கவிதை

வதை – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

இந்த இரவின் சக்கரங்கள் நகர மறுக்கின்றன
எனது மனக்குகை வெளவால்களின் இருப்பிடமாக இருக்கிறது
கனவுலகம் எனது பாரத்தைச் சிறிது நேரம் இறக்கி
வைத்துவிட்டு ஆறுதல் தரட்டும்
இந்த நடுநிசியில் அமைதியின் வாசல்
திறந்தேயாக வேண்டுமாய் தவமிருக்கிறேன்
வசந்தத்தின் பாதையை எனது ரதம் தவறவிட்டுவிட்டது
துக்கத்தின் புதல்வனுக்கு
இந்த இரவு ஒரு யுகமாகத்தான் நீளப்போகிறது
கண்கள் ஜீவகளையை இழக்கின்றன
இந்த இரவாவது நான் நிம்மதியாக உறங்க வேண்டும்
உயிர்கள் உறக்கத்தில் லயித்திருக்கும்போது நான்
பிசாசு போல் விழித்திருக்கிறேன்
இந்தப் பூமிப்பந்தில் சகலவிதமான உரிமைகளும்
எனக்கு மறுக்கப்படுகின்றன
எண்ண அலைகளின் வேகத்தை எனது உடலால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை
அமைதியற்ற மனம் இந்த இரவில் ஆறுதலைத்தேடி அலைகிறது
உறக்கத்தைப் பறித்துக் கொள்ளுதல் கடவுளின் தண்டனை
முறைகளுள் ஒன்று என தெரிய வருகிறது
அடிமையாயாவது இருக்கின்றேன் யாராவது ஐந்து
நிமிட உறக்கத்தை பிச்சையாய் இடமுடியுமா
சுவர்க்கோழிகள் என்னை கேலி செய்கின்றன
சேவலே கூவிவிடு உன் சத்தத்தைக் கேட்டாவது
சூரியன் எழட்டும்
நினைவலைகளில் மிதக்கும் காகிதக் கப்பல்
கரைசேர துடிக்கிறது
கங்கையில் முங்கினாலும் எனது பாவங்கள் தொலையாது
விடுதலைக் குயில்களே கீழ்வானம் சிவந்தால்
எனக்குச் சேதி சொல்லுங்கள்
ஒவ்வொரு பகலுக்குப்பின்னும்
இரவு வந்தேயாக வேண்டுமா
இரவு என்னைப் பைத்தியக்காரனாக அலையவிட்டுவிட்டது
நரம்புகளைச் சாகடிக்க கிண்ணத்தில் மதுவை
ஊற்ற வேண்டியிருந்தது
இந்த இரவுக் கடலை கடப்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு
போதையின் பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது
எனது நம்பிக்கை வேர்கள் பலமிழந்துவிட்டன

2

இதோ என் கண்ணெதிரே கடவுள் இறந்து கிடக்கிறார்
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உடல் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்
இன்றுவரை மரணத்தீவில் அவர் பதுங்கி இருந்திருக்க வேண்டும்
மனிதனின் போலியான நடிப்பைக் கண்டு அவர் ஏமாந்துவிட்டார்
கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க மனிதன் விரும்பவில்லை
அவரது ஆளுகைக்கு கீழிலிருந்து இந்த பூமியையாவது
விடுவித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்
நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தன்னை சோதனைக்குள்ளாக்குவதை
அவன் விரும்பவில்லை
பாவத்தின் சம்பளத்தை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான்
சகல அதிகாரங்களையும் கொண்ட ஒருவர் இருந்தால்
தனது திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிடுமோ என பயந்தான்
தனது செல்வத்தைக் கொண்டு தேவலோகத்தையே பூமியில்
அவனால் சிருஷ்டிக்க முடிந்தது
அவன் வாரி இறைத்த பணத்துக்காக தேவதைகள் அவனது
காலடியில் வீழ்ந்து கிடந்தனர்
மனிதன் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள
என்ன செய்வதற்கும் தயாராக இருந்தான்
கடவுளைத் தவிர எதையும் அவனால் விலைக்கு
வாங்க முடிந்தது
விதிக்கு கட்டுப்பட்டே தீர வேண்டுமென்று என்னை யாரும்
கட்டாயப்படுத்த முடியாது என்றான்
பக்கத்து வீட்டில் துக்கம் நிகழ்ந்தபோதும்
மரணத்தைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை
கடவுளின் இருப்பு இங்கு யாருக்கும் எந்த விதிவிலக்கும்
கிடையாது என்று அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது
நிரந்தரமான ஏதோவொன்று அவன் கைக்கு அகப்படாமல் இருந்தது
இந்த உடலில் எங்கே உயிர் குடியிருக்கிறதென்று
அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த வழியில் சென்றாவது உடலின் தேவையை
பூர்த்தி செய்து கொண்டான்
அடுத்தவன் முதுகை எப்படி படிக்கல்லாகப் பயன்படுத்தி
கொள்வதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது
கடவுளின் குமாரனென்று யாரும் பூமிக்கு சொந்தம்
கொண்டாடிட கூடாதென்று அஞ்சியே
கடவுளைக் கொலை செய்தான்
கடவுளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
மனிதனிடம் நம்பிக்கை வைத்த குற்றத்துக்காக
சிதையில் கடவுள் எரிந்து கொண்டிருந்தார்.

3

நீ போதித்த அன்பு இந்த உலகத்தில் ஆட்சி செலுத்தவில்லை
மலைப்பிரசங்கம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
எனது இருண்ட வாழ்க்கையில் உனது உபதேசங்களே ஒளியேற்றி வைத்தன
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை நாமிருவரும் மட்டுமே அறிவோம்
எதிர்வருவது நீதான் என்று தெரியாமல் பலமுறை உன்னைக்
கடந்து சென்று இருக்கிறேன்
கடவுள் ஒரு பரதேசி என்பதை இந்த உலகத்தினர் ஒருநாளும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
நீ ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறது
இந்த உலகம் கடவுளின் பொம்மை விளையாட்டு என்பதை
உன் மூலமாகத்தான் நான் அறிந்து கொண்டேன்
அடிமைகளிடமிருந்து எழுந்த முதல் விடுதலைக்குரல் உன்னுடையது
ஆவிக்குரிய வாழ்விலிருந்து நான் விலகிப் போகும்போது உள்ளுக்குள்
உன் குரல் கேட்கும்
சிலுவையில் நீ இறக்கும் தருவாயில் முணுமுணுத்த வார்த்தை
என்னவென்று நான் மட்டுமே அறிவேன்
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடுத்தால் மரணம்தான்
பரிசாகக் கிடைக்கும் என்று நான் உனக்குச் சொல்லியிருந்தேன்
கடவுள் உண்டென்று நீ ஏற்றுக் கொண்டாய்
அக்கணமே அந்த சக்தியானது உன் மூலமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது
இந்த உலகம் அன்பினை போதித்தவர்களையெல்லாம் அலட்சியப்படுத்தியது
மனிதன் தன் சுவர்க்கக் கனவுகளை பணத்தின் மூலம் நனவாக்கிக்
கொள்ள முயன்று கொண்டிருந்தான்
மனித மனம் சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
அதிர்ந்து பேசாதீர்கள் இப்போது கல்லறையில் உறங்குபவன்
வாழும்போது தூக்கத்தைத் தொலைத்தவனாக இருக்கலாம்
இந்த பூமியில் வாழ்க்கையின் வேர்களைத் தேடிப் போனவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
நான் தவறவிட்ட தேவனின் காலடியை இந்தப் பிறவியிலாவது
அடைய முடியுமா
நான் ராஜபாட்டையை தவிர்த்து முட்களின் பாதையை ஏன்
தேர்ந்தெடுத்தேன் அது உன்னை வந்தடையும் என்பதால்தான்
கர்மவினைகள் என்னைத் துரத்துகின்றன எனது இரவு உறக்கத்தை
பேய்கள் களவாடிவிடுகின்றன
மாய உலகத்தில் கடவுளின் ஒளிக்கீற்றை காண முடியவில்லை
நான் நரக இருளில் தள்ளப்பட்டதற்கு விதியை காரணம் காட்டி
தேவன் தப்பிப்பது சரியா
கோள்களின் இயக்கத்தைக் கட்டமைத்தவனைத்தானே
நீங்கள் கடவுள் என்கிறீர்கள்
உங்கள் கடவுள் சாத்தானுடன் நடந்த சூதாட்டத்தில்
இந்த உலகை பணயம் வைத்து இழந்துவிட்டாரா
எதை எதையோ துரத்தி ஓடுகிறேன்
மரணம் என்னை துரத்துவதை மறக்க
குழந்தைத்தனமான கடவுள் நயவஞ்சகமான மனிதர்களைப்
படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா
இரவின் கண்கள் தனிமையில் அழும் கடவுளைக் கண்டிருக்குமல்லவா
இறைவனின் அடிவயிற்றில் எரியும் நெருப்புதானே மனிதனை சாம்பலாக்குகிறது
எச்சமிட்ட காக்கைகளுக்கு மரம் நன்றி சொல்கிறதா என்ன
இன்னும் இன்னும் என்று ஓடும் மனதினை எதைக்
கொண்டு நான் அடக்குவேன்
அங்குசத்தை தொலைத்துவிட்ட பாகனைப் போன்றதுதானே
கடவுளின் நிலைமை
வாழ்க்கையின் கோரமுகத்தை நான் பார்த்துவிட்டேன்
எப்போது இந்த சித்ரவதைக் கூடத்திலிருந்து எனக்கு
விடுதலை அளிப்பாய்
ஒவ்வொரு இரவும் கண்மூடும்போதெல்லாம்
இந்த இரவு எனக்கு விடியக் கூடாது என்றுதானே நான் வேண்டுகிறேன்
எதிர்ப்படுபவர்களில் யாராவது கடவுளாக இருக்கலாம்
என்று எண்ணித்தானே திருவோட்டை நீட்டுகிறேன்
உன்னால் எனக்கு மரணத்தை பிச்சையாகயிட முடியுமா?

பகல் ரயில், தொடர்பு எல்லைக்கு வெளியே – பைராகி கவிதைகள்

பைராகி

 

பகல் ரயில்

ரயிலின் திடும் ஆட்டம்
எல்லாரையும் குலுக்கியது.
பள்ளிச்சிறுவர்கள் கூடிச் சிரித்தனர்
அக்கணக் குலுக்களில்

முன்னறிவிப்பில்லாமல் ரயில் மீண்டும் கிளம்ப
விழுவதும், எழுவதும், தள்ளுவதுமாக
சிறுவர்கள் சிரிப்பைத் தொடர்ந்தனர்
அடுத்த நொடி ஆட்டத்தின் எதிர்பார்ப்பில்

என் பக்கத்தில் தனியே உட்கார்ந்திருந்த பாட்டி
யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார்
தனது இளமையில்.

போனஸ் சிக்கலை
வண்டியோட்டி தனது சகாவிடம்
புலம்பிக்கொண்டிருந்தார் அன்றைக்கு இரவில்.

ரயிலின் குலுக்கலில்
முன்னும் பின்னுமாக ஆடிய
காலத்தை கணக்கில் வைத்த
குவளை முகப் பறவை
நிதானமாகக் கடக்கும் ரயிலின்
தற்பொழுதை கிளை மறைவிலிருந்தபடி
வரவில் வைக்கிறது.

தொடர்பு எல்லைக்கு வெளியே

பேசத்தொடங்கிய குகை வாசியின்
பெருந்தனிமை எனைச் சூழாதிருக்க
மனம் விரும்பியும்
சோம்பிக்கிடக்கப் பிடிக்காது
சுள்ளென அடித்த வெயிலைப்
போர்த்திக்கொள்ள மெல்ல
வாசலுக்கு வந்தேன்.
குறுக்கும் நெடுக்குமான அண்டை வீட்டுச் சுவர்கள்.
சுருட்டி வைத்திருந்த அன்றைய பேப்பரை
ஓனர் கையிலிருந்து வாங்கினேன்.
தரையில் முழுவதுமாக விரித்து
பேப்பர் சுருளை நீவிடத்தொடங்கினேன்.
தொட்டும் விலகியும் சென்ற மடிப்புகள்
நேற்றும இன்றும் போல
தொடர்பற்றுக் கிடந்தன.

மகா நிர்வாணம், சாத்தான், கானகம் – ர. சங்கரநாராயணன் கவிதைகள்

ர. சங்கரநாராயணன்


மகா நிர்வாணம்

யாருமில்லா பெருவெளியில்
கொட்டிக்கவிழ்த்த இரவாய்
எங்கும் வியாபித்திருக்கிறது
மௌணம்.

கண்ணாடியில் விழுந்த
நீலநிற பிம்பத்தில் தெரிவது யாரோ?

சதைகளின் பெருக்கத்தில்
முகத்தின் தழும்பில்
எனக்கான சாயல் உண்டு

ஆடைகளற்ற நிர்வாண
ஸ்ருதியில் எனக்கும் உள்ளது
சிரிக்கும் புத்தனின் சாயல்

ஒரு கைகுலுக்கலில்
கடத்தப்பட்ட காமம்
பலிபீடத்தில் வதைபடுகிறது

என்னையேற்றிய பலிபீடத்தில்
சிதறிய ரத்தம்
ஈக்களுக்கு உணவாய்

அருபமாய் அரூபமாய்
அருபடுகிறது அறுபடுகிறது வேர்

புல்லின் நுனியில்
காத்திருக்கும் தனிமை

தேவகணத்தில்
அபூர்வ மழை

தூரத்தில்
படிமமாய் கடவுள்

இன்றோடு மறையட்டும்
நாணம்.

சாத்தான்

நீங்கள் இதுவரை சாத்தானை
கண்டிருக்க மாட்டீர்கள்
உங்கள் எல்லோருக்கும்
சாத்தானைப் பற்றிய அறிதல் உண்டு

ஆதாமும் ஏவாளும்
ஆதியில் அவனை அறிந்தவர்கள்

தோற்றத்தில் அவன் என்னை ஒத்திருப்பான்
பேரறிவில் அவன் உங்களுக்குச் சமமான,
அல்லது உங்களைவிட மேலானவன்

நீங்கள் நெடுங்காலம் பயணம் செய்த வழியில்
ஒருவேளை அவனைச் சந்திக்கக்கூடும்

சட்டென்று இறந்தகாலப் புனைவில்
உங்களை ஆழ்த்த எத்தனிக்கலாம்

நீங்கள் மறக்க நினைக்கும்
ஒன்றை  ஞாபகப்படுத்தலாம்

ஒரு தேவகணத்தில் நீங்கள்
அவனை உணர்ந்து கொள்ளக்கூடும்

ஞானத்தில் விழித்த பேரமைதி
உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்

நினைவு தப்பிய குடிகாரன் போல்
அவனைப்பற்றியே சிந்திக்ககூடும்.

யாருமற்ற வெட்டவெளியில்
நடனமாடத் தோன்றும்

ஒரு நீண்ட புணர்ச்சிக்கு தயாராவீர்கள்
பின் நீங்களும் சாத்தானாகிவிடுவீர்கள்

எச்சரிக்கையாக இருங்கள்
சாத்தான் அவன் வழியே போகட்டும்

கானகம்

அற உணர்ச்சியின் விசும்பல்
எல்லா தெருக்களின்
கடைசிவரை
கேட்கின்றது

நிச்சலணங்களை
ஒதுக்கி வைத்துவிட்டு
கூடுகட்டத் தயாராகிறது
ஒரு பறவை

அன்றைய கனவில்
வந்தமர்ந்த
நெடுங்காலத்திற்கு முன்
பத்திரப்படுத்திய
இறந்த பறவையின்
ஒற்றைக் சிறகு.

ஆசிர்வதிக்கப்பட்ட
குழந்தைகளிடம்
முத்தங்களைப் பகிர்கின்றேன்

சிறிய பறவையின் அலகில்
கணத்த கனத்த மழை
சூல் கொள்கிறது

மானுடத்தின்
மொத்த பிரியத்தையும்
இறக்கி வைத்திருக்கிறேன்

பறக்கும் இடைவெளியில்
பற்றி எரிகிறது கானகம்

வழிப்போக்கன் குறிப்புகள் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்
1

இது எத்தனாவது ஞாயிற்றுக்கிழமை என்று தெரியவில்லை
பிறந்ததிலிருந்து எண்ணிக் கொண்டா இருக்கிறோம்
விடுமுறை நாளென்பதால் சூரியன் உதித்த பின்புதான் எழுவது
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையை ஏன் ஓய்வு நாளாக தேர்ந்தெடுத்தார்கள்
என்று நான் விவாதிக்கப் போவதில்லை
அடிமைச் சேவகம் செய்பவர்களெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்
அவிழ்த்துவிடப்படுகிறார்கள்
உத்தரவை செயல்படுத்த தாழப்பணிந்து நிற்க நேர்ந்தது என் விதி
எஜமானர்களுக்கு உழவுமாடும், பணியாளும் ஒன்றுதான்
ஏ.சி அறையில் போடப்படும் கையெழுத்து
விளிம்பு நிலை மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கிறது
கடவுளின் அலைவரிசைக்கு ஒத்துப் போகின்றவர்களெல்லாம்
சாதாரண பரதேசிகள்தானே
ஏழையின் பாத்திரத்தை அருள்மழை நிரப்புவதே இல்லை
ஏழைகளின் சுவர்க்கக் கனவுகளெல்லாம் வெறும்
சோற்றுப் பருக்கைகள்தான்
திரையில் காட்டப்படும் மாயாஜால வித்தையால்
ஏழைகளை எளிதில் வசியப்படுத்திவிட முடிகிறது
இந்த அடிமைகள் தேடுவது விடுதலையை அல்ல
கைவிலங்குகளை
இந்த உலகம் அழியும் வரை ஏழைகளின் பசி நெருப்பில்
குளிர்காய ஒரு கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

2

மனிதர்களிடம் இவன் வைத்த நம்பிக்கை குறைந்தபோது
இவன் தன் பகுத்தறிவு முகமூடியை கழற்றி வைத்துவிட்டான்
இவனது நம்பிக்கையை கடவுள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை
கவலை மேகங்கள் இல்லாத வாழ்க்கை வானை
கற்பனை செய்துகூட பார்க்க முடியாது அல்லவா
கருணை வெளிப்படும் தருணத்தில் கடவுள்தன்மைக்கு
வெரு அருகாமையில் சென்றுவிடுகிறோம் அல்லவா
வாழ்க்கை தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்ற கேள்விக்கு
இவனுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை
இயற்கை உந்துதலுக்கு ஆட்பட்டு தவறிழைக்கும்போது
இவன் பிதாவை வருத்தமடையச் செய்கிறான்
நல்லவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு என்ன
அளவுகோலைப் பயன்படுத்துவதென்று இவனுக்குத் தெரியவில்லை
தரித்திரத்தில் உழல்பவன் மனதில் ஆசாபாசங்களுக்கு
இடம் கொடுக்கலாமா
வாழ்க்கை, புதையலை காவல் காக்கும் பிசாசு
காசு பண்ணத் தெரியாதவன் கடைசிவரை
ஏங்கி ஏங்கிச் சாக வேண்டியதுதான்
இவனுக்கான போதி மரத்தை இன்னும் இவன் தேடிக் கொண்டிருக்கிறான்
இவனுக்கு இங்கிருந்து வெளியேறும் வழி தெரியவில்லை
உண்மைக்கான தேடல் மற்றவர்களிடமிருந்து இவனை
அந்நியப்படுத்திவிட்டது
வாழ்க்கை இவனை மென்று தின்று கொண்டிருக்கிறது
அகம் நோக்கிச் செல்பவர்களுக்கு இந்த உலகம்
சிலுவையைத்தான் பரிசாகத் தருகிறது
இவனுக்கு இப்போதுதான் புரிந்தது கடவுள் என்ற பைத்தியக்காரனின்
கனவுதான் இந்த உலகமென்று.

3

ஆறுதலைத் தேடியலையும் எனது ஆன்மாவுக்கு
சாந்தியளிக்க எவரால் இயலும்
கடவுளின் தண்டனை முறைகள் இப்படித்தான் இருக்குமென்று
யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது
மரணம் விடுதலை தரும் என்பதால் எல்லா
சித்ரவதைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது
பிரார்த்தனை விண்ணப்பங்கள் வெற்றுக் கூச்சல் என
கடவுளால் அலட்சியப்படுத்தப்படுகிறது
இந்த பூமி பாவத்தின் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கான
இடமென்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது
எந்த மனிதருக்குள்ளும் கனவுகளை விதைக்காதீர்கள்
வாழ்க்கையில் வசந்தத்தை எதிர்நோக்கி காத்திருந்தவர்களெல்லாம்
கண்டடைந்தது என்ன என்று நீங்கள் தெரிந்து கொண்டால்
நிச்சயமாக உங்கள் தேர்வு தற்கொலையாகத்தான் இருக்கும்
அந்திம நாட்களை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை
கேட்டுப் பாருங்கள் அவர்களில் எவரும்
மறுபடி பிறக்க விரும்ப மாட்டார்கள்
இந்த இரவிலாவது எனது விழிகள் உறங்குமா
உனது ஆளுகைக்கு கீழ் உள்ள என்னால்
உனக்கு அப்படியென்ன ஆபத்தை விளைவித்துவிட முடியும்
கடவுளிடம் மன்னிப்பின் ஒளியை எதிர்பார்த்து
ஏமாந்து போனவர்கள் எத்தனை பேர்
இந்த இரவுப்பொழுது எனக்கு அமைதி தரட்டும்
என் கேள்விகளுக்கு நீ விடையளிக்க மாட்டாய்
என்று தெரியும்
எனது பலவீனம் என்னவென்று நீ அறிந்து வைத்திருக்கிறாய்
நான் இறந்த பின்பு நீ சித்ரவதை செய்து இன்புற
அடுத்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்
தீர்ப்பு நாளிலாவது என் தரப்பு நியாயத்தை
செவிமடுப்பாயா
விடியாத அந்த ஓர் இரவை எதிர்பார்த்துதான்
ஒவ்வொரு இரவும் நான் உறங்குகிறேன்
தீர்க்க தரிசனங்கள் உண்மையென்று நம்பி
ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்
விடைபெற்றுக் கொள்கிறேன் எந்த ஒரு மனிதனும்
நான் கடந்து சென்ற பாதையை தேர்வு
செய்ய வேண்டாம்.

4

அன்பினால் இந்த உலகை நிறைத்தவர்கள்
இன்றும் நினைத்துப் பார்க்கப்படுகிறார்கள்
தன்னை இரட்சிக்க நினைக்கும் அன்பின் ஒளியை
மனிதன் அலட்சியப்படுத்திவிடுகிறான்
ஜீவனின் யாத்திரை எதை நோக்கியதாக இருக்க வேண்டும்
மாயமாகிப் போகக்கூடிய இந்த உடலின்
தேவையை பூர்த்தி செய்வதுதான் வாழ்க்கையா
வாலிபத்தில் எதிர்காலத்தைப் பற்றியக் கனவு இன்பமாகத்தான் இருக்கும்
ஞானத்தை அடையக்கூட தொழில்நுட்பம் இன்று வந்துவிட்டது
மொட்டுக்களை இயற்கையல்லாமல் மனிதன் திறப்பது சாத்தியமா
இன்னும் வேண்டும் என்கிற ஆசை இறக்கும் வரை இருந்துகொண்டுதான் இருக்கிறது
மரணத்தின் நிழல் இந்த உலகை ஒருநாள் முழுமையாக தழுவுமல்லவா
கடவுளை வைத்து பணம் பண்ணும் தரகர்களால்
உங்களை மரணத்திலிருந்து காக்க முடியுமா
பூமியின் ஆயுளுடன் ஒப்பிடுகையில் மனித வாழ்க்கை சில நொடிகள்தானே
நான் என்பது எங்கிருந்து எழுகிறதென்று நீங்கள் என்றாவது யோசித்ததுண்டா
ஒருவனின் நம்பிக்கைச் சுவரை உன் வார்த்தைகளால் தகர்த்துவிடாதே
உனது வாதத் திறமையால் வாழ்க்கையை வாங்க இயலாது
உலகை வென்றவர்களெல்லாம் கடைசியில் என்ன கொண்டு போனார்கள்
வாழ்க்கையின் வேர்களை அறிய ஒரு பிறவி போதாதா
விதியின் கொடிய கரங்கள் மனிதனை பொம்மையாகத்தான் ஆக்கி வைத்திருக்கிறது
வலையில் அகப்பட்டுக் கொண்ட மீன் சேற்றில் தலை புதைத்துக் கொள்ளுமாம்
பூஜிக்க வேண்டியது மண்ணாலான இந்த உடலையல்ல உள்ளேயிருக்கும்
பரிசுத்த ஆவியை
கடவுளர் பூமியில் வாழ நாம் சிறிதும் அருகதையற்றவர்கள்
கடவுளின் ஒவ்வொரு குமாரனையும் பார்த்து நாம் பரிகசித்து சிரித்தோம்
இந்த உலகில் புற்றீசல் போல மதம் பெருகிவிட்டது
நெஞ்சில் ஈரமற்றவர்கள் இன்று குண்டுகளால் ஆயிரக்கணக்கானவர்களை
கொன்று குவிக்கிறார்கள்
மனிதர்களிடம் அன்பை விதைக்க ஸ்தாபிக்கப்பட்ட மதங்கள்
இன்று தோல்வி கண்டுவிட்டன
கைவிடப்பட்ட இந்த உலகினருக்கு தற்கொலை ஒன்றே தீர்வாக அமையும்.

தற்செயல் – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

கால் ஊனமுற்ற குழந்தைகளின் சாக்லேட்டை நான் திருடுவது போலவும்
அவர்கள் துரத்திவருவது போலவும்
ஒரு கனவு
விழித்தவுடன், என்னை சீக்கிரம் எமதூதர்கள் கூட்டிச்செல்வது நல்லதென்று
முணுமுணுத்துக் கொண்டேன்
யாரோ கைதட்டும் சப்தம் கேட்கிறது