புலன்கள் கைவிட்டுச் சென்ற
உடலின் தோலில் குறுக்கும் நெடுக்குமான
கோடுகளால்
வரையப்பட்டிருக்கிறது
உயிரின் கேலிச்சித்திரம்
எந்தக் கணத்திலும் இந்த
கேலிச்சித்திரம்
உடலின் மூப்போடு சேர்ந்து
அழிந்து போகலாம்
அல்லது
வாழ்வு மங்கிப் போகும்
கணங்களில் எல்லோரது
பார்வையிலிருந்தும்
நுட்பமாய் மறைந்து போகலாம்
தெருவோரக் காட்சிப்பொருளாகக் கூட
கண்டுகொள்ளப்படாதவர்களின்
அந்திம மூச்சுக் காற்றின்
உஷ்ணம் காற்றை
மேலும் வெம்மையூட்டிக் கொண்டே
இருக்கிறது
சர்வதேகமும் சாறாகப் பிழியப்பட்ட பின்
வெறும் சக்கையாய் உடல்
எஞ்சும் கணத்தில்தான்
வாழ்வென்பதே நாம் கட்டமைத்த
மிகப் பெரும் பொய்
என்பது நினைவின்
தாழ்வாரங்களில் படிகிறது
உடலில் வரையப்பட்டிருக்கும்
உயிரின் கேலிச்சித்திரங்களை
வரைந்த கடவுளின் தூரிகையில்தான்
நம் எல்லோருக்குமான கேலிச் சித்திரம் இருக்கிறது
வாழ்வை ஒரு கேலிச்சித்திரமாய்
வரையும் கடவுளின்
நித்திய தூரிகை அது!