சிகந்தர்வாசி

குடும்ப ஃபோட்டோ

சிக்கந்தர்வாசி

அப்பாவுக்கு அப்பொழுது இளவயதாக இருந்தாலும்
கசங்கிய புகைப்படத்தினால் நெற்றியில் சுருக்கங்கள்
எதிர்காலத்தை பிரதிபலிப்பதுபோல்

பாவாடை தாவணியில் இருக்கும் அக்கா
எதிரியைப் பார்ப்பது போல் காமெராவை முறைக்கிறாள்
இரட்டை ஜடையில் ஒன்று முன்னும் ஒன்று பின்னுமாக இருக்கிறது

நாற்காலியில் சாய்ந்தபடி அரை நிஜாரில்
படியப்படிய வாரிய தலையுடன் நான்
கடைக்கண்ணால் காமெராவைப் பார்க்கிறேன்

எங்களுக்கு பின்னால் ஆணி அடித்து மாட்டிய
டெய்லி காலண்டரில் இருக்கும் கடவுள் யார் என்று
சரியாகத் தெரியவில்லை
(முருகராக இருக்கலாம்)

சீராக ஓடிக்கொண்டிருக்கும் காலத்தை
உறைய வைக்கப் பார்க்கும் காமெராவைப் பார்த்து
நாங்கள் எல்லோரும் உறைந்து நிற்கிறோம்

ஒளிரும் அம்மாவின் கண்கள் மட்டும்
இந்தக் கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு
வண்ணம் சேர்க்கின்றன

..

ஒளிப்பட உதவி- imgkid.com

இரவின் எதிரொலிகள்

சிகந்தர்வாசி 

 

 

என்னை வெறுமை சூழ்ந்திருக்கிறது

காலை மாலை என்று அவருக்காகவே வாழ்ந்துவிட்டு
இப்பொழுது எனக்காக வாழவேண்டும் என்றால்
எப்படி வாழ்வதென்று புரியவில்லை

ஆனால் வாழ்க்கை நம்மை வாழவைத்துவிடும்

கடைசி இரண்டு வருடங்களுக்கு மேல்
நான் யார் என்பது அவருக்கு தெரியவில்லை
அவர் கூவியதெல்லாம் பால்யத்தில்
தன்னுடன் விளையாடிய லக்ஷ்மியின் பெயரையும்
தன் உதவியாளராக இருந்த கோவிந்தின் பெயரும்தான்

எங்களை பார்க்கும்போழுது அவர் கண்ணில் எப்பொழுதாவது
ஒளி தோன்றும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தோம்
ஆனால் யாரும் அறிய முடியாத வெறுமை மட்டுமே
அவர் கண்ணில் குடியிருந்தது

நினைவுகளை தோண்டி தோண்டி அவர் மேல் வீசினேன்
அவர் செவிவழி அவை சென்று, மனதைத் தொட்டு
அதில் எழும் ஒலி ஒளியாக மாறி அவர் கண் வழி
வெளிவரும் என்று நம்பினேன்

படகே இல்லா நடுக்கடலில்
எதை பிடித்துக்கொண்டு கரையேறுவது?

ஒளிப்பட உதவி – Matthews Gallery

முகங்கள்

சிகந்தர்வாசி 

அந்த முகம் என் முன் தெரிகிறது,
அதை வருட கை நீட்டும்பொழுது மறைகிறது.
வேறொரு முகம் மெதுவாகத் தோன்ற,
நான் அதை உற்றுப் பார்க்கிறேன்.
தெரிந்த முகம்தான், ஆனால் யாரென்று தெரியவில்லை.
கண்மூடி திறப்பதற்குள் மறைகிறது.
அடுத்து தோன்றும் முகம், பரிச்சயப்பட்ட முகம்.
என்னைப் பார்த்து சிரிக்கிறது.
நான் கை நீட்டி அதைத் தொடுகிறேன்.
எனக்குள் சந்தோஷம்.
லேசாகப் புன்னைகைக்கிறேன். (more…)

அந்தரங்க துணை

சிகந்தர்வாசி 

இன்று காலை நடைபழகும்போது நடராஜன் எதிரில் வந்தார். என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

நடராஜன் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பவர். தினமும் ஷட்டில் ஆடுவார். காலையில் வாக்கிங்.

“லைப் எப்படி போயிண்டிருக்கு சார்?” என்று கேட்டேன்.

“என்னத்த சொல்ல சார், ஒரே தனிமையா இருக்கு. ரொம்ப லோன்லியா பீல் ஆறேன். அவ போயி அடுத்த மாசம் அஞ்சு வருஷம் ஆறது. அப்பா போன வருஷம் போயிட்டார். ஆபிசும் கிடையாது. ரொம்ப போர் சார்”

“ஏதாவது என்ஜிஓல சேருங்களேன் சார்”

அவர் உரக்க சிரித்தார், “நம்ப ஆபிஸ் பாலிடிக்ஸ் விட அங்க பாலிடிக்ஸ் ஜாஸ்தி இருக்கு. அதெல்லாம் முடியாத விஷயம்”

அவர் தனிமையைப் போக்க எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “உங்க அண்ணா நம்ப காம்ப்ளெக்ஸ்லதானே இருக்கார், அவர் வீட்டுக்கு போலாமே சார். அவரும் சும்மாதானே இருக்கார்?”

நடராஜன் விரக்தியாகச் சிரித்தது போல் இருந்தது. “அதெல்லாம் சொல்லுஷன் இல்ல சார்”

“சீரியல் பாக்கலாமே சார்” என்று சொல்ல வந்து அந்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒரு சுற்று மௌனமாகவே இருந்தோம். திடீரென்று அவர், “என்னதான் சொல்லுங்க சார், வாழ்க்கைல நமக்குன்னு ஒரு துணை வேணும்” என்றார். (more…)

500A சம்பவம்

சிகந்தர்வாசி 

மதியம் மூன்று மணிவாக்கில் 500Aவில் ஏறினேன். ஏ.சி. பஸ் அது. மதிய வேலை என்பதால் டிரைவர், கண்டக்டர் தவிர கடைசி சீட்டுக்கு முன் உள்ள சீட்டில் ஒரு பெண்ணும் இருந்தார்கள். நான் முன்பக்கம் உட்கார்ந்து கொண்டேன். கதவுகள் மூடியவுடன் அவள் குரல் எனக்கு கேட்க ஆரம்பித்தது.

“.. அவா ரெண்டு பேரும் மீட் பண்ணிண்டா. தீபக் நல்லா பேசினான்னு சொன்னா. ரொம்ப நேரம் பேசினாப் போல இருக்கு. அவளுக்கு ஓகேன்னு சொன்னா. அவனும் ஓகே சொல்லியிருப்பான்னு நெனைக்கறேன்” தமிழில் பேசினாள். உரக்க பேசினாள். வேறு மனிதர்கள் பஸ்ஸில் இருப்பதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

சற்று நேரம் மௌனத்துக்கு பின், “அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. அவ ரொம்ப கான்பிடண்டா இருந்தா. ஆனா இப்போ அவன் பிடி கொடுத்து பேசமாட்டேன்கிறான்”

“…”

“சார், உங்களுக்கு இது பத்தி தெரியாதுன்னு எனக்கு தெரியும் சார். ஆனா நீங்க அவனோட மேனேஜர். நீங்க ஒரு வார்த்த அவன கேக்கலாம்”

“…”

“அது கரெக்ட்தான் சார். இது பர்சனல் விஷயம்தான். ஆனா நாங்க என் கசினுக்கு கல்யாணம் ஆகணும்னு ரொம்ப டென்ஷனா இருக்கோம். அதுக்குதான் உங்கள கேக்கறேன். ஒரு ரிக்வெஸ்ட்தான்.”

“…”

“இல்ல சார். நீங்க அவன போர்ஸ் பண்ண வேணாம். ஆனா ஏன் அவன் வேணாம்ன்னு சொல்றான்னு கேளுங்களேன்?”

“…”

“அவளுக்கு இப்போ முப்பது வயசாச்சு சார். சீக்கிரம் கல்யாணம் பண்ணிடணும்னு என் சித்தி சித்தப்பா பாக்கறா. இவ்வளவு நாள் அவ வேண்டாம்ன்னு இருந்தா. இவனதான் மொதல்ல சரின்னு சொல்லியிருக்கா. இந்த சந்தர்ப்பத்த விட முடியாது சார். நீங்கதான் எப்படியாவது அவன கன்வின்ஸ் பண்ணனும்”

“…”

“சார் நான் சொல்லறத கேளுங்க சார். ப்ளீஸ்.” அவள் குரல் உயர்ந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். கண்டக்டர் என்னைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். “மனை அனுக்கொண்டிதாரே” என்றார் என்னிடம். பஸ் ஸ்டாப்பில் நின்றது. ஒருவர் ஏறிக்கொண்டார்.

கதவு மூடியபின் மறுபடியும் அவள் குரல். “…இருக்கலாம் சார். இல்லேன்னு சொல்லல. நீங்க இவள உங்க தங்கையா நினைச்சுக்கோங்க. ஒரு சிஸ்டருக்கு ஹெல்ப் பண்ற மாதிரி ஹெல்ப் பண்ணுங்கோன்னு கேக்கறேன்”

“…”

“இல்ல சார். அவருக்கு நீங்க மேனேஜர். நீங்க மனசு வெச்சா அவன கன்வின்ஸ் பண்ணலாம் சார். ஒரு தங்கைக்கு …”

“…”

“உங்களுக்கு தெரியாதது இல்ல. இந்த காலத்துல கல்யாணம் பண்ணி வெக்கறது எவ்வளவு கஷ்டம்னு. அதுவும் பொண்ணும் பையனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பற மாதிரி இருக்கறது இன்னும் கஷ்டம். அதுனாலதான் இது கை நழுவக்கூடாதுன்னு பாக்கறேன்”

“…”

“அவளுக்கு அவன பிடிச்சிருக்கு சார். அதுனாலதான் அவனுக்கு அடிக்கடி போன் பண்றா. இத ஏன் அவன் தப்பா எடுத்துக்கறான்? அடிக்கடி போன் பண்றதுல என்ன சார் தப்பு இருக்கு?”

“…”

“ஓகே சார். ஐ அண்டர்ஸ்டான்ட். நான் அப்புறம் போன் பண்றேன்”

அடுத்த ஸ்டாப் வரை நிசப்தமாக இருந்தது. ஸ்டாப்பில் பஸ் நின்றவுடன் அந்த பெண் இறங்க வந்தாள்.

பஸ்ஸில் இருந்த மற்றொருவரும் எழுந்து, “நீங்க தமிழ் போல இருக்கு. நீங்க பேசறத நான் கேட்டேன்….” என்று சொல்லிக்கொண்டே அந்த பெண்ணுடன் பஸ்ஸைவிட்டு இறங்கினார்.

பஸ் கதவு காற்றை உள்ளிழுத்துக் கொள்வது போன்ற மெல்லிய சப்தத்துடன் மூடிக் கொண்டது.