகள் கண்களுக்குள்
நீந்துகின்றன
சேலை மாற்றிக்கொண்டிருக்கிறாள்
எனக்குள்ளிருக்கும் பெண்
இந்நீண்ட மத்தியானவேளையில்
கங்கை
வீதியில் பாய்கிறது
அதன் கரைகளில் புகை
உடுக்கையடித்தபடி ஆடுகிறது
நான் இன்னும் வீடுவந்து
சேரவில்லையோ

கதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

கதை சொல்லி


சூபிச ஞானத்தில் உறங்குகிறது பறவை
அதன் இறக்கைகளை
எறும்பு ஒன்று வாய் பிளந்து கடிக்க
அமைதியின்மை தொலைத்து
வலி உணர்ந்த பறவை
அதன் சொண்டால்
எறும்பின் சருமத்தின்மேல்
மரணத்தை எழுத முனைகிறது
தப்பிக்க முடியாத எறும்பின் சருமத்தில்
மின் அலைகளாய்
பட்டுப்பட்டு விலகுகிறது மரண நேரம்
எறும்பு நினைத்துக் கூடப் பார்த்திருக்காது
பிரதியின் கதைசொல்லி
நான் என்பதால்
ராட்ஷச பறவை ஒன்றாக மாறி
பறவைக்கு மரண நேரம் ஒன்றைக் காட்டி அங்கிருந்து பறவையை விரட்டி விடுகிறேன்.

பறவை வெளி


எங்கிருக்கிறாய்
பறவை வெளியில்
அல்லது
உச்சி நடுவானம்
எப்படிச் சென்றாய்
வண்ணத்துப் பூச்சியின்
சிறகில் அமர்ந்து.

எப்போது திரும்புவாய்
காற்று இன்னும்
அனுமதி தரவில்லை

தேநீர் அருந்தினாயா
ஆம்,
மேகங்களை

உணவு
சூரியன்
சில நட்சத்திரங்கள்

அனுபவம்
கவிதை எழுதும் ஆர்வத்தில்
உரையாடலை மறந்துவிட்டேன்

அடுத்து,
வீட்டு கூரையிலிருந்து
கீழிறங்க
ஏணியை வைத்துவிடுங்கள்.