தாழ்வான கோவில்

காஸ்மிக் தூசி –

Low Temple-image-1

கடவுள்களை
இருளில் வைத்திருக்கிறது
தாழ்வான இந்தக்கோவில்
பூசாரியிடம்
தீப்பெட்டி இரவல்தர
ஒவ்வொருவராக
வெளிச்சத்துக்கு வருகிறார்கள்
கடவுள்கள்

ஸ்வாரஸ்யத்துடன் பார்க்கும் பஞ்சலோகம்
புன்னகைக்கும் கருங்கல்
ஆச்சரியம் ஏதுமற்ற
இன்னொரு கடவுள்

தீக்குச்சி எரியும்
இடைவெளியில்
சைகைகள்
உயிர்த்தெழுந்து மறையும்
ஒவ்வொன்றாக

தோன்றி மறையும்
அபிநயம்
மீண்டும் மறையும்

அந்த சாமி யார்
எனக் கேட்டால்
எட்டுக்கை அம்மன்
என்கிறான் பூசாரி

சந்தேகமாக இருமுகிறது
ஒருதீக்குச்சி
எண்ணிப்பார்த்தால்
கைகள் பதினெட்டு

எதிர்த்துக்கேள்வி கேட்டால்
இருக்கலாம் ஆனால்
இது எட்டுக்கை அம்மன்தான்
என்கிறான் பூசாரி

வெளியே
வெய்யிலுக்கு வந்து
சார்மினார் சிகரெட்டை
பற்ற வைத்தால்
இருபதடி
ஆமையின்மீது
ஏறி விளையாடிகொண்டிருக்கிறார்கள்
குழந்தைகள்.

***

(அருண் கொலாட்கர் எழுதிய A Low Temple என்ற கவிதையின் தமிழாக்கம்)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.