அர்ஜுனன் காதல்கள் – ஊர்வசி

வெ. கணேஷ்

அலையிலாக் கடலின்
ஆழத்தில் ஜனனம்;
நித்ய யுவதி வடிவம்;
தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர்
எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும்
ஊர்வசிக்கு இது ஒரு
புது அனுபவம்.
மானிடன் ஒருவனின்
மறுதலிப்பு.

அர்ஜுனன் அறைக்கு
சென்று திரும்பியவள்
கண்களில் ஏமாற்றம்.
கரை மீறும் நதியலை போல்
வெகுண்டு
வேகவேகமாய்
அலங்காரத்தை கலைத்தாள்.

உடைகளைக் கழட்டத் தொடங்கியதும்
கொஞ்சம் அமைதி.
மார்புக்கச்சைகளை விலக்கியதும்
மின்னலொளியில் ஒரு முறை
பார்த்த மானிடன்,
புருரவஸ்-சின் நிர்வாண நினைவு.
கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும்.

குரு வம்சத்து மூதாதையனுடன்
முயங்கியதால்
நான் தாய் ஸ்தானமாம்,
வணக்கத்துக்குரியவளாம்,
புணர்வதற்கில்லை என்று சொல்லியனுப்பி விட்டான்.
பாவாடை தரையில் விழவும்
நினைவுக் குளத்திற்குள்
மூழ்கும் முன்னர்
இதழில் புன்சிரிப்பு:
அர்ஜுனனைக் கைபிடித்திழுத்து
அருகிருந்து பார்த்த
அவனது முகம் தோன்றி மறைந்தது-
“புருரவஸ் ஜாடைதான் உனக்கு”

+++++

முட்படுக்கையில்
கிடப்பவன் போல்
புரண்டான் அர்ஜுனன்,
நிர்வாணமாய்
நீச்சலடிக்கும்
ஊர்வசியின்
காட்சி அவன் கனவில்.
ஹ்ம்ம்ம்…
சாபமிட்டுச் சென்றவளை
இனி சந்திக்க முடியாது.
பெருமூச்சு விடுபட்டு
ஊர்வசி சூடிய
ஒற்றை மலரை
விழ வைத்தது.

+++++

“தாயையல்ல அர்ஜுனா,
நீ நிராகரித்தது மகளை…
நிம்மதியாய்த் தூங்கு!”
கண்ணன் சிரிக்கிறான்.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.