பறவை

எஸ். சுரேஷ்

ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்துக்கொண்டு
கவிதை எழுதத் தொடங்கினேன்
“உன் முகத்தைப் பார்த்தால் தாமரை மலரும்
உன் பாதம் பட்டால் பூக்கள் மலரும்
நீ கண் இமைத்தால் பட்டாம்பூச்சிகள் பறக்கும்
நீ சிரித்தால் மின்னலடிக்கும்
உன் கொலுசொலி கேட்டு வானம் உறுமும்
உன் வளையல் ஓசை என் மனதை மயக்கும்
உன் குரலைக் கேட்டால் குயிலும் நாணும்..”

ஹ ஹ ஹ ஹ என்று மரக்கிளையில் உட்கார்ந்து
என் கவிதையை படித்துக்கொண்டிருந்த குயில்
சிரித்துவிட்டுப் பறந்து சென்றது

கடைசி வரியை அழித்துவிட்டு
“நீ என்னுடன் இருந்தால் என்றைக்கும் இனிக்கும்”
என்று முடித்தேன்

ஒளிப்பட உதவி – steffichfineart.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.