தொடர்கதை

வண்ணக்கழுத்து 16அ: வெறுப்பும் பயமும்

இப்போது கோண்ட் கதை சொல்லத் துவங்கினார். “அந்த நாய் தன்னுடைய பிரெஞ்சு எஜமானனை போரின் துவக்கித்திலேயே இழந்திருக்கக்கூடும். ஜெர்மானியர்கள் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். தன் எஜமானருடைய வீடு சூரையாடப்பட்டு அவருடைய கொட்டகை தீயிடப்பட்டதைக் கண்ட அந்த நாய், பயத்தில் காட்டுக்குள் ஓடி வந்திருக்க வேண்டும். அங்கே ஒரு குடிசையைப் போன்ற இடம் கொண்ட, கல்லறையைப் போல இருட்டான அடர்த்தியான முட்புதருக்கு அடியில் மனிதர்களின் பார்வைக்குச் சிக்காமல் ஒளிந்து கொண்டது. அந்த நாய் இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியில் வந்திருக்க வேண்டும். இயல்பிலேயே அதுவொரு வேட்டை நாய் என்பதால், நாட்கள் செல்லச் செல்ல இரவுகள் கடக்க அது தன்னுடைய மிருகப் பண்புகளைத் திரும்பப் பெற்றது.

“என்னை எதிர் கொண்ட போது, நான் அதைக் கண்டு பயப்படாததை அறிந்து அது ஆச்சரியப்பட்டது. பயத்தின் வாடையை நான் வெளிப்படுத்தவில்லை. அதை பயமுறுத்தி தாக்கச் செய்யும் அளவிற்கு பயத்தை வெளிப்படுத்தாத ஒரு மனிதனை அது பல மாதங்கள் கழித்துச் சந்திக்கிறது.

“அதனைப் போலவே நானும் பசியில் இருப்பதாக அது நினைத்துக் கொண்ட்து. அதனால் ஒரு ஜெர்மானிய உணவுக் கிடங்குக்கு என்னைக் இட்டுச் சென்றது. மேலும் ஒரு ரகசிய பாதை வெளியே சென்று ஒரு பெரிய உணவுக் கிடங்கை அடைந்து எனக்காக கொஞ்சம் இறைச்சியைக் கொண்டு வந்தது. அங்கே உணவு மட்டுமல்ல, வரிசையாக பல ரகசியக் கிடங்குகளில் எண்ணெயும் வெடிபொருட்களையும் ஜெர்மானியர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கேற்றபடி வேலை செய்தேன். கடவுளின் கிருபையால் என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது. அதை விட்டுவிட்டு இப்போது வேறு விஷயம் பேசுவோம்.

“உண்மையைச் சொல்வதென்றால் எனக்குப் போரைப் பற்றிப் பேசவே விருப்பமில்லை. சூரிய அஸ்தமனம் ஹிமாலய சிகரங்களை ஒளியூட்டுவதைப் பாருங்கள். எவரஸ்ட் ஒரு தங்க உலையைப் போலக் கொதிக்கிறது. வாருங்கள் பிரார்த்தனை செய்வோம்,

“போலியிலிருந்து மெய்மை நோக்கி என்னை வழிநடத்துங்கள்

இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி வழிநடத்துங்கள்

இரைச்சலில் இருந்து நிசப்தம் நோக்கி வழிநடத்துங்கள்”

தியானம் முடிந்த பிறகு, கோண்ட் எங்கள் வீட்டிலிருந்து அமைதியாக நடந்து, கல்கத்தாவிலிருந்து சிங்காலியாவின் மடாலயத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டார். அங்கே அவர் செய்த சாகசத்தைச் சொல்வதற்கு முன், பிரான்சின் போர்க்களங்களிலிருந்து அவர் எப்படி எங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

1915ம் வருடம் பிப்ரவரி மாதக் கடைசியில், வண்ணக்கழுத்தால் இனிமேல் பறக்க முடியாது என்பது பெங்கால் ரெஜிமெண்டுக்கு தெளிவாகியது. வண்ணக்கழுத்தை அழைத்து வந்த கோண்ட் ஒரு போர்வீரன் இல்லை. ஒரு புலியையோ ஒரு சிறுத்தையையோ தவிர அவர் தன் வாழ்வில் வேறெதையும் கொன்றதில்லை. இப்போது அவரும் நோய்வாய்ப் பட்டிருப்பதால், அவர்கள் இருவரும் பிரயோஜனமில்லை என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மார்ச் மாதம் கல்கத்தாவை அடைந்தார்கள். அவர்களைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. வண்ணக்கழுத்தைப் போலவே கோண்டும் பயந்து போயிருந்தார். இரண்டு பேரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள்.

என்னிடம் என் புறாவை ஒப்படைத்த பின், சில விஷயங்களை விளக்கிவிட்டு கோண்ட் இமாலயத்திற்குச் சென்றார். “பயத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் என்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வதை அளவிற்கு அதிகமாக நான் பார்த்துவிட்டேன். நான் பயமென்னும் நோயில் விழுந்து, வீட்டில் இருப்பதற்கு லாயக்கற்றவனாகிவிட்டேன். நான் தனியே சென்று இயற்கையோடு இயைந்து என்னுடைய நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, அவர் சிங்காலியாவில் உள்ள மடாலயத்திற்கு தியானத்தாலும் பிரார்த்தனையாலும் தன்னைக் குணப்படுத்திக் கொள்ளச் சென்றுவிட்டார். அதே சமயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு வண்ணக்கழுத்தைக் குணப்படுத்த முயற்சி செய்தேன். அவனுடைய மனைவியாலும் நன்கு வளர்ந்த பிள்ளைகளாலும் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. அவன் தன் பிள்ளைகளிடம் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் அவனை வேற்று ஆள் போலவே பார்த்தார்கள். அவனுடைய பெடை அவனிடம் ஆர்வம் காட்டியது. ஆனால், அதனாலும் அவனைப் பறக்க வைக்க முடியவில்லை. பையக் குதிப்பதைத் தவிர அவன் வேறு எதையும் செய்ய மறுத்தான். என்ன செய்தும் அவனை காற்றில் இறங்க வைக்க முடியவில்லை. நல்ல புறா வைத்தியர்களைக் கொண்டு அவனுடைய கால்களையும் இறக்கைகளையும் சோதித்தேன். அவர்கள் அவனுக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவனுடைய எலும்புகளும் இறக்கைகளும் நன்றாக இருந்த போதும் அவன் பறக்க அடம்பிடிக்கிறான். தன் வலது இறக்கையை திறக்க மறுக்கிறான். ஓடாத போதும் குதிக்காத போதும் ஒற்றைக் காலில் நிற்கும் புதிய பழக்கம் வேறு.

அவனும் அவனுடைய பெடையும் கூடு கட்டத் துவங்காமலிருந்தால் நான் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஏப்ரல் மாத மத்தியில், கோடைக்கால ஓய்வு நாட்கள் தொடங்கிய போது கோண்டிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”உன்னுடைய வண்ணக்கழுத்து, இப்போது தன் பெடையோடு கூடக் கூடாது. முட்டைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அழித்து விடு. எந்தச் சூழ்நிலையிலும் அவற்றைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடாதே. வண்ணக்கழுத்தைப் போல பறக்கவே பயப்படும் ஒரு தந்தையால் மோசமான பயம் கொண்ட குஞ்சுகளையே உருவாக்க முடியும். அவனை இங்கே கொண்டு வா. நான் இப்போது கொஞ்சம் நன்றாக உணர்கிறேன். சீக்கிரம் வண்ணக்கழுத்தைக் கொண்டு வா. இங்குள்ள லாமா உன்னையும் அவனையும் காண விரும்புகிறார். மேலும், அந்த ஐந்து உழவாரக் குருவிகளும் தெற்கிலிருந்து இந்த வாரம் இங்கே வந்துவிட்டன. உன்னுடைய பறவையை பயத்திலிருந்து திசை திருப்ப அவை கண்டிப்பாக உதவும்” என்று எழுதியிருந்தார்.

(தொடரும்)

அமேஸான் காடுகளிலிருந்து- 3 : நிசப்தம்

மித்யா

அத்தியாயம் 3 – நிசப்தம்

 

மறு நாள் காலை ஜெப்ரி, டேவிட் மற்றும் ஜிம் ஆகிய மூவரும் அந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்லக் கிளம்பினார்கள். அவர்கள் கையில் தலா ஒரு ரைஃபில் இருந்தது. ஜெப்ரியும் டேவிட்டும் தங்கள் ஹோல்ஸ்டரில் பிஸ்டல் வைத்திருந்தார்கள். காட்டுவாசிகள் அவர்களுடன் வர மறுத்துவிட்டதால் எல்லோரும் ஒரு பையை முதுகில் சுமந்துகொண்டு நடந்தார்கள். ஜெப்ரி காடுவாசிகளை திட்டிக்கொண்டே வந்தார்.

அவர்கள் காட்டுப்பகுதியின் எல்லைக்கு வந்தபோது அங்கு தங்கியிருக்கும் காட்டுவாசிகளின் குடிசைகளைப் பார்த்தார்கள். இவர்கள் அந்தக் காட்டுக்குள் செல்லப் போகிறார்கள் என்று காட்டுவாசிகளுக்கு புரிந்துவிட்டது. குடிசைக்குள் இருப்பவர்களைக் கூப்பிட ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒரு குடிசைக்குள்ளிருந்து கிறிஸ்டோ வெளியில் வந்தான். அவன் ஜெப்ரி மற்றும் டேவிட்டைப் பார்த்தவுடன் பரவசமடைந்தான். பிரிட்டனில் பல இளைஞர்களுக்கு நாயகர்களாக இருந்த இருவரை இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. வாயெல்லாம் பல்லாக, வலது கையை நீட்டி கொண்டு, “வெரி ப்ளீஸ்ட் டு மீட் யூ” என்று சொல்லிக்கொண்டு கிடு கிடு என்று அவர்களை நோக்கி ஓடி வந்தான். அவனைப் பார்த்து ஜெப்ரி உக்கிரமாக முறைத்தார். ஓடி வந்துகொண்டிருந்த அவன் உறைந்து நின்றுவிட்டான். அவன் முகம் வாடிவிட்டது.

காட்டுப்பகுதிக்குள் அவர்கள் நுழையும் தருணம், ஜிம், “நான் உங்களுடன் வரவில்லை. எனக்கு பயமாக இருக்கிறது. நான் இங்கேயே உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறேன்” என்றான். “நீ ஒரு கோழை. நீ ஒரு முட்டாள். உலகில் நீ முன்னுக்கு வரமுடியாது. இனி என் கண்ணில் முழிக்க வேண்டாம். உன் சாமான்களை எடுத்துக்கொண்டு லண்டனுக்குச் சென்றுவிடு. அங்கு ஏதாவது கிளார்க் வேலை தேடிக்கொள் இந்தக் காட்டில் உனக்கு வேலை இல்லை” என்று ஆவேசமாக் கத்தினார் ஜெப்ரி. “அவனை விடுங்கள். நாம் செல்லலாம்” என்று அவரை டேவிட் சமாதானப்படுத்தினான்.

இருவரும் காட்டுக்குள் நுழைந்தார்கள். அவர்களுக்கு காடு புதிதல்ல. நுழைந்தவுடன் அவர் காதுகள் கூர்மையாகின, கண்கள் எல்லா இடங்களையும் தேட ஆரம்பித்தன. அவர்கள் உடம்பு முறுக்கிக் கொண்டிருந்தது. ஒரு சின்ன அசைவையும் அவர்களின் கண் பார்த்தது. எல்லா ஒலிகளும் அவர்கள் காதை வந்தடைந்தன. அவர்கள் இருவரும் காட்டு மிருகங்கள் போல் மாறியிருந்தார்கள். இருண்டிருந்த காட்டில் பூச்சிக்கடியைக்கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை. மரத்திலிருந்து கீழே ஊர்ந்து வரும் பாம்பு ஒன்றை டேவிட் கையால் பிடித்து, கீழே வீசி, தன் பூட்ஸ் காலால் நசுக்கினான். துடிதுடித்து இறந்தது அந்தப் பாம்பு. மரத்தை விட்டு மரத்துக்கு தாவிக் கொண்டிருந்த கொரில்லா ஒன்றை ஜெப்ரி சுட்டு தள்ளினார்.

மூன்று மணி நேரம் நடந்த பின்பு அவர்கள் நதிக்கரைக்கு வந்தார்கள். இங்கு வெளிச்சம் நிறைந்திருந்தது. ஒரு பெரிய மரத்தின் கீழே இருவரும் அமர்ந்தார்கள். ஒரு ஃபிளாஸ்க்கிலிருந்து நீரை அருந்திவிட்டு ஜெப்ரிக்கு ஃபிளாஸ்க்கை கொடுத்தான் டேவிட். இருவரும் சற்று நேரம் ஒன்று பேசிக்கொள்ளவில்லை.

பிறகு டேவிட் ஜெப்ரியைப் பார்த்து கேட்டான், “இந்த வயதிலும் நீங்கள் ஏன் இது போன்ற ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்? உங்களுக்கு இல்லாத செல்வமா, புகழா? லண்டனில் பெரிய பங்களா, எஸ்செக்ஸ்ஸில் ஒரு கோட்டை. நீங்கள் இப்பொழுது ஒரு நைட்டாகி விட்டீர்கள். உங்களுக்கில்லாத அரசியல் செல்வாக்கா? நீங்கள் லண்டனில் ஹாயாக ஓய்வெடுக்கலாமே? எதற்கு இப்படி கஷ்டப்படுகிறீர்கள்?”

“ஹ்ம்ம். நீ இதை கேட்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நமக்குள் காடு இறங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. நம்மால் நகரத்திற்கு செல்ல முடியாது. அங்கு சென்றுதான் என்ன செய்வோம். எனக்கு பெண்கள் மோகம் என்றோ தணிந்து விட்டது. அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. பதவி, பட்டம் இதையெல்லாம் துச்சமாக மதிக்கிறேன். நமக்கு பட்டம் கொடுக்க யாருக்கு தகுதி இருக்கிறது? இடத்தை விட்டு நகராமல் அரசியல் செய்யும் ஆட்கள் நமக்கு பட்டம் கொடுக்க, நாம் அதை வாங்குவது வெட்கக்கேடு. லண்டன் சென்றால் என்ன செய்யலாம்? தினமும் ஒரு பார்ட்டி அல்லது பால் செல்லலாம். அங்கு சென்றால் என்ன நடக்கும்? எல்லோரும் நம்மைச் சூழ்ந்து கொண்டு நம்மிடம் கதை கேட்பார்கள். நாமும் நம் வீர சாகஸ கதைகளை சொல்ல வேண்டும். சொல்லி முடித்தவுடன், “ஜெப்ரி எவ்வளவு நன்றாக கதை சொல்கிறார்’ என்று பாராட்டுவார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு பார்ட்டியிலும் நாம் கதை சொல்ல வேண்டும். நம்மை ஏதோ கூத்தாடி போல் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். இவர்களை மகிழ்விப்பதே நம் வேலை போல் நினைத்துக் கொள்வார்கள். எல்லோரும் சூழ்ந்திருந்து கதை கேட்டு நம்மைப் பாராட்டும்போது நன்றாகதான் இருக்கும். ஆனால் பிறகுதான் தெரியும் அவர்கள் நம்மை ஒரு வேட்டைக்காரனாக பார்க்கவில்லை. நம்மை ஒரு கதைசொல்லியாக பார்க்கிறார்கள் என்று. டேனியல் போன்றவர்கள் சில வருடங்கள் காட்டில் இருந்துவிட்டு இப்பொழுது கதை சொல்வதையே வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல பெண்கள் அவன் மேல் மோகம் கொண்டிருக்கிறார்கள். அவன் என்றோ கூத்தாடியாகிவிட்டான். நான் அப்படி மாறத் தயாராக இல்லை” என்று ஆவேசமாக முடித்தார்.

மறுபடியும் மௌனம் நிலவியது.

சமநிலைக்கு வந்தபின் ஜெப்ரி டேவிட்டை கேட்டார், “நீ லண்டன் சென்று விடலாமே? ஏன் இன்னும் இங்கு சுற்றுகிறாய்?” என்று.
டேவிட் சற்று நேரம் பதில் ஏதும் சொல்லாமல் உட்கார்ந்திருந்தான். பிறகு மெல்லிய குரலில், “என் மனைவியின் நிழல் என்னை இன்னும் துரத்துகிறது ஜெப்ரி. உங்களுக்கு நான் அவளை எவ்வளவு நேசித்தேன் என்பது தெரியும். அவளுடன் இருந்த அந்த மூன்று வருடங்கள் என்னால் மறக்க முடியவில்லை ஜெப்ரி. அவளை போல் என்னை நேசித்தவர்கள் யாரும் இல்லை. அவள் வேண்டாம் என்று சொல்லியும் நான் அவளை என்னுடன் காட்டிற்கு அழைத்து வந்தேன். அவள் சொல் கேட்டு லண்டனில் தங்கி இருக்க வேண்டும். அவள் என்னுடன் காட்டுக்கு வந்து, என்ன என்று தெரியாத கொடிய நோய் தாக்கி, அழுகி செத்தாள்.” டேவிட் கண்களில் கண்ணீர் துளிகள். “அவள் டேவிட் டேவிட் என்று முனகிக்கொண்டிருந்தது இன்னும் என் காதில் ரீங்கரிக்கிறது. எவ்வளவோ சாதனைகள் செய்த நான் அவளைக் காப்பாற்ற முடியாமல் தவித்தேன். இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறேன்”

மெல்லிய குரலில் ஜெப்ரி கேட்டார், “அவள் நினைவு உன்னை வாட்டுகிறது என்றால் அதே காடுகளில் எதை எதிர்பார்த்துச் சுற்றுகிறாய்?”

“மரணத்தை. இங்குதான் என் மரணம் இருக்கிறது. ஆனால் அன்று நான் இந்தப் பகுதிக்கு வந்து பார்த்தபோது என்னை பயம் கவ்விக்கொண்டது. மரணத்தை நான் வரவேற்பேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால்…” திடீரென்று பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை அகல விரித்து அங்கு இங்கும் பார்க்கலானான் டேவிட்.

ஜெப்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. டேவிட்டைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார். டேவிட் பதில் சொல்லாமல் இங்கும் அங்கும் வெறி பிடித்தவன் போல் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் ஜெப்ரி அதை உணர்ந்தார்.

காடு நிசப்தமாக இருந்தது.

காட்டுக்குள் செல்பவர்களுக்கு தெரியும் காடு எப்பொழுதும் தூங்குவதில்லை, காடு எப்பொழுதும் நிசப்தமாக இருந்தது இல்லை என்று. ஆனால் இப்பொழுது விவரிக்க முடியாத அமைதி குடிகொண்டிருந்தது. ஓர் இலையும் அசையவில்லை. பட்சிகளின் குரல் இல்லை. பூச்சிகளின் ரீங்காரம் இல்லை. நதியின் சலசலப்பும் இல்லை.

சட்டென்று தன் துப்பாக்கியை எடுத்து வானை நோக்கிச் சுட்டார் ஜெப்ரி. அதன் எதிரொலி காடு முழுக்க கேட்டது. ஆனால் ஒரு பறவையும் மரத்தை விட்டுப் பறக்கவில்லை. எதிரொலி அடங்கியபின் மறுபடியும் மயான அமைதி.

ஜெப்ரி மரத்தின் கீழே நின்றிருக்க ரைஃபிலைக் கையில் ஏந்தி முன்னே சென்றான் டேவிட். நூறடி சென்ற பின்பு சட்டென்று நின்றான். அவன் முன் பச்சை நிறத்தில் புகை போன்ற ஒன்று தோன்றியது. அதை உருவம் என்று சொல்லமுடியாதபடி அதன் வடிவம் மாறிக்கொண்டே இருந்தது.

டேவிட் ரைஃபிலை உயர்த்தி அதைச் சுட தயாரானான். அப்பொழுது அவன் உடல் வெடித்தது. வெடிக்கும் சப்தம் எங்கும் நிரம்பியது. வெடித்துச் சிதறிய உடலிலிருந்து ஒரே ஒரு காது பறந்து வந்து ஜெப்ரியின் முன் விழுந்தது.

வாழ்க்கையில் முதல் முறையாக ஜெப்ரியின் மனதில் பீதி உண்டானது.

இதைப் போல் அவர் என்றும் பயந்ததில்லை. பல மிருகங்களை, பல காட்டுவாசிகளை ஒண்டிக்கு ஒண்டி சந்தித்தபோதும் அவர் பயந்ததில்லை. ஆனால் இப்பொழுது பயத்தில் அவர் கண்கள் விரிந்தன. பச்சைப் புகை தன்னை நோக்கி வருவதை கண்டார். தன்னையும் அறியாமல் அவர் கண்கள் விரிவதை உணர்ந்தார். ‘படக்’ என்ற ஓசையுடம் அவர் இரண்டு கண்களும் உடலை விட்டு வெளியே விழுந்தன.

இவர்கள் திரும்பி வருவார்கள் என்று நம்பி உட்காந்து கொண்டிருந்த ஜிம்முக்கு முன் கண்கள் இரண்டும் இல்லா ஜெப்ரியின் சவம் வந்து விழுந்தது. அதைப் பார்த்து கத்த ஆரம்பித்த ஜிம் பல மணி நேரம் நிறுத்தவில்லை. அவன் புத்தி பேதலித்தது.

பிணத்தை பார்த்த காட்டுவாசி பெண்கள் பலர் மூர்ச்சையானார்கள். பிணத்தை யாரும் தொடத் தயாராக இல்லாததால் அதன் மேல் விறகுகளைப் போட்டு பிணத்தை எரித்தார்கள்.

இனி அடுத்த பலி யார்?

(தொடரும்)

ஒளிப்பட உதவி – The Written Word

வண்ணக்கழுத்து 15: சேதி கொண்டு போன கதை

“நிகழ்வுகள் நிரம்பிய அந்நாளுக்கு முந்தைய நாள் நான் மிகக் குறைவாகவே தூங்கியிருந்தேன். அவருடைய மேற்ச்சட்டைக்கு உள்ளே இருந்தாலும், நான் விழிததுக் கொண்டிருந்தேன் என்பதை கோண்ட் அறியவில்லை. ஒவ்வொரு அரைமணிக்கும், ஆண் கலைமானைப் போல ஓடும், அணிலைப் போல மரங்களில் ஏறும், முன்பின் தெரியாத நாயோடு நட்பு வைததுக் கொள்ளும் ஒரு மனிதருடைய இதயத்திற்கு பக்கத்தில் தூங்க முடியாது. ஒருசமயம் கோண்டுடைய இதயம் வேகவேகமாகத் துடிக்கும். மற்றொரு சமயம் இதயத் துடிப்பு ஒரு கஜத் தொலைவிற்கு அப்பாலிருந்து கேட்பது போல இருக்கும். தூங்குவதற்கு இடைஞ்சலாக அவர் செய்த மற்றொரு காரியம், அந்த இரவு முழுக்க ஒரு ஒழுங்கில்லாமல் மூச்சு விட்டது தான். சிலசமயம் நீளமாக இழுத்து மூச்சுவிட்டார். சில சமயம் பூனையிடமிருந்து தப்பி ஓடும் எலியைப் போல வேகவேகமாக மூச்சுவிட்டார். இப்படிப்பட்ட மனிதருடைய மேற்ச்சட்டைக்கு அடியில் தூங்குவதைவிட வானத்தில் ஒரு புயலுக்கு நடுவிலே தூங்க முயற்சித்திருப்பேன்.

“பிறகு அந்த நாய். நான் அதை மறக்கவும் முடியுமா? கோண்ட், அதைச் சேர்ததுக் கொண்ட போது நான் பயந்து போனேன். ஆனால், என் உடம்பு வாடை அதற்குத் தெரியவில்லை. கீழிருந்து எழும்பி வந்த காற்று, ஒரு நல் வாடை கொண்ட பேயைப் போல, இது எங்களை நட்பாக்கிக் கொள்ள வந்திருக்கிறது என்று எனக்குச் சொல்லியது. அதனுடைய காலடி ஓசையை நான் காலம் முழுதும் நினைவில் வைத்திருப்பேன். ஒரு பூனையைப் போல மென்மையாக நடந்தது. அது ஒரு காட்டு நாயாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனித கலாச்சாரத்தில் வாழும் நாய்கள் சத்தம் மிகுந்தவை. அவற்றால் சத்தம் போடாமல் நடக்கக் கூட முடியாது. மனித சகவாசம் கெடுதல் செய்யும். மனித சமூகத்தில், பூனைகளைத் தவிர, எல்லா மிருகங்களும் கவனக்குறைவானதாகவும் இரைச்சல் மிகுந்ததாகவும் ஆகிவிடுகின்றன. ஆனால் அந்த நாய் முழுவதும் காட்டு சுபாவம் கொண்டது. அது சத்தமில்லாமல் நடந்தது. சத்தமில்லாமல் மூச்சுவிட்டது. பிறகு அது அங்கே இருந்தது என்பது எனக்கு எப்படித் தெரியும்? கீழே இருந்து வந்து என் நாசியைத் துளைத்த அந்த வாடை தான் காரணம். (more…)

அமேஸான் காடுகளிலிருந்து- விதி வலியது

மித்யா

அத்தியாயம் 2 : விதி வலியது

கிறிஸ்டோ காட்டின் யாரும் புகுந்து வெளிவராத பகுதிக்குள் சென்று ஒரு அனகோண்டா துணையுடன் வெளியே வந்தான் eஎன்ற செய்தி காடு முழுவதும் தீ போல் பரவியது. அந்தப் பிரதேசத்தில் உள்ள குழுக்களுடன் போர் செய்து வந்த பிற குழுக்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இந்த அதிசய மனிதனைக் காண வந்தார்கள். இவ்வாறாக, கிறிஸ்டோவிற்கு ராஜ மரியாதை கிடைத்த செய்தி ஜெப்ரி ஹைன்ஸ் காதுக்கு எட்டியது.

காட்டின் வேறொரு பகுதியில் வாழ்ந்துகொண்டிருந்த ஜெப்ரி, கிறிஸ்டோ இருக்கும் இடத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முகாம் அமைத்து தன்னுடைய உதவியாளராகிய ஜிம் பார்சனை அங்கு என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு வரச்சொன்னார். ஜிம் அங்கு சென்று நாம் முந்தைய அத்தியாயத்தில் படித்த விஷயங்களை அறிந்து கொண்டு அவற்றை ஜெப்ரியிடம் கூறினான். இதை கேட்டு அவர் பொரிந்து தள்ளினார்.

“இவர்கள் காட்டுவாசிகள், காட்டுமிராண்டிகள் என்பதை நிரூபித்து விட்டார்கள். மனிதனாக பிறந்துவிட்டால் கொஞ்சமாவது பகுத்தறிவு இருக்க வேண்டும். இவர்களுக்கு கொஞ்சம்கூட அறிவு இல்லையா? இந்த கட்டுக் கதையெல்லாம் உண்மையென்று நம்புகிறார்கள்? நம்மவர்கள் எப்படி இவர்களை முட்டாள்கள் ஆக்க வேண்டும் என்பதை நன்றாக கற்றுக்கொண்டிருகிறார்கள். இந்த சின்ன வயதிலேயே இவன் எப்படி ஏமாற்றி இருக்கிறான் பார் இந்த கிறிஸ்டோ” என்றார்.

இதற்கு ஜிம், “இல்லை சார். அவனை அனகோண்டா கொண்டு போட்டதை அவர்கள் நிஜமாகவே பார்த்திருக்கிறார்கள். அவன்…”

ஜிம்மை முடிக்கவிடாமல் ஜெப்ரி வெடித்தார், “உனக்கும் அறிவு இல்லையா? உன் அப்பாவிடம் உன்னை ஒரு ஆண்மகன் ஆக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்திருக்கிறேன். நீயோ இப்படி முட்டாள்தனமாக பேசுகிறாய். எனக்கு இப்பொழுது எழுபது வயது ஆகிறது. நான் ஐம்பது வருடங்களாக திரியாத காடு இல்லை. எந்த மனிதனும் கால் வைக்காத காட்டுக்குள் சென்றிருக்கிறேன். ஏன், சில இடங்களில் மிருகங்களே செல்ல அஞ்சும் காட்டுக்குள் சென்றிருக்கிறேன். நான் கண்டுபிடித்த நாடுகள், காடுகள் உலக வரைபடத்தை மறுபடியும் திருத்தி வரையும்படி செய்திருக்கின்றன. அப்படி இருக்கும் எனக்கே காது குத்துகிறார்களா?”

“அதில்லை சார்..”

“நீ வாயை மூடு” வீராவேசமாக கத்தினார் ஜெப்ரி. “அமேசான் காட்டுக்குள் ஏது புலி? எங்கிருந்து வந்தது சிங்கம்? அறிவு கெட்ட ஜென்மங்கள். புலியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இந்தியா செல்ல வேண்டும். சிங்கம் வேண்டும் என்றால் இந்தியாவோ, ஆப்பிரிக்காவோ செல்ல வேண்டும். இந்த அமேசான் காட்டுக்குள் பெரிய மிருகங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. விட்டால் இங்கு கரடியும் யானையும்கூட இருக்கிறது என்று சொல்லிவிடுவார்கள். இந்தக் காட்டுவாசிகளுக்கு புலி என்றால் என்ன, சிங்கம் என்றால் என்ன என்று எதுவும் தெரியாது. அவர்கள் அவற்றைப் பார்த்திருந்தால்தானே! அவன் என்ன சொன்னானோ, இவர்கள் என்ன கேட்டார்களோ? மொத்தத்தில் அவர்களை கிறிஸ்டோ நன்றாக ஏமாற்றிவிட்டான்”

ஜெப்ரி சொல்வதில் உண்மையிருப்பதை உணர்ந்த ஜிம் ஒன்றும் பேசாமல் இருந்தான். இன்னும் பேசினால் பெரியவருக்கு கோபம் அதிகமாகும். ஆனால் மனதுக்குள் அவன் கிறிஸ்டோ ஒரு அதிசய பிறவி என்றே நம்பினான்.

“இப்பொழுது என்ன செய்யலாம் சார்?”

“அதை நான் சொல்கிறேன்” என்று டென்ட் பிளாப்பை நகர்த்திவிட்டு டேவிட் லிவிங்ஸ்டன் உள்ளே வந்தான். அவன் ஜெப்ரிக்கு நேர் எதிராக இருந்தான். ஜெப்ரி அமேசான் காடுகளில் இருந்தாலும் வெள்ளை த்ரீ-பீஸ் சூட் அணிந்திருந்தார். வெள்ளை தொப்பி, வெள்ளை தோல், வெள்ளை முடி, வெள்ளை மீசை, வெள்ளை தாடி என்று எல்லாம் வெள்ளையாக இருந்தார். டேவிட்டின் சதை இப்பொழுது காப்பி நிறத்தில் இருந்தது. காக்கி சபாரி சட்டை அணிந்திருந்தான். தடிமனான கருப்பு பெல்ட். காக்கி ஷார்ட்ஸ், பிரவுன் பூட்ஸ் மற்றும் வேட்டையாடுபவர்கள் அணியும் தடிமனான காக்கி நிற தொப்பி அணிந்திருந்தான். ஜெப்ரியை பார்த்தால் எல்லோரும் அவரை ஒரு வயதான பிரிட்டிஷ் தாத்தா என்று தான் சொல்வார்கள். டேவிட்டை பார்த்தவுடன் அவனை ஒரு சாகசக்காரன் என்று எல்லோருக்கும் புரியும். ஆனால் ஜெப்ரி அவனுக்கு குரு. அவருடன் பல எக்ஸ்பெடிஷன்கள் சென்றுதான் அவன் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டான்.

“என்ன நீ இங்கே?” என்று ஆச்சரியமாக கேட்டார் ஜெப்ரி.

“நீங்க இங்கே வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். கூடவே நீங்க எதற்கு இங்கே வந்தீங்கன்னும் கேள்விப்பட்டேன். அதனால்தான் நீங்கள் இந்த காட்டுக்குள் செல்வதாக இருந்தால் உங்களுடன் கூட வரலாம் என்று வந்தேன்”

இதைக் கேட்ட ஜெப்ரிக்கு ஒரே மகிழ்ச்சி. ஜிம்மைப் பார்த்து, “பார். இவனைப் போல் இருக்க வேண்டும். அதனால்தான் அவன் புகழ் ஐரோப்பா முழுவதும் எனக்கு ஈடாக பரவியிருக்கிறது. நீயும் இருக்கிறாயே, எதற்கும் உபயோகப்படாமல்!” என்று திட்டிவிட்டு டேவிட் பக்கம் திரும்பி, “எப்போ கிளம்பலாம்?” என்று கேட்டார்.

“நான் சென்று ஒரு முறை அந்த இடத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வருகிறேன். அந்தக் காட்டுவாசிகள் எனக்கு பழக்கம். அவர்களிடமும் விசாரித்துவிட்டு வருகிறேன். நீங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு விலகினான் டேவிட்.

இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வந்தபொழுது அவன் நடையில் வேகம் இல்லை. அவன் முகத்தில் குடிகொண்டிருந்த நம்பிக்கை இப்பொழுது காணாமல் போய்விட்டது. மெதுவாக டெண்ட்டுக்குள் நுழைந்து ஜெப்ரியை பார்த்து இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு டெண்ட்டை விட்டு வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து ஜெப்ரியும் வெளியே வந்தார், ஆனால் சிந்தனையில் ஆழ்ந்திருந்த டேவிட்டைப் பின்தொடராமல் டென்ட்டுக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.

டேவிட் கொஞ்சம் தூரம் நடந்த பிறகு ஓரிடத்தில் நின்று தன் பாக்கெட்டில்லிருந்து சிகரெட் எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனைச் சுற்றி உயரமான மரங்கள். பட்சிகள் கத்தும் சப்தம். மரங்களை ஊடுருவி வந்த சூரியன் திட்டு திட்டாக புல்வெளியில் படிந்திருந்தான். ஆனால் டேவிட் இதையெல்லாம் கவனிக்கவில்லை. முழு கவனமும் சிகரெட் புகையை உறிஞ்சுவதிலேயே செலுத்தினான். புகையை வெளியே விட்டபின் மறுபடியும் நடக்க ஆரம்பித்தான். மறுபடியும் நின்றான். மறுபடியும் புகை இழுத்து விட்டான். சட்டென்று கோபமாக சிகரெட்டை கீழே விட்டெறிந்து காலால் கசக்கினான். பிறகு சட்டென்று திரும்பி ஜெப்ரியிடம் வந்தான்.

“ஜெப்ரி. வேண்டாம். நாம் போக வேண்டாம்” என்றான்

“நீயும் ஜிம் போல் உளறுகிறாய்”

“உளறவில்லை ஜெப்ரி. நான் அங்கு சென்று பார்த்தேன். அந்த காட்டுப் பகுதி அமானுஷ்யமான ஒரு பகுதியாக எனக்கு தோன்றுகிறது. அங்குள்ள காட்டுவாசிகளுடனும் பேசினேன். என் உள்ளுணர்வு அங்கு போக வேண்டாம் என்று சொல்கிறது ஜெப்ரி”

“டேவிட் லிவிங்ஸ்டன்தான் பேசுகிறானா? ஜெப்ரி ஹைன்ஸ் மற்றும் டேவிட் லிவிங்க்ஸ்டன் என்பவர்கள் இப்பொழுது ஐரோப்பா முழுக்க ஹீரோக்களாக பார்க்கப்படுபவர்கள். நாம் செல்லாத காடு இல்லை, வெல்லாத நாடு இல்லை. அந்த ஜெர்மானியர்கள், ஸ்பானியர்டுகள், பிரெஞ்சு கோழைகள் நம்மை வழிபடுகிறார்கள். அப்படி இருக்க நாம் இருவரும் ஒரு சின்னப் பையன் சென்ற இடத்திற்குச் செல்ல பயப்பட்டோம் என்று தெரிய வந்தால் இவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? நமக்கு என்ன மரியாதை இருக்கும்? பாட புத்தகங்களில் நம் வாழ்க்கை வரலாறு வருவதற்கு பதில் ஏதோ ஒரு வார இதழில் நம்மை பற்றி கார்ட்டுன் வரும். நாம் செய்த சாதனையெல்லாம் ஏமாற்று வேலை என்று எழுதுவார்கள். இவ்வளவு செய்த பிறகு எல்லோர் கண்ணிலும் ஒரு ஜோக்கர் ஆக விருப்பமில்லை. நீ வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி. நான் அங்கு செல்வது உறுதி”

ஒரு கணம் யோசித்த டேவிட், “இந்தியாவில் சொல்வார்கள் ‘விதி வலியது’ என்று. அது யாரையும் விடாது. என்ன நடக்கிறதோ நடக்கட்டும். நானும் வருகிறேன்”

“அதே இந்தியாவில் ‘விதியை மதியால் வெல்ல முடியும்’ என்றும் சொல்வார்கள் என்று தெரியாதா? நாளை காலையில் நாம் கிளம்புகிறோம்” என்று உறுதியாக கூறினார் ஜெப்ரி.

“இது மதியை மீறிய விஷயம் ஜெப்ரி” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் டேவிட்.

விதி வலியதா மதி வலியதா என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

ஒளிப்பட உதவி – nolano.net

வண்ணக்கழுத்து 14: உளவு பார்க்கப்போன கோண்ட்

டிசம்பரின் முதல் வாரத்தில் கோண்டும் வண்ணக்கழுத்தும் தன்னந்தனியாக உளவு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அவர்கள் போன இடம் ஒரு காடு. அது ஏப்ரெ, அர்மெண்டியர் மற்றும் ஹெஸ்ப்ரோக் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இல்லை. ஃபிரெஞ்சு வரைபடத்தை எடுத்துக் கொண்டு, கலேவிலிருந்து தெற்கு நோக்கி ஒரு நேர்க்கோட்டை வரைந்தீர்கள் என்றால், பிரிட்டிஷ் மற்றும் இந்திய ராணுவம் நின்றிருந்த இடங்கள்அடுத்தடுத்து இருப்பதைக் காண முடியும். அர்மெண்டியருக்குப் பக்கத்தில் இந்திய மொகம்மதிய வீரர்களின் கல்லறைகள் நிறைய இருக்கின்றன. இந்திய இந்து மத வீரர்களின் கல்லறைகள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்துக்கள் ஆதிகாலத்திலிருந்தே இறந்தவர்களை எரியூட்டி வந்தார்கள். எரியூட்டப்பட்டவர்களுக்கு கல்லறைகள் கிடையாது. அவர்களுடைய அஸ்தி காற்றில் தூவப்படுகின்றன. அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை, ஆம், எந்தவொரு இடமும் அவர்களின் நினைவை பாரமாய்ச் சுமப்பதில்லை..

மீண்டும் கோண்டிற்கும் வண்ணக்கழுத்திற்கும் வருவோம். எதிரியின் எல்லைக்கு அப்பால், ஹெஸ்ப்ரோக் அருகில் காட்டிற்குள் இருக்கும் மிகப்பெரிய இரகசிய ஆயுதக் கிடங்கின் இருப்பிடத்தை துல்லியமாய் அறிய அவர்கள் இருவரும் அனுப்பப்பட்டார்கள். அதைக் கண்டுபிடித்தால், கோண்டும் வண்ணக்கழுத்தும் தனியாகவோ இருவருமாகவோ, ஒரு துல்லியமான வரைபடத்தோடு பிரிட்டிஷ் ராணுவ தலைமையகத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வளவு தான். ஆக, தெளிவான டிசம்பர் மாத காலையில் ஒரு நாள் வண்ணக்கழுத்தை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டார்கள். அது காட்டின் மேலே இருபது மைல் தூரம் பறந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதி இந்தியப் படை வசமும் மற்றொரு பகுதி ஜெர்மானியப் படை வசமும் இருந்தது. ஜெர்மனியர்களின் இடத்திற்குள் நுழைந்த பிறகு வண்ணக்கழுத்து விடுவிக்கப்பட்டது. அவன் காடு முழுக்கப் பறந்தான். பிறகு அந்த நிலப்பரப்பைப் பற்றி அறிவை வளர்த்துக் கொண்டு வீடு திரும்பினான். வண்ணக்கழுத்து தன்னுடைய பாதையை அறிந்து கொள்ளவும், அவனிடம் எதிர்பார்க்கப்படும் வேலையைப் பற்றி அவனுக்கு அறிவுறத்தவுமே இந்த ஏற்பாடு.

அன்று மாலை சூரியன் மறைந்ததும், நியூ யார்க்குக்கு வடக்கே பத்து பாகையில் இருக்கும் அந்த இடத்தில் சுமார் நான்கு மணிக்கே அந்தி சாய்ந்துவிடும்,, குளிருக்கு கணப்பான உடைகளை அணிந்து கொண்டு, வண்ணக்கழுத்தை தன் மேல் சட்டைக்கு உள்ளே வைத்துக் கொண்டு, கோண்ட் கிளம்பினார். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸில் அந்தப் பெரிய காட்டில், இந்திய ராணுவத்தின் இரண்டாவது எல்கை வரை சென்றார்கள். முழு இருட்டில், உளவுத்துறை ஆட்கள் வழிநடத்த அவர்கள் போர்முனை நோக்கிச் சென்றார்கள்.

சீக்கிரமே அவர்கள் இரு படைகளின் ஆக்கிரமிப்பிலும் இல்லாத மையப்பகுதியை அடைந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அது மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. குண்டுவீச்சில் அம்மரங்களில் பல இன்னும் சேதமடையாமல் இருந்தது. பிரெஞ்சோ ஜெர்மனோ, ஆங்கிலத்தில் ‘யெஸ்’, ‘நோ’, ‘வெரி வெல்’ என்பதைத் தாண்டி ஒன்றும் அறியாத கோண்ட், தன்னுடைய மேல் சட்டைக்கு அடியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் புறாவின் துணையோடு, ஜெர்மனியப் படையின் ஆயுதக் கிடங்கை கண்டுபிடிக்க தனித்து விடப்பட்டார்.

முதலில் அவர், தான் குளிர்ந்த இமாலயத்தின் சீர்தோஷணம் கொண்ட ஒரு நாட்டில், குளிர் காலத்தில் மரங்கள் மொட்டையாக நிற்க, இலையுதிர்கால சருகுகளும் உறைபனியும் தரையை மூடியிருக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை தனக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. மரங்களிலும் மரக்கன்றுகளிலும் குறைந்த அளவே இலைகள் இருக்க அவருக்கு தன்னை மறைத்துக் கொள்வது அத்தனை எளிதான காரியமாக இல்லை. அந்த இரவு இருள் சூழ்ந்திருந்தது; பிணத்தைப் போல சில்லிட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு மனிதனைவிடவும் இருட்டில் சிறப்பாக அவரால் காண முடியும் என்பதாலும், அவருடைய மோப்பம் பிடிக்கும் சக்தி எந்தவொரு விலங்கை விடவும் கூர்மையானது என்பதாலும், யாரும் புக முடியாத இடத்தைக் கடந்து முன்னேறுவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இரவில் காற்று கிழக்கிலிருந்து வீசியது.

மரங்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த அவர், தன்னால் முடிந்த அளவிற்கு விரைவாக முன்னேறினார். ஒரு ஜெர்மனியப் படை தன் வழியைக் கடக்கப்போகிறது என்பதை அவர்கள் வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அவருடைய முக்கு அவருக்குச் சொல்லிவிட்டது. அவர், ஒரு சிறுத்தையைப் போல மரத்தின் மீது ஏறி காத்திருந்தார். அவர்களுக்கு ஒரு சிறு அசைவின் ஓசை கூடக் கேட்கவில்லை. அதுவே பகலாக இருந்திருந்தால் அவர் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஏனென்றால், உறைபனியின் மீது நடந்து வந்திருந்த அவருடைய கால்களில் இருந்து ரத்தம் சொட்டி, கறைபடிந்த கால்தடத்தை விட்டிருந்தது.

ஒருமுறை அவர் மிக குறுகிய இடைவெளியில் தப்பித்தார். இரண்டு ஜெர்மானிய வீரர்கள் கீழே கடந்து செல்ல வழிவிட்டு அவர் மரத்தின் மீது ஏறியிருக்க, ஒரு கிளையிலிருந்து அவர் காதில் யாரோ ஒருவர் கிசுகிசுத்ததைக் கேட்டார். உடனே அவருக்கு அது ஒரு ஜெர்மானிய துப்பாக்கி வீரர் என்பது புரிந்து விட்டது. ஆனால், அவர் தன் தலையைத் தாழ்த்தி கவனமாகக் கேட்டார். அந்த ஜெர்மானியர் ‘குடன் நாட்ஜ்’ என்றார். பிறகு, வெளிவந்து மரத்திலிருந்து இறங்கினார். அவர் கோண்ட் தன்னை பணியிலிருந்து விடுவிக்க வந்த சக வீரர் என்று தவறாக நினைத்துக் கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து, கோண்ட் மரத்திலிருந்து இறங்கி, அந்த ஜெர்மானியரின் கால் தடத்தை பின்தொடர்ந்தார். இருட்டாக இருந்தாலும் அவருடைய வெற்றுப் பாதம், அந்த மனிதனின் காலடி தடம் பதித்திருந்த மண்ணை உணர்ந்தது. அது அவருக்கொன்றும் கடினமில்லை.

கடைசில் அவர் நிறைய மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தார். அவர் மெதுவாக அவர்களைச் சுற்றிச் சென்று முன்னேற வேண்டியிருந்தது. தன் காலடியில் ஏதோவொரு புதிய சத்தத்தைக் கேட்டார். நின்று, கவனித்தார். சந்தேகமே இல்லை, அது அவருக்கு பழக்கமான சத்தம்தான். அவர் காத்திருந்தார். ஒரு மிருகத்தின் காலடி. பட்டர்ர் பட், பட்டர்ர்! கோண்ட் அந்த சத்தத்தை நோக்கி நகர்ந்தார். உள்ளழுந்திய ஒரு உறுமல் சத்தம் வந்தது. பயத்திற்கு பதிலாக, சந்தோஷம் அவர் மனதை நிறைத்தது. புலிகள் நிறைந்த இந்தியக் காடுகளில் இரவைக் கழித்த அவர், ஒரு காட்டு நாயுடைய உறுமலுக்கு பயந்துவிடவில்லை. சீக்கிரமே இரண்டு சிவப்புக் கண்கள் அவருடைய பார்வைக்கு வந்தது. கோண்ட், கவனமாக தனக்கு முன்னால் இருக்கும் காற்றை முகர்ந்தார். அந்த நாயின் மீது சிறிதளவு கூட மனித வாசனை இல்லை. அந்த நாய் காட்டு விலங்காகிவிட்டிருந்தது. அந்த நாயும், தான் என்ன விதமான விலங்கை எதிர் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய காற்றை முகர்ந்தது. கோண்ட் சாதாரணமாக மனிதர்கள் வெளிப்படுத்தும் பய வாசனையை வெளிப்படுத்தவில்லை என்பதால், அந்த மிருகம் முன் வந்து தன்னை அவர் மீது உரசி, தீவிரமாக முகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக, கோண்ட் வண்ணக்கழுத்தை அந்த நாயின் மூக்கிற்கு மேலே தூக்கிக் கொண்டிருந்தார். மேலும், காற்று பறவையின் வாசனையைக் கொண்டுபோய்க் கொண்டிருந்தது. ஆக, அந்த நாய் தனக்கு முன்னால் இருந்த மனிதனை பயமில்லாத ஒரு நண்பனாகவே பார்த்தது. அது தன் வாலைக் குழைத்துக்கொண்டு கொண்டு செல்லம் கொஞ்சியது. தன் கையால் அதன் தலையை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக கோண்ட், மெதுவாக தன் கையை நாயின் கண்களுக்கு முன்னால், அது பார்ப்பதற்காகவும் முகர்வதற்காகவும் நீட்டினார். அடுத்த ஒரு நொடி நிச்சயமின்மை தொடர்ந்தது.

அந்த நாய் கையைக் கடிக்கப் போகிறதா? இன்னொரு நொடியும் கழிந்தது. பிறகு… அந்த நாய் கையை நக்கியது. இப்போது சுகமாய்க் கொஞ்சியது. “ஆக, இது வேடனுடைய நாய். தலைவனைப் பிரிந்திருக்கிறது. இதனுடைய எஜமானன் இறந்திருக்கக் கூடும். ஜெர்மானியப் படைக்கு வரும் உணவுப் பொருட்களைக் கவர்ந்து தின்று உயிர் பிழைத்திருக்கிறது. ஏனென்றால், இது இதுவரை மனித மாமிசத்தை தின்றதாகத் தெரியவில்லை. இதுவரைக்கும் பரவாயில்லை” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் கோண்ட்.

கோண்ட் மெதுவாக சீட்டியடித்தார். எந்த நாடாக இருந்தாலும் எக்காலத்திலும் இது தான் வேடர்களின் சமிக்ஞை. ‘வழிநடத்து’ என்பது அதன் அர்த்தம். அந்த நாயும் அவரை வழிநடத்தியது. ஒரு ஆண் கலைமான், புலியின் குகையை மிகத் திறமையுடன் கடப்பதைப் போல, அந்த நாய் ஜெர்மானிய வீரர்களின் தற்காலிக முகாமை சுற்றிக் கொண்டு சென்றது. பல மணிநேர அலைச்சலுக்குப் பின், அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். சந்தேகமே இல்லை. கோண்ட் அவர் தேடி வந்த ஆயுதக் கிடங்கை கண்டுபிடித்துவிட்டார். ஆயுதங்கள் மட்டுமல்ல ஜெர்மானியர்களின் உணவுக் கிடங்கும் அது தான். அவரை வழிநடத்திக் கொண்டு போன காட்டு நாய், ஒரு ரகசியப் பொந்துக்குள் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு கன்றின் கால் இறைச்சியோடு திரும்பியது. அதுவொரு மாட்டிறைச்சி என்று அதன் வாடையைக் கொண்டே கோண்டால் கணிக்க முடிந்தது. அந்த நாய் உறைபனித் தரையில் தன்னுடைய இரவுணவோடு அமர்ந்தது. அதே நேரத்தில், கோண்ட் தான் இரவு முதல் தோளில் போட்டுக் கொண்டிருந்த பூட்ஸ்களை எடுத்து அணிந்து கொண்டு, மேலே உற்று நோக்கினார். நட்சத்திரங்களின் நிலை இருப்பை வைத்து அவரால் தன் இருப்பிடத்தை அறிய முடிந்தது. அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தார்.

மெதுவாக விடியத் துவங்கியது. தன் பையிலிருந்து ஒரு திசைகாட்டியை எடுத்தார். அந்த இடத்தின் வரைபடத்தை தன்னால் வரைய முடியும் என்று நிச்சயமாக உணர்ந்தார். அப்போது, அந்த நாய் மேலே குதித்து, கோண்டின் மேல் சட்டையை பற்களால் கடித்து இழுத்தது. மீண்டும் அந்த நாய் தன்னை வழிநடத்த விரும்புகிறது என்பதில் அவர் மனதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த நாய் முன்னால் ஓட, கோண்ட் விரைவாக பின்தொடர்ந்தார். விரைவிலேயே அவர்கள் முட்களாலும் உறைந்த கொடிகளாலும் அடர்த்தியாக மறைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை அடைந்தார்கள். அந்த பாதை விலங்குகளுக்கு மட்டுமே சாத்தியமானது. அந்த நாய் பல கூரான முட்களுக்கு கீழே தவழ்ந்து சென்று மறைந்துவிட்டது.

இப்போது கோண்ட் நட்சத்திரங்களின் நிலை இருப்பை ஒரு படமாக வரைந்து, தன்னுடைய திசைகாட்டியின் சரியான நிலையையும் வரைபடத்தில் குறித்து இரண்டையும் வண்ணக்கழுத்தின் காலில் கட்டிப் பறக்கவிட்டார். அந்தப் புறா ஒவ்வொரு மரமாகப் பறந்து, ஒவ்வொன்றிலும் ஒரு நிமிடம் வரை உட்கார்ந்து தன் அலகுகலால் இறகுகளை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தார். பிறகு, காலில் கட்டப்பட்ட தாள் இருக்கிறதா என்று சரிபார்ப்பது போல தன் அலகால் கொத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, இருப்பதிலேயே உயரமான மரத்தின் உச்சிக்கு சென்று, அங்கே அமர்ந்து கொண்டு அந்த இடத்தின் அமைப்பை ஆய்வு செய்தது. அந்த நொடியில், மேலே பார்த்துக் கொண்டிருந்த கோண்ட் தான் இழுக்கப்படுவதை உணர்ந்தார். குனிந்து தன் காலின்கீழ் பார்த்தார். அந்த நாய் முட்களுக்கு அடியிலிருந்த ஒரு குழிக்குள் அவரை இழுத்தது. கோண்ட் தாழக் குனிந்தார். தன்னுடைய வழிகாட்டியை தொடரும் அளவிற்கு கீழே வளைந்தார். ஆனால், கடைசியில் தலைக்கு மேலே இறக்கைகள் அடிக்கும் சத்தமும், துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தமும் கேட்டது. எழுந்து வண்ணக்கழுத்து கொல்லப்பட்டுவிட்டானா இல்லையா என்று ஆராயக் கூட அவருக்கு விருப்பமில்லை.

முட்களுக்கு அடியில், தன் வயிறும் முதுகெலும்பும் ஒட்டிக் கொண்டது போலும், இரண்டும் சேர்ந்து தரையோடு தைக்கப்பட்டது போலும் அவர் தவழ்ந்தார். அவர் உந்தித் தவழ்ந்து திடீரென்று எட்டு அடி வரை வழுக்கிக் கொண்டு போய், ஒரு இருண்ட குழியில் விழுந்தார். கும்மிருட்டாக இருந்தது. சிராய்த்த தலையை தேய்த்துக் கொண்டிருந்த்தால் கோண்ட் அதை முதலில் கவனிக்கவில்லை.

கடைசியில் எங்கே இருக்கிறோம் என்பதை அவர் அறிய முற்பட, திருடர்களின் குகை போல முட் புதர்களால் பாதுகாக்கப்பட்ட உறைந்த தண்ணீர்க் குழியாக இருக்கலாம் என்று நினைத்தார். குளிர்காலத்திலும், தலைக்கு மேலே உள்ள கிளைகளிலும் கொடிகளிலும் இலைகளே இல்லாத போதும், பகற்பொழுதிலும்கூட அந்தக் குழியில் இருள் அடர்த்தியாகவே இருந்தது. அந்த நாய் இப்போதும் அவருடன் தான் இருந்தது. அது தான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்திருந்தது. பாவம், அந்த விலங்கு ஒரு நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தது. அந்த நேரத்திலும் கோண்ட்டோடு மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருக்க விரும்பியது. ஆனால், களைப்படைந்த கோண்ட், கிட்டத்தில் ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தத்தையும் பொருட்படுத்தாது தூங்கிவிட்டார்.

மூன்று மணிநேரங்கள் கழித்து அந்த நாய் திடீரென்று சிணுங்கியது. பைத்தியம் பிடித்ததைப் போல ஊழையிட்டது. அதன் பிறகு பயங்கர வெடிச் சப்தங்களால் பூமி அதிரந்தது. அதைப் பொறுக்க முடியாமல், அந்த நாய் கோண்டின் மேல் சட்டையைப் பிடித்து இழுத்தது. வெடிச் சத்தம் படிப்படியாக, கோண்ட் இருந்த இடம் ஒரு தொட்டில் போல ஆடும் வரை உயர்ந்தது. ஆனால், அவரால் மறைவிடத்திலிருந்து வெளியே வருவதாய் இல்லை. ”ஓ வண்ணக்கழுத்தே, ஒப்பில்லாத பறவையே, எவ்வளவு சிறப்பாக உன் வேலையைச் செய்திருக்கிறாய். அதற்குள், அந்த செர்ரிப்பழ முகம் கொண்ட தளபதியிடம் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறாய். எனவேதான் இந்த இடி போன்ற பதில். நீ பறவை இனத்தின் மாணிக்கம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அவர் முனகிக் கொண்டிருக்க விமானங்கள் போட்ட குண்டுகள் ஜெர்மானிய ஆயுதக் கிடங்கை வெடிக்க வைத்தது.

அப்போது, அவரை மேற்சட்டையின் கையைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்த அந்த நாய், காய்ச்சல் வந்தவன் போல ஊழையிட்டு நடுங்கியது. அந்த நொடியில் காற்றில் ஏதோ உரசிக் கொண்டு வந்து பொத்தென்று பக்கத்தில் விழுந்தது. ஒரு அழுகையான ஊளையோடு அந்த நாய் தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே விரைந்தது. கோண்டும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அந்த முட்களின் ஊடே அவர் பாதி தூரம் கடந்திருக்க, அவருக்கு கீழே இருந்து காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் பூமியை நொறுக்கியது. கொடூரமான வலி அவருடைய தோளைத் துளைத்தது. ஏதோ ஒரு பேயால் தூக்கி, கடும் வலிமையுடன் தரையில் எறியப்பட்டதைப் போல அவர் உணர்ந்தார். கருஞ்சிவப்பு வைரங்களில் ஒளி அவர் கண்களின் முன்னே சில நொடிகள் ஆடிவிட்டு, திடீரென்று ஆற்றுப்படுத்தும் இருள் சூழ்ந்தது.

ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பிய உடன், முதன் முதலில் அவர் உணர்ந்தது ஹிந்துஸ்தானி குரல்களைத்தான். தன்னுடைய ஊர் மொழியை மேலும் தெளிவாகக் கேட்க அவர் தன் தலையை உயர்த்தினார். அந்த நொடியில், அவர் ஆயிரம் நல்ல பாம்புகள் கொத்தியதைப் போன்ற வலியை உணர்ந்தார். தான் தாக்கப்பட்டதையும் உயிர் போகுமளவிற்கு காயம்பட்டிருப்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார். அதே நேரத்தில், ஒவ்வொரு முறை ஹிந்துஸ்தானி ஒலி கேட்கும் போதும், இந்தக் காடு எதிரியின் வசம் இல்லை, இந்தியப் படையின் வசத்தில் இருக்கிறது, என்பதை அறிந்து அவர் உள்ளம் மகிழ்ந்த்து. ’ஆ! என் வேலை முடிந்தது. இனி நான் சந்தோஷமாகச் சாகலாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

(தொடரும்…)