– மோனிகா மாறன் –
நாமாக அலைந்து
நானாகிப் போன அந்த
குளிர் இரவில்
நம்மிடையே அமர்ந்திருந்தது
நடுங்கிய என் விரல்களில்
அடங்காமல்
வழிந்தோடிய
இதழ்களில்,
கங்குலில் மறைந்திருக்கும்
தான்றி மரத்தின்
காய்ந்த விதைகளில்
உதிரச்சுவையறிந்த
வேங்கையின
நாவில்
அசையும் தூளியிலிருந்து
நீளூம் காலின்
வெள்ளிக் கொலுசொலியில்
பொங்கும் யவனத்தின்
பூரிப்பில்
ஸ்பரிசங்களும்
களைதல்களும் ஒன்றான
மௌனத்தில்
நீர்த்தாரைகள் ததும்பும்
ஏரிக்கரை சதுப்பின் வாசத்தில்
கருவறையில்
அமுதுணவில்
நீள்மூச்சில்
நெடுங்கனவாய்
நிறைந்திருந் தது
எட்டிப் பார்த்த முதல் நரையில்
கிறுகிறுத்து விழுந்த நான் அறிகிறேன்
அது நமக்குள் உறைந்திருந்த மரணத்தின்
முதல் சாய லென்று