ஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது
எல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி
விசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்
இந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக
அதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்
ஒரு முறையென்ன ஒருமுறை
உங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்
யார் கேட்பது
எடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்
எனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்
வடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி
அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்
எடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்
அந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்
நான் எடுக்கவில்லை
நான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்
அப்படி வைத்துக் கொண்டேன்
இல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது
எடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது
அசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது
ஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்
இவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது
அந்த அசால்ட்டு
இப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்
உண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா
அவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது
யார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ
இது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென
கையை வைத்து உருளையான ஒன்றை
உருட்டியுருட்டிச் சரிசெய்வது போல
என் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி
கோட்டித்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்
அதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு
நானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்
சந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்
அதிகாரி அவர்களே
நான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட
என்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்
இது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது
அதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்
உங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை
உங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்
உண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா
ஆமென மண்டையை ஆட்டிவிட்டால்
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்
இதையாவது முகம் காட்டியதேயென
எனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா