நித்ய சைதன்யா

திதி

 நித்ய சைதன்யா

குளிர்ந்தசைந்த
நதியின் நீரள்ளி
ஓம குண்டத்தின் முன்
கண்கள் கலங்கி
மாப்பிண்டங்களில்
மலர்களிட்டு
கால்கள் சகதியில் கூச
இடுப்பளவு நீரில்
காசி காசி என புலம்பி
மார்புநுால் களைந்து
முங்கி எழ
கரைந்தமிழ்கின்றன
முன்னோர்களின்
பசித்துக்களைத்த முகங்கள்

 

 

 

தளைச்சுமை

– நித்ய சைதன்யா-

மீட்பென பறவையைச் சுட்டியது ஒருவிரல்
விலாவிலிருந்து கிளைத்து வந்தன
பறப்பதன் நுட்பங்கள்
கூரலகு காற்றைக் கிழிக்க
பஞ்சைப் போலானது எனதுடல்
தரையை வீடுகளை
பசுமை தளும்பிய மரங்களை
மலைகளைக் கடந்தேன்
வெண்மை போர்த்திய வெளியன்றி
இலக்கற்ற பாழ்வெளி
தங்கி இளைப்பாற ஓரிடம் ஏங்கி
நிலம் திரும்புகின்றன
அன்றாடத்தின் வேர்கள்

 

 

 

 

 

 

 

பொதிகை

நித்ய சைதன்யா

இருள் கவிந்த பின்னும்
கலைந்து விடுவதில்லை
போர்வைக்குள் சுருண்டு
இரவைக்கடக்கும்
முதல் கதிர் பற்றி இழுக்கும்
நுனி
பறவைகள் அறியும்
ஒலிக்குறிகள் வனமெங்கும்
சிதறிப்பரவி
நதியோட்டத்தை வேகமூட்டும்
சூடு பறக்கும் யானையின் பிண்டம்
மீட்டுவரும்
வனத்தின் அச்சத்தை
பகலெல்லாம்
சதுரங்க விளையாட்டின்
புதிர்களோடு
விரிந்து அலையும்
வனத்தின் கனி
மலையிடுக்கில் வீழ
பரமபதம் துவங்கும்

திரிதலின்பம் – நித்ய சைதன்யா

யாரிடம் என்றில்லாமல்  
சதா
கதையாடி மகிழும்
நதிக்கரையோர நாணல்கள்

இரவுகளை பகைத்தஞ்சி
விடியல்களை ஏங்கி
காத்திருந்த
நீர்மையின் நடுக்கத்தில்
அன்றைய எனதின்பங்கள்

தெருக்களில் இல்லை
தேரடி வீதியில் இல்லை
கண்களால் பேசிக்களித்த
படித்துறையிலும் இல்லை
நதிக்கரையில் தேடியலைகிறேன்
நட்பிலமர்ந்த அந்நாட்களின் சுவடுகளை

நதியில் மிதந்துசெல்கின்றன
நீ சூடிய
பொன்னிற மலர்கள்