முற்றுப்புள்ளியுடன் முயல் வளைக்குள் ஒரு பயணம்- காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

“நீ மிட் லைப் க்ரைசிஸ்ல சிக்கிட்டிருக்கேன்னு தோணுது,“ என்றார் பெரியவர் முற்றுப்புள்ளி.

“ஸார்…”

“பக்கத்து வீட்டுக்காரி கூட அப்பேர் வெச்சுக்கறவன் தன் பொட்டென்ஸி குறிச்சு சஞ்சலப்படறான்னு முன்னாடி ஏதோ “பிற்பகல் உரையாடல்ன்னு” கதை எழுதின, இப்ப மத்தியானம்ன்னு மரிடல் லைப் பத்தி எழுதிருக்க. ஒனக்கு ஆப்டர்நூன் பெடிஷ் ஏதாவது இருக்கா, அந்த நேரத்துல உடலுறவு வெச்சுக்கறதுதான் இன்னும் ஸ்டிமுலேட்டிங்கா…”

“அதெல்லாம் எதுவும் இல்லை ஸார்”

“பின்ன ஏன்யா மணவாழ்வின் மதியம்னு தலைப்பு. பலான கத மாதிரியும் இருக்கு, தாம்பத்திய உறவுக்கு உதவி செய்யும் செல்ப் ஹெல்ப் புக் டைட்டிலையும் ஞாபகப்படுத்துது. இலக்கியத்துக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,” என்று சொல்லிக் கொண்டிருந்தவர், “கதையும் எழுத்தும் மட்டுமென்ன இலக்கிய தரமாவா இருக்கு!” என்று முடித்ததை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கும் எனக்குமான உறவு அப்படி. இல்லாவிட்டால், சைக்கிள் தவிர வேறு எந்த வாகனமும் ஓட்டப் பழகாத நான் பெரியவர் வீட்டிற்கு எண்பது ரூபாய் தந்து ஆட்டோவிலோ, நான் வசிக்கும் கடற்கரை நகருக்கு பிரத்யேகமான நாய் பிடிக்கும் வண்டி போல் இருக்கும் ’டெம்போ’விலோ பத்து ரூபாய் தந்து வருவதோடில்லாமல், என் சமீபத்திய கதை அவரிடம் சிக்கி, என் புனைவுலகம் மட்டுமின்றி, நிஜ வாழ்வும் சின்னாபின்னமாவதை ஏன் கேட்டுக் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறேன்? மசோகிஸ்ட் என்பதாலோ அவரைத் தவிர வேறு யாரும் என் கதைகள் குறித்து பேசுவதில்லை என்பதாலோ நான் அவரை சகித்துக் கொள்வதாக வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணத்தை விளக்குவதற்காக, எனக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மீண்டும் சொல்லப் போவதோ (அதை ஏற்கனவே கதையாக எழுதி விட்டதால்), அந்தக் கதைக்கான லிங்க்கை இங்கு கொடுத்து உங்களின் வாசிப்பனுபவத்தை கலைத்துப் போடும் யுத்தியையோ உபயோகப்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே அதை – கதைக்குள் கதை அல்லது ஹைபர்லிங்க் கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – செய்து விட்டேன் என்பதைவிட முக்கிய காரணம், இப்போதெல்லாம் என் மனம் கதை வெளியேற்றப்படாத கதை மீதுதான் குவிகிறது.

“ஸாரி நா வேற ஏதோ யோசிச்சிட்டிருந்தேன், என்ன சொன்னீங்க ஸார்?”

“தப்பா எடுத்துக்காத, ஒனக்கு செக்ஸுவல் ப்ரஷ்ட்ரேஷன் எதுவும் இல்லைல?”

அந்தரங்க விஷயங்களைப் பற்றி கேட்ட பின்பு என்ன “தப்பா எடுத்துக்காத”? கிழம் இப்படி நோண்டுவதைப் பார்த்தால் அவர் மீதே எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயமாகப் பார்த்து விஷயத்தை கறந்து விட வேண்டும், இன்னொரு கதை தயார்.

“நீங்கதான ஸார் சொந்த அனுபவங்கள் வெச்சே காலத்த ஓட்டற, அதெல்லாம் புனைவா மாற மாட்டேங்குது, மாத்தி எழுதுன்னு சொல்லிட்டே இருப்பீங்க. அதான் இந்தக் கதை எழுதிருக்கேன். எழுத்தாளனையும் அவன் எழுத்தையும் ஒண்ணா பாக்கறது சரியா ஸார்? நாலஞ்சு மாசம் முன்னாடி ரெண்டு துப்பறியும் கதை எழுதினேன், அதுக்காக என்னையோ இல்ல அகதா க்ரிஸ்டியையோ கொலைகாரன்னு சொல்வீங்களா?”

“நீ எழுதியது துப்பறியும் கதைன்னு நீதான் சொல்லிக்கணும், “துப்பறியும்”ன்னு தலைப்பு மட்டும் வெச்சா ஆச்சா? அதுல என்ன துப்பறிதல் இருக்குன்னு வாசகன் என்ன இன்வஸ்டிகேட் பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது. இதுல க்ரிஸ்டிகூட ஒன்ன கம்பேர் பண்ணிக்கறியா, பேஷ்”

“கம்பேர்லாம் இல்ல ஸார், நீங்க கேட்டதுக்கு பதில் சொன்னேன்”

“ஓகே, உன் மரிடல் லைப் நல்லாருக்குன்னே வெச்சுப்போம்”

“நெஜமாவே நல்லாத்தான் இருக்கு ஸார், வெச்சுக்கறதுக்கு ஒண்ணுமில்ல”

“சரி விடு, எனக்கெதுக்கு அந்த பிரச்சனைலாம், ஏதோ ப்ராஸ்டேட் வராம நான் தப்பிச்சுட்டேன், அதுக்காக மத்தவங்க…”

“எனக்கு அந்த வயசுலாம் இன்னும் வரலை ஸார்”

“டோன்ட் கெட் எக்ஸ்சைடட். யுவர் செக்ஸுவல் லைப், யுவர் ப்யுன்ரல். மணவாழ்வின் மதியம் கதைய பாப்போம், உன் கதைகள்ல வர பாத்திரங்களுக்கு மூஞ்சியோ, உடம்போ இருக்க மாட்டேங்குதே அதப் பத்தி யோசிச்சிருக்கியா?”

“அவங்க மனுஷங்கதான் ஸார், நான் எழுதின பேய் விளையாட்டு கதையோட குழப்பிட்டிருக்கீங்கன்னு நினைக்கறேன், அந்தளவுக்கா உங்கள அது பாதிச்சிருக்கு?”

“யோவ், பாத்திரங்கள் பற்றிய வர்ணனை இல்லைன்னு சொல்ல வரேன்யா, அதுக்காக நீங்கத்தானே சொன்னீங்க ஸார்ன்னு அடுத்த கதைல சாண்டில்யன் ரேஞ்சுக்கு பின்னழகு, முன்னழகுன்னு எழுதி வெச்சுடாத. சொல்றத சரியா புரிஞ்சுக்காதது உன்கிட்ட இருக்கற பெரிய ட்ராபேக்”

“இது புரியுது ஸார், கவனிக்கறேன்”

“புறச்சூழல் பத்தியும் பெருசா எதுவும் எழுத மாட்டேங்கற. அப்பறம் மனைவி நடந்துக்கற விதத்துக்கு கதைல ஜஸ்டிபிகேஷனே இல்ல, ஒரு நாள் நைட் வீட்டுக்கு வரலைன்னு இவ்ளோ வெறுப்பு ஏற்படுமா என்ன. அப்படி நடந்தா அந்த உறவுல ஏற்கனவே விரிசல்கள் இருந்திருக்கணும், அதைப் பத்தி கதைல எதுவும் இல்ல”

“இந்த மாதிரி இடைவெளிகளை வாசகர்கள்தானே ஸார் நிரப்பனும். எல்லாத்தையுமே வெளிப்படையா சொல்லிட்டா எப்படி”

“இடைவெளியை நிரப்பலாம்யா, ஆனா கதைல இந்த பாத்திரங்களின் கடந்த காலம் பத்தி இருப்பது ப்ளாக் ஹோல், அதுக்குள்ளே ரீடர் நுழைஞ்சா அவ்ளோதான்”

“இத பத்தியும் யோசிக்கறேன் ஸார்”

“இதெல்லாத்தையும் விட பெரிய பிரச்சனை உன் நடைதான். வாக்கியங்கள் நீ டைப் பண்ணின மாதிரி இல்ல, கடிச்சு துப்பின மாதிரி இருக்கு”

“தட்ஸ் ஹார்ஷ் ஸார்”

“ஹார்ஷா, மென்மையா சொல்லியிருக்கேன். உன் நடை உண்மைல எப்படி இருக்கு தெரியுமா, கான்ஸ்டிபேஷன் பிரச்சனை இருப்பவன், ரொம்ப நேரம் முக்கி, ரத்தக் கசிவோட..”

“ஸார் நிறுத்துங்க. நான் எழுதறது மினிமலிஸ்ட் ரைட்டிங், அதனால உங்களுக்கு இப்டிலாம் தோணுது”

“மினிமலிஸம்ன்னா கரடு முரடா இருக்கணும்னு எவன்யா சொன்னான், ஹெம்மிங்வே, கவாபாட்டா இவங்க ரைட்டிங் அப்படியா இருக்கு. இப்படி சில லிடிரரி ஜார்கன்ஸ அரைகுறையா புரிஞ்சுகிட்டு அப்படியே புடிச்சுக்க வேண்டியது. அப்புறம் பொருந்துதோ இல்லையோ, சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் யூஸ் பண்ணிடறது”

“நாம இப்ப பேசிட்டிருக்கறதுக்கு அரைகுறையா பிட் ஆகுதே ஸார்”

“நல்லா வக்கணையா பேசற, எழுதறதுதான்… நீயும் தொடர்ச்சியா எழுதி என்ன இம்ப்ரூவ் ஆகிருக்க? எழுதினதை திருப்பி படிக்கணும், ஒரு பத்து பதினஞ்சு நாள் கேப் விட்டு திருப்பி எடுத்து தேறுமான்னு பாக்கணும், ஏதாவது நான் சொல்ற மாதிரி பண்றயா?”

“ஒரு கதைக்கு ஆறேழு வெர்ஷன் வரை திருத்தறேன். அதுவும் எடிட்டர் கொஞ்சமாவது சேடிஸ்பை ஆறது ரொம்ப கஷ்டம். நானும் இத்தன வருஷமா ட்ரை பண்றேன் மனுஷன் கல்லுளிமங்கனாட்டம் இருக்கார், உங்கள மாதிரியேதான்”

“என்ன எடிட்டிங்? உன்ன சும்மா என்கரேஜ் பண்றாரு, நாங்க என்ன எதுவும் தெரியாமயா இருக்கோம்? கும்பல் சேத்துட்டு குழுவா கும்மி அடிக்கற நீ, லாபி”

“லாபியா, கிழிஞ்சுது போங்க, அது ஒண்ணுதான் கொறச்ச ஸார்,” என்று நான் சொன்னதை கண்டுகொள்ளாமல், “பாம்புக் கதை ஒண்ணு எழுதின, அதுல ஒண்ணுமே இல்லைன்னு அப்பவே நான் சொன்னேன். கடசில என்னாச்சு, இந்தாள் கதை எழுதலைன்னு யார் அழுதாங்கன்னு செம சாத்து சாத்தினாங்க,” என்றார்.

“எடிட்டருக்குக்கூட அந்தக் கதை பத்தி டவுட் இருந்தது, பொதுவா அவர் சொல்ற திருத்தங்களை ஏத்துப்பேன், ஆனா அந்தக் கதைல வெறும் “ழானர்” எழுத்தைதான் ட்ரை பண்ணினேன், சூப்பர்நேச்சுரல், நாட் ஹாரர்.”
“உச்சரிப்ப மட்டும் சரியா சொல்லு. ஜானர், ழானர் என்ன பெரிய வித்தியாசம். கடைசில கதை குப்பைனு வெளிப்படையா சொல்லாம ஒத்துக்கறதுதான். ழானர்னு சொன்னேன்னா இலக்கியம் படைக்கற கடமையிலிருந்து நீ எஸ்கேப் ஆயிட முடியுமா?”

“அப்டில சார், கதை சூப்பர்நேச்சுரல்னாலும் சில உள்ளடுக்குகள் என்னையும் அறியாம கதைக்குள்ள புகுந்திருக்கலாமே, எனக்கும்கூட அந்தக் கதை மேல பெரிய இல்லுஷன்லாம் இல்ல ஸார்”
“இப்டி பொறுப்பில்லாம எழுதறதுனாலதான் நீ பாலகுமாரனைத் தவிர யாரையும் படிக்கலனு சொல்றாங்க”

“அதுக்கு நான் என்ன ஸார் பண்றது”

“ஏன் நல்லா எழுத ட்ரை பண்றது, நீ எழுதறது ஒண்ணு பாம்பு, பேய் மாதிரி போகுது இல்ல சம்பவங்களின் தொகுப்பு, நத்திங் எல்ஸ். ஒன் கதையை பத்தி வந்த கருத்தைவிட உன் வாசிப்பைப் பத்தி இப்படி சொன்னதுக்குதான் யு மஸ்ட் பி அஷேம்ட்”

“நல்லா எழுததான் ஸார் ட்ரை பண்றேன், வேணும்னேவா யாராவது இப்படி எழுதுவாங்க. இப்போ அசோகமித்திரன் ஜீனியஸ், ஆனா அவருக்குப் பிடிச்ச ரைட்டர்ஸ் கல்கி, அலெக்ஸாண்டர் டூமா. என் கேஸ் தலைகீழ்னு வெச்சுக்க வேண்டியதுதான், நான் படிக்கறவங்க ஜீனியஸ், எழுதறது ரைட் ஆப்போசிட்டா வருது.”

“இப்படியே சப்பக்கட்டு கட்டிட்டிரு, சரி இந்த மணவாழ்வு கதைக்கு தமிழ் சிறுகதை மரபுல என்ன இடம்னு சொல்லு பார்ப்போம்”

“எதிர் மரபு இல்ல அ-மரபுன்னு வெச்சுக்கலாமே ஸார். குடும்ப உறவு பற்றிய இன்னொரு பார்வை…”
“ரிச்சர்ட் யேட்ஸோட ரெவோல்யுஷ்னரி ரோட் படிச்சிருக்கேல, அப்பறம் என்ன புதுசா எதிர் மரபு?”

“இந்தக் கருவை வெச்சு நெறைய புனைவுகள் இருக்குதான் ஸார், ஆனா ஆல் ஹேப்பி பேமிலீஸ் ஆர் அலைக், பட் ஈச் …”

“நிறுத்து, டால்ஸ்டாயலாம் நீ க்வோட் பண்ணவே கூடாது, அவர் எங்க நீ எங்க. ஒன் ஸ்டோரீஸ்ல என்ன தரிசனம் இருக்கு. காலாகாலத்துக்குமான அறம் ஏதாவது அதுல இருக்கா. திருப்பி கேக்கறேன், உன் கதைகளுக்கு தமிழ் இலக்கிய மரபுல என்ன இடம் இருக்கு? நீ மட்டும் இல்ல, உன் கதைய பப்ளிஷ் பண்றவங்களும் இந்த கேள்வியை தங்களையே கேட்டுக்கணும், இல்லைனா நீ பாட்டுக்கு குப்பையா எழுதி குவிச்சுகிட்டே இருப்ப. அத தடுப்பது ஒரு வாசகனா, விமர்சகனா எங்க கடமை”

“இனிமே யதார்த்த புனைவு தான் ஸார், ஏதாவது தரிசனம் தானா மாட்டாமையா போயிடும். இப்போ நான் எழுதிட்டிருக்கற கதைய சட்டுன்னு “லவ்” பத்தினதுன்னு சொல்லிடலாம், ஆனா அதுல கூட …”

“லவ்வா, சரிதான். உன் முகம் கண்டேனடி இல்லைனா என் உயிரே கண்ணம்மா இப்படி ஏதாவதுதான் தலைப்பு வைக்கப் போற”

“இல்ல ஸார், இப்ப செல்லம்மாள் கதை இருக்கு இல்லையா, அதை காதல் கதைனா சொல்வீங்க, ஆனா அதுல வர தூய அன்பு..”

“அப்ப புதுமைப்பித்தன் கதையோட நீ எழுதியே முடிக்காத கதைய கம்பேர் பண்ற, உன்ன விட்டா குப்பையா எழுதிட்டே போவேன்னு சரியாத்தான் சொல்லிருக்காங்க”

“ஸார், புரிஞ்சுக்குங்க. நான் எழுதறதும் நீங்க குறிப்பிட்ட டைட்டில் உள்ள கதைங்க மாதிரி இல்லைன்னு தான் சொல்ல வரேன். ஒரு கேள்விக்கான பதிலை செவன்த் ஸ்டாண்டர்ட்லேந்து ஒரு பையன் தேடறான். ரியலிஸ்டிக் ஸ்டோரிதான், அதுல லவ்வும் இருக்கு, இப்ப நா என்ன விளக்கினாலும் சரியா புரியாது. தாமஸ் ஹார்டியோட கவிதை வரிகளோட கதைய முடிக்கப் போறேன்”

“என்ன எழவோ, பிஞ்சுலையே பழுத்த பையன் போலிருக்கு”

“இது ஸ்வீபிங் ஸ்டேட்மென்ட் ஸார், அவனுக்கு பண்ணண்டு வயசிருக்கும். அந்த வயசுல இந்த உணர்வு நாச்சுரல்தான, உங்களுக்கும் வந்திருக்குமே,” என்று சொன்னதற்கு பெரியவர், “அட நீ வேற” என்று சலித்துக் கொள்வது போல் சொன்னாலும், அவர் உள்ளூர பால்யத்தின் காட்சியொன்றை மீண்டும் நிகழ்த்திக் கொள்கிறார் என்பதை அவரின் அதன் பின்னான மௌனம் உணர்த்தியது. தன்னை மீட்டுக் கொண்டவர், “அதெல்லாம் அப்பறம், இப்ப ஒன்னப் பத்திதான பேசிட்டிருக்கோம், என்ன திடீர்னு லவ்ல இறங்கிட்ட?”

“ஜனவரி 25க்காக…” இவரிடம் ஏன் அதெல்லாம் சொல்ல வேண்டும்? “ஏதோ தோணிச்சு ஸார் ப்ளான்லாம் பண்றதுல்ல. உங்க டீன் ஏஜ் பத்தி நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா அதையே…”

“சும்மா இங்க இருக்கறத அங்க, அங்க இருக்கறத இங்க மாத்திப் போட்டு கதைன்னு சொல்லிட்டிருக்க, அப்பப்போ ரைட்டர்ஸ், புக்ஸ் நேம் வேற சேத்துக்கற. இதெல்லாம்… “

“அசோகமித்திரன்கூட தன் வாழ்க்கைல நடந்த இன்சிடென்ட்ஸ்ஸ கலைச்சு போட்டுதான்..” என்று நான் சொல்லிக் கொண்டிருக்க, “போதும் கெளம்புயா, கடுப்பேத்தாத. யாரோடெல்லாம் ஒன்ன கம்பேர் பண்ற, க்ரிஸ்டி, டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தாமஸ் ஹார்டி, அசோகமித்திரன், ஒருத்தர விட மாட்டியா, என்ன விளையாட்டா இருக்கா?” என்று சத்தம் போட ஆரம்பித்தார் முற்றுப்புள்ளி.

முற்றுப்புள்ளியின் வீட்டிற்கு போவதற்கு ஆட்டோவை சில சமயம் உபயோகப்படுத்தினாலும், அவருடனான விமர்சன உரையாடல் முடிந்து திரும்பும்போது நாய் வண்டியையே எனக்குத் தகுதியான வாகனமாக உணர்வேன். இன்றும் அப்படித்தான், ஆனால் இப்போது எனக்கு சிந்திக்க தனிமை தேவைப்பட்டது. ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி, வீட்டு முகவரியைச் சொன்னேன். இந்திரா காந்தி சிக்னலில் காத்திருப்பு. நம்பிக்கை இழக்கப் போவதில்லை. இலக்கிய பயண பாதை இது, தமிழ் சிறுகதை மரபில் இடம் பிடித்து விடவேண்டும். காணி நிலமெல்லாம் தேவையில்லை, துண்டு விரிக்க இடம் கிடைத்தால்கூட போதும்.

எதிர் திசையில் நல்ல கூட்டம், இல்லை அது தவறான வார்த்தைப் பிரயோகம், மானுடத் திரள் என்பதே சரி. விரைந்து செல்லும் வண்டிகள். யாருக்கு என்ன அவசரமோ. முழுதும் போர்த்தப்பட்டிருக்கும் கைக்குழந்தையை மார்போடு அணைத்தபடி, வண்டியை எங்கும் பிடித்துக் கொள்ளாமல் பைக்கில் பின்புறம் ஒருபக்கம் மட்டும் கால் போட்டு அமர்ந்திருக்கும் சேலை அணிந்த பெண். அவள் மருத்துவரைப் பார்க்க சென்று கொண்டிருக்கலாம், மருத்துவச் செலவிற்கு பணமிருக்குமா? ஆட்டோ அருகில் நின்றிருக்கும், பைக்கின் ஹார்னை அழுத்திக் கொண்டே இருப்பவர் எந்த முக்கிய வேலையாக சென்று கொண்டிருக்கிறாரோ. எல்லா பக்கமும் நன்றாக ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். இந்த ஜனத்திரளில் ஏதேனும் மானுட தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும், கதையாக்கி விடலாம்.

4 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.