வேல்முருகன் தி

நோக்கிரி – தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

கணபதி தம்பி புரண்டு படுத்தார்.

‘கா’ என்று சத்தம். முழுவதுமாக விழிப்பு வந்து விட்டது அவருக்கு. வீட்டின் பின்புறம் பக்கத்து வீட்டு வேப்பமரம் தழைய இருக்கிறது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் காகங்கள் சில. ‘கா’ ‘கா’ என வந்து விடும்.‘கா கா, கர்’ என்று கரையும் சத்தம் விட்டு விட்டு கேட்கும். எழுந்து மாரி பிஸ்கட்களை சின்ன சின்ன வில்லைகளாக்கி வீட்டின் மதில் மேல் வைப்பார்.

எதிர் வீட்டு மாமா ஓரக்கண்ணால் அவர் செயல்களையும் பார்த்துக் கொண்டு மாடுகளை அவிழ்த்துச் செல்வார். ஊரில் இரண்டு கணபதி உண்டு. இவர் இரண்டாவது கணபதி. அதனால் இவரது பெயர் கணபதி தம்பி. அதுவும் சின்னப் பிள்ளைகள் கூப்பிடும்போது இவரும் சின்னப் பிள்ளைகள் போலவே ஆகி அவர்களோடு அன்பாகப் பேசுவார்.

காக்கைகள் ஒரே சத்தம். அவைகள் மொழியில் கூவி அழைப்பதும் பிறகு தலையைச் சாய்த்து பார்ப்பதுமாக இருந்தது. அதில் ஒரு குஞ்சு தயங்கித் தயங்கி வந்தது. மற்ற காக்கைகளைக் கண்டு அதற்கு பயம். புத்திசாலி அது. டப்பேன்று கவ்விக்கொண்டு பக்கத்தில் இருக்கும் வேப்பங்கிளையில் வைத்து சிறிது சிறிதாக கொத்தித் திங்க ஆரம்பித்தது. அதன் மூக்கையொட்டிய தோல் சிவந்து இருந்தது எல்லாம் கொஞ்சம் நேரம்தான். காகம் கா கா எனப் பறந்து விட்டதும் பிறகு காட்சிகள் குளத்தில் காற்றிலாடும் அலைகள் அடங்கியது போல் அடங்கி விடும் கணபதிக்கு. மனம் பேயாட்டம் ஆட ஆரம்பிக்கும். எல்லாம் இந்த வேலை இல்லாத மூன்று மாதமாகதான்.

மனைவியும் பிள்ளைகளும் அவர் மேல் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் அவருக்கு சாதாரணமாக இருக்கத் தெரியவில்லை. எப்போதும் கோவம், ஒரு எரிச்சல். பிள்ளைகள் கோழியின் இறக்கைக்குள் பதுங்கி இருக்கும் குஞ்சுகள் போல் அவள் குரலுக்கு மட்டுமே ஓடி நடக்கின்றன. ஏக்கமாக இருக்கிறது அவருக்கு. வளர்ந்து விட்டார்கள். கணபதி தம்பி கூப்பிடுவதைச் சரியாக காதில் வாங்காமல் மெதுவாக பதில் சொல்வது, எங்காவது வேடிக்கை பார்த்துக் கொண்டு, இல்லை, ஏதாவது படிப்பது போல் பாவ்லா செய்கிறார்கள். இல்லை, அவர்கள் சாதாரணமாக இருப்பதுகூட அவருக்கு அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

சொச்ச சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்து இருக்கலாம். இனி யோசித்து ஒன்றும் ஆவப்போவதில்லை. நடுவாந்திர வயதில் வேலையைப் பற்றியே சதா சிந்தனை. அப்படச் செய்து இருக்கலாம் இப்படிச் செய்து இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது அவருக்கு. நேரம் போகாமல் ஜியோ உதவியுடன், படிப்பது, நோக்கிரியில் வேலை தேடுவது என்று இருப்பார். வேலை தேடுவது என்றால் சும்மா இல்லை. அவருக்கு நன்கு தெரிந்த அத்தனை வகையிலும் உள்நாடு வெளிநாடு என்று முயற்சித்து கொண்டு இருப்பார். ஒரே வெறுப்பு.

அன்று அப்படியே இடையில் யாஹூ நோட்டிபிகேஷன் பார்த்துக் கொண்டு இருந்தார். ஒரு நேர்முக தேர்வு வந்திருந்தது அவருக்கு. ஹைதராபாத் கூப்பிட்டிருந்தனர். அவர்கள் கம்பனிக்கு புரோபைல் மேட்சாகவில்லை பிறகு எதற்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள் என அவருக்கு குழப்பமாக இருந்தது அதுவும் ஒரு நாள் பொழுதில் ஹைதராபாத் செல்ல வேண்டும். விருப்பமில்லை. பெருமையாக மனைவியிடம், ஒரு நேர்முக தேர்வு ஹைதராபாத்தில், என்றதுதான் தாமதம், ‘எப்போது?’ என்று கேட்டுவிட்டு, ‘உடன் கிளம்புங்கள்’, என்று சொல்லிவிட்டாள்.

இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை. பின் விளைவுகள் மோசமாக ஞாபகம் வந்தது அவருக்கு. போய்த்தான் ஆக வேண்டும். பிறகு அவள் ஏதேனும் சாதாரணமாக சொன்னாலும் புத்தி மரமேறிவிடும், குத்தி காட்டுவதாக எண்ணம் ஏற்படும். மொபைலில் ஹாட் ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப்பில் இணைத்து குரோமில் டிக்கெட் தேட ஆரம்பித்தார். ரயில் டிக்கெட் ஒன்றும் கிடைக்கவில்லை. வெயிட்டிங் லிஸ்ட் நூறைத் தாண்டி காண்பித்தது. விமானம் இருக்கா எனப் பார்த்தார். காலையில் இருந்தது, கொஞ்சம் பணம் அதிகமாக செலவு செய்யவேண்டும். ஆம்னி பஸ் இருக்கா எனப் பார்த்தார். கட்டுப்படியாகும் செலவில் இருந்தது. ஆம்னியில் கோயம்பேடுவிலிருந்து ஹைதராபாத்திற்கு இரவு 8 மணி வண்டிக்கு புக் செய்து விட்டார். .பரபர என மனம் கணக்கு போட, ஷோல்டர் பேகில் வேண்டியவைகளை எடுத்து வைத்து வீட்டிலிருந்து கிளம்பியது மதியம் 1 மணி.

பஸ் நிறுத்ததில் நேரம் கடந்து கொண்டு இருந்தது. சென்னை செல்லும் அரசு பேருந்து வந்ததும் நிறுத்தி பாண்டி டிக்கெட் எடுத்து கொண்டார். பஸ் காலியாகதான் இருந்தது. வழியில் எங்கும் நிற்காமல் பின் மதியம் 2.40 கடலூர் வந்திருக்கிறது, தாராளமாக போதுமான நேரம் இருக்கிறது, என்று நினைத்தார். பாண்டி வரும்போது 3.30. இந்திராகாந்தி நிறுத்தத்தில் இறங்கி வேறு பஸ் மாறலாமா என்று யோசித்தவர், இறங்கவில்லை. பாண்டி பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கி வேறு பஸ் முயற்சித்தார். ஏ .சி வண்டி நிரம்பி விட்டது. அடுத்த அடுத்த வண்டிகளும் நிரம்பி நின்றன. இனி நின்றால் சரி வராது என வந்த வண்டியிலேயே ஓடி ஏறிக் கொண்டார்.

கண்டக்டரிடம், ‘சார் எத்தனை மணிக்கு கோயேம்பேடு போவும்?” எனக் கேட்டார்.

7.15 என்றதும் டிக்கெட் வாங்கி அமர்ந்தார். பத்து வருட பழைய பஸ். சீட் எல்லாம் நெட்டுக் குத்தலாக இருந்தது. கண்டக்டர் ஒவ்வொரு நிறுத்தமாக சென்னை, பெருங்களத்தூர், மருவத்தூர், திண்டிவனம் என்று இறங்கி வந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஐன்னலோர காற்று முகத்தில் படவும், அசதி, உறங்கி விட்டார். ஒரு நினைவும் இல்லை அவருக்கு. அப்புறம் கசகசப்பில் விழிப்பு வந்தபோது பஸ் திண்டிவனத்தில் நின்று கொண்டு இருந்தது. இருந்த கொஞ்சம் பேரும் இறங்கி விட்டனர். கண்டக்டர் மருவத்தூர், செங்கல்பட்டு எனக் கூப்பிட ஆரம்பித்தார்.

ரப்பர் பேன்ட் போட்டுக் கட்டிய வெள்ளரிப் பிஞ்சுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், வெவித்த நிலக்கடலை 10 ரூபாய், என வாங்கிக் கொள்ள சொன்னார்கள். ஐம்பதை நெருங்க இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது. வயதுக்கு உரிய எல்லா வியாதியோடும் அமர்ந்திருந்த அவரிடம் திரும்பத் திரும்பக் கேட்டனர். இப்போது யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்களே, ஏழைகள் இப்படியா கஷ்டப்படணும், மழை வந்தால் வேறு வேலைக்கு போவார்கள், என்று நினைத்தார் கணபதி தம்பி. பாவம் வேர்வையில் வாடி வதங்கிப்போய் போய் ஆண்கள் தலையில் தொப்பியோடும் பெண்கள் வெறும் தலையோடும் கையில் இருப்பதை வரும் பஸ்கள் நிற்கும்போது ஓடி ஓடி வாங்கச் சொல்லி கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

வெய்யில் மிகக் கடுமையாக இருந்தது. யாராவது வாங்க மாட்டாங்களா எனத் தோன்றியபோது, பஸ் வழிச் சீட்டுகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

எல்லோருக்கும் அதிக கஷ்டமில்லாமல் நிரந்தரமாக ஒரு வேலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கடவுள் என்று ஒருவர் இருந்தால் இப்படியா கஷ்டம் கொடுப்பார். இரண்டு நாள் சேர்ந்தாற்போல் வழியில் பார்த்து விட்டால், ஏன் வேலைக்கு போகவில்லையா, என்று கணபதி தம்பியை பார்த்து கத்தியைச் சொருகி எடுக்கிறார்கள். அவர் பார்க்க மாட்டேன் என்றா சொல்கிறார், எங்குமே வேலை இல்லை. சுதாரிப்பதற்குள் அடுத்த கேள்வி, உடம்பு சரியில்லையா, என்று. ஆத்திரம் வந்தது. ஒன்றும் நினைக்க வேண்டாம் என எதிரில் வரும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதும் மணி பார்ப்பதுமாக இருந்தார். காரணம் இல்லாமல் பஸ்ஸின் வேகம் குறைவதும் பிறகு கூடிச் செல்வதுமாக இருந்தது. கூடுவாஞ்சேரி வரும்போது 6 மணி. அவ்வளவு டிராபிக் ஐாம். டிரைவரிடம் தயங்கிக் கொண்டு அவரது நிலையை, அதாவது ஹைதராபாத் வண்டி 8 மணிக்கு, என்று சொன்னார்.

“சார் முயற்சிக்கிறேன். எனக்கு 7.25 க்கு டிரிப் திரும்பவும். இங்கே பாருங்க ஒரு ஆள் போவதற்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். இவர்களால்தான் இந்த மாதிரி நிற்க வேண்டியிருக்கிறது. எத்தனை பஸ் விட்டு என்ன பிரயோசனம்? சார், நீங்க ஒன்னு செய்யுங்க. பதட்டப்படாம ஆம்னிகாரனுக்கு போன் போடுங்க. 10 மணி வரைக்கும் சீட் ஏத்துவானுங்க, ரோகினி தியேட்டர்ட்ட,” என்றார். டிரைவரின் நிதானம் கலந்து ஓட்டும் லாகவம் புன்னகையுடன் அந்த பண்பு அபூர்வமாக தெரிந்தது

ஆம்னி ஆபீஸ்க்கு கணபதி தம்பி போன் செய்தார். ஆம்னிகாரனின் போன் தொடர்ந்து என்கேஜூடுவாகவே இருந்தது. ஒன்றும் செய்வதற்கு இல்லை. சாலை முழுவதும் விதவிதமான கார்கள், மணல் லாரிகள், பஸ்கள் நின்று கொண்டு இருந்தன. வண்டி எடுத்து திரும்ப நிற்கும்போது எல்லாம் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு கணபதி தம்பி தவிப்பதைப் பார்த்த டிரைவர் முடிந்த அளவு விரட்டியும் ஹாரன் அடித்துக் கொண்டும் ஓட்டி வந்தார். அங்கிருந்து கோயம்பேடு வருவதற்குள் 8 மணி ஆகி விட்டது. இடையில் எதிர்பார்த்த ஆம்னிகாரனின் போன் வந்தது கணபதி தம்பிக்கு. தனது நிலையைச் சொல்லி ரோகினி தியேட்டரில் இறங்கி கொண்டு டிரைவருக்கு, நன்றி, நன்றி, சார், என தன்னையறியாமல் இரண்டாவது முறையும் சொன்னார்.

ஹைதராபாத் செல்வதற்கான பிக்கப் பஸ் 9 மணிக்குதான் வந்தது. ஏறியதும் சிறிது நிம்மதி அவருக்கு அருகில் இருந்தவரிடம் சினேகமாக புன்னகைத்தார்.

நீங்க ஹைதராபாத் தான, என்று இந்தியில் கேட்டார். ஆமாம், என்றதும் “நான் முதல் முறையாக ஹைதராபாத் செல்கிறேன் எனக்கு தெலுங்கு தெரியாது ஒரு நேர்முக தேர்வு இருக்கிறது நீங்கள் கொஞ்சம் இந்த முகவரியை பாருங்கள்- பாலநகர், இன்டஸ்ரியல் எஸ்டேட், ஹைதராபாத். இந்த இடம் வந்ததும் சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்,” என்றார். வாங்கிப் பார்த்த அவர், நான் இதற்கு முன்பே இறங்கி விடுவேன், என்றதும், பக்கத்தில் இருந்தவர், நான் அந்த இடத்தைத் தாண்டிதான் போகிறேன். கவலைப்பட வேண்டாம், சொல்கிறேன் என்றார். கணபதி தம்பி அவருக்கும் ஒரு வணக்கம் வைத்தார் நன்றியுடன்.

ரெட்கில்ஸில் வேறு பஸ்ஸில் மாற்றி விட்டார்கள். ஏசி வால்வோ சிலிப்பர் போர்த்திக் கொள்ள பிளான்கேட் என நவீனமாக இருந்தது. ஹைதராபாத் காரருக்கு இருக்கை மிகப் பின்னால் போய் விட்டது. பஸ்ஸில் சவுண்ட் அதிகமாக படத்தைப் போட்டு விட்டனர். ஒரே தொல்லை. தெலுங்கு சினிமா. மனம் ஒன்றி பார்க்க முடியவில்லை அவருக்கு எல்லாம் அடிதடி படம் இரைச்சல் ஏசி குளிருக்கு பிளாங்கேட்டால் காதை மறைத்து போர்த்தி கொண்டார் .இந்த வேலை கிடைத்தால் அடுத்த முறை விமானத்தில்தான் செல்ல வேண்டும் கற்பனையில் ஆழ்ந்தார்
எப்போது உறங்கினார் என தெரியவில்லை

சத்தம் கேட்டு அவருக்கு விழிப்பு வந்த போது காலை 5மணி ஹைதராபாத் சிட்டி 100 கி மி என போர்டில் தெரிந்தது இன்னும் 2 மணி நேரத்தில் வந்து விடும் நல்ல தூக்கம் ஆதலால் புத்துணர்ச்சியாக நேர்முகத்தேர்வு எப்படி இருக்கும் ஒன்றும் அதற்காக தயாராகவில்லையே என்று தனது தற்போதைய ரெஸ்யுமை மனக்கண்ணில் கொண்டு வந்தார். செய்த புராஜக்ட் வேலையெல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு கொண்டு வந்து வேலைகளை நினைவுபடுத்திக்கொண்டார். அவற்றில் மிகப்பெரிய வேலைகள், நடுவாந்திர வேலைகள், சிறிய வேலைகள் என வகைப்படுத்தி கொண்டு வந்து கேள்விகள் எப்படி இருக்கும் பதில் எப்படி சொல்ல வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்த்தார். கடைசியாக நடந்த நேர்முகம் எல்லாம், 20 வருடத்திற்கு மேல் அனுபவம் உங்களுக்கு நீங்களே செய்த வேலைகளை பற்றி சொல்லுங்களேன், என்பார்கள். கணபதி தம்பிக்கு அவர்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஒரு பிடி கிடைக்கும். பிடித்த மாதிரி சொல்வதற்கு ஓரளவு தெரிந்தும் வைத்து இருந்தார். அதையும் தாண்டி நிராகரிக்கப்பட்டும் இருக்கிறார், தானும் நிராகரித்து இருக்கிறார். ஆனால் இப்போது எந்த வீம்பும் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு நடிப்புதான், அவர்களுக்கு பிடித்த மாதிரி இன்று நடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் வெளியே பார்க்க ஆரம்பித்தார்.

பஸ் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் அதிவேகமாக சென்று கொண்டு இருந்தது. கதிர் அறுத்த நெல் வயல்கள் கோரைப்பாயை விரித்துப் போட்டது போல் சின்ன சின்ன கட்டமாக தெரிந்தது ஹைதராபாத் இது வரை வந்தது இல்லை, ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவல் சின்ன வயதிலேயே அவருக்கு இருந்தது. காரணம் சிகரெட் அட்டைதான். அப்போது சிகரெட் அட்டை வைத்து கோலி விளையாடுவார். அவரது அப்பா வில்ஸ் பிளைன்தான் பத்த வைப்பார். அந்த அட்டைப் பெட்டியை தந்தால் 4 சார்மினார் அட்டை தருவான் பிச்சுவா. அவன்தான் சொன்னான் அட்டையில் இருந்த படத்தைக் காட்டி,இது அல்லா கோயில்டா, ஒரு நாளைக்கு பார்க்கணும்டா, என்றது இன்னும் மனது ஓரம் அப்படியே இருக்கிறது அவருக்கு. சார்மினார் எங்கு இருக்கிறது என்பதை சின்ன வயசுலேயே தெரிந்து கொண்டார்.

பஸ் சிட்டியில் நுழைந்து ஒவ்வொருவராக இறக்கி விட ஆரம்பித்ததும் கணபதி தம்பி திடீரென்று ஞாபகம் வந்து நண்பரை பார்கிறார், அவரும பார்க்கிறார். கிட்டே நெருங்கி, எங்கு இறங்க வேண்டும், என்று கேட்டதும் அந்த இடம் தாண்டி வந்து விட்டோம். நீ முதலிலேயே கேட்காமல் இப்ப வந்து கேட்கிறாயே, என்று அவர் கேட்டதும் கணபதி தம்பிக்கு, ச்சை இப்படியா ஏமாறுவோம், பகல் கனவில் இருந்தால் இப்படிதான். நாமாகவே டிரைவரை கேட்டு இருக்கலாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை நமது முட்டாள்தனம்தான் என்று வந்த நிறுத்தத்தில் இறங்கி கொண்டார்.

நேரமோ பசியோ அவருக்குத் தெரியவில்லை, முதலில் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பை தவிர. சுற்றிப் பார்த்தார் எல்லோரும் அவசரமாக வரும் பஸ்ஸில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். பக்கத்தில் இருந்த கடைகளில் வியாபாரம் அதிகம், டிபன் டீ என பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தனர். யாரிடம் கேட்கலாம் என ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டே வந்தபோது தூரத்தில் தனியாக அமர்ந்து ஷூவுக்கு பளபள என பாலிஷ் போடுபவரைப் பார்த்தார் . கை மித வேகத்தில்ஷூ வை நேர்த்தியாக பளபளப்பாக ஆக்குகிறது. எல்லா கால்களையும் பார்க்கிறார் அவர், நிமிரவே இல்லை.

கணபதி தம்பி நேராக அவரிடம் சென்று இந்தியில் முகவரியைச் சொல்லி எப்படி செல்வது என வழி கேட்டார். சிறிது நேரம் ஒன்றும் பதிலில்லை. பிறகு, சென்னையிலிருந்து வருகிறேன் எனக்கு தெலுங்கு பேச தெரியாது இந்தி பேச வரும் படிக்க வராது, என்றதும் ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போ, வர வண்டிய கேளு, என்றார் பாலிஷ் போட்டுக் கொண்டே, மிக எரிச்சலாக இந்தியில்.

சிக்னல் இல்லாத ஹைவேயை தாண்டுவது கஷ்டமாக இருந்தது. அவ்வளவு வாகனங்கள் நிற்காமல் வந்து கொண்டே இருந்தன. ஒரு வழியாக சாலை தாண்டி பாலநகர், பாலநகர் என கேட்க ஆரம்பித்தார். வரும் வண்டிகள் எல்லாம் உதட்டை பிதுக்கி காண்பிக்கின்றனர். எங்க போகவேண்டும், என தெலுங்குலேயே கேட்கின்றனர். பத்து மணி. அவர் சோர்ந்து போக ஆரம்பித்து விட்டார். ஒரு வெள்ளை டாட்டா வேன் வந்தது. காலியாக இருந்ததைப் பார்த்து டிரைவரிடம், சென்னையிலிருந்து வருகிறேன், எனக்கு பாலநகர் போகவேண்டும் ஒரு இன்டர்வியூ இருக்கு, கொஞ்சம் உதவ முடியுமா, என்றார் இந்தியில்.

டிரைவர் கணபதியின் முகத்தையும் தோரணையையும் ஒரு முறை பார்த்தார். முன்னாள் வந்து உட்கார், என்று சொல்லி விட்டு டிக்கெட் ஏற்ற ஆரம்பித்து இரண்டு மூன்று பேர் ஏறியவுடன் வண்டியை எடுத்தார். முகவரியை திரும்பக் கேட்டு சரியாக அதே இடத்தில் இறக்கி விட்டுச் சென்றார்.

அவர் எதிரே அந்த அடுக்கு மாடி கட்டிடம் நின்றது, கம்பெனியின் பெயர் தாங்கி. செக்யூரிட்டி செக்கப் முடித்து உள்ளே விட்டனர். முப்பதிலிருந்து ஐம்பதுக்குள் அவர்கள் ஐம்பது பேர் ஒரு ஹாலில் உட்கார வைக்கப்பட்டனர். எல்லோருக்கும் ஒரு அப்ளிகேஷன் பார்ம் தந்து, தகுதி, அனுபவம், சம்பளம், விபரங்களை நிரப்பி வாங்கிக் கொண்டனர். யாரை முதலில் கூப்பிடுவார்கள் என்ற எதிர்பார்ப்போடும் ஆவலோடும் எச் ஆர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் எல்லோரும். எச் ஆர் கம்பெனியை பற்றி ஒரு சின்ன அறிமுகம் என்று கையை காட்டினார். அவரது ஐூனியர் அந்த ஹாலில் இருந்த அத்தனை லைட்டையும் ஆப் பண்ணி விட்டு புரோஐக்டரை ஆன் பண்ணினார்.

ஒரு துளி வெளிச்சம் பொட்டாக திரையில். பிறகு குளோசப்பாக காட்சி திரையில் விரிந்த போது ஒரு சிறுவன் விளக்கு ஒளியில் பாடபுத்தகம் வாசிப்பது தெரிந்தது. ஒரே ஒரு மின்மினி பூச்சி அந்த விளக்கு ஒளியை நோக்கி வந்தது. சிறுவன் படிப்பை விட்டு விட்டு மின்மினி பூச்சியை பார்த்தான். அதைப் பிடிக்க துரத்தினான். அப்போது எண்ணற்ற பூச்சிகள் சேர்ந்து கொண்டன. சிறுவன் துரத்திச் செல்கிறான். பாதை முடிந்து மிகப்பெரிய பள்ளம், எதிரே. சிறுவன் தயங்கிப் பார்க்கிறான். பள்ளத்தில் எல்லாம் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம், இப்போது வீட்டில் எரியும் விளக்காக தெரிகிறது. இருட்டு முழுவதும் அகன்று வெளிச்சம் மொத்தமும் வீடாகவும், ரோடாக, பாலமாக, டேமாக, மெட்ரோவாக, இன்டஸ்ரியல் கன்ஸ்ட்ரக்ஷனாக, பவர் மற்றும் சோலார் பிளாண்டாக மாறும்போது சிறுவன் வளர்ந்து கம்பெனி லோகோ முன் நிற்கிறான், முதலாளியாக.

ஐந்து நிமிட காட்சியில் கட்டிப் போட்டு என்ன எதிர்பார்கிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லி விட்டனர். ஆழ்ந்த பெருமூச்சு சத்தங்கள் கேட்டது. மனம் தனக்குத் தெரிந்த ப்ளஸ் மைனஸ்களை கணக்கு போட ஆரம்பித்தது தானாகவே, கணபதி தம்பிக்கு. அருகே இருந்தவர்களும் குழப்பமாக ஆலோசிக்க ஆரம்பித்தனர். பேஞ்சூத் என்று, சத்தம் திரும்பி பார்த்தார்

இரண்டு பேர் தங்களுக்குள் இந்தியில் திட்டிக் கொண்டே, எங்கேயேயுமே வேலை இல்லை, நீ எங்கேயிருந்து வருகிறாய், என்றனர். சென்னை, என்றார் கணபதி தம்பி. பச் என்று சத்தத்தோடு சரி, மேற்கொண்டு ஒன்றும் கேட்கவில்லை. பத்து பத்து பேராக குழுவாக அழைத்துச் சென்றனர். தனது முறைக்காகக் காத்திருந்தார்.

நேர்முகம் முடியும்போது மணி 12.30. வெளியில் வந்தால் இரும்பையே உருக்கும் வெய்யில். காற்றே இல்லை. கண்கள் சிவந்து எரிய ஆரம்பித்து விட்டன. செம்மஞ்சள் நிறத்தில் பங்கனப்பள்ளி மாம்பழங்கள் பெரிய கூடைகளில் அடுக்கி இருந்தனர். புள்ளியாக வைத்த தரை சக்கரம் போல் தெரிந்தது. கடும் வெய்யிலுக்காக சாலையோரம் தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தனர்.

ரிட்டன் பஸ் 8 மணிக்குதான். சார்மினாரை பார்த்து விடுவோம், என காத்திருந்து பஸ் ஏறி அங்கு சென்றார். வழி யெங்கும் நவாப் காலத்து பழமையான கட்டிடங்களும் நவீன கட்டிடங்களும் மால்களும் மெட்ரோ பாலமும் வந்து கொண்டே இருந்தது. கராச்சி சுவிட் ஸ்டால்கள் இருந்தன. மக்கள் வெய்யிலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வேலையைப் பார்க்க அலைந்து கொண்டு இருந்தனர்.

மறுநாள் பின்மதியம் வீடு திரும்பினார் கணபதி தம்பி. இரண்டு நாள் தொடர்ந்து பயணத்தினால் உடம்பு வேதனை. நாற்காலியில் அமர முடியவில்லை அவருக்கு. ஷோல்டர் பேக்கை வைத்துவிட்டு சட்டையோடு குப்புற படுத்தார். சின்ன மகனைக் கூப்பிட்டு மிதித்து விடச் சொன்னார், நடு முதுகிலிருந்து பிருஷ்டம் வரை. மனைவி குடிக்க தண்ணீரும் ‘ டீ” யூம் கொடுத்தார். குடித்து விட்டு குளித்து வரும் வரை முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர் வீட்டினர்.

உடம்பு வலி போக்கும் சூப் ஆவி பறக்க எதிரே வைத்துவிட்டு, ஆறுவதற்கு முன் குடியுங்கள், என்றதும் மிளகின் நெடி நாசிக்கு இன்பமாக இருந்த தருணத்தில் மனைவியின் ஆர்வம் தெரிந்தது அவருக்கு.

இரண்டு பேர் இண்டர்வியு செய்தார்கள், என்று ஆரம்பித்தார்.

ம், சொல்லுங்க, என்றார் கணபதி தம்பியின் மனைவி.

அதில் ஒருவர் பெண் நடிகை சரிதா போல் இருந்தார். முதலில் உங்களை பற்றி கூறுங்கள், என்றார் அவர்.

சூப்பை ஒரு முறை உறிந்து கொண்டார். காரத்தில் தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டு, அடுத்து வேலையை பற்றி கேட்டார்கள், என்றார். எங்கல்லாம் வேலை பார்த்திருக்கிறீர்கள், என்றும் என்ன மாதிரி வேலை செய்திருக்கிறீர்கள் என்றும், ஆண் மட்டுமே தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார் என்று சொன்னார் கணபதி தம்பி.

இதுவரை பார்த்த வேலைகளில் அவர்கள் கம்பெனிக்கு உகந்தவைகளை விரிவாக .நம்பக் கூடிய வகையில் சொல்லிவிட்டு,எங்கு பிரச்சினைகள் வரும், அதை எப்படி சரி செய்யலாம், என கூட சொன்னேன், என்றார் கணபதி தம்பி. எல்லா மிகப் பெரிய வேலைக்கும் ஸ்பெக்க்கும் திட்டமிடலும் பாதுகாப்பு பற்றிய டாக்குமெண்ட்ஸ் பார்த்தால் செய்துவிட முடியும் என்றும் பிறகு அவர்கள் கம்பெனி செய்யாத வேலைகளை அவர் செய்ததாக சொன்னபோது, சில சமயம் சரிதா அலட்சியமாகவும் தன் அகன்ற கண்களால் வியப்பாகவும் பார்த்தார். .அதைப் பார்த்து, கணபதி தம்பி சரிதாவைப் பார்த்து ஆவலாக, நீங்க ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க, என்றார்.

அது வரை எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டு இருந்த சரிதா ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டார், என்று சொன்னார் கணபதி தம்பி.

என்ன, என்று ஆவல் தாங்காமல் கேட்டாள் கணபதி தம்பி மனைவி.

“மிஸ்டர் கணபதி, நீரு தமிளா? தெலுங்கு தெலுசா?“

ராயர்

தி. வேல்முருகன்

காலை மணி பத்து இருக்கும். வெள்ளாத்து ஓரம் கரையில் தீ மூட்டி கொண்டு இருந்தனர் குமாரும் ராயரும். அகரம் அங்காளம்மன் கோயிலுக்கு கொடி ஏத்திய மறுநாள் அன்று பூச்சட்டி எடுக்க ஒவ்வொருவராக பெண்களும் ஆண்களும் சிறுவரும் கையில் பானையோடு வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர், மானம்பாடி ஆத்தம்கரையில்.

“ஏ குமாரு, நல்லா வேர அடி வேருக்கட்டை கிடந்தா பாரப்பா இந்த நெருப்பு பத்தாம போயிடும்”

“எல்லாம் 20 பானைக்கும் மேல இருக்குது”

“பிறகு யார்ரா நெருப்பு போட்டதுன்னு நம்மள குறை சொல்லுவானுவ! கட்டைவோ கிடக்கும் கிழக்காலே, ஆத்தோரம் போய்ப் பாரு,” என்று சொல்லிவிட்டு ராயர் ஒரு பீடியை எடுத்து தலைப்பில் இருந்து ஒரே சீராக அரக்கி விட்டு வாயில் வைத்தார்.

தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மணி ராயரிடம், “ஏன் மாமா அந்த காச கொடுக்கக் கூடாதா நீ,” என்று கேட்டதும் அதுவரை இருந்த நாட்டாமைத்தனம் மறைந்து ராயருக்கு முகம் வாடி விட்டது. கூட்டத்தில் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா எனப் பார்த்தார். பம்பைக்காரரும் ஒத்துக்காரரும் தட்டிக் கொண்டு இருந்தனர். கூட்டத்தில் கொஞ்சம் பேர் வேப்பிலை ஒடிக்க கலைந்து கொண்டிருந்தனர். ஒத்தும் பம்பையும் இருவரும் கழுத்தில் இருந்து வாரைக் கழட்டி விட்டு வேலிக் கருவை நிழலில் ஒதுங்கிக் கொண்டிருந்தனர். கூட்டத்தோடு வந்த சிறுவர்கள் அருகில் இருந்த ரயில்வே பாலத்தை பார்க்க மேலே ஏறிக் கொண்டிருந்தனர். யாரும் அவர்களை கவனிக்கவில்லை

“மாப்பிள்ளை, அப்படி போவும் வாயேன்,” என்று மணியை அழைத்துக் கொண்டு சற்று பெரிய வேலிக்கருவை ஆற்று ஓரம் நின்ற இடத்திற்கு வழி முள்ளை ஒதுக்கிக் கொண்டு ராயர் சென்றார்.

வாயில் இருந்த பீடி அணைந்து விட்டது. அதைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாக ஒரு பீடியை உருட்டிப் பத்த வைத்தார்.

மணி ராயரை விட்டு பார்வை விலக்காமல் பார்த்துக் கொண்டு நின்றான். “மாப்பிள்ளை,” என்று ராயர் ஆரம்பித்தார்.

“சொல்லு மாமா,” என்றான் மணி.

“நான் இந்த ஊருல எப்படி சத்தியகீர்த்தியா இருந்தேன் தெரியும் இல்ல உனக்கு?”

“அதான் மாமா காசக் கொடுத்துட்டு இரண்டு வருசமா உன் பின்னாடி நிக்கிறேன்”

“அது இல்லை மாப்பிள்ளை, என் தம்பி சடையன தெரியுமில்ல உனக்கு?”

“அதுக்கென்ன மாமா இப்ப?”

“இருக்குப்பா! நீல்லாம் சின்ன புள்ள அப்ப. ஒரு நாளு மணி இந்நேரம் இருக்கும். நம்ம கிருஷ்ணன் கோயில் மானியம் இராக்குட்டைக்கு கொடுத்தாங்கல்ல, நெய்வேலியானுவல்ட்ட, தெரியுமா?”

“தெரியாது மாமா”

“நீ எல்லாம் அப்ப சின்னப்பிள்ளைப்பா. இருந்தாலும் சில விசயம் தெரிஞ்சிக்கணும். அந்தக் குட்டைலதான் நான் மாச சம்பளத்துக்கு ராக்காவலுக்கும் பகல்ல ஆளு வேலைக்குமா நிக்கிறேன். மோட்டுத் தெரு பசங்க இரண்டு பேர் சைக்கிள்ல ஓடியாந்து, “அண்ண அண்ண, ஒரு ஆளு கிடக்கு பேச்சு மூச்சு இல்லாம, நீ கொஞ்சம் வா உன் தம்பியான்னு பார்த்து சொல்லு,” அப்படின்னு சொன்னதும் எனக்கு ஈரக்குலைல இருந்து ஒரு படபடப்பு வந்து நெஞ்சு எல்லாம் அடைக்குதுபா.

“நான் கைல இருந்தத போட்டுட்டு அப்படியே குறுக்கே கொடக்கல்லு செட்டியாரு நெலத்துல இறங்கி கண்ணு மூஞ்சி வாய்க்கா வரப்பு தெரியாம ஒரே ஓட்டமா ஓடறேன்….”

“ஏய் கம்னாட்டிவோல எங்கடா போனிங்க? தீ உக்காந்துட்டுதுடா. ஏலேய் ஏய். யார்ரா அங்க? ராயரு ஏன்டா அங்க போயி நிக்கிற? தீய கலைச்சு இரண்டு கட்டைய எடுத்துப் போடுரா,” என்று ராமு படையாச்சியின் குரல் கேட்டது.

ராயரும் மணியும் திகைச்சு நிற்பதை கவனித்து, “என்னடா காலையிலே ஊத்திட்டிங்களா?”

“இல்ல மாமா தே கட்டை எடுக்கதான் வந்தோம்”

ராயரோடு மணியும் சேர்ந்து வந்து விறகு போட்டதும் தீ குறைந்சு திரும்ப நன்றாக பிடித்து எரிய ஆரம்பித்தது. கரகம் ஜோடித்து தயாராகி விட்டது. பூசாரி இன்னும் வரவில்லை. பூச்சட்டி எடுக்க வந்தவர்கள் வேப்பிலையை ஒடித்து வந்து சும்மாடு பிடிக்க தயார் செய்து கொண்டு இருந்தனர்.

“வாணம் வச்சிருக்க தம்பி, இரண்டு வாணத்த வுடுப்பா, வர வேண்டியவங்க எல்லாம் வரட்டும்,” என்றார் பம்பைக்காரர்.

‘உயிங்’ என்று ஒரு வாணம் ஆற்று மேலும் மற்றொன்று தெருவு பக்கமும் சென்று வெடித்தது.

“போதும்பா, கரவம் கெளம்பும்போது விடலாம். எல்லாம் ஆவ வேண்டிய வேலையைப் பாருங்க,” என்றார் ராமு படையாச்சி.

“மாப்பிள்ளை நீ வா,” என்று ராயர் மணியை அழைத்துக் கொண்டு ஒதுங்கி மறைவாக நின்று கொண்டு பீடி பத்த வைத்தார்.

மணிக்கு ராயரை நேரடியாக கேட்க முடியாமல், தானே சடையனைப் பற்றி தனக்கு தெரிந்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.

“மாமா எனக்கு சடையன நல்லா தெரியும். பொம்பளை மாதிரி தண்ணி கொடத்த இடுப்புல எடுத்துட்டு வருவாப்பல. எந்நேரமும் வாயில வெத்தலை பாக்கும் பொயலையும் போட்டு மென்னுக்கிட்டு பொம்பளைவகூட அவுங்களுக்கு புடிச்ச மாதிரி பேசி சிரிச்சுட்டு இருப்பாப்பல. நாங்க எல்லாம் அப்ப விபரம் தெரியாத வயசு. சடையன் யாருகூட பேசுனாலும் நாங்க அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து தப்பாதான் பேசுவோம் மாமா. அப்புறம் அவரு அகரத்து வாய்க்கா ஓரம் இருக்கற மூணு பனை மரத்துலதான் இருக்காரு, ராத்திரியானா பாதி சாமத்துல நாலாவதா ஒரு பனை ஒசந்து நெடுமரமா தெரியும், அது சடையன்னு சொல்லுவாங்க. அதப் பார்த்தா அவன் ஜோலி முடிஞ்சுது அப்படின்னு பயமுறுத்துவாங்க. ஆனா அவருக்கு பொம்பளைய மாதிரி நடையும் சாடையும் இருந்ததால நாங்க பயந்துகிட்டுதான் அந்தப் பக்கம் போவோம்”

“ஆமாண்டா மாப்பிள்ளை, அந்தப் பயல என் அம்மாதான் அப்படியாக்கிப் போச்சு. அக்காவோ கட்டிக்கிட்டு போனதும் கடைக்குட்டி இவனுக்கு பொம்பளை வேசம் போட்டுப் பாத்திச்சு, இவன் அதைய புடுச்சுகிட்டு நடக்க ஆரம்பிச்சுட்டான். வளந்த பிறகு கொஞ்சம் திருந்தி சட்டை கைலி கால் சட்டைவோன்னு போட்டாலும் சுருக்குப் பையும் வெத்தலை பாக்கையும் விடல.

“இருபது இருபத்தைந்து வருசத்து முன்ன என்ன இருந்தது? ரொம்ப கஷ்டம் மாப்பிள்ள, அப்ப இவன் சித்தாள் வேலைக்கும் நான் கூலிக்கு வண்டி ஓட்டவும் போவோம். அம்மா பாலு கறந்து செட்டித் தெருல குடுக்கும். அப்பா முடியாதவரு. அப்படி குடும்பம் போயிக்ட்டு இருந்தது. இவன் மாத்திரம் கொஞ்சம் காசு செருவாடு புடிச்சு வட்டிக்கு குடுக்க வாங்கன்னு இருந்தான்.

“கெட்ட சகவாசம் வந்துபோச்சி மாப்பிள்ளை. பொம்பளைவோ சினிமாவுக்கு, ஊட்டுல துணைக்குன்னு இட்டுப் போயி சின்ன வயசுலேயே சொல்லி கொடுத்துட்டாளுவ. வெளிய தெருவ போவ பொம்பளைவோ தொணைக்குப் போவ ஆரம்பிச்சவன், பிறகு ராத்தங்க ஆரம்பிச்சு சமயத்துல ரெண்டு மூணு நாலு வராம இருப்பான் அப்ப.

“நான்கூட, பொட்டப்பயலே ஊட்டுப் பக்கம் வராதன்னு அடிச்சுருக்கேன். ஆனா என்ன இருந்தாலும் கடைக்குட்டிப் பய இல்லியா, நாங்க தேடுவோம். ராத்திரில எங்களக் கண்டா, தே வரேன் போன்னு சொல்லுவான், ஆனா வர மாட்டான், சந்துல எங்கயாவது மறைஞ்சு நிப்பான்.

“இப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆச்சுதா, இவன் ஊட்டுக்கே சுத்தமா வரது நின்னு போச்சு. சரி, கல்யாணம் பண்ணி வச்சா சரியா வந்துடுவான்னு அம்மா என் அக்கா பொண்ணய பேசி வச்சிருக்கு. அப்ப இவன் என்ன பண்ணான் தெரியுமா?

“சீட்டு புடிச்சு 25000 ரூவாய பாதிக்குப் பாதி தள்ளி எடுத்து வசூல் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்பதான் ஒரு நாளு விடியக்காலையில 4 மணி இருக்கும், மொத கோழி கூவிப் போச்சு. அரவம் கேக்குது, யாருன்னு பார்க்கறேன், சடையன் உள்ள பூனை மாதிரி வரான். கெட்ட வீச்சம் அடிக்குது.

“இதை எல்லாம் சொல்லக் கூடாது, நீ யாரு வெத்து மனுசாளா? மாமன் மவந்தான கேட்டுக்க- எல்லா பெரிய பிரச்சினைக்கு ஆரம்பம் உப்பு பொறாத சின்ன பிரச்சினைதான் காரணமா இருக்கும் அந்த மாதிரி சின்ன பிரச்சினைதான் ஆரம்பம்.

“எனக்கு கல்யாணம் நடந்து கொஞ்ச நாள்தான ஆவுது, அப்ப அன்னைக்கு நல்ல நிறைஞ்ச வெள்ளிக்கிழமை. வீட்டுல இருந்த பால உரிலேருந்து பூனை தள்ளப் போவ, அதப் பாத்து அம்மா என் ஊட்டுக்காரிய சத்தம் போட, ஒன்னு மேல ஒன்னு குறை சொல்ல எனக்கு இடையில கோவம் வந்து ஊட்டுக்காரிய ஒரு அடி அடிச்சிட்டேன். அதான் என் ஊட்டுக்காரி அதுக்கு ஒத்துக்கல. அன்னைக்கு ராத்திரி நான் கடுப்புல வெளிய நார்க் கட்டிலைப் போட்டு படுத்து இருக்கேன், நல்ல மாசி மாசத்து நிலா வெளிச்சம் வாசல்ல விழுது. காஞ்ச புளி உடைக்காம வாசல்ல கிடக்கு. .தூக்கம் இல்லை, சரியா பெரண்டு பெரண்டு கிடக்கேன். அப்பதான் சடையன் வாரான். முட்டை ஓடு ஒடையற மாதிரி சத்தம். புளியம்பழத்தை மெரிச்சிட்டான் போல இருக்கு. இவன் மேலதான் வீச்சம் அடிச்சது. புரிஞ்சு போச்சு. வந்த கோவத்துல வச்சி விரிச்சு கண்ணு மூஞ்சி தெரியாம அடிச்சிட்டேன்”

“ஏன் மாமா?”

“உனக்குப் புரியலையா? என்னப்பா, அக்கா பொண்ண பேசி வெச்சிருக்கு, இந்தப்பய திருந்தாம பொம்பளகூட படுத்துக் கிடந்து வந்து இருக்கான்பா”

“அப்புறம் மாமா?”

“அன்னைக்கு போனவன்தான்…”

“எல்லாம் தனித்தனியா நிற்காம வாங்கடா, நேரம் ஆவுது, சாமி அழைக்கணும்… ஏங்க பம்பைக்காரரே கொஞ்சம் தட்டுங்க… ஏய் வாணத்தை உடுங்கப்பா,” என்று எல்லோரையும் விரட்டிக்கொண்டு வந்தார் ராமு படையாச்சி.

ராயரும் மணியும் தொடர்ந்து பேச முடியாமல் தீ எரியற இடத்துக்கு வந்து தீயைக் கலைத்து நெருப்பை ஆற்றினார்கள்.

பூச்சட்டி எல்லாம் வேப்பிலை மாலை கட்டி வரிசையாக இருந்தது. பூசாரி கொண்டு வந்து இருந்த வடை வாரியால் நெருப்பை பூச்சட்டியில் அள்ளிப்போட ஆரம்பித்தார். சாம்பிராணி பொடியை எல்லாரும் போட ஆரம்பித்ததும் அந்த இடம் பார்க்க வேறு மாதிரி ஆகிப் போனது.

பம்பைக்காரர் ராகமாக பாட ஆரம்பித்தார். செண்டையும் பம்பையும் உக்கிரமாக அடிக்க ஆரம்பிக்கவும் பூசாரி வந்து பூக்கரகம் பக்கத்தில் நின்னதுதான் தெரியும், “ஆடி வாரா என் அங்காளம்மா…” என்று பம்பைக்காரர் ஒரு பக்கம் பாட, “என் அங்காளம்மா…” என்று ஒத்துப்பாடி பின்தொடர்ந்தார்.

பம்பை அடியை கூட்டி, டாய் என்று கத்திக் கொண்டு,

“ஓடி வரா என் அங்காளம்மா
அவ பாடி வாரா என் அங்காளம்மா”

என்று பம்பை அடி வேகம் கூடியதும் பெண்கள் இருவர் இறங்கி சாமியாட பூசாரி உடல் நடுங்க ஆரம்பித்து கத்திக் கொண்டு துள்ள ஆரம்பித்தார். அவரருகில் நின்ற அக்னிபுத்திரனும் சாமியாட ஆரம்பித்தார். இருவருக்கும் விபூதியிட்டு கரகமும் பூச்சட்டியும் கையளித்து தூக்கிவிட்டதும் வரிசையாக மற்றவர்களும் பின்தொடர்ந்தனர். பம்பையும் மேளமும் வாண வேடிக்கையோடு முன் சென்றது.

“மாமா…” என்று ராயர் கையை மணி பிடித்துக் கொண்டு கூட்டம் போகட்டும் என்பது போல் கை காட்டினான்.

“அப்புறம் என்னாச்சு மாமா?”

“அத ஏன் கேக்கற மாப்பிள்ளை… தானா வந்துடுவான்னு இரண்டு நாளு பாத்துட்டு தேட ஆரம்பிச்சா ஆள கண்ணுல காணும். தெரிஞ்சவங்க சொந்தக்காரங்க ஊடுவோன்னு ஒரு இடம் பாக்கி இல்லாம தேடறோம் ஆளு அம்புடலை. ஒரு வாரம் ஆயிப் போச்சி, ஒரு தகவலும் கிடைக்கல. எத்தனை நாளைக்கு சும்மா இருக்க முடியும்?

“அன்னைக்குதான் இறால் குட்டைக்கு திரும்ப வேலைக்குப் போனேன், அப்பதான் இந்த மாதிரி கத்திக்கிட்டு ஓடியாந்தானுங்க”

“பிறகு என்ன ஆச்சு மாமா?”

“உன் தம்பியா பாருன்னு சொன்னானுவல, பயம், நடுக்கம் மாப்பிள்ளை, அப்படியே சொரசொரப்பு. ஒண்ணுமே புரியல. எங்க எங்கன்னு கேட்டுப் போறேன். கொய்யாத்தோப்பு போ போன்னு சொல்றாங்க. புள்ளத் தோப்பு வழியாத்தான போவணும், ஒரே ஆனை நெருஞ்சி காலெல்லாம் குத்துது, வேலிக் கருவை மேலயெல்லாம் கிழிக்க ஓடுறேன். தூரத்துலேயே தெரியுது, ஆளுவ கூட்டமா நிக்கிறது. அதப் பார்த்து ஓடறேன். ஓடிப் பார்த்தா ஒரு கீத்துல குப்புறக் கிடக்குறது தெரியுது. பார்த்ததும் தெரிஞ்சு போச்சு ,அவந்தான்னு. புள்ள எவ்வளவு நேரம் கிடந்தானோ…

“ரேகம் எல்லாம் துடிக்கிது. கிட்ட நெருங்க முடியல, வாட… யாருமே போவ மாட்றாங்க. உருக் குலைஞ்சு கிடக்கு. எனக்கு தம்பிய நாமதான் கொன்னுட்டோம்ன்னு மனசு ஆறலை மாப்பிள்ளை.

“நான் அன்னைக்கு கோவப்பட்டு அடிச்சது அதர்மம். பொம்பளை சுகம் ஒரு நாள் கிடைக்கல. இவன் மாத்திரம் போயி வரான அப்படிங்கற ஆத்திரம் பொறாம பாதகத்தை செஞ்சிட்டேன். ஒரு நாளும் அந்த மாதிரி அடிச்சது இல்லை…”

“அழுவாத மாமா… விதி, நீ என்ன செய்ய முடியும்?”

“நான் அடிக்கலனா அவன் போவப் போறது இல்ல. ஊட்டுல புது பொம்மனாட்டி இருந்ததால அவன் மான ரோசப்பட்டு வரல. அப்ப போனவன்தான் கீழ கிடக்கான்.

“சனம் எல்லாம் கூடிப் போச்சு, என் காசுக்கு வழி சொல்லுன்னு.

“எந்தக் காசுனு கேட்டா, எல்லாம் சீட்டுப் பணம். எனக்கு ஆயிரம் ரெண்டாயிரமுன்னு எல்லாம் ஒரு இருபது ஆயிரம் கணக்கு வருது.

“அப்ப நாட்டாமை கெழவர்தான் எல்லாரையும், நேரம் கெட்ட நேரத்துல என்னடா பேசுறீங்கனு சத்தம் போட்டு, “அதெல்லாம் பிறகு பார்க்கலாம் முதல்ல ஈச்சம் பாயும் கட்டிலும் கொண்டு வந்து பாயில சுருட்டிக் கட்டுங்கடா. கட்டிலோட தூக்கி கொண்டு போயி சுடலைல வச்சி எரிச்சுட்டு வந்து சேதிய சொல்லுங்கடா,” அப்படின்னு சொன்னாரு.

“அதே போல செஞ்சாச்சு. விடிஞ்சு பால் தெளிக்க கிளம்பறோம். பணம் தரணுமுன்னு சொல்லி கடன்காரன் வழிய மறைக்கவும் பஞ்சாயத்த ஓடும் பிள்ளை விட்டு உடனே ஊரக் கூட்டியாச்சு. ஆள் ஆளுக்கு வாய்க்கு வந்த மாதிரி பேச ஆரம்பிச்சதும் நான் சொன்னேன், ‘நாட்டாமை பணம் காசுக்காக அண்ணன் தம்பி இல்லாம புடாது. என் தம்பி போய்ட்டான். அவன் எவ்வளவு காசு வச்சி இருந்தான் வாங்குனான்னு எனக்குத் தெரியாது. .குடியிருக்கிற மனக்கட்டு இருக்கு. அத ஒரு விலை போட்டு நீங்க எடுத்துக்குங்க. செத்துப் போன எந்தம்பிய கடன்காரன்னு யாரும் சொல்லாதீங்க. நான் என் குடும்பத்தை காலி பண்ணிட்டு வேலை செய்யப் போற இடத்துல இரந்து என் பாட்டப் பாத்துக்கிறேன்,” அப்படினு சொன்னதும் நாட்டாமை செத்துப்புட்டாரு. நல்ல மனுஷன்.

“அவரு எழுந்து, “ஏய் தலைமுறையா இருந்த குடும்பம், நீ எங்கடா போவ? முட்டுக்கட்டை இருடா,” அப்படினு சொல்லி, “ஏம்ப்பா உங்களுக்கு எல்லாருக்கும் சொல்றேன். செத்துப் போன தம்பி வாங்குன கடனுக்காக அண்ணன்காரன் இல்லன்னு சொல்லாம தன் பங்கையும் உட்டுக் குடுக்குறான். நீதி, நாயமுன்னு ஒன்னு இருக்குல்லையா? அண்ணன் தம்பின்னா பாகம் இரண்டு. ஒரு பாகத்துல ராயர் இருந்துக்கட்டும். ஒரு பாகத்தை விலையப் போடு. அத எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடு. மேற்கொண்டு பாக்கி நின்னுச்சினா இருக்கப்பட்டவன் அவனுக்கு ஒரு வருஷம் கெடு கொடுங்க, ராயர் பைசல் பண்ணிடட்டும். கடன் கொடுத்தவன் எல்லாம் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க,” அப்படினு சொல்லிப்புட்டாரு.

“உடனே பொம்பளைவோ எல்லாம் குசுகுசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க, கூட்டத்துல. சடையன் ராத்திரி வந்து ரோட்ல நின்னான், பார்த்தேன். அவன் பேயா நிற்கிறான், நிலை இல்லாம. யாராவது அடாவடியா ராயர வீட்டை விட்டு தொரத்துனீங்க, அவங்க குடும்பம் அவ்வளவுதான், சடையனத் தெரியுமுல்ல ஒருத்தரும் தப்பிக்க முடியாது. பாவம், கோரமா அகாலமா போயிட்டான் வாழற வயசு, அப்படினு பேசுதுங்க ஒவ்வொரு பொம்பளையா.

“உண்மையோ பொய்யோ யாரு கண்டா? அதிகமா சொன்னவங்க எல்லாம் பயந்து போயி உள்ள தொகைய சொன்னதும், நாட்டாமை, “என்னடா சொல்ற ராயர்?” அப்படின்னு கேட்டார்.

“”அதுக்கென்னங்க பால் தெளிய முடிச்சிட்டு செட்டியார்ட்ட ஊடு பத்திரம்தான் இருக்கு அத வச்சித் தரேன், நீங்களே கொடுத்துடுங்க நாட்டாமை,”ன்னு சொல்லிட்டு அப்படீயே செஞ்சேன் மாப்பிள்ளை. அப்படியாப்பட்ட சத்யகீர்த்தி நானு. சரியா மூணு வருசம் ஆச்சு மனக்கட்ட திருப்ப. அப்பா அம்மா ரெண்டு பேரும் மறு வருசமே ஒன்னு பின்ன ஒன்னா போயி சேர்த்துட்டாங்க. நான்லாம் தப்பு பண்ணிட்டு என்னும் இருக்கேன். அப்பையே போயி இருக்கணும், மாப்பிள இப்படி நெஞ்சில வச்சி குமைஞ்சு அல்லாடாம…”

“அப்புறம் உம் பிள்ளைவோள யாரு பார்ப்பா மாமா?”

“அத நினைச்சுதான் கிடக்குறேன்”

“அது சரி மாமா, சடையன் எப்படி செத்தாப்லன்னு தெரிஞ்சுதா?”

“கெட்ட சகவாசம்தான். பொம்பிளை தொடர்பு, காசு பணம் குடுக்க வாங்கன்னு இருந்தான்ல, இதுல ஏதோ ஒன்னுதான் காரணம். அவன் செத்ததும் ஒரே புரளி. இங்க நிக்கிறான் அங்க நிக்கிறானு… பொம்பளைவொளுக்கு சொல்லவா வேணும்?”

“அவன் பூட்டான், ஆனா இன்னைக்கும் என் மனசு தவிக்குது மாப்பிள பொறாமையில நான் அடிச்சது உண்மை. எனக்கு மன்னிப்பு கிடையாது.

“நீ நல்லா இருப்ப. யாருகிட்டயும் இப்படி மனச நான் தொறந்தது இல்லய்யா. உன் காசு எங்கேயும் போயிடாது தரேன் மாப்பிள”.

பூக்கரகமும் அக்னிச் சட்டியும் கோயில் வாசல் வந்து விட்டது. கோயில் உள்ளிருந்து எட்டிப் பார்த்த ராமு படையாச்சி, “என்னடா ராயர் இன்னும் போத தெளியலையா உனக்கு? நல்ல குடும்பத்துல பொறந்துட்டு ஏன்டா இப்படி பண்ற?” என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தவர், “ராயரு, ரெண்டு நாளைல தரன்னு சொன்னியேடா, வித உடப் போறன்னு சொல்லி வாங்கின அந்தக் காசக் குடுக்கக் கூடாதாடா?” என்றார்.

செரவி

தி. வேல்முருகன்

20161227_115952

கந்தனுக்கு இப்ப இருக்கிற ஒரே பிரச்சினை 2000 ரூபாய்க்கு சில்லறை வேண்டும். சஞ்சீவிராயர் கோயில் பக்கத்தில் இருந்த ஐமாலியா மளிகையை பார்த்ததும் யோசிக்காமல் நேரே அங்கு நடந்து நிறைய பொருட்கள் வாங்குவது போல் தோரணை காட்டி சீனி, உடைச்ச உளுந்து என்று கொஞ்சம் பலசரக்கு வாங்கிக் கொண்டு 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.

“234 ரூபாய் வருது 2000 ரூபாய் தர்ரிங்க”

“சில்லறை இல்ல”

“அரே அல்லா, யாவரமே சுத்தமா இல்ல பேங்க்ல காசு எடுத்ததும் நேரா இங்கதான் வராங்க. நீங்க எங்கயாவது பக்கத்துல மாத்த முடியுமா பாருங்க சார்”

எங்க மாத்திறது? கொஞ்சம் தள்ளி இருந்த மியான் பாய் கடைதான் தெரிந்தது கந்தனுக்கு.. அந்தக் கடைகூட கைமாறி வேற பேருல இப்ப இருக்கு. அதுக்கு எந்த பேரு மாறுனாலும் அந்த கடை பேரு ஊர்க்காரங்களுக்கு மியான் கடைதான். அதுலகூட இப்ப ஒன்னும் யாவாரம் தெரியல.

முன்பு எல்லாம் இந்த நாள்ல ரொட்டி கோழிக்கறியோடு கொக்கு, நொல்லமடையான் கறியெல்லாம் கிடைக்கும். மதிய நேரத்தில் சாப்பிட இடம் கிடைக்காது. வரிவரியா நெய் ரொட்டிய கம்பியால எடுத்து உருவி இரண்டு கையால ஒரு தட்டு உச்சில ஒரு தட்டு. பொலபொலவென உதிர்ந்து இலகுவா பல்லுக்கும் நாவுக்கும் பதமா தெரியற மாதிரி வைப்பாங்க. எங்கிருந்தொ கொக்கு நொள்ளமடையான் எல்லாம் உயிரோட பிடிச்சு சைக்கிள் ஹாண்டில் பாருல மாட்டி எடுத்து வருவாங்க. அந்த கடையில விக்க.

கொஞ்சம் தள்ளி ஆட்டா கடை. அங்கேயும் இதே மாதிரி கறி எல்லாம் கிடைக்கும் பக்கத்திலதான் ஆண்கள் மேநிலை பள்ளி. அங்கு படிச்ச ஞாபகமும் சாயந்திரம் ஆனா ஆட்டா கடை கொத்துப் பரோட்டா கொத்துற டன் டன் சத்தம் கேட்குற மாதிரியும் கொக்கு கறி தேங்காய் சால்னாவோட அது ஒரு ருசி நாக்குக்கு தெரிந்து ஞாபகம் முட்டியது கந்தனுக்கு.

எல்லாம் போச்சு இப்படி மழையே பெய்யாம போனா அவ்வளவுதான்.

கந்தனுக்கு கொக்கு நினைப்பு வந்ததும் முதல் நாள் பார்த்த பறவை பிடிப்பவனின் வெற்றுடம்பும் தளந்து சுருங்கி வரிவரியா தெரிந்த ஒட்டிய வயிரோட கையில தூக்கிக் காட்டிய காட்டுவாத்தும் சேர்ந்து ஞாபகம் வந்துடுச்சி. யாரும் வாங்குல. அந்த பெரியவர் கேட்டுட்டு இருந்தாரு. கந்தனுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.

அவன் அப்பத்தான் ஒரு மீன வாங்கி வெட்டி சுத்தம் பண்ணி வெளியே வரும்போது வழியில ஒக்காந்து இருந்த ஆயா, யப்பாடி இந்த இலந்தபழம் வாங்கிக்கப்பா மணலு மாதிரி இருக்கும்பா, ன்னு கேட்டதும், எவ்வளவு ஆயா,ன்னு கந்தன் கேட்டதுக்கு, பத்து ரூபாய்ப்பா” என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் தோலெல்லாம் சுருங்கிப் போன கையால நிறப்படி கூம்பாகவும் கையாலேயும் அதே அளவு அள்ளிப் போடுது. பழம் எல்லாம் பிரஷ்ஷா நத்தை நத்தையாட்டும் இருக்கு. வாணாம்முன்னு சொல்ல முடியாத வாங்கிட்டு 100 ரூபாய் நோட்டைக் கொடுத்ததும், நல்ல புள்ளப்பா நீ! ஏன் கிட்ட ஏது இவ்வளவு காசு, உள்ள செத்த மீன்காரிவோட்ட இருக்கும் கேளேன்?

சில்லரையா மீன் செதிலு ஒட்டியிருந்த நோட்ட வாங்கி ஆயாகிட்ட கொடுத்து, என்ன ஊரு ஆயா, என்றார் கந்தன்.

“நான் அரிகிஷ்ட்டிதாம்பா, தோட்டத்துல தரையில கொட்டி வீணாப் போவுதா, அதான் இப்படி அள்ளிக் குடுத்துட்டு அப்படியே ரயிலடி போயி ரவிக்கடையில ஒரு டீய போடச் சொல்லி குடிச்சுட்டு வூட்டுக்கு போவேன், சாப்பாடு ஒன்னும் செல்ல மாட்டேங்குது. டீ தான் புடிக்கும். ஒரு வா தொண்டையை நனைச்சா போதும் பையன் சவுதியில இருக்கான், வரவரைக்கும் உயிர வச்சுக்கனும் பாரு”

“வேற யாரும் இல்லியா ஆயா?”

“இருக்கா, மருமவ இருக்கா அத ஒன்னும் கேட்காத, நீ போ”

அப்பத்தான் திரும்பி வரும்போது அந்த பெரியவர் அந்த காட்டு வாத்த வச்சிகிட்டு மரைக்கார்கிட்ட, வாங்கிகிக்க சாமி,ன்னு கேட்டுக்கிட்டு இருந்தார்.

“செத்துப்போச்சு கனி, உயிரா இருந்தா வாங்கலாம்,” அப்படின்னு சொல்லி போயிட்டாரு மரைக்கார்.

வாங்கக்கூடிய யாரையும் காணும். பெரியவர் முகத்தைப் பார்க்க முடியல. அவரும் மட்டும் தானா, இங்க  முருகன் மெடிக்கல் கீழே பெரியாஸ்பத்திரி பக்கத்தில பழம் விக்கறவங்க, அதச் சுத்தி நடந்து போறவங்க யாராவது வாங்க மாட்டாங்களான்னு அவங்க பார்க்கிறது… ஏன் இந்த ஜமாலியா கடையில நிக்கரவங்க வாங்கரவங்க யார் முகத்திலையும் ஒரு வெறுமைதான தெரியுது.

ச்சே அந்த காட்டு வாத்த நாமாவது வாங்கி இருக்கலாம், என்று கந்தன் நினைத்துக் கொண்டான்.

என்னங்கனி யோசனை ரொம்ப நாழியா நிக்கராகள, அவுகளுக்கு பைசாவா குடுத்து அனுப்பு என்றார் பில் போட்டுக்கிட்டு இருந்த பாய்.

கல்லாவில் இருந்தவர், சரி நானா, என்று எண்ணிக் கொடுத்தார்.

“இனிமே 2000 ரூபாய மொதல்லிய சொல்லிடுங்க, இங்கே பாரு வாப்பா பைசாவெல்லாம் நீங்க கொண்டு போவுது”

“இல்லை பாய் இனிமேல் வரமாட்டேன்,” என்ற கந்தன் பேங்க் வாசல்ல நிறுத்தி இருந்த டூ விலர எடுத்துட்டு நேரா கீரைக்காரத்தெரு, பஸ்டாண்ட், பெரிய மதுவு வழியா வண்டிய வெரட்டி தெருவுக்கு திரும்ப இருந்தார். அப்போது, ரோட்டு முனையில் இருந்த ஆலமரத்தடியிலேருந்து, சாமியோவ், நேத்துகூட பார்த்திய செரவி, செரவி வாங்கிக்க சாமி வூட்டுல ஆச்சிக்கு புடிக்கும், என்று பெரியவரும் அவர் மனைவியும் ஒரு சேர சொன்னதும் கந்தனுக்கு மீறமுடியல. வண்டிய நிறுத்துனார். எவ்வளவு காசு என்று கேட்டு கொடுத்து விட்டு உறிக்கச் சொன்னார்.

“பெரியவர இது செரவி கிடையாது காட்டு வாத்து, ஆனா நாங்க செரவின்னுதான் சொல்லுவோம் சாமி”

“சரி சரி உறிச்சுக் கொடுங்க”

ரெக்க, காலு கழுத்த அறிஞ்சுட்டு பனியனைக் கழட்டற மாதிரி முடியோட தோல உருவிட்டு வயித்துல சின்னதா ஒரு கீறல், அப்படியே குடலு சரியிது. ஈரல கிள்ளிப்புட்டு மனைவி கையில கொடுக்குறாரு பெரியவரு. அவுங்க அதுல ஒட்டியிருந்த ஒன்னு ரெண்டு முடிய எடுத்துட்டு சவுக்கத்தால் பையில போட்டுச்சு. எல்லாம் நிமிசத்துல மூணையும் உறிச்சுட்டாங்க

ஒரே ஈரல் நிறமாகவும் ரத்த நெறமாகவும் தெரிஞ்சதும், ஆகா பிரசு, கறி நல்லா இருக்கும் என்று மகிழ்ந்து போய் வீட்டுக்கு வந்து மனைவிகிட்ட காட்டி, வள்ளி, வள்ளி என்னன்னு பாரு,ன்னு சொல்றார் கந்தன். எட்டிப் பார்த்தவள், அய்யோ இது என்ன கருமாந்திரம் ஒரே கவுளு, என்ன கொண்டு ஆவாது,ன்னு சொல்லி விட்டாள். கந்தனுக்கு குருவிய தானே புடிச்ச மாதிரி இருந்த சந்தோஷம் போன இடம் தெரியல. கறிய எடுத்து மோந்து பார்க்காரு, கவுளுதான் அடிக்குது.

“வள்ளி வள்ளி நாம வாங்கற மீன் கருவாட விடவாபெரிய கவுளு…”

“அப்ப நீ சுத்தம் பண்ணி குடு செய்யறேன், ஆனால் நான் திங்க மாட்டேன்” என்று சொல்லி விட்டாள் வள்ளி.

வாங்கியாந்துட்டமே என்னடா செய்யறதுன்னு சட்டைய கழட்டிட்டு துண்ட கட்டிகிட்டு இறங்கிட்டாரு கந்தன்.

நல்லா ஓடியும் நீந்தியும் மேய்ஞ்ச குருவிவோ இல்லியா கறிய பாரு எப்படி இருவி ரத்தமாட்டம் கிடக்கு பாரு, என்றார் மனைவி வள்ளிய பார்த்து

சரி சரி நாக்க ரொம்ப நீட்டாம நல்லா சின்னதா சன்னமா வெட்டிடுங்க, வேவாமா போயிட போவுது, என்று திட்ட ஆரம்பித்ததும், ஏய் உனக்கு குருவி அவளவு எலுப்பமா போச்சா, புடிக்கறத நான் பாத்துருக்கேன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்ப எனக்கு 20 வயசு இருக்கும், அப்படின்னு கந்தன் சொல்ல ஆரம்பித்ததும்-

“ஆமாம் ஆமாம் நீ ஆடுன ஆட்டத்ததான் சொன்னாங்களா?”

“இதான் ஓங்கிட்ட புடிக்காது”

“சரி சரி சொல்லு”

“ஒரு நாளு சாயந்திரம் ஒரு 3 மணி இருக்கும் ஆத்து ஓரமா தெற்கு வாய்க்கால் மேல வயலுக்கு போறேன். இப்ப அந்த இடம் வாய்க்கால் எல்லாம் இறால் குட்டவலா போயிடுச்சு. அப்ப திடீர்னு வாய்க்கால் மேல நின்ன ஒருத்தரு கைய காட்ராறு, வராத வராதன்னு. நான் பயந்து போயி என்னமோ தெரியலன்னு கமுக்கமா வாய்க்கா வரப்புல்ல உக்காந்து அவரையே பார்க்குறேன். அவரு வடக்க மானத்தை பாக்கறாரு, நானும் பார்க்கிறேன். இரண்டு கொக்கு பறந்து வரது தெரிஞ்சுது. இவர பாக்கறேன், கையில இருந்த கயிற ஒரு கையால இழுக்குறாரு. அப்ப பார்த்தா வயல்ல இருந்த ஒரு கொக்கும் நொள்ளமடையானும் ரெக்கைய தூக்கி அடிக்குது, பறக்காம.இதை மேல பறந்த இரண்டு கொக்கும் பார்த்துச்சா, அப்படியே இறக்கைய அடிக்காம காத்துல மிதந்து ஒரு வட்டம் போட்டு கால நீட்டிக்கிட்டு வந்து அந்த கீழே இருந்த கொக்கு பக்கத்தில ஒக்காந்துச்சு”

“அய்யோ அப்புறம்?”

“க்ராச்ன்னு சத்தம் கொடுத்து பறக்க நினைச்சுது பாரு, அவரு இன்னோரு கையிலிருந்த கவுற இழுத்துட்டாரு, அப்படியே இரண்டு பக்கமும் மறைச்சு வச்சிருந்த வல கொக்கு மேல உழுந்து மூடிப்போச்சு”

“அய்யோயோ “

“அப்புறம் பார்த்தா அந்த குருவி புடிக்கரவரு ஓடிப் போயி ரெண்டு கொக்கையும் பிடிச்சு அது இறக்கைய பிச்சி கட்டி போடறாரு. பாவமா இருந்துச்சு, அப்படியே பார்த்துட்டு போயிட்டேன்”

“அப்புறம் ஏன் இத வாங்கிட்டு வந்த?”

“அதெல்லாம் கேக்காத. தோ முடிஞ்சுடிச்சு. நீ ஆக்கிடு நான் குளிச்சிட்டு வந்துடறன்”

வந்ததும் வள்ளி, நீ மேசைய நாசம் பண்ணாத, என்று சொல்லி, ஒரு வாழையிலை கிள்ளிட்டு வந்து, கீழ உக்காரு, என்றாள். தரையில ஒக்காந்ததும் சாமி படையல் மாதிரி வறுத்த கறி, சோறு, ரசம், கீரை எல்லாம் வச்சி சுட்ட கருவாடு சுருட்டும் சாராயம் மட்டும் தான் இல்ல, நீங்க சாப்புடுங்கன்னுட்டு போய் விட்டாள்..

உடையாரப்பான்னு குலதெய்வத்தை நினைச்சுட்டு ஒரு கறிய எடுத்து வாயில வைக்கிறாரு கந்தன், குப்புன்னு அவரு மொகத்துல வந்து அடிக்குது ரத்த கவுளு. அப்படியே ஒரு மாதிரி ஆயிடுச்சு கைல அடிக்குதா கறில அடிக்குதான்னு அவருக்கு தெரியல. மேற்கொண்டு ஒரு வாய் சாப்பிட முடியல.

இலையில இருந்த சோத்த கீரையில பெசைஞ்சு சாப்பிட்டுட்டு, இலைய சுருட்டி நாய்கிட்ட வச்சிட்டார். வள்ளி கேட்டதுக்கு, தெகட்டுது போதும் பசங்க வந்தா திங்கட்டுமுன்னாரு. ஆனால் அவருக்கு தொண்டையில மாட்டுன முள்ளுமாரி அருவிகிட்டே இருந்துச்சு என்னடா இப்படி ஆயி போச்சேன்னு. பசங்க வந்து ஒன்னும் சொல்லாம நல்லா இருக்குன்னு சாப்ட்டாங்க

மறுநாள், இன்னைக்காவது நல்ல சாப்பாடு சாப்புடும் என்று நினைத்த கந்தன், பெரிய மதுவு ஓரம் தனது டூ விலர நிறுத்திட்டு போன வருட மழையில் பிளவுபட்டு இன்னும் சரி செய்யாத அபட்மண்டை பார்த்துக் கொண்டு சிதறி கிடந்த கருங்கல்லில் இடித்துக் கொள்ளாமல் மெதுவாக இறங்கி திரும்புறாரு.

‘சாமி செரவி வாங்கிக்க ஆச்சிக்கு புடிக்கும்னு’ சத்தம். முகத்தை திருப்பிக்கிட்டு விருட்டுன்னு மீன் கடை உள்ள போயிட்டாரு கந்தன்.

எளிய குரூரங்கள் – தி. வேல்முருகனின் ‘முத்துப்பிள்ளை’

மாயக்கூத்தன்

ஒரு வெள்ளிக்கிழமையன்று பள்ளி விடும் சமயம் வாரக்கடைசியை எப்படிக் கழிக்கலாம் என்று ஒரு சிறுவன் யோசிப்பதில் தொடங்கும் இந்தக் கதை, வெவ்வேறு மனிதர்களைக் கடந்து சென்று நாம் சாதாரணமாக எண்ண முடியாத ஒரு முடிவை அடைகிறது.

தி வேல்முருகனுடைய கதைகளில் இருக்கும் ஒரிஜினாலிட்டி அவற்றை மற்ற எல்லோரிடமிருதும் வேறுபட்டு நிற்க வைக்கிறது. இந்த மனிதர்களை வேல்முருகன் அன்றி வேறொருவர் நமக்கு அறிமுகப்படுத்த முடியாது. அதுவும், ஒரே கதையில் வரும் வெவ்வேறு மனிதர்கள், ஒன்றுபடும் விதமும் வேறுபடும் விதமும் சிந்திப்பவர்களுக்கு பல திறப்புகளைத் தரக்கூடும். அவர் அப்படி நினைத்து, தன் கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார் என்று நீங்கள் சொல்லக்கூடும். எனக்கு அப்படித் தோன்றவில்லை. என் எண்ணம் தவறென்றாலும் பிரச்சனையில்லை. அது அவருடைய கதைகள் தரும் உற்சாகத்தையும், அளிக்கும் தாக்கத்தையும் எந்த விதத்திலும் குறைத்துவிடுவதில்லை.

இங்கே ஆயாவும் பவுனும். இரண்டு பேருக்கும் ஒரு தலைமுறைக்கான இடைவெளி இருந்தாலும் பவுனின் இன்றைய நிலையும், ஆயாவின் முந்தைய நிலையும் ஒன்று- ஆயாவை குழந்தைகளையும் விட்டுவிட்டு அவள் கணவன் போனபின் அவள் குடும்பத்தைக் கரை சேர்க்கிறாள், பவுனு பொறுப்பில்லாத கணவனுடன் இருந்தாலும், குழந்தை இல்லாத குறைக்காக வருந்துகிறாள். இருவரும் வெவ்வேறு விதமாக தங்கள் நிலையைக் கடக்கிறார்கள். பவுனை நம்முடைய காலத்து மனுஷி என்று வைத்துக் கொண்டால், நமக்குள்ளிருந்து எழும் குரலை நம்பி மேலேறி வருவதை விட, இன்றைக்கு நம்முடைய சொந்த வாழ்க்கைக்கு மற்றவர்களின் அங்கீகாரம் நமக்கு அவசியமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ’உன் வயதில் நானும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு மேலே வரவில்லையா’ என்று கேட்கும் ஆயாவுக்கு எனக்குப் பிள்ளைகள் இல்லை என்று பவுன் சொல்கிறாள். மனிதர்களுக்கு அவர்களைச் சார்ந்து யாரும் இல்லை எனும்போது, வரும் வேகத்தை என்னவென்று சொல்வது? இல்லை, ஒருவனோ ஒருத்தியோ தனக்காகவே மட்டுமே தன்னுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டு செல்வது அத்தனை கடினமானதா?

என்னைப் போல தேவையில்லாததை எல்லாம் எழுதிவிடும் கெட்ட பழக்கம் வேல்முருகனிடம் இல்லை. கதைக்கு என்ன தேவையோ அவற்றை மட்டுமே எழுதும் ராணுவ ஒழுங்கு அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு வரியும் கதையை முன்னே எடுத்துக் கொண்டு போவதை இந்தக் கதையில் காணலாம்.

அவன் (அந்தச் சிறுவன்) தன்னுடைய வாரக்கடைசி இப்படிப் போகும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆயாவுக்கும் பவுனுக்கும் நடக்கும் சந்திப்பும் அதன் தொடர்ச்சியும், மாமா வளர்க்கும் ஆட்டுக்கு விழும் அடியும் கூட அவை நிகழும் நொடிக்கு முன்பு வரை எதிர்பாராதவை. தன் பாட்டியுடன் அவள் வீட்டுக்கு வார இறுதியில் செல்லும் சிறுவன் அங்கு தன் மாமாவுடன் ஊர் சுற்றுகிறான். அவர் ஆடு வளர்க்கிறார், அது இவன் கொடுக்கும் புல்லைத் தின்றதும் முட்ட வருகிறது- தான் வளர்க்கும் ஆட்டுக்கு அவர் சண்டை பழக்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த நாள் ஆடுகளுக்கு இடையில் நடக்கும் சண்டையில் வெளிப்படும் வன்மம் இயற்கையாகவே அவற்றுக்கு உரியதா அல்லது அதுவும் மனிதர்களால் பழக்கப்பட்டதா என்றே சந்தேகம் வருகிறது. மனிதனையும் மிருகத்தையும் எது பிரிக்கின்றது என்று யோசித்தால் மனிதனின் காரணமற்ற, ஆனால் திட்டமிட்ட வன்முறையும், தன்னிச்சையாய் அவனுள் சுரக்கும் கருணையும்தான் என்று தோன்றுகிறது. வேல்முருகனுடைய எழுத்து இந்த திருப்பங்களை சிந்தனையின் உளைச்சல் இல்லாமல் மிக இயல்பாகவும் எளிதாகவும் கொண்டு சேர்க்கின்றது.

பொதுவாகவே வேல்முருகன் எழுதும் கதைகளில் பலவற்றின் முடிவு ஒரு எளிதான செண்டிமெண்டாலிடியை நோக்கிச் செல்வதைப் பார்க்க முடியும். அது இந்தக் கதையிலும் இருக்கிறது. ஆனால் அதற்கு வேல்முருகனைக் குற்றம் சொல்ல முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர் காணும் மனிதர்கள் இயல்பாகவே மிக எளிதில் நெகிழ்ந்து விடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் கோபமும் குரூரமும்கூட கனிவு நிறைந்த ஒரு கணத்தை நோக்கிக் காத்திருப்பவை.

முத்துப்பிள்ளை, தி. வேல்முருகன்

மீனாட்டம்

தி. வேல்முருகன்

கார்த்தி கடலூர் செல்லும் பஸ்ஸில் இருந்து அகரம் கடைத்தெருவில் இறங்கும்போதே மழை பிடித்துக் கொண்டது.

ஒடிப்போய் நரசிம்ம பெருமாள் கோயில் மேடையில் ஏறி சுவரை ஒட்டி நின்று கொண்டான். கோயில் முகப்புச் சாரம் நாட்டு ஓடு வேய்ந்து இருந்தது.  சாரத்தை நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அவனைப் பார்த்து பத்துவிரலும் கோயிலுக்கு ஓடி வந்தார். அவர் பின்னாடியே ஒரு  ஆடும் அதன் குட்டியும் ஒடிவந்து கோயில் மோடையில் ஏறிக் கொண்டன.

பத்துவிரலு, “ந்தா… ந்தா…” என்றார், ஆட்டையும் குட்டியும் பார்த்து. அது இரண்டும் கார்த்தி பக்கம் ஓடி வந்து அண்டிக் கொண்டு நின்றன.

“மாப்பிள்ளை நீ எங்கடா போயிட்டு வந்த?”

“பள்ளிக்கூடம் மாமா “

“எத்தனையாவது படிக்கர?”

“பதினென்னாவது”

“வயசு பதினாறு இருக்குமா?”

“ஆமாம் மாமா இப்ப தான் நடக்குது”

“இரண்டு கெட்டான் வயசு. ம்ம்…? நல்லா சாப்புடுரா”

கார்த்தி ஆட்டையும் குட்டியையும் பார்த்தான். ஆடு உடம்பை உதறிக் கொண்டது. குட்டி பால் குடிக்க பின்புறமாக முட்டியது.

பத்துவிரலு சிவப்பு நூல் துண்டால் தலையிலிருந்த ஈரத்தைத் தொடைத்துவிட்டு மடியில் இருந்த சுருட்டு வத்திப்புட்டியெடுத்து சுருட்டைப் பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார்.

“கச்சாங்காத்துடா மாப்பிள்ளை, அதான் மழை இப்ப”

உட்டுடூம்!

மழை அடித்துப் பெய்தது, மழை நீர் ஓட்டின் வழியாக வந்து நீர்க்கோடாக விழுந்து ஓடியது.  கார்த்தி காலையில் பள்ளிக்குச் சென்றவன், பசி வேறு. மழை எப்போதும் விடும், நனைந்து கொண்டே ஓடலாமா, என பார்த்தான்.

மழை விட்டபாடில்லை. இரண்டொருவர் நனைந்து கொண்டே சென்றனர். வேகமாக இரண்டு சைக்கிள்கள் சென்றன. ஒரு டவுன் பஸ் நின்று சென்றது. மழை சிறிது குறைய ஆரம்பித்ததும் பஸ்ஸில் இருந்து இறங்கிய இரண்டு பெண்களும் மழைத் தூறலை சட்டை செய்யாமல் நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் சொல்லி வைத்தது போல் மழை நின்று சிறிது வெளிச்சம் கூட வந்தது.

“ஓடிப்போடா, நான் பரங்கிப்பேட்டைக்கு போயிட்டு வந்துடறேன்”

கார்த்தி கோயிலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான். வானம் வெளுத்து வெய்யில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்ததும் கடைத் தெருவில் நின்றவர்கள், “கம்ணாட்டி பய மானம் புரட்டாசி பாஞ்சு தேதியாயிடுச்சு மழை இறங்காம தரைய நனைச்சிட்டு ஓடுதுய்யா. விதவுட்டு ஒரு மாசமாச்சு இந்த வருசமாவது சமயத்தில பேயும்னு பார்த்தா இப்படி காயுத,” என்றனர்.

கார்த்தி மோட்டுத் தெரு வழியாக வீட்டுக்கு போகலாமா, என யோசித்தான். வேண்டாம் மணியங்கால் ஓடையில் தண்ணி கிடக்கும் ரோட்டு வழியாக போவும், என்று நடந்தான்.

பாலம் வரவும் மானம் முழுமையாக வெளுத்து விட்டது. பாலத்தின் கைப்பிடி கட்டையை பிடித்துக் கொண்டு தண்ணியை எட்டிப் பார்த்தான்.

பாலத்தின் அடியிலிருந்து மோட்டுத் தெரு கலியமூர்த்தி கையில் தூண்டிலும் நாக்குப் பூச்சு வைத்திருந்த தகர டப்பியோடும் பாலத்தின் மேல் வருவதற்கு ரோட்டுச் சருவலில் ஏற ஆரம்பித்தார்.

தூண்டிலைப் பார்த்த கார்த்தி மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நின்று விட்டான்.

கலியமூர்த்தி ரோட்டில் மேல் வந்து கார்த்தியை தாண்டிச் சென்று டப்பியை கீழே வைத்துவிட்டு தூண்டில் நைலான் கயிற்றை காற்றில் உதறி தண்ணியில் இரண்டு முறை அடித்ததும் ஏதோ விழுந்தது போல் தண்ணீரில் அலை எழுந்து கரையை தொட்டது. தக்கையாக செருப்பை அறுத்துக் கட்டி இருந்தார்.  அது மஞ்சள் நிறத்தில் நீர் மேல் மிதந்தது.

மீன் ஏதாவது கொத்தும் என கார்த்தி பார்த்தான். ஒன்றும் கொத்தவில்லை. தக்கை காற்றிலடித்துக் கொண்டு அவன் பக்கம் வந்தது.  உலர்ந்து இருந்த வாயிலிருந்து எச்சிலைக் கூட்டித் துப்பினான். எதிர்பாராமல் சரியாக தக்கை மேலே சென்று சொத் என்று விழுந்து விட்டது.

கலியமூர்த்திக்கு கடும் கோவம் வந்து, “நீலாம் என்ன மயிருடா படிக்கற?

உன் பேனா மேல எச்சி துப்புனா எப்படிரா இருக்கும்? அடிவாங்காம ஒடி போயிடு,” என்று சத்தம் போட்டார்.

கார்த்தி ஓடவில்லை. வாட்டமான முகத்துடன் சற்று தள்ளிச் சென்று தண்ணியை எட்டிப் பார்த்தான். பாலத்தின் அடியில் தண்ணிரில் தலையின் நிழலுக்கு நேர் கீழே ஒரு இரண்டு விரல் மொத்த விரால் மீன் நின்றது. தலையசைவின் நிழலில் மீனும் அசைந்தது. அவன் தலையை சீராக முன்னோக்கி நீட்ட நீட்ட மீன் முன்னோக்கி நகர்ந்தது.

அப்படியே தலையை சீராக பின்னோக்கி இழுத்துக்கொண்டே பார்த்தான். மீனும் அதன் வாலைத் தள்ளிக் கொண்டு நிழலின் பின் வந்தது.

வாலில் இருந்த புள்ளியும் கோடும்கூட தெளிவாக தெரிந்து அவனுக்கு நாகத்தை ஞாபகப்படுத்தியதும் உடல் சிலிர்த்துக் கொண்டான். மீன் அப்படியே நிழலசைவுக்கு தகுந்தாற்போல் வாலை ஆட்டி முன்னும் பின்னும் நகர்ந்தது.

கார்த்திக்கு அந்த மீனாட்டம் பிடித்து இருந்தது.

கலியமூர்த்தி பார்த்து விட்டால் வம்பாகிவிடும், மீனைப் பிடித்து விடுவான் என்று அப்படியே கிளம்பி வந்து விட்டான்.

மறுநாள் பள்ளி விட்டு வரும்போது பாலம் வந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பாலத்தின் அடியில் பார்த்தான். விரால் மீன் நின்றது. அதனுடன் நேற்று போலவே விளையாடினான். விரால் மீன் குஞ்சு ஏதோ சொல்ல வருவது போல் மேலே வந்து சிறிது வாயைக்கூட திறந்தது. அப்படியே இரண்டு காற்றுக் குமிழும் வந்ததும் தண்ணீரில் அலை வட்டம் உருவாகி கரையைத் தொட்டது.

மீன் தலை குப்புற கீழே வாலை ஆட்டிக் கொண்டு சென்று பிறகு மெல்ல மெல்ல நிழலை நோக்கி  தலையைக் கொண்டு வந்தது. ரொம்ப நேரம் ஆகி பசியெல்லாம் மறந்து, பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனுக்கு மோட்டுத்தெரு கலியமூர்த்தி ஞாபகம் வந்து விட்டது. எங்கிருந்தாவது பார்த்து விட்டால் பிடித்து விடுவானே, என்று எழுந்தான்.

கலியமூர்த்தியை எந்த விளையாட்டிலும் ஜெயிக்க முடியாது. வச்சாவாகட்டும், பேந்தாவகட்டும், அடிஜானாகட்டும் எந்த கோலிக்குண்டுவாக இருந்தாலும் அவனுக்கு மட்டும் தனியாக கைவரும். நைலான் நூல் தூண்டி முள் தக்கையோடு உள்ளங்கையில் கரகர என்று வளையமாக சுத்தி வைத்து பாக்கெட்டில் மடித்து வைத்து இருப்பான். மீனைப் பார்த்து விட்டால் பிடிக்காமல் விடமாட்டான். விளையாட்டு என்றால் எல்லாரிடமும் கடைசி  வரை ஐெயித்துக் கொண்டே போவான். கபடி ஓடிப் பிடித்தல் எதிலும் ஜெயிக்க முடியாது கலியமூர்த்தியை.

“சைக்கிள்காரர. நில்லு நில்லு…  மீனு வேனுமா?” என்ற கலியமூர்த்தியின் குரலைக் கேட்டு விட்டு கார்த்தி பயந்து திரும்பி நின்று கொண்டான்.

ரோட்டின் தென்புறம் தண்ணீரில் தாழ்ந்து இருந்த கருவை மரத்தினடியிலிருந்து எழுந்து தூண்டிலை மண்ணில் சொருகி விட்டு கயிறில் வரிசையாக கோர்த்த சிலேபி மீன்களை கொண்டு வந்தான்.

“மீன்காரர? ஒரு கிலோ வரும்!  எவ்வளவு தருவ?”

“இரண்டு ரூபாய் தரம்ப்பா”

“யோவ் அஞ்சு ரூபாய்  இருந்தா பார, இல்லைன்னா போய்கிட்டே இரு”

“இல்லப்பா அவ்வளவு விக்காது ஒரு ரூபாய் சேர்த்து மூனா வாங்கிக்க”

“சரி, பீடி இருக்கா?”

“இந்தா? இரண்டு இருக்கு, நீ ஒன்னு எடுத்துக்க”

கலியமூர்த்தி மூணு ருபாயும் பீடியும் வாங்கிக் கொண்டு திரும்ப மீன் பிடிக்கச் சென்றதை பார்த்து கொண்டே வீட்டுக்கு நடந்தான்.

தொடர்ந்து அடுத்த அடுத்த தினங்களில் பள்ளி விட்டு வரும்போது கார்த்திக்கும் மீனுக்குமான விளையாட்டு தொடர்ந்தது. மீனுக்கு என்ன தின்ன கொடுக்கலாம் தீனி கொடுத்தால் சீக்கிரம் வளர்ந்து விடுமே? அப்புறம் யாராவது பிடித்து விடுவார்களே?

இப்படி நாள் முழுவதும் ஒவ்வோறு சமயம் மீனைப்பற்றிய கவலை வந்து அலைக்கழித்தது. ஒவ்வொரு முறையும் மீனைப் பார்த்தபிறகுதான் ஒரு ஆசுவாசம், ஒரு திருப்தி வரும் கார்த்திக்கு.

இப்படியே நாட்கள் சென்று கொண்டு இருந்தபோது மழைக்காலம் தொடங்கி விட்டது. பெருமழை பிடித்துக் கொண்டது. இரண்டு நாளில் புயலடிக்கும் என்று பேப்பரிலும் வானொலியிலும் டிவியிலும் சொல்கிறார்கள். மழை தொடங்கிய பிறகு தண்ணீர் பச்சை ஓணான் போல் நிறம் மாறி செங்காமுட்டி நிறமாக மாறிச் சென்றதும் கார்த்தியின் கண்ணுக்கு மீன் தட்டுப்படவில்லை.

குடையோடு கடைக்கு செல்லும்போது பாலத்தின் நின்று பார்த்தான். வெள்ள நீர் சுழித்துக் கொண்டு, அம்மா அரிசி களையும்போது வரும் நிறம் போல, சின்ன மதுவு வழியாக வெளியேறி நுரைத்துக் கொண்டு ஒடியது. கண்ணுக்கெட்டிய தூரம் மழை நீர் வெள்ளக்காடாக தெரிந்தது. வெள்ளாறு எகுத்து விட்டது, தண்ணீர் உள் வாங்கவில்லை.

இரவு எப்படியும் வெள்ளம் வரும் கூரை வீடுகள் அதோகதிதான்  என்று கடைத்தெருவில் பேசிக் கொண்டனர். சிலர் தண்ணீர் வடிவதைத் தடுக்கும் பழைய ரோட்டை வெட்டி விட்டால் வெள்ள நீர் வடிந்துவிடும், இல்லை என்றால் கூரை வீட்டு மண் சுவர்கள் எல்லாம் இடிந்து கூரை சாய்ந்து விடும் என்று சொன்னார்கள்

ரோட்டை உடைத்தால் வம்பாகி விடும் என்றும் பயன்படுத்தாத ரோடை உடைக்க என்ன பயம் அட யாராவது உடைச்சு விடுங்க என்று பலவிதமாக பேசி கொண்டு இருந்தனர். சிலர் மண்வெட்டி பாரையோடு ரோட்டு பக்கம் வந்தனர்

சேராக்குத்தாரும், ஆண்டிக்குழியார் மகனும் முதலில் பழைய ரோட்டின் தாரை கொத்திப் பெயர்க்க ஆரம்பித்தார்கள். பழமையான ரோடு, மிகுந்த கஷ்டப்பட்டார்கள். அதற்குள் மேலு‌ம் சில இளைஞர்கள் சேர்ந்து வாய்க்காலாக தோண்ட ஆரம்பித்தனர். பச்சை கெட்ட வார்த்தையால் அழகர் மானத்தைத் திட்டினார்- ஒன்னு பேஞ்சு கெடுக்குது இல்லைன்னா காஞ்சு கெடுக்குது என்று

வாய்க்காலின் மையம் கார்த்தி  விரால் மீன்  பார்க்கும் இடத்துக்கு நேர் வந்து விட்டது. பாலத்தின் மையமும் அதுதான். தண்ணீர் வடிய ஆரம்பிக்கும்போது மீனை வெள்ளாத்துக்குக் கொண்டு செல்லும், பிறகு அப்படியே கடலுக்குப் போய்விடும். இனி அவ்வளவுதான், விரால் மீனைப் பார்க்க முடியாது.

இந்த சேராக்குத்தாருக்கு மட்டும் எது கேட்டாலும் செய்யக்கூடாது என்று நினைத்து கொண்டான்.

அன்று இரவு முழுவதும் கடும் மழை. மறுநாளும் மழை. சாயந்தரம் சீராக ஆரம்பித்த காற்று நேரம் செல்லச் செல்ல அதிகமாகி விட்டது. ஆடு மாடுகள் கத்தும் சத்தம் மனிதர்களின் சத்தம் அதனுடே காற்றின் உய்ய்ய்ய்ய்ய், உய்ய்ய்ய்ய்ய் சத்தம் வீட்டை ஒட்டி மரங்கள் முறிந்து விழும் சத்தம் என ஒரே பரிதவிப்பாக இருந்தது.

யாருக்கும் யாரும் உதவமுடியாத இருள். அப்போது இ டியும் மின்னலும் சேர்ந்து கொண்டதால் வெளியே பார்க்கக்கூட முடியவில்லை. கார்த்தியின் ஓட்டு வீட்டின் ஒடுகள் சில இடங்களில் பெயர்ந்தது காற்றில், மழை நீர் வீட்டினுள் விழ ஆரம்பித்ததும்  இடி படபட படீர் என்றும் தீடிர் தீடிர் என்று இடிச் சத்தம் கேட்கும்போது சுவர்கள் அதிர்ந்தன.

“கூரை வீடுகளின் கதி ஆடுமாடுகள் கதி என்னவாகும் கடவுளே, எப்போது காத்து விடும்? மழை பெய்தால் கூட பரவாயில்லையே, இந்த பேய்க்காத்து நின்று விட வேண்டும்,” என அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டனர்.

ஊய் ஊய் என்ற அந்த பேய்காத்து விட்டு விட வேண்டும் பத்துவிரலு வீட்டு பனைமரத்தில் இருக்கும் காக்கா கூடு தப்பிக்க வேண்டும் என்று கார்த்தியும் வேண்டி கொண்டான்.

மறுநாள் பார்த் போது அவன் நினைத்ததைவிட புயல்காத்து மோசம் செய்து இருந்தது. தெருவிலிருந்த கூரை வீடுகள் எல்லாம் பாதிக்கு மேல் விழுந்து இருந்தன. வீட்டை ஒட்டி இருந்த முருங்கை மரங்கள், உறுதியான பூவரசு, வேப்ப மரங்கள் எல்லாம் சாய்ந்து கிடந்தன. வீட்டின் மேல் கிடந்ததை எல்லாம் வெட்ட ஆரம்பித்து இருந்தனர்.

வீட்டுக்கு பின்புறம் இருந்த பத்துவிரலு வீட்டு பனைமரத்தின் காய்ந்த மட்டைகள் கீழே விழுந்து வழியை அடைத்து கொண்டு கிடந்தது. அதில் இருந்த காக்கா கூட்டில் இருந்த குச்சிகள் சரிந்து தொங்கின.

பச்சைமுட்டையின் ஓடு பனையை ஒட்டி கிடந்தது. காகங்களை காணவில்லை. கார்த்தி சோர்ந்து  போய் திரும்பினான்.

மழை ஒரே சீராக பெய்து கொண்டு இருந்தது. கார்த்தி குடையோடு பாலத்திற்கு சென்று பார்த்தான். சேராகுத்தார் வெட்டிய வழி ஏற்படுத்திய பழைய தார் ரோடே இல்லை. எல்லாவற்றையும் மழை வெள்ளம் கொண்டு சென்று கொண்டு இருந்தது. சேராகுத்தார் வெட்டவில்லை என்றால் தண்ணீர் வீடுகளில் புகுந்து இருக்கும் என பேசிக்கொண்டனர்.

மழை வெள்ளம் பார்க்க கூட்டம் பாலத்தில் நின்று இருந்தது. எட்டிப் பார்க்கச் சென்றவனை, ரெண்டும் கெட்டான் பயல போடா எட்ட, என்று சத்தம் போட்டார்கள். ஆலப்பாக்கம், புதுச் சத்திரம் எல்லாம் தண்ணீரில் மிதப்பதாகவும் பெருமாள் ஏரி உடைந்து போக்குவரத்து நின்று விட்டதாகவும் அந்த தண்ணீரும் இந்த வழியாகதான் வடியும் என்று பேசிக்கொண்டனர். பாலத்தின் அடியில் குனிந்து பார்க்க வந்த கார்த்தி திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ரேஷன் கடையிலிருந்து அரிசி விநியோகம் வீட்டுக்கு இரண்டு கிலோ என்று இளைஞர்கள் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். தலையாரி மணியாரோடு விழுந்த வீடுகளை பார்க்கனும் என்றும் பேசி கொண்டனர்.

அப்போது கச்சா வலையை எடுத்துக் கொண்டு பத்துவிரலு அங்காளம்மன் கோயில் பக்கம் சென்றார். கார்த்தி அவரைப் பின்தொடர்ந்து கோயிலுக்கு சென்றான்.

இந்த மழை ஆரம்பித்ததிலிருந்து  கோயிலில்தான் அவனுக்கு பொழுது போய்க்கொண்டு இருந்தது. கொத்து வேலை,ஆசாரி வேலை, வயல் வேலைகளுக்குச் செல்ல முடியாத பெரியவர்கள் எல்லாம் கோயிலில் அமர்ந்து காசு வைத்து தாயம் விளையாடிக் கொண்டு இருப்பர்.

ஒரே சத்தமாக இருக்கும், சிறுவர்கள் எல்லாம் கோலி விளையாடுவார்கள். கார்த்தி நேரத்துக்கு தகுந்தவாறு இரண்டு விளையாட்டிலும் இருப்பான்.

பத்துவிரலு வாகாக கோயில் தரையில் உட்கார்ந்து வலையில் அதிகமாக கிழிந்து இருந்த துவாரங்களைத் தைக்கும் நோக்கோடு செப்பு ஊசியில் பருத்தி நூலை கோர்க்க ஆரம்பித்தார்.

“மாமா இந்த வலையால விராலு மீனு புடிக்கலாமா?”

“அட ஒங்க?  இ   ல்ல மாப்பிள்ள,இதுல புடிக்க முடியாதுடா, இது சும்மா வாய்க்கால் ஓரம் ஏந்துன்னா கெண்டகுஞ்சுவோ மாட்டும் மாப்பிள்ளை… கொழம்புக்கு ஆவும்ல”

“ம்ம்? மாமா அப்ப விராலு எப்படி புடிக்கறது?”

“அது சின்ன மீனு போட்டு பெரிய மீனு புடிக்கறதுடா மாப்பிள்ளை”

“சொல்லேன்?”

அது வந்து நல்லா வெய்யில் அடிக்கும்போது விராலு நிக்குதான்னு பார்க்கனும். தண்ணீர்ல விராலு இருந்தா அது தண்ணிய அடிக்கறது தெரியும் எங்க நிக்குதுன்னு பார்த்து தூண்டில சின்ன பொடி உயிர் மீன முள்ளுல மாட்டி தண்ணியில போட்டா விராலு மாட்டும். நீ ஏண்டா இதெல்லாம் கேக்கர?”

“சரி மாமா உனக்கு பத்து விரலுன்னு ஏன் பேர் வந்துச்சி? ”

“அட ஒக்காலவோழி,” திட்ட ஆரம்பித்தார்

“ஏய் மாப்பிள்ளை இங்கே வாடா நான் சொல்றேன்,” என்று பக்கிரி கூப்பிட்டார்.

பக்கிரி அவனிடம் தாயம் விளையாடச் சொல்லி எப்போதும் அவன் மேல் பந்தயம் வைப்பார்.

“யோவ் மாப்பிள்ளை ஐெயிக்கரான்யா… யாராவது பந்தயம் கட்டுரீங்களா? ஒரு ரூபாய், ஐம்பது காசு, ம்ம்…” என்பார்

“மாப்பிள்ளை போடரா தாயத்த என்பார்”

அவன் கையை குளுக்கி ஒரு இழுப்பு இழுத்து விடுவான். ஆறு தீத்திய புளியங்கொட்டையில் ஒன்று மட்டும் மல்லாந்து வெள்ளையாகவும் மற்ற ஐந்து புளியங்கொட்டகைகள் கவுந்து கருப்பாக கிடக்கும்.

“பார்த்தியா, மாப்பிள்ளை தாயத்த போட்டுட்டான் பார்”

காசு வைத்தவர்கள் அவனைத் திட்டுவார்கள்.

பக்கிரி சேதி தெரிந்த கார்த்தி நிக்காமல் ஓடினான். அவருக்கு பத்து விரலு என்று பெயர் எப்படி வந்தது என்று அவனுக்குத் தெரியும்.

பத்துவிரலு பேரு கலியபெருமாள், மனைவி பேரு லட்சுமி. “இந்த உலகத்திலேயே அந்த நாராயணனுக்குப் பிறகு எனக்கு மட்டும் தான் பெயர் பொருத்தம் அமைஞ்ச மனைவி,” நிறைபோதையில், “லெட்சுமி, லெட்சுமி,” என்பார்.

“ஊத்திட்டி வந்துட்டியா, சும்மா கிட”, என்பார்கள் அவர் மனைவி. பிறகு சத்தம் ஒன்றும் வராது.

பத்துவிரலு சும்மா இருக்க மாட்டார். கூலி வேலைக்குதான் போவார். வந்தும் சும்மா இல்லாமல் விறகு வெட்டவோ, மீன் பிடிக்க வலையை தோளில் மாட்டிக்கொண்டோ, விறகு பொளக்கவோ யாராவது வேலை என்றால் முன்பே வந்து நிப்பார். அப்ப காரியமாக ஏதேனும் சொல்லிக் கொடுத்தும் விடுவார். அது பத்திக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு நிற்பதால் அவருக்கு பத்துவிரலும் வேலை செய்யும் பத்துவிரலு என்று அதுவே பரிகாச பெயராகி விட்டது.

வெளியில் வேலை இல்லாதபோது, அவர் மனைவியே, “தம்பி பத்துவிரல அந்தப் பக்கம் பாத்தியா?” என்றுதான் கேட்பார்கள். வரிசையாக ஞாபகம் வந்து சிரித்துக்கொண்டான்.

இனி மழை விட்டு வெள்ளம் வடிந்துதான் விராலு மீன பார்க்க முடியும். அதுவும் வெள்ளத்தில் பெரிய பெரிய மரங்களே அடித்துச் செல்லும்போது விரால் மீன் மட்டும் எப்படி இருக்கும், அதுவும் போயிவிடும். சிரிப்பெல்லாம் கவலையாக இருந்தது அவனுக்கு

தொடர்ந்து வந்த நாட்களில் மழை விட்டு வெள்ள நீர் வடிய ஆரம்பித்து விட்டது. பாலத்தின் கட்டையில் மிகப் பெரிய பள்ளம் ஒன்றும் உண்டாகி இருந்தது.

கார்த்தி பள்ளி விட்டு வரும்போது மட்டும் அல்லாமல் பாலத்தின் மேல் செல்லும்போது எல்லாம் அவனுக்கு விரால் மீன் சிந்தனை வந்து எட்டிப் பார்க்காமல் செல்லவே மாட்டான்.

இப்படி நாட்கள் மாதங்களாக கடந்தபோது மணியங்கால் ஓடை தண்ணீர் வற்றி அங்கு அங்கே திட்டு திட்டாக குளமாக நிற்க ஆரம்பித்து விட்டது.

கலியமூர்த்திகூட காணவில்லை. வேலைக்கு வெளியூர் சென்று இருக்கவேண்டும். அப்படி ஒரு நாள் பார்க்கும்போது சிவன் படவர் தெரு பெரியவர் தன் விசிறு வலையை கையை ஒரு சுழற்று சுற்றி வீசினார். வலை வட்டமாக விழுந்து அலையெழுப்பியது. மீன்கள் வலையில் மாட்டி படபடவென தண்ணீரை அடித்தன.

அருகிலிருந்த நீர்த் திட்டையிலிருந்த இரண்டு கொக்குகளும் எம்பி பறந்து வட்டமிட்டு இறக்கையை அடிக்காமல் தண்ணீரில் இறங்கி நின்றன. பெரியவர் வலையை சுருக்கி இழுத்து கரைக்கு கொண்டு வந்து வலையை உதறி மீன்களை பொறுக்கினார். சின்னச் சின்ன கென்டை மீன்கள், சிலேபி மீன்கள் இருந்தது. அவர் பொறுக்காத பொடி மீன்களை  காக்காய்கள் சத்தமிட்டு கொத்திக் கொண்டு சென்றன.

மறுநாள் கார்த்தி பள்ளி விட்டு வரும்போது பாலத்தின் மேல் வந்து நின்று கீழே குனிந்து தண்ணிரை நோக்கிக் கொண்டு இருந்தான், நீர் சிறிது பாசி பிடித்து கலங்கலாக ஒரு பாசி நிறமாக தெரிந்தது. மீன் ஒன்றும் காணாமல் தலையை திருப்பும்போது ஒரு அசைவை கண்டான்.

திரும்பவும் நிதானமாக தண்ணீரைப் பார்த்தான். அப்போது பாலத்தின் அடிக்கட்டையில் இருந்த பத்திருப்பில் விரால் படுத்து இருந்தது தெரிந்தது.

கார்த்திக்கு என்னவோ போல் இருந்தது. மகிழ்ச்சியாகவும் அந்த மீனாக இருக்குமா இல்லை இது வேறா ஏன் மீனாட்டத்திற்க்கு வரவில்லை என்று சந்தேகமாகவும்.

திரும்பத் திரும்ப பழைய மாதிரி தலையை நீட்டிப் பார்ப்பதும் உள்ளிழுப்பதுமாக செய்தான். நிழல்கூட முன்பு போல் விழுவது மாதிரி தான் தெரிந்தது அவனுக்கு. ஆனால் விரால் மீன் முன்பு போல் மேலே வரவில்லை. மீன்கூட சற்று பெரியதாக தெரிந்தது. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. நாளைக்கு பார்க்கலாம் என வந்து விட்டான்.

அப்போது ஆண்டுத் தேர்வு வேறு நடந்து கொண்டு இருந்தது. ஆனால் தினமும் வரும்போது பார்க்கத் தவறவில்லை. மீன் சட்டென்று பார்த்தால் தெரியாது. உத்துப் பார்த்தால்தான் தெரியும். சிறிதாக எச்சி துப்புவது, சின்ன குப்பைகளை போடுவது என்று அவனது முயற்சி இருக்கும். மீனிடமிருந்து எந்த அசைவும் இருக்காது. ஏமாற்றமாக இருந்தாலும் தினமும் பார்த்து உறுதி செய்து கொண்டான்.

அன்று கடைசி தேர்வு எழுதிவிட்டு வரும்போது முயற்சித்தான். மீன் ஒன்றும் சட்டை செய்யவில்லை.

அம்மா வேலை சொல்லும்போது வரும் எரிச்சல் அப்போது அவனுக்கு வந்து கல்லால் அடிக்கலாமா என சுற்றுமுற்றும் பார்த்தான். கல் ஒன்றும் இல்லை.

தூரத்தில் பெரியவர் வலையை வீசி சுருட்டி வாரிக்கொண்டு இருந்தார். சின்ன மதுவில் மோட்டு தெரு முருகன் மீன் பிடித்து கொண்டு இருந்தான். கார்த்தியை விட முருகன் நாலு வயது சின்னவன்.

சரசர என பாலத்தின் சரிவில் இறங்கினான். நரவலாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கி காலைப் பார்த்து வைத்துக் கொண்டு மீன் பிடிப்பதை பார்க்க கார்த்தி முருகனிடம் வந்தான். மீன் ஒன்றும் கொத்தவில்லை. கார்த்திக்கு அப்போது திடீரென அந்த யோசனை வந்தது.

“முருகா உனக்கு விரால் மீனு வேனுமா? “

“எங்கண்ண இருக்கு?”

“வா புடிக்கலாம். முருகா நீ போயி நாக்குபூச்சிய கொட்டிட்டு தா பாரு காலவாயிக்கு போற வழியில பெரியவர் வலையில விழற பொடி சிலேபி குஞ்ச தண்ணிபுடிச்சு டப்பால போட்டு எடுத்துட்டு ஓடியா சீக்கிரம்“

“தூண்டிலை நீ எடுத்துட்டு வர்ரியாண்ண?”

“இல்லடா முருகா, நீ எடுத்துட்டு வா. வீட்டுல யாராவது பார்த்துட்டா பிரச்சினையாயிடும்”

“சரிண்ண”

முருகன் தகர டப்பியில் இருந்த நாக்குப்பூச்சியை கொட்டிவிட்டு சிறிது தண்ணீரை மொண்டுக் கொண்டு பெரியவரிடம் சென்று அவர் வலையை கரைக்கு கொண்டு வரும்வரை காத்திருந்து மீனைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பாலத்தின் மேல் வந்தான்.

கார்த்தி குனிந்து விரால் மீன் படுத்திருப்பதைக் காட்டி தூண்டிலில் மீன் குஞ்சை மாட்டி கொடுக்கச் சொன்னான்.

முருகன் தூண்டில் முள்ளில் சின்ன சிலேபி குஞ்சை மாட்டி அதன் தலையில் எச்சிலைத் துப்பி, “போடுண,” என்றான்.

கார்த்தி தூண்டிலைத் தண்ணீரில் வீசியதும் மீன் குஞ்சு தூண்டிலில் தண்ணீர் மேலே நீந்தி கொண்டு விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு வராமல் இழுத்துக் கொண்டு சென்றது. தூண்டிலில் இருந்த தக்கை காற்று வாட்டத்திற்கு மீன் குஞ்சை இழுத்து சென்றது.

கார்த்தி மீன் குஞ்சை விரால் மீன் படுத்து இருக்கும் இடத்திற்கு நேர் சிரமப்பட்டு கொண்டு வரவும் படுத்து இருந்த விரால் மீன் மேலே வாலை ஆட்டி கொண்டு வரும்போதே கார்த்திக்கு புரிந்து விட்டது. அந்த மீன்தான் என்று!

விரால் மீன் குஞ்சை லபக்கென்று கவ்விக்கொண்டு உள்ளே இழுத்து சென்றது.

கார்த்தி என்ன செய்வது என திகைத்து நிற்க முருகன், “இங்கே குடுண்ண, உனக்கு புடிக்க தெரியல,” என்று தூண்டிலை வாங்கி விராலை ஒரே இழுப்பில் மேலே தூக்கி, “முள்ள முழுங்கிடுச்சு! வூட்டுல போயி கழட்டிக்கறேன்,” என்று ஓட ஆரம்பித்தான்.

விரால் மீன் தூண்டியின் முள்ளில் மாட்டி துடித்து கொண்டு இருந்தது.