சிறுகதை

அமர் – விஜயகுமார் சிறுகதை

“இது நின்னுக்கிட்டு இருக்குடா; சம்மணம் போட்ட மாரில நான் டிஸைன் கேட்டேன்? “ரங்கசாமி சலித்துக் கொண்டார்.

“சாரி பெரிப்பா, சின்ன ஸ்தபதிதான் எதுக்கும் இந்த டிஸைன குடுத்துப்பார்ன்னு சொன்னார். “விஜயன் தன் பெரியப்பாவைப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

“எல்லாரும் உன்ன சொல்றது சரியா தான் இருக்கு; ஏன்டா கலுத வயசாகுதுல, உங்கிட்ட ஒரு வேல சொன்னா உன் குண்டிக்குப் பின்னாலயே ஒருத்தன் சுத்தனுமா? அப்பத்தான் எதயுமே ஒழுங்க செய்யிவியா” கத்தினார். “உக்காந்து மூணு வேலையும் கொட்டிக்க தெரியுதுல்ல?”

கோபத்தை உதட்டில் அடக்கியவாறு விஜயன் பெரியப்பாவை பார்த்தான்.

சிரிது நேரம் அமைதியாக அந்த காகிதத்தைப் பார்த்து விட்டு, “நல்லாத்தான் இருக்கு, ஆனா நம்ம சாமி உக்கந்தமாரிடா, நோம்பி வேற சீக்கிரம் வருது” என்று அந்த டிஸைன் காகிதத்தை அவன் கையில் திணித்தார். “நீ போய் பெரிய ஸ்தபதிய பாத்து சரியா விசயத்தை சொல்லு. சுகாசனதில இருக்கணும் முத்திரை அவசியமில்லை” என்றுசொல்லி உயந்திருந்த குரலை தணித்தார்.

“சரிங்க” மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சட்டென திரும்பி நடக்க அரம்பித்தான் பெரியப்பாவைப் பார்க்காமேலேயே.

“நம்ம சாமி..” என்று ஏதோ சொல்லவந்தவர் விஜயனின் நடை வேகத்தைப் பார்த்து நிறுத்திக் கொண்டார்.

2

திருவிழாவிற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது. அதற்குள் முடிக்கவேண்டுமாம். புதிதாய் வாங்கிய தோட்டத்தில் உள்ள சாமி மீது பெரியப்பவுக்கு பைத்தியமே பைத்தியம்தான். தோட்டத்தின் வேலி ஓரத்திலிலுள்ள ஒரு மணற்திட்டின் மேல் ஒரு கல்லாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. இப்போது அதை சுற்றி சுவர் எழுப்பியிருந்தார் பெரியப்பா. மேலே சிறிய கோபுரம்கூட வரலாம். எங்கள் மற்றொரு தோட்டத்தில் ஏற்கனவே இரண்டு இடத்தில் சன்னதிகள் இருந்தது. கன்னிமார் சாமிகள் ஏழு வெங்கச்சாங்கல்லாக வேப்பமரத்தடியில் வீற்றிருந்தார்கள். காட்டுமுனியும் அருகிலேயே. நானும் என் கூட்டாளியும் ஒருமுறை ஊர்களிலுள்ள அத்துனை சாமிகளையும் எண்ணினோம், மூன்றுபேருக்கு தலா ஒரு சாமி இருந்தது. பெரும்பாலும் கருப்பு.

அதுயென்ன உக்காந்து கொட்டுகிறது. எல்லோரும் நின்னுக்கிட்டா சாப்பிடுறாங்க? சொல்லப்போனால் இந்த வீட்டில் மிக குறைவாக சாப்பிடுவது ஆத்தாவிற்குப்பின் நான்தான்.

அன்று ஏனோ ஆத்தாவின் நினைவாகவே இருந்தது. மாடியில் படுத்திருந்தேன், பெரியப்பா வந்து படுக்கை விரித்தது தெரிந்தது. நான் அவருக்கு முதுகு காண்பித்து திரும்பிப் படுத்திருந்தேன்.

பெரியப்பா, “டேய்!”

“ம்ம்ம்”

“என்னடா கோவமா?”

நான் பதில் சொல்லவில்லை.

அவர், “”நானும் உனக்கு அப்பன் தான? அப்பன் திட்டகூடாதா? நீதாண்டா எனக்கு கொல்லி போடப்போறவன். ஆத்தாவுக்கு நான் எப்படியோ அப்படிதாண்டா நீ எனக்கு.”

நான், “ஆமா பெரிய அப்பன், எப்பப்பாரு உக்காந்து சாப்பிடறான் உக்காந்து சாப்பிடறான்னு சொன்னா யாருக்குத்தான் கோவம் வராது” என்றேன்.

“நம்ம சாமிகூட சிட்டிங் சாமிதான்டா” என்றார். அவருடைய ஆங்கில புலமையை என்னை கொஞ்சம் தளர்த்தியது. லேசாக சிரித்துக்கொண்டேன். “என்ன இருந்தாலும் அப்பன்ல; ஆத்தாவும் என்ன அப்படிதாண்டா பேசும்; ஆனா நான் ஆத்தாவ எப்படி பாத்துக்கிட்டேன் தெரியுமா?” என் முதுகிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“சும்மா பொய் சொல்லாதீங்க. ஆத்தாவ நீங்க கஞ்சா கிழவி கிறுக்கு கிழவின்னு தான் கூப்பிடுவீங்க.” திரும்பினேன்.

பெரியப்பா சிரித்தார், “ஆமா ஆமா, நம்ம பெரிய பண்டாரம் தான சப்ளையர். ஆத்தாவுக்கு நீன்னா உசுரு. நாலு அடிதான் இருந்தாலும் எட்டு குழந்த பெத்தவட, தெய்வ ராசிக்காரி” பெருமூச்சு விட்டார், “அய்யன் இறந்துதலிருந்து தான்டா ஆத்தா அப்படி ஆனது. அப்பெல்லாம் ஆத்தா எப்படி தெரியுமா? சும்மா சுபிக்ஷ ராசி. என்ன கெம்பீரம் என்ன தேஜசு, அத்தன பேரையும் ஒரு சொல்லு ஒரு பார்வையில வேல வாங்குவா. அப்புறம் தான் இப்படி ஆயிட்டா. காவி சேலையும் கஞ்சாவும். கொஞ்சம் கொஞ்சமா கிறுக்கு ஏறி வந்துடுச்சு. பொதுவா அவ உண்டு அவ வேலையுண்டுனு தான் இருப்பா. பொக போட்டாமட்டும்தான் கிறுக்கு கூடிவரும். ஊரு சாவடில படுத்துகிடப்பா, கெட்ட வார்த்த அல்லி வீசுவா, சேலை கலைஞ்சு கண்றாவியா திரியுவா. எப்போ ஊர் சாமி மேல கை வச்சு பேசிக்க ஆரம்பிச்சாளோ அப்பறம்தாண்ட கட்டி வைக்க ஆரம்பிச்சோம். அண்ணில்ல இருந்தே அவ மேல மிருகவாடை வர ஆரம்பிச்சுதுன்னு நினைக்கிறேன்.”

நான் “ம்ம்” கொட்டினேன். பெரியப்பா நினைவுகளில் சென்றார்.

“ஊரிலேயே இப்போ நம்ம வீடு தான் பெரிசு. அதனால தான் நம்ம விட்ட பெரிய வீடுன்னு கூப்பிடுறாங்க. பல தலைமுறைக்கு முன்னாடி ஏதோ ஒரு கிராமதித்திலிருந்து கொலைக்கு பயந்து அஞ்சு குடும்பங்கள் நம்ம நிலத்திற்குவந்து தோட்டம் செஞ்சாங்க; அவர்கள் கொண்டுவந்த ஒரு மொடா கூட நம்ம வீட்டின் தென்புல அறையில இருக்கு. வருஷம் ஒருக்கா பொங்கல் வச்சு அதை கும்பிடுறோம். ஆத்தாவுக்கு மட்டும்தான் அதை தொடும் உரிமை இருக்கு.” பெரியப்பா ஆகாயம் பார்த்து பேசிக்கொண்டிருந்தார்.

“அத்தா ஒரு தடி வச்சுருக்கும், நல்ல பாத்திருந்தீனா தெரிஞ்சிருக்கும் அது ஒரு உலக்கைன்னு. அது தேஞ்சு தேஞ்சு தடி மாறி ஆகிடுச்சு. அந்த உலக்கைக்கு வயசு முந்நூறாவது இருக்கும். அத்தா ஒரு பழைய உசுருடா; பெரிய உசுருடா; பத்து தலைக்கட்டுக்கு ஒருக்காதான் அப்படி உசுரு வந்து பொறக்கும்னு சொல்லுவாங்க.” பெரியப்பா அப்படியே தூங்கிப்போனார்.

நான் நினைவுகளை புரட்டினேன். வீட்டிற்க்கு தெற்குப்புறமாக மாட்டுத் தொழுவம் இருந்தது. தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்ததிலிருந்து மாடுகள் தோட்டத்திற்கு குடிபெயர்ந்துவிட்டது. அந்த தொழுவம்தான் அப்போது ஆத்தாவின் வசிப்பிடம். தன் கயிற்று கட்டிலை ஆத்தா அங்கு கொண்டு போட்டதிலிருந்தே பெரியப்பா அவளிற்கு தேவையான வசதிகளை அங்கு செய்ய ஆரம்பித்தார். சிறிய அறை ஒன்று கட்டினார். ஆனால் ஆத்தா வெளியிலேயே படுத்துகொண்டாள். மாட்டுத் தொட்டியை பெரியப்பா வாரம் ஒருமுறை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பியும் வைத்துவிடுவார். நேரம் தவறாமல் அம்மா சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு வந்துவிடுவாள். ஆத்தாவும் எப்போதாவது சமைப்பாள். தொழுவத்திற்கு பக்கத்திலேயே விரகடுப்பு மூட்டி. அவள் சமையலை நானும் பெரியப்பாவும் மட்டும்தான் சாப்பிடுவோம்.

என்னை எப்போதும் விசிக்கண்ணு என்றுதான் ஆத்தா அழைக்கும். சில வருடங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டிற்கு மற்றோரு விசிக்கண்ணு வந்துசேர்ந்தது. எங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல ஊரிலுள்ள எல்லா வீட்டிற்கும் கண்ணன்குட்டி, ராசாதிக்குட்டி அருள்மணிக்குட்டி போன்ற பலதுகள். டொம்பர் மக்கள் எங்கள் ஊர் வளவிற்கு அருகில் குடிசையமைத்து ஒரு சைக்கிளில் நான்குவீதம் எடுத்துவந்து அதுகளை விற்றார்கள். சுத்த கரும் நிறமாக இருக்கவேண்டும். நல்ல குட்டிகளுக்கு பெரும் கிராக்கி.

எங்கள் மூதாதையர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்ன தெய்வங்களின் வாரிசுகள் எந்த குலத்திடம் சண்டையிட்டார்கள் அவர்கள் பூர்வீக நிலமென்ன குல சடங்குகள் என்ன போன்ற கேள்விகளிற்கு விடை எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி வழிபாட்டுமுறை தான். குலதெய்வ கோவிலருகே எங்களுக்கென்று இருவது சென்ட் இடம் பெரியப்பா வாங்கி வைத்திருந்தார். பக்கத்து தோட்டத்தயும் ஒன்றுசேர்த்தாற்போல் வாங்க வேண்டும் என்று அவருக்கு ஆசை. கோவில் திருவிழாக்கள் சமயத்தில் அண்டை நிலத்தாரைப் போலவே எங்கள் நிலத்தையும் கோவில் பயன்பாட்டிற்கு கொடுப்பார். பத்து வருடங்களிற்கு ஒரு முறைமட்டும் வரும் திருவிழாவிற்கு பன்றியை பலியிடுவோம். அப்படித்தான் அந்த விசிக்கண்ணு குட்டியாக இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வந்தது.

வீட்டிற்கு தெற்க்கே ஆத்தா இருக்கும் தொழுவம் இருந்ததால் வீட்டிற்கு வடபுறம் கோழிச்சாலுக்கு அருகே வேப்பமரத்தில் அந்த பன்றி குட்டியை கட்டிவைத்தார்கள். முதல்நாள் இரவன்று அடித்தொண்டையிலிருந்து உய்ய்ய் உய்ய்ய் என்று சப்தமெழுப்பிக்கொண்டே இருந்தது. யார் அதற்க்கு பக்கத்தில் போனாலும் கயிறில் கட்டுண்ட நிலையிலும் அங்குமிங்கும் ஓட முயற்சிக்கும். ஆரம்பத்தில் பார்க்க பாவமாக இருந்தது. நாட்கள் செல்ல செல்ல பன்றிக்கு பழக்கம் ஆயிற்று. அம்மா தினமும் தென்புறம் இருக்கும் ஆத்தாவிற்கும் வடபுறம் இருக்கும் பன்றிக்குட்டிக்கும் தவராமல் சோறு வைத்தாள். பன்றி ஒழுங்காக சாப்பிட்டிருக்கும்.

நான் அதை அடிக்கடி போய் எட்டிப்பார்ப்பேன், பன்றி என் கண்களுக்கு அழகாக இருந்தது. அருகிலுள்ள மாயவன் கோவிலில் பெருமாளுடைய ஒன்பது அவதாரங்களின் படம் மாட்டியிருக்கும். அதிலுள்ள வராகவதாரம் நீல நிறத்தில் இருந்தது. பூமிப்பந்தை மூக்கில் ஏந்தியவாறு. பூமி உருண்டை என்பது அந்த வராகத்திற்கு அப்போதே தெரிந்திருந்தது. இந்த வராகத்திற்கு என்னென்ன தெரியுமோ. மதிய வெயிலில் அதைப்பார்த்தால் ஒரு சின்ன இருட்டு படுத்திருப்பதுபோல இருக்கும். பின்புறமாக பார்த்தால் மிகச்சிறிய யானைபோலவும்; முன்பக்கமாக பார்த்தால் பெரிய ஏலியயை போலவும் இருக்கும். ஒரு பந்தை அதைநோக்கி உருட்டிவிட்டால் அது செய்யும் சேட்டை சிரிப்பு வரும். என்னதான் அழகாக இருந்தாலும் அதையும் அதன் இடத்தையும் சுத்தமாக வைப்பதென்பது முகம்சுளிக்கும் வேலைதான். எங்கள் வீட்டு பெண்கள் ரொம்பவும் சுளித்தார்கள். பன்றிவாடை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மடமடவென்று வளர்ந்துவந்தது; ஊரையே பன்றிகள் ஆக்கிரமித்ததுபோல இருந்தது. ஆடுமாடுகளின் முக்கியத்துவம் குறைந்திருந்தது. மாட்டாஸ்பத்திரியில் பன்றிகளின் வரேவே சிறப்பு கவனம் பெற்றது. ஊர் முழுவது பன்றி வாடை கமழ்ந்தது, அதன் அமறல்கள் ஆதிமந்திரம்போல் நீக்கமற நிறைந்திருந்தது.

“உய்ய்ய் உய்ய்ய் உய்ய்ய் ”

“க்யாவ் க்யாவ் க்யாவ் ”

“உர்ர்ய்”

தீர்க்கமான கீச்சுகள்

சீற்றங்கள்

ஆட்கள் கிடைக்காததால் பெரியப்பாவே பன்றியின் இடத்தை சுத்தம் செய்வார். பன்றியை குளிப்பாட்ட வாகனங்கள் கழுவும் ரப்பர் குழாயை தண்ணீர் திறந்துவிட்டு பன்றிமீது காட்டுவார். “ஒரு கெடையில நிக்குதான்னு பாரு, அங்கயும் இங்கயும் ஓடிக்கிட்டு. டேய் விஜயா! பட்டி நாயும் தெரு நாயும் இத வம்பிழுக்காம பாத்துக்கோணும். நாலு நாய் சேந்துச்சுனா கொதரி எடுத்துடும். ஆனா பாத்துக்க! எந்த பன்னியும் செத்ததில்ல; லாரி பஸ்ஸில அடிபட்டு தூக்கிப்போட்டாலும் குண்டுமணி கணக்கா உருண்டு எழுந்து ஓடிடும். ஜீவன மண்ணில ஊணி பொறந்ததுக. பழைய ஜீவனாகும்.” பெரியப்பா சொல்லி சிரிப்பார்.

பன்றியை குளிப்பாட்டி முடித்தவுடன் அருகிலிருக்கும் காய்ந்த மண்ணை எடுத்து ஆத்தா பன்றி நெற்றியில் பூசுவாள். தன் நெற்றிமீதும் இடுவாள்; பின்பு பெரியப்பாவுக்கு எனக்கும். பன்றியை நோக்கி இருகரம் கூப்பி “கருப்பா…” என்று சொல்லிவிட்டு தன் தொழுவத்தில் போய் படுத்துக்கொள்வாள். ஆத்தாவுக்கு பன்றி வந்ததிலிருந்து கிறுக்கு தெளிவாகிவருவதாக பெரியப்பா சொன்ன நினைவு.

3

எங்கள் தோட்டத்து பட்டிநாய் இளைத்துகொண்டே வந்தது; ஆனால் பன்றியும் ஆத்தாவும் நன்றாக தேறிவந்தார்கள். பெரியப்பா பன்றியின் இடத்தை சுத்தம் செய்ய ரப்பர் பைப்பை எடுத்துக்கொண்டு வரும்போதே ஆத்தா வந்து அருகில் நின்றுகொள்வாள். ஒருமுறை தண்ணி பீச்சி அதன்மேல் அடிக்கும்போது கயிற்றை பிய்த்துக்கொண்டு ஓடிவிட்டது. பெரியப்பாவும் நானும் பின்னால் ஓடினோம்; ஆத்தா எங்களை பார்த்துக்கொண்டு நின்றாள். எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குளத்திற்கு அருகில் சுற்றுவதாக தகவல் வந்தது. நாங்கள் டொம்பர் மக்களுக்கு சொல்லி வரவைத்தோம். அவர்கள் வலையுடன் வந்து பிடிக்க முயன்றார்கள். நாங்கள் குளத்தில் சுற்றுவதைப் பார்த்து நான்குபக்கம் அணைந்தாற்போல் வலையிட்டு பிடிக்க முயற்சிசெய்தோம். ஆனால் அது தப்பி கரட்டுக்கு போகும் இட்டாலி வழியாக ஓடிவிட்டது. கரட்டுக்கு ஓடினால் இனி அதை பிடிப்பது கடினம்.

தலையை கீழே போட்டவாறு “என்னடா இப்படி ஆயிடுச்சு” பெரியப்பா நொந்துகொண்டார். நான் கண்களில் வருத்தத்தோடு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தேன்.

“ஏம்பா! அத புடிக்கமுடியுமா?” டொம்பர் தலைவரைப் பார்த்து பெரியப்பா கேட்டார்.

“இனி அது போனது போனது தான் சார்”

“வேற ஏதாவது குட்டி இருக்கு?”

“இப்ப ஒன்னும் இல்ல, சொன்னிங்கன்னா ஒரு வாரத்தில ஏற்பாடு சேரோம்”

“வேற என்ன வழி; சீக்கிரம் கெடச்ச தேவல”

நாங்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்தோம்; ஊரே எங்கள் வீட்டைப்பற்றித்தான் பேசியது. நாங்கள் கொண்டுவந்த சோகத்தை வீட்டாரின் மீதும் உரசினோம்; அது தகுந்த அலைவரிசையில் இயங்கியது. வீடே கனத்த அமைதியில் மிதந்தது. அந்த இறுகிய மூச்சடைக்கும் சோகம் வீட்டில் அருவமாக உலாவியது. ஆத்தாமட்டும் தொழுவத்தில் ஏதோ உருட்டிக்கொண்டு இருந்தாள். அவள் வேறு உலகத்தில் இருப்பதுபோல தோன்றியது எனக்கு. நாங்கள் அனைவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தோம். ஆத்தா உலக்கைத்தடியை ஊன்றிக்கொண்டு கேட்டைத்திறந்து உள்ளே வந்தாள். எல்லோரும் அவளையே பார்த்தோம். வந்தவள் திண்ணையில் இருந்த பேட்டரி லைட்டை எடுத்தோக்கொண்டு வெளியே சென்றாள்.

பெரியப்பா “ஏய் கெழவி” என்று உதடுகளை இறுக கத்தினார்.

நான் வெளியே ஓடிப் பார்த்தேன். ஆத்தா கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.

நான் உள்ளே வந்து பார்த்ததை சொன்னேன்.

“போய் தொலையட்டும்” பெரியப்பா வெறுப்பாய் முனகினார்.

அடுத்தநாள் காலை “என்னங்க என்னங்க..” என்ற அம்மா பதற்றமாய் கத்துவதை கேட்டு எழுந்தேன். அப்பாவும் பெரியப்பாவும் தொழுவம் நோக்கி ஓடியதைப் பார்த்தேன். அவர்களின் பதற்றம் என்னைத் தொற்றவில்லையென்றாலும் குழப்பத்தில் நானும் எழுந்து ஓடிப்போய் பார்த்தேன்.

தொழுவத்தில் கயிற்று கட்டிலில் ஆத்தா விலகிய காவிச்சேலையுமாக புழுதியடைந்த கால்களுமாக வலப்புறம் ஒருக்கலித்து படுத்திருந்தாள். கட்டிலின் இடதுபுறம் அவளது உலக்கைத்தடி கிடந்தது. வலதுபுறம் எங்கள் பன்றி படுத்திருந்தது. இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் எங்கிருந்தோ தூரகால தூரதேசத்திலிருந்து வந்தவர்கள் போலிருந்தது.

“ரெண்டும் வந்துருச்சு பாரு..” அப்பா பொதுவாக சொல்லிவிட்டு உள்ளே போனார். அம்மா பின் தொடர்ந்தார். பெரியப்பா மட்டும் ஆத்தாவின் கால்கள் அருகே நின்றிருந்தார். நான் அவரை கவனித்தேன். ஆத்தாவின் செம்புழுதி படர்ந்த கால்களை வருடினார். அவரது தொண்டை மேலும்கீழும் ஏறி இறங்கியது. முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டு உள்ளே சென்றார்.

நான் கயிறு எடுத்துவந்து பன்றி கழுத்தில் கட்ட எத்தனித்தேன். ஆத்தா அரைத்தூக்கத்தில் என் கையை தட்டி விட்டு சொன்னார் “விசிக்கண்ணா கட்டவேண்டாம்”. அன்றிலிருந்துதான் அதை விசிக்கண்ணு என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

அந்த கட்டவிழ்ந்த வராகம் கற்றற்ற மிருகம் ஆத்தாவின் காலடியிலேயே கிடந்தது. அது ஆத்தாவைவிட்டு கணநேரமும் விலகாமலிருந்தது. ஆத்தாவின் பக்கத்தில் யாரையும் அது விடுவதில்லை. அது எருமையின் கருணையும் நாயின் சேட்டையும் அமையப்பெற்றவை போலிருந்தது. குணத்தில் பசுவிற்கும் நாய்க்கும் இடைப்பட்டதுமாக. தொழுவத்தின் ஓரத்தில் இருவரும் ஒரு ஜீவனென இருந்தார்கள். வரட்டியும் வாடையுமாக.

வழக்கங்கள் திரும்பியிருந்தது. ஆனால் அம்மா விசிக்கண்ணுக்கு போடும் உணவு ஆத்தாவுக்கு அவ்வளவாக ஒப்பவில்லை. பழையதும் புளித்ததும். அவளுடைய பங்கும் வராகத்திற்கு போதவில்லை. ஆத்தா தினமும் அவளே சமைக்க ஆரம்பித்தாள். முதலில் வெறும் சோறு, பின்பு பருப்பு குழம்புகள் அடுத்ததாக பொங்கல் கீரைகள். நாட்கள் செல்லச்செல்ல வராகம் தனக்கான விருப்ப மனு ஆத்தாவிடம் ரகசியமாக சொல்லியதோ என்னவோ; ஆத்தா இட்டிலிக்கு மாவாட்டினாள். இருபது வருடம் நின்றுபோன செக்கில். நானும் பெரியப்பாவும் சொல்லிவைத்தாற்போல காலையில் தட்டை தூக்கிக்கொண்டு தொழுவத்திற்கு போவோம். அன்னப்பூரணி மனித மிருக பேதமின்றி கும்பி நிரப்பினாள். செக்கில் ஆட்டிய சட்டினிகள். இய்யப்பாத்திரத்து அவியல்கள், மண்சட்டி வணக்கல்கள், தொவையல் தீயால். இன்னும் பெயர்தெரியாத நூற்றாண்டு வகைகள். சோலாக் கூழில் பழைய சோற்றை கணக்காகக் கலந்து வெந்தயக் கீரையை வரமிளகாயோடு நல்லெண்ணெயில் பக்குவமாய் வணக்கி சரியாக உப்பு சேர்த்து அம்புலி ஒன்று தயாரிப்பாள்; “உக்காந்து சாப்பிடறான் பாரு” என்று யார் என்னை எப்படி திட்டினாலும் பரவாயில்லை. கேப்பைக்கூழ் கம்மன்சாரரும் முருங்கை குழம்பும் அடுத்தபடிகள்.

வராகம் பெரிதாக ஆக ஆத்தா பூரித்தாள். அவள் எப்போது அந்த உலக்கைத்தடியை விட்டாள் என்று எங்களுக்கு தெரியவில்லை. கூன் நிமிந்திருந்தாற்போல் பட்டது.

எங்கு செல்லினும் அவர்கள் இருவரும் சேர்ந்தே சென்றார்கள். ஆத்தாவிடம் விளையாடி மகிழும். பின்னங்கால்களால் உந்தி முன்னங்கால்களை கொண்டு ஆத்தாவின் கைகள்மேல் ஏறும். ஆத்தா பலம்பொருந்தாமல் கீழே சாய்ந்து சிரிப்பாள். அவள் உடல்முழுவது கீறல்களும் காயங்களும். அவள் கண்டுகொள்வதாக எனக்கு தெரியவில்லை. கோழி கூப்பிடுகையில் தொழுவத்தில் இருவரும் ஏதோ உருட்டுவார்கள்; உச்சிப்பொழுதில் காலமற்ற கற்குண்டுகள்போல் அமர்ந்திருப்பார்கள்; சாமத்தில் ‘உய்ய்ய் உர்ர்ர், க்யாவ்’ என சம்பாஷித்திருப்பார்கள். இருவருக்குமிடையே புது பாஷை துளங்கிவந்தது. பூதகணங்கள் போலிருப்பார்கள்.

பன்றித் திருவிழாவும் நெருங்கிவந்தது.

4

நாளை திருவிழா; இன்றே என்னைப்போன்ற கடைநிலை குடும்பத்தினர் குலதெய்வக் கோவிலுக்குப்போய் கோவில்நிலங்களில் இடம்பிடித்து பந்தல் அமைக்கவேண்டும். குடும்ப முக்கியஸ்த்தர்கள் நாளை வருவார்கள். அதிமுக்கியஸ்த்தர்கள் எல்லாம் முடிந்தபின்பு வருவார்கள். டெம்போ அதிகாலையே வந்திருந்தது. ஒரு சமையற்காரர், இருண்டு பெண் ஆட்கள், ஒரு எடுபுடிப்பையன். விறகுகள், காஸ் சிலிண்டர், அடுப்பு, பெரியவகைப் பாத்திரங்கள், கரண்டிகள், அரிசி மூட்டை, சின்ன மற்றும் பெரிய வெங்காயப் பை. அரைத்த மசாலாக்கள். உறைகுத்த பால், வாழையிலை கட்டுகள், அரிவாள்மனைகள் கத்திகள், தேங்காய்கள், ஜமுக்காளம் என்று எல்லாம் ஏற்றியாகிவிட்டது. இரண்டுமட்டும் பாக்கி. வராகமும் ஆத்தாவும்.

எனக்கும் பெரியப்பாவிற்கும் ஒருவித பதற்றமிருந்தது. ஆனால் ஆத்தாவும் வராகமும் வழக்கம்போலவே இருந்தார்கள். தப்பி ஓடும் எண்ணமிருக்குமோ?

பெரியப்பா தொழுவத்திற்குப்போய் “நேரமாவுது!!” என்றார்.

கயிற்று கட்டிலில் படுத்திருந்த ஆத்தா எழுந்து முன்செல்ல வராகம் பின்தொடர்ந்தது. அருகில்வந்து நின்றார்கள். நான் ஏற்கனவே தடிமனான நீண்ட பலகையை டெம்போவில் ஏறுவதற்கு தோதாக சாற்றி வைத்திருந்தேன். ஆத்தா டெம்போவை நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் பலகைமேல் ஏறியது. நானும் பெரியப்பாவும் முட்டுக்கொடுக்க வராகம் டெம்ப்போவில் ஏறி ஓரத்தில்போய் படுத்துக்கொண்டது. ஆத்தாவையும் கைத்தாங்கலாக ஏற்றிவிட்டோம். நானும் பின்புறம் ஏறிக்கொண்டேன். வண்டி கிளம்பியது.

எங்களுக்குள் உள்ள மௌனம் மற்றோரு ஆள் போல இறுக்கமாக அமர்ந்திருந்தது. எந்நேரமும் அந்த மௌனம் எழுந்து என்னிடம் ஏதாவது சொல்லிவிடுமோ என்று பட்டது. கோவிலுக்கு செல்லும் அந்த சிறிய பயணம் நெடுநேரமானது எனக்கு.

5

நடுச்சாமம் இருக்கும் ஒலிபெருக்கியில் கேட்டது.

:”இதுனால என்னனா இன்னும் சற்றுநேரத்தில் மொதோ பண்ணியா நம்ம கோயில் பண்ணி கெழக்கு பக்கமா இருக்க பலி போடறா எடத்துல வெட்டப்படுது; அத தொடர்ந்து எல்லாரும் அவுங்கவுங்க பண்ணிய பலி போடறா எடத்துக்கு கூடிவங்க. கோயிலை சுத்தி அஞ்சு எடத்துல ஏற்பாடு செஞ்சிருக்கோம், அதனால எல்லாரும் ஒரே எடத்துக்கு வர வேண்டாம். எது பிரீயா இருக்கோ அங்க போங்க.”

நான் வராகத்தைப் பார்த்தேன் அது மரத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்தது. ஆத்தாவை தேடினேன் அவள் பார்வைக்கு அகப்படவில்லை. இன்னும் நேரமிருந்தது. கோவிலை சுற்றி பல பந்தல்கள்; ஒவ்வொரு பந்தலருகிலும் ஒரு டெம்போ; அருகிலேயே அதற்கான சமையல் சாமான்கள். எல்லா இடத்திலும் டியூப் லைட்டுகள். கார்கள் நிறுத்தி வைக்குமிடங்கள்; பலூன் காரன் சாமத்து ஐஸ்பெட்டிக்காரன் தின்பண்டம் விற்பவர்கள் இன்னும் யார்யாரோ.

இம்முரை பலிபீடம் எங்கள் இருவது சென்ட் நிலத்திலும் அறங்காவலர்கள் அமைத்திருந்தார்கள்.

“ப” வடிவிலான தடிமனான கல் பலகையை பலி பீடமாக நட்டு வைத்திருந்தார்கள். கட்டி இழுத்துவரும் பன்றியின் கழுத்தை அதில் வைத்து. கனமான அருவாளால் தலை துண்டாகும்வரை வெட்டுவார்கள். இரத்தம் வழியெங்கும் ஓடும்.

கோவில் பன்றியை வெட்டும்போது பெரிதாக எங்கள் பந்தலிலிருந்து எதுவும் கேட்கவில்லை. அதை தொடர்ந்து சிலர் வெவ்வேறு பலி பீடங்களுக்கு தங்கள் பன்றியை கட்டி இழுத்தும் கால்களை முடக்கி தூக்கியும் சென்றனர். சிலர் தங்கள் பன்றியை டெம்போவின் அருகிலேயே அவரவர்களாக அறுத்துக்கொண்டனர். அந்த நிலப்பரப்பே பன்றியின் ஓலம் நிரம்பி வந்தது. அறுபடும் பன்றிகள் துடிக்கும்; இரண்டொருவர் பன்றியை பிடித்து அமுத்துவார்கள்; அறுப்பவன் கை பாதியில் ஓயும்; பாதி அறுபட்ட பன்றி கண்சிமிட்டி ஓலமிடும், எழுந்து ஓட முயற்சிக்கும். சிலதுகள் ஓடி விழும். சூடான இரத்தம் தெறிக்கும்; கால்களை நனைக்கும். ஓலமும் இரத்தவாடையும் மனித ஆதி இச்சைக்கு வலு சேர்க்கும்.

ஆத்தா இருட்டுக்குள் இருந்து வந்து நின்றாள். பெரியப்பா “போலாம்” என்றார்.

கயிற்றை அவிழ்த்துவிட்டு ஆத்தா பலி பீடம் நோக்கி நடந்தாள். வராகம் ஓடிச்சென்று ஆத்தாவிடம் சேர்ந்துக்கொண்டது. நானும்பெரியப்பாவும் தாமதிக்காமல் பின்தொடர்ந்தோம். ஆத்தா எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் நடந்தாள்; வராகம் பசுபோல துணைசென்றது. எங்களை ஏமாற்றி தக்க சமயத்தில் இருவரும் தப்பிவிடுவார்களோ? அத்தா வரகாத்தின்மீது சவாரியிட்டு குதிரைவேகத்தில் பறந்து விடுவாளோ? நாளை விருந்தினர்கள் வந்துவிடுவார்கள் கடைசி நேரத்தில் மாற்று பன்றிக்கு எங்கு செல்ல? இல்லை இல்லை அவர்கள் பலி பீடத்து திசையில்தான் செல்கிறார்கள்.

பலி பீடம் வந்தாயிற்று. அது எங்கள் இடம். பதற்றம் தொற்றிட்டு; மூச்சு கனத்தது; ஏதோ ஆகி விடுமோ? எல்லாம் சரியாக நடக்க வேண்டும்.

பூசாரி எங்களுக்கு பின் வருபவர்களைப் பார்த்து பொதுவாக சொன்னார் “இது தான் இங்க கடைசி மத்தவங்கெல்லாம் கிழக்கு பக்கம் போங்க… கிழக்கு பக்கம் போங்க… ”

பூசாரி எங்களை வரச்சொல்லி கை அசைத்தார். அத்தா முன்சென்று பலி பீடம் நோக்கி விரல் காண்பித்தாள். வராகம் அருகில் சென்றது. அதிசியத்தைப் பார்த்த இருவர் அதன் பின்னங்கால்களை பிடித்து இழுத்து காதோடு தலையை பிடித்து “ப” போன்ற அந்த கல்லில் வைத்தார்கள். நான் கடைசியாக அதை தொட்டுப்பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். முண்டாசு கட்டிய ஆயுதம்தாங்கி ஒருவர் இயங்கினார்; கனவு போல நடந்து முடிந்தது. எங்கள் வராகம் இரு துண்டுகளாக. முண்டம் பதறி அடங்கியது.

ஆத்தா ஏதோ அகால வெளியை பார்த்து கைகூப்பி நின்றிருந்தாள்.

பூசாரி வராக குருதியை எங்களுக்கு ஆக்கினையில் திலகமிட்டார். ஒரு சாக்கில் இரண்டு துண்டுகளையும் சுற்றி குட்டியானை ஆட்டோவில் ஏற்றினோம். பெரியப்பா “நாம முன்னாடி போவோம்” என்றார். ஆட்டோ கிளம்பியது; நான் ஆத்தாவை திரும்பிப் பார்த்தேன். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.

6

சுமார் ஐநூறு பழிகளாவது இருக்கும். எல்லோரும் பழி முடிந்து அவரவர் பந்தலுக்கு போய்விட்டார்கள். அடுத்தநாள் காலையிலிருந்தே சமையல் ஆரம்பமானது. எங்கும் ஜனக்கூட்டம். ஒருமூலையில் பறையிசை மறுமூலையில் கரகாட்டம் ஒருமூலையில் வானவேடிக்கை மறுமூலையில் ஓய்ந்திருந்த நாடகம். பூசைகள் முடிந்து மதியம் பந்தி ஆரம்பமானது. பல ஆயிரம் தனி நிகழ்வுகளாக நடந்த திருவிழா ஒரு ஆடல்போல நடந்தேறியது. எல்லாம் விமர்சையாக நடந்தும் முடிந்தது.

ஜனக்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது. வீட்டார்கள் எல்லோரும் சாப்பிட்டாயிற்றா என்று பெரியப்பா கேக்கும்போதுதான் நாங்கள் உணர்ந்தோம் ஆத்தாவைக் காணவில்லை. “அரைகிறுக்கு போதை தெளிவான அதுவே வந்துரும்” என்று அப்பா சொல்ல பெரியப்பா முறைத்துப் பார்த்துவிட்டு ஆத்தாவை தேட ஆரம்பித்தார். நானும் சேர்ந்து கொண்டேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இருட்டி வந்ததால் முதலில் வீட்டாரை ஊருக்கு அனுப்பிவைத்தார் பெரியப்பா.

மைக் செட்டில் சொல்லலாம் என்று நாங்கள் இருவரும் சென்றோம்.

பெரியப்பா, “தம்பி ஒன்னு அனஉன்ஸ் பண்ணனும்” மைக் செட் பொடியனிடம் சொன்னார்.

பொடியன், “சொல்லுங்க சார்”

“ஒரு வயசான அம்மாவ காணல. காவி சேல போட்டிருக்கும்”

பொடியன் எழுந்தான். “எல்லாரும் அங்கதான் சார் போயிருக்காங்க”

“என்ன; எங்க? ”

“ஒரு ஆத்தா நின்னுகிட்டிருக்கு”

பேய் அறைந்தது எங்களுக்கு.

எங்கள் அந்த இருவது சென்ட் இடத்திற்கு பெரியப்பா ஓடினார். நானும் பின்னாலேயே ஓடினேன். கூட்டத்தை விளக்கி கொண்டு பார்த்தோம். ஆத்தா நின்றுகொண்டிருந்தாள்.

கூட்டம் ஐம்பது அடிகளாவது விலகிதான் நின்றிருக்கும். அவள் அருகில் யாருமில்லை. எங்களுக்கு அவள் முதுகுதான் தெரிந்தது. அந்த காட்சியை பார்த்த பெரியப்பா சற்று தள்ளாடி முகம் இருகி கண்ணீர் சொரிந்தார். கைகளை மேல்முகமாக ஆகாயத்தை பார்த்து ஏந்தி “அம்மா.. அம்மா..” என்று கதரியவாரு அருகில் சென்றார். நான் செய்வதறியாது அவர் தல்லாடி செல்வதை பார்த்து பயந்து பின்னாலேயே நின்று விட்டேன்.

கால்கள் இடர கண்ணீரோடு கதறிக்கொண்டே ஓடி ஆத்தாவின் முன் சென்று நின்றார். ஒரு கணம் முகம் நோக்கினார். உக்கிரம் தாங்காதவர்பொல் இரண்டு அடி பின்னோக்கி சென்று கண்கள் சுழன்று அலங்கோலமாக முதுகு மண்ணில் பட விழுந்து மூர்ஜையானார். நான் அவரிடம் ஓட எத்தனித்தேன்; அருகிலிருந்த ஒருவர் என் கைகளை இருக பற்றி “வேண்டாம்பா, சாமி உண்ணயும் அடிச்சுடும்” என்று சொன்னபோது ஒருவாறாக எனக்கு விளங்க ஆரம்பித்தது.

அவள் நின்றுகொண்டெதான் இருந்தாள். நிரஞ்சனா நதி சாக்கியன் போல.

7

வான் இளம் மஞ்சலாய்ப் பூத்தது. நாகமொன்று அவளின் பாதம் சுற்றிவந்தது. எலிகளும் கீரிகளும் முயல்களும் இடும்புகளும் தத்தம் வலைகளில் இருந்து வெளியே வந்து ஆடின. காகம் குருவி கொக்கு குருகு காட்டுச்சேவல் மயில் மைனா பாடி மகிழ்ந்தன. இனமறியா புட்கள் வானில் வட்டமடித்தது. சுனை ஒன்று கொப்பளித்தது. மனிதர்கள் கணமற்று இருந்தார்கள்.

ஆக்கினை ஒன்று அசைந்தது.

அடிமுதுகில் சட்டென ஒரு மின்சாரம் அடித்து பின்மண்டயில் முடிந்தது. உலகம் தெளிவானது. இருப்புணர்ச்சி உடல் எல்லையை உடைத்து எல்லா திக்குகளிலும் வெடித்து சிதறியது.

பூரணம் நிகழ்ந்தது.

வீரன் வணங்கினான் மாடன் அண்ணாந்து பார்த்தான் முனி பணிந்தான் கருப்பு தெண்டனிட்டான் தூரகால பத்தினி ஒருத்தி விழி திறந்து மூடினாள். நூறுவருட மொட்டு ஒன்று மலர்ந்தது.

அவளின் உடலில் சிறு அசைவு தென்பட்டது. எங்கள் எல்லோரது கவனமும் நேர் கோடென அவளின்மீது இருந்தது.

கால விழி திறந்தாள், திரும்பினாள்; ஒரு பார்வையில் பார்த்தாள்.

அருகிலிருக்கும் மணற்திட்டின் மேல் கடைசியாக சென்று அமர்ந்தாள்.

 

குன்றத்தின் முழுநிலா – கமலதேவி சிறுகதை

மூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது.

பரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக் கொண்டார்.

அங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில் அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது.

ஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள்.

மற்றவள் பாறையைத் தடவி, “ஆம்,” என்றாள்.

கபிலரின் துவண்ட முகத்தில் மென்நகை மலர்ந்து சுருங்கியது. எங்கு சென்று இந்த மகள்களை சேர்ப்பிப்பேன். உன் மகள்கள் என்று ஒப்படைத்துவிட்டான். என் செய்வேன்? என்று தன்னுள் தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

வேங்கைமரத்தின் பாலை தென்னம் ஓட்டில் ஊற்றி ஆதவன் சூட்டில் காய்த்தெடுத்த நெற்றிப்பொட்டின் மேல்பரப்பென, நிலவொளியில் அவர்கள் முகம் ஔிர்ந்தது. சோகத்தால் அழுந்திய சோபை. மூன்று மின்மினிகள் சேர்ந்தமர்ந்த இரு நாசிகள் நிலவொளியில் மேலும் ஔிகொண்டன.

சங்கவை கைமூட்டையிலிருந்து அவலை எடுத்தாள். சுரைக்குடுக்கை நீரால் அவலை நனைத்து சிறுமூட்டையாகக் கட்டிவைத்தாள். சுரைக்குடுக்கையுடன் கபிலர் நீருக்காக எழுந்து சென்றார்.

அங்கவையும் சங்கவையும் ஒருவரை ஒருவர் முகம்பார்த்து அமர்ந்திருந்தார்கள். சிறுபொழுதிற்குப் பின் அறியாத உணர்வால் வேறுபுறம் நோக்கி உரையாடத்தொடங்கினார்கள். சிலசருகுகள் காற்றுக்கு தங்களைக் கொடுக்காமல் பாறைகளின் சந்துகளில், அடிமர வளைவுகளிலும் அடைந்தும் காற்றின் விசையால் அதே இடத்தில் துடித்துக்கொண்டிருந்தன.

நம்மிடம் அவலைத் தவிர ஒன்றுமில்லை”

அறிந்தது தானே”

உணர்ந்து நினைத்தால் உள்ளே ஆழத்தில் வேல்முனை தைத்து அசைகிறது”

பேடிக்கிறாயா?”

உனகில்லையா?”

அனைத்துமிழந்தப்பின் என்ன?”

அதற்காக உன்னை மாய்த்துக்கொண்டாயா?”

ஏன் மாய்த்துக்கொள்ள வேண்டும்?”

தானிருக்கையில், தன் பசியிருக்கையில், தன் உணர்விருக்கையில், மனமிருக்கையில், பெண் என்னும் உணர்விருக்கையில், அனைத்திற்கும் மேலென சூழ்ச்சி வீழ்த்திய காயமிருக்கையில் அனைத்துமிழந்தவளாவாயா?”

புறத்தில் நான் என்பதன் அடையாளம் அழிந்து சிலபொழுதாகிறது. அகத்தில் நான் என்பதன் குழப்பம்”

உடல்களை நனைத்திருந்த வியர்வை ஈரத்தை காற்று எடுத்துக்கொண்டது. மெல்ல அதை உணர்ந்த அவர்கள் எழுந்து நின்றார்கள்.

நாளை நாமிருவரும் ஒன்றாக இருப்போமா?”

“…..”

கையில் கடிவாளமில்லாத பொழுதில்போக்கை எண்ணி ஆவது என்ன?”

நாமிருவரும் தனித்துவிடப்படலாம் என்று எண்ணி தானோடி தாதை இத்தனையும் கற்பித்தார்”

கற்பது என்பது இந்தப் பாரினில் மரணத்தில், இழப்பில் உதவக்கூடுமா?”

தெளிவில்லை. என்றாலும் இங்கமர்ந்து சிதறாமல் எண்ணியிருக்க அதுவே கைப்பிடித்திருக்கிறது”

படைத்தலைவன் நன்னன் குறித்து…”

மாண்டிருக்கக்கூடும்”

அவனை ஏன் நீ ஏற்கவில்லை?”

திறல்வீரன்…அவன் படைத்தலைவன் மட்டுமே”

ஆம்.அது மட்டுமே அவன். பயிற்றுவிக்கப்பட்டவன். வேந்தனின் வேல்”

இன்று எதற்கும் உடன்பட வேண்டியநிலை”

புலவருக்கு மேலும் சுமையென்றாகாமல்…”

ஆம்” என்றபின் சொல்லிழந்து எண்ணுதலின்றி வெறும் நோக்குக்கொண்டிருந்தனர்.

சுரைக்குடுக்கையில் நீரோடு வந்த கபிலர் பாறையில் அமர்ந்தார்.

உண்ணலாம் மகள்களே,” என்றார்.

மூங்கில் குழாயில் இருந்த தேனை அவலில் சேர்த்து சங்கவை அளித்தாள். அவர் அளித்த விரிந்த அரசிலையில் வைத்து உண்டார்கள். நீர் அருந்தும் பொழுது அங்கவை தன்நாட்டில் அரிதெனக் தேங்கும் பனிச்சுனை நீரை நினைத்துக்கொண்டாள். கால்நடையாய் வந்த ஒரு புலவர் கால்சோர்ந்து அமர்ந்து, நீர்தேடிக் கண்டடைந்த பனிச்சுனை, அவர் பாட்டில் ஏறி தன் இல்லம் சேர்ந்த காலைவேளை நெஞ்சத்தில் எழுந்தது. பின்னர் தேங்கிய நீர் காண..அருந்த என்று இவர்கள் சென்ற நாட்கள் எங்கிருந்தோ என்று எழுந்து வந்தன.

காற்று மரஇலைகளுக்குள், புதர்களுக்குள் புகுந்து செல்லும் ஓசை கேட்டுக்கொண்டேயிருந்தது. ஈரப்பதமில்லாத காற்று. நெருக்கமில்லாத மரங்கள். இலையுதிர்த்துக் கொண்டிருந்த மரங்கள். காற்றால் அனைத்து திசைகளில் இருந்தும் சருகுகள் மெல்ல எழுந்து பறந்து நகர்ந்தன.

இந்த பொழுதில் இளவெயினி இருந்தால்? என்ற நினைவு இருவருக்கும் தோன்ற வாய்ச்சொல்லால் பகிராமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவருக்கும் அங்கமென இருந்தவள். இந்த உடன்பிறந்தாரின் சிணுக்கங்களுக்கிடையில் ஓடிக் களைத்தவள்.

புலவருடன் இவர்கள் புறப்படுகையில் பின்னால் வந்த அவளை, இருவரும் ஆளுக்கொரு கைப்பிடித்து அவள் தாதையிடம் தள்ளிவிட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்த பொழுதை நினைத்து தொண்டையைச் செருமினார்கள். அவலில் இருந்த சிறுஉமி தொண்டையில் நின்று வாய்க்கும் வராமல், வயிற்றுக்கும் செல்லாமல் உறுத்தித் தொலைத்தது. சங்கவை நீரை எடுத்து மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

கபிலர்,“சற்று தலைசாயுங்கள் மகள்களே.கருக்கலில் நடக்க வேண்டும்,” என்றபடி பாறையில் வான்பார்த்துக் கிடந்தார்.

காற்றில் எழுந்த அறியா மணத்தை உணர்ந்த சங்கவை தன்நாட்டில் எங்கோ என மகளீர் எரிக்கும் சந்தனக்கட்டைகளின் மணத்தோடு இணைந்து எழும் அந்திமலர்களின் மணத்தை ,மனத்தால் உணர்ந்து நாசியைத் தேய்த்துக்கொண்டாள்.

கபிலர் வான் பார்த்துக்கிடந்தார்.ஆற்ற வேண்டிய காரியம் குறித்த சொற்களால் நிறைந்திருந்தார்.எத்தனை வேந்தரிடம் கேட்பது? மூவேந்தருக்கும் அச்சம்கொண்டு, அனைவரும் இவர்களை புறம் தள்ளுகிறார்கள். என் வேந்தனுக்கு கொடுத்த உறுதி என்னாவது? அதை பிழைத்து எங்ஙனம் உயிர்விடுவது? நாளை எப்படியும் இவர்களுக்குரியரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும்.

கபிலர் மனதை எங்கு திருப்பினும் அது வேந்தனையே சொற்களாக்கிக் கொண்டிருந்தது. முழுநிலவைக் கண்டால் மனம்பொங்கும் வேந்தன். மகள்களுடன் நாளும் கவிதை பேசியவன்.. இருப்பதைப் பகிர்ந்து நாட்டின் நிலங்காத்த அளியான். புல்காய்ந்த கோடையில் கிழங்கு அகழ்ந்தும் ,பெருமாரிக்கு திணை தேன் காத்து குலம்காத்த அவன் குடியை, எங்கு கொண்டு சேர்த்துக்காப்பேன்.

அனைத்தையும் கண்டு கடந்துக் கொண்டிருந்தது நிலவு. எத்தனை காலம்,எத்தனை வேந்தர்கள்,எத்தனை போர்கள்,எத்தனை குருதிக்களங்கள்,எத்தனை எரிகள் பார்த்த நிலவு.எத்தனை கனவுகள், எத்தனை வசந்தங்கள்,எத்தனை விழாக்கள் பார்த்த நிலவு. இன்று என்னை கண்டு கடக்கும் நிலவு.எவ்வளவு பேதை நான்… நிலையில்லை என்று அறிந்தும் பாரியுடன் இவ்வண்ணம் இருந்து கவிதை பேசலாம் என்று நினைத்த நான் எத்தனை எளியவன்.

தலையைத் திருப்பி இருவரையும் நோக்கினார்.ஒருபுறமாக படுத்திருந்த சங்கவையின் முகம் தெரிந்தது. எண்ணெய்யில்லாமல் காய்ந்து கலைந்த பின்னல் நீண்டு பின்னிய கொடியென முன்னால் கிடக்க அதைப் பற்றியபடி படுத்திருந்தாள். தனக்குத் துணையென தன்னையே கொள்ளும் கன்னியின் துணைப்படையில் இதுவும் ஒன்றென்று. அவர் கவி உள்ளம் தனியே சென்றது. அது ஒருகணமும் ஓயாதது என்று நினைத்து அதைத் தவிர்க்க திரும்பிப்படுத்து கைகால்களை நீட்டி மடக்கினார்.

மலைமகள்கள் என்றாலும் மன்னனின் மகள்கள் அல்லவா? புனம் காத்து வளர்ந்தவர்கள் என்றாலும் கவிதை பேசும் கலைமகள்களை எங்கு சேர்ப்பேன். மகன்கள் என்றால் தலைகொய்திருப்பார்கள். குலம் அழிக்க வேண்டும் என்றே, எந்த வேந்தனும் மாலையிடலாகாது என்று ஓலையனுப்பிவிட்டனர். ஒரு வேவுக்காரன் கூட கண்ணிற்கு தென்படவில்லை. எனில் ஒவ்வொரு வேந்தனிடமும் அவனறியாமல் எவனோ இருப்பான். பாணர்களாய் உள்நுழைந்து பாரியின் களமழித்தவர்கள் தானே… இனி நினைத்தென்ன?

சிலம்புகள் அசையும் மெல்லிய ஒலிகள் எழுந்து நின்றன.அவர்களின் துயிலாத கண்கள் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

காண்பவர்கள் கண்நிறைக்கும் நிலைத்த முறுவலுடன் வந்தவர்களுக்கு தன்னிடமுள்ளதை அளித்து உவந்து நிறையும் உள்ளம் அவனுடையது .தன் குன்றத்தில் தனித்தது என்று எதுவுமில்லை என்றாண்ட வேந்தன். தவிக்கும் எதற்கும் தன்னிடமுள்ளதை தந்தவனின் கொழுந்துகள் என் கையில்.

அன்றொரு நாள், தனித்த நேரத்தில் கபிலர் பாரியிடம்“பிறந்தது முதல் கொடிகளைக் காணும் மலைநாடன் உனக்கு சிறு முல்லைக் கொடி புதியதென அன்று தோன்றியது எங்ஙனம்!” என்றார்.

ஐயனே…என் மக்கள் இரண்டும் கைநீட்டி தளிர்நடையிடும் பருவம் அது. காற்றில் தவித்து கைநீட்டும் இளம் தளிர் காண பேதலித்துப்போனேன்,” என்ற பாரி மேலும் சொற்கள் அற்றவனானான்.

அன்று ஈரம்படர்ந்த விழிகள் நினைவில் தோய்ந்திருக்க ,புன்னகைக்கும் இதழ்களுடன் மீசையைத்தடவியபடி பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த அவன், மண் ‘தான்’ என எழுந்து நிற்கும் குன்றத்தின் பெருந்தாதை .கபிலர் எண்ணங்கள் துரத்த நெடுந்தொலைவு பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.

அங்கவையும் சங்கவையும் வான்பார்த்த கண்களை இமைக்காமலிருந்தார்கள். அமுது என பொழியும் நிலா.இத்தனை வாஞ்சையா? ஔி இத்தனை ஆழமாய் உள்நிறைக்குமா?! ஔி…ஔி…என்று மனம் நிறைந்து வழிகையிலேயே அனைத்தும் கைநழுவும் ஏக்கம்.நெஞ்சம் நிறைக்கும் ஒன்று நெஞ்சம் குலைக்குமா ? கைகால்கள், விரல்கள் ,உடல் ,கன்னம் ,செவி, நாசி என்று நெற்றித்தொட்டு கண்நிறைக்கும் ஔி….

அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவில்

எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்..” என்று ஒருகுரல் மெல்லத்தேய்ந்தது.

தன் மென்கன்னத்தில் படியும் வன்மார்பின் ஒலிக்கேட்டு, நாசிக் காற்றின் வெப்பம் உச்சி உணர, தன் தாதையின் கதைகள், கவிதைகள் கேட்டு குன்றத்தின் கீழ் பரவும் அமுதை வழிவிரியப் பார்த்திருந்த இதே நிலா நாட்கள்…

இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்

வென்று எரிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் ! யாம் எந்தையும் இலமே” என்று மற்றொரு குரல் அதை நிறைவுசெய்தது.

நிலவை மேகப்பொதிகள் சூழ்வதும் விலகுவதுமாக கலைந்தழுந்தன. எரிந்தகாட்டின் புகைசாம்பல் பறக்கும் வெளி போல அவ்விடத்தை மெல்ல மெல்லிருள் சூழ்ந்தது. நிமிர்ந்து படுத்திருந்த கபிலர் இடக்கையை எடுத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டார்.

உதிரக் கணு – பானுமதி சிறுகதை

அலுவலகப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து விரையும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென வானில் திரளும் மேகக் கூட்டங்களைப் பார்த்தாள். ஆழியில் புகுந்து விண்ணில் ஏறி வெண்மையை கருக்கொண்டு நிறம் மாற்றி குவிந்து இதோ பெய்துவிடுவேன் என்று முழங்கும் மேகங்கள்.அதில் ஆழ்ந்திருக்கையிலே செல்பேசி ஒலித்தது.’சென்னைக் காவல் துறை’ என்றது எண். அவள் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தாள். கை நடுங்கியது. ’ தியாகுவிற்கு விபத்து; ஆனால், பயப்படும்படி ஏதுமில்லை,உடனே, புறப்பட்டு அரசாங்க மருத்துவமனைக்கு வரவும் ’ என்று காவல் துறையிலிருந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் சொன்னது. கூடவே அவனது புகைப்படமும் காணப்பட்டது.அவள் ஒரு கணம் செயலற்றுப் போனாள்;’ வாணி நீ கோழையில்லை,தைரியமாக இரு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். சொந்தங்கள் யாருக்கும் சொல்ல வழியில்லை. கூடப் பயணம் செய்த நண்பர் வரதன் உடன் வந்தார். ’தியாகுவிற்கு இரத்தம் ஏற்ற வேண்டும், உயிருக்கோ, உறுப்புகளுக்கோ கவலை வேண்டாம்’ என்ற மருத்துவர் ஏனோ அவளை இரக்கத்துடன் பார்த்தார்.

ஆஸ்பத்திரி, ஆஃபீஸ்,வீடு என்று ஒரு மாதம் ஓயாமல் அலைந்தாள். அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர் மற்றும் காவல் துறையின் அனுமதியோடு மாற்றினாள்.தியாகுவை வீட்டிற்க்கு அழைத்துச் செல்லலாம் என்ற மருத்துவர் ’வாணி,உங்களிடம் பேச வேண்டும், இரகசியமானது ’ என்றார்.

பதட்டத்துடன் பார்த்த வாணியை ’ ரிலாக்ஸ் ப்ளீஸ்; இந்த ஒரு மாத காலமாக உறவென்று யாரும் தியாகுவைப் பார்க்க வரவில்லை. வயதான அல்லது சமவயதுள்ள நெருங்கிய சொந்தங்கள் இருக்கிறார்களா? ’

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

‘ உங்களுக்குத் திருமணமாகி எவ்வளவு வருடங்கள் ஆகின்றன? ’

“ ஆறு வருடங்கள், சார் ” என்றாள் அவள்.

‘ உங்கள் உறவு, ஐ மீன், உங்களுக்குப் புரியும், சரியாகத்தானே இருக்கிறது. ‘

அவள் சங்கடப்பட்டுக்கொண்டே தலையசைத்தாள்.

‘ நான் உங்களிடம் சொல்லியாக வேண்டும். அவர் ஹெச் ஐ வி பாசிடிவ். நல்ல வேளையாக அது உங்களுக்குத் தொற்றவில்லை அல்லது நோய் எதிர்க்கும் ஆற்றல் உங்கள் செல்களுக்கு இருக்கிறது ’ என்றார் மருத்துவர் ப்ரமீள்.

தேவையற்றபோதே தனக்கு ஏன் இவர்கள் இரத்தப் பரிசோதனை செய்தார்கள் என்று அவளுக்கு விளங்கியது. ஆனால், தியாகுவைப் பற்றி…இல்லை, இல்லை பொய், அப்படியெல்லாமிருக்காது.

“ இல்லை, இது உண்மையில்லை, யு மஸ்ட் செக் யுவர் ரெகார்ட்ஸ் ”

‘ ஐ அண்டர்ஸ்டேன்ட், வாணி.நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதல்லவா? அவர் உடல் நிலை தேறட்டும். பக்குவமாக நான் அவரிடம் பின்பு சொல்கிறேன். அதற்குமே அவர் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பயப்படாதீர்கள். குணப்படுத்திவிடலாம். ’

தான் உணர்வோடுதான் இருக்கிறோமா எனக் குழம்பினாள் அவள்.எத்தனை இடிகளை இன்னமும் தாங்கவேண்டும்?யாருடைய சாபம் பலிக்கிறது இப்போது? தியாகுவை வளர்த்த அவனுடைய அக்கா விட்ட சாபமா? ” டேய், உனக்காக கல்யாணமில்லாம நிக்கறேன்;நீ துணைய தேடிட்டேன்னு எங்கிட்டயே சொல்ற. நீ நடுவுல பேசாத.அக்காவுக்கும், தம்பிக்கும் நடுவுல வந்துட்ட, பேச உனக்கு வெக்கமாயில்ல? டேய், நீ வீட்ட விட்டுப் போயிடு.நா ஆத்ம புண்டம் போட்டுண்டு அனாதையாப் போறேன்.” என்று அவனுடைய அக்கா அன்று அழுகையும் கூக்குரலுமாகக் கத்தினாள்.

“ அக்கா, இப்டியெல்லாம் சொல்லாத.நான் உன்ன விட்டுடுவேணா ?’

‘ விடமாட்டேன்னா, அவள விட்றா ‘

” அக்கா, அவள எங்க போகச் சொல்ல? அம்மா அப்பாவ பிரிஞ்சு வந்த்ருக்கா, பாவம்க்கா “

‘ அப்ப அவளோட குடுத்தனம் நடத்து. என்ன மறந்துடு ‘

“அக்கா, நாங்க உன்னோடவேதான் இருப்போம்,தனியா போமாட்டோம் “

‘ அதெல்லாம் நடக்காதுடா. எனக்குன்னு எப்ப இல்லயோ அப்றம் என்னடா? ’

“ உன்னோட மட்டுமே இருக்கணுமா? “

‘ ச்சீ வாயக் கழுவு.புழு மாரி துடிக்கப் போறடா. நான் பாத்து கல்யாணம் செய்யணும்னு நெனைச்சேனே, என்னச் சொல்லணும். ’

ஹெச் ஐ வி அப்படித்தான் துடிக்க வைக்குமோ?

வாணியின் பெற்றோர்களும் சளைத்தவர்களில்லை. “பருப்பு சோறுக்கும்,பாட்டுக்கும், வெள்ளத் தோலுக்கும் வீங்கிப் போற.அவன் சீக்கு கோளி போல இருக்கான், அவன போயி புடிச்சாந்த பாரு. போ, போ, கவுண்டரு யாருக்கும் பணிஞ்சதில்ல. ஊருல எம் புள்ளயப் பாருங்கடா என்னா அமிசமின்னு பெரும பேசினவன் நானு;நல்லா மானம் காத்திட்ட அம்மணி, போயிடு இல்ல காட்ல பொதச்சுடுவேன்; இன்னமும் இங்க நின்னியானா கேணியில முங்கிடுவேன் கவுண்டச்சியோட. வராத இனிமே, வத படவ.உன் வமிசம் விளங்காது. ”

எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்தா இறந்த போது இவர்களாகக் கேள்விப்பட்டு வெள்ளங்கிணறு ஓடினார்கள்.இவர்கள் வண்டியிலிருந்து இறங்கையிலேயே நடு வாசலுக்கு ஓடி வந்து மண்ணை அள்ளித் தூற்றினார்.’ஆத்தா முகத்தப் பாத்துட்டு போயிடறம்ப்பா, ப்ளீஸ்ப்பா’ என்று கதறியவளை எரிப்பது போல் பார்த்தார்.” எண்ணக் குளி போட்டு ப்ரேதம் ஆனதெல்லாம் குடிலுக்கு வரலாமா?கவுண்டச்சி லச்சுமி கணக்கா தூங்கறா, இந்தப் பீ நாறி முண்ட அவளப் பாத்தா கெதி கெடைக்குமா அவளுக்கு? அவளப் பாடையில தூக்கணும்னா இவ அவளப் பாக்கக் கூடாது.இவ மீறி வந்தா பொணம் வெளிய போவாது “ ஊரின் பரிந்துரைகள் ஏதும் அவர் கேட்கவில்லை; தியாகு அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனான். ஒரு குழந்தையைப் போல் அள்ளி அவளைக் காரில் ஏற்றினான்.

ஆறு வருடங்கள் நலமாக இல்லையா என்ன? குழந்தை இன்னமும் இல்லை என்ற குறை தவிர.’ ஐயோ , நாள் தவறிவிட்டதோ? இந்த நேரமா இது நினைவில் வர வேண்டும்? ’

வாணி ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருப்பது தியாகுவிற்கு என்னவோ போலிருந்தது. “ அவள் கொஞ்சமாகவா அலைந்திருக்கிறாள், பாவம், அயர்வாக இருக்கும் ” என்று அவள் தோளைத் தொட்டான் ஆறுதலாக. அவள் சுருங்கி நகர்ந்தது வேதனையாக இருந்தது. அந்த விபத்திற்காகவா இப்படி ஒதுக்குகிறாள்? அதில் தன் ஆண்மை போய்விட்டதா என்ன? காம ஆடுதல்களில் அவளுக்கு அதிக விருப்பம். அவளின் வேகமும், கூடலும் அவனுக்கு இன்ப அதிர்ச்சிதான். அப்படிப்பட்டவள் சாதாரண தொடுகைக்கு விதிர்க்கிறாள். அவன் யோசனையாக ஏறிட்ட போது செயற்கையாகச் சிரித்தாள்.

‘ எப்பொழுது இவன் தவறு செய்திருப்பான்? அவன் உடல் எடை குறைந்து வந்த போதே பார்த்திருக்க வேண்டுமா? அதை ‘ஹெல்த்’ என்றுதானே அவன் பெருமைப்பட்டான்? பதினைந்து நாட்கள் நாசிக் போன போதா, அறிந்த தவறா, அறியாத தவறா? ஏன் இதுவரை இது தெரியவில்லை?முன்னர் தெரிந்திருந்தால் அவனை விட்டுப் போயிருப்பேனா, இன்று அவன் விபத்துக்குள்ளாகி, இரத்தம் இழந்து, முகம் வெளுத்து நிற்பதால் பரிதாபப்பட்டு இருக்கிறேனா? அப்போ, காதல் என்பது பொய்யா? இல்லையென்றால் அவன் வெறுமே தொட்டால் கூட ஏன் சுருங்கிக் கொள்கிறேன்? அவன் அறியாது இந்தத் தவறு நடந்திருந்தால் அவனை மன்னிக்க முடியாதா? மனம் ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? எந்தப் புள்ளியில் அன்பு வெறுப்பாகிறது? இப்பொழுதுதான் கருக்கொண்ட பிள்ளையைப் பற்றிய கவலை, இவ்வளவு நாட்கள் கூட வாழ்ந்த மனிதனிடம் எனக்கு இல்லாமல் போய்விட்டதா? எத்தனை நாட்கள் இந்த நிலையை மறைக்க முடியும்? தெறிக்கும் கிண்டல்களுக்கும் பார்க்கும் பார்வைகளுக்கும் மீறி சிரிக்க முடியும்? வீட்டுக்காரர் போகச் சொல்லிவிடுவாரோ? அலுவலகத்தில் அவனுக்கு வேலை தொடராதோ? தன்னையும் விலக்கிவிடுவார்களோ?’

தான் இருளில் அமர்ந்திருப்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.அவனைப் பார்க்கையில் வரும் அழுகைக்கும், விலக்கத்திற்கும் காரணம் தெரியவில்லை.முப்பது நாட்கள் தாண்டிவிட்ட கவலை வேறு அவளைத் தின்றது. ‘அது எப்படிப் பிறக்கும், நோயுடனா, பழியைச் சுமந்து கொண்டா, பிறப்பிலிருந்தே அதை ஒதுக்கிவிடுவார்களே இந்த சமூகத்தில்?அதை இல்லாமலே செய்துவிட்டால் என்ன? தியாகுவை மருத்துவமனையில் சேர்த்துவிடலாம்;கருக்கலைப்பு செய்துவிடலாம். ‘

‘ த்யாகு,உன்னிடம் பேச வேண்டும். ‘

அவனுக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் கைகளை எடுத்து மடிமேல் வைத்துக் கொண்டான். அவள் கைகளை விரைவாக இழுத்துக்கொண்டது அவனைக் காயப்படுத்தியது. புருவ நெரிப்பிலேயே என்ன என்று கேட்டான்.

‘ த்யாகு, டாக்டரே சொல்லட்டுமேன்னு நெனைச்சேன். ஆனா, இப்ப நான் கர்ப்பமா இருக்கறதால ..’

அவன் முகம் பரவசத்தில் விரிந்தது. ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தைகள் வராமல் தவித்தான்.

‘த்யாகு,அந்த கருவ கலைக்கணும்.அதுக்கு உன் கன்சென்ட் கேப்பாங்க.’

“ என்னது, என்ன ஆச்சு உனக்கு, ? நம்மால குழந்தையை வளக்க முடியாதுன்னு பயப்படறியா? எனக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் தான், சாவு இல்ல “

‘ த்யாகு,சாவு வந்துட்ருக்கு, உன்னால நம்ம குழந்தைக்கு ’

“ என்ன உளறிண்டே போற “

‘ நீ ஒழுங்கா இருந்தா நா ஏன் இப்படிப் பேசணும் ? ‘

“என்னடி, எகிறிண்டே போற. என்ன கெட்டுப் போச்சு எங்கிட்ட.’

‘ நீ தான், மொத்தமா நீ தான் கெட்டுப் போயிருக்க. நீ ஹெச் ஐ வி பாசிடிவ்ன்னு கான்ஃபிடென்ஷியல் ரிப்போட் இருக்கு, காட்டவா? ’

இதைக் கேட்டு அவன் முதலில் சிரித்தான்;அவளைக் கொன்று விடவேண்டும் போலிருந்தது. அவள் கண்ணீருடன் கை நடுங்க அந்தப் பரிசோதனை முடிவைக் காட்டியவுடன் அவன் சோர்ந்து அழுதான். சுவறில் மாட்டியிருந்த காலண்டர் ஆறு நாட்களுக்குப் பின் வரும் தேதியைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆம், இன்று காலை அவன் தேதியைக் கிழித்த போது ஒட்டிக்கொண்டு பல தாள்கள் கிழிந்தன. பிறப்பதற்கு முன்னரே இறந்த நாட்கள். உருக்கொள்ளத் தொடங்கும் போதே அழியப் போகும் உயிர்; அதற்கு அவன் காரணம்.

அவளை பயந்து கொண்டே ஏறிட்டுப் பார்த்தான்.’ எனக்குத் தொற்றில்லை; கருவுக்கு தொற்றியிருக்கலாம், அழிக்கறதுதான் வழி, ப்ரமீளைப் பாப்போம் ‘

தியாகு தவித்தான்.எங்கு, எப்படி தவறு நடந்திருக்கக் கூடுமென்பது அவனுக்குப் புரியவில்லை. ‘ வேணுவின் பேச்சிலர் பார்ட்டி ஆறு மாதங்கள் முன் நடந்ததே அப்போதா ,முன்னர் ஒருமுறை தவறான போதையில் மாட்டிக்கொண்ட போதா எப்போது தன்னைத் தான் இழந்தோம், சுவடே இல்லாமல். தன்னை பீடத்திலிருந்து எட்டி உதைத்துத் தூளாக்கும் அவளின் வெறி பயமுறுத்தியது. ஒரு விபத்தின் தொடர்ச்சியாக எத்தனை விபத்துக்கள்? எனக்கு ஹெச் ஐ வி யா, என் குழந்தை அதனால் பாதிக்கப்படுமா,வாணி ஏன் பிடிவாதமாக கலைக்கப் பார்க்கிறாள்? என்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ?ஒரு உயிரை அழிக்க அவள் எப்படி துணிகிறாள்? இல்லை, நான் டாக்டரிடம் பேசத்தான் போகிறேன் .’

அவளை இரு நாட்களில் மீண்டும் மருத்துவமனையில் பார்த்த மருத்துவர் முதலில் வியந்தார்.”மருத்துவம் மிக முன்னேறியுள்ளது. அவரை குணப்படுத்திவிடலாம் அதுதான் அன்றே சொன்னேனே, ஒரு வாரம் போகட்டும்.” என்றார்

அவள் கருவுற்றிருப்பதும், குழந்தைக்கும் தொற்று வரும் எனப் பயப்படுவதும், அதை கலைக்கும் முனைப்போடு அவள் வந்திருப்பதும் , அவர்களுக்கு இது முதல் குழந்தை என்பதும் அவரை சிந்திக்க வைத்தன.

‘கருவிற்கும் இதற்கான மருந்து உண்டு. அதில் அது கர்ப்பத்திலியே குணமாகிவிடும்.இல்லையெனில் பிறந்தவுடன் சரி செய்ய முடியும். ஆனாலும்,நீங்கள் பயப்படுவதால் ஒரு வழி சொல்கிறேன்.நீங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர் திருமதி. நிர்மலா குணசேகரைப் பாருங்கள்” என்றார்.

நிர்மலா வாணியைப் பார்த்து அன்புடன் சிரித்தார். அவர்களைப் பற்றி, படிப்பு, தொழில்,குடும்பம் எல்லாவற்றையும் கேட்டார். இரகசியங்களைக் காப்பாற்றுவீர்களா என்று அவர் கேட்ட போது வாணிக்கு அழுகை வந்தது;’ அதற்காகத்தானே வந்திருக்கிறேன். கருவை கலைத்துவிடுங்கள்.தியாகு சம்மதிப்பார் .’ என்றாள்.

மருத்துவரும் கருக்கலைப்பு வேண்டாம் என்றவுடன் தியாகுவிற்கு தன்னுடைய இழினிலை கூட மறந்து சிரிப்பு வந்தது. சொல்வதை கவனமாகக் கேளுங்கள் என்ற மருத்துவர் ‘வாணி, நீங்கள் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.உங்கள் கருவை வெளியிலெடுத்து…’

“என்ன சொல்கிறீர்கள், மேம்? “

‘’எதுக்கு இத்தனை பதட்டம்? அமைதியாகக் கேளுங்கள். உங்களுக்கு குழந்தை வேண்டாம், தியாகுவிற்கு வேண்டும். உங்கள் வயதை வைத்துப் பார்க்கையில் தியாகு சொல்வது சரி “

‘மேம்,கருவை வெளியிலெடுத்து என்கிறீர்களே?’

‘நான் தானே எடுப்பேன், அழித்துவிடுவேனா? ‘

“ அப்படின்னா? ”

‘ கருவறைச் சூழலை லேப்ல அமைச்சிருக்கோம். உங்க கரு அதுல ஒரு வாரம் இருக்கும். அப்புறம் உங்க கருவறைக்கு வந்துடும் ’

“ மேம்,மாயாஜாலம் மாரி சொல்றீங்க ”

‘ இது ஜாலமில்ல, சைன்ஸ் ’

“ புரியல்ல மேம் ”

‘ சிம்பிள்.ஹெச் ஐ வி தொற்ற வாங்கிண்டு நல்ல செல்களையும் அதப் போல மாத்தி நோய அதிகரிக்கற’ சி சி ஆர் 5 ’ என்ற மாலிக்யூல உங்க குழந்தையிடமிருந்து ‘க்ரிஸ்பர் ‘ டெக்னாலஜி மூலம் நீக்கிடுவோம் சுருக்கமா இது ஜீன் எடிடிங்.’

“ அப்ப, என் கருவுக்கு எந்தக் காலத்திலும் இந்த நோய் வராதா? ”

‘ உங்க குழந்த அந்தத் தொற்றில்லாம பொறக்கும்;அப்படியேதான் வளரும். ‘

தியாகு கேட்டான், “டாக்டர், பொறந்த பிறகு செய்ய முடியாதா? ப்ரமீள் முடியும்னு சொன்னாரே? “

‘ மொளையிலேயே கிள்றதுன்னு கேள்விப்பட்டதில்லையா? நீங்க, சாரி, கவனமா இருந்திருந்தா இதுக்கே தேவயில்லயே ‘

அவன் எது சொன்னாலும் நுட்பமாகவாவது அவமானப்படுத்துவார்கள் என்று உணர்ந்தான்.

” கருவை வெளியே எடுக்கறப்போ செதைந்துடுத்துன்னா ’ சாரி ‘ என்று சினிமாவைப் போல் சொல்லிடுவா ” என்றான் அவன்.

‘ சரி, பொறந்தப்றம் குழந்தையால ட்ரீட்மென்ட்டை தாங்கமுடியலன்னா என்ன செய்வ? ‘என்றாள் அவள்

“ அது முழுசா வெளில வரட்டுமே ,அப்பப் பாத்துக்கலாமே. “

‘ என்னால முடியாது, புரிஞ்சுக்க, அத சுமக்கறத நெனைச்சாலே குமட்டுது ‘

“ சரியாயிடும் வாணி. நாம ப்ரமீள பாப்போமே “

‘ அவசியம் பாப்போம், ஆனா, உனக்கான ட்ரீட்மென்டுக்காக மட்டும் ‘

“ சொல்றதக் கேளு,வாணி. டாக்டர் நிர்மலாவோட மெத்தேட எம் மனசு ஒத்துக்கல “

‘அப்ப ஒரு வழி தான் இருக்கு. நாம விவாகரத்து செஞ்சுக்கலாம். என்ன நம்ம கத கந்தலாகும். உங்க அக்காவும், என்ற ஐயனும் கை கொட்டி சிரிப்பாங்க.நம்மல வேலய விட்டுக் கூட நீக்குவாங்க. நல்லது, பொல்லாததுக்கெல்லாம் நம்மள மட்டுமில்ல, பொறக்கப் போற புள்ளயையும் சேர்த்துத்தான் விலக்குவாங்க ‘

“ இல்ல வாணி, நீ அதீதமா கவலப்படற. இது வெளயாட்டில்ல. ஒரு மாரி நிழலாஸ்பத்ரின்னு தோணுது. நம்ம கேசு அவங்களுக்கு ஒரு பரிசோதன. நாம இதுல மாட்டிக்க வேணாம். உன் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம் “

‘ நல்லதாப் போச்சு. எனக்கு அவமானம் மிச்சம்.’

“ என்ன அவமானம்,அவமானம்னுட்டு. எனக்கே தெரியலன்றேன்.சும்மா பேசிண்டே போற “

‘ நான் வழி தவறலேன்னு உன்னால சொல்ல முடியல இல்ல, அப்றமென்ன வெட்டி கௌரவம். விட்டுடு என் வழில. ஆனா, ப்ரமீளப் பாக்கலாம் உனக்கும் வ்யாதி போகணுமில்ல’

‘ இது சரியில்லை. ஜீன் எடிடிங் அது இதற்கெல்லாம் இப்போ தேவையில்லை.ஆர் என் ஏ காப்பி செய்து பெருக்கிவிடும் அத்தனை சி சி ஆர் 5 மாலிக்யூலையும் ‘க்ரிஸ்பர்’ அழித்துவிடும் எனச் சொல்ல முடியாது. ஒருக்கால் தொற்று ஏற்படாத நிலையில் இந்த சி சி ஆர் 5 ஐ அழிப்பது சிறு ‘ஃப்ளூவைக்’ கூட குழந்தை தாங்க முடியாமல் மரணம் வரை கொண்டு போகலாம் .’ என்றார் டாக்டர்.

“ சார், நீங்கதானே நிர்மலாவ பாக்கச் சொன்னீங்க;இப்ப வேணாம்ன்னா எப்படி?”

‘ மிஸஸ். வாணி.கருவுல தொற்று இருக்கான்னு அவங்க பாப்பாங்கன்னு அனுப்பிச்சேன்.அதை ஊசி மூலமாகக் கூட சரி செய்யாலம்னு சொன்னேன்.அந்த ஸ்டேஜ் தாண்டிடுத்தாம்; சரி, பொறந்த பிறகு சரி பண்ணுங்கன்னு சொன்னா, அவங்க புதுசா இப்படிச் செய்றாங்க. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு? நீங்க தான் முடிவெடுக்கணும் ‘

“டாக்டர் நீங்களே செஞ்சுடுங்களேன், கருவ வெளியில எடுக்காம’ என்றான் தியாகு

“சாரி, தியாகு, எனக்கு அதுல அனுபவம் இல்ல”

“அதை அழிக்க நெனைச்சேன்.அதுக்கு நீங்க யாரும் சம்மதிக்கல.அதை உள்ள வச்சிருக்கறதே என்னக் கொன்னுடும். நான் டாக்டர் நிர்மலாவை நம்பறேன். என்னை மாத்தப் பாக்காதீங்க. “

வேலி – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

“இனியும் சுதாகரிக்காம இருந்தோம்னா அப்பறம் மொத்தமும் இல்லாம போயிடும்,” சந்திரானந்தாசாமி இப்படி சொன்னதும் கூடமே அதிர்ச்சி அடைந்தது . பெரியவர் அதிர்ச்சியும் துக்கமும் கலந்தவராக அவரைப் பார்த்தார், மேலும் முதுமையின் சலிப்பும் பெரியவரின் முகத்தினில் இருந்தது. எல்லாவற்றையும் துறந்து துறவியானவர் இப்போது இதற்குள் மாட்டிக்கொண்டு வெளியேற துடிக்கிறார் போல தோன்றியது .

கூடத்தின் நிசப்தம் பெரியவரின் குரலுக்காக கலைய காத்திருந்தது . மெல்ல இருமி, அசைந்து,  “இப்ப என்ன பண்ணலாம்னு சொல்ற” என்றார் . சந்திரானந்தாசாமி, “சுற்று வேலி போடுவோம்,  கண்காணிப்போம்,” என்றார். சந்திரானந்தசாமி என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவர் உடல்மொழி வழியாக புரிந்து கொள்ளவே முடியாது. எதையும் வெற்று பார்வைகள் வழியாகவே அணுகுவார் .

பெரியவர், “சரி, ஏற்பாடு செய்,” என்றார், பிறகு எழுந்து அவரது அறை நோக்கி நடந்தார், அருகில் இருந்த இளம் சந்நியாசி அவர் பின்னாலேயே சென்றான் . கூட்டத்திலிருந்த பிற சாமிகளும் ஒவ்வொருவராக நகர்ந்து வெளியேறினார்கள் , நானும் சந்திரானந்தா சாமியும் மட்டும் நின்றிருந்தோம். நான் அவரிடம், “ஒரு வேளை திருட்டு க்கு காரணமானவங்க உள்ளவுள்ளவங்களா இருந்தா?” என்றேன் . சந்திரானந்தா சாமி என் தோளில் தட்டியபடி, “அப்ப உள்ளேயும் கண்காணிப்போம்,” என்றார் . அதைக் கேட்டவுடன் மனதில் ஒருவித புது பதற்றம் குடியேறி கொண்டது.

முதலில் சின்ன சின்ன பொருட்கள் காணாமல் போனது. கைமறதியாக வேறு எங்காவது வைத்து காணாமல் போனதாக சொல்கிறார்கள் எண்ணிக் கொண்டிருந்தோம் . தீபம் காட்ட பயன்படும் செம்பாலான தட்டு காணாமல் போனபோதுதான் திருட்டு நடப்பதை உணர்ந்தோம், சந்திரானந்தசாமிதான் ஆரம்பத்திலேயே உணர்ந்து சொன்னவர் . தொடர்ந்து எல்லோரும் கவனமாக இருந்தும் பொருட்கள் திருடு போவது நிற்கவில்லை . பிறகு சந்திரானந்தாசாமி பெரியவரிடம் முறையிட்டு வேலியிட வேண்டும் எனும் தன் யோசனையை வெற்றிகரமாக ஏற்க வைத்தார் .

எங்கள் ஆசிரமம் 15 ஏக்கர் அளவு விரிந்த ஒன்று, பிரார்த்தனைக் கூடம்தான் இங்கு இருப்பதில் பெரிய கட்டிடம், ஓடு கொண்டு கூரை வேயப்பட்ட கட்டிடம் இது, அதில் வலது மூலையில் இருந்த ஓய்வு அறையில் பெரியவர் தங்கியிருந்தார். பிற சந்யாசிகள் , வெளியாட்கள் தங்க தனித்தனி கட்டிடங்கள் இருந்தன, நான் சமையல் கூடத்திலேயே படுத்துக் கொள்வேன். நான் சமையல்காரனாக இங்கு வந்து சேரவில்லை , வீட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடி வந்தவன் , தற்செயலாக இங்கு வந்து சேர்ந்து எடுபிடி வேலைகள் ஆரம்பித்து இந்த பதினைந்து வருட வளர்ச்சியில் சமையல் பொறுப்பாளன் இடத்திற்கு வந்துள்ளேன் . ஆசிரமத்தில் நடக்கும் திருட்டுகள் பற்றி ஆர்வம் இருந்தாலும் பொருட்படுத்தாமல் இருந்து கொண்டிருந்தேன் ,பிறகு சமையலறையில் இருந்த செம்பு போசி காணாமல் போனபின் சாதாரண ஆர்வம் பதற்றமாக மாறி திருட்டைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருக்கும்படி ஆகிவிட்டது . மொத்த ஆசிரமமும் கடவுளை மறந்து திருட்டை மட்டுமே பேசிக் கொண்டிருந்தது .

தற்காலிகமாக இரும்புக் கம்பி முள்வேலி போட்டுக்கொள்ளவும் பிறகு அதை மதில்சுவர்களாக மாற்றிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டு வேலை துவங்குவதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன . சந்திரானந்தாசாமி இதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார, இவரைப் பொருத்தவரை ஏதாவது தீவிரம் எப்போதும் இருக்க வேண்டும் , இவரால் சும்மா இருக்க முடியாது, வேறு எதுவுமே கிடைக்கவில்லையெனில் விறகு வெட்டித் தருகிறேன் என்று சொல்லி வந்து நின்று விடுவார், உடல் சும்மா இருக்கக் கூடாது, ஏதாவது பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார், இவர் பிரார்த்தனை செய்தோ , தியானம் ஏதேனும் செய்தோ நான் பார்த்ததே இல்லை , பெரியவரை கண் நோக்கி பேசக் கூடிய தைரியம் இங்கு இவர் ஒருவருக்கே உண்டு. வேலி அமைக்கும் திட்டத்தில் என்னை இழுத்து போட்டுக் கொண்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார், எனக்கும் இந்த மாற்றம் ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.

எங்கள் ஆசிரமம் வஞ்சிபாளையம் ஊர் எல்லையில் மலையடிவாரத்தில் இருந்தது, எங்கள் ஆசிரமம் தாண்டிப் போகக் கூடியவர்கள் ஆடு மேய்ப்பவர்களும், சீமார் புல் எடுக்கச் செல்பவர்களும்தான். இந்த பக்கம் புதிதாக யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள் எங்கள் ஆசிரமத்திற்கு வருபவர்கள்தான். பாதுகாப்பு தேவைப்படாத இடத்தில் ஆசிரமம் இருந்தது என்று சொல்லலாம். இப்போது 3 மாதமாக நடக்கும் இந்த திருட்டுகள் ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் அதிர்ச்சியானதாகவும் புதிதானதாகவும் இருந்தது, ஒருவகையில் உறக்கத்தில் இருந்து கொண்டிருந்த ஆசிரமத்தை இந்நிகழ்வுகள் விழிப்படையச் செய்து விட்டது.

வேலி அமைக்க ஒரு மேஸ்திரி, பணியாட்கள் 9 பேர், என ஒரு குழு வந்து ஆசிரமத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டது , 8 அடி தூரத்திற்கு ஒரு கல்லுக்கால் என வைத்து இரும்பு முள்வேலிக்  கம்பிகள் சுற்றி வேகமாக வேலை செய்து கொண்டிருந்தனர், இதில் கம்பிகளை வரிசை முறையில் சீராக இழுப்பதுதான் கொஞ்சம் கடினமான பணி, அதற்காகவென ஒரு குறுக்கு கட்டை வைத்து இறுக்கி இழுக்கும் ஒரு யுக்தியை பயன்படுத்தினார்கள், மொத்தம் ஐந்து நாட்களுக்குள் வேலி போட்டு முடித்து விட்டார்கள். ஆச்சரியமாக, வேலி அமைக்க முதல் கல்லுக்கால் போட துவங்கியதிலிருந்தது இப்போது வரை எந்த பொருளும் திருடு போகவில்லை, ஒவ்வொரு நாளும் எல்லோரும் எதிர்பார்த்து ஏமாறுவதாக நாட்கள் போனது.

சந்திரானந்தாசாமி வெற்றிப் பெருமிதத்துடன் ஆசிரமத்தில் வளைய வந்துகொண்டிருந்தார் . ஆனால் எனக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணம் புதிதாக உருவாகிக் கொண்டிருந்தது , வேலி ஒரு கூண்டு போல சிறைபடுத்தி விட்டது என. வேலி போட்ட மறுநாளே சந்திரானந்தாசாமி பக்கத்தில் இருந்த கிராமத்திற்கு போய் ஒரு வயசாளியை கூட்டி வந்து வாசலில் காவலாளியை போல அமர்த்தி விட்டார், அந்த காவலாளி உள்ளே வருபவர்களையும் வெளியே செல்பவர்களையும் திருடனை போலவே பாவித்து அனுப்பிக் கொண்டிருந்தார். ஆசிரம சூழலே சிறைசாலை மாதிரி ஆகிவிட்டது போல உணர்ந்தேன் , என் உணர்வு சந்திரானந்தா சாமி தவிர பிறர் எல்லாருடைய முகத்திலும் பிரதிப்பலிப்பதை உணர்ந்தேன் .

சந்திரானந்தாசாமியிடம் இதை எப்படி சொல்வது என தவித்தேன், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பேசி காவலாளியை நீக்க எண்ணி சமயம் பார்த்து காத்திருந்தேன். அதிசயமாக அவர் எந்த வேலையும் செய்யாமல் வேப்ப மரம் அருகில் இருந்த கல்லாலான இருக்கையில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தேன், இப்போது போய் பேசி பார்க்கலாம் என்று தோன்றியது. அருகில் சென்று நின்றபோது என்ன என்பது போல பார்த்தார் .

ஆசிரம சூழலே மாறிடுச்சு சாமி”

“ஏன் திருட்டு நடக்கலைனா …”

நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன். அவர் அருகில் அமரச் சொன்னார்.

“கந்தா , இந்த ஆசிரமம் உனக்கும் எனக்குமோ இல்ல உள்ள இருக்கற பெரியவருக்கோ மட்டுமே சொந்தமானதுல்ல, இனி இங்க வரப் போகிற எல்லாருக்கும் சொந்தமானது, அதுக்கு இந்த ஆசிரமம் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம்…”

“மத்தவனுக்கு பயந்து நாம கூண்டுக்குள்ள சிக்கின மாதிரி தோணுது சாமி”

மெல்ல புன்னகைத்தவர் என்னில் இருந்து பார்வையைத் திருப்பி தூரத்தில் இருந்த வேலியைப் பார்த்தார். “கந்தா , இன்னைக்கு பொருள் திருடு போகுதுன்னா நாளைக்கு நிலமும் திருடு போகும்னு அர்த்தம் ”

அதீதமாக எண்ணிக் கொள்கிறாரோ என்று தோன்றியது, பதில் சொல்லாமல் அவரை வேடிக்கை பார்த்தபடி இருந்தேன் .

“இங்க இருந்து காணாம போன ஒவ்வொரு பொருளும் வெளிய பாக்குறேன் , அவனுகளோடதா …”

நான் உண்மையா என்பது போல பார்த்தேன், ஆனால் இவர் முன்பெல்லாம் பகலில் ஊர்களில் சுற்றி திரிவார் , சூரியன் அஸ்தமிக்கும்போதுதான் ஆசிரமம் வருவார், இந்த திருட்டு பிரச்சனைக்கு பிறகே அவர் ஆசிரமத்தில் பகலிலும் இருந்தார் .

“கந்தா , எந்த பொருளும் யாருக்கும் உரிமையானதில்லை , ஆனா அப்படி எல்லோரும் நினைக்கும்போது மட்டும்தான் அது சரி, மத்தவங்க ஒவ்வொன்னுக்கும் உரிமை கொண்டாடும்போது நாம எல்லாம் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தா பிறகு நமக்கு பயன்படுத்தக்கூட ஏதும் இல்லாம போயிடும் ”

“இது வெத்து பயம் சாமி”

“நம்ம ஆசிரமத்துக்குனு சொந்தமா கொஞ்சம் நிலம் வெளியில இருந்தது, இப்ப அது நம்ம கைல இல்ல…”

எனக்கு விஷயம் லேசாக புரிபட ஆரம்பித்தது.

“பெரியவர் இதெல்லாம் கண்டுக்க மாட்டாரா” என்றேன்.

“அவர் இதையெல்லாம் ஏன் கண்டுக்கணும் , அவரோடது சமயப் பணி, அதை அவர் செய்யட்டும், நான் இதை செய்யறேன், அவ்வளவுதான்”

“சாமி , நான் இதுவரை இங்க உணர்ந்தது ஒன்னுதான், ஆசிரமம் இங்க வர யாரையும் பிரிச்சு பார்க்காம வரவேற்கும், சாப்பாடு போடும், நான் இங்க வர ஆளு பசியோட இருக்கானான்னு மட்டுமும்தான் பார்ப்பேன், அவனுக்கு சாப்பாடு போடறதுதான் என் வேலை, அவன் திருடனோ, நல்லவனோ அது எனக்கு தேவையில்லை, பெரியவர் என்னைச் செய்ய சொன்ன வேலையும் இதுதான் ”

சந்திரானந்தாசாமி பிரியமாக முதுகில் தட்டினார், பிறகு ஏதும் சொல்லாமல் ஆசிரமம் பின்பு தெரியும் மலைகளை பார்த்தபடி இருந்தார், கிளம்பலாம் என எண்ணினேன், எழும்போது அவர் பேசத் தொடங்கினார் .

“நானும் அப்படி பிரிச்சுப் பாக்கறவன் கிடையாது, உண்மைல எவன் எப்ப திருடினான் னுகூட தெரியும், திருடற சமயத்தில் அதை பார்த்தும் பார்க்காத மாதிரியெல்லாம் இருந்திருக்கேன். மக்கள் இயல்புங்கிறதை உண்மைல எவ்வளவு யோசிச்சாலும் வகுத்து சொல்லிட முடியாது. அப்பறம் எல்லா மக்களும் ஆன்மிகம் நோக்கி திரும்பணும்னும் , நல்லவர்கள் ஆகணும்னெல்லாம் எதிர்பார்ப்பது எல்லாம் முட்டாள்தனம் , தேடல் உள்ளவனுக்கு ஒரு இடம் வேணும், அதுக்காக இந்த ஆசிரமம் எப்போதும் இருக்கணும்னு நினைக்கிறேன் . இது எப்போதும் இருக்கணும்னுனா இது பாதுக்காக்கப்படனும் ,அதை நான் செய்ய முயற்சிக்கிறேன், அவ்வளவுதான்”

“சாமி , பெரியவரை கவனிச்ச வரை அவருக்கு பேதமில்ல, இந்த ஆசிரமம் மக்கள்கிட்ட இருந்து தள்ளி இருக்கக்கூடாது னு நினைக்கிறார், இந்த பாதுகாப்பு நெருங்க விடாம தள்ளி வைக்குதுன்னு தோணுது ”

“இப்படி விலகி இருக்கறது நல்லது, அது மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும்,” என்று சொல்லிச் சிரித்தார், மேலும், “உண்மையான ஆர்வம், மதிப்பு வரும்போதுதான் உருவாகும்,”  என்றார் . ராபட் பிராஸ்ட் எழுதின ஒரு கவிதை இருக்கு , “வேலியை விரும்பாத ஒன்று”னு ஆரம்பிக்கும், எனக்கும் அந்தக் கவிதையோட மனநிலை பிடிக்கும், ஆனா அயலனுக்கும் நம்மைப் போல அபகரிக்க விரும்பாத மனநிலை இருக்கற போதுதான் இந்த வேலியே வேண்டாங்கற மனநிலை சாத்தியம், அப்படியில்லாம நாம மட்டும் அந்த மனநிலையில் இருந்தா இழப்பு நமக்குத்தான் ”

“இது எதிர்மனநிலைனு தோணுது,” சொல்லும்போது என்னை மீறி என்னில் புன்னகை வெளிப்பட்டது.

“இல்ல , இதுதான் யதார்த்தம், மனுஷன் ஒன்னுல இருந்து அடுத்ததுக்கு தாவ பார்க்கற குணம் உள்ளவன், இன்னும் இன்னும்கிறதுதான் அவன் இயல்பான குணம், அதுதான் அவனை நகர்த்தற விசை, அவன் அப்படிதான் இருப்பான், தற்காலிகமா வேணும்னா நீதி நேர்மைனு சொல்லி மட்டுப்படுத்தலாம், அவ்வளவுதான் முடியும் ”

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பிரார்த்தனை கட்டடத்தில் சிறிய பரபரப்பு தோன்றியது, இருவரும் பேசுவதை அப்படியே விட்டு கூடம் நோக்கி நடந்தோம். பெரியவர் உடன் இருந்து சேவகம் செய்யும் அந்த இளம் சந்நியாசி எங்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தவன், ” பெரியவர் வெளிய பயணம் போக விரும்பறார், உங்ககிட்ட ஏற்பாடு செய்ய சொன்னார்”

சந்திரானந்தாசாமி, “எங்க, பக்கத்துலயா?” என்றார்.

“இல்ல வடக்கே, திரும்ப வருவாருனு தோணல, உங்ககிட்ட இதைப் பத்தி பேசதான் உங்களை அழைத்து வர சொன்னாருனு தோணுது ”

சந்திரானந்தா திரும்பி வேலியைப் பார்த்தார் , எனக்கு இனி இவர்தான் இந்த ஆசிரமத்தின் பெரியவர் என்று தோன்றியது .

 

 

 

 

 

 

 

 

 

 

 

முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி.

“ஸார்…”

“பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் தன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…”

“அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்”

“பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் இருக்கு, தாம்பத்திய உறவுக்கு உதவி செய்யும் செல்ப் ஹெல்ப் புக் டைட்டிலையும் ஞாபகப்படுத்துது. இலக்கியத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், “கதையும் எழுத்தும் மட்டுமென்ன இலக்கிய தரமாவா இருக்கு!” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன்? மசோகிஸ்ட் என்பதாலோ அவரைத் தவிர வேறு யாரும் என் கதைகள் குறித்து பேசுவதில்லை என்பதாலோ நான் அவரை சகித்துக் கொள்வதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை விளக்குவதற்காக, எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதோ (அதை ஏற்கனவே கதையாக எழுதி விட்டதால்), அந்தக் கதைக்கான லிங்க்கை இங்கு கொடுத்து உங்களின் வாசிப்பனுபவத்தை கலைத்துப் போடும் யுத்தியையோ உபயோகப்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அதை – கதைக்குள் கதை அல்லது ஹைபர்லிங்க் கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – செய்து விட்டேன் என்பதைவிட முக்கிய காரணம், இப்போதெல்லாம் என் மனம் கதை வெளியேற்றப்படாத கதை மீதுதான் குவிகிறது.

“ஸாரி நா வேற ஏதோ யோசிச்சிட்டிருந்தேன், என்ன சொன்னீங்க ஸார்?”

“தப்பா எடுத்துக்காத, ஒனக்கு செக்ஸுவல் ப்ரஷ்ட்ரேஷன் எதுவும் இல்லைல?”

அந்தரங்க விஷயங்களைப் பற்றி கேட்ட பின்பு என்ன “தப்பா எடுத்துக்காத”? கிழம் இப்படி நோண்டுவதைப் பார்த்தால் அவர் மீதே எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயமாகப் பார்த்து விஷயத்தை கறந்து விட வேண்டும், இன்னொரு கதை தயார்.

“நீங்கதான ஸார் சொந்த அனுபவங்கள் வெச்சே காலத்த ஓட்டற, அதெல்லாம் புனைவா மாற மாட்டேங்குது, மாத்தி எழுதுன்னு சொல்லிட்டே இருப்பீங்க. அதான் இந்தக் கதை எழுதிருக்கேன். எழுத்தாளனையும் அவன் எழுத்தையும் ஒண்ணா பாக்கறது சரியா ஸார்? நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா?”

“நீ எழுதியது துப்பறியும் கதைன்னு நீதான் சொல்லிக்கணும், “துப்பறியும்”ன்னு தலைப்பு மட்டும் வெச்சா ஆச்சா? அதுல என்ன துப்பறிதல் இருக்குன்னு வாசகன் என்ன இன்வஸ்டிகேட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதுல க்ரிஸ்டிகூட ஒன்ன கம்பேர் பண்ணிக்கறியா, பேஷ்”

“கம்பேர்லாம் இல்ல ஸார், நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்”

“ஓகே, உன் மரிடல் லைப் நல்லாருக்குன்னே வெச்சுப்போம்”

“நெஜமாவே நல்லாத்தான் இருக்கு ஸார், வெச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல”

“சரி விடு, எனக்கெதுக்கு அந்த பிரச்சனைலாம், ஏதோ ப்ராஸ்டேட் வராம நான் தப்பிச்சுட்டேன், அதுக்காக மத்தவங்க…”

“எனக்கு அந்த வயசுலாம் இன்னும் வரலை ஸார்”

“டோன்ட் கெட் எக்ஸ்சைடட். யுவர் செக்ஸுவல் லைப், யுவர் ப்யுன்ரல். மணவாழ்வின் மதியம் கதைய பாப்போம், உன் கதைகள்ல வர பாத்திரங்களுக்கு மூஞ்சியோ, உடம்போ இருக்க மாட்டேங்குதே அதப் பத்தி யோசிச்சிருக்கியா?”

“அவங்க மனுஷங்கதான் ஸார், நான் எழுதின பேய் விளையாட்டு கதையோட குழப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன், அந்தளவுக்கா உங்கள அது பாதிச்சிருக்கு?”

“யோவ், பாத்திரங்கள் பற்றிய வர்ணனை இல்லைன்னு சொல்ல வரேன்யா, அதுக்காக நீங்கத்தானே சொன்னீங்க ஸார்ன்னு அடுத்த கதைல சாண்டில்யன் ரேஞ்சுக்கு பின்னழகு, முன்னழகுன்னு எழுதி வெச்சுடாத. சொல்றத சரியா புரிஞ்சுக்காதது உன்கிட்ட இருக்கற பெரிய ட்ராபேக்”

“இது புரியுது ஸார், கவனிக்கறேன்”

“புறச்சூழல் பத்தியும் பெருசா எதுவும் எழுத மாட்டேங்கற. அப்பறம் மனைவி நடந்துக்கற விதத்துக்கு கதைல ஜஸ்டிபிகேஷனே இல்ல, ஒரு நாள் நைட் வீட்டுக்கு வரலைன்னு இவ்ளோ வெறுப்பு ஏற்படுமா என்ன. அப்படி நடந்தா அந்த உறவுல ஏற்கனவே விரிசல்கள் இருந்திருக்கணும், அதைப் பத்தி கதைல எதுவும் இல்ல”

“இந்த மாதிரி இடைவெளிகளை வாசகர்கள்தானே ஸார் நிரப்பனும். எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிட்டா எப்படி”

“இடைவெளியை நிரப்பலாம்யா, ஆனா கதைல இந்த பாத்திரங்களின் கடந்த காலம் பத்தி இருப்பது ப்ளாக் ஹோல், அதுக்குள்ளே ரீடர் நுழைஞ்சா அவ்ளோதான்”

“இத பத்தியும் யோசிக்கறேன் ஸார்”

“இதெல்லாத்தையும் விட பெரிய பிரச்சனை உன் நடைதான். வாக்கியங்கள் நீ டைப் பண்ணின மாதிரி இல்ல, கடிச்சு துப்பின மாதிரி இருக்கு”

“தட்ஸ் ஹார்ஷ் ஸார்”

“ஹார்ஷா, மென்மையா சொல்லியிருக்கேன். உன் நடை உண்மைல எப்படி இருக்கு தெரியுமா, கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இருப்பவன், ரொம்ப நேரம் முக்கி, ரத்தக் கசிவோட..”

“ஸார் நிறுத்துங்க. நான் எழுதறது மினிமலிஸ்ட் ரைட்டிங், அதனால உங்களுக்கு இப்டிலாம் தோணுது”

“மினிமலிஸம்ன்னா கரடு முரடா இருக்கணும்னு எவன்யா சொன்னான், ஹெம்மிங்வே, கவாபாட்டா இவங்க ரைட்டிங் அப்படியா இருக்கு. இப்படி சில லிடிரரி ஜார்கன்ஸ அரைகுறையா புரிஞ்சுகிட்டு அப்படியே புடிச்சுக்க வேண்டியது. அப்புறம் பொருந்துதோ இல்லையோ, சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் யூஸ் பண்ணிடறது”

“நாம இப்ப பேசிட்டிருக்கறதுக்கு அரைகுறையா பிட் ஆகுதே ஸார்”

“நல்லா வக்கணையா பேசற, எழுதறதுதான்… நீயும் தொடர்ச்சியா எழுதி என்ன இம்ப்ரூவ் ஆகிருக்க? எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா?”

“ஒரு கதைக்கு ஆறேழு வெர்ஷன் வரை திருத்தறேன். அதுவும் எடிட்டர் கொஞ்சமாவது சேடிஸ்பை ஆறது ரொம்ப கஷ்டம். நானும் இத்தன வருஷமா ட்ரை பண்றேன் மனுஷன் கல்லுளிமங்கனாட்டம் இருக்கார், உங்கள மாதிரியேதான்”

“என்ன எடிட்டிங்? உன்ன சும்மா என்கரேஜ் பண்றாரு, நாங்க என்ன எதுவும் தெரியாமயா இருக்கோம்? கும்பல் சேத்துட்டு குழுவா கும்மி அடிக்கற நீ, லாபி”

“லாபியா, கிழிஞ்சுது போங்க, அது ஒண்ணுதான் கொறச்ச ஸார்,” என்று நான் சொன்னதை கண்டுகொள்ளாமல், “பாம்புக் கதை ஒண்ணு எழுதின, அதுல ஒண்ணுமே இல்லைன்னு அப்பவே நான் சொன்னேன். கடசில என்னாச்சு, இந்தாள் கதை எழுதலைன்னு யார் அழுதாங்கன்னு செம சாத்து சாத்தினாங்க,” என்றார்.

“எடிட்டருக்குக்கூட அந்தக் கதை பத்தி டவுட் இருந்தது, பொதுவா அவர் சொல்ற திருத்தங்களை ஏத்துப்பேன், ஆனா அந்தக் கதைல வெறும் “ழானர்” எழுத்தைதான் ட்ரை பண்ணினேன், சூப்பர்நேச்சுரல், நாட் ஹாரர்.”
“உச்சரிப்ப மட்டும் சரியா சொல்லு. ஜானர், ழானர் என்ன பெரிய வித்தியாசம். கடைசில கதை குப்பைனு வெளிப்படையா சொல்லாம ஒத்துக்கறதுதான். ழானர்னு சொன்னேன்னா இலக்கியம் படைக்கற கடமையிலிருந்து நீ எஸ்கேப் ஆயிட முடியுமா?”

“அப்டில சார், கதை சூப்பர்நேச்சுரல்னாலும் சில உள்ளடுக்குகள் என்னையும் அறியாம கதைக்குள்ள புகுந்திருக்கலாமே, எனக்கும்கூட அந்தக் கதை மேல பெரிய இல்லுஷன்லாம் இல்ல ஸார்”
“இப்டி பொறுப்பில்லாம எழுதறதுனாலதான் நீ பாலகுமாரனைத் தவிர யாரையும் படிக்கலனு சொல்றாங்க”

“அதுக்கு நான் என்ன ஸார் பண்றது”

“ஏன் நல்லா எழுத ட்ரை பண்றது, நீ எழுதறது ஒண்ணு பாம்பு, பேய் மாதிரி போகுது இல்ல சம்பவங்களின் தொகுப்பு, நத்திங் எல்ஸ். ஒன் கதையை பத்தி வந்த கருத்தைவிட உன் வாசிப்பைப் பத்தி இப்படி சொன்னதுக்குதான் யு மஸ்ட் பி அஷேம்ட்”

“நல்லா எழுததான் ஸார் ட்ரை பண்றேன், வேணும்னேவா யாராவது இப்படி எழுதுவாங்க. இப்போ அசோகமித்திரன் ஜீனியஸ், ஆனா அவருக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ் கல்கி, அலெக்ஸாண்டர் டூமா. என் கேஸ் தலைகீழ்னு வெச்சுக்க வேண்டியதுதான், நான் படிக்கறவங்க ஜீனியஸ், எழுதறது ரைட் ஆப்போசிட்டா வருது.”

“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிரு, சரி இந்த மணவாழ்வு கதைக்கு தமிழ் சிறுகதை மரபுல என்ன இடம்னு சொல்லு பார்ப்போம்”

“எதிர் மரபு இல்ல அ-மரபுன்னு வெச்சுக்கலாமே ஸார். குடும்ப உறவு பற்றிய இன்னொரு பார்வை…”
“ரிச்சர்ட் யேட்ஸோட ரெவோல்யுஷ்னரி ரோட் படிச்சிருக்கேல, அப்பறம் என்ன புதுசா எதிர் மரபு?”

“இந்தக் கருவை வெச்சு நெறைய புனைவுகள் இருக்குதான் ஸார், ஆனா ஆல் ஹேப்பி பேமிலீஸ் ஆர் அலைக், பட் ஈச் …”

“நிறுத்து, டால்ஸ்டாயலாம் நீ க்வோட் பண்ணவே கூடாது, அவர் எங்க நீ எங்க. ஒன் ஸ்டோரீஸ்ல என்ன தரிசனம் இருக்கு. காலாகாலத்துக்குமான அறம் ஏதாவது அதுல இருக்கா. திருப்பி கேக்கறேன், உன் கதைகளுக்கு தமிழ் இலக்கிய மரபுல என்ன இடம் இருக்கு? நீ மட்டும் இல்ல, உன் கதைய பப்ளிஷ் பண்றவங்களும் இந்த கேள்வியை தங்களையே கேட்டுக்கணும், இல்லைனா நீ பாட்டுக்கு குப்பையா எழுதி குவிச்சுகிட்டே இருப்ப. அத தடுப்பது ஒரு வாசகனா, விமர்சகனா எங்க கடமை”

“இனிமே யதார்த்த புனைவு தான் ஸார், ஏதாவது தரிசனம் தானா மாட்டாமையா போயிடும். இப்போ நான் எழுதிட்டிருக்கற கதைய சட்டுன்னு “லவ்” பத்தினதுன்னு சொல்லிடலாம், ஆனா அதுல கூட …”

“லவ்வா, சரிதான். உன் முகம் கண்டேனடி இல்லைனா என் உயிரே கண்ணம்மா இப்படி ஏதாவதுதான் தலைப்பு வைக்கப் போற”

“இல்ல ஸார், இப்ப செல்லம்மாள் கதை இருக்கு இல்லையா, அதை காதல் கதைனா சொல்வீங்க, ஆனா அதுல வர தூய அன்பு..”

“அப்ப புதுமைப்பித்தன் கதையோட நீ எழுதியே முடிக்காத கதைய கம்பேர் பண்ற, உன்ன விட்டா குப்பையா எழுதிட்டே போவேன்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க”

“ஸார், புரிஞ்சுக்குங்க. நான் எழுதறதும் நீங்க குறிப்பிட்ட டைட்டில் உள்ள கதைங்க மாதிரி இல்லைன்னு தான் சொல்ல வரேன். ஒரு கேள்விக்கான பதிலை செவன்த் ஸ்டாண்டர்ட்லேந்து ஒரு பையன் தேடறான். ரியலிஸ்டிக் ஸ்டோரிதான், அதுல லவ்வும் இருக்கு, இப்ப நா என்ன விளக்கினாலும் சரியா புரியாது. தாமஸ் ஹார்டியோட கவிதை வரிகளோட கதைய முடிக்கப் போறேன்”

“என்ன எழவோ, பிஞ்சுலையே பழுத்த பையன் போலிருக்கு”

“இது ஸ்வீபிங் ஸ்டேட்மென்ட் ஸார், அவனுக்கு பண்ணண்டு வயசிருக்கும். அந்த வயசுல இந்த உணர்வு நாச்சுரல்தான, உங்களுக்கும் வந்திருக்குமே,” என்று சொன்னதற்கு பெரியவர், “அட நீ வேற” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாலும், அவர் உள்ளூர பால்யத்தின் காட்சியொன்றை மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறார் என்பதை அவரின் அதன் பின்னான மௌனம் உணர்த்தியது. தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் அப்பறம், இப்ப ஒன்னப் பத்திதான பேசிட்டிருக்கோம், என்ன திடீர்னு லவ்ல இறங்கிட்ட?”

“ஜனவரி 25க்காக…” இவரிடம் ஏன் அதெல்லாம் சொல்ல வேண்டும்? “ஏதோ தோணிச்சு ஸார் ப்ளான்லாம் பண்றதுல்ல. உங்க டீன் ஏஜ் பத்தி நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அதையே…”

“சும்மா இங்க இருக்கறத அங்க, அங்க இருக்கறத இங்க மாத்திப் போட்டு கதைன்னு சொல்லிட்டிருக்க, அப்பப்போ ரைட்டர்ஸ், புக்ஸ் நேம் வேற சேத்துக்கற. இதெல்லாம்… “

“அசோகமித்திரன்கூட தன் வாழ்க்கைல நடந்த இன்சிடென்ட்ஸ்ஸ கலைச்சு போட்டுதான்..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, “போதும் கெளம்புயா, கடுப்பேத்தாத. யாரோடெல்லாம் ஒன்ன கம்பேர் பண்ற, க்ரிஸ்டி, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தாமஸ் ஹார்டி, அசோகமித்திரன், ஒருத்தர விட மாட்டியா, என்ன விளையாட்டா இருக்கா?” என்று சத்தம் போட ஆரம்பித்தார் முற்றுப்புள்ளி.

முற்றுப்புள்ளியின் வீட்டிற்கு போவதற்கு ஆட்டோவை சில சமயம் உபயோகப்படுத்தினாலும், அவருடனான விமர்சன உரையாடல் முடிந்து திரும்பும்போது நாய் வண்டியையே எனக்குத் தகுதியான வாகனமாக உணர்வேன். இன்றும் அப்படித்தான், ஆனால் இப்போது எனக்கு சிந்திக்க தனிமை தேவைப்பட்டது. ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி, வீட்டு முகவரியைச் சொன்னேன். இந்திரா காந்தி சிக்னலில் காத்திருப்பு. நம்பிக்கை இழக்கப் போவதில்லை. இலக்கிய பயண பாதை இது, தமிழ் சிறுகதை மரபில் இடம் பிடித்து விடவேண்டும். காணி நிலமெல்லாம் தேவையில்லை, துண்டு விரிக்க இடம் கிடைத்தால்கூட போதும்.

எதிர் திசையில் நல்ல கூட்டம், இல்லை அது தவறான வார்த்தைப் பிரயோகம், மானுடத் திரள் என்பதே சரி. விரைந்து செல்லும் வண்டிகள். யாருக்கு என்ன அவசரமோ. முழுதும் போர்த்தப்பட்டிருக்கும் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, வண்டியை எங்கும் பிடித்துக் கொள்ளாமல் பைக்கில் பின்புறம் ஒருபக்கம் மட்டும் கால் போட்டு அமர்ந்திருக்கும் சேலை அணிந்த பெண். அவள் மருத்துவரைப் பார்க்க சென்று கொண்டிருக்கலாம், மருத்துவச் செலவிற்கு பணமிருக்குமா? ஆட்டோ அருகில் நின்றிருக்கும், பைக்கின் ஹார்னை அழுத்திக் கொண்டே இருப்பவர் எந்த முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறாரோ. எல்லா பக்கமும் நன்றாக ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இந்த ஜனத்திரளில் ஏதேனும் மானுட தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும், கதையாக்கி விடலாம்.