பன்முக ஆளுமை – பாவண்ணன்

விட்டல் ராவ் 

விட்டல்ராவுடன் (1)

வாழ்நாள் படைப்புச் சாதனைக்கென அங்கங்கே அவ்வப்போது சிறப்பு விருதுகளும் கெளரவங்களும் அளிக்கப்பட்டு வருவதைக் கவனிக்கும்போது, வயதும், படைப்பாக்கத்தில் தேக்க நிலை தொடர்பாயும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எண்பதுகள் என்பது மிகச் சமீபத்திய காலம்அதுவும் கலையிலக்கிய சங்கதிகளுக்கு. எண்பதுகளில் தோன்றி இந்த கணம் வரை இடையறாது சிறுகதை, கவிதை, நாவல், திரைப்பட விமர்சனம், நூல் விமர்சனம், பல்வேறு உலகியல் விஷயங்களைப் பற்றிய விரிவான ஆழ்ந்த கட்டுரைகள் என்று தொய்வோ தளர்ச்சியோ இன்றி எழுதி வரும் பாவண்னனின் படைப்பாக்க இளமையின்பேரில் ஆச்சரியமும் பொறாமையும்கூட ஏற்படக்கூடும்.

ஆரம்பத்தில் எண்பதுகளில் தீபம் இதழின் பக்கங்களில் படிக்க நேரிட்டபோதே என் கவன ஈர்ப்பின் உள்ளடக்கத்தில் அன்பர் பாவண்ணனும் ஒருவராக இருந்தார். தீபம் அலுவலகத்தோடு நெருக்கமாயிருந்த சமயம். அங்கிருந்த கம்பாசிடர் கையெழுத்துப் பிரதியிலிருந்த கதையொன்றைத் தந்துப் படிக்கச் சொன்னார். மிகவும் நன்றாக வந்திருந்தது. அதுவும் பாவண்ணன் கைவண்ணமே. பிறகு விட்டு விட்டு கண்ணில் படும் போதெல்லாம் தவறாமல் அவரது குறுநாவல்களை, சிறுகதைகளை, கட்டுரைகளைப் படித்து விடுவேன். பாவண்ணன் எல்லா பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். எந்தவொரு புதிய இதழ் ஆரம்பிக்கப்படும்போதும் கவனம் விட்டுப் போகாத படைப்பாளிகளில் இவரும் இருப்பார். வெங்கட் சாமிநாதன் பாவண்ணனைப் பற்றிக் குறிப்பிடுகையில் சொல்லுவார், “ சமீபமா பத்துப் பத்திரிகைகள பார்த்ததில ஏழிலியாச்சும் இவர் எழுதி வெளிவந்திருக்கய்யா. நல்லா எழுதறது ஒரு பக்கம், ரொம்ப நல்லவனாயுமிருக்கிறது இன்னும் சந்தோசமாயிடறது, இல்லையா”.

எண்பதுகளில்தீபம்காலம் தொட்டு இம்மாததீராநதியில் அவர் தொடங்கியிருக்கும் கட்டுரைத் தொடர் வரை சீரான நீண்ட இலக்கிய தடத்தைப் பார்க்கையில் பிரமிப்பு கூடிய பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது.

ஒருமுறை, தீபம் அலுவலகத்தில் நானிருந்த சமயம், எஸ். சங்கரநாராயணன் வந்தார். என்னைப் பார்த்து, “ பாவண்ணன் வந்திருக்காரா?” என்று கேட்டார். இல்லையே என்றேன். இந்த நேரத்துக்கு வர்ரேனு சொல்லியிருந்தார், என்று கூறி உட்கார்ந்தார், எனக்கும் பாவண்ணனை நேரில் பார்க்கலாமே என்று. ஆனால், ஒரு மணி நேரம் கடந்தும் ஆசாமி வரவேயில்லை. சங்கரநாராயணன் எழுந்து போய்விட்டார். அதற்குப் பிறகு இலக்கியச் சிந்தனை ஆண்டு விழாவில்தான் முதல் அறிமுகம். வண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் அறிமுகம் தொடர்ந்தது, பெங்களூரில் குடிபுகுந்த பின் அது இறுகித் தொடர்கிறது. காலஞ்சென்ற என் மனைவி ஏராளமாய் வாசிப்பவள். பாவண்ணன் தான் மாதமொருமுறை வீட்டுக்கு வந்து ஏராளமான நூல்களை அவளுக்குப் படிக்கத் தருவார், மருத்துவ மனையில் இறப்பதற்கு ஐந்து நாட்கள் முன்பு வரை அவருடைய புத்தகத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள்.

தொகுக்கப்பட்டு நூல் வடிவம் கொண்ட சிறுகதைகளை தற்போது மீள்பார்வையிடும்போது அவற்றின் வடிவமைப்பு, உத்தி, கரு, உள்ளடங்கும் சிறு செய்தி என்பவை மிகச் சிறப்பாக வந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பாவண்ணன் தன்னைச் சுற்றிலுமுள்ள யதார்த்த நிகழ்வுகளையும் சலனமற்ற காட்சிகளையும் தீர்க்கமாகப் பார்த்து கிரகிக்கும் போக்கிலேயே இணையாக கனவும், கற்பனையும் கவித்துவமும் ஏற்பட்டு பிரவாகமெடுக்கிறது. இயற்கைக் காட்சிகளை ஒன்றுக்கொன்று தொடர்பு அறுபடாது சித்தரிப்பது இவருக்கு இயல்பாகவே கைவருகிறது. இதை அவரது கவிதைப் படைப்புகளில் பளிச்சென காணமுடிகிறது. இவர் தம் கவிதைகள் பலவற்றில் இயற்கையின் எழில் தோற்றங்கள் அடுக்கடுக்காகவெற்று வார்த்தைக் குவியலாக இல்லாமல்அதே சமயம் கவிதைக்கு கவிதை மாறுபட்டும், புதியதாயும், சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லாமலும் காணக் கிடைக்கின்றன. இவரது கவிதை நடையினின்று சிறுகதை நடை வெகுவாக விலகித் தோன்றுகிறது.

பாவண்ணனின் இலக்கியப் பணியின் மற்றொரு முக்கிய அங்கம் மொழிபெயர்ப்பு. கன்னட மொழியில் உள்ள கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று அவரது மொழிபெயர்ப்பில் அணிவகுப்பவை, எஸ்.எல். பைரப்பாவின்பருவம்’, ராகவேந்திர பாட்டீலின்தேர்என்பவை குறிப்பிடத்தக்க நாவல் மொழிபெயர்ப்புகள். தேர்மொழிபெயர்ப்பு நாவலைப் படித்துவிட்டு என் மனைவி மிகவும் பாராட்டிய பிறகே, நான் படித்தேன். கன்னட தலித் சிறுகதைகள் என்ற இவரது பொழிபெயர்ப்பில் வெளிவந்த கதைத் தொகுப்பு மிகவும் சிலாகிக்க வல்லது. சிறந்த மொழிபெயர்ப்புக்கான (பருவம்) சாகித்ய அகாடமி விருது பெற்றவர் பாவண்ணன். நாவலுக்கான இலக்கியச் சிந்தனை பரிசும், சிறுகதைக்குகதாவிருதும் பெற்று கெளரவிக்கப் பட்டவர்.

பாவண்ணனின் கட்டுரையாக்கம் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமீபத்தில்தான்ஒட்டகம் கேட்ட இசைகட்டுரைத் தொகுப்பு நூலைப் பார்க்க நேரிட்டாலும், இதழ்கள்தான் அவருடைய கட்டுரைகளை நிறையவே படிக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியவை. சிறுகதைகளில் இவருடைய கவிதை நடை அவ்வளவாக வாய்ப்புப் பெறாவிட்டாலும், கட்டுரைகளில் அவரது கவித்துவம் ஆங்காங்கே தெறிக்கின்றன. அதிகம் இல்லாவிட்டாலும் திரைப்பட விமர்சனக் கட்டுரைகளும் இவர் பங்கிற்கு இருக்கின்றன. நவீன கன்னட திரைப்படங்கள் இரண்டுக்கான விமர்சனக் கட்டுரைகள் இவரது சினிமா ரசனைக்கு எடுத்துக்காட்டு. அவையிரண்டுமே கன்னட சினிமாவின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர் கிரிஷ் காசரவள்ளி தயாரித்தது. அந்த இரு விமர்சனக் கட்டுரைகளிலும்த்வீபாஎனும் படத்துக்கான பாவண்ணனின் விமர்சனம் அதிசிறப்பாய் வந்திருந்தது. ஒவ்வொரு திரைப்பட விமர்சனமும் அது எழுதப்பட்ட அளவிலேயே முழுமையான கட்டுரையாக அமைந்திருந்தது என்பதும் விசேஷம். அதைப் போலவே அவர் எழுதிவரும் பிற கட்டுரைகளும் விசேஷ கவனம் கொள்ளத் தக்கவை.

புத்தக விமர்சனம் (நான் மதிப்புரை என்பதை தவிர்க்கிறேன்) திரைப்பட விமர்சனம்போல இருந்துவிடலாகாது என்பது போலவே திரைப்பட விமர்சனமும் நூல் விமர்சனம் போன்றிருக்கக் கூடாது என்பது கருத்தில் கொள்ளவேண்டியது. இவ்விஷயம் பாவண்ணனுக்கு வெகு இயல்பாக அமைந்து விடுகிறது. இவர் எழுதி வரும் நூல் விமர்சனம் ஒவ்வொன்றும் ஆழ்ந்த நோக்கில் கச்சிதமான சமநிலையோடு எழுதப்படுவது. ஒவ்வொரு நூல் விமர்சனமும், ஒரு விமர்சனத்துக்கும் அப்பால் சென்று அந்த நூலுக்கு புதியதொரு பரிமாணத்தைச் சேர்க்கவல்ல முழு கட்டுரையாக அமைந்திருக்கிறது.

ஒரு விசயத்தை மையமாய்க் கொண்டு எழுதும்போது அதைச் சுற்றி பல்வேறு விஷயங்களையும் கலை இலக்கிய நயத்தோடு சொல்லிக்கொண்டு போகும் வெங்கட் சாமிநாதனின் வழியை ஒட்டி அவரைப் பற்றின கட்டுரைத் தொடரை தீராநதியில் தொடங்கியிருக்கிறார் பாவண்ணன். ஆரம்பப் பக்கங்களே ஆர்வமூட்டுகின்றன. பாவண்ணனின் படைப்பாக்கத்துக்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்.    

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.