எழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள்
நான் ஏன் எழுதுகிறேன்?
ஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும்
வெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த அன்று, எப்படி படிப்படியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்படியே எழுதியபோது கதையாகிவிட்டது. தனிமையில் நேரப்போக்குக்கு ஏதோ நினைப்பில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத வேண்டிய நினைப்பும் எழுத்தும் என்னை பிடித்துக் கொண்டது- ஆம் அதுதான் உண்மை
எழுத ஆரம்பித்த பிறகு என்னிடம் பணி சார்ந்த பதட்டம் குறைந்து நிதானம் வந்திருக்கிறது. இனி எழுதாமல் என்னால் இருக்க முடியாது போலிருக்கிறது
எப்போது எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? ஏன், எதற்கு அதை எழுத வேண்டும்?
ஏதாவது மனதை தொடும் சம்பவங்கள், ஏமாற்றங்கள், அவலங்களை பத்திரிகையிலோ கதைகளிலோ வாசிக்கும்போது அதை ஒட்டிய வாழ்வில் நடந்த சம்பவங்களை மனம் மெள்ள கோர்க்க ஆரம்பித்து விடுகிறது பிறகு அதை எழுத தொடங்கினால் எழுத்து தானாகவே ஓடி அதுவாகவே முடிகிறது எனக்கு சிறிது முயற்சிக்க வேண்டும் அவ்வளவுதான்
எண்பத்தி ஒன்பதில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு
முடித்து விட்டு வேலையின்மையும் வேலையும் சார்ந்து ஊர் ஊராகவும் பிறகு நாடு நாடாகவும் அலைந்தபோது மிகப்பெரிய கடிதங்கள் எழுதுவேன் நண்பர்களுக்கு அனுபவங்களையும் வீட்டிற்க்கு அன்பையும் தெரிவிக்கும் அவைகள் தான் என் முதல் எழுத்துகள். எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக பணிக்காக ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் செய்வதால் கிடைக்கும் நேரத்தில் எழுத ஒரு வாய்ப்பமைந்துவிட்டது.
என் முதல் வேலையே வீடற்றவர்களுக்கான திட்டமான தொகுப்பு வீடுகள் கட்டுவதுதான் மிக எளிய மக்கள் வறுமையிலும் நேர்மையானவர்கள் நாளெல்லாம் கீற்று முடைந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களிடம் அரசியல் செய்யும் கான்ராக்டர்கள். அப்படி ஒரு சூழலில் வேலை பார்த்த அனுபவம் அதுவரை இருந்த என்னை இளக்கி விட்டது
பசியில் பசுமை தேடி அலையும் ஆவினம் போல் வேலை தேடிச் செய்யும் நிர்பந்தம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தொழில் சார்ந்து எளிய மனிதர்களான தொழிலாளர்களுடன் பழக வேண்டி உள்ளதால் அவர்கள் நல்லவைகள் கெட்டவைகள் ஏமாற்றம் எல்லாம் அருகே இருந்து அந்த வாழ்க்கையை பார்த்து இருப்பதால் அதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் வந்து விடுகிறது.
எழுதுவதை தொழில் சார்ந்து இப்படி கூட சொல்ல தோன்றுகிறது, எப்படி சுய உழைப்பினால் கட்டி முடித்த வீட்டில் வாழும் திருப்தியிருக்குமோ அப்படி ஒரு திருப்தி எழுதுவதால் எனக்கு இருக்கிறது.
எந்த வேலையும் தெரியாதவன் வெறும் கையையும் காலையும் கொண்டு கட்டிட வேலையில் வந்து கற்றுச் செய்ய முடியும். ஆனால் ஒரு நல்ல வேலைக்காரன் மட்டும் தான் தன் வேலையில் சுயதிருப்தி ஏற்படும் வரை திரும்ப திரும்ப திருத்தி செய்து கொண்டு இருப்பான். செய்யும் தொழிலில் நல்ல வேலைக்காரனான நான் எழுத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் வேறொன்றுமில்லை…
எனது பதின்ம வயதில் வாசிக்க தொடங்கியவன் இலக்கியம் பற்றிய எந்த அளவீடோ புரிதலோ இல்லாமல் யார் எழுத்து மனதை வருடுகிறதோ, இரக்க உணர்ச்சியை தூண்டுகிறதோ அதை மட்டுமே நூலகத்தில் எடுத்து வாசிப்பேன். அந்த எழுத்தாளர் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன்.
அது தான் இலக்கியம் என்று எனக்கு தெரியாது ஆனால் தெரியாமல் வாசித்தது எல்லாம் தமிழில் புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்கள். பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் இலக்கியம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்.
நான் எழுத்தாளன் அல்ல நல்ல வாசகனகவும் வாசித்துக் கிடைக்கும் திறப்பில் மகிழவுமே விரும்புகிறேன்..
…….
(கடலூர் மாவட்டம், அகரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த திரு. தி. வேல்முருகனை allimurugan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)