ஜிஃப்ரி ஹாசன்

கடலெனும் பெருவெளி

-ஜிஃப்ரி ஹாஸன் – 

எல்லாவற்றையும்
அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது கடல்
தன் உடலில் நீந்திச் செல்பவர்களை
கடலில் கட்டித் தழுவும் காதலர்களை
அலைகளைக் கண்டு ஒதுங்கிச் செல்லும்
ஒரு கர்ப்பிணியை
கரைகளில் புரளும் குழந்தைகளை
அமைதியாய் இரசிக்கிறது கடல்

கடற்கரையில் கூடும் மனிதர்கள்
துயருற்ற வானம் போல்
ஓங்கி அழும் ஓசையை
கடல் தன் பேரோசையால் மறைக்கிறது
கடல் போல் குமுறும் தங்கள் மனஓசையை
கவலை தோய்ந்த மனிதர்கள்
கடலோசையில் கேட்டனர்.

கடலின் இசை அதன் துயர் குறித்ததா?
அல்லது அதன் மகிழ்ச்சியைக் குறித்ததா?
கரை மனிதர்கள் குழம்பியபடி கலைகின்றனர்.

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் – எஸ்.ரா.வின் காகிதப்பறவைகள் கதை கிளர்த்தும் சலனங்கள்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

தமிழ்ச்சிறுகதையில் இருவேறுபட்ட பரிமாணங்களை மொழிசார்ந்து பரீட்சித்துப் பார்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். எளிமைக்கு மாற்றான ஓர் இறுக்கமான கதைமொழியைக் கொண்ட கதைகளையும் எழுதினார். அதேபோன்று, ஓர் அவசர வாசிப்பில் கூட வாசகன் கதையை உட்கிரகித்துக்கொள்ளும் வகையில் மிக எளிமையான மொழிக் கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார். எஸ்.ரா. வின் இந்தப் படைப்பு நுட்பம் அவரது வாசகப் பரப்பை விரிவுபடுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்தியச் சிறுகதைகள் மிக எளிமையான மொழியில் ஆனால் வாழ்க்கையின் ஆழமான பக்கங்களையும், ஆழமான உணர்ச்சிகளையும் பேசும் முனைப்புக் கொண்டவையாக இருக்கின்றன. அதேநேரம் கடந்த காலத்தின் கவனிக்கப்படாமல் தவறிப்போன இந்திய வாழ்க்கையின் வரலாற்றின் ஏதோ ஒரு தருணத்தை மிகைக் கற்பனைகளின்றி, மிகை அலங்காரங்களின்றி இன்றைய வாழ்க்கைக்கும் வாசக இரசனைக்கும் நெருக்கமாக நின்று பேசுகின்றன. அவரது சமீபத்திய சிறுகதையான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.

ஜேம்ஸ் ஜொய்ஸின் கதைகளில் நிகழும் நாடகீயத்தன்மையும், துயர வெளிப்பாடும் எஸ்.ரா.வின் சில கதைகளில் வெளிப்படுவது கவனிக்கத்தக்க இன்னொரு குணாம்சம். அவரது சமீபத்தியக் கதைகளில் காகிதப்பறவைகள் இலகுவில் கடந்து சென்றுவிட முடியாதபடி இந்தக் குணாதிசயத்தால் நிரம்பி நிற்கும் கதையாகத் தெரிகிறது.

மனவளர்ச்சி குன்றிய, சரளமாகப் பேச முடியாத, திக்குவாய் சிறுமியான ஸ்டெல்லாவின் மனவுலகும் வாழ்வும் பற்றிய ஓர் உயிரோட்டமான சித்திரம் அது. ஸ்டெல்லா வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. தாயற்ற பிள்ளை என்பதால் வீட்டில் சமையலுக்கு உதவியாக இருந்தாள். மனவளர்ச்சி இல்லாததால் பள்ளிக்கூடமும் செல்வதில்லை. வீடே அவளது உலகமாக இருக்கிறது. வீட்டில் வசிப்பவர்களும், வீட்டுக்கு வருபவர்களும் மட்டுமே அவளுக்கான மனிதர்கள். அதற்கு வெளியே அவளுக்கு ஒரு வாழ்க்கை இல்லை. அவளது ஒரே பொழுது போக்கு காகிதப்பறவைகள் செய்வதுதான்.

அவளது தந்தை மார்டின் ஒரு தபால்காரர். தனது பிள்ளைகள் குறித்து மிகுந்த ஏக்கம் கொண்டவர். பலசரக்குப் பொருட்கள் கொடுப்பதற்காக அவள் வீட்டுக்கு வரும் சுபாஷ்தான் அவளது நண்பன். அவளது உலகத்தைப் புரிந்துகொண்டவன். அல்லது புரிய முயற்சிப்பவன். அவன் ஸ்டெல்லா காகிதப்பறவைகள் செய்வதை அருகிலிருந்து பார்த்திருக்கிறான். அவள் செய்யும் பறவைகளை முதலில் வானத்துக்கு காட்டிவிட்டு தன்னோடு வைத்துக் கொள்வாள். சில பறவைகளைக் கொண்டு வீட்டை அலங்கரிக்கவும் செய்வாள். அவள் தன் பறவைகளை தலைமாட்டில் வைத்துக் கொண்டே உறங்கச் செல்வாள். அவள் சாப்பிடும்போது கூட தன்னோடு ஒரு காகிதப் பறவையை வைத்துக் கொண்டாள். அவளது தந்தை மார்டின் தனது வீடு பறவைகளின் ஆலயமாக மாறிவருவதை சுபாஷின் தாத்தாவிடம் சொல்வார்.

நான் செய்த பறவைகள் என்னைப் போலவே வாய் பேசாது என்பாள் சுபாஷிடம் தன் திக்குவாயால். இந்தத் தருணம் ஒரு துயரார்ந்த வாழ்வின் மீதான மன அதிர்வையும், கவனத்தையும் ஏற்படுத்தும் ஒரு கட்டம். ஜேம்ஸ் ஜொய்ஸ் உருவாக்கும் ஒரு துயரார்ந்த தருணத்தை ஒத்தது இது.

ஸ்டெல்லா 15 வயதாகியும் பூப்பெய்தவில்லை. ஆளும் மெலிந்து கழுத்து எலும்புகள் துருத்திக்கொண்டிருக்க சிக்குப்பிடித்த தலையோடு இருந்தாள். இந்த விவரணை வெறுமனே மனவளர்ச்சியற்ற சிறுமி குறித்த ஒரு தாழ்வான சித்திரத்தை அளிக்கக்கூடியதுதான். ஆனாலும் கதையின் மையமாக அவள் இருப்பதால் உடல்சார்ந்த இந்த விவரணம் அவளது வாழ்வு குறித்து எஸ்.ரா. ஏற்படுத்த விரும்பும் சமூக அக்கறைக்கு மிகத்தேவையான ஒன்றாக இருக்கிறது.

அதேநேரம், ஸ்டெல்லாவின் தங்கை மரியாவுக்கு அவளைப் பிடிக்காது. அவள் இந்த சமூகத்தில் எதிர்கொண்ட முதல் புறக்கணிப்பு அது. ஆனால் மரியாவோ திருடும் பழக்கம் கொண்டவளாக இருக்கிறாள். வீட்டிலும், வீட்டுக்கு வெளியிலும், பாடசாலையிலும் என அவள் சிறு சிறு திருட்டுக்களை செய்வாள். தன் பிள்ளைகள் ஏன் இப்படி என மார்டின் அடிக்கடி அழுவார்.

ஆனால் கதையில் மரியாவின் இந்தப் பழக்கக் குறையை விடவும் ஸ்டெல்லாவின் உடல்குறைதான் கனத்த துயரமாகவும், பெரும் வலியாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஸ்டெல்லாவை தமக்கொரு சுமை என அவளது தந்தை கருதினார். மார்டின்களுக்கு ஸ்டெல்லாக்கள் சுமையாகும் போது அது ஒரு விளிம்புநிலை மனிதனின்/ மனுஷியின் மீட்சியற்ற துயரமாக மாறுகிறது. இதிலிருந்து ஸ்டெல்லாக்களையும், மார்டின்களையும் மீட்பதற்கான ஒரு அந்தரங்க எதிர்பார்ப்பு எஸ்.ராவுக்குள் இருக்கக்கூடும். வாசகனுக்குள் அந்த உணர்வு மேலிடுவது அந்த படைப்பின் கலைக்கு அப்பாலான வெற்றியாக இருக்கிறது. காகிதப்பறவைகளில் அந்த வெற்றியை நோக்கி எஸ்.ரா. நகர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு கலைஞன் தன் படைப்புகளில் சிருஷ்டிக்கும் மனிதர்கள் வெறுமனே கதையோடு முடிந்துவிடுபவர்களல்ல. கதைக்கு அப்பாலும் அவர்களது வாழ்க்கை நீட்சி பெறுகிறது. விளிம்பில் இருப்பவர்களின் துயரம் என்பது சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி மீது எழுத்தாளன் படிய விடும் ஒரு குற்றவுணர்ச்சியாகத் திரள்கிறது. அவர்களை ஏதாவது செய்வதற்கு உந்துகிறது. அதுவே ஒரு கலைஞன் தன் படைப்பு குறித்துக் கொண்டிருக்கும் அந்தரங்கமான எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அவன் சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாகவும், கையளிக்க விரும்பும் பணியாகவும் இருக்கிறது. துயர்படிந்து இழிவடையும் வாழ்க்கையை கலையாக மாற்றி வாசகனின் இரசனைக்கு முன்னால் நிறுத்துவது மட்டுமே ஒரு எழுத்தாளனின் நோக்கமாக இருக்க முடியாது. அதற்கு அப்பால் அந்த வாழ்வையும் வலியையும் தன்னில் உணரும் ஒரு சமூகவெளி குறித்த ஒரு மறைமுக எதிர்பார்ப்பு ஒரு படைப்பாளிக்கு இருக்கிறது. ஸ்டெல்லாக்களினதும், மார்டின்களினதும் கண்ணீரைத் துடைப்பதற்கு அதிலிருந்து கரங்கள் எழுந்து வரும் என்ற பிரமாண்டமான ஒரு கனவும் ஒரு படைப்பாளியை உள்ளிருந்து இயக்கும் ஒரு விசையாக இருக்கிறது.

இக்கதையினூடே எஸ். ரா. விடமும் இந்தக் கனவும் எதிர்பார்ப்பும் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. மனிதர்கள் என்ற வகையில் அவரவருக்கான கனவுகளுக்கும் இருப்புக்குமான வெளி உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் கதையின் மய்யப் புள்ளியாகத் தெரிகிறது.

மனித வாழ்க்கையை கூர்ந்து நோக்கி அதன் வளமான பக்கங்களைக் கொண்டாடும் ஒரு படைப்பாளி அதன் துயரமான பக்கங்கள் குறித்த புகார்களையும், ஒவ்வொரு மனிதனின் இருப்புக்குமான குரலையும் தனது கதாபாத்திரங்களின் வழியே எழுப்பிக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு வாழ்வுக்குமான அர்த்தத்தையும் அதன் வழியே வாசகன் புரிந்து கொள்கிறான். ஒரு படைப்பில் கதாபாத்திரங்களின் வழியே மனிதர்களின் வெவ்வேறுபட்ட அகவுலகத்துக்குள்ளும், வித்தியாசமான கனவுகளுக்குள்ளும் சஞ்சரித்து மொத்த மனித இயல்பையும், இருப்பையும் புரிந்துகொள்வதற்கான இயலுமையை வாசகன் வளர்த்துக் கொள்கிறான். காகிதப்பறவைகளிலும் இந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

ஸ்டெல்லா மனவளர்ச்சி இல்லாதவள் என்பதால் புற உலகு குறித்து பெரியளவு எதிர்பார்ப்புகள் அவளிடம் இல்லை. மாறாக வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடுபவளாக இருக்கிறாள். வாழ்வு குறித்து மனிதர்களுக்கு இருக்கும் கனவுகளும், புகார்களும் அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு குழந்தையின் உலகுக்கும், அவளது உலகுக்குமிடையில் அவ்வளவு பெரிய இடைவெளிகள் இல்லை. எதிர்பார்ப்புகள் தரும் வலியிலிருந்தும், மன உளைச்சல்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்ட ஒரு சுதந்திர உணர்வுடன் இருத்தல் என்பது மட்டுமே வாழ்வு பற்றிய அவளது பிரக்ஞையாக இருக்கிறது. இது அவளுக்கு உரித்தான நிஜம் என்றால், அவளுக்கு வெளியேயான பிற மனிதர்களால் அவளுக்காக கட்டமைக்கப்படும் வாழ்வும், உலகும் முற்றிலும் வேறான நிஜத்தைச் சார்ந்ததாக இருக்கிறது. அவளது தந்தையான மார்டின், அவளது தங்கையான மரியா போன்ற அவளுக்கு மிகநெருக்கமானவர்களுக்கு ஸ்டெல்லாவின் வாழ்வு ஒரு பொருட்டாகவோ, அல்லது இயல்பானதாகவோ எடுத்துக்கொள்ள முடியாததாக, மிக மிகச் சுமையானதாக இருக்கிறது.

இந்தத் தருணம் கதையில் ஓரிடத்தில் ஸ்டெல்லா சுபாஷ் உரையாடலில் வெளிப்படுத்தப்படுகிறது-

நிஜப்பறவைகளை உனக்குப் பிடிக்காதாஎன்று சுபாஷ் அவளிடம் கேட்டான்.

நிஜப்பறவைகள் மனுஷங்களைப் பார்த்தா பயப்படும். சப்தம் போடும். எனக்குப் பயப்படுற பறவையைப் பிடிக்காதுஎன்றாள்.

அவளது நிஜத்துக்கும்- மற்ற மனிதர்களின் நிஜத்துக்குமிடையிலான இடைவெளியை வாசகன் உணர்ந்துகொள்ளும் தருணமாக அது இருக்கிறது.

மேலும், அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மிகப் பெரும் சமூகத்தளம் அவளது அந்த சின்ன உலகுக்கும், கற்பனையான வாழ்க்கை்குமான இடத்தை ஒருபோதும் வழங்கவே இல்லை. அவளை அங்கீகரிக்கவுமில்லை. இயல்புக்கு மாற்றான எதனது இருப்பையும் சகித்துக் கொள்ள முடியாத சமூக சூழலின் அவலத்தை எஸ்.ரா. சித்தரித்துக் காட்டுகிறார்.

ஆனால், ஸ்டெல்லா புற உலகை தனக்கு ஒரு சுமையாக ஒருபோதும் எடுத்துக்கொள்வதே இல்லை. யாரும் திட்டினால் அதற்கு எதிர்வினையாக சிரிக்க மட்டுமே செய்கிறாள். அப்போதுதான் வலி தெரியாது என்கிறாள். அவளது தங்கை மரியா ஸ்டெல்லாவைக் கடுமையாக வெறுப்பவள்.

ஸ்டெல்லா செய்யும் பறவைகளை அவளது தங்கை மரியாவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. பலமுறை அவற்றைக் கிழித்துப்போட்டிருக்கிறாள். ஆனால் அதற்காக ஸ்டெல்லா வருத்தம் கொண்டதில்லை. மௌனமாக அவள் முன்னால் சிலுவை குறி போட்டு கர்த்தர் உன்னைப் பார்த்துக் கொள்வார் என்பது போலக் கடந்து போய்விடுவாள்”.

இதுதான் அவள் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒரு வாழ்க்கை ஒழுங்கு. சாதாரண மனிதர்களால் நெருங்க முடியாத விசித்திர உலகம் அது. சாதாரண மனிதர்களே அவள் முன்னால் தோற்றுப் போகும் ஒரு விசித்திரத் தருணம் அது.

கதையில் ஓரிடத்தில் மரியா ஸ்டெல்லாவை கத்தரிக்கோலால் கன்னத்தில் குத்திவிடுவாள். அது பாரதூரமானதாக இருந்ததால் ஒரு மாதமளவில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி வந்துவிட்டது. இந்த நிகழ்வின் பின்னர், மரியா கொடைக்கானலிலுள்ள அவளது அத்தையின் வீட்டில் தங்க வைக்கப்படுகிறாள். ஆனால் ஸ்டெல்லா சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தத பின் யாருடனும் பேசவில்லை. மௌனமாகவே இருக்கிறாள். அவளது மௌனம் அந்த வீடு அவள் வாழ விரும்பிய வாழ்க்கைக்கும், அவளது கனவுகளுக்கும் உரிய இடமல்ல என்பதை அவள் முதன் முதலாக உணரும் தருணமாக இருக்கிறது.

தனது வாழ்வு பிறருக்கு சுமையாக இருப்பதை உணரும் தருணத்தில் ஸ்டெல்லா ஒரு புன்னகை போன்று அல்லது காற்றில் ஒரு சிலுவைக்குறி இடுவதைப் போன்று மிக எளிமையாக வீட்டிலிருந்தும் காணமல் போய்விடுகிறாள். யாராலும் அவளைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. விரிந்து பரந்த இந்தப் பெருவெளியில் எங்கே போய் ஒளிந்து கொண்டாள் என்று மார்டினால் கண்டறியவே முடியவில்லை. வீட்டிலிருந்து அவள் காணாமல் போனாலும் கதையிலிருந்து அவள் காணாமல் போவதில்லை. ஓர் அரூபச்சித்திரமாக கதையிலும் வாசக மனதிலும் நெளிந்துகொண்டிருக்கிறாள். ஒரு கனத்த துயரமாக மனதை அழுத்தத் தொடங்குகிறாள்.

 அவள் காணாமல் போனதை, ஒரு மனிதன் வீட்டிலிருந்து விடுபட்டுப் போய்விட்டால் உலகில் அவனைக் கண்டறிவது எளிதானதில்லை“. என்று எழுதுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எஸ். ரா. தன் கதையின் வழியே கண்டடைந்திருக்கும் இந்தப் புள்ளி மிக எளிமையானதல்ல. விளிம்பு வாழ்க்கை குறித்த மிக ஆழமான தத்துவம் அது. தன் வீடு தனக்கான உலகம் அல்ல என மனிதர்கள் உணரும் போது அவர்கள் தங்களுக்கான இன்னொரு உலகை நோக்கி சென்றுவிடுகின்றனர். ஸ்டெல்லாவும் அத்தகையதொரு உலகை நோக்கியே சென்றிருக்கிறாள். ஆனால் அந்த உலகம் எங்கே இருக்கிறது? என்பதுதான் வாசகனை உறுத்தும் கேள்வியாக எழுகிறது.

ஆனால் வீடு இப்போது மரியாவைக் கொண்டு ஸ்டெல்லாவின் வெற்றிடத்தை நிரப்பிக் கொள்கிறது. மரியாவும் திருந்தி தனக்குள் ஸ்டெல்லா இல்லாத வெற்றிடத்தை ஸ்டெல்லாவைப் போன்றே தன்னைப் பாவித்துக் கொண்டு காகிதப்பறவைகள் செய்வதன் மூலம் கடக்க விரும்புகிறாள்.

ஆனாலும் எத்தகையதொரு வாழ்வையும், எத்தகையதொரு மனிதனையும் தன்னுடையதாக உணரவும், நினைத்து ஏங்கவும் என இன்னும் மனிதர்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதும் எஸ்.ரா. வின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. அவரது இந்த நம்பிக்கையின் பிரதிநிதியாக சுபாஷ் வருகிறான். கதையின் முடிவில் வரும் விவரணம் இந்த நம்பிக்கையை அழுத்தமாகச் சொல்கிறது-

 “சில நாட்கள் சுபாஷ் பாலத்தின் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு தூரத்து தேவாலயத்தைப் பார்த்தபடியே இருப்பான்.

அந்திக் கருக்கலில் தனியே செல்லும் கொக்கினைக் காணும் போது  ஸ்டெல்லாவை நினைத்துக் கொள்வான்.

அவளது சிரித்த முகம் மனதில் தோன்றி மறையும் போது அவனை அறியாமல் கண்கள் கலங்கவே செய்யும்

000

 

 

அகாலத்தில் கரைந்த நிழல் – ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மாமா, இளைய சாச்சாவின் புதிய லுமாலா சைக்கிளையும், பெட்ரோல்மாக்ஸ் லைட்டையும் எடுத்துக் கொண்டு இருள் விலகியிராத அதிகாலை ஒன்றில் மாமியைக் கைவிட்டு விட்டு ஓடிப்போய் ஒரு வாரம் கழிந்து விட்டிருந்தது. மாமா ஓடிப்போன சம்பவம் வீட்டில் மாமியைத் தவிர வேறு யாரையும் பெரிதாக உலுக்கியதாகத் தெரியவில்லை. வாப்படம்மா கொஞ்சம் கடமைக்கு கவலைப்பட்டது போல் தெரிந்தது. இதுதான் நடக்கும் என்று அவர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் இருந்தது. வாப்படப்பா வழக்கம் போன்று தனது சாய்மனைக் கதிரையில் சாய்ந்திருந்தபடி குர்ஆன் ஓதுவதில் மூழ்கி இருந்தார்.

ஒரு வாரத்துக்குள்ளேயே மாமா ஓடிப்போன சோகம் மெல்ல மெல்ல உருமாறி சாச்சாவின் சைக்கிள் மீதும் பெட்ரோல் மாக்ஸ் மீதும் மய்யங் கொண்டது. அவர் அதையெல்லாம் எடுக்காமல் ஓடிப் போயிருந்தால் பரவாயில்லை என்பதைப் போல் வீட்டின் சூழல் வேகமாக மாறிக்கொண்டு வந்தது. மாமா யாருக்கும் தெரியாமல் ஓடிப்போன நாளிலிருந்து மாமியின் முகத்தில் சோகம் கவிழ்ந்திருந்ததைப் பார்த்தேன். தனக்குள்ளேயும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனக்கு வெளியேயும் அழுது தீர்த்தாள். வீட்டின் உள்ளேயோ அல்லது மலசலகூடத்துக்குள்ளிருந்தோ கதவைப் பூட்டிக்கொண்டு அவள் அழும் சத்தம் வீட்டின் இரைச்சலிலும் என் கூர்மையான காதுகளில் பட்டுத்தெறித்துச் செல்லும். அப்போது அழுகையும் புகை போன்றதுதான் என நினைத்துக் கொள்வேன். உள்ளே இருந்து கொண்டு எப்படி கதவைச் சாத்தினாலும் அது வெளியே கேட்டுவிடும். புகையும் அப்படித்தான். நான் மலசலகூடத்தின் உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு திருட்டுத்தனமாக பீடி அடித்த போது புகை திரள் திரளாக வெளியேறி என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது. மாமிதான் எனக்கு அடி கிடைக்காமல் காப்பாற்றிவிட்டாள். வீட்டில் யாரும் அவள் அழுகையை சட்டை செய்ததாகத் தெரியவில்லை. ஓடிப்போன மாமாவை தேடிச் செல்லவும் யாரும் முனையவில்லை. ஒரு நசிபட்ட பித்தளைச் செம்பு காணாமல் போனது போல வீட்டில் மாமியைத் தவிர வேறு யாருக்கும் நோகாத இழப்பாக அது இருந்தது.

பெரியம்மா மாமியைப் பற்றி வாப்படம்மாவிடம் திட்டிக்கொண்டிருந்தாள். வாப்படம்மாவின் மூத்த மருமகள் என்பதால் பெரியம்மா எப்போதும் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிடுவாள். அதிலும் மாமியை குற்றம் பிடிப்பதென்றால் அவளுக்குத் தனி விருப்பம் இருந்தது. பெரியம்மா நீண்ட காலமாகவே மாமியை உள்ளூர வெறுத்து வந்தாள். இந்த சம்பவம் மாமியைத் திட்ட அவளுக்கு வாய்ப்பாக ஆகிவிட்டது.

மாமிக்கு இப்படி நடந்தது இது மூன்றாவது முறை. இவரைக் கட்டுவதற்கு முதல் மாமி ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றிருந்தாள். ஆனால் அவளது முதல் திருமணத்தில் மட்டுமே அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதுவும் இரண்டு வயதில் காய்ச்சல் வந்து இறந்து போனது. மாமியின் முதல் திருமணத்தின் போது நான் குழந்தையாக இருந்தேனாம். அதனால் அந்த திருமணம் என் நினைவில் இல்லை.

எனக்கு எட்டு வயதாக இருந்தபோது மாமி இரண்டாவது முறையாக அவளை விடவும் 15 வருடங்கள் மூத்த கிழத்தோற்றத்திலிருந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். அவர் நெட்டைப் பனை மரம் போல் நெடுத்த ஒல்லியான உருவம். எப்போதும் முறிந்து விழலாம் என்ற தோற்றம். நரைத்த ஐதான முடி. முகத்தில் ஆங்காங்கே தாடி மயிர்கள் மலிக்கப்படாமல் இருந்தது. அது அவர் முகத்தை மேலும் அலங்கோலப்படுத்திக் காட்டியது. அவருக்கு 50வயது என்று இளைய சாச்சா கணக்குப் பார்த்துச் சொன்னார். மாமிக்கு அப்போது 35 வயதுதான் ஆகி இருந்தது.

“மறா அவரும் வாழ்றலியா” பெரியம்மா சாச்சாவை முறைத்துக் கொண்டு, இரகசியம் சொல்வது போல் சற்றுத் தாழ்ந்த குரலில் சொன்னாள். மாமி அவரைத் திருமண நாளன்றுதான் முதன் முதலாகப் பார்த்தாள். மாமாவைக் கண்டதும் மாமியின் முகத்தில் ஓர் ஏமாற்றச் சுழிப்பு படர்ந்து மறைந்தது. மாமியின் வெண்மையான முகம் ஆழ்ந்த சோகத்தில் இருண்டு போனது. எனக்கு அவளைப் பார்க்கையில் உள்ளுக்குள் வெப்பிசாரம் வெடித்தது. மாமா தன் காவிப் பற்களைக் காட்டி மாமியைப் பார்த்துச் சிரித்தார். அவர் வாய்க்குள் பற்கள் கூட முழுமையாக இல்லை என்பது தெரிந்தது. மாமி அவர் முகத்தைத் தவிர்த்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா அதன் பிறகு சிரித்ததை நான் காணவில்லை. அவரிடமிருந்து சுருட்டு வாடை வந்து கொண்டிருந்தது. அந்த நெடி அவரது பிறப்பிலிருந்தே அவரிலிருந்து வந்து கொண்டிருப்பது போன்ற ஆதிப் பிணைப்போடு வரும் கனத்த வீச்சாக இருந்தது.

“புறக்கும் போதே இவரு சுருட்டோடுதான் புறந்திருப்பார்” என்று சின்னச் சாச்சா மாமாவின் காதில் விழாதளவு தொனியைத் தாழ்த்திக் கொண்டு குறும்பாகச் சொல்லிச் சிரித்தார். பெரியம்மா சாச்சாவை மீண்டும் கடுப்பாகப் பார்த்தாள். மாமி கன்னிகை இல்லைதான் இருந்தாலும் பல்லே இல்லாத கிழவனுக்கு கட்டி வைக்கப்பட வேண்டியவளில்லை என வாப்படம்மாவிடம் ஒரு பெண் பேசிக்கொண்டிருந்தாள். வாப்படம்மா அவளது கதையை கவனத்தில் எடுக்காமல் வேறு கதைக்கு வேகமாகத் தாவினார். அந்தப் பெண்ணும் அதைப் புரிந்துகொண்டவள் போல் தன் முகத்தை வேறுபக்கமாகத் திருப்பி வைத்துக் கொண்டு இருந்தாள்.

நான் மீண்டும் மாமியையும் மாமாவையும் உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்றொரு வெறி மாமி மீதான பச்சாதாபத்தால் எனக்குள் தோன்றி மறைந்தது. அப்போது மாமி என்னை அழைத்து அவள் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அவள் விரல்களில் மருதோன்றி சிவந்து கருத்திருந்தது. தங்கக் காப்புகள் அவளது சிவந்த கைகளின் அழகை மெருகூட்டிக் குலுங்கின. வெளிநாட்டு வாசனை அவள் உடலின் முழுப்பாகத்திலிருந்தும் கிளம்பிக் கொண்டிருந்தது. அருகில் இருந்த மாமா சேர்ட்டின் இரண்டு மேல் பொத்தான்களைத் திறந்து வைத்துக் கொண்டு காற்றுக்கு ஏங்கினார். சேர்ட் காலருக்குள் நீல நிற கைக்குட்டை ஒன்றை மடித்து வைத்திருந்தார். அவருக்கு காற்று வீசும்படி பெரியம்மா என்னிடம் விசிறி ஒன்றைத் தந்து விட்டுப் போனார். நான் சடசடவென்று வீசத் தொடங்கினேன். அந்தக் காற்று அவரிடமிருந்து வந்த சுருட்டு நெடியை வேறு திசை நோக்கி மாற்றிக் கொண்டு சென்றது. பெரியம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஒரு கிழவனை மாமி திருமணம் முடிக்கப் போவதையிட்டு பெரியம்மாவின் முகத்தில் எந்தக் கவலையும் தெரியவில்லை. மாறாக அன்றைய நாள் மிக மகிழ்ச்சியான நாள் என்பதைப் போல அவளது முகமும் உடலும் பூரித்திருந்தன.

மாமி வெளிநாடு சென்றுதான் அவள் வாழப் போகும் அந்த வீட்டைக் கட்டினாள். அதுவும் அரையும் குறையுமாகத்தான் இருந்தது. அவள் அனுப்பிய பணம் முழுமையாக அவளது வீட்டைக் கட்ட செலவு செய்யப்படவில்லை என்ற குறை அவளிடம் இருந்தது. அவள் கிட்டத்தட்ட ஏழு, எட்டு வருடங்கள் பணிப் பெண்ணாக மத்திய கிழக்கில் தொழில் புரிந்தாள்.  அவளது சகோதரர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கும் அவளது பணம் கரைக்கப்பட்டது. எஞ்சிய பணத்தில்தான் அரைகுறையில் அவளுக்கொரு வீடு.

இந்த இரண்டாம் கலியாணம் முடிந்த மறுநாள் மாமி எல்லாவற்றையும் வாப்படம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதாள். வாப்படம்மா அவளை ஏசுவது போலவும், சமாதானம் செய்வது போலவும் மாறி மாறி பாவனை செய்து கொண்டிருந்தாள். மாமி கேவிக் கேவி அழுத போது அவளது வெண்மையான முகம் சிவந்து வீங்கிக் கொண்டு வந்தது. என்னையறியாமல் நானும் அழுது கொண்டு நின்றிருந்தது வாப்படம்மா என்னை அதட்டிய போது தான் எனக்குப் புரிய வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து மாமி அந்த சுருட்டுக் கிழவரிடமிருந்தும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வெளிநாடு சென்றாள்.

2

சென்ற கிழமை ஓடிச்சென்ற மாமா மூன்று மாதங்கள்தான் மாமியோடு வாழ்ந்திருப்பார். அவரது சொந்த ஊர் குருணாகலை என்று மாமி சொன்ன ஞாபகம். எங்கள் ஊரில் பக்கோடா கலிலின் மலிகைக் கடையில் தினக்கூலிக்கு வேலைசெய்து கொண்டிருந்தார். கடைக்கார முதலாளியின் சிபாரிசின் பேரில் மாமிக்கு அவர் திருமணம் முடித்து வைக்கப்பட்டார். மாமி ஏற்கனவே இரண்டு திருமணங்கள் முடித்திருந்ததால் மாமாவைப் பற்றி பெரிதாக யாரும் விசாரிக்கவில்லை. அவர் அவரது ஊரில் திருமணம் முடித்திருந்தாரா இல்லையா விவாகரத்துப் பெற்றவரா என்றெல்லாம் விசாரித்துப் பார்க்காமலே மாமி அவரது கழுத்தில் கட்டப்பட்டாள். திருமண நாளன்றும் வாப்படப்பா வழக்கம் போன்று அவரது சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

ஓடிச் சென்ற மாமா அநேகமாக இப்போது தனது சொந்த ஊருக்குச் சென்றிருக்கலாம். அல்லது தலைநகரில் வழக்கம் போல் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நகரத்தின் சந்தடிமிக்க பிஸியான வர்த்தகத்தில் மூழ்கி ஒரே நாளில் மாமியை நிரந்தரமாக மறந்தும் போயிருக்கலாம். அல்லது ஊரில் அவருக்கு என்னைப் போல் பிள்ளைகள் இருக்கலாம். மீண்டும் ஒரு தந்தையாக அவர்களை அவர் சென்றடைந்திருக்கலாம்.

இனி மாமியை என்ன செய்வது என்ற தீர்மானம் எடுக்கும் கூட்டம்தான் வாப்படம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் நடந்து கொண்டிருந்தது. வாப்படம்மாவும் வாப்படப்பாவும் இப்போது தங்கி இருக்கும் வீடு மாமியின் தங்கையான என் சின்ன மாமியின் வீடு. அவர் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாக இருப்பதால் அவரது வீட்டில்தான் அவர்கள் தங்கி இருப்பார்கள். அதனால் மாமியின் அரைகுறை வீட்டில் மாமியைத் தனியே வைக்க முடியாது. அதனால் மாமியைத் திரும்பவும் வெளிநாட்டுக்கு அனுப்புவதுதான் சரி என பெரியம்மா பிடிவாதமாக இருந்தாள். மாமி நீர்கோர்த்த கண்களோடும், அழுது புடைத்த முகத்தோடும் மௌனமாக இருந்தாள். ஆனாலும் பெரியம்மாவின் தீர்மானத்தை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவள் முகத்தில் சூசகமாகத் தெரிந்தது.

“இனி இவளுக்கு கலியாணமே தேவல்ல. புடிச்சி வெளிநாட்டுக்கு அனுப்பிடுங்க. திரும்பயும் போய் வரட்டும்”

குடும்பம் முழுமையாக பெரியம்மாவை ஆமோதிப்பது போல் அவளின் முரட்டுத் தனமான குரலில் திரண்டு எழுந்த பேச்சை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. மாமியின் விருப்பு வெறுப்புகள் கூட கவனத்திற்கொள்ளப்படாத ஓர் இறுக்கமான சூழல் அங்கே நிலவிக் கொண்டிருந்தது. மாமியே கூட எதுவும் பேசாமல் சிறிது நேரம் ஆழமான மெளனத்தில் உறைந்து போயிருந்தாள்.

“தனிய இருந்து என்ன செய்யப் போறாய்? வெளிநாட்டுக்குப் போனா கொஞ்சங் காசச் சம்பாதிச்சிட்டு வரலாம்.” பெரியம்மா திரும்பத் திரும்ப அதே பல்லவியையே பாடினாள்.

“இல்ல, நான் இனி வெளிநாட்டுக்குப் போமாட்டன். இவ்வளவு காலமும் நான் கஷ்டப்பட்டு அனுப்புன காசிக்கு என்ன நடந்திருக்கு. நான் இனிப் போரல்ல..”

விம்மலுடன் மாமியின் வாய் திறந்தது.

பெரியம்மா விடாமல் திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்தாள். மாமி என்ன நினைத்தாளோ தெரியவில்லை திடீரென்று வெறிகொண்டவள் போல் கத்தினாள். பெரியம்மா சில நொடிகள் மிரண்டு எழுந்துவிட்டாள்.

பின்னர் ஒவ்வொருவராக மௌனமாகக் கலைந்தனர். வாப்படப்பா சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு குர்ஆனில் மூழ்கி இருந்தார். அவருக்கு சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் நிஜ உலகத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர் போல் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். மாமி அவரை சில நொடிகள் வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் கலைந்துவிட்டிருந்த அந்த மாலைப்பொழுதில் நான் மாமியின் காதருகே சென்று மெல்லக் கேட்டேன்

”மாமி நாம ரெண்டு பேரும் மாமாவத் தேடிப் போவமா?” அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. திடீரென்று உடைந்து அழத்தொடங்கினாள். முகத்தை முந்தானையால் மூடிக்கொண்டு சுவரோடு ஒட்டித் தரையில் குந்திக் கொண்டு. நான் அதனை அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்பதால் யாரும் காணு முன்னமே அங்கிருந்து தலைதெறிக்க ஓடினேன்.

3

மாமி சில நாட்களாக யாருடனும் எதுவும் பேசாமல் மௌனமாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்போதும் முணுமுணுக்கும் பாட்டு வரிகளைக்கூட இப்போது அவளிடமிருந்து கேட்க முடியவில்லை. எனினும் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடாமலும் வாழ்வதற்கான உத்திகளை மனதுக்குள் வரைந்துகொண்டும் முன்செல்லும் முடிவை நோக்கி அவள் சுயமாக நகர்ந்து கொண்டிருந்தாள். அந்த முடிவு ஓர் ஆத்ம விசையுடன் அவளைத் தாக்கியது. சுவரில் சாய்ந்து கொண்டு தரையில் குந்தியிருந்தவள் திடீரென்று தீர்மானத்துக்கு வந்தவள் போல் உடலை நிமிர்த்தி எழுந்தாள். பெரிய அலையொன்று முறுகித் திமிறி உயர்ந்து எழுவதைப் போல அவள் எழுந்தாள். அப்போது அவள் கண்களில் உலக மனிதர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் திரண்டிருந்ததைப் பார்த்தேன்.

யாரும் நுழைய முடியாத அடர்ந்த காட்டுக்குள்ளும் ஒரு வெட்டவெளி இருப்பதைப் போல வாழ்வதற்கான ஒருவெளியை அவள் கண்டடைந்தாள். அந்த வெளியில் ஒரு பயணி தங்கிச் செல்வது போல் தன்னை சுதாரித்துக் கொண்டு வாழ்க்கையை வடிவமைத்தாள். மாமா அவள் மனதிலிருந்தும் தேய்ந்து அழிந்து அரூபமாகக் கரைந்து விட்டிருந்தார். இருளில் கலந்து விட்ட நிழல் போல் அவர் உருவம் அவளிடமிருந்து அடையாளம் காண முடியாத மனத் தொலைவுக்குச் சென்றுவிட்டது.

“நான் வீட்ட போகப் போறன். தனியா வாழப் போறன். இனி எனக்கு கலியாணமெல்லாம் வாணா.” அவள் வாப்படம்மாவிடம் உறுதியாகச் சொன்னாள்.

“தனியா ஒரு பொம்புள நீ எப்புடி இருப்பாய்? உண்ட வீடும் அறுக்கல்லாம அரையும் குறையுமாக் கிடக்கு” வாப்படம்மா சந்தேகமாகக் கேட்டாள்.

“ராவெய்ல காவலுக்கு இவன் வருவான் எனடா?” என என்னைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள். என்னை முதன் முதலாக ஒரு ஆண் மகனாக அவள் ஏற்றுக் கொண்டதில் எனக்குள் பிரளயமொன்று பீறிட்டது. இனம் புரியாத ஒரு சக்தி என் உடலெங்கும் பரவியது போல் உணர்ந்தேன். ஓர் ஆணுக்கான தகுதியை நான் அடைந்துவிட்டதாக அவள் நினைத்துவிட்டாள். அநிச்சையாக என் தலை அசைந்தது.

மாமா ஓடிச் சென்ற அந்த நாளுக்குப்பின் மீண்டும் மாமி தன் அரைகுறை வீட்டுக்கு என்னையும் அழைத்துக் கொண்டு சென்றாள். மாமி தன் வாழ்க்கையை முன்கொண்டு செல்வதற்கு தன் சொந்தக் கால்களையும், கைகளையும் மட்டுமே நம்பி இறங்கினாள்.  சிறுவர்கள், பெண்களுக்கான ஆடை வியாபாரம் ஒன்றைத் தொடங்கினாள். வீடு வீடாகச் சென்று விற்பது என்றொரு புதிய வியாபார முறையாக அது இருந்தது. ஊரில் அந்த வியாபார முறையை தொடக்கி வைத்த முன்னோடிகளுள் ஒருத்தியாக அவள் இருந்தாள்.

சனியும், ஞாயிறும்தான் நான் மாமியின் வியாபார உதவியாளனாக இருந்தேன். மற்ற நாட்கள் பள்ளிக்கூடம் போய் விடுவேன். ஆனாலும் எனக்கு பள்ளிக்கூடம் போவதை விடவும் மாமியின் வியாபார உதவியாளனாக இருப்பதே அதிகம் பிடித்திருந்தது. ஆனால் மாமி அதை விரும்பமாட்டாள். பள்ளிக்குப் போ என்று துரத்தி விடுவாள். எனினும் அவளால் ஒருபோதுமே புரிந்துகொள்ளப்படாமல், வெற்றிகொள்ளப்படாமல் போன ஆண்களின் உலகம் அவளைப் பின்தொடர்ந்தபடியே இருந்தது.

ஒவ்வொரு நாளும் மாமி தெருக்களில் வைத்து சீண்டப்பட்டாள். அசிங்கமான வார்த்தைகளால் ஆழமான மனக்காயங்களால் அவளது வாழ்வு புன்னாகியது. முடிந்தளவு அவள் அங்கேயே வார்த்தைகளாலும் உடல் மொழியாலும் எதிர்வினையாற்றிக் கொண்டே வருவாள். ஒரு முள்ளுத் துண்டைக் கவ்வுவதற்காக காத்துக்கிடக்கும் நாய்கள் போல் வெளியில் மனிதர்கள் அவளுக்காக காத்துக் கிடந்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான ஒரு சாதாரண விளையாட்டுப் போல் எனக்கு அது தெரிந்தது. உண்மையில் அது பெண்ணின் மீதான இளக்காரமான பார்வையிலிருந்தும் ஆண்களின் காமத்திலிருந்தும் முளைத்த முரண்பாட்டின் விளைவாக அது இருந்தது. அவளது அன்றாட அனுபவங்கள் அழிக்க முடியாத தழும்புகளாக மனதில் பதிந்து அவளை கீறிக் கிழித்தன.

அன்று பக்கத்து ஊருக்குச் சென்று விற்பனைக்காக ஆடைகள் வாங்கி வருவதற்காக பஸ்ஹோல்ட்டில் நின்று கொண்டிருந்தோம். வேறு யாரும் இல்லை. மாமியின் கையில் அவளது வழமையான சற்று ஊதிப் பெருத்த பயணப்பை இருந்தது. அந்தப் பைக்குள் அவள் அன்றைய நாளுக்குத் தேவையான அனைத்தையும் அடக்கி விடுவாள். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவன் மிதிசைக்கிளில் வந்து கொண்டிருந்தான். மாமியின் அருகே வந்ததும் மிகத் தாழ்ந்த குரலில் கிட்டத்தட்ட மாமிக்கு மட்டுமே கேட்கக்கூடிய அடக்கமான தொனியில்,

“யாரக் காத்துக்கிட்டு நிற்காய்..? என்னோட வாரியா..” என்றான் மிக அலட்சியமாக கண்களைச் சிமிட்டிக்கொண்டே.

மாமியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. முகம் தணலாக சிவந்து வந்தது. செருப்பைக் கழற்றுவது போல் குனிந்து கொண்டே அவன் மீது வசவுகளை உமிழ்ந்தாள். சைக்கிளை நிறுத்தாமலே அவன் தொடர்ந்தும் மிதித்துக் கொண்டிருந்தான். எந்தக் குற்றவுணர்ச்சியும் அவன் முகத்தில் இல்லை. ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி விட்டோம் என்ற பெருமிதம்தான் அவன் முகத்தில் பொங்கியது போல் தெரிந்தது. அவன் எதுவும் நடக்காதது போல் அநாயாசமாக சைக்கிளை மிதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான். யாரும் மாமியிடம் எதுவும் கேட்கவில்லை. அவனையும் யாரும் எதுவும் செய்யவுமில்லை. சுரணையற்ற மனிதர்களைப் போல் பலரும் அலட்சியமாக எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். நான் இதை எல்லாம் பார்த்து இரசிக்கும் ஒரு பருவத்திலேயே இருந்தேன்.

மாமி ஆண்களின் காமச்சேட்டையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு புதிய உத்திகளைக் கைக்கொள்ளத் தொடங்கினாள். அவள் தன்னை அலங்கோலப்படுத்திக் கொண்டாள். மாமியின் உடலில் முதுமையின் சுவடுகள் எதுவும் இல்லை. ஆனாலும் முதுமையின் சாயலைத் திட்டமிட்டே தன் உடலில் படியவிட்டாள்.  அவளுக்கு எந்தவிதத்திலும் பொருந்தாத மட்கிப் பொலிவிழந்த நிறத்தில் மிகப் பழைய சேலையும் பர்தாவும் அணியத் தொடங்கினாள். ஒரே ஆடையை குறைந்தது மூன்று நாட்களுக்காவது அணிந்துகொள்வாள். கோழியின் சடையிலிருந்து வரும் ஒருவித நெடி ஆடையிலிருந்து வந்தது. முன்பு அவளிடமிருந்து வரும் வெளிநாட்டு வாசனையை முகர்வதற்காக அவள் பக்கத்தில் நான் மூக்கை கூர்மையாக்கிக் கொண்டு குந்தி இருப்பேன். அவள் முகத்திலிருந்த இலட்சணத்தை சிரமப்பட்டு மறைத்தாள். புன்னகையை இழந்தாள். மகிழ்ச்சியான மிகவும் இனிமையான நளிமனமிக்க அவளது உடல் முறுகி இறுகியது.  காற்றில் கரைந்த நிழல் போல் அவள் தன் உருவைக் கரைத்துக் கொண்டு வந்தாள்.

அவள் தன்னோடு எப்போதும் தூக்கிச் செல்லும் பையின் அளவும் மாறியது. சற்றுப் பெரிதாக ஊதிப் பெருத்தது. அவளது மட்கிப் போன ஆடைகளுக்குள்ளும், ஊதிப் பெருத்த பைக்குள்ளும் வேண்டுமென்றே அவளது அழகு அவளால் மறைக்கப்பட்டது. மேகங்கள் நிலவை மூடிக் கொண்டதைப் போல. ஆனால் அதன் உள்ளே இருக்கும் அழகை நான் அறிவேன். மேகம் விலகியதும் பூரண சந்திரன் ஜொலிப்பதைப் போல வியாபாரம் முடித்து வீடு திரும்பியதும் அவள் தன் வேஷத்தைக் கலைத்துச் சிரிப்பாள். அவள் அழகு ததும்பி வழிந்து கொண்டிருக்கும். அவளது சிவந்த உடல் அயன் பண்ணப்பட்ட ஆடை போல் நேர்த்தியாய் மிளிரும்.

அவளது உத்தி அவளுக்கு கொஞ்சம் வெற்றியளித்தது. வீதியில் அவளுக்குத் தொல்லைகள் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டு வந்தன. ஆனாலும் அவளது துரதிஸ்டம் மொத்தமும் ஒரு ஆணாக மாறி வீடு தேடி வரத்தொடங்கியது.

4

மெலிதாக இருள் கவியத் தொடங்கும் போதே அவர் வந்துவிடுவார். மாமி அவரை வெறுப்பாகப் பார்த்துக் கொண்டு கதவருகில் அசையாது நின்றிருப்பாள். ஆனால் அவர் வரும் ஒவ்வொரு முறையும் அவரது முகத்தில் பெரிய மகிழ்ச்சி வழிந்தோடிக்கொண்டிருக்கும். அந்தத் தருணம் மாமியின் முகம் அடையும் உக்கிரத்துக்கு முற்றிலும் மாற்றானது அவர் முகம். நான் முற்றத்தில் நிற்கும் ஜே மரத்தின் கீழ் பாய் போட்டு படித்துக் கொண்டிருப்பேன். நன்றாக இருள் கவிழ்ந்து புத்தகத்திலுள்ள எழுத்துகள் உருத் தெரியாமல் மறையும் வரை நான் படித்துக் கொண்டிருப்பேன்.

சில நாட்களாக அவர் தொடர்ந்து வரத் தொடங்கி இருந்தார். அவர் இருள் செறிவாகும் நேரத்தில்தான் வருவது வழக்கம். அப்போது கூட என் சிறிய மண்டைக்கு அவர் பற்றி வேறுவிதமான சித்திரம் உருவாகவில்லை. அவர் வருகையை பற்றி எனக்குள் எந்த சலனமும் ஏற்பட்டிருக்கவில்லை. நாளடைவில் மாமி அவர் வருகையை விரும்பவில்லை என்பதை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். நான் அப்போதுதான் சைக்கிள் செலுத்தக் கற்றுக் கொண்ட புதுப் பழக்கம். அதனால் சைக்கிள் ஓடும் ஆசை உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. அவர் வந்ததும் சிலநாட்களில் எனக்கு அவரது புதிய லுமாலா சைக்கிளை ஓட்டிப் பார்க்கத் தந்துவிடுவார். நான் ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு வரை சென்று விடுவேன். அதுவரை அவர் மாமியோடு பேசிக்கொண்டிருப்பார்.

அவர் எங்களுக்கு தூரத்து உறவினராக இருந்தார். ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதர். இராணுவத்தில் லான்ஸ் கோப்ரலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். தலைமுடியை ஒருபக்கமாகச் சரித்து மண்டையோடு ஒட்டி வைத்ததைப் போல் நேர்த்தியாகச் சீவி இருப்பார். அவர் தலைகூட எப்போதும் ஒரு பக்கம் கெளிந்தே இருக்கும். அவர் நடக்கும் போது தலை மேலும் முன்னோக்கி சரிந்து விழுந்து விடுபரைப் போலவே நடப்பார். அது இராணுவப் பயிற்சியிலோ அல்லது யுத்தத்திலோ அவர் உடலில் ஏற்பட்ட கோளாறாக இருக்கலாம் என அப்போது எண்ணிக் கொள்வேன். ஆனால் அவரது கெளிந்த தலையும் கெளிந்த நடையும் என்னை வசீகரித்திருந்தன. கையிலோ முகத்திலோ ரோமங்கள் எதுவும் இல்லை. எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பு எப்போதும் அவர் உடலில் இருந்துகொண்டே இருக்கும். மணிக்கட்டு வரை வழுகிக் கிடக்கும் தளர்வான கோல்ட் நிற வொட்ச் ஒன்றை கட்டியிருப்பார். அதன் மீதும் ஒரு அசட்டுக் கவர்ச்சி எனக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக அதே நிறத்திலேயே அரைக் கைச் சட்டை ஒன்றை அணிந்திருப்பார். கருப்புக் கால்சட்டையைத் தவிர அவர் வேறு நிற கால்சட்டைகள் அணிந்து வந்ததைக் காணவில்லை. அவரது உடலைப் போன்றே ஒரு கண்ணும் மிகப் பளபளப்பாக இருந்தது. பிறகு நன்றாக உற்றுப் பார்த்த போதுதான் அது பொய்க்கண் எனத் தெரிய வந்தது. போர் அவரில் ஏற்படுத்திய தழும்பு அது.

அவராகவே வீட்டுக்குள் வந்து நாட்காலியில் உட்கார்ந்து கொண்டு மணித்தியாலக் கணக்கில் மாமியுடன் பேசிக்கொண்டிருப்பார். அவர் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார். மாமி சுவரில் சாய்ந்து தரையில் குந்திக் கொண்டு அலட்சியமாக அவரது கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பாள். “ம்..ஆ..” என்பதைத் தவிர வேறு எதிர்வினைகள் அவளிடமிருந்து வருவதில்லை. அதுவும் சுரத்தையில்லாமல் ஆழத்திலிருந்து வரும் குரல்போல மங்கியே கேட்கும்.

அவள் முகத்தில் வெறுப்பும் கோபமும் படர்ந்து வரும். அவளது அழகிய சிவந்த முகத்தில் ஒரு பெரிய மருப் போல் அந்த உணர்ச்சி வெளியாகி அவள் முகம் இறுகும். கண்களின் வளைவான இடுக்குகளில் நீர் கோர்த்து மின்விளக்கொளியில் பளபளப்பது தெரியும். சற்றைக்கெல்லாம் உடைந்து விடுபவளைப் போல் தெரிந்தாலும் அந்த கொந்தளிப்பை தனக்குள் அடக்கிக் கொண்டு “ம்ம்” என்ற ஒலியை தொடர்ந்தும் எழுப்பிக் கொண்டிருப்பாள். அவர் அதைக் கண்டு கொள்ளாமலே மாமியை எதையோ நோக்கி கதையால் அழைத்துச் செல்லும் உறுதியான தீர்மானத்தோடு இருப்பார். அப்போது அவர் தலைகுனிந்திருக்கும். கைகளை சடசடவென ஆட்டியபடி இருப்பார். அவரது ரிஸ்ட் வொட்ச் கலகலலென ஓசை எழுப்பியபடி மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். நான் மறு மூலையில் குந்தி இருந்து கொண்டு மாமியையும் அவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போது மாமிக்கு இது ஒரு புதிய பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. வீதியைச் சமாளிக்கத் தெரிந்த அவளுக்கு வீட்டைச் சமாளிப்பதும் தெரியாமலிருக்கப் போவதில்லை. கோப்ரல் தொடர்ந்தும் வரத்தொடங்கிவிட்டார். மாமிக்கு கொஞ்சமும் பிடிக்காத அருவருப்பான ஒரு மனிதனாக அவர் மாறினார்.

மாமியின் போக்கில் திடீரென்று சில மாறுதல்கள் நிகழத் தொடங்கின. திடீரென்று விசித்திரமாகப் பேசத் தொடங்கினாள். நீண்ட நேரமாகத் தொழுதாள். சில நாட்களில் நேரங்கெட்டும் தொழுதாள். நீண்ட பிரார்த்தனைகள். அது அவள் ஓதுவதைப் போலவே இல்லை. அவளது குரலிலிருந்த இனிமை மெல்ல மெல்லக் கரைந்து யாருடையதைப் போலவோ ஆனது. கரடுமுரடான ஒரு ஆணிண் குரல் போன்று அவள் சில இரவுகளில் அரற்றத் தொடங்கினாள். அவளிடமிருந்த நளினம் முழுமையாகவே இல்லாமல் போனது. சூரியன் மறைந்ததும் இருள் செறிவதைப் போல அவள் முகம் பொலிவிழந்து இருண்டது. வீதியில் பலருக்கும் அவளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. அவளும் யாருடனும் பேசிக் கொள்வதையும் தவிர்த்தாள். இப்போது பெரியம்மாவால் கூட அவளை இலகுவாக அடையாளம் காண முடியாது போயிற்று. வீட்டைக்கூட்டிப் பெருக்கும் போதும் ஏதேதோ பேசினாள். முன்பென்றால் அவள் வாசல் கூட்டும் போது வீட்டு வேலைகள் செய்யும் போது யாரும் கதைத்தாலும் கதைக்க மாட்டாள். இப்போது அதன் மறுபிம்பமாகத் தெரிந்தாள்.

வீட்டைப் பெருக்கிக் கொண்டிருக்கும் போது “அடிநடைக்குக் கூட்டவா, திண்ணைக்குக் கூட்டவா” என்று தும்புத் தடியை விரலிடுக்கில் வைத்து கிறுக்கிக் கொண்டே கேட்டாள். அவ்வப்போது கோரமான மொழியில் ஓதுகிறாள். தனியே கோரமாகச் சிரிக்கிறாள்.

நான் “மாமிக்கு என்ன?” என்றேன் தயங்கிய படி.

“எனக்கிட்ட ஜின் இருக்கு” என்றாள். அதைச் சொல்லும் போது அவள் கண்களில் தைரியத்தையும், முகத்தில் பெருமிதத்தையும் கண்டேன்.

“அது என்ன செய்யும்?” நான் கேட்டேன்.

“அது ஆண்களைக் கொல்லும்” அவள் சொல்லும் போது அவள் உடல் முறுகி ஏறி இறங்கியது.

“என்னையும் கொல்லுமா?” என் குரல் பயத்தில் இழுத்து இரைந்தது.

“இல்ல, அது கெட்ட ஆண்களத்தான் கொல்லும். நீ சின்னப் பையன்” என்றாள். என் முகத்தில் படர்ந்த அச்சம் அவளுக்குள் ஒரு பரவசத்தைத் தூண்டியது. என் முகத்தில் அவள் அப்போது கண்டது இந்தப் பிரபஞ்சத்திலுள்ள மொத்த ஆண்களினதும் பயத்தை.

அன்று இரவும் கோப்ரல் வந்திருந்தார். நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டே இருந்தார். என்னிடம் சைக்கிளைத் தந்து வெளியே தூரத்துக்குப் போய்விட்டு வரும்படி சொன்னார். மாமி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“அவன் ராவெய்ல வெளிய போமாட்டான்” என்றாள். மாமி அப்படிச் சொன்னதும் அவர் முகத்தில் ஏமாற்றம் படிந்தது. அவரது எண்ணங்களுக்கு மாமியிடம் இடம் இல்லை என்பதை புரிந்தும் புரியாதவர் போல், விட்டுக் கொடுக்க முடியாதவர் போல், அமைதியானார். இச்சையைத் தணித்துக் கொள்ளும் வேட்கையின் உந்துதலில் அவர் உடல் முறுகிக் கிறங்கியது. மாமியின் உடல் மீதான அவரது வேட்கை இரவுப் பொழுதிலும் அனல் போல் அவர் முகத்தில் தகித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் தன்னைத் தளர்த்திக் கொண்டு ஆற்றாமையுடன் அங்கிருந்து போனார். நான் என் அறையில் தூங்கிப் போய்விட்டேன்.

நள்ளிரவு நேரம். திடீரென்று கதவைத் தட்டும் ஒலி மாமியை எழுப்பியது. வந்திருப்பது அவர்தான். மாமி கதவைத் திறக்க மறுத்தாள். அவர் ஏதோ ஒன்றை மறந்துவிட்டுச் சென்றிருப்பது போல் பாவனை செய்து கொண்டு உள்ளே வந்துவிட்டார். சிம்னி விளக்கிலிருந்து வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. அந்த மங்கல் ஒளியிலும் மாமி பிரகாசமாகத் தெரிந்தாள். களைந்திருந்த அவள் ஆடைகள் அவள் அழகை பகிரங்கமாகக் காட்டின. கோப்ரல் அவள் அருகே ஒரு கரிய மரம் போல் நின்றிருந்தார். அவளைத் தீண்டும் வேட்கை அவரை சுயகட்டுப்பாட்டை இழக்கச் செய்திருந்தது.

“ராவெய்க்கு மட்டும் நான் இங்க தங்கிக்கிறன்” என்று அவர் சற்று அதட்டலான தொனியில் சொல்லிக் கொண்டே முன்னோக்கி வந்தார். மங்கல் வெளிச்சத்தில் காமம் வழியும் அவர் முகம் இறுக்கமாக இருந்தது. மாமியின் கையை அவர் சட்டெனப் பற்றிக் கொண்டார். மாமி வேகமாக உதறிப் பின்னகர்ந்தாள். கோப்ரல் ஒரு கணம் தடுமாறி பின் சுதாரித்து திடமானார். மாமியை மீண்டும் இறுக்கியணைக்க அவர் கைகள் மேலுயர்ந்து நீண்டன.

மாமியின் ஜின் விசுவரூபமெடுத்தது. சாந்த சொரூபியாய் இருந்தவள் திடீரென்று உக்கிர சொரூபியாய் மாறினாள். உண்மையான ஜின்னே ஒரு பெண் வடிவில் வந்துவிட்டதைப் போல் மாமியின் உருவும், குரலும் மாறின. யாரும் அவளிடமிருந்து அதுவரை கேட்டிராத தொனியில் அரற்றினாள்.

அவள் ஒரு பெண்ணே இல்லை என்பதைப் போல் தலையை விரித்துப் போட்டபடி கையில் உலோகப் புடி போட்ட டோர்ச் லைட்டை வேகமாக அசைத்துக் கொண்டு நின்றாள். அவள் உடல் ஆடிக் கொண்டிருந்தது. கோப்ரல் திணறி மேலும் மெல்ல மெல்லப் பின்வாங்கி கதவுப் பக்கமாக ஒதுங்கினார்.

குளிரில் நடுங்கும் குரங்கு போல் என் உடல் கட்டுப்பாட்டை மீறி அதிர்வதை உணர்ந்தேன். அவளைத் தொடர்ந்தும் பார்க்க முடியாது பயத்தில் மூத்திரம் போகும் உணர்வு சில்லிட்டது. அரபு மொழியில் மாமியின் ஜின் பேசியது. அதுவரை நாங்கள் கேட்டிராத கடுமையான தொனியில் அது பேசியது. அந்தக் குரலில் இருந்த கோரமும், மாமியின் உருவில் தெரிந்த குரூரமும் கோப்ரலை பின்வாங்கச் செய்தன. கோப்ரல் கதவைத் திறந்து தானாகவே வெளியேறி ஒரு திருட்டுப் பூனை பாய்ந்து ஓடுவதைப் போல் ஓடி இருளில் மறைந்தார்.

மாமிக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. “ம்ஹ்..ம்ம்ஹ்“ என இடையிடையே முணகலும் அரபும் கலந்த ஒரு பாஷையில் அவள் இடையறாது ஓதிக் கொண்டே இருந்தாள். மாமி கதவைச் சாத்தி விட்டு திண்ணையில் தொழுகைப் பாயை விரித்தாள். அதே முணகலுடன் அவள் உடல் நடுங்கிக் கொண்டே இருந்தது. தொழுகைப் பாயில் கால் மடித்து உட்கார்ந்து கொண்டு முன்னும் பின்னுமாக அவள் உடல் அசைந்து கொண்டிருந்தது. ஓங்காரமாக ஓதத் தொடங்கினாள். மந்திரம் போல் திரும்பத் திரும்ப ஒரே வசனங்களையே ஓதினாள். கையிலிருந்த தஸ்பீஹ் மணிக் கோர்வை விரல்களுக்குள் சீரான வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. படுக்கையை விட்டும் எழாமலே மருட்சியான கண்களால் அவளைப் பாரத்துக் கொண்டு பாயில் கிடந்தேன். மாமியின் ஜின்னுக்கு ஆண்களைப் பிடிக்காது என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது. நானும் அதுக்குப் பிடிக்காதவனாக ஆகிவிட்டேனோ? என்ற அச்சம் தலைதூக்கவே மறு பக்கமாக திரும்பிப்படுத்துக் கொண்டேன்.

சிறிது நேரத்தில் மாமி ஓங்காரமாக உடைந்து அழும் சத்தம் கேட்டது. அந்த அழுகை அவளது சொந்தக் குரலில் அந்த அறை எங்கும் நிறைந்து கொண்டிருந்தது.

 

கலாசார விளிம்புகளின் கனவுகள்: உண்ணி. ஆர். இன் “பாங்கு” கதையை முன்வைத்து ஜிஃப்ரி ஹாசன்

-ஜிஃப்ரி ஹாஸன் – 

மலையாள எழுத்தாளரான உண்ணி. ஆர் உடைய ஐந்து சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. பாங்கு எனும் அவரது கதை சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பாதுஷா என்கிற கால்நடையாளன் எனும் தொகுப்பிலுள்ள கதை.

கதைகூறலில் ஒரு திட்டவட்டமான முறையென உண்ணியிடம் பிடிவாதங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நவீனத்துவம், பின்- நவீனத்துவம் என ஒரு கலவையான கதைகூறல் முறை அவரிடம் உள்ளது. அவரது பாங்கு ஒரு பெண்ணின் வித்தியாசமான ஆசையைச் சுற்றி நகரும் கதை.

 ஒரு கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் தீபா, ஜோதி, சமீனா, ரசியா என்கிற நான்கு மாணவிகளும் தங்களது கல்லூரி வாழ்க்கை நிறைவுக்கு வரும் தருணம் தங்களது நீண்ட கால அல்லது கல்லூரி வாழ்க்கையில் முளைத்த ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனவும், தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது எனவும் முடிவெடுக்கின்றனர். இதில் தீபா, ஜோதி, சமீனா ஆகிய மூவரும் தங்களது ஆசைகளை சொல்லிவிட்டனர். கல்லூரி ஹெட்டோட கையை முத்தமிடுவது தீபாவின் ஆசை. ஆங்கிலம் படிக்கும் மோகனிடம் தன் காதலை வெளிப்படுத்துவது ஜோதியின் ஆசை. அஸ்ரப் என்கிற நண்பனோடு உட்கார்ந்து சினிமா பார்ப்பது சமீனாவின் ஆசை. மூவரது ஆசைகளும் சராசரியான பெண்களின் ஆசைகளாக கதைக்குள் வருகின்றன.

இந்த மூவரது ஆசைகளும் எந்த புதுமையுமற்ற சராசரி வாழ்விலிருந்தும், வாழ்வின் ஆழமற்ற மேற்பரப்பிலிருந்தும் வருவதாகும். வாழ்வின் உயர்ந்த லட்சியத்திலிருந்தோ, ஆழ்ந்த கனவுகளிலிலிருந்தோ அந்த ஆசைகள் எழுந்து வருவதில்லை. ஆனால் ரசியா என்கிற மாணவி மௌனமாக இருக்கும் போதே அவளது கடைசிக் கனவு என்ன என்பதை அறிவதற்கு வாசக மனம் பரபரக்கிறது. அவள் ஒரு விசித்திரமான ஆசையை வெளிப்படுத்தப் போகிறாள் என யூகிக்கவும் முடிகிறது. என்ன அந்த ஆசை? எது அந்தக் கனவு? அந்த ஆசையை எல்லோரையும் போல் தன் நண்பிகளிடம் அவளால் இலகுவில் பகிர்ந்துகொள்ள முடியாமல் அவளை ஏதோ ஒன்று தடுக்கிறது. தடுமாற்றங்களால் அவள் நிலைகுலைந்திருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஒரு மாதிரி அழும்பு வேல காட்டாத. இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதுக்கு முன்னால நாம் ஆசைப்படுவது என்னவோ அதை செய்திடனும் என்று கோபமாக சொன்னாள் தீபா.  சொல்லித்தொலை என அடுத்தடுத்து தோழிகளின் குரல்கள் தடித்து எழுந்தன.

ரசியா தலையில் இருந்து நழுவிய முக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டே எல்லோரையும் பார்த்துச் சிரித்தாள்.

எனக்கு ஒரு ஆசை இருக்கு ஆனா அது நடக்குமா என்றாள். அவளது தோழிகள் மிகச்சராசரியாகவும், உற்சாகமாகவும் என்னோட குமரே, உனக்கு பிரின்சிபால கட்டிப் பிடிக்கணுமா? இல்லை ரெண்டு ரவுண்டு சரக்குப் போடனுமா? அதுவுமில்ல, யார்கூடயாவது படுத்துக்கணுமா?”   அவர்களது ஆசைகளை ஒத்த கனவுகள் எல்லாம் சொல்லி அவளை அவசரமூட்டுகிறார்கள். ஆனால் ரசியாவின் ஆசையோ சின்னத்தனங்களிலிருந்தும், உடல்சார்ந்த ஆசைகளிலிருந்தும் வேறுபட்டதாக அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தூரத்தில் இருந்தது. அவள் தன் வழக்கமான சிரிப்புடன் சொன்னாள் எனக்கு ஒரு தடவை பாங்கு சொல்லனும் சட்டென்று தோழிகள் மத்தியில் நிசப்தம் நிலவியது. ஒரு பெரிய அதிர்ச்சி அந்தக் கணத்தை நிறைத்தது. யாரும் எதுவும் பேசாமல் சில கணங்கள் கரைந்தன. கடைசியில் தோழிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். “நீ என்ன கிறுக்குத்தனமாகப் பேசறே, வேற யாரும் கேட்டுடப் போறாங்க.” சமீனா கோபமாகச் சொல்கிறாள். சரக்கு அடிப்பது, யார் கூடவாவது படுத்துக்கிறது, ஒரு ஆணைக் கட்டிப் பிடிப்பது போன்ற எளிய ஆசைகள் சாதரணமாக எடுத்துக்கொள்ளப்படும் போது கலாசார மரபு மீதான மீறலைக் கோரும் ஒரு பெண்ணின் குரல் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கப்பட்டு விடும் அபத்தமான துயரமே கதையின் மையமான இடமாகிறது. 

ரசியா, தங்களது கல்லூரி வாழ்வின் கடைசி ஆசையைக் நிறைவேற்றிக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது என்ற முடிவை ஞாபகமூட்டுகிறாள். இதற்கெல்லாம் கூட இருக்க முடியாது. மதம் கடவுள் எல்லாம் தொட்டா சுடுகிற சங்கதி

என்று அவர்கள் நழுவி செல்கின்றனர். இப்போது கலாசாரத்தின் விளிம்பில் தனித்துவிடப்பட்ட ஒருத்தியாக ரசியா நிற்பதை வாசக மனம் பரப்புடன் எதிர்கொள்கிறது.

ரசியாவுக்கு இந்த ஆசை அவளது சின்ன வயதில் ஏற்பட்டது. ஒரு வெள்ளிக்கிழமை அவளது அப்பாவும் அம்மாவும் அவளை மிருகக்காட்சி சாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது அங்கே கூண்டில் இருந்த ஒரு மிருகத்தை பார்த்து அதை திறந்து விடும்படி கூறி அழத் தொடங்கினாள். எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. கோபத்தில் அங்கிருந்து அவளை வெளியே கூட்டி வந்து விட்டனர். ஜும்மாவுக்கு நேரமானதால் அவளுடைய தந்தை இவர்களை அருகில் இருந்த கடைகட்டில் உட்கார வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்று விட்டார். அப்போது கேட்ட பாங்கு எப்போதுமே கலையாமல் ஒரு ஆபரணம் போல ரசியாவின் காதுகளில் ஒட்டிக்கொண்டு விட்டது. அப்போதிருந்தே அந்த ஆசை அவளுடன் கூட வந்தது.

தோழிகளிடம் சொன்ன அந்த ஆசையை அம்மாவிடமும் வீட்டுக்கு வந்து சொன்னாள். அவரும் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவள் படைத்தவனிடம் கேட்டாள். நான் ஆசைப்படுவது தப்பா?”

 அவர்களது கல்லூரி வாழ்வின் இறுதி நாட்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. ரசியாவின் தோழிகள் அவர்களது ஆசைகளை ஒவ்வொருவராக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். ஆனால் ரசியாவின் ஆசை மட்டும் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போனது.

கடைசி நாளும் நெருங்கிவிட்டது நண்பிகள் வேறு ஆசை ஒன்றை சொல்லும்படி அடம் பிடித்தார்கள். கலாசாரத்தோடு மோதுவதையும், மீறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆனால் ரசியா தனது ஆசையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டாள். சின்ன வயதில் இருந்தே அவளுக்கு கூட இருக்கும் ஆசை அது.

ஜோதி என்ற தோழி அவளுக்கு உதவ முன்வருகிறாள். சரி நீ எப்போ பாங்கு சொல்லனும்?”

“வெள்ளிக் கிழமை” என்கிறாள். ஜோதி சொன்னதைப் போன்றே கல்லூரியிலிருந்து 10-15 கி.மீ. தொலைவிலுள்ள மனுசங்க யாரும் இல்லாத காட்டுக்குள் ரசியாவை தன் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தாள்.

மது அருந்துவதற்காக காட்டுக்குள் ஒதுங்கி இருந்த இரண்டு இளைஞர்கள் ரசியாவும் அந்த மாணவனும் காட்டுக்குள் நுழைவதைப் கண்டனர். அந்த இருவரும் அவர்களை வேறு விதமாகப் புரிந்து கொண்டனர்.

சின்னப் பொண்ணு என்றான் ஒருவன். பையனும் பொடியன்தான் என்றான் மற்றவன். அவனுங்களையும் கூட்டிட்டு வா என்றதும் ஒருவன் காட்டுக்கு வெளியே ஓடினான்.

ரசியா நண்பனிடம் மேற்குத் திசையைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டாள்.

 அந்த இளைஞர்கள் காட்டுக்குள் இவர்களை நோக்கி நகர்கின்றனர். மரக்கிளைகளையும், பற்றைகளையும் ஒதுக்கிக் கொண்டு நூதனமாக அவளை நெருங்குகின்றனர். அப்போது காட்டைக் கிழித்துக்கொண்டு, “அல்லாஹ் அக்பர்“ என பெண் குரலில் பறிந்தது பாங்கு!  

பச்சையின் இருளில் நூற்றாண்டுகளின் அலைகள் தழுவித் தூய்மையாக்கிய அந்த நாதம் ஆகாயத்தின் பரப்பையும் மண்ணின் ஆழங்களில் ஊன்றிய வேரையும் தொட்டது என்கிறார் உண்ணி. ஆர். ஆனால் அந்த பாங்கின் நாதம் அவளை நெருங்கிய அந்த இளைஞர்களின் இதயங்களையும் தொட்டிருக்க வேண்டும். காட்டை விலக்கி முன்னேறிச் சென்ற அவர்கள் அங்கேயே அசையாது நின்றனர்.

ரசியா தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் காட்டை விட்டும் வெளியேறிச் சென்று கொண்டிருந்தாள். பெண் பாங்கு காட்டையே மென்மையாக்கிவிட்டதாக வாசக மனம் நம்பிக்கை கொள்கிறது. இந்த பாங்கு பள்ளிகளிலும் ஒலிக்குமா? என்பதே கதை எழுப்ப விரும்பும் கேள்வி என நினைக்கிறேன். இந்தக் கேள்வி ஒரு கலாசார உரையாடலுக்கான மகத்தான தொடக்கம் என்றும் நினைக்கிறேன்.

 

கடவுளின் கண் – ஜிஃப்ரி ஹாஸன் கவிதை

கடவுளைப் போல்
எங்கிலும் எல்லா
இரகசியங்களையும்
உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன
கமெராக்கள்.
கடவுளின் கண்களே
கமெராவாக உருமாறிவிட்டதாக
மனிதன் பதட்டமுறுகிறான்

குற்றங்களை பரகசியப்படுத்தும்
கருவியை கடவுள் நாகரீகம் கருதித்தான்
படைக்காமல் விட்டிருக்க வேண்டும்,
சிரமத்தைப் பாராமல் அவர் தன்
வெற்றுக் கண்களால்
இமைப்பொழுதும் சோராமல்
அசிங்கம் பிடித்த மனிதனை
பரிதாபத்தோடு மிக நிதானமாக
அவதானித்தபடி இருக்கிறார்
ஏனெனில், மனித குலத்துக்கான
மேன்முறையீடுகளற்ற
கடைசித் தீர்ப்பை
அவர்தான் வழங்க இருக்கிறார்

இனி,
நன்மை தீமைகளைப் பதிவுசெய்யும்
வானதூதர்கள்
தோள்களில் உட்காரந்து கொண்டு
கைவலிக்க எழுத வேண்டியதில்லை
கருமப் பதிவேடுகளை முறையாகப்
பேணத் தேவையுமில்லை.
இறுதி விசாரணையின் போது
இனி கை செய்ததை கை பேச வேண்டியதில்லை
கால் செய்ததை கால் பேச வேண்டியதில்லை
கண் பார்த்ததை கண் பேச வேண்டியதில்லை
காதுகள் கேட்டதை காதுகள் பேச வேண்டியதில்லை
ஒரு கமெராவுக்குள் அடங்கி இருக்கிறது
மனிதனின் வாழ்வும் விதியும்.

அது மனிதனை மிக நெருங்கி
அவனது எல்லா அந்தரங்கங்களையும்
பரகசியங்களையும்
பதிவுசெய்யும் கடவுளின் கண்.