மினெ மிஜுமூரா

மினெ மிஜுமூராவுடன் ஒரு நேர்முகம் – கொரின்னா பிகல்

– கொரின்னா பிகல் (Corinna Pichl) – 

புக்ஸ்லட் என்ற தளத்தில் வெளியான பேட்டியின் தமிழாக்கம் இது.

ஆங்கிலம் சர்வதேச மொழியாக இயங்குவது குறித்து, “ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி” என்ற புத்தகத்தில் நாவலாசிரியர் மினெ மிஜுமூரா விவாதிக்கிறார்; பிற மொழிகளின் எதிர்காலம் குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார்- தங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, இருமொழிகள் பேசும் உலகில் வாழப் பழகிக்கொள்ள வேண்டிய நிலையில் பிற மொழியினர் உள்ளனர் என்கிறார். இந்தப் புத்தகத்தில் மிஜுமூரா ஜப்பானிய மொழியின் வேர்களை விவரித்து, அது மிகப்பெரும் இலக்கியங்களை வாசிப்பதற்குரிய எழுத்து மொழியாக உருவானது எப்படி என்பதைப் பேசி, அதன் இன்றைய நசிவை உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளின் நசிவுடன் தொடர்புபடுத்தி எழுதுகிறார்.

2008ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டபோது இந்தப் புத்தகம் விற்பனையில் முதலிடம் பிடித்தது, நாடெங்கும் அதன் விஷயம் குறித்த சர்ச்சைகளுக்குக் காரணமானது. புத்தகத்தின் வர்த்தக வெற்றியில் இந்தச் சர்ச்சைக்கும் பங்குண்டு. அமேரிக்கா, ஜப்பான் ஆகிய இரு தேசங்களிலும் வளர்ந்தவர், பல சர்வதேச இலக்கிய நிகழ்வுகளுக்கு அடிக்கடி அழைக்கப்படுபவர் என்ற வகையில் உலக இலக்கியத்தில் ஆங்கிலத்தின் வளரும் தாக்கம் குறித்து அவர் தனித்துவம் கொண்ட பார்வை கொண்டவராய் உள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு இலக்கியம் படித்து முடித்ததும் ஜப்பான் சென்று, அங்கு ஜப்பானிய மொழியில் எழுதும் நாவலாசிரியராய் உள்ளார். அவரது நான்கு நாவல்களும் ஜப்பானில் இலக்கிய விருதுகள் வென்றுள்ளன, ஆனால் அவற்றில் ஒன்று மட்டுமே, எ ட்ரூ நாவல் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் மொழி பேசும் நான் இருமொழி பழகுகிறேன், அமெரிக்க இலக்கிய இதழில் எழுதுகிறேன், நீங்கள் சொல்வது போலவே ஆங்கிலத்துக்கு நெருக்கமான வேறொரு தாய்மொழி கொண்டிருப்பதன் “கலப்பட வரம்” அளிக்கும் நன்மைகளை நான் உணர்கிறேன். ஜப்பானிய மாணவர்களுக்கும், ஏன், தொலைவில் உள்ள எந்த ஒரு மொழியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆங்கிலம் பயில்வது மிகக் கடினமாக இருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசுகிறீர்கள். நீங்கள் அமேரிக்கா வந்தபோது ஒரு குழந்தையாக ஆங்கிலம் கற்றுக் கொள்வது உங்களுக்கு எப்படி இருந்தது?

முதலில் ஒன்று சொல்லிவிடுகிறேன், நான் சரளமான ஆங்கிலம் பேசுவதில்லை என்றுதான் கருதுகிறேன். ஜப்பானிய மொழி ஆங்கிலத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது, ஜப்பானில் பிறந்து வளர்ந்த எவருமே ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாது. எனக்கு ஆங்கிலம் பேசுவதைவிட வாசிப்பதுதான் வசதியாக இருக்கிறது.

அதைச் சொன்னாலும், நான் மிக மெதுவாக ஆங்கிலம் கற்கக் காரணம், அதை எதிர்த்து துவக்கம் முதல் முடிவு வரை போராடினேன். என்னால் அப்படிச் செய்ய முடிந்தது என்றால் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, என் பெற்றோர் அமெரிக்காவுக்குக் குடியேறப் போகவில்லை, எப்படியும் ஒரு நாள் ஜப்பான் திரும்பிவிடுவோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. இரண்டாவதாக, தங்கள் பெண்கள் நல்லபடியாக திருமணம் செய்து கொண்டால் போதும் என்று எதிர்பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என் பெற்றோர். நாங்கள் பள்ளியில் எப்படி படித்தோம் என்பது பற்றி அவர்கள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.

ஆனால் ஆங்கிலம் அறியாதிருந்தது என் பள்ளி நாட்களில் மிகவும் கஷ்டமாக இருந்தது- அது வடுக்கள் விட்டுச் செல்லும் வாதையாக இருந்தது என்றுகூட சொல்லலாம். ஜப்பானிய மொழி பேசிக்கொண்டிருக்கும் வீட்டில் இயல்பாக இருந்த நான் வீட்டைவிட்டு வெளியே போனதுமே தனிமையும் நிராதரவாய் இருப்பதாகவும் உணர்ந்தேன். ஆனால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயற்சி செய்வதற்கு பதிலாக நான் அதைவிட்டு விலகினேன். இந்த அளவுக்கு நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டதே அதிசயம்தான்.

நீங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள மறுக்க காரணம் என்ன?

பல விஷயங்கள் வேறு பாதிரி இருந்திருந்தால் நான் இன்னும் சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொண்டிருப்பேன். உதார்ணத்துக்கு நான் ஆசியனாக இல்லாமல் ஐரோப்பியனாக இருந்திருந்தால் சுலபமாக இருந்திருக்கும்- 1960களில் ஈஸ்ட் கோஸ்ட்டில் மிகச் சில ஆசியர்களே இருந்தார்கள், நான் எப்போதும் அந்நியமாகவே உணர்ந்தேன். அல்லது நான் இன்னும் சிறிய வயதில் இங்கு வந்திருக்க வேண்டும், அந்த அளவுக்கு ஆர்வமாக நாவல்களைப் படிப்பவளாய் இருந்திருக்கக் கூடாது. அல்லது, ஜப்பானிய நவீன இலக்கியத்தில் அத்தனை அதிக அளவில் புத்தகங்கள் இருந்திருக்கக் கூடாது, என்னைப் போன்ற ஒரு பெண் தன்னை இழப்பதற்குரிய புத்தகங்கள், மிகவும் மதிக்கப்படும் புத்தகங்கள் ஜப்பானிய மொழியில் அந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கக்கூடாது. அல்லது, ஆங்கில யுகம் பிறந்துவிட்டது என்று உணரும் சாமர்த்தியம் எனக்கு இருந்திருக்கலாம்! ஆனால், நான் எவ்வளவுக்கு எவ்வளவு ஜப்பானிய மொழியில் வாசிதேனோ, அந்த அளவுக்கு அதன் இலக்கியத்தை நேசித்தேன், அந்த அளவுக்கு ஆங்கில வாசிப்பின் வசீகரம் குறைந்தது- ஆங்கில மொழியில் பேசுவது பற்றிச் சொல்லவே வேண்டாம்.

ஆங்கில மொழியில் இல்லாதது எதை ஜப்பானிய மொழியில் கண்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

இது கடினமான கேள்வி. நான் ஜப்பானிய மொழியில் மட்டும் எதையோ கண்டேன் என்பதால் அதில் எழுத ஆரம்பித்தேன் என்று சொல்ல முடியாது. ஜப்பானிய மொழியில் என்னை மிகவும் வசீகரிக்கும் விஷயம் அது மூன்று வெவ்வேறு வகை குறிகளைத் தன் எழுத்தில் பயன்படுத்துகிறது என்பதுதான்: சீன எழுத்துகள், அவை பெரும்பாலும் வரைவெழுத்துகளாய் (ஐடியோகிராம்களாக) செயல்படுகின்றன, தவிர இரு வெவ்வேறு வகை ஒலியெழுத்துகளை (ஃபோனோகிராம்களை) பயன்படுத்திக கொள்கிறது. இதனால் ஜப்பானிய மொழியின் எழுத்துப்பிரதி மிகச்செறிவாக இருக்கிறது, அதை வேறொரு மொழிக்குக் கொண்டு செல்லவே முடியாது. இதை விளக்க முயற்சி செய்கிறேன், பாருங்கள்.

ஒரு பூந்தோட்டத்தை விவரிக்கும் பக்கம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மலர்களின் பெயர்கள் உங்கள் கண்முன் தோன்றுகின்றன. அவை அனைத்தும் சிக்கலான சீன எழுத்துகளில் இருக்கின்றன, வடிவத்தில் எளிய ஒலியெழுத்துகளிடையே இவை தனித்துத் தெரிகின்றன. வரைவெழுத்துகளில் எழுதப்பட்ட மலர்களின் பெயர்களுக்கு கவித்துவ தொடர்பு உண்டு என்பதால், அந்தப் பக்கத்தைப் பார்க்கும்போதே மணம் நிறைந்த அழகிய மலர்கள் நிறைந்த தோட்டம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு வருகிறது.

ஜப்பானிய மொழியில் எழுதுவதற்கு மாறாக, நடைமுறை காரணங்களுக்காக ஆங்கிலத்தில் எழுதுவது குறித்து நினைத்துப் பார்த்ததுண்டா?

இல்லை. நான் பத்திரிக்கைத்துறையிலோ கல்வித்துறையிலோ இருந்திருந்தால் ஆங்கில மொழியில் எழுதுவதில் அர்த்தம் இருக்கும்- நாம் சொல்வது எத்தனை பேரைச் சென்றடைய முடியுமோ அத்தனை பேரைச் சென்றடையும். அந்த வகையில் “ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி” ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இந்தப் புத்தகத்தில் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்பினேன். ஆனால் நாவல்கள் வேறு வகை. நான் என்ன எழுதுகிறேன் என்பதை நான் எப்படி எழுதுகிறேன் என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. யேட்ஸ் சொன்னதுபோல், “நடனமங்கையை நடனத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?”

நீங்கள் பிரெஞ்சு இலக்கியமும் படித்திருக்கிறீர்கள். பிரெஞ்சு மொழியில் எழுதும் ஆசை ஏற்பட்டிருக்கிறதா?

ஐயோ, இல்லவே இல்லை. எனக்கு அந்த மொழியைப் பிடிக்கும், ஆனால் அப்படி ஒரு ஆசை வரவில்லை. தங்கள் மொழி தவிர வேற்றுமொழியில் எழுதும் எழுத்தாளர்கள் இருக்கவே செய்கின்றனர், நான் பிரெஞ்சு மொழியில் எழுதுவது சாத்தியம் என்று சொல்ல முடியும். ஆனால் அதற்கு நான் இன்னும் நூறு மடங்கு அதிகம் பிரெஞ்சு இலக்கியம் வாசித்திருக்க வேண்டும், பிரான்ஸ் போய் வாழ வேண்டியுமிருக்கலாம். ஆனால் ஜப்பானிய மொழியில் எழுதுவதை மட்டுமே நான் எப்போதும் விரும்பினேன்.

மொழி சார்ந்த மெய்ம்மை கறித்து பேசுகிறீர்கள்- புத்தகம் படிக்க வேண்டும், அதன் சுருக்கத்தைப் படித்து பிரயோசனமில்லை என்பது போன்ற விஷயம் அது என்கிறீர்கள். ஆனால் அப்படிப்பட்ட உண்மைகளை எந்த அளவுக்கு மொழிபெயர்க்க முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது. நாம் இன்றும் வாசிக்கும் புத்தகங்கள் என்று அரிஸ்டாட்டில் எழுதியதைச் சொல்கிறீர்கள், ஆனால் அவர் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில்தான் வாசிக்கப்படுகிறார்.

கல்வித்துறையில் எழுதப்படுவதை பாடநூல்களாக மொழிமாற்றம் செய்ய முடியும். ஆனால் ஓர் இலக்கியப் படைப்பை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை மூல மொழியில்தான் வாசித்தாக வேண்டும். அதில் பலர் எழுதுவதும் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இயல்பு கொண்டவையாக இருக்கின்றன. அரிஸ்டாட்டில் எழுதியது அப்படிப்பட்டது. அவர் குறித்து பேச, அவர் எழுத்தைப் பேசியாக வேண்டும், ஆனால் கிரேக்க கல்வித்துறையில் இருந்தால்தான் அவரை அந்த மொழியிலேயே வாசிப்பீர்கள். பொதுவாக தம் மொழியில் வாசிப்பதுதான் வழக்கம்.

இங்கும் ஆங்கிலம் சர்வதேச மொழியாக இருப்பதால் அரிஸ்டாட்டிலின் ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்கு உயர்மதிப்பு இருக்கிறது. நீங்கள் அரிஸ்டாட்டில் பற்றி எழுத விரும்புகிறீர்கள், அதை எவ்வளவு பேர் படிக்க முடியுமோ அவ்வளவு பேர் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதவே வாய்ப்பு அதிகம். நீங்கள் ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டப்போவதால் அவர் குறித்த ஆங்கில நூல்கள்தான் வாசிப்பீர்கள். துவக்கத்தில் பிற மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் அரிஸ்டாட்டிலின் உண்மையைச் சரியாகச் சொல்லிவிடப் போவதில்லை, ஆனால் காலப்போக்கில் பிறவற்றைவிட ஆங்கில மொழிபெயர்ப்புகளே சிறந்தவையாக வளர்ச்சிபெற வாய்ப்பிருக்கிறது- அதிகமான அளவில் ஆங்கிலத்தில் அரிஸ்டாட்டில் வாசித்து அவரை மேற்கோள் காட்டும்போது மேலும் சிறந்த மொழிபெயர்ப்புகள் அளிப்பதற்கான போட்டியும் அதிகரிக்கிறது. ஒரு நாள் குறிப்பிட்ட ஒரு மொழிபெயர்ப்பு மிகச் சிறந்தது என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதுவே உலகெங்கும் வாசிக்கப்பட்டு மேற்கோள் காட்டப்படும் நிலை உருவாகிறது.

சர்வதேச நூலகம் குறித்த உற்சாகத்தை வெளிப்படுத்திய ஒரு கட்டுரையில் உள்ள மடமை குறித்து எழுதியிருந்தீர்கள். எழுதப்பட்ட அத்தனை பிரதிகளையும் கூகுள் நூலகச் செயல்திட்டம் அனைவரும் வாசிக்கக் கொண்டு செல்கிறது என்றாலும் ஆங்கில நூலகங்கள் மட்டும்தான் உலகளாவியதாக இருக்கும், பிற நூலகங்கள் மிகச் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படும். ஜப்பானிய இலக்கியம் மொழிபெயர்ப்பு வழியாக உலகளாவிய நூலகத்தில் நுழைவது குறித்து உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறதா?

ஜப்பானிய இலக்கியம் ஆங்கில நூலகத்தினுள் புகுவதைச் சாத்தியப்படுத்தும் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் நன்றிக்கடன் பட்டிருப்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்- ஆங்கில நூலகம் மட்டுமே உண்மையான ஒரே உலகளாவிய நூலகம். இந்த மொழ்பெயர்ப்புகள் இன்னும் சில காலம் தொடரும் என்ற எண்ணம் ஆறுதலாகவே இருக்கறது, மேலும் சிறந்த மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வரவிருக்கின்றன.

ஆனால் என்னைப் போன்ற ஒருத்திக்கு, ஜப்பானிய இலக்கியம், புதியதும் பழையதும், அனைத்துமே என்றாவது ஒரு நாள் இணையத்தில் பாதுகாக்கப்படும் என்ற எண்ணமே அதைவிட அதிக ஆறுதலாய் இருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த, மகிழ்ச்சியளிக்கும் புத்தகங்கள் ஜப்பானிய மொழி வாசிப்பவர்களுக்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், அவர்கள் எண்ணிக்கையளவில் எவ்வளவு குறைவாய் இருப்பினும். ஒருவேளை ஜப்பானிய தீவுகள் அனைத்தும் ஓர் எரிமலைக் குமுறலில் உடைந்து சிதறினாலும் மானுட இனம் ஜப்பானிய மொழியில் வாசிக்க இவை கிடைக்கும், எப்போதும் யாரோ ஒரு சில கிறுக்கர்கள் அவற்றால் வசீகரிக்கப்பட்டு அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள். எனக்கு நன்னம்பிக்கை அதிகம் கிடையாது, ஆனால் மனிதர்களின் கிறுக்குத்தனத்தில் நம்பிக்கை இருக்கிறது!

ஆங்கில வாக்கியங்களுக்கு எழுவாய் (சப்ஜெக்ட்) தேவையில்லை என்று நீங்கள் சொன்னது சுவையாக இருந்தது. ஜப்பானிய மக்கள் ஒருவரோடொருவர் உறவாடுவதிலும் பாலினம் குறித்து உணர்வதிலும் இதனால் மிகுந்த தாக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆமாம், ஜப்பானிய வாக்கியங்களின் இலக்கண அமைப்பில் எழுவாய் தேவையில்லை; சூழமைவைக் கொண்டே எழுவாய் என்ன என்று ஊகித்துவிடலாம். மனநிலையை வெளிப்படுத்த எழுவாய் இல்லாத வாக்கியங்கள் உதவுகின்றன. ஆனந்தம் என்ற சொல்லின் எழுவாய் குறிப்பாய்ச் சொல்லப்படலாம் அல்லது பொதுவாய்ச் சொல்லப்படலாம், அது அந்தச் சொல் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருத்தது. யார் ஆனந்தமாய் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, உன்னைச் சுற்றியுள்ள எல்லாம் ஆனந்தமாய் இருப்பதாய் தெரிகின்றன என்றால், “ஆனந்தம்” என்று மட்டும் எழுதினால் போதும். ஆங்கிலத்திலும் இதைச் செய்யும் சுதந்திரம் எடுத்துக் கொள்கிறோம், ஆனால் ஜப்பானிய மொழியில் இது பிழையற்ற முழுமையான வாக்கியம்.

அதேபோல் பொதுவாக ஜப்பானிய மொழி ‘நான்’ என்ற சொல்லையும் தவிர்க்கிறது. ஆனால் இதில் சுவாரசியமான் விஷயம் என்னவென்றால் நீ யாரைப் பார்த்து பேசுகிறாயோ, நீ எப்படிப்பட்ட உறவு பூண விரும்புகிறாயோ, அதற்குத் தகுந்தாற்போல் உன்னை நீ எப்படி விவரித்துக் கொள்கிறாய் என்பது மாறுகிறது சகஜமாகப் பேசும்போதும், நீ ஆணா பெண்ணா என்பதைப் பொருத்தும் இந்த ‘நான்’ மாறுகிறது. இதனால்தான் ஜப்பானிய நாவல்களில் சொன்னான், சொன்னாள் என்ற அடையாளம் இருப்பதில்லை. நான் என்ற சொல்லுக்கு இணையான பத்து பன்னிரெண்டு சொற்களை எளிதாகச் சொல்ல முடியும். அதே போல்தான் நீ என்ற சொல்லும். இவையெல்லாம் மேற்கத்திய மொழி பேசுபவர்களுக்கு குழப்பமாக இருக்கும்.

வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு இயல்புகள் இருப்பதாகச் சொல்லப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உதாரணமாக, தத்துவம் பேசச் சிறந்த மொழி என்று ஜெர்மன் மொழி சொல்லப்படுகிறது, அது தர்க்கம் மற்றும் பகுப்பாய்வுக்கான கட்டமைப்பு கொண்டிருக்கிறது. மொழி சார்ந்த உண்மைகள் என்று நீங்கள் சொல்வது இது போன்ற ஒன்றா?

ஆமாம், நிச்சயம் அது போன்றுதான் நினைக்கிறேன். இது பயங்கரமான பொதுமைப்படுத்தல் போல் தெரியும், மனிதன் இந்த உலகை எப்படி புரிந்து கொள்கிறான் என்பது மேற்கத்திய மொழிகளில் உள்ளது போல் அவ்வளவு தீர்மானமாக- அவ்வளவு தர்க்கப்பூர்வமான தீர்மானத்தன்மையுடன்- வெளிப்பட வேண்டிய தேவையில்லை என்பதை ஜப்பானிய மொழி எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. ஜப்பானிய மொழியிலும் அத்தகைய தர்க்கத்துக்கும் பகுப்பாய்வுக்கும் இடமிருக்கிறது, ஆனால் அப்படியிருக்க வேண்டிய பிழைப்பு அதற்கில்லை என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம், நாம் இன்று புழங்கும் ஜப்பானிய மொழி அப்படியில்லை என்றாவது சொல்லலாம். இங்கு நிகழ் காலத்தைக் கடந்த காலத்துடன் இணைக்க முடியும். ஒன்று ஒருமையா பன்மையா என்று சொல்ல வேண்டியதில்லை. வாக்கியங்கள் அடுத்தடுத்து ஆனால், மேலும், ஆகவே என்று தொடர்பு சேர்த்துக் கொண்டு ஒன்றையொன்று தொடர வேண்டியதில்லை. அது போன்ற இணைப்புச் சொற்கள் முக்கியமில்லை. பகுத்தறிவுச் சிந்தனையைத் தடை செய்கிறது என்று பல ஜப்பானியர்கள் தங்கள் மொழி குறித்து குறைபட்டுக் கொள்வதுண்டு. நாம் பயன்படுத்தும் மொழிக்கு ஏற்ப உலகைப் பல வகைகளில் புரிந்து கொள்ள முடியும் என்று நான் உணர்ந்ததும் எனக்கு அது ஒரு பெரிய விடுதலை உணர்வு அளித்தது. நல்ல வழி, தவறான வழி என்றெல்லாம் கிடையாது.

மேலை நாடுகளுக்கு வெளியே உள்ள மொழிகளைப் பேசுபவர்கள் ஆங்கிலம் கற்கச் சிரமப்படுவது அவர்கள் மொழிகளை மிகையான ஆங்கில தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது என்று நினைக்கிறேன். ஜப்பானிய மொழி பேசும் ஒருவர் ஆங்கிலத்தைச் சரளமாய் பேசுவது மிகக் கடினம் என்று நீங்களே சொன்னீர்கள். ஜப்பானிய மொழிக்கு இறக்குமதி செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான ஆங்கிலச் சொற்கள் பற்றி சொன்னீர்கள். அதிலும் குறிப்பாக விளம்பரத் துறையும் தொலைகாட்சிகளும் இதைச் செய்வதாய் குறிப்பிட்டீர்கள். உண்மையில் ஆங்காங்கே ஒரு சில ஆங்கிலச் சொற்கள் ஒரு மொழியில் புழக்கத்தில் இருக்கிறது என்பது அந்த மொழியை எந்த அளவுக்கு பாதித்துவிட முடியும் என்று சந்தேகமாக இருக்கிறது.

கடந்த காலத்தில் ஜப்பானிய மொழி தாராளமாக சீன மொழிச் சொற்களைக் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது. சீன எழுத்துகள் வடிவ உருவங்களாக (ஐடியோகிராம்) வேலை செய்வதால் இது அருமையாக பயன்பட்டது. இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஜப்பானியர்கள் தங்களுக்கே உரிய ஒலி எழுத்துகளை வடிவமைத்துக் கொண்டதும் சீன மொழி எழுத்துகள் அவ்வாறு இயங்கின. ஒவ்வொரு சீன எழுத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டு, அந்த எழுத்துகளின் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு புரிந்து விட்டது என்றால் சீன மொழியில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம், மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஆனால் ஐரோப்பிய சொற்களைக் கடன் பெறும்போது அப்படி நடப்பதில்லை. இன்று ஜப்பானிய மக்கள் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் ஆங்கிலச் சொற்களைப் புழக்கத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள், நேரடியாகவே அவற்றை ஜப்பானிய மொழி வாக்கியங்களில் இணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்கள் அகரமுதலி பயன்படுத்துவது போல் அல்லாமல் ஜப்பானியர்கள் ஒலி எழுத்துகள் (போனோகிராம்) பயன்படுத்துகின்றனர். எனவே ஆங்கிலச் சொற்களின் ஒலியை எழுத குத்துமதிப்பான உபயோகத்துக்கு தம் மொழியைக் கொண்டு செல்லவேண்டும். இந்தச் சொற்களின் அர்த்தம் என்னவென்றுகூட பலருக்குத் தெரிவதில்லை. ஐடி துறையில் ஆங்கிலச் சொற்களை இரவல் வாங்குவது பயனளிக்கிறது ஏறனு நினைக்கிறேன், அங்கு எல்லாரும் இருமொழி தெரிந்தவர்களாக இருக்கின்றனர். மற்றபடி இதுவெல்லாம் மூடத்தனம், நம்மைக் கேவலப்படுத்தும் விஷயம்.

தங்கள் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைவிட ஆங்கிலம் பேசும் உலகிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு கூடுதல் மதிப்பு அளிக்கும்போது, அதாவது, தம் கலாச்சாரத்தைவிட ஆங்கிலம் வழி இறக்குமதியாகும் கலாச்சாரத்தை மதிக்கத் துவங்கும்போது மொழியின் வீழ்ச்சி துவங்குகிறது என்று சொல்கிறீர்கள். முன்னர் காலனிய காலகட்டத்தில் இருந்தது போல், அனுபவத்தில் தம் பண்பாட்டைத் தாழ்ந்ததாகக் கருதி அதைக் கைவிடுதல் நிகழ்கிறது. நீங்களே உங்கள் வளர்பருவத்தில் ஆங்கிலத்தில் உள்ள அனைத்துக்கும் எதிராகப் போராடியிருக்கிறீர்கள். ஜப்பானில் அதுபோல் ஆங்கிலத்தை எதிர்க்கக்கூடியவர்கள் இருக்கிறார்களா? ஆங்கிலத்தின் மேலாதிக்கத்துக்கு எதிராக ஒரு கலாசார நகர்வு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

தெரியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜப்பானிய மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதே பிற்போக்குத்தன, தேசியவாதச் செயலாகி விட்டது. ஆனால் இந்தப் போக்கில் மெல்ல ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்று உணர்கிறேன். பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதையும், தங்கள் மொழியை புதிதாய் பார்க்க வேண்டும் என்றும் அதை இன்னும் கொஞ்சம் மதிக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைப்பதைக் காண முடிகிறது. இங்கிருந்து எங்கே போகிறோம் என்ற கேள்விக்கு இன்னும் விடையில்லைதான்.

இன்றுள்ள பல்வேறு மொழிகளைக் காக்க உலக அளவில் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஜப்பானிய மொழி பற்றி பேசுகிறீர்கள், தேசிய மொழியாகும் அதிர்ஷ்டம் அதற்கு இருக்கிறது. ஆனால் சிறிய மொழிகள், வலுவான தேசிய அமைப்புடன் தொடர்புபடுத்தப்படாத மொழிகள் என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கடினம். பன்மொழிப் பண்பாட்டைக் காப்பாற்ற ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் எடுத்துள்ள நிறுவன நடவடிக்கைகள் முக்கியமான முன்னுதாரணமாய் இருக்கின்றன, நடைமுறையில் ஆங்கிலம் பொதுமொழியாய் இருப்பினும் அது போன்ற நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 430,000 பேர் பேசும் மால்டீஸ் மொழியும் 130,000 பேர் பேசும் ஐரிஷ் மொழியும் அங்கு பிரதிநிதித்துவம் கொண்டிருக்கின்றன. ஆனால் வலுவான தேச அமைப்பு சாராத சிறு மொழிகள் பிழைப்பது கடினம்தான். பலவும் விழுந்து அழியும், அதிலும் குறிப்பாக எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் விரைவில் அழியக்கூடும். ஆனால் பாஸ்க் போன்ற ஒரு மொழியைப் பாருங்கள், அந்த மொழி பேசுபவர்கள் அதிகமில்லை, 720,000 பேர்தான், அது ஒரு சுதந்திர தேசத்தின் மொழியாக இருக்கும் வாய்ப்பே இல்லாமல் போகலாம், ஆனால் அது உயிர்ப்புள்ள மொழியாகவே இருக்கும், ஏனெனில் அதன் மக்கள் அதில் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கின்றனர்.

உங்கள் புத்தகம் சுவாரசியமாக இருக்கக் காரணம் ஆங்கிலம் என் மொழியின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி என்னைச் சிந்திக்கச் செய்தது. உங்கள் புத்தகம் ஆங்கில மொழி பேசுபவர்களுக்கு அளிக்கும் செய்தி என்ன?

ஆங்கிலத்தை தாய் மொழியாய் கொண்டவர்கள், தங்கள் மொழியைப் பயன்படுத்தும்போது அவர்கள் உலகப் பொதுமொழியைப் பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு மட்டுமே உரிய பெருமை. இந்தப் பெருமையில் உள்ள பேதைமை கொஞ்சம் நீங்கினாலும், இந்தப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதாகும்.

நன்றி – Bookslut

ஒளிப்பட உதவி – Pagina12

மினெ மிஜுமூரா – ஆங்கிலத்தின் எழுச்சியும் பிற மொழிகளின் வீழ்ச்சியும் – ஷோ ஸ்பேத் மதிப்பீடு

 – ஷோ ஸ்பேத் மதிப்பீடு (Sho Spaeth) – 

(ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற மினெ மிஜூமூரா நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் (Mari Yoshihara and Juliet Winters Carpenter). இந்த நூல் குறித்து ஃபுல் ஸ்டாப் என்ற தளத்தில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின் தமிழாக்கம் இது.)

பெருவாரி வாசகர்களின் இலக்கிய ரசனை குறித்து வீசப்படும் குற்றச்சாட்டுகள் போல் வெகுச் சிலவே என்றும் புதிதாய் இருக்கின்றன. குழந்தைக்கல்வி பிரச்சினை என்று பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. இன்று புத்தகங்கள் அவற்றைவிட பிரகாசமான வண்ணங்கள் கொண்ட பொழுதுபோக்கு வடிவங்களோடு போட்டி போடும் காலத்தில் இருவகை குறைகள் சொல்லப்படுகின்றன- குழந்தைகள் அதிகம் வாசிப்பதில்லை, அப்படியே அவர்கள் வாசித்தாலும், அவர்கள் நல்ல விஷயங்களைப் படிப்பதில்லை.

இதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. அ\தைவிட அலுப்பான விஷயம் இது திரும்பத் திரும்ப சொல்லப்படுவதுதான். எனவே சமீபகாலமாக சர்வதேச அளவில் ஆகிருதி கூடிவரும் ஜப்பானிய நாவலாசிரியர் மினெ மிஜூமூரா, இந்தக் குறையை ஆங்கிலத்தின் காலத்தில் மொழியின் வீழ்ச்சி என்ற புத்தகத்தில் மிகப் பிரமாதமான வகையில் சுவாரசியமாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்டுரை, நினைவுக் குறிப்புகள், புலம்பல் என்று பலவற்றின் கலவையாக இருக்கும் இந்த நூல், இணைய யுகத்தில் ஆங்கில மொழியின் மிகப்பெரும் தாக்கம் குறித்து கவலைப்படுகிறது- இந்தப் போக்கு ஜப்பானுக்கு ஒரு மிகப்பெரிய தேசிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் நம்பக்கூடிய வகையில் எழுதுகிறார். ஜப்பானிய மொழியின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சியை விவரித்து, அதைப் பாதுகாப்பதன் தேவையை வலியுறுத்தும்போதே அவர் ஜப்பானின் குறுகிய கரைகளைக் கடந்து, நாம் நம் செவ்வியல் படைப்புகளை மறக்கும்போது என்ன நடக்கிறது என்ற உலகளாவிய கவலையை எதிர்கொள்கிறார். .

மொழியின் வீழ்ச்சி, ஜப்பானில் எதிர்பாராத வெற்றி பெற்றது. இது அபுனைவுகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடிக்க ஒரு பெரிய காரணம் இருக்கிறது- ஜப்பானிய கல்வி அமைப்பைச் சீர்திருத்துவதற்கான மிஜூமூராவின் சில பரிந்துரைகள் ஆவேசமான விவாதங்களுக்கு வித்திட்டன. மிஜூமூராவின் பரிந்துரைகள் குறித்து நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளில் சிலவற்றை மொழிபெயர்பபாளர்கள் மரி யோஷிஹரா மற்றும் ஜூலியட் வின்டர்ஸ் கார்பெண்டர் ஆகிய இருவரும் தங்கள் முன்னுரையில் பதிவு செய்திருக்கின்றனர்- அவர் வலதுசாரி சிந்தனையாளர், அரசகுல ஆதரவாளர், அவரது பரிந்துரைகள் பொருத்தமற்றவை, குறிப்பாக அவர் ஒரு பெண்ணாக இருக்கையில் ஜப்பானிய கலாசாரம் குறித்த ஆண்மையப் பார்வையைப் பிரதிபலித்திருக்க வேண்டாம்; அவர் நிச்சயம் ஒரு எலீட்டிஸ்ட்தான். அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் எலீட்டிஸ்ட்- தன் இளமைப்பருவத்தின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான எழுத்தாளர்களுக்கே, அதிலும் குறிப்பாக மிகக் குறைந்த அளவு பெண்களுக்கே, சாத்தியப்படக்கூடிய வெற்றிக்குக் காரணமான கல்வி அமைப்பை அவர் குற்றம் கூறுகிறார் என்று குறைப்பட்டுக் கொள்கின்றனர்.

வேறு சிலர் அவரது ரசனையில் குற்றம் காண்கின்றனர்- எந்த அமெரிக்கர்களிடையே வளர்ந்தாரோ, அந்த அமெரிக்கர்களே அவர் மிகக் கேவலமாகக் கருதும் சமகால ஜப்பானிய எழுத்தாளர்களை நேசிக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த புத்தகத்தின் ஒரு நல்ல விஷயம், மிஜூமூரா தன் தரப்பை முன்வைக்கும்போதே இந்த ஒவ்வொரு எதிர்வினையையும் முன்கூட்டியே அவதானித்து அதற்கு பதிலும் அளிக்கிறார். ஆனால் நம் காலத்தில் மேலோங்கியிருக்கும் பார்வையால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயத்தை அவர் தன் கருத்தில் கொள்வதில்லை என்பது நம்மை யோசிக்க வைக்கிறது- நாவல்கள், அவற்றின் நாவலாசிரியர்கள், நம் கேளிக்கைக்காகவே இருக்கின்றனர் என்ற கருத்தை நிராகரிக்கும் அவரது வெகுளித்தன்மை.
புத்தகத்தின் துவக்க பகுதிகில் அவர் விரிவான வாசிப்புள்ள ஒரு ஜப்பானிய நண்பருடன நிகழ்த்திய உரையாடலை விவரிக்கிறார்- சமகால ஜப்பானிய இலக்கியச் சூழல், “குப்பையாய் எழுதும் மூளையில்லாத எழுத்தாளர்களால்” நிறைந்திருக்கிறது என்று தன் நண்பர் சொல்வதை சிரித்துக்கொண்டே வேடிக்கையாய் ஒப்புக் கொள்கிறார்.

“ஒருவேளை நானும் என் நண்பரும் ஜப்பானிய இலக்கியத்தின் நவீன செவ்வியல் ஆக்கங்களைத் தோய்ந்து வாசித்திருந்த ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால் எங்களுக்கு புதிய எழுத்தை ரசிக்கத் தெரியவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அல்லது, புதிய எழுத்தில் பெரும்பாலானவை குறைந்த மதிப்பு கொண்டவை என்பதும் உண்மையாக இருக்கலாம்.

“வெகு காலம் முன்னர், நான் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, ஜப்பானுக்குத் திரும்பி அங்கு ஜப்பானிய மொழியில் நாவல்கள் எழுதத் துவங்கினால் எப்படியிருக்கும் என்று நினைத்த போதெல்லாம் அடர்ந்த ஒரு காடும் அதில் மகோன்னதமாய் உயர்ந்து நிற்கும் மரங்களுமே என் கண் முன் தோன்றின..நான் அவற்றின் நிழலில் அமைதியாகவும் தன்னடக்கத்துடனும் எழுதிக் கொண்டிருப்பேன், ஒரு பெண் எழுதத்தக்க சாதாரண விஷயங்களை, அங்கொன்றும் இங்கொன்றுமாக. ஆண் பெண் சமத்துவம் நேரடி அனுபவமாய் அறிமுகப்பட்ட ஒருவருக்கு இது சோகமான சித்திரம்தான் என்றாலூம் புகுஜாவா யூகிச்சி, ஃபுதபடாய் ஷிமை, நத்சுமே சோசெகி, ,மோரி ஒகாய், கோடா ரோகன், தனிஜாகி ஜூனிசிரோ போன்ற பேராளுமைகளால் என் தேசம் இன்றும் நிறைந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்- அவர்களது அறிவு, போதம், புத்திசாலித்தனம் நம்மை அச்சுறுத்தும் தன்மை கொண்டது.

“மகோன்னதமாய் உயர்ந்த மரங்கள் கொண்ட எந்த அடர்கானகமும் நான் நாடு திரும்பியதும் கண்டடைய முடியாமல் போகலாம் என்ற எண்ணம் ஒரு போதும் எனக்கு எழவேயில்லை. ஆனால் அப்படிதான் நடந்தது. இங்கொரு மரம் அங்கொரு மரம் என்று பார்க்க முடிந்ததே தவிர நான் கண்ட காட்சி தட்டையாகத்தான் இருந்தது. “பெருஞ்சோகப் பாழ்நிலம்” என்பது போன்ற கவித்துவ வர்ணனைகளுக்கும்கூட தகுதியற்ற அந்த வெளி, சிறியதாகவும் ஆரவாரமானதாகவும் இருந்த அனைத்துக்குமான விளையாட்டு மைதானம் போலிருந்தது- வெறும் முதிரா இளமையின் வெளிப்பாடு. நான் யாரை மிகப் பெரிதாய் மதித்தேனோ, அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைக்கூட என் சமகாலத்தவர்கள் மறந்து விட்டார்களா என்ற சந்தேகமே எஞ்சி நின்றது.

மிஜூமூராவின் நடை குறித்த அறிமுகமில்லாத வாசகர்களுக்கு இந்த எதிர்மறை மதிப்பீடு அவரது அனிச்சை அவதானிப்புகள், பழக்கங்கள், கருப்பொருட்கள் ஆகியவற்றில் சிலவற்றைச் சற்றே வெளிச்ச்சமிட்டுக் காட்டுகிறது- புறப்பார்வைக்கு தியானம் போன்ற எழுத்து, ஆனால் அதனூடே புத்திசாலித்தனமாய்த் தனது தன்னடக்கம் குறித்து உணர்த்திக் கொள்வது, ஒற்றைப்படையாய் முன்வைக்கப்படும் கறாரான தீர்ப்பு, பட்டாலான கையுறை போன்ற அவரது உரைநடையுள் பொதிந்திருக்கும் இரும்புக்கை குத்து; எல்லாவற்றுக்கும் மேல், நவீன ஜப்பானிய இலக்கியத்தின் தலைசிறந்தவற்றைக் குறிக்கும் பட்டியலிலுள்ள எழுத்தாளர்கள் மீதான கட்டற்ற பெருமதிப்பு.

1868ல், மெய்ஜி சகாப்தம் துவங்கியபோது அதுவரை வெளியுலகிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டிருந்த ஜப்பான் தன் வாசல்களைத் திறந்து கொண்டதும் அதன் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும், மிஜுமூரா, “மேற்கின் அதிர்ச்சி” என்றழைக்கும் அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அதற்கடுத்த நூறாண்டுகளில் படைக்கப்பட்ட ஆக்கங்களே நவீன ஜப்பானிய இலக்கியத்தின் செவ்வியல் ஆக்கங்களாய் கருதப்படுகின்றன. பலவகைகளில் அந்தக் கானனுக்கும் அதன் கிளாசிக்குகளுக்கும் எழுதப்பட்ட காதல் கடிதமே இந்தப் புத்தகம். மொழிகளின் வளர்ச்சியும் தேசிய இலக்கியங்கள் பற்றியும் எய்யப்படும் அறிமுகம், நவீன ஜப்பானிய கானனின் அருமையையும், அதன் உருவாக்கத்துக்குக் காரணமான அதிர்ஷ்டவச சூழ்நிலையையும் உணர்ந்து கொள்வதற்கான பின்புலமாய் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஜப்பானிய இலக்கியம் குறித்து அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது ஒன்றேகூட விலைமதிப்பற்ற சேவையாக இருக்கிறது.

இந்தக் கானன் மிஜூமூராவுக்கு எதை உணர்த்துகிறது? ஜப்பானிய மக்களுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதாய் இருக்கிறது அது ஏன் இருக்கிறது என்று அவர் வாதிடுகிறார்? முராசாகி ஷிகுபுவின் கெஞ்சி கதை துவங்கி பதினொன்றாம் நூற்றாண்டு இலக்கியம் வரை நீண்டு செல்லும் இடையறாத மரபுத் தொடர்ச்சியுடன் இன்றைய ஜப்பானிய இலக்கியத்தை இணைக்கும் [பாலமாய் அது இருக்கிறது. இது குறித்து மிஜூமூரா இவ்வளவு ஆத்திரப்பட வேண்டிய தேவை என்ன? இளம் ஜப்பானிய வாசகர்கள் இந்தச் செவ்வியல் ஆக்கங்களைப் புறக்கணிக்கக் காரணம், அவர்களால் அந்தப் பாலத்தைக் கடக்கவே முடியாது என்பதுதான்- 1946ஆம் ஆண்டின் அரசு ஆணைகள் ஜப்பானிய மொழியின் ஒலிப்பமைப்பை மாற்றிவிட்டன. மேற்கத்திய அனுபவத்துக்கு ஜப்பானிய மொழியனுபவம் எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதை உணர இதை நினைத்துப் பார்க்கலாம்- வால்டன், அல்லது மொபி-டிக், அவ்வளவு ஏன் 1984 நாவல்கூட, இடைக்கால ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போலிருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் ஆங்கிலம் விரவியுள்ள இந்தக் காலத்தில் இந்த அடிப்படை இடர்தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்கிறார் மிஜுமூரா, “தன்னைக் காத்துக்கொள்ளாத மொழி அழிந்து போகும். அதன் சொற்கள் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும், அந்தப் புத்தகங்கள் வாசிக்கப்படாமல் அழியும்”.

ஒரு நாவலாசிரியராக மிஜூமூராவின் வாழ்க்கை லட்சியமும், அதனுடன் எழுத்து குறித்த அவரது நேசமும் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் குறித்து ஜப்பானுக்கு வெளியில் உள்ள பரந்த உலகுக்கு அவர் அளிக்கும் எச்சரிக்கைக்கு முக்கியமாக இருக்கின்றன. இந்த எச்சரிக்கை எந்த வடிவில் எழுப்பப்படுகிறது என்பதற்கும் இது முக்கியமாய் இருக்கறது- மிஜுமூராவின் திகைக்க வைக்கும் வாசிப்பும் விரிவான ஆர்வமும் வெளிப்பட்டாலும் மொழியின் வீழ்ச்சி ஆய்வு நூலல்ல, அதை ஒரு நாவலாசிரியரே எழுதியிருக்க முடியும் என்பது வெளிப்படை. அவரது வாதங்கள் நேர்க்கோட்டில் செல்வதில்லை, வட்டமிட்டு முன்னேறுகின்றன. வரலாற்று அல்லது மொழியியல் ஆய்வு என்று நினைக்க முடியாத வகையில் இதில் ஒரு அந்தரங்கத் தன்மை கொண்ட வெளிப்பாட்டை நாம் காண முடிகிறது. மிக கவனமாக இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் மிஜுமூரா- கறாரான சரித்திர அடிப்படையிலோ மொழியியல் அடிப்படையிலோ முன்வைக்கக்கூடிய விமரிசனங்களைக் கூர் மழுங்கச் செய்யும் தன்மை கொண்ட வகையில் அவர் தன் வாதங்களைக் கதைசொல்லலோடும் வாழ்வனுபவங்களோடும் பிணைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், இதை வாசிப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கிறது, வரண்ட, இறுதியில் துவளச்செய்யும் கதையாடலாய் அமைந்திருக்க வேண்டிய புத்தகத்தில் அவரது அறிவும் ஆளுமையும் பிரகாசிக்கின்றன. தன் தாய் மொழி எவ்வாறு உருவானது என்ற பின்புலம் குறித்த தன் அறியாமையை மெல்ல மெல்ல விளங்கிக் கொள்வது என்ற சட்டகத்தில் அவர் தன் வாதத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார்- அவரது வாசகர்கள் தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்ளவும், தமக்குச் சமபந்தமில்லாமல் தோற்றுவிக்கப்பட்ட மொழியின் நிலை குறித்து தம்மிடம் உள்ள கவனமற்ற பெருமிதத்தையும் பெருமையையும் துவக்கத்தில் மிஜுமூராவிடம் காணப்படும் கவனமற்ற மொழிவெறியில் காணவும், எத்தனை மொழிகளில் எவ்வளவு எழுதப்பட்டிருக்கின்றன, இதில் பெரும்பாலானவை அழிந்தே போகும் பயங்கரத்தின் சாத்தியம் ஏறத்தாழ உறுதியானது என்றும் இது அத்தனை குறித்த வியப்புணர்வுக்குத் தம்மைத் திறந்து வைத்துக் கொள்ளவும் இவரது பார்வை ஒரு மாற்று முகத்தை அளிக்கிறது.

மிஜூமூராவின் எழுத்தில் தொடர்ந்து காணப்படும், ‘விதி வலியது’ என்ற உணர்வை இந்த உறுதிப்பாடு சுட்டுகிறது. எழுதப்படும் ஒவ்வொரு மொழிமீதும் ஆங்கிலம் ஏற்படுத்தும் தொடர்ந்த தாக்குதலை எதிர்கொள்ள எந்த பரிந்துரையும் அவர் செய்வதில்லை, யார் என்ன செய்தாலும், எந்த தேசம் என்ன செய்தாலும் இதன் வேகம் குறையப் போவதில்லை என்கிறார் இவர். ஆனால் இதை மாற்ற முடியாது என்பதற்காக எதுவும் செய்யாமல் இருப்பதற்குச் சமாதானம் சொல்வதில் மிஜுமூரா. மாறாய், தம்மைப் போன்ற நாவலாசிரியர்கள், தம் மொழியில் முட்டாள்தனமாய் இன்னும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர்கள், அறிந்தும் அறியாமலும் மொழிபெயர்ப்பை எதிர்த்துப் போராட வழிகள் காண வேண்டும் என்கிறார் அவர்- தங்கள் கானன்களைப் பாதுகாக்க வேண்டும், தனித்தன்மை கொண்ட தங்கள் தேசிய நூலகங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த நாவலாசிரியர்கள் குறித்து, “எப்போதும் மொழி குறித்துச் சிந்திக்கச் சபிக்கப்பட்டவர்கள்” என்று எழுதுகிறார். இவர்களே, “ஆங்கில மொழியைக் கொண்டு அறியப்படாத பிற ‘உண்மைகளும்’ இந்த உலகில் உண்டு” என்பதைச் சிந்தித்தாக வேண்டும்.

அடிப்படையில் இது மரபார்ந்த ஒரு நிலைப்பாடு. ஆனால் இன்றைய காலம் முன்னோக்கிப் பார்க்கிறது என்பதைத்தான், ஜப்பானிலும் அதற்கு வெளியிலும், அவருக்கு பிற்போக்குவாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது காட்டுகிறது. இவர் எழுதுவதில் பெரிதுபடுத்தவும் ஒன்றுமில்லை; உலகெங்கிலும் குழந்தைகள் செவ்வியல் நூல்கள் வாசிப்பதில்லை என்ற அங்கலாய்ப்பு எப்போதும் இருந்தே வந்திருக்கிறது; கடந்த காலத்தை மதிக்காமல் முன்னேற்றம் கிடையாது என்பதும் அதே அளவுக்கு அடிக்கடிச் சொல்லப்பட்டே வந்திருக்கிறது. ஜப்பான் பற்றி மிஜூமூரா முன்வைக்கும் குற்றச்சாட்டு அது ஆங்கில யுகத்தை ஏற்றுக்கொள்வதில் காட்டும் உற்சாகம் குறித்துதான்- நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கியத்தைச் சிதைத்து அழிக்க விரைகிறது என்பது மட்டுமல்ல, அதன் சாம்பல்களில் அது எழுப்பும் இலக்கியம், அவரது சொற்களில் சொல்வதானால் சாணி.

முடிவாய்ச் சொன்னால், மிஜுமூரா உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களுக்கு மாற்று வழி ஒன்றை முன்வைக்கிறார்- உலகளாவிய மக்கள் பரப்பை நோக்கிப் பேசுவதல்ல, உன்னதமே மாபெரும் இலக்கியத்தின் நோக்கம் என்று கண்டிக்கிறார். ஷேக்ஸ்பியர் இன்று உலகெங்கும் இன்னும் பரவலாய் அறியப்பட்டிருப்பதால் ரசின் எழுதியதன் சிறப்பு குன்றிவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மேலும் இது பற்றியெல்லாம் பிரெஞ்சு மக்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிறார், ரசின் மற்றும் அவரது எழுத்தை மறக்காதிருந்தால் போதும். “கலை ஜனநாயகத்தன்மை கொண்டதல்ல, அது உன்னதமானது” என்று மிஜுமூரா அலங்காரங்கள் இல்லாமல் சொல்கிறார், அவர் சொல்வதும் உண்மைதான். தம் மொழியில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து இதுதான்- ஹாரி பாட்டர் நாவல்கள் போன்ற ஒரு உலகளாவிய வாசகப்பரப்பை அவர்கள் அடைய வேண்டுமென்றால் தம் எழுத்தில் உள்ள தனித்தன்மையில் பெரும்பாலானவற்றை அவர்கள் களைந்தே நியூ யார்க்கிலும் லண்டனிலும் உள்ள பதிப்பாளர்களை வசீகரிக்க முடியும். ஒரு தேசத்தின் ஆன்மாவைச் சிறு சிறு துண்டங்களாக வெட்டிச் சிதைத்தே பெரும் செல்வமும் புகழும் பெற முடியும் என்ற ஃபாஸ்டிய பேரம் இது.

இந்த நிலைப்பாடு மிஜுமூராவுக்கு எளிது- அவர் அசாதாரண திறமை கொண்ட எழுத்தாளர், வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆங்கிலத்தில் எளிதாய் மொழிபெயர்க்கப்படக்கூடிய வகையில் புத்தகம் எழுதுவதில்லை என்ற சமரசமற்ற முடிவை அவர் மேற்கொண்டிருந்தாலும் அவரது நாவல்களில் முதல் நாவல், எ ட்ரூ நாவல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது- தன்னைவிட மேலானவர்கள் நிழலில் தன்னடக்கத்துடன் உழைத்துக் கொண்டிருக்கும் எளிய ஜப்பானிய பெண்ணல்ல அவர் என்பதையே இது உணர்த்துகிறது. உண்மையில், ஜப்பானில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள எழுத்தாளர்கள், தம் முன்னோடியாய் அண்ணாந்து நோக்கக்கூடிய மகோன்னத மரங்களில் ஒருவர் இவர். இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மிகச் சிறந்த காரணம், இந்த, அல்லது, எந்தத் தலைமுறை எழுத்தாளர்களிலும் சிறந்த ஒருவரின் எழுத்து குறித்த தரிசனத்தை அது அளிக்கிறது என்பதுதன.

ஆங்கிலத்தை தாய்மொழியாய் கொண்டவர்களுக்கு அவர் மிகச் சில பரிந்துரைகளே வைத்திருக்கிறார்- அந்நிய மொழி ஒன்றைக் கற்பது நல்லது என்றும் இன்றும் நாளையும் ஆங்கிலம் மேலாதிக்கம் செலுத்தப்போவது குறித்து தன்னடக்கத்தை வெளிப்படுத்திக் கொள்வது நல்லது என்றும் இறுதியில் மூக்குச் சிந்துவதை வேண்டுமானால் சொல்லலாம்.

ஆனால் செவ்வியல் படைப்புகளை அவர் புகழும்போது ஒரு எச்சரிக்கையும் நினைவூட்டலும் செய்கிறார்– சுயம்பிரகாசம் கொண்ட உள்ளங்களின் வெளிப்பாடுகள் மட்டுமல்ல ஒரு மொழியின் மேன்மை, தன்னுள்ளிருக்கும் திறமைசாலிகள் செயல்படுவதற்கான களனில் ஆயத்தப் பணிகள் செய்து கொடுக்கும் கலாசாரமே ஒரு மொழிக்கு மேன்மையளிக்கிறது, தனக்கு முன் இருந்த மிகச்சிறந்த எழுத்தின் மதிப்பை உணர்ந்து அதை உண்மையாகவே பெறுமதியாய்க் கொண்டாடும் கலாசாரமே மொழியின் மேன்மைக்கு வித்திடுகிறது.

ஆங்கில மொழி இலக்கிய கலாசாரம் பிற மொழியின் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனினும், ஒரு பக்கம் அது தம்முள் பொருதிக் கொள்ளும் பிற பொழுதுபோக்கு ஊடக வடிவங்களாலும் மறு பக்கம் இணையம் அனைவருக்குமான சமத்துவ வெளி அளித்திருக்கிறது என்ற பான்கிலாசியப் பார்வையாலும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இணையத்தில் வாயிற்காவலர்களுக்கு வேலையில்லை என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, பொதுஜன ரசனை இனி மேலோங்கி நிற்கும் என்கின்றனர்- தெய்வழக்காகிப் போன வெண்ணை திரளும் படிமமாய் சிறந்தது எழுவது இனியும் உள்ளார்ந்த தனித்தன்மையால் அல்ல, மின்னூல் விற்பனையாலும் வணிக வாய்ப்புகளாலும் என்று சொல்கின்றனர்.

மக்கள் செவ்வியல் படைப்புகளை ரசிப்பதில்லை என்ற குறை நியாயமானதுதான், ஆனால் அவர்கள் வாசிக்காத காரணத்தால் எதுவும் மோசம் போய்விடாது- ஏனெனில், கலையில் வெகுஜனப் பார்வை சில பத்தாண்டுகளைத் தாண்டி நீடிக்கும் ஆற்றல் கொண்டதல்ல; எது முக்கியம் என்றால் ஒரு சிறுபான்மையினர்- தம்மைத் தாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட சிலர், கலை என்பது உன்னதத்தன்மை கொண்டது என்ற கருத்துக்கு உருவம் அளிப்பதே இலக்கியத் தரம் என்ற அக்கறை தமக்கு இருப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்கள்- உண்மையாகவே செவ்வியல் படைப்புகளை அறிந்திருந்து அவற்றை உற்சாகமாய்க் கொண்டாட வேண்டும். இதுதான் முக்கியம்.

எந்த ஒரு தலைமுறையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே அதற்கான திறமை கொண்டவர்களாகவும், படைக்கப்பட்ட அனைத்தைக் காட்டிலும் உயர்ந்து எழுந்து நிற்கக்கூடிய மகோன்னதமான மரங்களாய் இருக்கும் விருப்பம் உள்ளவர்களாவுகம் இருக்க முடியும் என்றாலும், ஏராளமான இடம் மண்ணில் இருக்கிறது. எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கவும் திருத்திக் கொண்டிருக்கவும் வேலை இருந்து கொண்டே இருக்கிறது.

நன்றி – Full Stop

ஒளிப்பட உதவி – Monkfish Jowls