கவிதை

பறவை – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

 

இறக்கைகளை பறத்திக் கொண்டு
விரிந்த நிலப்பரப்பில்
நின்றிருக்கிறது
சாம்பல் வண்ண பறவை ஒன்று
தன் நிழலைப் பார்த்தபடி.

பருவமாற்றத்தின் படிநிலையைக்
காட்ட வலசை போகலாம்.
காவ் காவ் என கப்பல்காரருக்கு
நிலத்தின் வரவை
கட்டியம் கூறலாம்
உண்டிவில்லிலிருந்து விசையோடு
வீசப்படும் கல்லுக்கு
தப்பித்து செல்லலாம்.
செந்நா சுவைக்கு இலக்கென
அனலில் வறுபட்டு
அரிவகை உணவாக செரிமானம் ஆகலாம்.
ஓவியனின் கலைச்சுவைக்கு
தூண்டுகோலாகி
தூரிகையில் வண்ணப்பிரதியாகலாம்.
தன் இனத்தின் பிரதிநிதியாக
நூல்களின் சேகரிப்பில்
தகவல் தொகுப்பாகலாம்.
உயிர்த்திருத்தலின் எத்தனிப்பிற்காக
சிறுமீன் வேட்டைக்கு புறப்படலாம்.

மூக்குயர்த்தி எழும்பி
விரிந்த வானில் புள்ளியென
கரைந்து போகலாம்.

சிறுகண்ணை திருப்பி
என்னைப் பார்த்துக் கொண்டே
வளைய மூக்கால்
இறகுககளை கிளர்த்திக் கொண்டு
யோகியின் முக்திநிலையில்
இப்படியே இருக்கலாம்.

வேட்கை – சரவணன் அபி கவிதை

சரவணன் அபி

பசுமஞ்சள் அலகைச் சாய்த்துச் சாய்த்து
கையகல நீர்த்தேக்கத்தை
துளித்துளியாய் அருந்துகிறாய்
அடுத்தப் பேருந்து வந்து
நீர்த்தேக்கத்தை சிதறடிக்குமுன்
உன்சிறு நாவின் வேட்கை
தணியுமோ ஆறாதோ
தவித்தவாறு நடைமேடையில் நிற்கும்
என்னருகே தாவி நின்று
வந்த பேருந்து கிளம்பக் காத்திருக்கிறோம்
நீயும் நானும்

ஊருணிக்கரை, சாமானிய முகம் – ஸ்ரீதர் நாராயணன் கவிதைகள்

– ஸ்ரீதர் நாராயணன் –

ஊருணிக்கரை

மகிழம் பூக்கள் விழுந்திருந்த
வேனில் கால இரவொன்றில்
ஈர வீச்சத்துடனான குளிர்தென்றல் வீசும்
ஊருணிக் கரையோரமாக
வேர்புடைப்பு அணைந்த
குழிந்த மென்தரை மீது
வெண்சீலைத் தலைப்பை
விரித்துப் படர்ந்தபடி
வியர்வை காற்றாடிக் கொண்டிருக்கும்
ஒற்றை நிலவின் ஒளி
மறைத்து வைத்திருக்கிறது
ஈரமண்ணில் வரைந்தபடி
விலகிச்சென்ற காலடித் தடங்களை

சாமானிய முகம்

உன் முகம் பிரதிபலிக்கும்
என் முகம் போல
அத்தனை குழப்பமில்லை

கொஞ்சம் குரூரமும், கொஞ்சம் சுயவாதையும்
கூர் பார்க்க காத்திருக்கும்
தீட்டிய சொற்களும்
நெடும்பயணமும் ஆழ்ந்த தனிமையும் விழையும்
குவிந்த உதடுகளில்
இட்டுவிட காத்திருக்கும் சிறு முத்தமும்
கொண்ட சாமானிய முகம்.

ஏ. கே. ராமானுஜன் கவிதையின் தமிழாக்கம்- ‘பதைபதைப்பு’ – நம்பி கிருஷ்ணன்

நம்பி கிருஷ்ணன்

பீதிமரத்தின் கிளையில்லாமை அல்ல,
அப்பட்டமான வேர்களும் ரகசியமான சுள்ளிக்கிளைகளும் அதற்குண்டு.
நம்பிக்கை பரவளையங்களின் வடிவியல் நேர்த்தி அல்ல,
உச்சியில் என்னையே முடிச்சாக கொண்ட
முடியப்படா தளர்நுனிகள் அதற்குண்டு.

கள்ளச் சந்திப்பின் குதூகலத்துடன் விரையும் நீரின் விழிப்புணர்வு அல்ல,
கரிப்பிசின் இழைமையுடன் தூக்கக்கலக்கத்தில் பிசுபசுக்கும்
வெள்ளரவுக் கண்ணாடிப் பாதைகள் அதற்குண்டு.

தீநாக்கின் சுவாசப்பைகள். நீரின் கண்கள்.
நிலத்தின் என்புத்தசை. காற்றின்
புலனாகா புறாக்களின் கூட்டம்.
                                 ஆனால் பதைபதைப்பிற்கோ
தன்னைப் போக்கிக்கொள்ள ஒரு உருவகம்கூட கிடையாது.

(This is an unauthorised translation of the poem, “Anxiety” by A.K. Ramanujan. This Tamil translation is intended for educational, non-commercial display at this particular webpage only).

நிழல்கள், நிலக்காட்சி – ஆகி கவிதைகள்

ஆகி

நிழல்கள்

வான் தொட எத்தனிக்கும்
பனையினடியில் வேறெதுக்கோ
ஒதுங்கி நிழலைத் தேடியவனின்
நிழலில் ஒதுங்கியது
மரப்பல்லியொன்று
நிழலென்று மரப்பல்லிக்கும்
ஒன்றுண்டு போலும்
அருகினில் எறும்பும்
தனது நிழலை இழுத்தபடி
ஊர்ந்து வருகிறது
தூரத்தில் நீள்கழுத்தில்
தலையசையாத் தலையாக
பனையின் நிழல்
அத்தினம் அரைவட்டமிட்டு
கதிரவனை உச்சந்தலைக்கு
கொணரும் கணம் வரை
எவரும் காத்திருக்கவில்லை
அவரவர் நிழல்களோடு

நிலக்காட்சி

அரை நூற்றாண்டுக்கு இருமுறை நிகழும் நிலக்காட்சியில்
விற்போர் நிலம் விற்பனைக்கென்று துடிக்கும்
மெலிந்து நலிந்த உடல்களைக் கிடத்தியிருக்க
நன்றாய் வளர்ந்த வாங்குவோர் நிலம் விற்பனைக்கல்லவென்று
உடலை நிறுத்தியிருந்த இவனைச் சூழ்ந்திருக்கத் தேவையில்லை
நா நுனியில் வசைகள் வரிசையில் நெருக்க
இவன் தும்மினால் நாசியில் ரீங்கரிக்கும் தேனீ
சொரிந்தால் தலையை வட்டமிடும் சிட்டு
ரத்தநாளத்திலிருந்தெழும் செடி கொடிகள்
முதுகுத்தண்டிலிருந்தெழும் தேக்குகள்
எலும்பிலிருந்தெழும் அத்தி மரங்கள்
நரம்பிலிருந்தெழும் புற்கள்
நெளியும் கம்பளிப்புழுக்களும்
மினுக்கும் மின்மினிகளும்
இவையும் இன்னபிறவும் யாவும் எவையும்
குளிரூட்டியே கதியெனக் கிடக்கும் மஞ்சள் பார்வைக்குத்
தத்தம் இயல்பில் புலப்படாது போனதில் ஆச்சரியமொன்று மில்லை
அதிலும் திமிர்ந்து நிமிர்ந்த உடலில் முளைவிடும் பச்சையக்
குருத்துகள் அநியாயத்துக்கு மயக்கமளிப்பவை
இவன் விசிலடித்துக்
காளையாய் நின்றான்
விற்போரும் வாங்குவோரும்
பிரமை விலகி
மும்முறை திடுக்கிட்டனர்
எல்லாம்
சட்டெனத்
துலங்கினாற்போல்