ஆத்திரப்பட்ட தகப்பன் மனம் வருந்தி
தன மகளை அணைக்கும் மென்மையுடன்
சூரியன் மண்ணை அணைக்கும் தருணம்
பூங்காவில் எல்லோர் முகத்திலும் அன்றைய தினத்தைக்
கடந்துவிட்ட மகிழ்ச்சி, இனி இரவின் அமைதியை நோக்கி
புன்சிரிப்புடன் பயணம்
மங்கலான ஒலி எல்லா பொருட்களையும்
அழகாக மிளிரச் செய்கிறது
இறைவன் கடைக்கண்ணால் மிருதுவாக
மனிதனை நோக்குகிறான்
இலைகளில் ஊடுருவி ஓடிவரும் கதிர்கள்
திட்டுத்திட்டாக என் கைமேல் வந்தமர்கின்றன
வாழ்க்கையைப் போல் என் உடல்
ஒளியும் இருளும் கலந்ததாகிறது
விளையாடும் குழந்தைகளின் கூச்சல்கள்
கூட்டிற்கு திரும்பிவிட்ட பறவைகளின் பேச்சு
பூங்காவிற்கு வெளியே வாகனங்கள்
ஒலிகள் சூழ்ந்திருக்கும் மாலைப் பொழுதில்தான்
ஒலிகளற்ற அமைதி கிடைக்கிறது
image credit: Todd McKimmey’s Website