காதலைச் சொன்னது

என்ன செய்வேன்? என் மோகம் தீர்வது எப்படி?
அந்த முத்தழகியை யார் என்னிடம் அழைத்து வருவார்கள்?

தாமரை போன்ற முக அழகை வரைந்தேன்
அதன் நறுமணத்தை என்னால் வரைய முடியவில்லை
உன் கள்ளூரும் உதடுகளை, அழகியே, நான் வரைந்தேன்
அதன் தீஞ்சுவையை என்னால் வரைய முடியவில்லை

வசீகரிப்பவளே! சொக்கும் உன் கண்களை வரைந்தேனே தவிர,
அவை மிரளுவதை என்னால் வரைய முடியவில்லை
உன் கழுத்தின் மென்கோடுகள் தெரிய வரைந்தேனே தவிர
அதில் எழும் குயிலோசையை என்னால் வரைய முடியவில்லை

இள மங்கையே! நம் கூடலை நாகபந்தமாய் வரைந்தேன்-
ஆனால் பரவசத்துடன் முவ்வகோபாலா வாடா,
என்று ரதிகேளிக்கைக்கு மீண்டும் அழைக்கும்
உன்னை என்னால் வரைய முடியவில்லை.

– தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது – க்ஷேத்ரையா, 126)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.