உருமாற்றம்

காலத்துகள்

லிப்டில் ஏறிய ராஜன் மூன்றாம் தளத்திற்கான பொத்தானை இரண்டு முறை அழுத்த, சேருமிடத்தை சுட்டும் இலக்கம் ஒன்பதாக மாறியதை அவன் முதலில் கவனிக்கவில்லை. லிப்ட் வழக்கத்தை விட விரைவாகச் செல்லும், அதே நேரம் தன் தளம் வந்தடையத் தாமதமாவதை உணர்ந்த கணத்தில் அது கண்ணில்பட, தன்னிச்சையாக பின்னால் திரும்பி அங்குள்ள கண்ணாடியில் தன் பிம்பம் முரகாமியுடனும் போர்ஹெஸுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தான்.

கண்ணாடியின் ஓரத்திலிருந்து ‘தலையைச் சீவி விடு’ என்று சினத்துடன் கூவியபடி சீட்டுக் கட்டு ராணியும் , அவரை சமாதானப்படுத்தியபடி ஒரு சீப்பு வாழைப்பழத்துடன் ஒரு சிறுமியும் வர, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று குழம்பியவனிடம் ‘’நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும்’ என்று உங்களூர் எழுத்தாளர் சொல்லியிருப்பது உனக்குத் தெரியாதா?” என்று அச்சிறுமி கேட்டாள்.

போர்ஹெஸின் கைகளைப் பற்றியபடி தன் பிம்பமும் முரகாமியும் நடந்து சென்று பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருப்பதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டிருந்த ராஜன், ‘இது கனவு, கனவுதான், கண்ணைத் திறந்தால் சரியாகி விடும்’ என்று முணுமுணுத்தபடி கண்களைத் திறக்க முயல, திடுக்கிட்டு விழித்ததில் கீழே விழுந்துவிட்ட கொர்தஸாரின் சிறுகதைத் தொகுப்பை எடுக்காமல் எழுந்து சுவரில் மாட்டியிருந்த கண்ணாடியில் தெரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.