நித்ய சைதன்யா

திதி

 நித்ய சைதன்யா

குளிர்ந்தசைந்த
நதியின் நீரள்ளி
ஓம குண்டத்தின் முன்
கண்கள் கலங்கி
மாப்பிண்டங்களில்
மலர்களிட்டு
கால்கள் சகதியில் கூச
இடுப்பளவு நீரில்
காசி காசி என புலம்பி
மார்புநுால் களைந்து
முங்கி எழ
கரைந்தமிழ்கின்றன
முன்னோர்களின்
பசித்துக்களைத்த முகங்கள்

 

 

 

தளைச்சுமை

– நித்ய சைதன்யா-

மீட்பென பறவையைச் சுட்டியது ஒருவிரல்
விலாவிலிருந்து கிளைத்து வந்தன
பறப்பதன் நுட்பங்கள்
கூரலகு காற்றைக் கிழிக்க
பஞ்சைப் போலானது எனதுடல்
தரையை வீடுகளை
பசுமை தளும்பிய மரங்களை
மலைகளைக் கடந்தேன்
வெண்மை போர்த்திய வெளியன்றி
இலக்கற்ற பாழ்வெளி
தங்கி இளைப்பாற ஓரிடம் ஏங்கி
நிலம் திரும்புகின்றன
அன்றாடத்தின் வேர்கள்

 

 

 

 

 

 

 

அகம்

    நித்ய சைதன்யா

”கிழட்டுத் தாயோளி உயிர வாங்குதானே” என்று வாய்க்குள் முனங்கிக்கொண்டே பன்னீர் பாட்டில்கள் அடங்கிய சாக்குப்பையை தோளில் துாக்கிவைத்தேன். உருவத்திற்குப் பொருந்தாமல் பஞ்சைப்போலிருந்தது .

”பேபி ஸ்டோர்ல குடுத்துட்டு. உங்கக்காவுக்கு ரெண்டு தேங்கா வாங்கிக்கோடா மாப்ள” என்றது கிழம். கோமணம் மீறி விதைப்பை ஒன்று வெளித்தெரிந்தது.   எண்ணெய்க் குவளையால் பன்னீரை மொண்டு வெள்ளைப்பிளாஸ்டிக் பன்னீர் பாட்டிலில் புனல்கொண்டு ஊற்றினார். எனக்கு எப்போதும் அவர்மீது ஒருவித ஏளனம் கலந்த எரிச்சல்தான். குடும்பத்தின் சவால்களுக்குப் பயந்த பெருங்கோழை.

அந்த அறையெங்கும் பன்னீரின் நறுமணம். வாசலில் நிற்கும்போதே அதுவரை மனதில் இருந்த எரிச்சல் மறைந்து ஒரு புன்னகை மலரும். எத்தனை வெறுப்புவந்தாலும் தாத்தாவின் அறைக்கு மீண்டும் மீண்டும் என்னை வரச்செய்யும் மாயம்.

நினைவுதெரிந்த நாளில் இருந்து தாத்தாவின் கோலம் இதுதான். நன்கு வெண்மை ஒளிரும் கூந்தலும் தொப்புளைத் தொடும் தாடியும். எப்பவும் இடுப்பில் மட்டும் கதர் வேட்டி துளி அழுக்கின்றி. வெகுதொலைவில் கண்கள் இருப்பதைப்போன்று காட்டும் சோடாப்புட்டி கண்ணாடி. நரைத்த வெண்ணிற ரோமங்கள் உடம்பெங்கும் அடர்ந்திருக்கும்.

அதிகாலையில் எழுந்து பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். கண்ணாடியற்று கலைந்திருக்கம் வெண்தாடியில் அவரின் முகம் குழந்தையினுடையதைப் போலிருக்கும். கதர்கடை பார்சோப்பினை துண்டில் சுருட்டி நாராயணப்பேரிக்கு குளிக்கக் கிளம்புவார். இளவெயிலில் இடுப்பில் துண்டைக்கட்டியபடி தலைக்குப்பின்னால் கைகளால் ஏந்திப்பறக்கவிட்ட வெள்ளைக்கதர்வேட்டி சடசடத்து ஒலிக்க வீடு திரும்புவார். மழைக்காலங்களில் கூட மாறாத காலைக்கடமை அது.

ராயகிரியில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் திடீரென வழியில் தோன்றுவார். “ஓய் மாப்ள எங்கவே ஓடுறீரு..உங்கக்காட்ட பால்குடிக்கவாடே”என்பார் ரோட்டில் நின்றபடி.  நாணிக்குறுகி தயங்கி நிற்பேன். மஞ்சள்பையில் இருந்து பிஸ்கட் பாக்கெட்டோ கடலை மிட்டாய் பாக்கட்டோ எடுத்துக்கொடுப்பார். ஒருநாளும் வீட்டிற்கு வருவதில்லை. நானும் ஒருபோதும் அம்மாவைப்பாக்க வீட்டுக்கு வாங்க என்று அழைத்ததுமில்லை. அம்மாவிடம் போய்ச் சொன்னால் சட்டென்று அவள் முகத்தில் ஒருகுழைவு தோன்றும். முந்தானையால் கண்களை ஒற்றிக்கொள்வாள். அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் சண்டை நாறும். அம்மாவின் வாயில் இருந்து தெறித்துவிழும் வார்த்தைகளால் தாத்தா நடுங்கிப்போவார். ”நீச முடிவான் பாழுங்கிணத்துல என்னெக்கொண்டு தள்ளிப்போட்டானே.  இந்தப்பிஞ்சுக்காக நான் இன்னும் உயிரோட இருக்கேன்” அம்மாவின் பெருமூச்சு அன்றெல்லாம் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். தாத்தாவின் மீது கரிய இருள் படியத்தொடங்கியது அவ்வாறுதான்.

தெருவில் சாக்குப்பையோடு நடந்துசெல்வது கூச்சமாக இருந்தது.. சாந்தியின் வீட்டில் யாராவது வாசலில் நிற்கிறார்களா என்று நோட்டமிட்டேன். கருத்த பன்றியொன்று அதன் காலிடுக்கில் குமுறிஒலித்த இரண்டு குட்டிகளோடு நுரைத்தோடிய சாக்கடையை கிளறிக்கொண்டிருந்தது. அருணாக்கயிற்றில் இறுக்கியிருந்த கைலி நழுவி விழுந்துவிடும் போலிந்தது. ஏறுவெயில் ததும்பி தெருவெங்கும் பொன்னுருகிய மினுக்கம்.

சந்தையில் இருந்து காய்கறிப்பையோடு திரும்பிக்கொண்டிருந்த அக்கா என்னைப்பார்த்து நின்றாள். நெற்றியில் வெள்ளித்துளிகளென வியர்வையின் முத்துப்புடைப்பு. முந்தானையால் ஒற்றியபடி”அந்தமானிக்கு ஊர்சுத்த போயிராத. வீட்டுக்குவா. ஒருமணியானா சாப்பாடு கொடுக்க உன்னை உலகமெல்லாம் தேடணும்.” என்றாள். நான் ம் என்று தலையாட்டினேன்.

தாத்தாவும் அக்காவும் -என் சாதியில் அம்மாவின் அம்மாவை அக்கா என்றழைப்போம் -ஒரே வீட்டிற்குள் வாழ்ந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் நேருக்குநேராக பேசிக்கொள்வதில்லை. இருபதாண்டுகளாக இப்படித்தான் இருந்து வருகிறார்கள். நாற்பதைத்தாண்டிய தாத்தா ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடிப்போனார். ஆறுமாத காலம் எங்கெங்கோ தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. குற்றாலம் ஐந்தருவி அருகே உள்ள ஆசிரம் ஒன்றில் சிரைக்காத தாடியும் வெள்ளைத்துண்டுமாக அவரைக்கண்டறிந்த சீனியாபிள்ளை வந்து சொல்லவும் அக்கா தன் மூன்று பெண்மக்களோடு ஆசிரமம் சென்றாள். அதன்பின் வீடு திரும்பியவர் யாரோடும் பேசுவதில்லை.  அவர் அறிந்து வைத்திருந்த பன்னீர் ஊதுபத்தி தயாரித்து கடைகளுக்குச் சென்று கடனுக்குப் போட்டுவருவார்.  கிடைக்கும் பணத்தை பத்திரப்படுத்திக்கொள்வார். குடும்பத்தின் செலவுகளில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. எப்போதாவது  தேங்காய்களோ பத்து நாட்டு வாழைப்பழங்களோ சிறுபருப்பு அரைக்கிலோ என தோன்றியதை வாங்கிக்கொடுப்பார்.  அவற்றை நான் கொண்டு கொடுக்கும் ஒவ்வொருமுறையும் அக்காவின் முகம் கோபத்தில் விரியம். ஆனாலும் ஒருநாளாவது அதுவேண்டும் இதுவேண்டும் என அக்கா என்னிடம் கேட்கச்சொல்லியதே இல்லை. யார் இறந்த துஷ்டியிலும் தாத்தா கலந்து கொள்வதில்லை. பத்துத்தறிகள் போட்டு இரண்டு ஜவுளிக்கடைகளை நடத்திவந்தவர் திடீரென இப்படி மாறிப்போனது ஆச்சரியம் என்று ஊரே வியப்போடு பேசியது. ”கொட்டப்பெலம் இல்லாதவன்” என்று அம்மா காறித்துப்புவாள். அக்கா தாத்தாவைத்திட்டி ஒருசொல் அவள் உயிரோடிருக்கும் வரை சொன்னதில்லை. தாத்தாவின் மீது என்றுமே மாறாப்பிரியம் அவளுக்கு.

மூன்று பெண்மக்களையும் அக்காவே மாப்பிள்ளைப்பார்த்து கட்டிவைத்தாள். குடியிருக்க ஒருவீட்டைத்தவிர மற்ற அனைத்தும் குமருகளை கரையேற்றியதில் கரைந்து போனது. மிச்சமிருந்த பணத்தை அக்கா வட்டிக்கு விட்டிருந்தாள்.

பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு அக்காவின் வீட்டில் தங்கி வேலை தேடிக்  கொண்டிருந்தேன். ராயகிரியில் இருந்தவரை நித்தமும் சில்லறைச் சண்டைகளும் அடிதடியும் என்னால். மதிக்கு நான்கொடுத்த எட்டுப்பக்க காதல் கடிதத்ததால் இரண்டுமுறை ஊர்க்கூட்டம் நடத்தவேண்டியதாயிற்று. முருகேசனோடு சேர்ந்து பீடிபுகைக்கவும் பழகியிருந்தேன். சட்டைப்பையில் ஒருகட்டு செய்யதுபீடியைப் பார்த்த ஒருநாள் அம்மா பிடறியில் அறைந்தாள். நான் அரளிவிதைகளைத்தேடி மந்தைக்குப்போனேன். முறுக்கும் அதிரசமும் கொஞ்சம் அரிசியும் கொண்டுவந்த அக்காவின் கைகளில் என்னைப் பிடித்துக்கொடுத்து” இவன ஊருக்கு கூட்டிட்டுப்போ. அவங்க அப்பனமாதிரி இப்பவே அரளிக்கொட்டையை அரைச்சுக்குடிச்சிடுவேன்னு மிரட்டுறான்.“ என்று அம்மா அழுதாள்.

வந்த முதல்நாளே தாத்தா என்னை இழுத்துவைத்துக்கொண்டார். பிரபல பிராண்டின் ஊதுபத்தி டப்பாக்கள் பளபளப்போடு  நறுமணம்உமிழ தாத்தாவின் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நான்கு கட்டுகள் கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் காரைவீட்டில் தாத்தா தெருவோர முதல் அறையை எடுத்துக்கொண்டிருந்தார். தாத்தாவின் அறையைத்தாண்டி சமையலறை. அடுத்த அறைக்குள் அக்காவின் உலகம் மரக்கட்டில் ஒன்றும் சில பித்தளைப்பாத்திரங்கள் ஈயப்பாத்திரங்கள் சுவரில் தொங்கும் ரவிவர்மாவின் சரஸ்வதிதேவி சாமிப்படம் என்றும் பரந்து கிடக்கும். சமையல் நேரம்போக மற்றநேரமெல்லாம் அக்கா அசையா விழிகொண்டு தரையை வெறித்திருப்பாள். பனையோலை விசிறியை வலதுகை தன்னிச்சையாக அசைத்துக்கொண்டிருக்கும்.

கைகளில் கரிபடிய தாத்தா பலகையொன்றில் ஊதுபத்திக்குச்சிகளின் மீது மணக்கும் எஜென்ஸை பரவலாக ஊற்றி குலுக்கி அறைந்து சேர்த்துக்கொண்டிருந்தார். வெள்ளைரோமங்களுக்கிடையில் மார்புகள் குலுங்குவது பார்க்க ஆர்வமாக இருக்கும். தரையில் விரித்துவைத்திருந்த தாளில் வாசனை நனைத்த குச்சிகளை பத்துப்பத்தாக எண்ணி வைக்கும்வேலை எனக்கு.

”மும்மலம்னா என்னன்னு தெரியுமாடே உனக்கு” சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் சட்டென்று பேசஆரம்பித்தார் என்னிடம். இருண்ட கிணற்றுக்குள் மிதக்கும் நிலவைப்போன்று தாத்தாவின் கண்கள் எனக்கு திகில் நிறைந்த அனுபவத்தை ஊட்டின. தாத்தாவிற்கு இரண்டு விசயங்களில் மட்டுமே அதீத ஆர்வமிருந்தது. எப்போதும் அதைப்பற்றியே அவரைச்சந்திக்கும் அத்தனை பேரிடமும் பேசுவார். ஒன்று பெண்கள் மற்றொன்று துறவு. பெண்களைப்பற்றி அவரின் வார்த்தைகளைக்கேட்கும்போது அந்தக்கணமே துறவியாக மாறிவிடத்தோன்றும். பட்டினத்தாரின் பாடல்களைத் தொடாமல் அவருடைய எந்தப்பேச்சும் நிறைவடைவதில்லை.

நான் தினத்தந்தியின் வண்ணப்பக்கத்தில் தெரிந்த தசைமுகடுகளின்மேல் எண்ணிய பத்திக்குவியலை வைப்பதில் கவனம் செலுத்தினேன். ”போயா நீரும் உம்ம உலக்கத் தத்துவமும். குடும்பத்த வெச்சு காப்பாத்த வக்கில்ல. பெரிசா ஞானிகணக்கா பேச்சைப்பாரேன்“ என்று இளக்காரம் வழிய தாத்தாவை முறைப்பேன். அம்மாவின் வார்த்தைகள்  அப்போதெல்லாம் வெறிகொண்டு பொங்கிப்பொங்கி வரும்.

”ஆணவ மலம்தான் மனுசன சுலபமா விட்டுப்போகாது.கேட்டியா மாப்ள. நான் பெரிய அறிவாளி.  பணக்காரன்.  நிறைய சொத்துபத்து வெச்சுருக்கேன். இப்படி எதாவது ஒருவிதத்துல நம்மை ஆணவமலம் அழுக்காக்கிக்கிட்டே இருக்கும்.” தாத்தா தொடர்ந்து பசு பதி என சைவசித்தாந்தத்தின் தத்துவநெறிகளை விளக்கிக்கொண்டு பத்தி உருட்டுவார். ஒருமணிக்கு அக்காவின் நிழல் முற்றத்தில் தெரிந்ததும் எழுந்து ஓடுவேன். அக்காவின் சமையல் ருசி என்னை அவளுக்கு அடிமையாக்கி வைத்திருந்தது. ஆவிபறக்க சாப்பாட்டுத்தட்டை தாத்தாவின் அறைக்குள் கொண்டுவைத்துவிட்டு அந்த அறைப்பக்கம் எட்டிப்பார்க்க மாட்டேன். எப்படியும் வாரத்தில் இரண்டுமூன்று நாட்கள் தாத்தாவிடம் வசக்கேடாகச் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அந்தநாட்களில் ஊதுபத்தியின் வாசமும் சைவசித்தாந்தமும் என்னை போதையில் ஆழ்த்தும்.

வெக்கை உறைய வெயில் தேங்கிய மதியம். ஆஸ்பெட்டாஸ் கூரையிலிருந்து அமிலம் வழிந்தது. தெரு ஆள்நடமாட்டம் குறைந்து சவலைப்பிள்ளை போலிருந்தது.

”பிரம்மஸ்ரீ சுவாமிகளின் வீடுதானே” என்றது வாசல் குரல். கட்டிலில் படுத்திருந்த அக்கா மாதநாவலில் உச்சமடைந்திருந்த என்னிடம்”யாருனு போய்ப் பாருல“ என்றாள். நரேந்திரன் வைஜெயந்தியின் பெருத்த மார்பகங்களை முறைத்தபோது நாவலைத்தரையில் கவிழ்த்து வைத்து எழுந்தேன். விரித்திருந்த போர்வையை காலால் சுருட்டி உதைத்தேன்.

 

மத்தியானச் சோர்வில் தாத்தா ஈசிச்சேரில் சாய்ந்திருந்தார். மதியம் துாங்கும் பழக்கம் இல்லாதவர். தாடியை ரசனையோடு வலதுகைவிரல்களால் சிக்கெடுத்து நீவி கண்களை மூடியிருந்தார். மரநாற்காலியின் மீது கட்டிஅட்டையில்  திருவாசகம்.

வாசலில் நின்றிருந்தவர் தாத்தாவைப்போல தாடிவைத்து இடுப்பில் காவிவேட்டி கட்டியிருந்தார். தாடியும் தலைமுடியும் மார்புரோமங்களும் நல்ல கருப்புநிறத்தில் இருந்தன. காவிக்கலரில் தோள்ப்பை ஒன்று அவரின் வலதுபுஜத்தில் வீ்ங்கித்தொங்கியது.

”பிரம்மஸ்ரீ மாணிக்கம் சுவாமிகளின் வீடு இதுதானே” என்றார். அவர் கேட்டதொனியில் மிக பண்பட்ட ஒருமனோபாவம் இருந்தது. நான் ஒருகணம் அதிர்ந்து மறுகணம் பீறிட்டெழுந்த சிரிப்பை மென்றுதின்று ”உள்ள வாங்க” என்றேன். மனம் நம்பமுடியாமல் வியப்பில் ஆழ்ந்தது.

”தாத்தா“ என்றேன் அறைமுன் நின்று. ”என்ன..யாரு” என்று பதறிவிழித்தவர். என்னைக்கண்டதும் ஆசுவாசம் அடைந்தார். விலகியிருந்த வேட்டியை சரிப்படுத்திக்கொண்டார்.

”உங்களத்தேடி ஆளு”

”வரச்சொல்லு”

அதற்குள் அவர் தாத்தாவின் அறைக்கு வந்திருந்தார். வாசலில் நின்று இரண்டுகைகளையும் இணைத்துக்கூம்பி புருவமத்தியை இரண்டுகட்டைவிரல்கள் தொடும்படி வணங்கினார். தாத்தாவும் அப்படி வணங்கியபின் ”வாங்க “ என்று வரவேற்றார். நான் இரும்பு நாற்காலியை கொண்டுவந்து போட்டேன்.

வந்தவர் நாற்காலியில் அமராமல் தாத்தாவின் காலருகே பயபக்தியோடு தரையில் அமர்ந்தார். நான் தாத்தாவின் முகத்தைப்பார்த்தேன். அதுவரை நானறியாத புதுபாவனை அவர் மீது வந்து இறங்கியிருந்தது.

பொதிகை

நித்ய சைதன்யா

இருள் கவிந்த பின்னும்
கலைந்து விடுவதில்லை
போர்வைக்குள் சுருண்டு
இரவைக்கடக்கும்
முதல் கதிர் பற்றி இழுக்கும்
நுனி
பறவைகள் அறியும்
ஒலிக்குறிகள் வனமெங்கும்
சிதறிப்பரவி
நதியோட்டத்தை வேகமூட்டும்
சூடு பறக்கும் யானையின் பிண்டம்
மீட்டுவரும்
வனத்தின் அச்சத்தை
பகலெல்லாம்
சதுரங்க விளையாட்டின்
புதிர்களோடு
விரிந்து அலையும்
வனத்தின் கனி
மலையிடுக்கில் வீழ
பரமபதம் துவங்கும்

நான் ஏன் எழுத விரும்புகிறேன்? – நித்ய சைதன்யா

நித்ய சைதன்யா 

இரண்டு அடிப்படைக் காரணங்களை சொல்லத் துணிவேன். ஒன்று நன்றிக்கடன். என்னை திறம்பட வளர்த்தது பெற்றோரோ சொந்த பந்தங்களோ நண்பர்களோ இல்லை. தேடித்தேடி நான் வாசித்த புத்தகங்கள்தான். இன்றும் என் பலம் மற்றும் பலவீனமாக இருப்பது நான் வாசிப்பு மூலம் பெற்றுக்கொண்டவையே. பல மனத்திரிபுகளில் இருந்து பாதுகாத்த தாய்மை நான் விரும்பி வாசித்த படைப்பாளிகளுக்கு உண்டு. உடம்பின் தேவைகளை நிறைவு செய்யவே வக்கற்ற பிறப்பமைந்த எனக்கு இலக்கியம் என்பது உயர்குடிக்கானது என்ற எண்ணம் சிறுவயது முதல் இருந்தது. அதனால் உயர்குடிப்பண்புகளில் ஒன்றான இலக்கிய வாசிப்பு மீது பெரும் விருப்பம் இயல்பாகத் தோன்றியது. யாருடனும் ஒட்டுறவற்ற பால்யத்தின் ஒரே ஆறுதல் அன்று வாசிக்கக்கிடைத்த புத்தகங்கள்.

பத்து வயது முதல் தனிமை என்பதை விரும்பத் தொடங்கினேன். ஏன் என்று யோசிக்கும்போது உறுதியாய் சொல்ல முடியவில்லை. சிறுவயதில் தந்தையை இழந்தது அதன்பிறகான தொடர் வறுமை மற்றும் உறவினர்களின் புறக்கணிப்பு இப்படி எதாவது காரணமாக இருக்கலாம். எல்லாருக்குமான நதிதான் என்றாலும் என் நதி இதுவல்ல என்ற மனவிலக்கம் இயல்பான பால்யத்தை எனக்கு வழங்கவில்லை. விழாக்களும் விருந்தினர்களும் விரும்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என்றான பின்பு எப்படி இவ்வுலகத்தோடு ஒட்ட முடியும்?

புத்தகங்கள் என் வறுமையை ஏளனம் செய்ததில்லை.. என் வருகையை அஞ்சி தின்று கொண்டிருந்த உணவை ஒளிக்க முயன்றதில்லை. காணும்தோறும் தந்தையற்ற கையறு நிலையில் என்னை நாணச் செய்ததில்லை. ஆனால் கரம் பிடித்து தோழமையோடு உலகின் பல வீதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளன. நான் அறிந்திருக்க வாய்ப்பற்ற பல வாழ்க்கைத் தருணங்களை எனக்கு புகட்டுகின்றன. விதவிதமான வாழ்க்கைச் சாத்தியங்களை என் அனுபவமாக்குகின்றன.. நான் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருகிறேன். இருபதாண்டுகளாக என் போதிமரத்தின் கனிகள் தீர்ந்ததே இல்லை.  தினமும் புதிதுபுதிதாய் ருசிகள் கனிந்துக்கொண்டே இருக்கின்றன. ஒருநாளாவது ஒருகணமாவது இலக்கிய வாசிப்பு வீண் என்று எண்ணியதில்லை. ஆயுள் போதாதே என்ற வருத்தம்தான். அதனால் சிறுவயதிலிருந்து எழுதும் கரங்களை நோக்கி ஏங்கி வந்துள்ளேன். . அதில் ஒன்றாக என் கரமும் இருக்க வேண்டும் என்றாசை இயல்பாகத் தோன்றும்தானே..  வாழ்ந்த அறிந்த வாழ்க்கையை பதிவு செய்வது நான் இங்கிருந்தேன் என்பதன் அர்த்தம்  என்பதால் எழுத விரும்புகிறேன்.

இரண்டாவதாக காலத்தை வெற்றி கொள்ளும் பேராசை. அப்பனும் முப்பாட்டனும் என்னவாக வாழ்ந்தார்கள் என்பதற்கான எவ்வித சுவடுகளும் இம்மண்ணில் இல்லை. அவர்கள் என்ன நினைத்தார்கள் காலத்தோடு என்ன பேசினார்கள் எனபதை இன்று அறிந்துகொள்ள வழியில்லை. வாழ்ந்து பெற்ற திறப்புகளை மடிந்து உடன்கொண்டு சென்றுவிட்டனர்.

படைப்பாளிக்கு காலத்தை வெல்லும் வரத்தை இயற்கை அளித்துள்ளது. சராசரி மனிதனுக்கு எண்பதாண்டு அதிகபட்ச வாழ்க்கை என்றால் ஒரு படைப்பாளிக்கு அதை இருமடங்காக அவன் படைப்புகள் வழங்குகின்றன. ஒரு படைப்பாளி எழுதுவதன் மூலம்  ஒரு பண்பாட்டுவெளியை, மானுட சிந்தனையை, மண்ணின் வேர்களை நிலைப்படுத்திச் செல்கிறான். தொடர் கண்ணியாக இணைந்து மனிதகுலத்தை உந்தித் தள்ளுகிறான். இன்றும் நினைத்த நேரத்தில் கம்பனும் வள்ளுவனும் பாரதியும் என்னோடு உறவாடுகிறார்கள். நேற்றும் இன்றும் நாளையும் அவர்கள் அவர்களைத்தேடி செல்கிறவர்களோடு உறவாடும் நல்வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். அப்பேற்றினை நினைக்கும்போது நான் இங்கு இறப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்ற ஆணவத்தை அளிக்கிறது. என் மொழி உள்ள காலம்வரை நான் இருப்பேன். இதைவிட வேறென்ன வேண்டும்?

oOo

சுமார் இருபதாண்டுகளாக இலக்கியம் சார்ந்த எதாவதொரு நினைப்பு இல்லாமல் வாழ நேரிட்டதே இல்லை.சுபா மாதிரி  பாலகுமாரன் மாதிரி சுந்தர ராமசாமி மாதிரி ஜெயமோகன் மாதிரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆதர்ச எழுத்தாளர்களைப்போல எழுதி வாழவேண்டும் என்கிற ஆசைதான் வாழ ஊக்கப்படுத்துகிறது. இயற்பெயர் பா.சங்கர நாராயணன் , வயது 35, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் தற்போது வசித்து வருகிறேன். சொந்த மண் புளியங்குடி. பள்ளி மேல்படிப்பு. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு நாவல்களும் கவிதைகளும் எழுதிப்பார்த்தது உண்டு. நண்பர் ஒருவர் முதலில் தமிழில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் கற்றுக்கொள். அதன்பின் எழுத ஆரம்பி என்றார்.  முக்கியமான அனைத்து நவீன தமிழ் படைப்பாளிகளையும் தீிவிரமாக வாசித்தேன். சுந்தர ராமசாமி ஒரு கடிதத்தில் இலக்கியம் சோறுபோடாது  வேலை ஒன்றைத் தேடிக்கொள்ளுங்கள் அதுவும் அரசு வேலை என்றால் சிறப்பு என்கிற தொனியில் அறிவுறுத்தினார். அதுவரை ஜவுளிக்கடை வேலை போர்வை தயாரிப்பு நிறுவன வேலை என்று போனது. காதல் திருமணத்தை தொடர்ந்து அரசு வேலைக்கு முயன்றேன். முயன்று பெற்ற வேலை இன்று ஆளைக்கொல்லுகிறது. ஒரு வீம்பிற்காகத்தான் சட்டென்று எழுத வேண்டும் என்கிற ஆசை கொந்தளிப்பாக வெளிப்பட்டது. நேரமின்மையின் காரணமாகவும் சிறுகதைகள் குறித்த பெரிய மரியாதை காரணமாகவும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என் முதல் கவிதையை பதாகையும் முதல் சிறுகதையை மலைகள்.காம்  வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தின. கவிதைகளை விட மிகப்பொிய நாவல்கள் எனக்கு விருப்பமாக உள்ளன. வெற்றியோ தோல்வியோ அவற்றை எழுதியே தீருவேன். நித்ய சைதன்ய யதியின் மீதான பிரமிப்பால் அவர் பெயரைப் புனைப்பெயராக எடுத்துக்கொண்டேன். மீண்டும் கடந்த ஓராண்டாக எழுதி வருகிறேன்.