சிறுகதை

ஆங்க்ஸ்ட்

அபிநந்தன்

பூரிப்பாக இருப்பதாகச் சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் திடீரென்று வெயிட் ஏறுவதை அவனுடைய பாண்ட்டின் தொடைப்பகுதியின் பக்கவாட்டில் தையல்விட ஆரம்பித்தபோதுதான் புரிந்து கொண்டான்.

வழக்கம் போல் ஒரு முறை யூ-டர்ன் எடுத்து துரைசாமி சப்வேக்குள் இறங்க ஆரம்பித்தபோது அவனுக்கு வலப்பக்கம் இருந்த பைக்கோட்டி, “ஸார், பாண்ட் கிழிஞ்சிருக்கு,” என்று சுட்டிக்க்காட்டியபோதுதான் இந்த விஷயம் முதல் முறையாக தெரிய வந்தது- வலப்பக்கம், தொடைப்பகுதியின் பக்கவாட்டில் துணி வாய் பிளந்து கொண்டு நின்றது, திரைச்சீலையின் விலகலில் வானம் வெளிப்படுவதுபோல் அவனது தொடைப்பகுதி கொஞ்சம் தாராளமாகவே தெரிந்தது. அவசர அவசரமாக சட்டையை இழுத்து விட்டு மானத்தைக் காப்பாற்றிக் கொண்டான்.

“சோம்பேறியா நாள் முழுக்க டிவி முன்னால உக்காந்து கிடந்தா உடம்பு பெருக்காம என்ன பண்ணும்?” என்று கேட்டுக்கொண்டே அவன் மனைவி அவன் தைத்துக் கொடுக்கச் சொன்ன பேண்ட்டை விசிறியடித்தாள். அவன் தன் தொப்பையைத் தடவிப் பார்த்து, “இடுப்பு சைஸ் எல்லாம் சரியாதானே இருக்கு, அங்கே பட்டன் கிட்டன் உடையலையே,” என்று லாஜிக்காக கேட்டான்.

“இப்படி வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு நிக்கறதுக்கு ஒரு மணி நேரம் நடந்துட்டு வாங்க”.

அவனுக்கு நடக்கும் உத்தேசம் இல்லை.

அப்புறம் அவனது ஒவ்வொரு பேண்ட்டாக தொடைப்ப்குதியின் பக்கவாட்டில் கிழியக் கிழியத்தான் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. செல்போனை பேண்ட் பாக்கெட்டில் போடுவதால்தான் கிழிகிறது என்று அதைச் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான். மாடியேறும்போது ஒவ்வொரு காலாக மடக்கி நீட்டும்போது தொடைப் பகுதியில் உள்ள துணி சுருங்கி விரிவதில்லை என்பதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாடி ஏறுவதைக் குறைத்துக் கொண்டு லிப்ட் பயன்படுத்தினான். எப்போதும் சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது பெரிய பிரச்சினையாகத்தான் இருந்தது. ஆனால் அதற்காக புது பேண்ட் வாங்கினால் அது எத்தனை நாளோ என்ற கேள்வியை எதிர்கொண்டு, கிழிசல்விடும் இடங்களை உடனுக்குடன் அவனே தைத்துப் பயன்படுத்திக் கொண்டான்.

அப்புறம் ஒரு நாள் காலையில் அவன் சாப்பிடும்போது குமட்டிக் கொண்டு வந்தது, ஒவ்வொரு கவளம் சாப்பிடும்போதும் நெஞ்கில் எரிச்சல். கவனமாக உருளைக்கிழங்கு காரக்கறியைத தவிர்த்து கொஞ்சம் போல சாதம் சாப்பிட்டுவிட்டு எல்லாவற்றையும் குப்பையில் கொட்டினான். மதியம் சாப்பிடும்போதும் அதே பிரச்சினை. நாலு வாய் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று எழுந்து விட்டான். அப்புறம் அவனும் அவன் நண்பனும் வழக்கம் போல காலாற ஒரு ரவுண்ட் நடந்து செல்லும்போது எப்போதும் அருந்தும் மோர் வழக்கத்தைவிட வயிற்றை நிறைத்தது திருப்தியாக இருந்தது. “இனி நீராகாரம்தான் நமக்குச் சரிப்படும் போலிருக்கிறது,” என்று சொல்லிக் கொண்டே சட்டையைக் கீழே இழுத்து விட்டுக் கொண்டான்.

அப்புறம் வீடு திரும்பும்போது மறக்காமல் மாம்பலம் கிரேஸ் ஸ்டோர்ஸ் போய், “ப்ரியா லைம் பிக்கிள்” ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டான். அவனுக்கு எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும் என்பது மட்டுமல்ல, சாதத்தைக் கரைத்துச் சாப்பிடும்போது தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாகவும் இருக்கும்.

“எங்க க்ரோம்பேட் சித்தி மோருஞ்சாதம் மட்டும் போட்டு சித்தப்பாவைக் கொல்றான்னு திட்டிட்டிருந்தோம். இப்பதான் தெரியுது சித்தப்பா எவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்ன்னு, ஏதும் பேசாத போட்டதை மரியாதையா சாப்பிட்டுட்டு போங்க,” என்று கறாராகச் சொல்லி இன்னும் ஒரு கரண்டி பீன்ஸ் உசிலியைத் தட்டில் வைத்தாள் மனைவி. “வத்தக்கொழம்புச் சாத்துக்குத் தொட்டுக்கிட்டு சாப்பிடக் கசக்குதா என்ன?”

“ஆமாம், எனக்கு நெஞ்செல்லாம் விஷம்,” என்று சொல்லவில்லை, நினைத்துக் கொண்டு, போட்டதைச் சாப்பிடும்போது முதல் கவளம் உள்ளே போகும்போதே காரமாய் ஏதோ ஒன்று நெஞ்சிலிருந்து தொண்டைப் பகுதி வரை எழுந்து வந்து அவன் கண்களை நீரால் நிறைத்தது.

பன்கின் – டான் எஸ் டேவிஸ்

Literary Orphans என்ற தளத்தில் Dawn S. Davies எழுதியுள்ள Pankin என்ற சிறுகதையின் தமிழாக்கம்- 

முதலில் எதுவுமில்லை. திட்டங்கள் இல்லை, செயல் இல்லை. சிந்தனை இல்லை. அப்புறம் ஒரு நாள் ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. அது அடங்கிய தொனியில் இருக்கிறது, அது சலசலக்கிறது. வாழ்க்கை திடீரென்று வெம்மையாகவும் எளிமையாகவுமாகிறது. நீ வெளியே போகிறாய். உன் நுரையீரல்கள் கிழிந்து திறந்து கொள்கின்றன. உனக்கு வலிக்கிறது. நீ அலறுகிறாய். நீ தனித்திருக்கும் பெருவெளி உன்னை அச்சுறுத்துகிறது. வெளிச்சம் சுடுகிறது. உன் அம்மா உன்னைத் தன் கைகளில் ஏந்துகிறாள், உன்னை கதகதப்பாக வைத்துக் கொள்கிறாள். நீ அமைதியடைந்து மௌனமாகும்போது உன் அப்பா உன்னைப் பெற்றுக் கொள்கிறார். உன் கண்களைப் பார்த்து, உன்னைத் தன் பன்கின் என்று அழைக்கிறார். அவர்கள் உன்னைப் போர்த்துகிறார்கள், உனக்கு உணவு அளிக்கிறார்கள், உன்னை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறார்கள். ஒரு மரப்பெட்டியில் உன் தொப்புள் கொடியின் தண்டுப்பகுதியைப் பத்திரப்படுத்துகிறார்கள். நீ அவர்களின் செல்வம். நீ தூங்கி எழுந்திருக்கிறாய். மீண்டும் தூங்குகிறாய். பின்னர் மீண்டும் எழுந்திருக்கிறாய். அங்கேயே கிடக்கிறாய், பாருக்குப் பின்னால், தரையில், நீ நெளிந்து கொண்டிருக்கிறாய். நீ தள்ளுக்கிறாய், பாடுபடுகிறாய். ஆனால் உன் கண்களில் படுவதெல்லாம் தரையில் விழும் சூரியக் கோலம்தான், அல்லது இறுக்கிப் பிடிக்கும் உன் கைவிரல்கள். நீ ஊளையிடுகிறாய். தரையை அழுத்தி எழுந்து நிற்கிறாய். தடுமாறி விழும் உன்னை உன் அம்மா வெளியே அழைத்துச் செல்கிறாள். உன் முதல் காலடிகள் வெம்மையான கோடைக்காலச் சேற்றில், சாணத்தின் இனிய மணம் வீசும் கொட்டகைக்கு. அங்கு நீ மங்கலான வெளிச்சத்தில் உன் அப்பா குனிந்திருப்பதைப் பார்க்கிறாய். அவர் தன் மாடுகளை நோக்கிக் காதல் பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறார். அம்மாவை இடித்துக் கொண்டு தோட்டத்தை நோக்கிக் கடந்து செல்லும்போது அவள் புட்டத்தில் மெல்லத் தட்டுகிறார். உன் சிரிப்பொலி கேட்டதும் உன் அம்மா தன் கையை எடுத்துக் கொள்கிறாள். நீ சாப்பிடுகிறாய், வளர்கிறாய், விளையாடுகிறாய். மரங்கள் உன் தேவதைகள்; மண் உனக்குக் களி, கோழிக்குஞ்சுகள் உன் சகோதரிகள். நீ ஓடுகிறாய், தாவுகிறாய். நீ காற்றில் சுழல்கிறாய். நீ சிரிக்கிறாய். நீ சோகத்தில் அழுகிறாய். நீ ரத்தம் சிந்துகிறாய். உன் அம்மாவின் எடை கூடுகிறது, அவள் மெத்தென்று இருக்கிறாள், முட்டாள் போலிருக்கிறாள். உன் அப்பாவின் பற்கள் ஒழுங்கற்று இருக்கின்றன. அதைச் சொல்ல நீ முயற்சி செய்கிறாய். பன்கின் என்ற வார்த்தையைக் கேட்கும்போதே உன் வாய் கோணிக் கொள்கிறது. கோழிக்குஞ்சுகள் நாற்றமடிக்க ஆர்மபிக்கின்ர்ண. நகரின் இருண்ட, சோகை விளக்குகம் உன் பெயரைச் சொல்லி அழைக்கின்றன. எனவே உன் அப்பாவின் பழைய பையில் உன் துணிகளை எடுத்துக் கொண்டு இருட்டு வேளையில் வெளியேறுகிறாய். சேறு உன் காலணிகளைப் பின்னோக்கி இழுக்கிறது, காலையின் உன் பெற்றோர் பார்ப்பதற்கான வழித்தடத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. ஆடம்பரமான ஏதாவது வேண்டும் என்று ஏங்குகிறாய், பகட்டான, பளபளக்கும் ஏதாவது வேண்டும். அதை நீ புதிய ஒரு மந்தையின் மத்தியில் காண்கிறாய். ஒரு துடிப்பை உணர்கிறே, ஆசையின் ஒரு வலிப்பையும் உணர்கிறாய், அதனால் உன் தொண்டை இறுகுகிறது. இருட்டில் ஆடும் கும்பலில் நுழைகிறாய், இப்போது நீ யாருடைய பன்கினும் அல்ல. நீ காட், அல்லது கிட், அல்லது ஜோ-ஜோ அல்லது பிராங்கி ஆகிறாய். கவனமாக உன் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாய். புதிய கோழிக்குஞ்சுக் கூட்டத்துக்கு உன் களங்கமற்ற, தெளிவான சருமத்தைத் திறந்து கொடுக்கிறாய். அவை உன் முகங்களைக் கொத்துகின்றன, உன் கண்களை, உன் மார்களை. ஆனால் அவை உன்னை ஏற்றுக்கொள்கின்றன, தம் கூட்டத்தின் உன்னையும் சேர்த்துக் கொள்கின்றன. நீ தூங்கி எழுந்திருக்கிராய். மீண்டும் தூங்குகிறாய். முதல்முறை நீ ஒரு அந்நியனுடன் எழுந்திருக்கும்போது நீ விட்டுச் சென்றதில் ஒரு நற்றண்மை இருப்பதை உணரத் துவங்குகிறாய். உனக்கு வெட்கமாக இருக்கிறது, ஆனால் நீ மறுபடியும் அதைச் செய்கிறாய். அப்புறம் மறுபடியும். காலம் போகிறது, ஆனால் உன்னால் நிறுத்த முடியவில்லை. உன் நிலை முன்னைவிட மோசம், இது உனக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும்போதும், உன்னில் ஒரு பகுதி வீடு திரும்ப விரும்பும்போதும் நீ திரும்பிப் போவதில்லை. எப்படிப் போவது என்பதை நீ மறந்து விட்டாய். அது எங்கிருக்கிறது என்பதுகூட உனக்குத் தெரியாது.

அமேஸான் காடுகளிலிருந்து: 9- விடுதலை

மித்யா 

“தன் புதல்வியைக் காப்பாற்றியதற்கு பரிசாக எனக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்க ராஜா தயாராக இருந்தார். ஆனால், எனக்கு பணத்தில் நாட்டம் இல்லை. வெளி கிரகத்து மனிதர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் என் குறிக்கோளாக இருந்தது. ராஜாவிடம் சிறிது பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் நாடு முழுவதும் அலைந்தேன். காடுகள் இருக்கும் பகுதிகளுக்கெல்லாம் சென்றேன். அங்குள்ளவர்களை தீர விசாரித்தேன். எந்த ஒரு காட்டுப் பகுதியிலும் ஏதும் மர்மமான சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. திரிந்து திரிந்து மிகவும் சோர்ந்து போயிருந்தேன். அப்பொழுதுதான் அலிஸ்சை சந்தித்தேன். என்னை மொழிபெயர்க்க கூப்பிட்டிருந்தார்கள். என்னுடைய ஆழ்ந்த அறிவையும் ஆங்கில புலமையும் கண்டு இவள் வியந்தாள். அவளை என் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டாள். எனக்கும் ஊர் ஊராகத் திரிந்து ஓய்ந்துவிட்டிருந்தது. ஒரிடத்தில் இருந்தால் நல்லது என்று தோன்றியது. நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

ஒரு நாள் சிலர் உலகில் வேறொரு இடத்தில் உள்ள காட்டைப் பற்றியும் அங்கு சென்ற உலகிலேயே சிறந்த சாகசக்காரர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இருவர் கோர மரணம் அடைந்ததையும், ஒருவன் மட்டும் அந்தக் காட்டுக்குள் சர்வசாதாரணமாக சென்று வருவதாகவும் பேசிக்கொண்டிருப்பதை கேட்டேன். ஆலிசை கூப்பிட்டு இதைப் பற்றி தீர விசாரிக்கச் சொன்னேன். எல்லா விவரங்களையும் அறிந்தபின் ஆலிசிடம், நாம் இங்குச் செல்ல வேண்டும், என்று சொன்னேன். அவளுக்கு இந்தப் பின்கதை தெரியாது. ராஜாவிடம் சென்று பணம் வாங்கிக்கொண்டு வந்தேன். மற்ற வேலைகளை ஆலிஸ் கவனித்தாள். அப்படியாக நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று கதையை முடித்தான் இந்தியன். (more…)

ஆவி சொன்ன கதை – சேத் சைமன்ஸ்

(Matchbook என்ற தளத்தில் Seth Simons எழுதிய குறுங்கதை)

நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. அதற்குதான் வருகிறேன் என்று பல பேர் நினைக்கிறார்கள், ஆனால் அப்படியல்ல. இங்கு தரைப்பலகைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. நீ கவனித்தாயா தெரியவில்லை. நிலவறையில் பல ஆண்டுகளாக பூஞ்சை படிந்து கொண்டிருக்கிறது.. அது நச்சாக இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. என்னால் இப்போதெல்லாம் வண்ணங்களைப் பார்க்க முடிவதில்லை. நிழல்கள் மட்டும்தான். வெளிச்சம், அல்லது இருள். எனவே, நிலவறைக்குப் போகாதே. சத்தியமாகச் சொல்கிறேன், நான் உன்னை பயமுறுத்த வரவில்லை. நீ மேலே கூரையை இன்சுலேட் செய்வது பற்றி யோசிக்க வேண்டும். அங்கு கடைசியாக கை வைத்தபோது ஆஸ்பெஸ்டாஸ் என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நிச்சயம் எனக்கு எதுவும் தெரியவில்லை. எப்போதும் அதிகம் தெரிந்து கொண்டிருந்ததும் கிடையாது. உனக்கு நினைவிருக்கிறதா- இல்லை, உனக்கு நினைவிருக்காது, இல்லையா? எனக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் என்னை விட்டுப் போய்விட்டாள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள் அவர்களும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஒரு நாய் இருந்தது, ஜாக்சன். தெருவுக்கு ஓடிப் போனது, பிறகு திரும்பவும் ஒடி வந்துவிட்டது. அவன்தான் அதிர்ஷ்டக்காரன். இங்கே எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். உன்னைப் போன்றவர்கள். என்னைப் போன்றவர்கள். வேறு பல பேரின் புகைப்படங்களை மாட்டி வைத்தார்கள், சட்டம் போட்ட படங்கள். நீயும் அப்படிச் செய்யலாம், உனக்கு விருப்பமிருந்தால். நான் உன்னைத் தடுக்க மாட்டேன். என்னால் தடுக்கவும் முடியாது என்று நினைக்கிறேன். இந்தச் சுவர்களை நான்தான் எழுப்பினேன், தெரியுமா? அவள் ஒரு சின்னப்பெண் போலிருந்தாள், அப்போது, வெயிற்கால உடையில் இருந்தாள், தலைமுடியில் ஒரு ரிப்பன் கட்டிக் கொண்டிருந்தாள். அதன் வண்ணங்களை நினைவு வைத்திருக்க இப்போதெல்லாம் முடிவதில்லை. சிவப்பாக இருக்கலாம், அல்லது நீலமாக இருக்கலாம். அவளது பற்கள் வெண்மையாக இருந்தன என்பதில் சந்தேகமில்லை. ஓடை வரை அவள் பின்னால் போனேன். அவள் தன் காலணிகளைக் கழட்டினாள். தண்ணீருக்குள் இறங்கினாள். கற்களின்மேல் குதிகால் உயர்த்தி கால் பதித்து நடந்தாள். கூர்மையான கல் ஒன்று அவள் காலின் கட்டை விரலைத் தைத்தது. சிறு கப்பல்கள் கடலில் செல்வது போல் எங்களைச் சுற்றி பருத்தி பறந்தது. புகைபோல் தண்ணீரில் ரத்தம். இப்போது என்னால் எல்லாவற்றையும் பார்க்க முடியும். சுவர்களுக்கு இடையே எலிகள் இருக்கின்றன. உடைந்த செஙகற்கள். காட்டில் பல ஆண்டுகளுக்கு முந்தைய பைன் மரச் சருகுகளுக்குக் கீழ் கொடரியின் உடைந்த கைப்பிடியொன்று கிடக்கிறது. வானொளிச் சாளரத்தில் சிலந்தி வலைகள். பார், ஓடிக் கொண்டிருக்கும் காட்டெருமைக் கூட்டத்தினிடையே என் பேரப்பிள்ளைகளும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். என்னால் அவர்களைப் பார்க்க முடிகிறது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை அழைக்கிறார்கள். நான் அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கிறேன். குழந்தைகள், இப்போது. நாம் எல்லாரும். சுவர்க்காகிதங்களில் நிழல்கள். பழைய தாமிரக் குழாய்கள். வண்டுக்கூடுகள். எலும்புகள். நான். அவள். எல்லாரும். மந்தையாய் மிதித்துச் செல்லும் காட்டெருமைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. சமவெளிகளில் இடிமுழக்கம். இது எப்போதும் நடக்காத ஒன்று. எப்போதும் நடக்கும் ஒன்று”.

நான் ஒரு டம்ளர் பால் ஊற்றிக் கொள்கிறேன். வெளியே, இரு பொன்பாடிப் பறவைகள் ஃபீடரின் உள்ளிருக்கும் இறைச்சியைக் கொத்துகின்றன. வேனிற்காலத்து மஞ்சள் ஆடையை ஒன்று ஏற்கனவே இழந்து விட்டது. மற்றொன்று இன்னும் இழந்து கொண்டிருக்கிறது, அதன் சிறகுகளில் திட்டுத்திட்டாகப் பளீரிடும் வண்ணங்கள், அதன் வயிற்றில். கிளென் தன் தோட்டத்தில் இலைகள் கூட்டிக் கொண்டிருக்கிறான். கருவாலி மரங்கள் வளைந்திருப்பதைப் பார்க்கும்போது காற்றடிப்பது தெரிகிறது, தாழ, ஆனால் நிதானமாக வீசும் காற்று. கிட்டத்தட்ட உன் காதில் விழாமலே உன்னைக் கடந்துச் செல்லும் காற்று.

நன்றி – Matchbox

அமேஸான் காடுகளிலிருந்து- 7: கள்ளமில்லா மனது

மித்யா 

“அறை முழுவதும் மெல்லிய பச்சை ஒளி பரவியது. நான் கண்ணை மூடிக்கொண்டு பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தேன். பச்சை ஒளி பரவியவுடன் அங்கு நிசப்தம் நிலவியது. ஓயாமல் அழுது கொண்டிருந்த ராணியின் குரல் சட்டென்று யாரோ குரல்வளையை நெருக்கியது போல் நின்றது. கதறிக் கொண்டிருந்த இளவரசியின் குரலும் அடங்கியது. எல்லோரும் திகைத்து நின்றிருப்பதை உணர்ந்தேன். வெளியில் இலைகளின் சலசலப்பும் பறவைகளின் ஓசையும் தவிர வேறேதும் இல்லை. என்ன நடக்கப் போகிறது என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“நீ யார்?” என்ற கேள்வி என்னை வந்து தாக்கியது. இது காதில் கேட்கக்கூடிய சப்தம் இல்லை. அது மொழியும் அல்ல. என் உள்ளுணர்வுடன் வேறொரு ஆத்மா உரையாடிக் கொண்டிருந்தது. இது என்னை தவிர வேறு யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இந்த ஆத்மா பேசும்போது பச்சை ஒளி மங்கியும் பிறகு அதிகமாக மிளிர்வதாகவும் இருந்தது.

“நான் யார் என்பது இங்கு முக்கியமில்லை. நீ யார்? எதற்காக இங்கே வந்தாய்? எங்கிருந்து வந்தாய்?” (more…)