துர்க்கனவுகள் சங்கமிக்கும்
இடமாகிற்று வாழ்வு
கடவுள் வரைந்த
அவளது வாழ்வின் புதிர்களை
காலம் அவிழ்க்கத் தொடங்கியது
கடவுளால் அவளுக்கென வரையப்பட்ட வாழ்வு
இன்னும் அநாமதேயமாய் அலைந்து கொண்டிருக்கிறது
குளிரில் ஒடுங்கிய பறவையின்
மௌனச்சிறகுகளால் விசிறப்படும்
நீர்த்திவலைகளாய் அவள் கனவுகள்
ஒவ்வொன்றாய் உதிர்கின்றன
கானகத்துள் உறைந்திருக்கும்
இருட்டின் மௌனத்தை ஒத்த ஒரு மௌனம்
அவள் வாழ்வைப் போர்த்துகிறது
தனித்துப்போனவளின் துயரம் எதைப் போன்றது?
தனித்தலையும் ஒரு பறவையின் துயர் போன்றதா?
கைவிடப்பட்டவளின் மெளனம் எதைப் போன்றது?
கூரிய மலைகளின் மௌனத்தை விட கெட்டியானதா?
அவளது மௌனம் பூத்த கனவு எதை விடப் பெரியது?
மனிதர்களால் உதிர்க்கப்பட்ட
சுடு சொற்கள் அவள் இதயத்தை ஊடுறுவிய போது
தன் உடலெங்கும் பீறிட்ட கொடிய வலியை விடவும் பெரியதா?
அவளது ஏக்கம் எதை விடப் பெரியது?
கவிதை
ஆசுவாசம்
உயரக் கம்பத்தின் வடக்குமூலையில்
கருநீல இறக்கையை விரித்து
ஒரு பறவை எழும்புகிறது
தொற்றினாற்ப்போல நூற்றுசொச்சப்
பறவைகளும் எழும்பிப் பறக்கின்றன.
காவ்-காவ்; காவ்-காவ் எனக்
குரலெழுப்பிக் கொண்டே
வானில் சிறு வட்டங்களிட்டு
கம்பிகளில் மீண்டும்
வந்தமர்கிறது.
அலைஅலையாக தொடர்கிறது
பறவைகளின் ஆட்டம்.
வாகன நெரிசல்களுடனும்
வியர்வை வழிதல்களுடனும்
அண்ணாந்து நோக்கி
குதூகலிக்கும் கூட்டத்தில்
நானும் ஒருவனாய்
தெறிக்கும் துளியென
ஒரு நீளவால் பறவை மட்டும்
அருகிலிருந்து ஆட்டத்தை
ரசித்துக் கொண்டிருக்கும்
மக்னோலியா மரத்தின்
உச்சியில் சென்றமர்கிறது.
பொதிகை
இருள் கவிந்த பின்னும்
கலைந்து விடுவதில்லை
போர்வைக்குள் சுருண்டு
இரவைக்கடக்கும்
முதல் கதிர் பற்றி இழுக்கும்
நுனி
பறவைகள் அறியும்
ஒலிக்குறிகள் வனமெங்கும்
சிதறிப்பரவி
நதியோட்டத்தை வேகமூட்டும்
சூடு பறக்கும் யானையின் பிண்டம்
மீட்டுவரும்
வனத்தின் அச்சத்தை
பகலெல்லாம்
சதுரங்க விளையாட்டின்
புதிர்களோடு
விரிந்து அலையும்
வனத்தின் கனி
மலையிடுக்கில் வீழ
பரமபதம் துவங்கும்
இரங்கற்குறிப்பு
வழுவழுப்பான சிறிய கூழாங்கல்லால் இடறப்பட்டோ
வன்மத்துடன் பாய்ச்சப்பட்ட கோடரியாலோ
வெறுமையான வயோதிக நொடிகளுக்குள்
புதைந்து போயோ
இலைச்சருகென இயல்பாக உதிர்ந்தபடியோ
மனக் கொந்தளிப்போடு மலையுச்சியிலிருந்து குதித்தோ
உற்றார் எல்லோரும் கொண்டாடும்
பொலிவான வாழ்க்கை முடித்து
வரலாற்று நாயகராகவாகவோ
துப்பாக்கிகுண்டின் விரைவிற்கு
தோற்றுப் போனவர்களாகவோ
எப்படியோ இங்கு ஒரு
வாழ்க்கை முடிந்து போகிறது..
ஆறுதல் முகங்களை
காட்டிச்செல்ல விரும்புபவர்களிடையே
ஒரு கணக்கு ஓடுகிறது,
எரியும் சிதையிலிருந்து
எத்தனைக் கொள்ளிகளை
பிடுங்கிக் கொண்டுப் போய்
தங்கள் வழிகளை ஒளியேற்றுவதென,
உயிருற்று இருப்பதுதான்
எவ்வளவு துயரமானது.
Picture courtesy: Videoblocks.com
சாட் காதலி
- ஒரு புகைப்பட உருவம் எழுத்துரு இயக்கம் நான் காதல் கொண்டவளின் இரு அடையாளங்கள் காலை முதல் கணவன் வீடு திரும்பும் மாலை வரை உடனிருந்தாள் ஒவ்வோர் அமர்விலும் எழுத்துரு நடனமாடி என்னை மயக்கினாள். குளியலறையில் கைநழுவிய சோப்புத்துண்டு வயிற்று மடிப்புகளின் எண்ணிக்கை கணவனுடனான முந்தைய நாள் பிணக்கம் வாழ்வின் அனைத்தையும் திறந்த ஏடாக்கினாள் திடுதிப்பென்று ஒரு நாள் அவமதிப்பினால் நம் காதல் முறிந்தது என்று சொல்லிக் கொள்வோம் என அறிவித்துவிட்டு வெற்றுத்திரையாகி மறைந்தாள் காதலின் காரணங்கள் போன்று பிரிவின் காரணமும் புனைவாய்த்தானே இருத்தல் வேண்டும்? பெரிதாக்கப்பட்ட அவளின் குறை-தெளிவு பிம்பம் புள்ளிகளாய்ச் சிரிக்கிறது

