ஒற்றைப் பூ

சரவணன் அபி

மகிழ மரத்தினின்று
பூக்கள் உதிர்வது போல்
கிரணங்கள்
அறைக்குள்
பெய்து கொண்டிருக்கின்றன

மௌனம் காத்திருந்த
நம்மிருவரிடயே
இசை பேசிக் கொண்டிருந்தது

மெல்லிய
ஆவிபுகையும்
தேநீர்க்கோப்பையை
உறிஞ்சிவிட்டு
என்னைப் பார்க்கிறாய்

புலர்வெயிலின்
இளவெம்மையுடன்
மெதுமெதுவே
மஞ்சள் மாறும்
அறையின் பரிமாணங்களை
ஹரி பிரசாதின் குழலிசை
நிறைக்கிறது

தோடி ராகந்தானே
என வினவுகிறேன்
தலையசைக்கிறாய்
செவிமடல் பொதிந்த
அணிகள் ஆடுகின்றன
வர்ணங்களை வாரியிறைத்தபடி

என்னுள்ளும்
பொன்னிழைகளாய் மின்னும்
காதோர குழற்கற்றைகளை

ஒதுக்கிவிட
தவிக்கும் என் விரல்களின்
தகிப்பை
ஏன் மறைக்க வேண்டும்
என எண்ணுகிறேன்

உன் இதழில் இருந்து
முறுவலொன்று
நழுவிச் சிந்துகிறது

வெளியே
வெட்கமின்றி
பூக்கள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.