போலிமொழியாக்கம் – பிரிஜெட் ராத்

பிரிஜெட் ராத் (Brigitte Rath)

(போலி மொழியாக்க புதினங்கள் குறித்து Brigitte Rath எழுதிய கட்டுரை, Mona Baker தளத்திலிருந்து, தமிழாக்கம்.)

1721ஆம் ஆண்டில் மான்டெஸ்க்யூ தன் “பாரசீக கடிதங்களை” அனாமதேயமாகப் பதிப்பித்தார். அதன் முன்னுரையில், இரு பாரசீகர்கள் தன்னுடன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் பாரசீகத்துக்கு எழுதிய கடிதங்களையும் அங்கிருந்து பெற்ற கடிதங்களையும் தான் பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்திருப்பதாக்வும் கூறினார். கடிதங்களின் தேதிகள், மாதங்களுக்குரிய பாரசீகப் பெயர்கள் தாங்கியிருக்கின்றன, பாரசீக பழக்கவழக்கங்கள் குறித்து மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பில் சில விளக்கங்கள் அளிக்கிறார். இதற்குமுன் பாரசீக மொழியில் நம்பிக்கைக்குந்த ஒரு பிரதி இருந்ததாகக் கற்பனை செய்யத் தூண்டுகிறது “பாரசீக கடிதங்கள்”, என்ற பிரதி. நம்மை இந்த கடிதங்களின் முதல் வாசகர்களையும் கற்பனை செய்து கொள்ளச் சொல்கிறது- அவர்களுக்கு அடிக்குறிப்பில் உள்ள கூடுதல் விளக்கங்கள் தேவைப்படாது, ஏனெனில் அவர்கள் பிரெஞ்சு வாசகர்களைப் பொறுத்தவரை தங்களுக்குச் சிறிதும் அறிமுகமில்லாத ஒரு கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள். அன்னியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியாதது என்று குறிப்பிடும்போதே மான்டெஸ்க்யூவின் பிரதி அதை வாசிக்கத்தக்கதாகவும் செய்கிறது; வேற்று மொழியில் எழுதப்பட்ட, வாசிக்கப்பட முடியாத அந்தரங்கத்தன்மை கொண்ட கடிதங்களை வாசிக்கும் வாசக விருப்பத்தோடும், வாசகர்களுக்குப் பழக்கப்பட்ட உலகம் குறித்த அன்னிய பார்வையோடும் அது விளையாடிப் பார்க்கிறது.

கிடியன் டூரி என்ற மொழிபெயர்ப்பாய்வுத்துறை அறிஞர் போலிமொழியாக்கத்தை இவ்வாறு வரையறை செய்கிறார்- “பிற மொழிகளில் எப்பொதும் இருந்திருக்காத மூலப் பிரதிகளின் மொழிபெயர்ப்புகள் என்று முன்வைக்கப்படும் பிரதிகள்”. டூரியின் பார்வையில், போலிமொழியாக்கம் என்பது பிரதிக்குரிய தன்மை; ஏனெனில், பாரசீக மொழியில் மூல நூல் இல்லையெனும்போதே, பாரசீக கடிதங்கள் என்ற பிரதி, போலிமொழியாக்கமாகிறது, அது குறித்து வாசகர் அறிந்திருக்கிறாரா இல்லையா என்பது கேள்வியல்ல.

போலிமொழியாக்கம் என்றச் சிந்தனை ஒப்பீட்டு இலக்கியத்தில் உள்ள சில மையக் கோட்பாடுகளைக் கூர் தீட்டுகிறது. “உலக இலக்கியம் என்பது எப்போதும் ஒரு படைப்பின் மூலப்பண்பாடு அளவுக்கே பெற்றுக்கொள்ளும் பண்பாட்டின் மதிப்பீடுகள் மற்றும் தேவைகளைப் பற்றியது,” என்று சொல்கிறார் டேவிட் டாம்ரோஷ். பிரதியின் புனைவாதாரங்களை வேறொரு கலாசாரத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமெனில், அதற்குரிய “இரட்டித்த ஒளிமுறிவு” அடிப்படையில் அப்பிரதியினுள் அமைந்திருக்க வேண்டும். எனவே, உலக இலக்கியமாய் ஒரு பிரதியை வாசிப்பதில் எப்போதும் உள்ள தேசத்துக்கு அப்பாற்பட்ட கற்பனையையும், சாத்தியக்கூற்றையும் வலியுறுத்துகிறது. வாசிப்பு வகைமை என்ற அளவில் போலிமொழியாக்கம் என்பது, மொழிபெயர்ப்புத்தன்மை, பிரதித்துவம், குரல், படைப்பியக்கம், நம்பகத்தன்மை, பன்மொழித்தன்மை குறித்த கேள்விகளுக்கும் பங்களிப்பு செய்கிறது.

மொழிகளையும் காலங்களையும் கடந்து இலக்கியப் பிரதிகளை அணுகுவதற்கான புதிய திறப்புகளை போலிமொழியாக்கம் அளிக்கிறது; செர்வான்டஸின் டான் க்விஸோட் (1605/15),, மாக்பர்சனின் ஓஸியன் (1761), மார்கோவின் அல்ஜீரியன் ஸ்பை இன் பென்சில்வேனியா (1787),, மெரிமீவின் குஸ்லா (1827),, ஹோல்ஸ்/ஷ்லாஃப்பின் பப்பா ஹாம்லெட் (1889), ராஜா ராவின் காந்தப்புரா (1938), லெம்மின் க்ளோஸ் பனா (1968) மகைனின் ட்ரீம்ஸ் ஆப் மை ரஷ்யன் சம்மர் (1990) மற்றும் பிரோவ்வின் தி சிமெட்ரி டீச்சர் (2008) முதலியன இவற்றில் அடங்கும். தம்மை மொழிபெயர்ப்புகளாக வாசிக்கச் சொல்லும் இது போன்ற பிரதிகள் பல இருப்பது நம் கூடுதல் கவனத்தைக் கோருவதாக உள்ளது. தேசம் கடந்த இலக்கியம் மற்றும் ழானர்களின் வரலாற்றை உருவாக்க வேண்டும் என்ற வாதத்துக்கு இது வலு சேர்க்கிறது. மேலும், ஆராவமுதன், பாலஸ்டர், லாம்பாஸ் மற்றும் பலர், போலிமொழியாக்கங்கள் நாவல் மற்றும் வசனக் கவிதையின் வளர்ச்சியை நெறிப்படுத்துகின்றன என்ற ஆய்வு முடிவு வெளியிட்டுள்ளனர்.

போலிமொழியாக்கம் என்ற கருத்துருவாக்கம் தோன்றி பத்தாண்டுகள்தான் ஆகின்றன. போலிமொழியாக்கம் என்ற சொல்லை பயன்படுத்தும் மூலப்பிரதிகள் 154ல் ஏறத்தாழ மூன்றில் இரு பங்கு கடந்த பத்தாண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. வேறு சில பிரதிகள் இந்தப் போக்கை வெவ்வேறு பதங்களில் விவரிக்கின்றன, “புனைமொழிபெயர்ப்பு”, “மொழிபெயர்ப்பென்ற ஊகம்,” “மொழிபெயர்ப்பென்ற முன்முடிவு”, “மூல மொழிபெயர்ப்பு” என்பன இவற்றில் சில.

இத்துறையில் நிகழ்ந்துவரும் வளர்ச்சி குறித்த பரவலான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால்தான், பல்வேறு தனிப் பிரதிகள் பிறவற்றைச் சுட்டத் தவறுகின்றன. மேலும் ஒரே போக்கை விவரிக்கும் வெவ்வேறு சொற்களும் உருவாக்கப்படுகின்றன. அண்மையில் போலிமொழியாக்கம் குறித்து மட்டுமே விவாதிக்கும் நோக்கத்தில் இரு கலந்துரையாடல்கள் நடைபெற்றன என்பதால் இந்நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். சில கட்டுரைகள் தங்கள் விவாதக் களத்தை மிக விரிவானதாக வரையறை செய்து கொள்கின்றன, இத்தலைப்பில் சில தொகைநூல்களும் புத்தகங்களும் வெளிவரத் துவங்கியிருக்கின்றன; ஒரு திருப்புமுனை தருணத்தை இந்தப் புதுத்துறை அடைந்து விட்டது. ஒளி ஊடுருவும் மூட்டம் குறித்த கற்பனையின் ஈர்ப்பு மற்றும் அபாயங்களை விவாதிக்க நமக்கு மேலும் பல வாய்ப்புகள் கிட்டக்கூடும்.

நன்றி- மோனா பேக்கர்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.