விமரிசனம்

மொழியில் ஒளிரும் கணங்கள்- ஜேம்ஸ் சால்ட்டர் சிறுகதைகள்

அஜய் ஆர்

salter2-guardian

ஜேம்ஸ் சால்ட்டரின் (James Salter) ‘Light Years‘ நாவலில் ஒரு பாத்திரம், “”One of the last great realizations is that life will not be what you dreamed,” என்று எண்ணுவதை அந்நாவலை மட்டுமல்ல, சால்ட்டரின் முழு புனைவுலகையும் இணைக்கும் பொதுச் சரடாகப் பார்க்கலாம். மேலும், தாம் தொடப்போகும் எல்லைகள் குறித்த கற்பனைகளுடன் பருவம் முதிர்ந்த (adult) வாழ்வைத் தொடங்கி, பின்பு ஒரு கட்டத்தில் தான் எங்கும் பயணம் செய்யாமல் இன்னும் கரையிலேயே நின்று கொண்டிருப்பதை/ அல்லது திசை மாறி வேறு எல்லைகளை அடைந்ததை உணர்பவர்கள் என பொதுப்படையாகவும், ஆண்- பெண் உறவில் தாம் அடைந்துள்ளதாக நினைக்கும் நிறைவை விரைவில் இழந்து, அதை வேறிடத்தில் தேடுதல் என்ற சுழலில் சிக்குபவர்கள் என்று குறிப்பாகவும் சால்ட்டரின் முழு சிறுகதைத் தொகுப்பை இரண்டு உட்கூறுகளாகப் பிரிக்கலாம்.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகால எழுத்துலக பயணத்தில் சால்ட்டருக்கு இலக்கிய நடையாளர்/ stylist என்பதே முதன்மை அடையாளமாக உள்ளது. நிறைவின்மையினால் பீடிக்கப்பட்டாலும் செயலூக்கம் குன்றாமல் வாழ விழைபவர்களின், சில நேரங்களில் மகிழ்ச்சியையும் பல நேரங்களில் இன்னும் புதிய துன்பங்களையும் இட்டுச் செல்லும் அந்த விழைவின் அன்றாட கணங்களைத் தன் எழுத்தில் சிறை பிடித்து உறையச் செய்து “…give the ordinary its beautiful due” என்ற அப்டைக்கின் பிரசித்தமான மேற்கோளுக்கு சால்ட்டர் நியாயம் செய்கிறார். இதை சால்ட்டரின் வார்த்தைகளிலேயே, ” There is no situation like the open road, and seeing things completely afresh. I’m used to traveling. It’s not a question of meeting or seeing new faces particularly, or hearing new stories, but of looking at life in a different way. It’s the curtain coming up on another act,” என்று பிரயாணம் செய்வதைப் பற்றி அவர் குறிப்பிடுவதுடனும் ஒப்பிடலாம்.

தன் நடையின் நுட்பங்கள் மூலம் புதிய கோணத்தில் அன்றாட கணங்களை அணி செய்கிறார் சால்ட்டர். “Foreign Shores” என்ற கதையில், இலையுதிர் காலத்தின் வருகைக்கான எதிர்பார்ப்பு பற்றிய ஒரு விவரிப்பு இது- “..left behind, a grasshopper, a veteran in dark green and yellow, limped along.The birds had torn off one of his legs“, வெட்டுக்கிளி பற்றிய ஒரு காட்சித் துண்டு மட்டுமா? veteran, limp ஆகிய சொற்கள் இவ்வரியில் அத்தியாவசியமா? ஆனால் அவ்வார்த்தைகளே போரில் கால் இழந்த முதிய இராணுவ வீரரின் அந்திமக் காலத்தின் சித்திரமாகக் கூட இந்த வரியை உருவகிக்கச் செய்யக் கூடும், இல்லையா?

Arlington” என்ற கதையில் ஆற்றின் அருகில் உள்ள தேவாலயத்தில் இராணுவ உயரதிகாரி ஒருவரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. சடங்கின்போது இசைக்கப்படுவதை கல்லறைக்குச் செல்பவர்கள், “… walked with many others, toward the end drawn by faint music as if coming from the ancient river itself, the last river, the boatman waiting” என்பதாக சால்ட்டர் பதிவு செய்யும்போது, வாசகன் ஒரு கணம் கிரேக்க புராண காலத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். (‘Charon‘ என்பவன் இறந்தவர்களின் ஆன்மாவை, வாழும்/ இறந்தவர்களின் உலகங்களைப் பிரிக்கும் ஆறுகளைக் கடக்க உதவும் படகோட்டி என்பது கிரேக்க தொன்மம் ).

இந்த இரண்டு விவரணைகளிலும் சால்ட்டர் அன்றாடத்தின் எல்லைகளை மீறவில்லை, அதாவது விவரணைகள் புறச் சூழலை யதார்த்தமாகவே வர்ணிப்பதாக உள்ளன, ஆனால் அவற்றை நாம் பார்க்கும் விதத்தை, அவற்றில் நாம் காண்பதை மட்டும் சற்றே மாற்றி அமைக்கும்போது, நாம் அதுவரை கவனத்தில் கொள்ளாத திரைச்சீலை விலகி புதிய பிம்பம் வாசகனுக்கு புலப்படுகிறது.

salter_3

ஒளி, அதில் துலக்கமாகும் பிம்பங்கள் இவர் எழுத்தில் எங்கும் பரவி இருக்கின்றன. அந்தி மாலையில் உயர்ந்த கட்டிடத்திலிருந்து பார்க்கும்போது தென்படும் – சாலைகளில் செல்லும் வாகனங்களில், வீடுகளில், கடைகள்/ அலுவலகங்களில் – ஒரே நேரத்தில்/ அடுத்தடுத்து செயலுக்கு வரும் செயற்கை ஒளி, வீடுகளை நிறைத்திருக்கும் விளக்குகள் இந்தக் கதைகளில் இருந்தாலும், சால்ட்டரின் அகத்தில் நிறைந்திருப்பது வெய்யோனின் தூய ஒளியே என்பதற்குச் சான்றாக வாசகனையும் அவ்வொளியை ஆசை தீரப் பருகச் செய்கிறார். முன்காலையின் வெளிச்சம் ஒரு வீட்டின்மேல் “In earliest morning,……The shadow of a tall elm beside it was traced on it as finely as if drawn by a pencil” (‘Last Night‘) படர்வதை விவரிப்பதில் – The shadow of a tall elm beside it was traced on it என்பதுடன், மரத்தின் நிழல் வீட்டின் மேல் படரும் பிம்பத்துடன், இந்த வரியை சால்ட்டர் முடித்திருக்கக்கூடும், ஆனால் அதை as finely as if drawn by a pencil என்று அவர் அதற்கு தரும் அழுத்தமே இதில் முன்காலையின் ஒளியின் அடர்த்தியை உணர்த்துவதோடு, அந்தக் கணத்திற்கு மிகப் பொருத்தமாகவும் உள்ளது. முன்காலையின் ஒளி இப்படியென்றால், பின்மதிய/ முன்னந்தியின் ஒளி “It was still light outside, the pure full light before evening, the sun in a thousand windows facing the park,” என எங்கும் செந்தழலாக படர்ந்திருக்கும் அக்கணத்தில் மூழ்கவே வாசகன் விரும்புவான்.

புறச்சூழலை மட்டுமின்றி அகத்தின் எண்ணங்களையும் நுட்பமாக வெளிக் கொணர்கிறார் சால்ட்டர். பாலுறவு பற்றிய விவரணைகளை விரைவாக கடந்து செல்லும் சால்ட்டர், அதன் முதல் படியான பாலியல் விழைவுக்கும், பாலுறவுக்கு பிறகான கணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தந்து, பாத்திரங்களின் உரையாடல்கள், மௌனங்கள், உடலசைவுகள், எண்ணவோட்டங்கள் மூலம் வாசகனுக்கு துல்லியமாக உணர்வுகளைக் கடத்துகிறார். ‘Charisma’ என்ற கதையில், விருந்தின் போது, 79 வயதான லூசனைப் பற்றி இரு மணமானப் பெண்கள் (அவர் வயதில் பாதிகூட அவர்களுக்கு இருக்காது என்று யூகிக்கலாம்) பேசும்,

“..Did he look old?”
“Yes, but you know, not that kind of old.”
“He’s had tons of affairs, hasn’t he? Fathered children left and right.”
“Is that true?”
“I heard that one of his girlfriends was fourteen years old. Her brother tried to kill him”.
“Fourteen, that’s a little too much.That’s still a child”
“I wonder how he would have met her”.
“Probably the daughter of a friend. He wanted her to model. And it took a long time and he was very attentive”

“How does he do it all?”

உரையாடலில், அவன் செயல்கள் குறித்து ஆர்வம், கொஞ்சம் கிசுகிசு, மென்மையான கண்டனம் ஆகியவை மேலோட்டமாக வெளிப்பட்டாலும், உண்மையில் அவன்பால் அவ்விரு பெண்களும் பாலியல் ரீதியாகக் கிளர்ந்திருக்கிறார்கள், அதை வெளிக்காட்டாமல், தாங்கள் உண்மையில் சொல்ல எண்ணுவதை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்து பேசுகிறார்கள் என்பதை வாசகன் உணர முடியும். எனவே உரையாடலின் இறுதியில்

“I’d fuck him though,” she said.
“You would?”
“In a minute.”
“I would, too”

என்று அவர்கள் சொல்வது எதிர்பார்த்த ஒன்றுதான். பாலியல் கிளர்ச்சியின் வெளிப்பாடு, அதன் எரோடிக் தன்மை, மின்னோட்டமாக இவ்வுரையாடலின் முதல் பகுதி போல் நுட்பமாகவோ அல்லது அதன் இறுதிப் பகுதி போல் நேரடியாகவோ சால்ட்டரின் கதைகளில் ஊடுருவி உள்ளது.

…someone who likes to rub words in his hand, to turn them around and feel them, to wonder if that really is the best word possible….” என்று ஒரு பேட்டியில் தன் எழுத்து முறை பற்றி சால்ட்டர் சொல்கிறார். வார்த்தைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து சொல்லமைப்பவர் அவர் என்பதை

“Outside, in the ordinary daylight, were the trees along the side of the property, the roof of a house, the lawn, some scattered toys. It was a landscape that seemed ominous, too idyllic, too still,” (‘Foreign Shores’) 

என்ற பத்தியில் பார்க்கலாம். ஒரு தெருவின் வீடுகள் அமைதியாக உள்ள ஒரு கணத்தின் சாதாரணச் சித்திரம்தான் இது. ஆனால் இவ்வரி வாசகன் மனதில் தோற்றுவிக்கும் பிம்பத்திற்கும், “in the ordinary daylight,” என்பதை நீக்கி விட்டு படித்தால் (அதை நீக்கினாலும் அவ்வரி முழுமையானதாகவே இருக்கும்) தோன்றும் பிம்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணரும் வாசகன் சால்ட்டரின் அழகியலை நெருங்குகிறான். ‘Last Night‘ கதையில் நோயுற்றிருக்கும் பாத்திரத்தின் நிலையை “She had a face now that was for the afterlife and those she would meet there,” என்று சால்ட்டர் குறிப்பிடுவதில் ‘afterlife‘ என்ற வார்த்தையின் முக்கியத்துவம் என்ன? நோயின் தீவிரத்தை உணர்த்த பல வார்த்தைகள் இருக்க இந்த வார்த்தை வாசகனின் மனதில் அப்பாத்திரம்/ அவரின் நோய் குறித்த சித்திரத்தை எந்த வகையில் உருவாக்குகிறது என்று யோசித்தால் அப்பாத்திரம் தன் இறுதிப் பயணத்தை தொடங்கியுள்ளதை இவ்வார்த்தை அளவிற்கு துல்லியாக உணர்த்துவது கடினம் என்று தெரிய வரும்.

salter_4

ஆனால் இவ்வழகியலை மறுதலிக்கும் விதமாக, தன் இறுதி நாவல் ‘All that is” குறித்த ஒரு பேட்டியில் “I was constantly hearing people talking about their favourite passages, a sentence they’d underlined 10 times. I don’t know that that’s what you read a book for. I began to feel it was a fault. I got tired of it,” என்று அவர் சொல்கிறார். 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில் தன்னைத்தானே கவனித்துக் கொண்டிருந்தவர் என்பதும், இறுதி வரை தன்னைப் புதுப்பிக்க நினைத்தவர் என்றும் அவரைக் குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது.

ஒரு சில வரிகளில், அதுவரை கதையின் மையம் இதுதான் என்று எண்ணியிருந்த வாசகனின் கோணத்தை மாற்றக் கூடியவர் சால்ட்டர். ‘Akhnilio‘ கதை ஃபென் (Fenn) அதிகாலை 3 மூன்று மணியளவில் விழித்துக் கொள்வதுடன் ஆரம்பிக்கிறது. ஏதோ ஓசை அவனை அழைப்பது போல அவன் உணர, நிலைகொள்ளாமல் அதைத் தேடி வீட்டை விட்டு வெளியேறுகிறான். கதையின் போக்கில் அவன் வாழ்க்கை குறித்து நாம் அறியவருவது , அவன் கேட்கும் ஓசை (‘It seemed he was the only listener to an infinite sea of cries‘) அவனுடைய உளமயக்கா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவனுடைய மனகொந்தளிப்பைப் பின் தொடரும் சால்ட்டர், அவன் வீதியெங்கும் அலைந்து திரிவதைச் சித்தரிக்கிறார். முழுதும் இருள் படர்ந்த வானம் சிறிது சிறிதாக மேகங்கள் கலைய தன் அடர்த்தியை இழந்து விண்மீன்கள் மெல்லிதாக துலங்க ஆரம்பித்து, புலரியின் முதல்வெளிர் நிற ஒளி தோன்றும்போது ஆயாசத்துடன் ஃபென் வீடு திரும்புகிறான். அகச்சூழலின் சித்தரிப்பு மட்டுமின்றி, புறச்சூழலின் சித்தரிப்பிலும் (The only galaxies were the insect voices that filled the night) சால்ட்டர் அடைந்த உச்சங்களில் இக்கதை ஒன்று.

ஃபென்னை அவன் மனைவி எதிர்கொண்டு என்ன ஆயிற்று என்று கவலையுடன் கேட்கிறாள். ஆனால் அவளுடைய ஆதூரம் அவனுடைய கொந்தளிப்பை அதிகரித்து, மீதமிருந்த சமநிலையையும் குலைத்து முற்றிலும் உடைந்து போகச் செய்கிறது. இங்கு கதை முடிந்திருக்கக் கூடும். ஆனால் அவனுடைய சிறு வயதுப் பெண்ணின் “…remembered from the years she was first in school when unhappiness filled the house and slamming doors and her father clumsy with affection came into their room at night to tell them stories and fell asleep at the front of her bed,” என்ற எண்ணவோட்டங்களுடன் கதை முடியும்போது, ஃபென்னிடம் மட்டுமே குவிந்திருந்த வாசகனின் மனம் அவனுடைய மனச் சிதைவு அவன் குடும்பத்தையும் பாதித்த/ பாதிக்கப் போகும் விதத்தையும் குறித்து கவலைப்பட ஆரம்பிக்கிறது. அவன் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து முதல் முறையாக யோசிக்க ஆரம்பிக்கிறான் வாசகன். தனிநபர் மன உளைச்சலைப் பற்றிய கதையை ஒரே ஒரு பத்தியில், சிதைவில் விளிம்பில் இருக்கும் குடும்பத்தின் சித்திரமாக சால்ட்டர் மாற்றி விடுகிறார்.

Last Night‘ கதையில் வால்டர் (Walter), சுசான்னாவுடன் (Susanna) தன் வீட்டில் அமைதியின்றி அமர்ந்திருக்கிறார். அவர்கள் அவர் மனைவி மேரிட்டுக்காக (Marit) காத்திருக்கிறார்கள். மேரிட்டு அறைக்குள் நுழைந்ததுமே அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லை என்று புலப்படுகிறது. “On a saucer in the refrigerator, the syringe lay” போன்ற இடங்களில் அது இன்னும் துலக்கம் கொள்கிறது. மெதுவாக அவிழும் நிகழ்வுகள் வாசகன் மனதைக் கூர்மை கொள்ளச் செய்கின்றன. மூவரும் உணவகத்திற்குச் செல்கிறார்கள், வழக்கத்திற்கு மாறாக விலை உயர்ந்த மது அருந்துகிறார்கள், இயல்பாக இருக்கிறோம் என்று காட்ட முயன்றாலும் சற்றே சங்கடமான உரையாடலே நிகழ்கிறது. வீடு திரும்பியப் பின் வால்டர் நடுக்கத்துடன் மேரிட்டுக்கு ஊசியை செலுத்துகிறார். இனி என்ன? இவர்கள் வாழ்வின் இன்னொரு அடுக்கு இப்போது தெரிய வருகிறது. வால்டருக்கும் சுசான்னாவுக்கும் தொடர்பு உள்ளது. அதை மேரிட் அறிந்திருந்தாளா? அதனால்தான் தன் இறுதி இரவன்று சுசான்னாவை அழைத்தாளா என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுடன் கதையை முடிக்காமல் சால்ட்டர் இன்னும் விரிக்கிறார். அடுத்த நாள் காலையில் படுக்கையறையில் இருக்கும் . வால்டருக்கும் சுசான்னாவுக்கும், அங்கு வரும் மேரிட்டைப் பார்த்து அதிர்ச்சி ஏற்படுகிறது. வால்டருக்கும், மேரிட்டுக்குமான உரையாடல்

“”Are you all right…
No, you must have done it wrong
….
I have to do it all over, Marit sobbed.
“I’m so sorry, he said..”

என்று செல்கிறது.

வால்டர் முதலில் கேட்கும் அபத்தமானக் கேள்வி, உயிர் தப்பியதைவிடவும் சென்ற இரவு முயன்றதை மீண்டும் முயல வேண்டுமே என்ற மேரிட்டின் சோகம், மீண்டும் வால்டரின் அபத்தமான மன்னிப்புக் கேட்டல் என்பதாக நீள்கிறது. வால்டர் கேட்கும் மன்னிப்பு தன்னை சுசான்னாவுடன் மேரிட் கண்டுகொண்டதால் கூட இருக்கலாம் இல்லையா? ஒரு பெண்ணின் இறுதி இரவு என்று வாசகன் முதலில் எண்ணுவது போல் இல்லாமல், சில உறவுகளின் இறுதி இரவைப் பற்றியதாகக் கதை முடிகிறது.

Eyes of the stars” கதை கணவனை இழந்த 60 வயதான டெட்டியின் (Teddy), பழங்கால நினைவுகளோடு ஆரம்பிக்கிறது. பிறகு 40களில் உள்ள, எதிர்பாராமல் நடிக்க வாய்ப்பு கிடைத்து சிறிது புகழ் அடைந்துள்ள கெக் (Keck), தன் தொழிலின் அந்திமக் காலத்தில் (ஆனால் இன்னும் புகழோடு) இருக்கும் நடிகை டெபோரா (Deborah) இருவரும் கதையில் முன்னிறுத்தப்படுகிறார்கள். யார் இக்கதையின் மையம் என உறுதியாகச் சொல்ல முடியாதபடி குறுக்கு வெட்டாக பார்வைக் கோணங்கள் மாறுகின்றன. இருந்தும், டெட்டியின் கடந்த காலம், தான் கற்பனை கூடச் செய்திராத புகழை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பும் கெக் (டெபோராவுக்கு தன்னிடம் ஈர்ப்பு உள்ளதை உணர்ந்தாலும் அவனால் குடும்பத்தை நினைவிலின்று அகற்ற இயலவில்லை), தன் திரைப்பட வாழ்வு முடிவுக்கு வருவதை எரிச்சல் கலந்த எள்ளலுடன் கடந்து செல்ல நினைக்கும் (You men get all excited by young girls…You haven’t met a real woman, that’s the difference) டெபோரா என மூன்று இழைகளும் தனித்துவமான மூன்று வெவ்வேறு மனவுலகுகளை உருவாக்குகின்றன.

79 வயதான லூசன் (Lucien) பற்றி இரு பெண்கள் பேசிக்கொள்வதாக ஆரம்பிக்கும் ‘Charisma‘, கதையை “Not far from there, amid the countless lights of other apartments at night, was the one that Leila Aaron shared with a roommate” என்ற ஒற்றை வரியுடன், பால் (Paul) என்பவனுடனான லைலாவின் (Leila) சந்திப்பு அவள் வாழ்வை எப்படி மாற்றுகிறது என்ற இழைக்கு மிக இயல்பாக கொண்டு செல்வதோடு, அதனூடேயே பாலின் வாழ்வு பற்றி சில துளிகளையும் வாசகனுக்களிக்கிறார். கட்டற்ற பாலியல் விழைவு என்பது லூசனையும் பாலையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது, ஆனால் லைலாவின் கதையைச் சொல்லும், பாலின் மறைவுக்குப் பின் அவன் கல்லறையைத் தேடி கண்டுபிடிக்க முயன்று “.. it was just like him to have eluded me, in death as in life..” என்று தோல்வியுறும் கதைசொல்லி யார், லைலாவா அல்லது அவனுடைய பழைய காதலிகளில் ஒருவரா என்ற கேள்வி எழுந்தாலும், கதையின் மைய இழையிலும்/ பார்வைக் கோணத்திலும் ஏற்படும் மாற்றங்கள், அவற்றில் உள்ள தெளிவின்மை வாசகனை அந்நியப்படுத்துவதில்லை.

இந்தப் பாணியில், வாசகனுக்கான எந்த குறிப்புணர்த்தலும், சுட்டுதலும் இல்லாமல் காலத்தில், பல பாத்திரங்களின் கோணத்தில், முன்பின்னாகச் செல்லக் கூடிய கதைகள் தனித்தனி கணங்களின் சிதறல்களாக தோற்றமளித்தாலும், அவற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் இயல்பாக இறுக்கிப் பூட்டிய தந்தி போல அமைந்து இனிய இசையை வாசகனுக்கு அளிக்கின்றன.

salter1-esquire

சால்ட்டர் பெண்களை உபாசனை செய்பவர் என்றும், அப்படி அல்ல வெறும் இச்சைக்கான பொருளாகவே அவர் கதைகளின் பெண் பாத்திரங்கள் பார்க்கப்படுகிறார்கள் என்றும் இரு தரப்பிலும் (‘devil’s advocate‘ ரோலில்) வாதிட முடியும். ‘Comet‘ என்ற கதையில் “.. youth burning through her clothes” என்று ஒரு 22 வயது யுவதியின் வர்ணனையையும்”She was still young enough to be good looking, the final blaze of it..” என்று இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் 35 வயதிற்கு மேல் இருக்கும் என்று யூகிக்கக் கூடியப் பெண்ணின் சித்தரிப்பையும் எடுத்துக் கொள்வோம். இது ஒரு கதையின் துளி என்பதும், இவ்விரண்டு சித்தரிப்பிலும் உள்ள அழகியலும் அதில் உள்ள நுட்பமான வேறுபாடும் (young enough to be good looking) ஒரு புறமிருக்க, சால்ட்டரின் கதைகளில் உள்ள பெண்கள் இப்படித்தான் ஆண்களால் எந்தளவுக்கு விரும்பப்படுவார்கள் என்ற தராசில் எடை போடப்பட்டு வகைப்படுத்தப் படுகிறார்கள் என்று வாதிட முடியும்.

பெண்களை அடைவதையே நோக்கமாகக் கொண்ட ஆண்கள் இவர்களை வெறும் சதைப் பிண்டமாகவே பார்க்கிறார்கள், கசையடி தருவது போன்ற பாலியல் பிழற்வுச் (fetish) செயல்களால் -அச்செயலுக்கு முற்றிலும் தயாராகாத – பெண்களை இழிவு செய்கிறார்கள். பிரிந்திருந்த மனைவியுடன் சேர்ந்த பின் தான் தொடர்பு வைத்திருந்தப் பெண்ணை எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆணால் உதறித்தள்ள முடிகிறது (‘Dusk‘). மகனை விபத்தில் இழந்து, கணவனும் பிரிந்து சென்ற பின், பற்றிக்கொள்ள கிடைத்த ஒரு உறவையும் இப்போது இழந்து, வேட்டைக் காலத்தில் (open season) ஒரு நாளன்று சுடப்பட்ட வாத்துக்கள் குறித்து “…lay one of them, dark sodden breast, graceful neck still extended, great wings striving to beat, bloody sounds coming from the holes in its beak,” என்று அப்பெண் எண்ணுவது வாத்துக்களுக்கு மட்டுமில்லாது நிராதரவாக இருக்கும் அவளின் சூழலுக்கும் பொருந்தும்.

ஆனால் இதற்கு எதிரான வாதத்திற்கான சான்றுகளையும் சால்ட்டரின் கதைகளில் இருந்தே கொடுக்க முடியும். இக்கதைகளில் பேராண்மை விழைவு (macho, hard boiled) கொண்டவர்களாக மட்டுமே இல்லாமல், மென்னுணர்வு கொண்டவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள். அதே ‘Comet‘ கதையில், இளமையின் இறுதித் தழல்கள் சூழ இருக்கும் அப்பெண்ணை அவள் கணவன் “…could have licked her palms like a calf does salt,” என்ற சித்தரிப்பிலும், “Arlington” கதையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடும் மனைவியைக் குறித்து “To put your hand on the small of her naked back was to have all you ever hoped to possess,” என்றும், அவளின் நம்பிக்கை துரோகம் குறித்து “He was loyal to her. It was one-sided, but that was enough,” என்றும் எண்ணுவதும், பெண்மைக்கு முன்னால் மண்டியிட்டு, தலைவணங்கி நிற்கும் ஆணையே காட்டுகின்றன.

ஆண்களின் கைக்கு சிக்காமல் எப்போதும் சற்று எட்டியே இருக்கும் தேவதைகள் போன்ற பெண்களும் இக்கதைகளில் உள்ளார்கள். ‘My Lord You‘ கதையில் மணமானப் பெண் ,எழுத்தாளர் ஒருவரின் வீட்டினுள் நுழைகிறார். யாரும் இல்லாத வீட்டில் அறை அறையாகச் செல்லும் அவர் அவ்வீட்டை தோட்டத்துடன் இணைக்கும் குளியலறைக்குள் நுழைகிறார். கண்ணாடியின் முன் நிற்கும் அவர், தன் மேலுடைகளை எந்த யோசனையோ/ காரணமோ இல்லாமல் கழற்றுகிறார். கதைக்குத் தொடர்புடைய நிகழ்வு இல்லை என்றாலும் இது உருவாக்கும் பெண்மையின் பிம்பம், கிளர்ச்சிக்கு மாறாக மூச்சடைக்க வைக்கும் திகைப்பையும், சிறிது அச்சத்தையும் ஒரு சேர உருவாக்கி அவரை அப்போது பார்ப்பவரை செயலற்றவராக ஆக்கக்கூடியது. வெளியே எங்கும் ஒளி சூழ்ந்த நிசப்தமாக இருக்க, அப்பெண் யாரும் அடையமுடியாத யட்சியைப் போல் அக்கணத்தில் அவ்வறையில் தோற்றம் கொள்கிறார்.

Palm Court‘ கதையில் வரும் ஆர்த்தர்(Arthur), நொரீனுடன் (Noreen) நெருங்கிப் பழகுகிறான். பிறகு அவள் தான் இன்னொருவனுடன் பழக ஆரம்பித்ததை சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்கிறான். ஓர் இரவு அவன் இல்லத்திற்கு வரும் நொரீன் தான் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அது குறித்து அவனுக்கு ஏதேனும் கருத்து உள்ளதா என்றும் கேட்கிறாள். அப்போதும் ஆர்த்தர் எதுவும் சொல்வதில்லை (இதே போல் ஒரு நிகழ்வு ‘The Remains of the Day‘ நாவலில் வருவதை இங்கு நினைவில் கொள்ளலாம்). பல்லாண்டுகள் கழித்து, இப்போது விவாக ரத்தான நொரீன் மீண்டும் அவனை சந்திக்க வருகிறாள். அவள் அவனுடன் மீண்டும் உறவேற்படுத்திக்கொள்ள நினைக்கிறாள் என்று தெரிந்தும், தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துள்ளதாக பொய் சொல்கிறான். இதைக் கேட்டு தன் கைகளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நொரீன் பிறகு அவனை நோக்கி புன்னகைக்கிறாள். தன்னை அவள் எப்போதும் புரிந்து கொள்வாள், எனவே மன்னிக்கிறாள் என்று அவன் எண்ணுகிறான். நெகிழ்வான காட்சி. அவளிடம் விடை பெற்று வருபவன், ஆர்த்தர் ஏன் பொய் சொன்னான்? வெளிக்காட்டாவிட்டாலும் அவள் மீது வஞ்சம் கொண்டிருந்தானா? “He thought of the love that had filled the great central chamber of his life and how he would not meet anyone like that again,” என அவன் இல்லத்திற்கு திரும்புகையில் யோசிப்பதில் இந்தக் கேள்விக்கான விடை இருக்ககூடும். நொரீன் குறித்த அவன் மனதில் உள்ள சித்திரத்தை பாழ்படுத்த விரும்பாமல் இருந்திருக்ககூடும், அதே நேரம் தான் இனி அடைய முடியாததின் துயரை எண்ணியே தன் இல்லத்திற்கு செல்லும் வழியில், வீதிலேயே உடைந்து அழத் தொடங்குகிறான். கதை முடிகிறது.

Give‘ கதை கதைசொல்லியின் திருமண வாழ்க்கை பற்றிய சித்தரிப்போடு (ஒருவர் தன் துணையிடம் பிடிக்காத குணத்தைப் பற்றி சண்டையிடுவதற்கு பதிலாக, அதைத் என்னிடம் தந்து விடு எனக் கேட்டு, அப்பழக்கத்தை விட்டொழிக்கும் விதத்தை கண்டுகொள்கிறார்கள்) அராஜக குணம் கொண்ட கலைஞன் என்ற வகை மாதிரி பாத்திரமான பில்லியுடனான (Billy) அவனுடைய நட்பு பற்றியும் சொல்கிறது. பில்லி இவர்களுடன் தங்க வருகிறான். கதையின் போக்கு இவ்வாறு இருக்கும் என வாசகன் யூகிக்க ஆரம்பிக்கும்போது, கதைசொல்லிக்கும், பில்லிக்குமான தன் பால் உறவை தந்து/ விட்டு விடுமாறு கதைசொல்லியின் மனைவி கண்ணீருடன் கேட்கிறார். கதைசொல்லி அதை மறுக்க, அப்படி எந்த உறவும் இல்லையென்றால் பில்லியை வீட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் என்று சொல்கிறாள். கதைசொல்லி இதை பில்லியிடம் கூறும்போது அவன் மனைவி பில்லியிடம் பேசவே விரும்பவில்லை என்று மிகைப்படுத்திக் கூறுகிறான். பில்லி அவர்களை நீங்கிச் செல்கிறான். மனைவிக்கும், தன் முதற் காதலனுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கதைசொல்லி எடுத்திருக்கக்கூடிய எந்த முடிவும் அவனுக்கும், மனைவி/ நண்பன் இருவரில் ஒருவருக்கும் துயரத்தையே கொடுத்திருக்கக்கூடும். கதைசொல்லி ஏன் பில்லியிடம் பொய் சொல்லவேண்டும், அவனுக்கே அவ்வுறவு சலித்து விட்டதா என்ற சந்தேகம் அவனைப் பிரிந்தபின், “I felt the injustice for a long time.. I followed him from afar, the way a woman does a man she was never able to marry,” என்று அவன் மருகும்போது நீங்கி விடும்.

மிக மென்னுணர்ச்சி கொண்டவர்களாக இருக்கும் இக்கதையின் கதைசொல்லி மற்றும் ஆர்த்தரை (‘Palm Court‘) மிக சோகையானவன் (wimp) என்றும் \கூட ஒருவர் இரக்கமின்றி சொல்லக் கூடும். முதல் பார்வையில் ஹெமிங்வேயின் பாத்திரங்கள் போல் தோற்றமளிக்கும் சால்ட்டரின் பாத்திரங்கள், அவற்றிலிருந்து நுட்பமாக வேறுபடும் இடம் இது என்று சொல்லலாம். ஆண்-பெண் உறவெனும் ஆடலில் ஒருவரையொருவர் காயப்படுத்திக்கொண்டே இருப்பதின் இரு பக்கங்களை உணர்த்துகின்றன எனவாறு இக்கதைககளை புரிந்து கொள்ளலாம்.

cover

பாலியல் விழைவுகள் பற்றிய இன்னொரு விபரீத பிழற்வையும் இவர் கதைகளில் காண முடிகிறது. “I want to be yours” என்று ஒரு மூன்று வயது பெண் குழந்தை தன் தந்தையிடம் சொல்வதாக வரும் – கதையின் (‘Platinum‘) போக்கிற்கு நேரடி தொடர்பில்லாத- உடனடியாக கடந்து செல்லப் படும் இடம் வாசகனை உறைய வைக்கும். இதே போல் ‘Bangkok‘ கதையில் குழந்தைகள் மீதான பாலியல் விழைவு குறித்தும், ‘Foreign Shores‘ கதையில் குழந்தைகள் பாலியலுக்கு பயன்படுத்தப்படுவது குறித்தும், ‘American Express‘ கதையில் 25-35 வயதில் இருக்கும் இளைஞன் பள்ளிச் சிறுமியை பாலுறவுக்காக வசப்படுத்துவது எனவும் சில சுட்டல்கள் (விரிவான சித்தரிப்புக்கள் அல்ல) உள்ளன. “Men’s dream and ambition is to have women, as a cat’s is to catch birds, but this is something that must be restrained,” என்று சால்ட்டர் ஒரு கட்டுரையில் சொன்னதாக மேற்கோள் காட்டப்படும் (மூலக் கட்டுரையின் சுட்டி இணையத்தில் கிடைப்பதில்லை) கூற்றின் பின்புலத்தில், இக்கதைகளில் உள்ளபாலியல் விழைவுகளை வாசகன் ஆராயக் கூடும்.

.. a thirst rose in him, a desire to be recognized. He was walking for the hundredth time on streets which in no way acknowledged him…” என்ற ‘Via Negativa‘ கதையின் போராடும் எழுத்தாளன் நைலின் (Nile) விழைவு சால்ட்டரின் புனைவுலகின் இன்னொரு பொது அம்சம். “There’s no greatness without fame” என்று அவருடைய “Light Years” நாவலில் Viri சொல்வதும், “All that is” நாவலில் Philip Bowman தேடுவதும் இந்த அங்கீகாரத்தையே. தன் காதலியின் வீட்டிற்குச் செல்லும் நைல் “Viking” பதிப்பகம் தன் எழுத்தில் ஆர்வம் காட்டியிருப்பதாக சொல்கிறான். காதலி அது குறித்து அதிகம் ஆர்வம் கொள்ளாமல், அதே நேரம் மறுதலிக்காமல் இருப்பதிலிருந்து இது அவன் தன்னையே ஏமாற்றிக்கொள்ளப் பயன்படுத்தும் யுத்தி என்றும், அவள் அதற்குப் பழகி, தான் அதை நம்பாவிட்டாலும் நைலுக்கு அதில் ஒரு மனநிறைவு கிடைத்தால் அதை ஏன் குலைக்க வேண்டும் என அமைதி காக்கிறாள் என்றும் யூகிக்க முடிகிறது. ஆனால் அந்த அமைதியே அவளுடைய எண்ணத்தை வெளிப்படுத்த நைல் மேலும் மேலும் பேசி அவளை நம்ப வைக்க முயன்றாலும், அவள் செயற்கையான ஆர்வத்தைக் காட்ட தயாராக இல்லை. இது நைலை நிலைகுலையச் செய்கிறது. அவள் வீட்டை விட்டு வெளியே சென்ற பின், பித்து நிலையில் வீட்டின் பொருட்களை நாசம் செய்து நைலும் வெளியேறுகிறான். இப்போது தெருக்களில் “They recognize me, he thought, they smell me in the dark like mares.” என அவன் எண்ண ஓட்டமே மாறுகிறது. இதுவும் அவனுடைய கற்பனைதான். காதலி வீட்டை நாசம் செய்தது கீழ்மையான செயல் தான் என்றாலும், கையறு நிலையின் வெளிப்பாடான அச்செயல் அவனுடைய மனச் சோர்வுக்கு ஒரு தற்காலிக வடிகாலாக உள்ளது என்பதும் உண்மையே.

Lost Sons” கதையில், பல்லாண்டுகளுக்கு முன் தான் இராணுவ பயிற்சி எடுத்த அணியின் உறுப்பினர் சந்திப்பிற்காக வரும் “Reemstma” மற்றவர்களால் நுட்பமாக – அவன் கேட்கும் கேள்விக்குப் மிகச் சுருக்கமான பதில், சில நேரத்தில் அதுவும் இல்லை, அவனுடைய தற்போதைய வாழ்க்கை சூழல் பற்றிய அக்கறையின்மை -உதாசீனப்படுத்தப்படுகிறான். அவனுடைய இராணுவ வாழ்க்கை பற்றி அவன் மனைவியே கூட அதிகம் அறிந்திருக்கவில்லை என்றும், அவளுக்கு அதில் விருப்பமும் இல்லை என்றும் தெரியவருகிறது (எனவே அவள் இச்சந்திப்பிற்கு வரவில்லை). கடந்த காலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளக் கூட யாருமில்லாத தனிமையில் உள்ள அவன் நிலைமை பரிதாபத்திற்குரியது. இப்போது அவன் ஓவியனாக உள்ளான் என்று தெரிந்தவுடன் அங்கு வந்துள்ள மற்ற ஆண்களின் மனைவிகள் அவனை வினோத ஜந்து போலப் பார்த்து “Do you make a living out of it?” என்று எங்கும் கலைஞர்களிடம் கேட்கப்படும் கேள்வியை அவனிடம் கேட்கிறார்கள். ஒரு பெண் அவனிடம் சற்றே அதிகம் கரிசனம் கட்டுவதாக என்னும் Reemstma அக்கரிசனம் விரிவது குறித்த கற்பனையில் ஈடுபடுகிறான். ஆனால் அவள், இவர்கள் அணியில் இப்போது புகழ் பெற்று இருக்கும் ஒருவனுடன் கூடுகிறாள் என்று சுட்டப்படுகிறது, அதை Reemstmaவும் உணர்கிறான்.

ஆணின் அங்கீகாரத்திற்கான வேட்கைக்கு, அவன் அடைந்ததாக எண்ணும் தோல்விகளுக்கு வடிகாலாக, பெண் (தன் கையாலாகாத்தனத்தை ஈடு செய்ய பெண்ணை அடைய நினைத்தல் / துன்புறுத்துதல்) தான் இரையாக இருக்க வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழுவது நியாயமே. அதே நேரம் அவள் விடைபெறும்போது “It was very nice meeting you” என்று சம்பிரதாயமாக சொல்லிச் சென்றதைக் கூட எண்ணிப்பார்த்து, அவள் உணர்வுப்பூர்வமாகவே அப்படிச் சொல்லி இருப்பாள் என்று நினைத்து ஆறுதல் கொள்ள முயன்று, அந்த ஒற்றை வரியில் நிறைவைத் தேடும் Reemstmaவின் தனிமை கொடுமையானதே.

சால்ட்டரின் கதைகளில் இருந்து வாசகன் பெற்றுக் கொள்வது என்ன?. ‘Bangkok‘ கதையில் கரோல் (Carol) ஹாலிஸை (Hollis) பார்க்க வருகிறாள். பல காலத்திற்குப் பின் அச்சந்திப்பு நிகழ்கிறது என்றும், அவர்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்து பிறகு பிரிந்தார்கள் என்றும் தெரிய வருகிறது. “She had been coming out of a restaurant one time, down some steps long after lunch in a silk dress that clung around the hips and the wind pulled against her legs. The afternoons, he thought for a moment,” என்று ஹாலிஸ் நினைவுகூர்கிறார். உணவு விடுதியில் இருந்து கரோல் வரும் காட்சிக்கு, எளிதில் கடந்து செல்லக் கூடிய பின்குறிப்பாக உள்ள “The afternoons, he thought for a moment,” என்ற வரி ஏன்? அவ்வரியில் ஹாலிஸின் அகக்கண்ணில் மட்டும் விரியும் காட்சிகள் – கண்ணாடி வழியே பொழியும் ஒளியினூடாக உணவு, மூடிய அறைகளின் சாளரங்களின் திரைச்சீலையினூடாக வரும் மெல்லிய ஒளியினூடாக மஞ்சத்தில் பாலுறவிலோ, மெல்லிய குரலில் பேசுவதிலோ ஈடுபடுவது – என எத்தனை மதியப் பொழுதுகள், அதை கவனிக்கத் தவறாத வாசகனின் அகத்திலும் தோன்றக்கூடும். தவற விட்டு விட்ட, இனி எப்போதும் மீண்டும் கிடைக்காத பல பொழுதுகள், துயரையும்/ இன்பத்தையும் சம அளவில் தோற்றுவிக்கும் அவற்றின் கணங்களை வாசகன் இந்தக் கதைகளில் இருந்து பெற்றுக் கொள்ளும்போது, தான் இழந்த இத்தகைய கணங்களையும் நினைவில் ஒளிரூட்டிக் கொள்வான். சால்ட்டரின் தலைப்புக்களின் வழி சொல்வதானால், ஒளியால் சூழப்பட்ட ஆண்டுகளின் (Light Years), அவியாக அளிக்கப்படும் நாட்களின் (Burning the days), எச்சமாக மிஞ்சுபவை (All that is) இக்கணங்கள்தான் இல்லையா?

குறிப்பு

James Salter is a magician” என்று ஜான் பான்வலும் (John Banville) “It is an article of faith among readers of fiction that James Salter writes American sentences better than anyone writing today” என்று ரிச்சர்ட் போர்டும் (Richard Ford) சால்ட்டர் பற்றி சொல்கிறார்கள். சால்ட்டர் குறித்த பல புகழுரைகள் இருக்க, எழுத்தின் இரு வேறு தளங்களில் இயங்கும் – பான்வல் போன்ற நடையாளரும் (stylist), போர்டு போன்ற கறைபடிந்த யதார்த்த (dirty realism) எழுத்தாளரும் – ஒன்று போல் சால்ட்டரை உயர்வாக மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகிறது. எனினும், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி எழுத்துலகிற்கு வந்து தன் 60 ஆண்டுகால எழுத்துப் பயணத்தில், 6 நாவல்கள், 2 சிறுகதை தொகுப்புக்கள் (20 சொச்சக் கதைகளே எழுதியுள்ளார்), நினைவுக் குறிப்பு நூல், மற்றும் பல அபுனைவு நூல்கள், திரைத்துறைப் பணி எனப் பலத் தளங்களில் இயங்கிய அவர் மைய நீரோட்டத்தின் கவனத்தைப் பெறவில்லை. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்பது போன்ற சொற்றொடர்களால் அவர் பாராட்டப்பட்டார்/விலக்கியும் வைக்கப்பட்டார். எழுத்தாளனின் வாழ்க்கையை அவன் புனைவில் தேடுவது அத்தியாவசியமானது இல்லையென்றாலும், அமரத்துவத்தை நாடும் அவர் பாத்திரங்களில் சால்ட்டரின் விழைவை உணர முடியும் என்று தோன்றுகிறது.

2013ல் வெளிவந்த அவருடைய இறுதி நாவல் ‘All that is‘ (அவருடைய மற்ற நூல்களுடன் ஒப்பீட்டளவில்) சற்றே பரவலான வெகுஜன கவனத்தைப் – நீங்கள் இதுவரை அறிந்திராத மிகச் சிறந்த எழுத்தாளர் போன்ற பாராட்டுரைகள்- பெற்றது அவருக்கு சற்று ஆறுதல் அளித்திருக்கக் கூடும். ஆனால் அதையும் அவர் சற்று அவநம்பிக்கையுடனேயே பார்த்துள்ளார்.

“Apparently, I have an audience, and this book is awaited.. “
“We’ll see what the truth of that is. I don’t want to get too excited about it one way or another. You can work yourself into a state of nerves: What did they say? What have you heard?”

என்று அவர் சொல்வது வெறும் அணிச் சொற்கள் அல்ல எனபதை ஒரு கட்டத்தில், எழுதுவதற்கான நம்பிக்கையை இழந்து, 6-7 ஆண்டுகள் எதுவும் எழுதாமலேயே இருந்ததாக அவர் குறிப்பிடுவதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உணர முடியும். தான் எதிர்பார்த்திராத இந்த வரவேற்ப்பைப் பற்றி கூட “It’s gratifying but a little unreal at the same time…The clothes feel a little loose on me, if you know what I mean.” என்று துயர அழகியலோடு சொல்ல அவரால் முடிகிறது. எனினும், அதில் முழுமையாகத் திளைக்க முடியாதவாறு 2015ல் அவர் காலமானது நகைமுரண் என்றாலும், காலம் கடந்தாலும் சிறிதளவேனும் தனக்கு அங்கீகாரம் கிடைப்பதை (அது கூட கிடைக்காத பலர் உள்ளனர் எனும் போது) அவர் கண்டார் எனபது சற்று ஆசுவாசமளிக்கிறது.

Dusk and Other Stories, Last Night என்ற அவருடைய இரு தொகுப்புக்களின் கதைகள் ‘Collected Stories‘ என்று ஒரே நூலில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்தலின் பின்னணியில் மானுடம் – Junot Diazன் Drown சிறுகதைத் தொகுப்பு, ஒரு பார்வை

அஜய் ஆர்

தந்தையில்லாத குடும்பங்கள், ஒருதலைக் காதல், காதல் தோல்வி, போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அமெரிக்காவின் கெட்டோ (Ghetto) வாழ்க்கை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம்மைத் தகவமைத்துக் கொள்ள முயற்சி செய்யும் புலம்பெயர்ந்தோர், தாயகத்தில் (டொமினிகன் ரிபப்ளிக்) அநாதரவாய் விட்டு வரப்பட்ட குடும்பங்கள் – 1996ல் வெளியான ஜூனோ டியாஸின் ஆச்சரியமளிக்கும் முதல் சிறுகதைத் தொகுப்பான “Drown”ல் உள்ள கதைகள் பெரும்பாலும் இவற்றைப் பேசுகின்றன.

மூன்றாம் உலக நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்தல் என்பது பொதுவாக இப்படி நிகழ்கிறது: பெரும்பாலும் கணவன் அல்லது சில சமயம் மனைவி முதலில் ‘பொன்னுலகு’ செல்கின்றனர்; அங்கு ஒரு பணியில் சில காலம் இருந்தபின் அவரது குடும்பத்தினர் அவரைத் தொடர்கின்றனர். ஆனால் எல்லாருக்கும் இப்படி நடப்பதில்லை. குறிப்பாக, white-collar அல்லாத எளிய, முறைசாரா வேலைகளுக்காக புலம் பெயர்பவர்களுக்கு நல்வாழ்வு எளிதாக அமைவதில்லை. ‘பொன்னுலகு’ வந்தடையும் வெற்றியின் களப்பலியாக உறவுகளே உள்ளன. கணவன் காணாமல் போகிறார், அல்லது இன்னொரு பெண்ணோடு அமெரிக்காவில் குடும்பம் நடத்த ஆரம்பிக்கிறார்; இறுதியில், வேலைப் பளுவில் தன் சுயத்தை இழந்து புது உறவிலும் ஒட்ட முடியாமல் தன்னையே தொலைக்கிறார். எதுவாகினும், அவரது மனைவியோ அம்மாவோ குடும்பப் பொறுப்பைத் தாய்நாட்டில் தனியாளாய்ச் சுமக்க நேர்கிறது. பிள்ளைகள் தகப்பனில்லாமல் வளர்கிறார்கள். எல்லா இடத்திலும் இருப்பது போல், எப்போதும் பெண்களே அதிக துயருக்குள்ளாகிறார்கள்.

குடும்பத்தில் “இல்லாத அப்பா” இந்தக் கதைகளில் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறார், அதே போல் அம்மா அல்லது மனைவி குடும்பச் சுமையை ஏற்பதும் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. தந்தை இல்லாததால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் மட்டுமல்ல, அதனால் ஏற்படும் மன அழுத்தத்தையும் டியாஸ் விவரிக்கிறார். தந்தை எங்கிருக்கிறார் என்பதை மனைவி அறிந்திருப்பதில்லை, ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறது. அவர் திரும்பி வருவாரா அல்லது காணாமல் போனது போனதுதானா என்ற அச்சுறுத்தும் கவலையோடு மனைவி வாழ வேண்டியதாகிறது. சில கதைகளின் குழந்தைகள் இது எதையும் புரிந்து கொள்ளாத பச்சிளம் பாலகர்களாய் இருக்கின்றனர். அப்பா தம்முடன் இல்லாததன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்றாலும் தந்தையில்லாமல் வளர்வதால் ஏற்படும் தழும்புகள் அவர்களின் உள்ளத்தில் நிரந்தரமாய் தங்கவே செய்கின்றன. நிதிநிலை மிகவும் மோசமாகும்போது, குடும்ப நிலவரம் முன்னேறும்வரை வேறு இடத்தில் இருக்கட்டும் என்று அம்மா தன் குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அனுப்புகிறார். குழந்தைகள் மிகவும் சிறு வயதினராய் இருந்தாலும்கூட இதிலுள்ள அவமானத்தை யாரும் சொல்வதற்கான அவசியமில்லாமலே உணர்கின்றனர் – தன்னை வளர்க்க முடியாமல் வேறொரு குடும்பத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்பது யாரையும் காயப்படுத்தவே செய்யும். தன் குடும்பத்துடன் வசிப்பதில் உள்ள இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. உறவினர்கள் முழு மனதோடு வரவேற்றாலும்கூட அவர்களோடு ஒட்ட முடியாமல் இருப்பதை குழந்தைகள் தம் விருப்பமின்மைகளால் வெளிப்படுத்துகின்றனர்.

இந்தக் கதைகளில் உள்ள பெண்கள் பலரும் நேரடியாகப் பேசப்படுவதில்லை. மகன்களின் பார்வையினூடாக, டியாஸின் குறிப்புணர்த்தல்களைக் கொண்டுதான் நாம் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண் கதைசொல்லிகளின் கோணத்தில்தான் பெண்களை நாம் காண்கிறோம் என்றாலும் அவர்கள் பரிவுடனேயே அணுகப்படுகிறார்கள்.

இந்தப் பெண்கள் பன்னிரெண்டு மணி நேரம் நீளும் பணிகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் வசிப்பதால், உடன் பணிபுரிபவர்களை வீடு வரை துணைக்கு வரும்படி அழைக்கிறார்கள், ஆனால் அந்த ஆண் நண்பர்களை வீட்டினுள் வரச் சொல்லி அழைப்பதில்லை. தாய்நாட்டில் இருக்கும் இப்பெண்கள், பொதுவாக வெளிநாடு சென்றுவிட்ட தங்கள் கணவன் போல் வேறு உறவை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. கடல் கடந்து சென்ற கணவனுடனான உறவை அவன் இல்லாவிட்டாலும் பேணுவதில் உறுதியாக உள்ளார்கள். தன் குழந்தைகளால் (வீட்டிற்கு கொண்டு விடும்) இன்னொரு ஆணை முகமறியா/ முகம் மறந்த தந்தையின் இடத்தில் வைத்துப் பார்க்க முடிவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். சில சமயம் திரும்பி வந்து அவர்கள் அனைவைரையும் அழைத்துச் செல்வதாக கணவனிடம் இருந்து ஒரு கடிதம் வருகிறது, ஆனால் அவர் மட்டும் வருவதேயில்லை. அவ்வப்போது கணவன் எழுதும் கடிதம் கிடைக்கும்போது அவன் வருகை குறித்து உருவாகும் நம்பிக்கை, பின் காலம் செல்ல அது மெல்லக் குலைவது, பிறகு இன்னொரு கடிதம், மீண்டும் அதே நச்சுச் சுழற்சி என இவர்களின் வாழ்க்கை நம்பிக்கைக்கும்/அது குறித்த சலிப்பிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

முன்னொரு காலத்தில் இவர்கள் இப்போதிருப்பதைவிட மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை உணர்த்தும், இனி மீண்டெழ முடியாத கடந்த காலத்தின் இனிய நினைவுகளாக/ சாட்சியங்களாக மட்டுமே உள்ள பழைய புகைப்படங்கள் விவரிக்கப்படுகின்றன. தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் தாய் என்ன செய்வார் என்பதை கதைசொல்லி,

“We could never get Mami to do anything after work, even cook dinner, if she didn’t first sit a while in her rocking chair. She didn’t want to hear about our problems, the scratches we’d put onto our knees, who said what. She sat on the back patio with her eyes closed and let the bugs bite mountains onto her arms and legs.”

என்று விவரிப்பது அப்பெண்களின் தாள இயலாத வேலைப் பளுவைப் பற்றிய மறுக்க முடியாத குற்றச்சாட்டாகும்.

தகப்பன் இல்லாத குடும்பத்தை தனியொருத்தியாக வழிநடத்த வேண்டியிருப்பதாலும் தன் பணியின் இயல்பினாலும் களைத்துப் போன ஒரு பெண்ணை இங்கு காண்கிறோம். வெளிவேலையின் களைப்பிலிருந்து மீண்டு எழவும், தனக்காகக் காத்திருக்கும் வீட்டு வேலைகளுக்கு ஆயத்தம் செய்து கொள்ளவும் அவளுக்குத் தனிமையான சில கணங்கள் – வாழ்வின் இரக்கமற்ற நிதர்சனங்களிலிருந்து தற்காலிக விடுவிப்பு அளிப்பவை மட்டுமே இவை- தேவைப்படுகின்றன. தன் வாழ்வைத் தொடர இந்தத் தனிமையும் அதன் மௌனமும் அவளுக்கு ஊட்டமளிப்பதாக இருக்க வேண்டும். அதனால்தான் தான் மட்டும் என்று தனித்திருக்கும் தனக்கேயுரிய தனிமையின் விலைமதிப்பற்ற அந்தக் சிறு கணங்களில் பூச்சிக்கடிகள்கூட தொல்லையாக இல்லாத அளவுக்கு தன் மனதை உள்நோக்கிக் குவித்துக் கொள்கிறாள்.

மனைவி, குழந்தைகளின் கோணம் ஒரு பக்கமென்றால் தொகுப்பில் உள்ள ‘Negocios’ கதையில் ஒரு தந்தையின் அலைகழிப்புக்கள் நிறைந்த வாழ்க்கையை அவர் மகன் மூலம் அறிகிறோம். முதலில் நாம் அவர் சிகாகோ வருவதைப் பார்க்கிறோம், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறார். அதன்பின் அவர் அங்கிருந்து நியூ ஜெர்ஸிக்கு பொதுப் போக்குவரத்தில் செல்லக் காசில்லாமல் வழியில் செல்பவர்கள் தம் வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள் என்று கருணையை நம்பிக் கிளம்பி, இறுதியில் பெரும்பாலான தூரத்தை நடந்தே கடக்கிறார். ஓராண்டு காலம் தினமும் 20 மணி நேரம் வேலை செய்வதில் அவர் பூகோள ரீதியாக மட்டுமின்றி, மனதளவிலும்கூட தன் தாயகத்தை விட்டு வெகு தொலைவு வந்து விடுகிறார். வேறொரு பெண்ணை மணம் புரிந்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் அவர் தன் முதல் குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்யாமல் அப்படியே அனாதரவாய் விட்டுவிடுகிறார். பின்னர் தன் இரண்டாம் குடும்பத்தை விட்டுவிட்டு முதல் குடும்பத்துக்கு திரும்புகிறார், இறுதியில் அவர்களையும் பிரிகிறார். அவரது மகன், (அல்லது கதைசொல்லியைக் கொண்டு டியாஸ்) இவரது செயல்களை ஏற்றுக் கொள்வதுமில்லை, நியாயப்படுத்துவதும் இல்லை. மாறாய் அப்பா ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று புரிந்து கொள்ள மட்டுமே முயற்சி செய்கிறான். தன் வாழ்க்கைச் சூழலின் கடினத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அலைந்து திரிந்தாரா, அல்லது இயல்பாகவே அவர் எங்கும் நிரந்தரமாய் தங்கியிருக்கக்கூடிய சுபாவம் இல்லாதவரா? குடியேறிகளுக்கு என்று விதிக்கப்பட்ட வாழ்வு அவரது நிலைகொள்ளாமைக்கு உதவும் பல பாதைகளைத் திறந்து கொடுப்பதாக இருந்தது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?.

இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் இரு தளங்களில் இயங்குகின்றன. முதலாவது, கதையின் மையக் கருப்பொருள். டியாஸ் போகிற போக்கில் தொட்டுக் காட்டுவதோடு நிறுத்திக் கொள்ளும் மற்றொரு கதை இரண்டாம் தளத்தில் இயங்குகிறது. டியாஸ் சொல்லாமல் சொல்லும் இந்தக் கதை கவனமற்ற வாசிப்பில் தவறவிடப்படலாம்.

‘Fiesta, 1980’ என்ற கதை இதற்கு ஒரு உதாரணம். மேம்போக்கான வாசிப்பில், தன் அப்பாவின் வேனில் செல்லும்போதெல்லாம் தொடர்ந்து வாந்தி எடுக்கும் கதைசொல்லி, அவனது அத்தை அமெரிக்காவில் குடியேற்றம் பெற்றதைக் கொண்டாட குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் பயணத்தைப் பற்றிய கதை என்றுதான் நாம் புரிந்து கொள்வோம். ஆனால் சிதைவின் விளிம்பில் உள்ள ஒரு குடும்பத்தையும் இதனூடே சித்தரிக்கிறார் டியாஸ். தன் அப்பாவின் ஆசைநாயகியைப் பற்றியும் அவளைத் தான் சந்தித்தது பற்றியும் சொல்கிறார் கதைசொல்லி. ஆனால் அப்பாவின் கள்ளக் காதல் விவகாரம் குறித்து கதைசொல்லியின் அம்மாவுக்குத் தெரிந்திருந்ததா இல்லையா என்பது பற்றி எதுவும் எழுதுவதில்லை. இருப்பினும், அம்மா அதை அறிந்திருந்தும் தன் குழந்தைகளுக்காக விருப்பமில்லா மண உறவில் நீடிக்கிறாரா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. கதைசொல்லியும் அவனது சகோதரனும் சிறுவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு கள்ளக்காதல் விவகாரம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறது, அம்மாவிடம் அது பற்றி அப்பாவித்தனமாய் எதுவும் உளறிக்கொட்டி விடாமல் ஜாக்கிரதையாக இருந்து குடும்பத்தை உள்ளபடியே காப்பாற்ற உதவும் அளவுக்கு அவர்களுக்கு முதிர்ச்சியிருக்கிறது. எனவே அவர்களை அறியாப் பருவத்தினர் என்று சொல்ல முடியாது. புது நாடு, புது உலகம், புது வாழ்க்கை முறை இவர்களை மிக விரைவிலேயே பெரியவர்களாக்கி விடுகிறது.

குழந்தைகள் விளையாட்டு போல் வன்முறையில் ஈடுபடுவது இரு கதைகளில் வெளிப்படுகிறது. இரண்டிலும் ஒரு சிறுவன் இருக்கிறான், அவனது முகம் குழந்தைப் பருவத்தில் ஒரு பன்றியால் அவலட்சணப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது- அதனால் அவன் எப்போதும் ஒரு முகமூடி அணிந்திருக்கிறான். பிற சிறுவர்கள் அவன் மீது கற்களை எறிந்தும் சீண்டிப் பார்த்தும் அவனது முகமூடியை அகற்றப் பார்த்தும் வதைக்கிறார்கள்- பொதுவாக அவர்களுக்கு அவன் வேடிக்கைப் பொருள், அவர்களுக்கான பொழுதுபோக்கு. சிறுவர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் என்பதை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நினைவுபடுத்தும் கதைகள் இவை.

‘புலம் பெயர்ந்தவர்களைப்’ பற்றிய கதைகள் என்றவுடன் தாய்நாடு X புலம் பெயர்ந்த நாடு, கலாச்சாரம்X அ-கலாச்சாரம், அமெரிக்கர்கள் ஒழுக்கமற்றவர்கள் போன்ற எளிய குறுக்கல்களை (உ.ம் நம் வெகுஜன இதழ்களில் காணக்கூடிய, குறிப்பாக அமெரிக்கா பற்றிய கதைகள்) டியாஸ் செய்வதில்லை. ஆம், இப்பாத்திரங்கள் தங்கள் தாய்நாடு குறித்து ஏங்குகிறார்கள், அது இயல்பான ஒன்றே. அதே நேரம் அங்குள்ள சூழலையும், எதனால் தாங்கள் இந்நாட்டிற்கு வந்தோம் என்பதையும் அவர்கள் மறப்பதில்லை. தாய்நாடு குறித்த விதந்தோதல்கள் இக்கதைகளில் இல்லை, நேரடியாகச் சொல்லாவிட்டாலும் டொமினிகாவின் அரசமைப்பை/ பொருளியல் சூழலை, இவர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கான காரணிகளைச் சுட்டும் சித்திரத்தை சில கதைகளில் டியாஸ் தருகிறார்.

‘Drown’ கதை டொமினிகாவின் சமூக/ பொருளியல் சித்திரத்தை அளிக்கும் அதே நேரத்தில், இன்னொரு தளத்தில் எது நடந்தாலும், ஒரு சில (பொருத்தமற்ற) சமூக விழுமியங்களுக்கு – அவற்றுக்கு ஒப்பாவிட்டாலும்- உட்பட்டு இருக்கும் அதே வேளையில், வேறு சில சமூக விழுமியங்களை எந்த முரண்பாட்டையும் உணராமல் எளிதாக மீறுவதையும் பேசுகிறது.  இதன் கதைசொல்லி போதை மருந்து விற்கும் சிலல்றை வியாபாரி, அடுத்த கணம்/ நாள் பற்றிய பெரிய கவலைகள் எதுவும் இன்றி, இக்கணத்தில் வாழ்பவன். அவனது நண்பன் பீடோவுக்குதான் தன் வாழ்க்கை குறித்து திட்டங்களும் இலட்சியங்களும் இருக்கின்றன. பீடோ தற்பால் விழைவு கொண்டவன். கதைசொல்லியும் அப்படிப்பட்டவனாகவோ, அல்லது இருபால் விழைவு கொண்டவனாகவோ, அல்லது இது குறித்த வெறும் ஆர்வம் கொண்டவனாகவோ மட்டும் இருக்கலாம். பீடோவின் சமிக்ஞைகளை அவன் நிராகரிப்பதில்லை. ஆனால் லத்தின் அமெரிக்காவுக்கே உரிய பேராண்மைக் கலாசாரம் (machismo), அவன் தன் உணர்வுகளை பூசி மெழுகவும் இருவரின் நட்புறவில் விலகல் உருவாகவும் காரணமாகிறது. போதை மருந்து பழக்கம், அதை விற்பது இவை குறித்து எந்த தயக்கமும் இல்லாத கதைசொல்லி தற்பாலினன் ஒருவனின் நண்பனாகக் காணப்படுவது/சுட்டப்படுவது தன் பேராண்மை குறித்து மற்றவர்கள் சந்தேகம் கொள்ளச் செய்யும் என்று கவலைப்படுவது ஒரு முரண்நகைதான். இருவரில் பீடோதான் நல்ல வாழ்க்கை வாழப் போகிறான், ஆதர்ச குடிமகனாக இருக்கப் போகிறான். கதைசொல்லியின் வாழ்க்கை அவனைச் சிறைக்கோ அல்லது படுகொலைக்கோ கொண்டு செல்லப் போகிறது என்பதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லை- பீடோவின் வாழ்வுமுறையோடு ஒப்பிடும்போது பேராண்மை கொண்ட ஒருவனாகப் பார்க்கப்படுவதுதான் அவனது சமூக விழுமியங்களுடன் ஒத்துப் போவதாக இருக்கிறது. உலகொழுக்கு இவ்வாறே உள்ளது.

‘Aurora’ என்ற கதையும் மனமுறிவு/ ஒருதலைக் காதல், காதல்வயப்பட்டவர்கள் ஒருவரையொருவர் துன்புறுத்திக் கொள்வது என – போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவனால் சொல்லப்படும் அக உணர்வுகளின் பதிவாக ஒரு புறமிருக்க, மறுபுறம் அந்நாட்டில் போதையின் பிடியில் சீரழியும் இளைஞர்களின் சித்திரமாகவும் உள்ளது. கதைசொல்லியின் கிறக்கத்தில் மூடிய கண்களினுள் தெரியும், அவன் வாழ்வின் உடைந்த, வண்டல் நிகழ்வுகளையும், காட்சிகளையும் அதே மங்கலான வெளிச்சத்தில் பயணம் செய்து காணும் வாசகன், அப்பயணம் கதைசொல்லியினுள் உருவாக்கிய/ உருவாக்கும் அதே உணர்வுகளைத் தானும் உணர்கிறான்.

இந்தக் கதையில் சிதிலமடைந்த பண்ணை வீடுகள் (haciendas), அடைத்துக்கொண்ட கழிவறைகள், எங்கும் வாந்தி, வாசல் அறையில்கூட மலம் என்று கழியும் வாழ்வைப் பார்க்கிறோம்- கதைசொல்லிக்கு ஆரோராவுடன் காதலும் வெறுப்பும் கலந்த உறவு இருக்கிறது. இருண்ட பண்ணை வீட்டிற்குள் தட்டுத் தடுமாறி அலைவதைக் குறித்து, “I go from room to room, hand out in front of me, wishing that maybe just this once I’ll feel her soft face on the other side of my fingers instead of some fucking plaster wall” என்று கதைசொல்லி குறிப்பிடுவது அவனும் அரோராவும் நடைபிணங்கள் (Zombie) போல் வாழும் அன்றாட வாழ்வின் தடுமாற்றப் பாதையை முழுமையாய் விவரிப்பதாகவும்கூட இருக்கலாம். நல்லது ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அவர்களின் பாதை சுய அழிவுக்கே கொண்டு செல்கிறது. சொல்லிக்கொள்ள எதுவும் நல்லதாக இல்லாத ஒரு தேசத்தை நோக்கிய குற்றச்சாட்டாகவும் இந்தக் கதை இருக்கிறது. இந்தத் தொகுப்பின் – கதைமாந்தர்கள் ஏன் எப்படிப்பட்ட ஆபத்துகளையும் எதிர்கொண்டு புலம்பெயர விரும்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. எது நடந்தாலும் சரி, தம்மைச் சிறைப்படுத்தும், சிறுமைப்படுத்தும் நரகத்திலிருந்து வெளியேற விரும்புகிறார்கள் இவர்கள். அமெரிக்க வாழ்வில் அவர்களது எதிர்பார்ப்புகள் பொய்ப்பது வேறு விஷயம்.

எப்படியோ புலம் பெயரும் இவர்களுக்கு அமெரிக்காவில் கிடைக்கும் வாழ்க்கையை ‘Edison, New Jersey’ என்ற கதையில் பார்க்கிறோம். புலம்பெயர்ந்த கதைசொல்லி, பொருள் வாங்கியவர்களின் வீட்டில் மேஜைகளை பொருத்தும் முதுகொடிக்கும் வேலை செய்பவர். வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டிற்குப் இரண்டு மூன்று முறை சென்றாலும், யாரும் கதவைத் திறப்பதில்லை. வீட்டினுள் ஒரு கறுப்பினப் பெண் இருக்கிறாள் என்றும் அவள் பணிப்பெண்ணாக இருக்கக் கூடும் என்பதும் மட்டும் தெரிகிறது. இறுதியில் அவர்களை உள்ளே அனுமதிக்கும் அப்பெண், அங்கிருந்து வெளியேற விரும்புவதாகக் கூறுகிறாள், தன் முதலாளி குறித்து வசைச் சொல் ஒன்றை வீசுகிறாள். அவளும் கதைசொல்லியின் நாட்டைச் சேர்ந்தவளே. மேஜையை பொருத்தி முடித்த பின் கதைசொல்லி அவளை வேறொரு இடத்தில் இறக்கி விடுகிறார். அவள் குறித்து அவருக்கு சந்தேகமாகவே உள்ளது. அதற்கேற்ப ஓரிரு வாரங்களில் அவள் மீண்டும் அந்த வீட்டிற்கே வந்து விட்டாள் என்பதை தெரிந்து கொள்கிறார். அவள் எதற்காக கதவைத் திறக்கக்கூட அச்சப்பட வேண்டும், அது அச்சமா அல்லது பிறரைப் பார்க்கக்கூட பிடிக்காத மனநிலையா? எதுவாகினும் அதற்குப் பின்னால் உள்ள காரணம் துயரமானதாகத் தான் இருக்கக் கூடும். மீண்டும் அவள் அந்த வீட்டிற்கு திரும்பி வந்ததும் பல கேள்விகளை எழுப்புகிறது. அமெரிக்கா எனும் மாய உலகு தன்னுள் உள்ள அனைத்து கசப்புக்களைத் தாண்டியும் இவர்களை மீண்டும் மீண்டும் ஈர்க்கிறதா அல்லது தங்கள் தேசத்தின் துயர்களை விட இங்குள்ள துயர்களை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது என்ற எண்ணமா? எனில் இவர்களுடைய சூழல் அங்கு எத்தனை துயர் மிக்கதாய் இருந்திருக்க வேண்டும்?

கருப்பொருள் காரணமாக இந்தக் கதைகள் ஒரே களத்தில் பயணித்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் புதியதாய், தனித்துவம் கொண்டதாய் மாறும் ரசவாதத்தை பாத்திரங்களுக்கிடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளும், டியாஸின் எழுத்து நடையும் நிகழ்த்துகின்றன. அவரின் உரைநடை ஏற்ற இறக்கங்கள் கொண்ட ஒரு பாடலாய் ஒலிக்கிறது. அதன் தாளகதிக்கு ஒரு இசைத்தன்மை உண்டு. டொமினிகன் ரிபப்ளிக்கின் வெயிலையும் புழுதியையும் விவரிப்பதாகட்டும், அதன் குறுகிய கெட்டோக்களைச் (Ghetto) சித்தரிப்பதாகட்டும், அதன் காப்பி தோட்டங்கள், கடல் (“the surf exploding into the air like a cloud of shredded silver”) என்று கரிபியன் உயிர் பெறுகிறது. போதையின் பிடியில் இருக்கும் கதைமாந்தர்களின் பகுதிகளும் கலங்கல் தன்மை கொண்டிருக்கின்றன. கதைகளில் அதிக அளவில் ஸ்பானிஷ் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதும் அதன் இசைத் தன்மைக்கு உதவுகிறது. மிகச் சுலபமாக, எந்த பிரயத்தனமும் இல்லாமல் இதையெல்லாம் செய்கிறார் டிசாஸ். தனக்கென தனித்துவக் குரலை முதல் நூலின் கதைகளிலேயே அவர் கண்டடைந்து ஆச்சரியமான ஒன்று.

இவற்றை புலம்பெயர் கதைகள், டொமினிகா நாட்டினவர் பற்றியவை என்று மட்டும் குறுக்குவது சரியான ஒன்றாக இராது. புலம்பெயர்தல் அல்லாத வேறு காரணங்களால் சிறு வயதிலேயே தந்தை இல்லாத குடும்பமாக, மற்ற உறவுக்கார குடும்பங்களை அண்டி இருக்க வேண்டிய நிலையில் உள்ள பெண்களை/ சிறுவர்களை, அவர்களின் மன விகாசங்களை யுவனின்/அமியின் உலகிலும், கணவன்/ காதலன் வருவான் என்று ‘நடனத்துக்குப் பின்’ காத்திருக்கும் லாராவையும், சில்வியாவையும் நாம் அறிவோம். ஒரு பெரும் இழப்பின் சோகத்தைச் சுமந்து கொண்டிருக்கும் இந்தியத் தம்பதியரைப் பற்றிய ஜூம்பா லஹிரியின் (Jhumpa Lahiri) ‘A Temporary Matter’ கதையை இந்திய புலம் பெயர்ந்தவர்களின் கதை என்று மட்டும் குறுக்க முடியுமா என்ன? ஒரு நாட்டின், அதன் மக்களின் பிரத்யேகச் சமூக/ பொருளாதாரச் சூழல், அவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் என தனித்துவம் கொண்டதாக இருப்பதோடு மானுடத்தின் உலகளாவிய வாதையைப் பேசுவதால், இக்கதைகளை வாசகன் இதுவரை அறிந்திராத, புதிதான ஒன்றாக உணரும் அதே நேரத்தில் அவற்றின் உணர்வுச் சரடுகளுடன் தன்னை இயல்பாக பிணைத்துக் கொள்ளுமளவிற்கு அணுக்கமாகவும் உணர்கிறான்.

பின்குறிப்பு:

இந்த முதல் தொகுப்பிற்குப் பின் ஒரு நாவல் மற்றும் இன்னொரு சிறுகதைத் தொகுப்பை டியாஸ் வெளியிட்டுள்ளார். Drown தொகுப்போடு இணைந்தும் விலகியும் செல்லும் இந்த இரு நூல்களும், புலம்பெயர்ந்தவர்கள் பற்றி பேசுவதுடன் உலகளாவிய தன்மை கொண்டுள்ளன.

‘The Brief Wondrous Life of Oscar Wao’ நாவல், பெண்ணின் நேசத்திற்காக ஏங்கும் – எத்தனைப் பெண்களை கவர்கிறார்களோ அதற்க்கேற்ப மதிக்கப்படுவர் என்ற லத்தீன் அமெரிக்க ஆண்களின் பேராண்மை (machismo) கலாச்சாரத்தைப் (அல்லது அப்படி பொதுப்பரப்பில் உருவாகியுள்ள தோற்றத்தைப்) பற்றிய பகடியாகவும் கொள்ளத்தக்க – மிகவும் பருமனான Oscar Waoவின் மென்னுணர்வுகள் பற்றிய நாவலாக இருப்பதோடு, Dominica தேசம் அதன் சர்வாதிகாரி ‘Rafael Trujillo’ ஆட்சியில் நசுக்கப்பட்டதன் இலக்கிய சாட்சியமாகவும் உள்ளது. (அதே காலகட்டத்தைப் பற்றி பேசும் Mario Vargas Llosaவின் ‘The Feast of the Goat’ நாவலையும் இத்துடன் இணைத்து வாசிக்கலாம்). இந்நாவல் அடிக்குறிப்புகளை உபயோகித்துள்ள முறையில் , David Foster Wallaceஐ நினைவுபடுத்துவதும் சுவாரஸ்யமான ஒன்று. அத்துடன் வடிவ உத்திகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அவர் விழைவையும் உணர்த்துகிறது.

அவருடைய அண்மைய சிறுகதை தொகுப்பான ‘This Is How You Lose Her’ ஆண்- பெண் உறவில் நேர்மையைப் பேண முயலுதல்,அதில் பெரும்பாலும் தோல்வி அடைதல், தாய்- மகன்/ சகோதர உறவு , இவற்றின் உள்ளூடாக பொதுவாக எந்த உறவைப் பேணுவதிலும் உள்ள சிக்கல்கள் /சிரமங்கள் குறித்த கேள்விகளை/ சிந்தனைகளை புலம்=பெயர்ந்தவர்களின் பிண்ணனியில் எழுப்புகிறது.

ஒளிப்பட உதவி – Junot Diaz

‘நவீன தேவதைக் கதைகள் 2 – ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber’ சிறுகதைத் தொகுப்பின் நவ யுக தேவதைகள்’

அஜய் ஆர்

இளவரசியால் முத்தமிடப்பட்ட தவளையும் (‘Frog Prince‘ கதையின் மூலப் பிரதியில் இளவரசி தவளையை தூக்கி எறிவதாக வருகிறது), அழகியின் கண்ணீரில் நனையும் Beastம் ராஜகுமாரனாக தங்கள் நிஜ உருவைப் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளை தேவதைக் கதைகளில் நாம் அடிக்கடி காண முடிகிறது. பிறகு ராஜகுமாரன் இளவரசியை/ ஏழைப்பெண்ணை மணந்து கொள்ள, அனைவரும் சந்தோஷமாக வாழ்வதாக முடியும் கதைகளில், இளவரசியோ ஏழையோ பொதுவாக பெண்தான் தன் கனவுகளை அடைவதாக, அவளே அதிர்ஷ்டசாலி என்ற கற்பிதம், வெகுஜனப் பிரக்ஞையில் உள்ளது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? இளவரசி முத்தமிடாமலோ/ தூக்கி எறியாமலோ, அல்லது Beauty கண்ணீர் சிந்தாமலோ இருந்திருந்தால், ராஜகுமாரர்களுக்கு விமோசனமே கிடைத்திருக்காது அல்லவா? எனில், இந்தக் கதைகளில் அதிக நன்மை அடைந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் யார் என்ற கேள்வி எழுகிறது. ஆண்/ பெண் இருவருமே நன்மை அடைகிறார்கள் என்றும், ஆணுக்குச் சமமான, அவர்களுக்கு மீட்சியளிக்கும் சக்தியாக, பெண்ணும் இருக்கிறாள் என்றும் சொல்வதே சரியானதாக இருக்கும். இத்தகைய காக்கும்/ அழிக்கும் சக்தி பெற்ற பெண்களை ஆஞ்செலா கார்டரின் ‘The Bloody Chamber‘ சிறுகதைத் தொகுப்பின் சிலக் கதைகளில் பார்க்கிறோம்.

Beauty and the Beast‘ கதையின் மறு ஆக்கமான ‘The Courtship of Mr Lyon‘ கதையில், அழகி தன் தந்தை செய்த தவறுக்காக பீஸ்ட்டின் இருப்பிடத்தில் வசிக்க வேண்டியுள்ளது. அவள் அது குறித்து முதலில் அச்சுறுவது இயல்பான ஒன்று. ஆனால் ‘பீஸ்ட்’, அவள் மடியில் தலை புதைத்து கைகளை முத்தமிட்டபின் வெட்கி ஓடுவது, தன் தந்தை வீட்டிற்கு அவள் திரும்பும்போது அவள் கண்களைச் சந்திக்க இயலாமல் பாதங்களில் தலையைப் புதைத்துக் கொள்வது என அவன் அழகி மீது கொண்டுள்ள உணர்வை வழிபாடு என்றே சொல்லலாம். (as if he himself were in awe of a young girl). “Do not think she had no will of her own; only, she was possessed by a sense of obligation to an unusual degree and, besides, she would gladly have gone to the ends of the earth for her father, whom she loved dearly.” என்ற உணர்வோடு அங்கு வசிக்கும் அழகியை விட, பீஸ்ட்டே தப்பிக்க முடியாத/ விரும்பாத சூழலில் இருப்பவனாகத் தெரிகிறான்.

தேவதைக் கதைகளின் மறு ஆக்கமாக இல்லாதிருந்தாலும், அந்த வகைமையின் சிலக் கூறுகளைக் கொண்ட ‘The Lady of the House of Love’ மற்றும் ‘Wolf-Alice‘ கதைகளிலும் ஆணை காப்பாற்றும் பெண்மையைக் காண்கிறோம். முதல் கதையில், இளைஞர்களை உண்டு பசியாறும் இரத்தக் காட்டேரியான (vampire) சீமாட்டியின்/ Countess) மாளிகைக்கு ராணுவத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவன் வருகிறான். தன் வாழ்க்கை முறையை வெறுக்கும் அந்தச் சீமாட்டி தனக்கு விதிக்கப்பட்டதைத் தாண்டி செல்ல இயலாமலும் இருக்கிறாள். இளைஞன் அவள் மீது (அவள் காட்டேரி என்று அறியாமல்) கரிசனம் கொள்கிறான். அவனை பள்ளியறைக்கு அழைத்துச் செல்லும் சீமாட்டிக்கு விரலில் காயம் ஏற்பட்டு உதிரம் வெளிவர, இளைஞன் அதை முதலில் கைக்குட்டையால் துடைத்தும் பிறகு விரலை உறிஞ்சியும் / முத்தமிட்டும் அவளைத் தேற்ற, அவனது\ களங்கமின்மை, இறுதியில் சீமாட்டி அவனைக் கொல்லாமல், தன்னைத் தானே அழித்துக்கொள்ளச் செய்கிறது. இளைஞன் கன்னித்தன்மையை இழக்காதவன் என்பதால், ‘கன்னிமை’ பெண்களுக்கு மட்டும் தான் பாதுகாப்பு என்பது ஆணுக்கும் பொருந்தலாம் என்று ஆஞ்செலா சுட்டுகிறார் என்றும் கருதலாம்.

ஆணால் அணைக்கப்படுவது வரை ஒன்றுமறியாதவர்களாக/ உணராதவர்களாக இல்லாமல் அவர்களுக்குள் இயல்பாகத் தோன்றும் பாலியல் விழைவுகள், அது ஏற்படுத்தும் ஆர்வம் – அவற்றால் ஆபத்து ஏற்பட்டாலும், அதைக் கடந்தால் அடையக் கூடிய பரவசம் குறித்த எதிர்பார்ப்பு – குறித்தும் பதின் பருவம் அல்லது அதன் வாசலில் நிற்கும் இந்தக் கதைகளின் சிறுமிகள்/ யுவதிகள் தெளிவாக உள்ளார்கள். தேவதைக் கதைகளில் இதற்கு இடமிருக்கக் கூடும் என நாம் எண்ணிக் கூட பார்த்திராத, ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையே உருவாகி அவர்களைச் சுற்றிப் படர்ந்து மூச்சடைக்க வைக்கும் ‘sexual tension’ இந்தக் கதைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று தன் இருப்பை, பாத்திரங்களுக்கும் வாசகனுக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

Red Riding Hood கதையை மறு ஆக்கம் செய்யும் ‘The Company of Wolves‘ல் வரும் சிறுமிக்கு/ பதின்பருவத்தின் வாசலில் இருப்பவளுக்கு, இளைஞன் உருவத்தில் வருவது ‘ஓநாய்’ தான் என்று தெரிந்து விடுகிறது. காட்டிற்குள் வேறு பாதையில் அழைத்துச் செல்வதாக அவன் கூறுவது ஆபத்தில் முடியும் என்றாலும், அவனுடன் செல்கிறாள். அவள் பாட்டியின் வீட்டிற்கு யார் முதலில் செல்கிறார்கள் என்ற பந்தயத்தை முன்வைத்து, தோற்றால் என்ன தருவாய் என அவன் கேட்க, அவன் என்ன கேட்பான் என்று தெரியாத அப்பாவி போல் என்ன வேண்டும் என்று கேட்கும் (அவன் முத்தம் வேண்டுகிறான்) சிறுமி வேண்டுமென்றே பந்தயத்தில் தோற்கிறாள். அவளுக்கு முன் பாட்டி வீட்டிற்கு சென்று அவரைப் புசித்து காத்திருக்கும் இளைஞனைக் கண்டு பயம் கொள்ளாமல் (she knew she was nobody’s meat) அவனை அணைத்துக் கொள்கிறாள். நடுநிசியில் அவன் கைகளுக்கிடையில் அச்சிறுமி உறங்குவதோடு முடியும் கதை எழுப்பும் கேள்விகளும், அதற்கான விடைகளும் பல. “between the paws of the tender wolf” அவள் உறங்குவது அவனை அவள் அடக்கி விட்டால் என்பதைக் குறிக்கிறதா?. ”nobody’s meat‘ என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

Beauty and the Beast‘/ The Courtship of Mr Lyon கதைகளின் இன்னொரு மறு ஆக்கமான ‘The Tiger Bride‘ கதையிலும் ஆபத்தும் பரவசமும் முயங்குவதைப் பார்க்கிறோம். அருகில் வரும் சிங்க மணமகன், ‘He will lick the skin off me!’ என்று தெரிந்திருந்தும் அதை அனுமதித்து And each stroke of his tongue ripped off skin after successive skin, all the skins of a life in the world, and left behind a nascent patina of shining hairs. My earrings turned back to water and trickled down my shoulders; I shrugged the drops off my beautiful fur“, என்று முடியும் ‘The Tiger’s Bride‘ கதையிலும் சரி, ”The Bloody Chamber‘ புது மணப்பெண் ஆடிகள் சூழ்ந்த அறையில், கணவன் தன்னை நோக்கி வர, (பல) கணவன்(கள் நெருங்குவதாக கற்பனை செய்வதும், அவன் செயல்களை “He in his London tailoring; she, bare as a lamb chop. Most pornographic of all confrontations.” என்று (அவன் குறித்த சில சந்தேகங்களையும்) உணர்ந்தாலும், அதை எதிர்நோக்கும் ஆவலிலும் சரி, தங்களின் பாலியல் விழைவு தரக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அதைக் கம்பீரமாகக் கொண்டாடும் பெண்ணையே பார்க்கிறோம்.

Erl-king’ என்ற நாட்டுப்புற/ தேவதைக் கதையான ‘The Erl-King‘ல் காட்டில் வாழும் – இளம் பெண்களை வசீகரித்து பறவைகளாக மாற்றும் – அமானுஷ்யப் பிறவியுடன் தெரிந்தே சேர்கிறாள். ஆனால் தன் சுயத்தை இழக்க விரும்பாமல் அவனை இறுதியில் கொன்றும் விடுகிறாள்.

ஒரு எளிய நிகழ்வை விவரிக்கும் வாக்கியத்தில் கூட, அதன் ஒரு வார்த்தையை, அது உணர்த்துவதை, உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தை எளிதில் கடந்து விடச் செய்யும் ஆஞ்செலாவின் அடர்த்தியான உரைநடை கவனமான வாசிப்பைக் கோருவது . ‘The Lady of the House of Love‘ கதையில் சீமாட்டியின் கிராமத்தை விவரிக்கும் போது “A cat prowls in a weedy garden; he grins and spits, arches his back, bounces away from an intangible on four fear-stiffened legs.” என்று ஆஞ்செலா எழுதுகிறார். இதில் intangible என்று ‘உணர/ விளக்க முடியாத’ என்ற அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைக்கு பதில் unknown, invisible போன்ற வார்த்தைகளைப் பொருத்தி அதே வாக்கியத்தைப் படித்தால் வரும் உணர்வு கண்டிப்பாக வேறு தான். ‘intangible’ என்பது கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.

சிங்க மணமகன் கதைசொல்லியை நெருங்கும் “A tremendous throbbing, as of the engine that makes the earth turn, filled the little room; he had begun to purr. The sweet thunder of this purr shook the old walls, made the shutters batter the windows until they burst apart and let in the white light of the snowy moon. Tiles came crashing down from the roof; I heard them fall into the courtyard far below. The reverberations of his purring rocked the foundations of the house, the walls began to dance. I thought: ‘It will all fall, everything will disintegrate‘, இறுதிக் காட்சியில் tremendous throbbing‘,’ everything will disintegrate‘ போன்றப் பதங்கள் வரப்போகும் ஆபத்தை சுட்டுவதாக மட்டும் தோன்றினாலும் , ‘The Bloody Chamber‘ கதையிலும் புது – அதுவரை பாலுறவு கொள்ளாத – மணப்பெண் தன் கணவனுடன் இரயிலில் அவன் கோட்டைக்குச் செல்லும் போது, தனித்தனியே படுத்திருக்க, அவள் உணர்வுகளோடு, அங்கும் இரயிலின் துடிப்பு/ throbbing குறிப்பிடப்படும்போது, இந்த இயந்திர/அக்றிணை இயக்கங்களையும் கதைசொல்லி பெண்ணின் பாலியல் விழைவுகளின் பிரதிபலிப்பாகவும் கொள்ளலாம் இல்லையா.

The Lady of the House of Love‘ கதையில், இளைஞன் விழிக்கும் போது அவன் சீமாட்டியுடன் வந்த பள்ளியறை பற்றி The shutters, the curtains, even the long-sealed windows of the horrid bedroom were all opened up and light and air streamed in; now you could see how tawdry it all was, how thin and cheap the satin, the catafalque not ebony at all but black-painted paper stretched on struts of wood, as in the theatre. The wind had blown droves of petals from the roses outside into the room and this crimson residue swirled fragrantly about the floor, என்று ஆஞ்செலா விவரிக்கிறார். வெளிச்சம் வீசும் அறை என்பது பொதுவாக மகிழ்வான மனநிலையோடு பொருந்தக்கூடியது. ஆனால் வெளிச்சத்தில் இரத்தக் காட்டேரிகள் அழிந்து விடுவார்கள் என்ற தொன்மத்தின் படி, சீமாட்டியோ தன் உயிருக்கு ஆபத்து அளிக்கக்கூடியது என்பதால் வெளிச்சத்தை முற்றிலும் தவிர்க்கிறார். எனில் வெளிச்சம் உள்நுழைந்தது எப்படி, சீமாட்டி ஏன் அறையில் இல்லை? எதுவும் சொல்லப்படாமலேயே நமக்குப் புரிகிறது. சீமாட்டி இளைஞனுக்கு ஊறு விளைவிக்க விரும்பாமல், தன்னை அழித்துக் கொள்ளும் விதமாக வெளிச்சத்தை உள்ளே அனுமதித்திருப்பார். இப்போது வெளிச்சம் புத்துணர்வூட்டுவதாக இல்லாமல், துயரத்தின்/சீமாட்டியின் காதலின் (கரிசனத்தின்) சுமையைக் கொண்டதாக மாறுகிறது.

தேவதைக் கதைகளை மறு ஆக்கம் செய்யும் போது, அதை பழங்காலத்திலேயே அமைப்பதோ அல்லது நவீன காலத்தில் அமைப்பதோ நடக்கிறது. இந்தக் கதைகளின் காலகட்டம் பொதுவாக 18ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 19ஆம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி என சில கதைகளில் யூகிக்க முடிந்தாலும், முன்பொரு காலத்தில் நடந்தவை என்றோ, தற்காலத்தில் நடப்பவை (கார், இரயில் பற்றிய குறிப்புகள் ஓரிரு கதைகளில் உள்ளன ) என்றோ ஆஞ்செலா வெளிப்படையாக சொல்வதில்லை என்பதால் இவற்றில் காலம் குறித்த துல்லியமான ‘பிரக்ஞை’ இல்லை. அதே நேரம், ‘The Bloody Chamber’ கதையில் வருவது போல் ஒரு கோட்டையை (castle)

Sea; sand; a sky that melts into the sea–a landscape of misty pastels with a look about it of being continuously on the point of melting
And, ah! his castle. The faery solitude of the place; with its turrets of misty blue,
………….his castle that lay on the very bosom of the sea with seabirds mewing about its attics,
……, evanescent departures of the ocean, cut off by the tide from land for half a day …
that castle, at home neither on the land nor on the water, a mysterious, amphibious place, contravening the materiality of both earth and the waves, with the melancholy of a mermaiden who perches on her rock and waits, endlessly, for a lover who had drowned far away, long ago. That lovely, sad, sea-siren of a place!

என்று விவரித்து கதைகளின் புறச் சூழலை அவர் உருவாக்கும் போது, காலம் குறித்த பிரக்ஞை முக்கியமானதாகத் தோன்றுவதில்லை. எளிதில் பிரித்தறிய முடியாதப்படி பழங்காலமும்- நிகழ்காலமும் தொட்டுச் செல்லும் வினோத காலத்திற்குள் வாசகன் எளிதில் நுழைவதோடு, இயல்பாக தன்னை அதில் பொருத்திக் கொள்ள முடிகிறது.

ஓரிரு படிமங்கள் பல கதைகளில் எடுத்தாளப்பட்டுள்ளன. நாவால் தோலை/ உடலை வருடுவது/ சுவைப்பது அப்படிப்பட்ட ஒன்று. ‘Wolf-Alice’ கதையில் காயமடைந்த ட்யூக்கின் (Duke) உடலை நாவால் வருடி ஆற்றுப்படுத்தினால், ‘The Tiger Bride‘ கதையில் அது காமத்தில் உச்சகட்டமாக உள்ளது. பெண்ணின் மடி மீது ஆண்/ மிருகம் தலைவைப்பது காதலின்/ சரணடைவதின், இணைவின் அடையாளமாக சில கதைகளின் இருந்தால் (The Courtship of Mr Lyon, The Company of Wolves), ‘The Erl-King‘ கதையில், கதைசொல்லி தன்னை மயக்கி பறவையாக மாற்ற நினைப்பவனைக் கழுத்தை நெரித்துக் கொல்ல வழி செய்கிறது.

ஆடிகளில் விழாத பிம்பங்களோடு, ஆடிகளை நிறைத்துப் பெருகும் பிம்பங்களும் இந்தக் கதைகளில் உள்ளன. ‘Wolf-Alice‘ கதையில் வரும் பதின்பருவப் பெண் ஆடியில் தன் பிம்பத்தைப் பார்த்து முதலில் திடுக்கிடுவதையும் , அப்பிம்பத்தைத் தன் தோழியாக பிறகு எண்ணுவதையும், கதையின் தலைப்போடு ஒப்பிட்டுப் பார்ப்பது சில புரிதல்களைத் தரக்கூடியது.

அடர் சிவப்பு ரோஜாக்கள், அவற்றின் முள் பதிந்து வெண்பனியில் சிந்தும் உதிரம், வாடிய செடிகளுக்கிடையே பூத்திருக்கும் ஒற்றை வெள்ளை ரோஜா, காற்றில் எங்கும் நிறைந்திருக்கும் -மனதை மயக்கும் – ரோஜாக்களின் நறுமணம் என ரோஜாக்கள் பல கதைகளில் (தன்னை அழித்துக்கொள்ளும் சீமாட்டி இளைஞனுக்கு விட்டுச் செல்வதும் ஒரு ரோஜா மலர் தான்) குறிப்பிடப்படுவது, தேவதைக் கதைகளில் பல இடங்களில் தென்படும் ரோஜாக்களுக்கு ஆஞ்செலா செலுத்தும் அஞ்சலி என்பதோடு அவை பாரம்பர்ய தேவதைக் கதைகளின் உணர்வு நிலையை இந்த நவீன கதைகளிலும் உருவாக்குகின்றன.

பல முறை பார்த்துப் பழகிய ஓவியத்தை புதிய கோணத்தில் பார்க்கும் போது அதுவரை கவனிக்கத் தவறியவை தென்படுவது போல, ஏற்கனவே அறிந்திருந்தக் கதைகளைப் பற்றிய – பெண்மை/ பெண்மையின் பாலியல் விழைவு ஆணை அரவணைக்கும் அதே நேரம் அச்சுறுத்தும் ஆற்றலும் கொண்டது – என்ற கோணத்தை (இதில் ஆணும் பெண் போலவே விருப்பு/ பயம் என்ற இரட்டை நிலையில் உள்ளான்) , தேவதைக் கதைகளின் இயல்பான கனவுத் தன்மையை காவு கொடுக்காத உரைநடையோடு, நவீன தேவதைகள் ஆளும் உலகை உருவாக்குவதால் இந்தத் தொகுதி இத்தகைய மறு ஆக்க கதைகளில் தனித்துவமான இடத்தைக் கொண்டுள்ளது.

பின்குறிப்பு:

மூலப் பிரதியில் செய்யப்பட்ட மாற்றங்களால் சற்றே நீர்த்துப் போன தேவதைக் கதைகளின் பிரதிகளே அதிகம் படிக்கப்படுகின்றன. (Frog Prince கதை ஒரு உதாரணம்). Grimm சகோதரர்களின் தொகுக்கப்பட்ட தேவதைக் மூல கதைகளுக்கு அணுக்கமானவை என்று இரு தொகுப்புக்கள் பொதுவாகக் குறிப்பிடப்படுகின்றன.

The Complete Grimm’s Fairy Tales – Pantheon Edition.

Jack Zipes தொகுத்து சென்ற ஆண்டு வெளிவந்த The Original Folk and Fairy Tales of the Brothers Grimm:The Complete First Edition, இதுவரை வெளிவந்தவற்றுள், மூலத் தொகுப்பை சிதைக்காத, அதற்கு மிக நெருக்கமான தொகுப்பாக கருதப்படுகிறது.

(தொடரும்)

தொடர்புடைய பதிவு – நவீன தேவதைக் கதைகள் சில

Ian McEwan – On Chesil Beach – நேசத்தின் விலை

அஜய் ஆர்

cover1

திருமணம் முடித்த கையோடு தேனிலவு கொண்டாட கடலோர விடுதிக்கு வந்திருக்கும் இளம் தம்பதியரான எட்வர்ட் (Edward)/ ப்ளாரன்ஸ் (Florence) இரவு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேனிலவு அறையின் நிசப்தம், உணவைப் பரிமாறும் இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருப்பதால் தரையில் உண்டாகும் கீச்சிடும் சப்தம், அந்த இளைஞர்கள் எதாவது நமுட்டுச் சிரிப்பை உதிர்க்கிறார்களா என்ற எட்வர்ட்டின் கவனித்தல், உணவிற்குப் பின் கடற்கரைக்கு நடை செல்ல வேண்டும் என்ற அப்போதைய திட்டம் முதல், அவர்கள் மண வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் – இசைத்துறையில் ப்ளாரன்ஸ் செய்ய வேண்டியவை, எட்வர்ட்டின் பணி, இருவரின் நண்பர்கள் – என்பது வரை போதையேற்றுகிற பல கனவுகளை அவர்கள் – “heaped up before them in the misty future” – கொண்டுள்ளார்கள்.

ஆனால் அனைத்தையும் விட அவர்கள் இருக்கும் அறையிலிருந்து, அவர்கள் பார்வையின் ஓரத்தில் தெரியும் மென்மையான, தூய வெள்ளை நிறத்திலான விரிப்பைக் கொண்ட படுக்கை தான் அவர்களை மனதை முழுதும் ஆக்கிரமித்து, அவர்கள் வருங்காலத்தை மூடுபனியால் போர்த்திருக்கிறது. திருமண தினத்தின் உற்சாகத்தை சற்றே வடியச் செய்யும், அன்றைய இரவைக் குறித்த இயல்பான பதற்றம் அல்ல இது என்பதும், அவர்கள் நுழைய உள்ள மூடுபனியில் ஒருவரை ஒருவர் தவற விட்டு, பாதை மாறி, வருங்காலத்தை இழக்கக் கூடும் என்பதும் விரைவில் வாசகனுக்கு சில விவரிப்புக்கள் மூலம் புரியவருகிறது (Sex with Edward could not be the summation of her joy, but was the price she must pay for it, என்று ப்ளாரன்ஸ் எண்ணுகிறாள்)

திரும்பி வர முடியாத புள்ளியை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும் இந்தத் தம்பதியர் வாழ்வின் ஓர் இரவை, அவ்விரவின் சம்பவங்களோடு, கடந்த காலத்தையும் மெக்கீவன் கலக்கிறார். இது ஒரு சிறு/நெடுங்கதையாக முடித்திருக்கக் கூடியதை நாவலாக நீட்டிப்பதற்கு செய்யும் யுத்தி மட்டுமே அல்ல.

1960களின் ஆரம்பத்தில், உலக அரங்கில் இங்கிலாந்து தன் இடத்தை இழந்து கொண்டிருப்பதை, அப்பேரரசின் சூரியன் அஸ்தமனமாகத் தொடங்குவதை நம்ப/ புரிந்து கொள்ள முடியாமல் கவனித்துக் கொண்டிருக்கும் இரண்டாம் உலகப் போரில் போரிட்ட மத்திய வயதுடைவர்கள், இவர்களுக்கு நேர்மாறாக அப்போது குழந்தைகளாக இருந்து இப்போது 20களில் இருப்பவர்களின் அணுசக்தி எதிர்ப்பு போன்ற கொள்கைகள் (இங்கிலாந்தைப் பொருத்தவரை) ஒரு யுகத்தின் முடிவிற்கு) சாட்சியாக இருக்கிறாகள்.

ப்ளாரன்ஸ் /எட்வர்ட்டின் சந்திப்பு, குடும்பப் பின்னணி, இருவருக்குமிடையே உள்ள வித்தியாசங்கள் ( ப்ளாரன்ஸ் மேற்கத்திய செவ்வியல் இசை பயின்றவர்/ நிகழ்த்துபவர், எட்வர்ட் ‘ராக்’ இசை கேட்பவர்) போன்றவற்றின் சித்தரிப்புக்கள் அவர்கள் தங்கள் திருமண இரவன்று வந்தடைந்துள்ள இடத்திற்கான பாதையை விளக்குகிறது.

60களின் ஆரம்பம் என்பதால் பாலியல் குறித்த உரையாடல்கள் சாத்தியம் இல்லை என்று ஒற்றைப்படையாக இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாது. இது குறித்த உரையாடல்கள் எப்போதுமே எளிமையானவை அல்ல இல்லையா? மனதில் உள்ளதை வெளிப்படுத்த முடியாமல் இருப்பது, அதனால் ஏற்படும் தவறான புரிதல்கள்/ எதிர்பார்ப்புக்கள் தம்பதியரிடையே பிரச்சனைக்கு காரணமாகிறது. ப்ளாரன்ஸ் நான்கு பேர் கொண்ட மேற்கத்திய செவ்வியல் இசையை நிகழ்த்தும் குழுவின் அறிவிக்கப்படாத தலைவியாக இருக்கிறாள், அந்த ஆளுமை அவளுக்கு இயல்பாக உள்ளது. அதை கவனிக்கும் எட்வர்ட்டால், அத்தகைய ஆளுமை உடைய பெண் பாலுறவு குறித்த வெறுப்பு கொண்டிருப்பாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், இருவரும் நெருங்கும் கணங்களில் அவளின் தயக்கத்தை/ விலகலை நாணமாகவே கருதி, திருமணத்திற்குப் பின் சரியாகி விடும் என்று நம்புகிறான். இறுதி வரை, இத்தகையத் தவறானப் புரிதல்கள் நீடிக்கின்றன. திருமண இரவன்று அவளை முத்தமிடும் போது, ப்ளாரன்ஸ் குமட்டல் ஒலி எழுப்ப அப்போதும் கூட அதை அவளின் எழுச்சியின் வெளிப்பாடாகவே தவறாகப் புரிந்து கொள்கிறான்.

இருவரின் கூச்ச உணர்வோடு, திருமணம்/ உடலுறவு, பாலிய இயங்குவியல் குறித்த சமூக கற்பிதங்களும் அவர்களைத் தங்கள் தயக்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதிலிருந்து தடுக்கின்றன. திருமணத்திற்குப் பின் ஆணுக்கு உரியதான பெண் உடல் என்று பதிந்துள்ளதால், இறுதி வரை ப்ளாரன்ஸ் தன்னிடம் ஏதோ பெரிய குறைபாடு உள்ளதென்றும், அனைத்துமே தன்னுடைய தவறு தான் என்றுமே எண்ணுகிறாள். அதுவே அது குறித்து பேச மேலும் தடையாக உள்ளது. திருமண நிச்சயத்திற்குப் பின்னான, திருமணம் வரையிலான பல மாத இடைவெளியில், உடல் சார்ந்த நெருக்கத்தை ப்ளாரன்ஸ் தவிர்ப்பது அவனைத் துன்புறுத்தினாலும், அதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் பொறுத்துக் கொள்ளுமளவுக்கு அவனுள் நேசம் உள்ளது. உடலுக்கு உரியவன் என்று சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டாலும், அதற்கான தகுதி தன்னிடம் உள்ளதா என்ற (இயல்பான) சந்தேகமும் எட்வர்ட்டை ப்ளாரன்ஸ்ஸின் தயக்கத்தை அப்போதைக்கு கடந்து செல்ல வைக்கிறது, அதுவே இறுதியில் வினையாகி விடுகிறது.

நேரடியாக சொல்லாவிட்டாலும், ப்ளாரன்ஸ் சிறுவயதில் மிக நெருங்கிய உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதுவே அவளின் வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்பதற்கான சில மங்கலான தடயங்களை நாவலெங்கும் மெக்கீவன் விட்டுச் செல்கிறார். ப்ளாரன்ஸ்ஸின் உணர்வுகளோடு இது சரியாகப் பொருந்தினாலும், அவள் பாத்திரத்திற்கு மேலும் அழுத்தம் கூட்ட திணிக்கப்பட்ட தகவலாகவும் இது உள்ளது. யூகமாகக் கூட எதையும் சுட்டாமல் பாலியல் குறித்த தேவையற்ற கற்பிதங்கள் கொண்ட வெகுளிப் (sexually naive) பெண்ணாக மட்டுமே அவரைச் சித்தரித்து – நாவலின் ஓர் இடத்தில், புதுமணப் பெண்களுக்கான கையேடு ஒன்றைப் வாசிக்கும் ப்ளாரன்ஸ் அதில் வரும் ‘penetration’ என்ற வார்த்தையை கத்தியால் பிளக்கப்படும் வலியாக உருவகிக்கிறார்- இருந்தால் அப்பாத்திரத்திற்கு வேறொரு பரிமாணம் கிடைத்திருக்கக் கூடும்.

சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதில்லை என்றோ அதன் விளைவுகள் வாழ்க்கை முழுதும் அவர்களைத் தொடர்வதில்லை வாட்டுவதில்லை என்றோ இங்கு சொல்ல வரவில்லை, அப்படி எந்த துயர நிகழ்வையும் எதிர்கொள்ளாத எத்தனையோ பேருக்கும் உள்ள பாலியல் குறித்த குழப்பங்களை முன்வைத்து இந்தப் பாத்திரத்தை உருவாக்கி இருக்கலாம். இரண்டிற்குமே சாத்தியங்களை நாவலில் வைத்துள்ளதால் தான் பாலியல் துன்புறுத்தல் குறித்து தெளிவாக சொல்லாமல் வாசகனின் யூகத்திற்கு மெக்கீவன் விட்டிருக்கலாம். ப்ளாரன்ஸ்ஸின் பால்யம் குறித்த நினைவுகளுமே தவறான புரிதல்களால் உருவாகி இருக்கலாம் என்ற மூன்றாம் கோணத்தையும் கருத்தில் கொள்ளலாம். David Foster Wallanceன் ‘Signifying Nothing’ சிறுகதையை இங்கு அதன் கதைசொல்லியின் மைய உணர்வுக்காக ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு வேளை இந்தக் கதைசொல்லி தன் நினைவுகளை எதிர்கொண்ட விதத்தில் ப்ளாரன்ஸும் செய்திருந்தால்?

நாவல் முழுவதும் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என வேறு பாதைகளை இந்தப் பாத்திரங்கள் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய பலச் சந்தர்ப்பங்கள் உள்ளன என்றாலும் பெரும்பாலும் எதுவும் செய்யாமல், மெக்கீவன் சொல்வது போல்,- This is how the entire course of a life can be changed: by doing nothing– வீணடிக்கிறார்கள். நகை முரணாக திருமண இரவன்று, திட்டமிட்டப்படி கடற்கரைக்குச் செல்லாமல், தன் வெறுப்பை வெல்ல ப்ளாரன்ஸ் தான் அருவருக்கும் ஒன்றை நோக்கி எடுத்துவைக்கும் அடி ஒன்றே, அதுவரை அவர்களிடையே இருந்த திரையை கிழிக்கிறது. ஒரு கோணத்தில் அந்நிகழ்வு தேவையானது தான் என்றாலும், வெளிக்கொணர்ந்த சூழல் பொருத்தமாக இல்லாததால் நெருக்கடியை உருவாக்குகிறது

நாவல் முழுதும் எந்தப் பூச்சுக்ளுமற்ற உரைநடையை கையாண்டிருக்கும் மெக்கீவன், தம்பதியரின் முதல் உடலுறவு முயற்சியையும், அவ்வாறே சில வரிகளில் நேரடியாகச் சொல்கிறார். ஆனால் பதட்டத்தில் ப்ளாரன்ஸ் உடலெங்கும் எட்வர்ட்டின் விந்து சிதறி உறைய ஆரம்பிக்க, தீயை அள்ளிக் கொட்டியது போல் ப்ளாரன்ஸ் தன் ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த வெறுப்பின் வெளிப்பாடாக செய்யும் செயல், (ப்ளாரன்ஸ் மீது தவறில்லை என்றாலும்) எட்வர்ட் மனதில் ஆறா வடுவை உருவாக்குகிறது.

அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக உணரும் எட்வர்ட், தன்னையே எரித்துக்கொள்ளும் கோபமும் (அவனுக்குள் சில சமயம் உருவாகும் இத்தகைய அதீதக் கோபத்தைப் பற்றியக் குறிப்புக்களை முன்பே நாவலில் மெக்கீவன் தந்துவிடுகிறார்) , அதை அணைக்க முயலும் காதலுமாக அறையை விட்டு நீங்கி கடற்கரைக்குச் சென்றுள்ள ப்ளாரன்ஸ்ஸைத் தேடிச் செல்கிறான். தவறு தன் மீது தான் என்றே இப்போதும் எண்ணும் ப்ளாரன்ஸ் தற்காப்புக்காக, எட்வர்ட் மீது முதல்முறையாக மனதில் குற்றம் சுமத்துகிறாள்.வெறுப்பு/ நேசம் என்ற இரு துருவ உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும் இருவரின் உரையாடல் எதை சாதித்திருக்கக் கூடும்? தங்கள் உறவைக் காப்பதாக எண்ணி ப்ளாரன்ஸ் சொல்லும் ஒரு ஆலோசனை அவர்கள் வாழ்க்கை பாதையை முற்றிலும் மாற்றிப் போடுகிறது. “All she had needed was the certainty of his love, and his reassurance that there was no hurry when a lifetime lay ahead of them,” என்று ஏங்கும் ப்ளாரன்ஸ்ஸை எட்வர்ட் எப்படி மீட்டிருக்கக் கூடும்?

நாவலின் ஆரம்பத்தில், அவர்களின் திருமணம் குறித்து சொல்லும் போது எட்வர்ட்டின் தாய் “… had not significantly misbehaved, or completely forgotten the purpose of the occasion,” என்று சொல்லப்படுவது புதிராக உள்ளது. அவ்வப்போது வரும் எட்வர்ட் குடும்பம் குறித்த சித்தரிப்புக்களும் இந்தப் புதிரை அதிகமாக்குகின்றன. எட்வர்டுக்கு ஐந்து வயதும் அவன் இரட்டை சகோதரிகள் கைக்குழந்தைகளாகவும் இருக்கும் போது, அவன் தாய்க்கு ஏற்படும் விபத்தால் மூளை பாதிப்படைகிறது. கலங்கலான உணர்வுகள்/ நினைவுகள் மட்டுமே உள்ள அவரை கவனித்துக் கொள்வதோடு, மூன்று குழந்தைகளையும் எட்வர்ட்டின் தந்தை வளர்க்கிறார். தாய் வித்தியாசமானவர் என்று உணர்ந்தாலும், என்னவென்று சரியாகத் தெரியாத எட்வர்ட்டிடம் (eccentric என்றே அவரும் சரி மற்றவர்களும் சரி நினைத்துக்கொள்கிறார்கள்) அவனுக்கு 14 வயதானப் போது அவன் தந்தை அந்த விபத்தைப் பற்றிக் கூறி “What I’ve said changes nothing, absolutely nothing,..” என்று முடிக்கிறார். அப்போது கூட தாயை அவன் அணுகும் கோணத்தில் எதுவும் மாற்றமிருக்க கூடாது என செய்வது செய்வது அவர் மனைவி மேல் உள்ள காதல் மற்றும் திருமண உறவு குறித்து தனக்குள்ள கடமை என அவர் உணரச் செய்யும் பொறுமை. எட்வர்ட் மற்றும் ப்ளாரன்ஸ்ஸிடையே ஆழ்ந்த நேசம் உள்ளது என்பதற்கான அத்தாட்சிகள் நாவல் முழுதும் உள்ளன. பொறுமையும் ஓரளவுக்கு உள்ளது என்பதை நாவலில் காண்கிறோம். ஆனால் கொந்தளிப்பான நேரத்தில் அதை அணைக்கும் பொறுமை?

அந்தப் பொறுமை மட்டுமிருந்திருந்தால் அவர்கள் காதல் எந்தப் பிரச்சனையையும் எதிர்கொண்டு வென்றிருக்கக் கூடும். ஆனால் கணித சூத்திரம் போல் வாழ்வை அமைத்துக் கொள்ள முடிந்தால் அந்தியில், கடற்கரையில் சரிந்த மரத்தின் மீது தனிமையில் சாய்ந்திருக்கும், பிறகு விவாதம் முற்றி, சுய கௌரவத்தை விட்டுக்கொடுத்து, நம்பிக்கை அனைத்தையும் இழந்த நிலையில்

… certain in her distress that she was about to lose him, she had never loved him more, or more hopelessly, and that the sound of his voice would have been a deliverance, and she would have turned back….

என்று பெருங்காதலோடு, தன்னை ஆற்றுப்படுத்தும் ஒரு இன்சொல்லுக்காக ஏங்கி அந்தக் காதலை விட்டுப் பிரிந்த நேசத்திற்குரிய இளம் பெண்ணிற்கும் , அவள் விலகிச் செல்லச் செல்ல சிறு புள்ளியாகி, அந்தியின் ஒளியோடு கலப்பதை எதுவும் செய்யாமல்/செய்ய இயலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்க்குரிய இளைஞனுக்கும்
இலக்கியத்தில் ஏது இடம்?

கவியின் கண்- முதியோர் இல்லம்

எஸ். சுரேஷ்

முதியோர் இல்லம்
– விஸ்லாவா சிம்போர்ஸ்கா

இதோ வந்துவிட்டார் மகாராணி-
நான் யாரைச் சொல்கிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.
ராங்கிக்காரி நம் ஹெலன்,
முதலில் அவளை யார் ராணியாக்கியது!
உதட்டுச்சாயமும் சவுரி முடியுமாய் வந்து விட்டாள்,
நமக்கென்ன அவளைப் பற்றி அக்கறை,
அல்லது சுவர்க்கத்தில் இருக்கும் மூன்று மகன்களும்தான்
அங்கிருந்து அவளைப் பார்க்கப் போகிறார்களா!

“அவர்கள் போரில் சாகாதிருந்தால்
நான் இங்கிருக்க மாட்டேன்.
குளிர்காலத்தில் ஒரு பிள்ளையிடம் இருப்பேன்,
கோடையில் இன்னொருவனிடம் இருப்பேன்.”
அவள் எப்படி இவ்வளவு நிச்சயமாய்ச் சொல்கிறாள்?
நானும்தான் செத்திருப்பேன்,
அவள் என் அம்மாவாய் இருந்தால்.

அவளது கேள்விகளுக்கு முடிவேயில்லை
(“உன் விவகாரங்களில் மூக்கை நுழைக்கவில்லை”),
உயிரோடுதானே இருக்கிறார்கள், ஆனால்,
ஏன் உன் பிள்ளைகளும் பெண்களும்
உன்னை ஒரு வார்த்தைகூட விசாரிப்பதில்லை,
“என் பிள்ளைகள் உயிரோடு இருந்தால்,
என் விடுமுறைக் காலங்கள் முழுதும்
மூன்றாம் பிள்ளையுடன் இருப்பேன்”.

ஆமாம், அவன் தன் தங்க ரதத்தில்
இவளைக் கூட்டிப் போக வருவான்.
அதை ஒரு அன்னப் பறவை இழுத்துவரும்,
அல்லது அல்லி மலர் வெண்புறா,
அவளை அவன் மறக்கவேயில்லை
என்று எங்களுக்குக் காட்ட வரப்போகிறான்,
அவன் தன் தாய்ப்பாசத்துக்கு எவ்வளவு
கடன்பட்டிருக்கிறான் என்று காட்டப்போகிறான்.

தன் பழைய பல்லவியை ஹெலன்
மீண்டும் பாடத்துவங்கும்போது,
இங்கு தாதியாய் இருக்கும் ஜேன்,
அவளாலும் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடிவதில்லை-
இத்தனைக்கும் ஜேனின் வேலை
எங்களுக்கு ஆறுதலாய் இருப்பது-
திங்கள் முதல் வெள்ளி வரை,
இரு வார விடுப்புடன்.

oOo
விஸ்லாவா மிகவும் சிக்கலான விஷயங்களையும் உரையாடுவது போல் எளிமையாகவும், அப்பழுக்கில்லாத தெளிவுடனும் பேசுவதை நாம் இந்த தொடரில் பார்த்தோம். இதுவரை நாம் பார்த்த கவிதைகளே திகைக்க வைக்கின்றன, அவற்றில் இன்னொன்று.

முதுமையையும் அதனுடன் தொடரும் பிரச்சினைகளையும் நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இந்தக் கவிதை எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க சிறுகதை போலிருக்கிறது. இதில் விஸ்லாவா முதுமையடைந்தவர்களின் மனதையும், அவர்களைப் பார்த்துக் கொள்பவர்களின் மனதையும் ஒரே சமயத்தில் புரிந்து கொள்கிறார்.

எப்படிப்பட்ட சமூகமாக இருந்தாலும் பிள்ளைகள் தம் பெற்றோரை வயதான காலத்தில் இப்படி நடந்த வேண்டும் என்று சில எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. நம் சமூகத்தில் வயதான பெற்றோர் தம் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் கடமை இளைய தலைமுறைக்கு உரியது. ஆனால் மேற்கத்திய சமூகங்களில் முதுமை இல்லங்களுக்கு அவ்வப்போது சென்று அங்கிருக்கும் பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பார்த்து வர வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது முடியாதபோது போனில் அழைத்தாவது பேச வேண்டும். எதிர்பார்ப்புகள் வெவ்வேறானவை என்றாலும், பிள்ளைகள் தம் அன்பை பெற்றோருக்கு ஒரு அக்கறையாக வெளிப்படுத்துவது மிக முக்கியமாக இருக்கிறது.

இந்தக் கவிதையில் நாம் ஹெலனைப் பார்க்கிறோம். அவர் ஒரு மகாராணி, அவர் தன்னையே அந்தப் பதவியில் நியமித்துக் கொண்டிருக்கலாம். அவர் பிறர் விவகாரங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். மற்றவர்களின் பிள்ளைகள் ஏன் அடிக்கடி வந்து பார்ப்பதில்லை என்று கேட்கிறார். அவரது மகன்கள் மூவரும் போரில் இறந்து விட்டார்கள். இந்த இடத்தில் விஸ்லாவா முதியோர் இல்லம் போன்ற இடத்தல் நிலவும் சிக்கலான உறவுகளைப் பேசுகிறார். அதே சமயம் சமூக எதிர்பார்ப்புகளையும் குறிப்பிடத் தவறுவதில்லை. அவளது மகன்கள் இறந்து போனது, ஹெலனுக்கு சுதந்திரம் தந்திருக்கிறது. இப்போது அவர் தான் விருப்பப்பட்ட கனவில் நம்பிக்கை வைக்க முடிகிறது- என் மகன்கள் என்னை எப்படியெல்லாம் நேசித்திருப்பார்கள், அவர்களுடன் எப்படியெல்லாம் பொழுதைக் கழித்திருக்க முடியும் என்று பல கற்பனைகளை மெய் போல் நம்புகிறார். அவர்களது இல்லாமை பிறரின் கதியிலிருந்து அவரைக் காப்பாற்றி ஒரு ராணியின் இடத்தில் உட்கார வைத்திருக்கிறது. யாருக்கும் அவரைக் கேள்வி கேட்கும் துணிச்சல் இல்லை. ஏன், அங்கு கேள்விக்கே இடமில்லை.

முதியோர் இல்லத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இது எரிச்சலாக இருக்கிறது, காரணம், அவர்களை யாராவது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற ஒரு சமூக கட்டமைப்பு இருக்கிறது. பிள்ளைகள் தம் கடமையை நிறைவேற்ற வேண்டும். அதைச் செய்யத் தவறினால் அதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர் கார்ணமாகின்றனர். இது முதியவர்களைக் காயப்படுத்துகிறது என்று நினைக்கிறேன். இங்கே ஹெலன் அது போன்ற கேள்விகளிலிருந்து தப்பித்து விட்டதால் அவர் பிறரது கோபத்துக்கும் பொறாமைக்கும் பாத்திரமாகிறார்.

பொதுவாக நாம், வயது ஏற ஏற மனமுதிர்ச்சி ஏற்படும், வாழ்க்கையைப் புரிந்து கொள்வோம், அமைதியானவர்கள் ஆகி, வாழ்வை அதன் குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், இதெல்லாம் ஒரு லட்சியமாகத்தான் இருக்கிறது. செயலில் எதுவும் நடக்கக் காணோம். அனுபவத்தால் பழுத்தவர்கள் இருக்கின்றார்கள் என்றாலும் பொதுவாக வயதானவர்கள் கசப்பானவர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை, சீக்கிரம் கோபப்படுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன- குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாம் தேவையில்லை என்ற உணர்வு, தம் உடலால் கைவிடப்பட்ட இயலாமை ஆத்திரமாகிறது, பல முனைகளில் சந்தித்த தோல்வி, தம் வயதினரின் வெற்றி (அது ஒரு அநியாயம் என்று நினைக்கிறார்கள்).

இந்தியாவில் முன்னெல்லாம் பல குடும்பங்களில் வயதானவர்கள் எவ்வளவு முதியவர்களாக இருந்தாலும் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், அந்தக் காலத்திலும்கூட முதியவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நவீன நகர வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இங்கு, பணம் சம்பாதிப்பவர்கள்தான் முடிவு எடுக்கிறார்கள். முதியவர்கள் பேரன் பேத்தியைப் பார்த்துக் கொள்வதில் ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. வயதான காலத்தில் இது ஏதோ ஒரு வகையில் அவர்களை முக்கியமானவர்களாக வைத்திருக்கிறது. அவர்களையும் நாம் சகித்துக் கொள்கிறோம், கேள்வி கேட்டு தொல்லை செய்வதில்லை. பொதுவாக கேள்வி கேட்பதுதான் முதியவர்களை தொய்வடையச் செய்கிறது, நாமும் கேள்விகளை நிறுத்திக் கொள்வதாயில்லை.

விஸ்லாவா மிகக் சில சொற்களிலேயே முதிவர்களைப் பார்த்துக் கொள்பவர்களின் வாழ்கையைச் சொல்லிவிடுகிறார். என் தந்தையின் நண்பர் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது நான் அவருடன் மருத்துவமனைக்கு ஒருமுறை போக வேண்டியிருந்தது. அவரது சகா ஒருவர் என்னிடம், “புற்றுநோய் மருத்துவர்களைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார். அவர்கள் எப்போதும் தோற்றுப் போகிறார்கள், ஆனால்கூட அவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தாக வேண்டும்,” என்று சொன்னார். இது ஒரு முக்கியமான விஷயம். இவர்கள்தான் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து போராடுகிறார்கள்.

முதியவர்களைப் பார்த்துக் கொள்பவர்களும் அப்படிதான். அது குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது நர்ஸாக வேலை செய்பவராக இருக்கலாம். அவர்கள் வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. மரணம் வரை ஒரு முதியவரை கவனித்துவிட்டு அடுத்து இன்னொருவரிடம் அன்பு செலுத்தியாக வேண்டும். இந்தச் சுழலுக்கு முடிவே இல்லை. மகத்தான கவிஞர் மட்டுமே கவனிக்கக்கூடிய விஷயத்தை விஸ்லாவா மிகச் சாதாரணமாகச் சொல்கிறார், “பார்த்துக்கொள்ள வேண்டிய ஜேன்கூட சிரிக்காமல் இருக்க முடியவில்லை”. இப்போது ஜேன் உயிர்ப்பு கொண்ட மனிதராகிறார்.

அந்த ஒரு வாக்கியம் ஜேன் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தும் போராட்டத்தை உணர்த்துகிறது. அவருக்காக நாம் வருந்துகிறோம், அவரது வேலை பிறருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதுதான். இங்கு விஸ்லாவா மிகச் சாதாரணமாக ஒரு உண்மையைச் சொல்கிறார், பிறரைக் கவனித்துக் கொள்பவர்கள் விஷயத்தில் நாம் அக்கறையில்லாதவர்களாக இருக்கிறோம்.

இதுதான் இன்றைய யதார்த்தம். அது மட்டுமல்ல, நம் நாளைய யதார்த்தமும் இதுவாக இருக்கப் போகிறது.