தீபாவளி

சிகந்தர்வாசி

பால்கனியில் நின்றுகொண்டு வானம்
வண்ணமயமாவதைப் பார்க்கிறேன்
சீராக ஒளிக்கோடு போட்டுச் செல்லும் ராக்கெட்
வெடித்து பல பாதைகள் தோன்றுகின்றன
கடந்த பாதையின் தடம் அழிகிறது
வண்ணமயமான வரலாறு சில நொடிகளில்
காணாமல் போகிறது
இன்னொரு பாதை தோன்ற, இன்னொரு ராக்கெட் வெடிக்க
வானமெங்கும் சல்ஃபர் பூக்கள்

நாம் விட்டுச்சென்ற தடங்கள் இன்னும் ஒளிர்கின்றனவா?
யார் மனதில்?
விண்மீன்களை மறைத்துப் பூக்கும் இந்த பூக்கள்
நம் கனவுகளா?

இரவை இருள் ஏன் கவ்வுகிறது?
மழைக்கு எதிராக இங்கொன்றும் அங்கொன்றும் என
வெடிகள் குரல் எழுப்புகின்றன
காற்றையும் மழையையும் எதிர்த்துக்கொண்டு
ராக்கெட் ஒன்று புறப்படுகிறது
இருளுக்கு எதிரான புரட்சி வண்ணங்களால்

வெடித்துச் சிதறிய பிறகு மறுபடியும் இருள்
மறுபடியும் வண்ணக்கோலம்
ஆகாயப் பரப்பில் மறையும் ஓவியங்களை
பலர் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்

சீராக வண்ணகளற்று ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் அவ்வப்பொழுது தோன்றும்
இருளும் வெளிச்சமும்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.