சுற்றும் முற்றும் பார்க்கிறேன் தெரிந்த முகம் எதுவுமில்லை
கூட்டம் அதிகரிக்கிறது
உள்ளே வரும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கிறேன்
தெரிந்த முகம் இல்லை
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தனிமை அதிகரிக்கிறது
அழையாத விருந்தாளி போல் நான்
ஆனால் அழைத்திருந்தார்கள்
சரவணன் பல ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டான்
மேடையில் இருக்கும் பேத்திக்கு அவன் முகம் இல்லை
வயதானவர்கள் முகங்களைப் பார்க்கிறேன்
நடுத்தர வயது முகங்களைப் பார்க்கிறேன்
இளைஞர்களைப் பார்க்கிறேன்
யார் முகத்திலாவது தந்தை முகமோ
தாத்தா முகமோ தெரியுமா என்று
ஆனால் தெரிந்த முகம் தோன்ற மறுக்கிறது
தம்பதிகளுக்கு பின்னால் பூ அலங்காரம்
பட்டுப் புடவையில் அழகான பெண்கள்
என்னைச் சுற்றி சிரிப்பும் விசாரிப்புகளும்
தனித்து நான்
அனுமன் வால் போல் நீண்டிருக்கும் க்யூவில் நின்று
மேடை ஏறுகிறேன்
நான் சரவணனின் மனைவியைப் பார்த்து வணக்கம் சொல்ல
அவர் முகத்தில் முதலில் குழப்பம்
பிறகு ஒரு சிரிப்பு, உண்மையான சந்தோஷம்
கீழே இறங்குகிறேன், தெரிந்த முகம் எதுவுமில்லை
ஆனால் இப்பொழுது அது பெரிய விஷயமாக தெரியவில்லை