வேல்முருகன் தி

விளையாட்டு

 

தி. வேல்முருகன்

ஏய்? அரிசிக்காரங்க பத்மா அம்மாகிட்ட கேட்டு அந்த முத்திரைப் படிய வாங்கி வா சீக்கிரம்.

ஓடி வாங்கி வந்து கொடுத்து விட்டுச் சென்றவனைத்  திரும்பவும், ஏய்…, மணி என்று அம்மா கூப்பிட்டச் சத்தம், விளையாடச் செல்ல அவனுக்கு இருந்த மனநிலையை மாற்றிய எரிச்சலில், என்ன?

என்ன அவ்வளவு கடுப்பு தொரைக்கு?

படி வாங்கி வரும்போது பார்த்த பால்ராஜூம், சம்பத்தும் பேட் பந்தோடு சென்றவர்களிடம், ஏய், நானும் வரேன், என்னையும் சேர்த்து கொள்ளுங்கடா, என்று கேட்டதற்கு, சரி,  நிக்கிறோம் சீக்கிரம் வாடா, என்று சொல்லி இருந்தனர். நேரமானால் கடைசியாகத்தானே பேட் செய்ய முடியும்?

இந்தா, படிய கொண்டு கொடுத்துட்டு  சித்தப்பாவ கூப்பிட்டு போயி நெல்ல அரைச்சிட்டு வா

படியை எடுத்துக் கொண்டு வரும்போதே பால்ராஜூம் சம்பத்தும், நாங்க போறோம், என்றதும் இவன் படியைக் கையில் வைத்துக்கொண்டே பூவரச மரத்து சட்டத்தில் இவனாகவே சுயமாக தயாரித்த பேட்டைத் தேடியபோது அது கட்டம் போட்ட சிமெண்ட் அச்சு ஜன்னலோரம் சாத்தியிருந்தது.

படியை ஐன்னல் திண்டில் வைத்துவிட்டு பேட்டைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னாடியே ஓடினான்.

அகரம் கொள்ளுமேடு தெருவின் பின்புறம் உள்ள புஞ்சையை கோடையில் உழுதிருந்தனர். அதில் பந்து போடும்  இடம் மட்டும் களிமண் கொண்டுவந்து பரப்பி  கைப்பலகையால் நிரவி தண்ணீர் ஊற்றி கட்டை கொண்டு தட்டி அந்த உலகத்தரம் வாய்ந்த பிட்ச் தயாரித்திருந்தனர். அதில் விளையாடுபவர்கள் எல்லாம் பான்டிங், கங்குலி, சேவாக், சச்சின் பந்து வீச்சில் அக்தர், ஸ்ரீநாத், கும்ளேவாக இருந்தனர். கற்பனையில் எல்லா ஆட்டங்களின் அம்பயர் தவறும் விவாதிக்கப்பட்டு அவர்கள் ஆட்டத்தில் அது போல நேராமால் பார்த்துக் கொண்டனர்.

மணி , சம்பத்,பால்ராஜ், மற்றும் புதிதாக வந்த கண்ணனுடன் நால்வர் அணி தயாரானது. லெக் சைடு மட்டும்தான் அடிக்க வேண்டும். ஆப்சைடில் அடித்தால் அவுட், வயலின் முதல் வரப்பில் தடுத்து பந்து நின்று விட்டால் டூ. அதைத் தாண்டி போலிசு வயலையும் தாண்டி மாலாக்கா வீட்டு மதிலில் பட்டால் போர். மதிலுக்கு மேல் சென்றால் சிக்சர். ஆட்டத்தின் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டன. இனி ஆரம்பிக்க வேண்டியதுதான்.

பந்து வைத்திருந்த சம்பத், நான்தான் பர்ஸ்ட் பேட்டிங், பேட் வச்சிருந்த பால்ராஜ், நான் செகண்ட் பேட்டிங், என்றான் மீதமிருந்த மணியும் கண்ணனும் சா ப்பூ த்ரி. முடிவு சா என்று சொல்லி கண்ணன் மூன்றாவது பேட்டிங்.

கடைசி பேட்டிங் மணிக்கு ஏமாற்றமாக இருந்தது நெல்லு வேறு அரைக்கப் போக வேண்டும் என்ற கவலை.

சரித்திரப்புகழ் வாய்ந்த ஆட்டத்தின் முதல் பந்தை பால்ராஜ் புயல்வேகத்தில் இடது கையால் வீச, சீரான லோ புல்டாசாக விழுந்தது. சம்பத் பந்தைப் பார்க்காமல் ஒரு காட்டு சுத்து சுத்தியதில் மிடில் ஸ்டம்பை தகர்த்தது.  சம்பத், நோ பால், என்று சொல்லிப் பார்த்தான். பால்ராஜ், லகலகலக, என்று குரல் கொடுத்தான்.  யாரும் ஒத்துக் கொள்ள வில்லை.

ஒரே ஒரு பந்து போடுங்கடா பிளிஸ், என்றதும் கண்ணன் பந்தை புல்டாஸ் போட்டுக் கொடுத்தான். அதையும் அடிக்க முடியாமல் சோகமாகி பேட்டை பால்ராஜிடம்   கொடுத்துவிட்டு, நான்தான் வீசுவேன், என்று அவனிடமிருந்து பந்தை வாங்கி கும்ப்ளே போல் ஓடி வந்து சம்பத் வீசினான்.

முதல் இரண்டு பந்து ஆக்ரோஷமாக இருந்தது. மூணாவது பந்து சார்ட் பிட்ச். கும்ளே சார்ட் பிட்ச் வீசினால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அது. மிக லாகவமாக பால்ராஜ் அடிக்கவும் பந்து ஓடி வரப்பில் தடுத்து நிற்கும் என்ற மணியின் நப்பாசையில் மண் விழுந்து யரோ கை கொண்டு எடுத்துப் போடுவது போல் கல்லில் பட்டு வரப்பை எம்பி உருண்டோடி சுவற்றில் அடித்து நின்றது. முதல் போர். நாளாவது பந்தும் போலிசு வயலைத் தாண்டி மதிலில் பட்டது. அந்த ஓவரில் மேலும் இரண்டு ரன்களும் அடுத்த ஓவரில் ஆறு ரன்னும் எடுத்தான்.

அடுத்து கண்ணன். அவன் ஓடி மிதமாக வலது கையால் வீசிய எல்லா பந்தையும் ஒன்றும் இரண்டுமாக எட்டு ரன்கள் எடுத்து விட்டான். அடுத்த ஓவர் சம்பத். முதல் பால் கையை ஒட்டிய புல்டாஸ். ஆட முடியாமல் அவுட்டாகிவிட்டான்.

மணிக்கு வெற்றி பெற பதினாறு ரன்கள் எடுக்க வேண்டும்.

கண்ணன் வீச வந்ததும் அவனுக்கு கொஞ்சம் வாய்ப்பு தெரிவது போல் இருந்தது. எப்படியாவது அடித்து விட வேண்டும். அதற்கு ஏற்றார்போல் கண்ணன் ஓடி வந்து போட்ட பந்து புல்டாஸ். மணிக்கு வாகாக இடுப்பைத் தாக்கும் நோக்கோடு இடதுபுறம் வந்ததை முழுவேகத்தோடு அடிக்க முனைந்தபோது, பந்து அந்த பூவரசம் சட்ட பேட்டின் விளிம்பில் பட்டு மேலே பறந்தது.

பால்ராஜ் கையில் விழுமோ என்று அவன் தலையைக் குறுக்கி, பேட்டை காற்றில் வீசிய போது போலிசு வயலில் இருந்த மதிலையும் தாண்டி மாலாக்கா வீட்டு கூரைச் சீமை ஓட்டில் அடித்து எங்கோ விழுந்தது.

நால்வரும் பந்தைத் தேடி ஓடினர். மதிலோரம் மணி நின்று கொண்டு, எங்களுக்கு சண்டைக்காரங்கடா  நீங்க பாருங்கடா, என்றதும் சம்பத்தும் பால்ராஜூம் மதில் ஏறி உள்ளே தேடச்சென்றனர்.

கண்ணன் கனத்த உருவம் அவனால் மதில் ஏற முடியாது.

என்னடா மணி! இப்படி அடிச்சிட்ட பந்து கிடைக்கலன்னா சம்பத் உடமாட்டான்டா

ஏய் கிடைக்கும் கம்முனு இருரா நீ வேற பயமுறுத்தாதடா

சிறிது நேரத்தில் பால்ராஜ் வந்து விட்டான். ஏய் எங்க தேடியும் கிடைக்கல. சம்பத் பந்துல்ல அவன் தேடட்டும் நான் போறேன் பசிக்குது, என்று பால்ராஜ் கிளம்பியதும் அவன் கூடவே கண்ணனும் கிளம்பிவிட்டான்.

ஏய் இருங்கடா  சம்பத் வந்ததும் சேர்ந்து போலாண்டா, சொல்லும்போது சம்பத் வெறுங்கையோடு மதிலில் இருந்து குதித்ததும் எல்லோர் பார்வையும் அவன் மேல். கண்கள் கலங்க, பந்து கிடைக்கலடா.

எனக்கு தெரியாது மணி அடிச்ச நீதான் வாங்கி தரனும் இருபது ரூபாய் புது பந்து.

மணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. சம்பத், சாப்பிட்டுட்டு வந்து, தேடும்டா கிடைச்சிடும்டா.

இல்லை இல்லை அது கிடைக்காது நான் ஒங்கப்பாகிட்ட வந்து சொல்லுவேன், எனக்கு பந்து வேணும்.

சம்பத், நெல்லு அறைக்க போறன்டா கொஞ்சம் காசு வரும் அத தரன்டா சொல்லதடா

உனக்கு சாயந்திரம் வரைக்கும்தான்  டைம் மணி. இல்லைன்னா உங்கப்பாகிட்ட கண்டிப்பா சொல்லுவேன்.

அப்பா முதலில் கன்னத்தில்தான் அடிப்பாங்க. அடி வாங்கியவுடன் தலை சுத்துவது போல் இருக்கும், மிளகாய் கடித்ததுபோல் காந்தும். கொஞ்சம் குனிந்து போக்கு காட்டும் போது முதுகில் ஒரு வெடி சத்தம் கேட்கும். இரண்டு கண்ணில் இருந்தும் நீர் துளித்துளியாகச் சொட்டும். பேச்சு வராது அடுத்த அடி வாங்க உடம்பு தாங்காது, இனி செய்ய மாட்டேன்பா விட்டுடுப்பா, என்னும்போதே சத்தம் கேட்டு எதிர் வீட்டு அத்தை ஓடி வருவார். புள்ளைய இப்படியா அடிப்பாங்க, என்று அழைத்துச் சென்று அடிபட்ட இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவும்போது சிறிது வீ’க்கத்தோடு விரல் தடம் தெரியும்.

அடியை நினைக்கவே பதறுகிறது மணிக்கு. நெல்லு வேற அறைக்கச் சொன்னதும் கவலையோடு சித்தப்பாவை தேடி வந்தான். சித்தப்பா நெல்லை அள்ளிக் கட்டிக் கொண்டு இருந்தார்.

தொரைக்கு இப்பதான் ஊட்டு ஞாபகம் வந்துச்சோ, போயி சீக்கிரம் சாப்பிட்டுட்டு ஓடு சித்தப்பாகூட போயிட்டு வா

ம்ம்

அம்மா சித்தப்பாவிடம் ஐம்பது ரூபாய் கொடுத்தார். கள நெல் தம்பி, கொஞ்சம் களத்தில கொட்டி சூடு காட்டி இழைய  புடுச்சுகிட்டு வாங்க ஆவாட்டியோட கட்டி வச்சது சூடு காட்டுலன்னா இடிஞ்சுடும்.

சித்தப்பா நெல்லைத் தூக்கிக் கொண்டார்.  மணி தவிடும் நொய்யும் பிடிக்க பை சாக்கும் எடுத்துக்கொண்டு கூட ஓடினான். தெரு முடிஞ்சு ஆண்டியாங்கொல்லை தொடங்கியதும், சித்தப்பா எனக்கு ஒரு இருபது ரூபாய் தர்ரியா அப்புறமா காசு சேத்து தந்துடுறேன் சித்தப்பா?

என்னுகிட்ட ஏதுடா காசு? நானே வேல இல்லாமல் தண்டமா இருக்கேன்.

அம்மா குடுத்துதுல்ல அதுல குடேன் அம்மா கேட்டா ஏதாவது சொல்லி சமாளியேன்.

ஏன்டா நாயே பொய் சொல்லச் சொல்றியா நீ? அடிச்சுடுவேன்.

இல்ல சித்தப்பா…

உனக்கு எதுக்கு இருபது ரூபாய்?

அது வந்து சித்தப்பா… கிரிக்கெட் விளையாண்டமா, அப்போ ஓங்கி அடிச்சனா… பந்து மாலாக்கா வீட்டிற்கு மேல போயிடுச்சு பசங்க தேடுனப்ப கிடைக்கல. சம்பத் பந்து வேணுங்கறான் இல்லைன்னா அப்பாட்ட சொல்லிடுவானாம்.

ஏய் மாலா வூடுதான  நான் போயி எடுத்து தரேன் நீ ஒன்னும் கவலைப்படாத வா, நெல்லக்\ கொட்டி காய வைப்போம்.

நெல்லைக் கொட்டி கிண்டும் போது ஒரு பச்சைக் கிளிக்கூட்டம் பறந்து வந்து களத்து ஓரம் இருந்த இலுப்பை மரத்தில் அமர்ந்து கீ கீ என்று கத்திக் கொண்டு இலுப்பைப் பழங்களின் மேல் தலைகீழாக தொங்கிக் கடித்து இலுப்பைக் கொட்டைகளை கொறிக்க ஆரம்பித்தது. கிளியின் கழுத்தில் இருந்த கோடுகள் மணியின் கண்களுக்கு தொலைத்த வெளிர் பச்சை டென்னிஸ் பந்தை ஞாபகப்படுத்தியது.

அவன் அண்ணாந்து பார்த்ததை கவனித்த சித்தப்பா, எல்லாம் கீ கீ என்று அதன் மொழியில் பேசிக்கொள்ளுதுடா, என்றார்.

ச்சை கிளியாக பிறந்து இருந்தால் கஷ்டமில்லை என்று நினைத்தவன் கிளிக்கூண்டு ஞாபகம் வந்து, அய்யோ இதுவே பரவாயில்லை பந்து எப்படியாவது கிடைத்து விட வேண்டும்.

சித்தப்பா மறக்காம தேடி எடுத்து தர்ரியா?

என்னடா மணி?

பந்து சித்தப்பா.

அதான் எடுத்து தரேன் சொன்னேன்ல? வா, சாக்க புடி நெல்ல அள்ளி அரைச்சிட்டு போவும்,

அகரம் ரயிலடியை ஒட்டிய அது ஒரு பழைய காலத்து ரைஸ்மில். சுவர் எல்லாம் நூலாம்படைகள் ஒரே பெருச்சாளி புழுக்கையின் வீச்சம்.

வரிசையாக சின்னதும் பெரியதுமாக மூட்டைகள். பெண்களும் வயதானவருமாக நின்று கொண்டு இருந்தனர். ஒரு வயதான ஆயா சாக்கை ஒரு காலால் மெறித்துக் கொண்டு ஒரு கையால் தவிடு அள்ளியது. அள்ளி முடித்ததும் ஒவ்வொருவரும் ஒரு கை ஆயா முறத்தில் இட்டனர்.  டிரைவர் நெல் அறைக்க ஒரு கை அரிசியை அவருக்கு எடுத்து கொண்டார்.

மணிக்கு அந்த ஆயாவைப் பார்க்க என்னவோ போல் இருந்தது. உடம்பு முழுவதும் தவிடோடு  குனிந்தும் நிமிர்ந்தும் அந்த ஆயா அள்ளி கொண்டு இருந்தார். அவன் அரைத்தவுடன் ஆயாவுக்கு இரண்டு முறை அள்ளிக் கொடுத்தான்.ஆயா அதன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.

சித்தப்பா ஒன்றும் சொல்லவில்லை. வீடு வந்ததும் காசு முழுவதும் அம்மாவிடம் கொடுத்து விட்டார். மணி சீரான அழுகையோடு,  சித்தப்பா பந்து…

ஏழாவது படிக்கற, இன்னும் பச்சைப்புள்ள மாதிரி அழுவுற? இருறா அங்கதான் போறேன்

மணி வழியைப் பார்த்து நின்றிருந்தான். சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர், எலே அந்தப் புள்ள எல்லா இடமும் தேடிப் பார்த்துச்சு.  நான் கூடத் தேடினேன், கிடைக்கலடா. வேற எங்கியோ போயி விழுந்து கிடக்கும் போயி பாரு.

நீ போ சித்தப்பா உன்னால நான் அடி வாங்கப் போறேன் சம்பத் வந்து அப்பாட்ட சொல்லுவான். நீ என்ன ஏமாத்திட்ட காசாவது தரலாம் இல்லை?

சரி போடா  நான் கடையில கிடைக்குதா பார்க்கிறேன்

அந்தப் பந்து சிதம்பரம் தெரசனம் பாக்கப் போனப்ப வாங்குனதாம். இங்கே பரங்கிப்பேட்டைல கிடைக்காது சித்தப்பா

– இல்லடா மணி  நான் எதுக்கும் பரங்கிப்பேட்டைக்குப் போயி பாக்கறேன்

மணி வீட்டில் கவலையோடு சம்பத்தை  எதிர்பார்த்து இருந்த போது, எம்மோவ் என்று அரிசிக்காரம்மா கூப்பிடும் சத்தம்.

ஏய் மணி என்னான்னு போயி கேளு கை வேல இருக்கு, என்றார் அம்மா

இவன் ஓடி, என்ன ஆயா?

அரிசி அளக்க முத்திரைப் படி வாங்கிட்டு போனல்ல, அத எடுத்து வாடா, ஓடு

– என்னடா கேட்கறாங்க?

படி கேட்கிகறாங்கம்மா

ஏன், காலையிலே குடுக்கல நீ?

மணி வாயிலிருந்து வார்த்தை இல்லை.

என்ன செய்யற?

தேடறம்மா

என்னாது, தேடுறியா?

அதற்குள் இரண்டு முறை அரிசிக்காரம்மா குரல் கொடுத்து விட்டார். மணிக்கு பயத்தில் எங்கே வைத்தோம் எனத் தெரியவில்லை.

எங்கடா?

காலையிலே தரனே? இந்தப் பய எங்கியோ வச்சிட்டு தேடிட்டு கிடக்கறான் அரிசிகாரங்கல?

நீ எல்லாம் கல்லூட்டு பெரிய வாழ்வுக்காரிடி பொழுது போயிடுச்சுல்ல இதெல்லாம் ஒரு சாக்கு, என்று அரிசிகாரம்மா சொன்னதும் அம்மா கடுங்கோவத்தோடு மணியைப் பார்த்தாள்.

படியைத் தேடிக்கொண்டு இருந்தவன் கண்ணில் கட்டம் போட்ட சிமெண்ட் அச்சு ஜன்னலோரம் இருந்த படி தெரிந்தது. அவன் பார்வையை பார்த்ததும் அம்மா படியை எடுத்து ஓங்கினாள். தெருவாசலுக்கும் நிலைப் படிக்கும் இடைப்பட்ட அந்த இடத்திலிருந்து மணி தப்பி ஓட உடல் வளைத்துத் திரும்பியபோது அம்மா முழுவீச்சில் படியால் அடித்தார். சரியாக அவன் நடுமண்டையை படி தாக்கியது, படியின் அடைப்பு தெறித்து ஓடி வட்டமிட்டு விழுந்தது

கண்ணு இரண்டிலும் கோடையில் வரும் மின்னலும் காதில் இடிச் சத்தமும் ஒருசேரக் கேட்க,  கீழே தலைசுத்தி விழுந்தான். வலதுகையும் இடது கையும் கோழிக்குத் துடிப்பது போல் துடித்தது. அவ்வளவுதான். அம்மாவுக்கு என்ன செய்தோம் என்று புரியவில்லை. அய்யோ சாமி, என்று கத்துகிறார். மணிக்கு கேட்கவில்லை.

அதற்கு பிறகு பதினைந்து வருடமாக பார்க்காத வைத்தியம் இல்லை  யார் எப்ப எதைக் கேட்டாலும் மணிக்குத் தெரிந்தது ஒன்றுதான்- பந்து, அதை மட்டும்தான் சொல்லுவான்.

 

 

 

மாண்புடையாள்

தி. வேல்முருகன்

தீபாவளிக்கு மறுநாள் மதியம் சாப்பிட்டு வீட்டிலேருந்து வேலைக்கு போயிட்டு இருக்கேன். பெரிய மதுவு திரும்பும்போது தம்பின்னு ஒரு குரலு கேட்குது.

தம்பின்னு திரும்பவும் குரலு உடைஞ்சு அதுல ஒரு பதட்டம். நான் வண்டிய திருப்பி அந்த பெரிய மதுவு பஸ் ஸ்டாண்ட்கிட்ட வந்து நிறுத்தினேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவிதான் கூப்புடுராங்க.

“என்னம்மா? “

“இங்க வாயேன் தம்பி”

அங்கதான் சைக்கிள் கடைக்காரர் ஒக்காந்து இருந்தாரு. அப்பாக்கு தெரிஞ்சவரு. உடம்பு கொஞ்சம் பலவீனமா நடுங்குது. கையெல்லாம் சருகு போல தோல் சுருக்கம் தெரியுது.

“என்னம்மா? என்னாச்சு? “

“பஸ்சே வரல தம்பி ஒரு மணி நேரமா! கொஞ்சம் கரிக்குப்பம் வரைக்கும் போகனும், தெரிஞ்சவங்க வீட்டுக்கு. நீ கொஞ்சம் இவங்கள கொண்டு உட்டுடேன். நான் பின்னாடியே வந்துடறேன்.”

“அதுக்கென்னமா… நீங்க மெல்ல வந்து உட்காருங்கப்பா!”

அவரால நடக்க முடியல. ஒரு தள்ளாட்டம் இருந்தது. வண்டியில ஏறும்போது.

“என்னம்மா தனியா அனுப்புறிங்களே, நீங்களும் வாங்களேன்?”

“ஏய், நீயும் ஏறிக்க. இடம் இருக்கு பாரு…”

சைக்கிள் கடைக்காரர்தான் சொன்னாரு. அந்த குரலு, அந்த சத்தம், கொஞ்சம் கூட பலவீனம் இல்லாம உறுதியா தெரிஞ்சுது.

பஜாஜ் 125 விண்ட் மாடல். நல்ல நீளமான சீட்டு உள்ளது. நல்லா உட்கார்ந்து வண்டிய பிடிச்சுக்க சொல்லிவிட்டு எடுத்தேன். முதல்ல அந்த அம்மா கொஞ்சம் கூச்சமும் சங்கடமும் பட்டாங்க. பிறகு ஏறிகிட்டாங்க. கையில இருந்த கட்டப்பைய வாங்கி முன்னாடி வச்சிக்கிட்டேன். வண்டி ஓட ஆரம்பித்தது.

இவர் பேரு ராயரு சைக்கிள் கடை தான் வச்சிருந்தாரு. என்னோட புது சைக்கிள அப்பா ஒவராயிலுங்காக இவர் கிட்ட விட்டு இருந்தாங்க. அப்ப இவரு கடையில நிறைய சைக்கிள் இருக்கும் சின்ன சைக்கிள்லாம் இருக்கும். எப்பவும் கூட்டமா இருக்கும். பரங்கிப்பேட்டை ரேவுதுரைக்கு மீனு வாங்கப் போற சைக்கிள் எல்லாம் கூடையோட நிக்கும். எப்பவும் ஆளும் பேச்சும் பஞ்சர் ஒட்ட காத்தடிக்கன்னு இருக்கும்.

நான் அன்னைக்கு சைக்கிள் வாங்கப்போனேன். அப்ப ரோட்டோரம் பெரிய வேப்பமரம். நிழல்ல பூவும் பழமுமா அது ஒரு தனி வாடை. நல்லா காத்தடிச்சுகிட்டு இருந்திச்சு. ஒரு ஆயா அந்த பழத்த பொறுக்கிக்கிட்டு இருந்துச்சு. நான் சைக்கிள் கொடுங்கன்னு கேட்டேன்.

“ஒக்கார்றா என் கூட்டாளி. மவனே, கொஞ்சம் நேரமாவும் நீ போயி விளையாடுடா,”ன்னாரு அப்ப இத எல்லாம் பார்த்தன்.

இப்ப தெரியற இந்த சைக்கிள் கடைக்காரர் வாட்டம் சாட்டமா நல்ல நிறம் கையில பச்சை நரம்பு தெரியும். பாவம் இப்ப இப்படி தளந்து நிக்கிறாரு.

வாய்க்கால் பிரிந்ததும் ஆனைக்குட்டி மதுவு வந்தது. இருபுறமும் மாந்தோப்பு. தாழங்காடு தாண்டியதும் குட்டியாண்டவர் கோயில் சாலையில் இருபுறமும் புளியமரமும் பனைமரமும் வரிசையாக நின்றது. தைக்கால் வந்ததும் தர்க்காவின் விளக்கு கம்பத்தை பார்த்துவிட்டு நான் சைக்கிள் கடைக்காரர் மனைவியைக் கேட்டேன்.

“அம்மா, அங்க யாரு வீட்டுக்கு போறிங்க?”

“அதுவா தம்பி அங்க சொந்தக்காரங்க இருக்காங்க அங்க போறோம்”

தோப்பிருப்ப வண்டி தாண்டுச்சு. நான் ஒன்னும் பேசல.

“அம்மா கரிக்குப்பம் வந்துட்டுது”

“இன்னும் கொஞ்சம் தூரம் தான் போயேன்”

சிறிது தூரம் போனபின் ரோடு இடப்புறம் பிரியும் இடத்தில், “இங்க தான் நெறுத்து நெறுத்து” என்றார்கள்.

நான் வண்டிய மெதுவா நிறுத்தினேன்.

“மெதுவா மெதுவா,”ன்னாரு சைக்கிள் கடைக்காரர்.

மனைவி இறங்கும்போது குரல் கணீர்ன்னு இருக்கு. இறங்கியதும் பைய வாங்கி கிட்டாங்க. சைக்கிள் கடைக்காரர் இறங்கி கால் தாங்கிகிட்டே போயி ரோட்டோரம் இருந்த எல்லக்கல் மேல கைய ஊணி உக்காந்ததுட்டாரு. நான் அவர் மனைவிய கேட்டேன்.

“ஏம்மா ரொம்ப முடியல போல இருக்கே, பையன் வீட்டுக்கு போகக்கூடாதா?”

அவ்வளவுதான் அந்த அம்மா கண்ணுலேருந்து தண்ணி கொட்டுது, உதடு பச்சைப்புள்ள மாதிரி துடிக்குது.

“அழுவாதம்மா, யாரையாவது கூப்புடனுமா? என்ன கஷ்டம் சொல்லும்மா?”

முந்தானையால முகத்த தோடைச்சிக்கிட்டு, “எல்லாம் தப்பாயிடுச்சுப்பா,”ன்னு சொல்றாங்க.

“என்னம்மா சொல்றிங்க?”

“எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குடியிருக்கர வீட்ட உட்டுடக்கூடாதுப்பா. புள்ளைவோ இருக்கு பொண்ணு இருக்குவோ ஆனால் இருக்கதான் இடமில்லே”

“ஏம்மா?”

“பெரிய பொண்ணு கல்யாணத்துக்கு வீட சொச்ச பணத்துக்காக போக்கியம் போட்டோம். அவ்வளவுதான், அத மூக்க முடியல. இரண்டாவது பொண்ணு கல்யாணத்துக்கு அதையே வித்து முடிச்சோம்..

“மளிகை கடை வச்சாரு. பொட்டிக் கடை கூட வச்சு பார்த்தாச்சு, கொடுத்தத வாங்கத் தெரியாது தம்பி, திரும்ப சைக்கிள் கடைக்கே வந்தாச்சு

“பசங்க அவன் அவன் சம்பாரிச்சு கல்யாணம் பண்ணிகிட்டானுங்க. இந்த சரியா படிக்காத புள்ளைவோ என்ன பண்ணும்? அங்க அங்க கிடைக்கற வேலையை செஞ்சிட்டு கஷ்டப்படுதுவோ, நாங்க எங்க போறது?

“முதல்லாம் எல்லாம் சைக்கிள் வேலைக்கு வரும், ஒன்னும் கஷ்டம் தெரியல. இப்பல்லாம் எங்க, அதுவும் கிடையாது, ஞாயிற்றுகிழமை ஒன்னு இரண்டு வரும். இவங்களுக்கு உடம்பு தெம்பு கொறைஞ்சதும் அதுவும் போச்சு“

சைக்கிள் கடைக்காரர் எங்கோ பார்த்து வெறித்துக் கொண்டு இருந்தாரு.

“காலையில கிளம்பினோம், யார் கண்ணிலும் படாம வந்துடனுமுன்னு.

“எல்லாம் விபரமா ஒரு நாளைக்கு சொல்றன். உன்னதான் தெரியும, நல்ல புள்ள இல்ல நீ வேலைக்கு போ. நேரம் ஆவுது பாரு. இங்க பக்கத்துல தான் நான் போவனும் நீ போ“

நான் வண்டி எடுத்து மெதுவாகச் செல்ல ஆரம்பித்து கண்ணாடி வழியாக பார்த்தேன்

சைக்கிள் கடைக்காரரை கைத்தாங்கலா முதல்ல நிக்க வச்சாங்க. அவரு கையை உதறி முன்னாடி சாயப்பார்த்தாரு.

நான் வண்டியைக் கீழப்போட்டுட பார்த்தேன்.

சைக்கிள் கடைக்காரர் மனைவி சிரமப்பட்டு நிமித்தி பிடிக்கிறாங்க, அவரு நெஞ்சு உயரம்தான் இருக்காங்க. எனக்கு புரியுது. இப்ப அழுவுறாங்க. அவுங்க உதடு துடிக்குது. செட்டியார் குனிஞ்சு அவங்கள பார்க்குறாரு. சைக்கிள் கடைக்காரரை ஆதரவா அவரு மனைவி புடிச்சு இருக்காங்க. நான் அப்படியே திரும்பி ரோட்ட பார்த்து  இருக்கேன். ஒரு ஐம்பதடி தூரத்தில ஒரு கட்டடம்
இருந்துச்சி. நான் அந்த கட்டத்த முன்பே பார்த்து இருக்கேன். ஆனால் அதுல இருந்த போர்ட அன்னைக்குதான் பார்த்தேன். அதுல அரசினர் ஆதரவற்றோர் முதியோர் இல்லமுன்னு இருந்துச்சு.

நான் வேலைக்குப் போயிட்டேன். மனசுல அவங்க ரெண்டு பேரோட நினைப்பு மட்டும் இருந்துச்சு. எப்படி இருந்தவங்க இப்படி ஒரு சூழ்நிலை வந்து போச்சே, என்னா ஆவாங்கன்னு தெரியலையே, அவங்கள பார்க்கனும்னு நினைச்ச நான் தொடர்ந்து வேலையால மறந்துட்டேன்.

ஒரு வாரம் போயிருக்கும். மாலை வேல முடிஞ்சு திரும்பும்போது 6:30 மணி இருக்கும் வெளிச்சம் இருந்தது. செட்டியாரம்மா கரிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நிற்குறாங்க வண்டிய நிறுத்தி, “வாங்கம்மா நான் கொண்டு விடறேன்“ன்னு சொன்னேன்.

“இல்லப்பா. பையன் பார்த்தா ஏசுவான், நீ போ. நான் பஸ்ல வந்துடறேன்“

“சரிம்மா?”

வண்டி எடுக்கப்போறேன். “தம்பி, தம்பி. இருப்பா… நேரம் வேற ஆவுது. பெரிய மதுவுல உட்டுடு”

“சரிம்மா ஏறிக்குங்க. கம்பி புடிச்சுக்குங்க”

வண்டி போயிகிட்டு இருக்கு. அவங்களாவே சொல்ராங்க,

“ஒன்னும் சரியில்ல தம்பி. நான் பொறந்த ஊரு குறிஞ்சிப்பாடி. என்ன இந்த குடும்பத்துல இவருக்கு கட்டி குடுத்தாங்க. நான் வந்தப்பிறகுதான் இவரு தம்பிவோளுக்கு கல்யாணம் ஆச்சு. அப்புறம் சொத்த பிரிச்சு கொடுத்தாங்க , பங்கா ஊடும் கொஞ்சம் நிலமும் வந்துச்சி. சரியா பார்க்க தெரியல. சாமர்த்தியம் இல்ல. ஒரு சூழ்நிலையில வீட்ட போக்கியம் போடப் போவ, அத மூக்கவே முடியல என்தம்பிவோ மளிகை கடை போட்டு கொடுத்தான். அதையும் கட்டுசிட்டா இல்லாமல் கடன கொடுத்துட்டு வாங்க தெரியல. கடன் வாங்கனவன் அடிக்க வரான்பா . நாங்க வாங்கன கடத்துக்கெல்லாம் போயிடுச்சு. மீளவே முடியல. எல்லாம் போச்சு.

“கடைசியாக அவ ராஜம் ஊட்டுலதான் ஒரு வருசமா இருந்தோம். அவ ரொம்ப நாளா காலி பண்ணுங்கன்னு சொன்னா. இந்த மாசம் இந்த மாசம்ன்னு தள்ளி போட்டுக்கிட்டு இருந்தோம். இந்த மாசம் வர்ற முதியோர் பணம் வரல. நானும் எங்கெங்கோ ஓடிப் பார்த்தேன். பெரட்ட முடியல. தீவாளிக்கு மொத நாளு பொட்டிய தூக்கி வெளில வச்சுட்டு கதவ சாத்திட்டா. மழை புடிச்சுக்கிச்சு.

“பொழுது போனப்பிறகு பையன் வூட்டுக்கு போனேன். தீபாவளி. மவன் வூட்டுல இருந்துட்டு இங்க வந்தாச்சு. அம்மா பையன் வீட்டுல இருக்க முடியாதா? என்னோட பெரிசா கஷ்டப்படறான்பா, கிடைக்கற வேலைய செய்யறான், நாங்க ஒன்னும் செய்யல அவனுக்கு. சுனாமி வீட்டுல வாடகைக்கு இருக்காம்பா. இவரு முடியாதவர இரண்டுநாளு வச்சிக்க முடியல. தண்ணி வசதி கிடையாது. மருமக ஏதாவது சொல்றதுக்கு முன்னே நம்மளே போயிடும்முன்னு வந்துட்டேன்.”

“எங்க வந்திங்கம்மா?”

“ஆமா இனி மறைச்சிதான் என்ன ஆவப் போவுது? அதாம்பா கரிக்குப்பத்துல அனாதை இல்லம் இருக்கு இல்ல, அங்கதான் கொணாந்து தங்க வச்சேன். முதல்ல சேர்த்துக்க மாட்டேன்னுதான் சொன்னாங்க. அப்புறம்தான் நான் படற கஷ்டத்தை பார்த்துட்டுஒத்துகிட்டாங்க.

“மவன் வீட்டுல இரண்டு நாள் தங்கியிருந்து பார்த்தேன், மருமகள் அனுசரனை இல்லை, பிறகு அங்க இங்கன்னு விசாரிச்சப்ப இங்கே வயசான காலத்துல தங்கற இடம் இருக்குன்னு தெரிஞ்சு கொண்டு வந்து சேர்ந்தேன். அவருக்கு முடியாம போனப்பிறகு கூடயேதான் இருக்கேன். பகல்ல அப்படியே யாருக்கும் தெரியாம வந்து கூடயே பொழுதுக்கும் தேவையானத செஞ்சு கொடுப்பேன். அங்க இருக்குறவங்களுக்கும் வேத்தும்மையில்லாம செய்வேன். இப்ப எல்லாம் சரியாயிடுச்சு. ரா ஒரு பொழுது எல்லாரும் பார்த்துக்கிறாங்க. பகல்ல நான் வந்துடப் போறேன். என்னமோ போப்பா, நான் இருக்கறவரைக்கும் யாரும் ஒரு சொல்லோ கஷ்டப்படவோ அவர உடமாட்டேன். ஆனால் அவரு கஷ்டப்படாம நல்லவிதமா போயிட்டாபோதும் அல்லும் பகலும் அதே நினைப்பு ஓடிக்கிட்டு கிடக்கு. பகீர்ன்னு ஒரு பதட்டம் எந்த செய்திய கேட்டாலும் வந்து நெஞ்சடைக்குது. இன்னும் எவ்வளவு நாளைக்கோ?”

“சரிம்மா கவலைப்பட்டு நீங்களும் உடம்பு கெடுத்துக்காதிங்க? இப்ப எங்க போறிங்க?”

“மவன் வீட்டுக்குத்தான். மருமக முழுகாம நிற மாசமா இருக்கா. கைப்புள்ளய வச்சிக்கிட்டு கஷ்டப்படறா.அப்புறம் யார் பார்ப்பா? நான் தான் பார்க்கனும்”

பெரிய மதுவு வந்து விட்டது.

எதற்காக எழுதுகிறேன் – தி. வேல்முருகன்

தி வேல்முருகன்

எழுதுவது – அதைப்பற்றி அருமை எழுத்தாள முன்னோடிகள் எல்லாம் நல்லவனவே எழுதி விட்டார்கள்

நான் ஏன் எழுதுகிறேன்?

ஆம் அதை சொல்லிதான் ஆக வேண்டும்

வெறும் வார்த்தை ஐாலத்தை நம்பி கைப்பணத்தை இழந்த அன்று, எப்படி படிப்படியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை அப்படியே எழுதியபோது கதையாகிவிட்டது. தனிமையில் நேரப்போக்குக்கு ஏதோ நினைப்பில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத வேண்டிய நினைப்பும் எழுத்தும் என்னை பிடித்துக் கொண்டது- ஆம் அதுதான் உண்மை

எழுத ஆரம்பித்த பிறகு என்னிடம் பணி சார்ந்த பதட்டம் குறைந்து நிதானம் வந்திருக்கிறது. இனி எழுதாமல் என்னால் இருக்க முடியாது போலிருக்கிறது

எப்போது எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது? ஏன், எதற்கு அதை எழுத வேண்டும்?

ஏதாவது மனதை தொடும் சம்பவங்கள், ஏமாற்றங்கள், அவலங்களை பத்திரிகையிலோ கதைகளிலோ வாசிக்கும்போது அதை ஒட்டிய வாழ்வில் நடந்த சம்பவங்களை மனம் மெள்ள கோர்க்க ஆரம்பித்து விடுகிறது பிறகு அதை எழுத தொடங்கினால் எழுத்து தானாகவே ஓடி அதுவாகவே முடிகிறது எனக்கு சிறிது முயற்சிக்க வேண்டும் அவ்வளவுதான்

எண்பத்தி ஒன்பதில் கட்டிடவியலில் பட்டயப்படிப்பு
முடித்து விட்டு வேலையின்மையும் வேலையும் சார்ந்து ஊர் ஊராகவும் பிறகு நாடு நாடாகவும் அலைந்தபோது மிகப்பெரிய கடிதங்கள் எழுதுவேன் நண்பர்களுக்கு அனுபவங்களையும் வீட்டிற்க்கு அன்பையும் தெரிவிக்கும் அவைகள் தான் என் முதல் எழுத்துகள். எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்தது. இரண்டு வருடமாக பணிக்காக ஒவ்வொரு நாளும் நீண்ட பயணம் செய்வதால் கிடைக்கும் நேரத்தில் எழுத ஒரு வாய்ப்பமைந்துவிட்டது.

என் முதல் வேலையே வீடற்றவர்களுக்கான திட்டமான தொகுப்பு வீடுகள் கட்டுவதுதான் மிக எளிய மக்கள் வறுமையிலும் நேர்மையானவர்கள் நாளெல்லாம் கீற்று முடைந்து வாழ்க்கை நடத்துபவர்கள் அவர்களிடம் அரசியல் செய்யும் கான்ராக்டர்கள். அப்படி ஒரு சூழலில் வேலை பார்த்த அனுபவம் அதுவரை இருந்த என்னை இளக்கி விட்டது

பசியில் பசுமை தேடி அலையும் ஆவினம் போல் வேலை தேடிச் செய்யும் நிர்பந்தம் எப்போதும் எனக்கு இருக்கிறது. தொழில் சார்ந்து எளிய மனிதர்களான தொழிலாளர்களுடன் பழக வேண்டி உள்ளதால் அவர்கள் நல்லவைகள் கெட்டவைகள் ஏமாற்றம் எல்லாம் அருகே இருந்து அந்த வாழ்க்கையை பார்த்து இருப்பதால் அதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் வந்து விடுகிறது.

எழுதுவதை தொழில் சார்ந்து இப்படி கூட சொல்ல தோன்றுகிறது, எப்படி சுய உழைப்பினால் கட்டி முடித்த வீட்டில் வாழும் திருப்தியிருக்குமோ அப்படி ஒரு திருப்தி எழுதுவதால் எனக்கு இருக்கிறது.

எந்த வேலையும் தெரியாதவன் வெறும் கையையும் காலையும் கொண்டு கட்டிட வேலையில் வந்து கற்றுச் செய்ய முடியும். ஆனால் ஒரு நல்ல வேலைக்காரன் மட்டும் தான் தன் வேலையில் சுயதிருப்தி ஏற்படும் வரை திரும்ப திரும்ப திருத்தி செய்து கொண்டு இருப்பான். செய்யும் தொழிலில் நல்ல வேலைக்காரனான நான் எழுத்திலும் அப்படியே இருக்க விரும்புகிறேன் வேறொன்றுமில்லை…

எனது பதின்ம வயதில் வாசிக்க தொடங்கியவன் இலக்கியம் பற்றிய எந்த அளவீடோ புரிதலோ இல்லாமல் யார் எழுத்து மனதை வருடுகிறதோ, இரக்க உணர்ச்சியை தூண்டுகிறதோ அதை மட்டுமே நூலகத்தில் எடுத்து வாசிப்பேன். அந்த எழுத்தாளர் புத்தகங்களை தேடி தேடி படிப்பேன்.

அது தான் இலக்கியம் என்று எனக்கு தெரியாது ஆனால் தெரியாமல் வாசித்தது எல்லாம் தமிழில் புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்கள். பிறகு இணையத்தில் வாசிக்க ஆரம்பித்த பிறகு தான் இலக்கியம் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன்.

நான் எழுத்தாளன் அல்ல நல்ல வாசகனகவும் வாசித்துக் கிடைக்கும் திறப்பில் மகிழவுமே விரும்புகிறேன்..

…….

(கடலூர் மாவட்டம், அகரம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த திரு. தி. வேல்முருகனை allimurugan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

பாதை காலறியும் – அ. வேல்முருகன்

தி வேல்முருகன்

பெருமழை குஐராத் முழுவதும் பொழிந்தாலும் இந்த ஐாம்நகரை மட்டும் ஒதுக்கி விடுகிறது. இரண்டு வருடமாக மழையே இல்லை. இந்த வருடமும் மே மாத வெயில் சிறிதும் கருணையில்லாமல் உதிரத்தையே வேர்வையாக உறிஞ்சுகிறது. தாகத்துக்கு வயிறு முட்ட தண்ணீர் குடித்த பின்னும் எனக்கு ஒரு டீ குடித்தால் தெம்பாக இருக்கும் என்று தோன்றியது.
“சஞ்சய் ஒரு டீ கொடப்பா, பத்தரை மணியாச்சி பாரு…”

“சார், பால் திரிஞ்சு போச்சு. கொஞ்சம் இருங்க, வாங்கி வர ஆள் விட்டுருக்கேன்.
இப்ப வந்துடுவான்”

“ஏம்பா படிக்கலயா? வேற வேலை எதாவது செய்யக்கூடாதா?”

“செய்யலாம்தான் சார். வேலையும் தெரியும் ஆனா இப்படிதான் கிடக்குமுன்னு இருக்கும் பாருங்க, அதுதான்”

“என்னப்பா சொல்ற?’

“ஆமாம் சார், நான் நல்லா படிக்கணுமுன்னுதான் நினைச்சேன் ஆனால் பாருங்க எனக்கு படிக்க குடுத்து வைக்கல”

“ஏன் தம்பி எண்ணாச்சு? விருப்பம் இருந்தால் சொல்லு”

“இல்லை சார் அந்த முடிந்த கதையை பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை”

சஞ்சய் முகம் பார்த்தால் அவன் சொல்ல முடியாத சோகத்தில் தவிப்பது புரிந்தது, டீ பாய் என்றால் கொஞ்சம் திமிராகதான் இருப்பார்கள். சஞ்சய் அப்படி கிடையாது ஆள் பார்க்க களையாக, படிய வாரிய தலைமுடி, எப்போதும் சிரித்த முகம் என்று இருப்பான். வயிரே இல்லாத ஓங்கிய உருவம். டீ பாய் என்றால் நம்ப முடியாது

அப்புறம் எதிர்பாராத ஒரு நாள் அவனாகவே தன கதையைச் சொல்லத் தொடங்கி விட்டான். யாருமற்ற ஒரு மதியநேரம். பொறுமையாக அனைத்தும் கேட்டேன்.

உலகமெல்லாமிருந்து கங்கைய தரிசிக்க அலகாபாத் வராங்க. ஆனா நான் அங்கேயிருந்து ஓட வேண்டியதா போயிடுச்சு சார்.

நீங்க அன்றைக்கு என்னைக் கேட்டபிறகு பழைய விஷயங்களை நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. அது பாட்டுக்கு மனதில் ஓட ஆரம்பித்து விட்டது, தெய்வத்திடம் முறையிடுவது போல்.

கொஞ்சம் கேளுங்கள்.

வீட்ல அப்பா,அம்மா அண்ணன் இரண்டு தங்கச்சி ஒரு தம்பி எனக்கு, ஒரு கவலையும் இல்லை பள்ளிக்கு போறது வீட்டுக்கு வர்றது விளையாடறதுன்னு இருந்தேன்

அப்பா அம்மா இரண்டு பேருமே வேலைக்கு போவாங்க. அண்ணன் பெயிலா போனதால சும்மா சுத்திட்டு இருப்பான். ஒரு நாள் வேலைக்குப் போன அப்பாவுக்கு உடம்பு முடியல. அப்பா எப்பவும் பீடி குடிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமா ஆஸ்த்துமாவாகவும் டி.பியாகவும் உடம்புல வந்து முத்திப் போச்சு. எவ்வளவோ வைத்தியம் பார்த்தோம் காப்பாத்த முடியல .

நல்லா ஞாபகம் இருக்கு எனக்கு 13 வயசு அம்மா ஒண்டி வேலைக்கு போயி வெறும் கோதுமை மட்டும் கூலியாக வாங்கி வரும் அது ரொம்ப குறைவாகதான் இருக்கும் அதனால மில்லுல்லெல்லாம் அறைக்க மாட்டாங்க பிறகு அத குத்தி இடிச்சு சுத்தம் பண்ணி கையால சுத்தி மாவாக்கி ரொட்டி சுடும் எல்லாரும் சாப்பிடற அளவு இருக்காது அந்த வேலையும் சரியாக கிடைக்காதபோது பட்டினிதான்.

இப்படி இருந்த ஒரு நாள் அண்ணன் பசி தாங்காம எங்கயோ பொயிட்டான். அந்த சமயம் நான் வீடுவீடா பேப்பர் போடற வேலை செய்யப் போனேன். பள்ளிக்கூடம் போகாம இது போல வேலைக்கு போவலாமான்னு நான் அம்மாகிட்ட சொன்னேன். அம்மா முதல்ல என்ன கட்டிக்கிட்டுஅழுதுச்சு பிறகு தெரிஞ்சவங்க வீட்டிற்கு கூட்டிட்டுப் போய் பையன் வேலைக்கு போறேன்னு சொல்றான் நீங்க எதாவது செய்ய முடியுமான்னு கேட்டுச்சு

அந்த மாமா என்ன உத்துப்பார்த்தாரு. அவங்க வீட்ல அப்ப காலை நாஷ்டா செஞ்சுக்கிட்டு இருக்காங்க. செஞ்ச வாடை அடிக்குது. அவரு, “நீ ஏம்பா வேலைக்குப் போவனும், “படிக்கலாமில்லையா?” என்று கேட்டாரு

நான் சொன்னேன், “சாப்பிடனும்ல்ல மாமா,”ன்னு
என்னை அப்படியே பார்த்துட்டு அவரு அம்மாட்ட நூறு ரூபாய் கொடுத்து, “பையன நான் இட்டுப் போக மாட்டேன்,” என்று சொன்னதும் அம்மா கண்ணு கலங்குது. மாமா பார்த்துடப் போறாருன்னு அப்படியே திரும்பிப் மானத்தைக் பார்த்து முந்தானையால தொடச்சிக்குது.அவரு, ‘பீவி,”ன்னு ஒரு குரல் கொடுத்தாரு ஒரு அம்மா வந்துச்சி அவரிடம் மாமா எனக்கும் அம்மாவுக்கும் நாஷ்டா கொடுக்க சொன்னார்.

அம்மா பணத்தை அங்கேயே வைத்து விட்டு விடுவிடுன்னு என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பச்சு.

அப்ப அந்த வீட்டுக்கார அம்மா எனக்கு ரோம்ப பிடித்த பூரியும் பாஐியும் எடுத்துக்கிட்டு வந்துச்சி நான் உத்துப் பார்த்தத பார்த்த அம்மா என்னை ஒரு அடி அடிச்சுடுச்சு அங்கிருந்து கிளம்பி வீடு வந்ததும் என் கை காலையும் தலையெல்லாமும் தடவி அம்மா அழுதுச்சு.

“நீ அழுவாதம்மா, நான் பெரியவனாயி உனக்கு பணம் சம்பாதிச்சு தரேன்,”னு சொன்னேன் .

எனக்கு அப்ப அதெல்லாம் புரியல. வீட்டுல இருந்து வெளில வந்தேன். என் வயது ஒத்த பசங்க எல்லாம் விளையாடக் கூப்புடுறாங்க. எனக்கு பசியிருந்ததால வீட்டிற்கு திரும்பப் போய் தண்ணி குடிச்சதும் வெறும் வயிறு வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. அம்மா அப்படியே சோர்ந்து படுத்துக் கிடக்கு.

பசியில எனக்கு கோவம். ஏதாவது கிடைக்குமா என்று வீடு முச்சுடும் தேடினேன். நாமும் அண்ணன் போல வீட்ட விட்டு ஓடிப்போவும்னு நினைச்சேன்.

ஓடிப்போன அண்ணன அம்மா திட்டவே இல்ல எம்புள்ள எங்கேயாவது போயி பொழைச்சுகிடும், இங்க பட்டினி கிடந்து சாவறதவிட அவன் போனதே நல்லதுன்னு ஒரு நாள் சொல்லுச்சு

அப்பாவோட பொருட்கள்ல தேடும்போது ஓரு நஞ்சி போன ஐம்பது ரூபாய் நோட்டு அதோட பழைய சட்டையிலருந்து கிடைச்சுது. இனி எங்கேயாவது போயிடுவோம். காசு சம்பாரிச்சு வீட்டிற்கு வருவோம்னு மனசுலே சாமிய கும்பிட்டேன்

அம்மா எப்ப முழிச்சதுன்னு தெரியல
அமைதியா என்னப் பார்த்த அம்மா, ‘என்னடா?’ன்னு கேட்டுச்சு

நான் சொன்னேன், “வேல ஏதாவது கிடைக்குமான்னு பார்க்கப் போறேன் வர நேரம் ஆனா தேட வேண்டாம்”னு.

சொல்லிவிட்டு நேரா கால் போன போக்குல நடந்தேன் அப்ப ஒரு ரயிலு போறத பார்த்தேன். அவ்வளவுதான் எனக்கு ரயில்ல போகனுமுன்னு தோணிச்சு. நேரா ரெயில்வே ஸ்டேஷன் போனேன்.

கங்கையை தரிசிக்க உலகமெங்கும் இருந்து வரும் மக்கள் கூட்டம். விதவிதமான, அதுவரை பார்த்தேயிராதவர்கள். எனக்கு திகைப்பா இருந்துச்சு. எனக்குத் தெரியும் அம்மா இனி தேடி வந்தாலும் கண்டுபிடிக்க முடியாதுன்னு. அவ்வளவு கூட்டம். வந்த ரயில்ல யாரும் இல்லாத பொட்டியில ஏறிட்டேன். டிக்கெட்லாம் ஒன்னும் எடுக்கல. ரயிலு எங்க போவும்னு தெரியாது. பாவு பாஐி வந்துச்சி வாங்கி சாப்பிட்டுட்டு வாஷ்பேசின்ல தண்ணி குடிச்சேன். கண்ண சுழட்டி தூக்கம். அப்படியே சீட்டுக்கு அடியில படுத்துட்டேன்

நல்ல தூக்கத்தில் பெரண்டு படுக்கும்போது சீட்ட விட்டு வெளியே வந்து கிடந்திருக்கேன். டிடிஆர் பார்த்து எழுப்புராறு என்னை. எழுந்ததும் டிக்கெட் கேட்கிறார்

நான் பயந்து கொண்டே, டிக்கெட் இல்லை, என்றேன்.

கன்னத்தில் ஒரே அறை. பொறி பறக்குது. சுருண்டு அப்படியே கீழே விழுந்துட்டேன்

என்னிடம் இருந்து சத்தம் வராதால் டிடிஆர் பயந்து தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் அடித்து, பேட்டா பேட்டா, என்கிறார்

நான், “ஓ…” என்று வினோதமான ஒலியுடன் அழுகிறேன். எனக்கு வீட்டு ஞாபகமும் இவர் மேலும் அடிப்போரோ என்று பயமும் வந்து விட்டது. தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்ததும், “பேட்டா நான் அடிக்க மாட்டேன். சொல்லு, நீ யாரு எப்படி இந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வந்த?” என்று கேட்டார் டிடிஆர்.

அழுதுகொண்டே, அப்பா இறந்ததிலிருந்து நடந்தது அனைத்தையும் சொன்னேன் அப்புறம், “இந்த பெட்டியில் யாரும் இல்லை, அதனால் ஏறினேன்,” என்றேன்.

‘நீ எங்க போற? இந்த ரயில் எங்க போவுதுன்னு தெரியுமா?’

“தெரியாது, வேலை தேடிப் போறேன்,” என்றேன்

“சரி, நீ என்ன ஊர் பேட்டா?’

“அலகாபாத்தில் ராம் நகர்”

“இந்த ரயில் பஞ்சாப் பாட்டியலா போவுது. நீ வா, அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி உன்ன வீட்டுக்குப் போற ரயில்ல ஏற்றி விடறேன். நீ வீட்டுக்குப் போ பேட்டா,” என்றார் டிடிஆர்.

நான் மறுத்து அழுதுகொண்டு இருந்தேன்

“பேட்டா நீ அழுவாத நான் இப்ப வரேன் இங்கேயே இரு,” என்று சொல்லிவிட்டு டிக்கெட் செக் பண்ண சென்றார்.

நான் அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விட வேண்டும் என்று முடிவு செய்து கதவு அருகே நின்று ஸ்டேஷன் வந்ததும் இறங்கி, விடுவிடு என நடந்தேன்.

ஒரு பெட்டியில் மிகக் கூட்டமாக எல்லோரும் ஏறிக் கொண்டு இருந்தனர் அதில் ஏறி உள்ளே சென்று டிடிஆர் வருகிறாரா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரிடமும் பேசவில்லை. ரயில் கடைசியில் ஒரு ஸ்டேஷனில் சுத்தமாக நின்று விட்டது

நீண்ட தலைப்பாகை அணிந்தவர்கள் எல்லாம் சலோ, சலோ என்று தள்ளிக்கொண்டு இறங்கினர். நானும் இறங்கினேன். நல்ல மாலை நேரச் சூரியன் முகத்திலடிக்க, ‘பாட்டியலா’ என்ற பெயரைச் சுவற்றில் பார்த்தேன்

கூட்டத்தோடு வெளியில் வந்த நான் ஒரு தள்ளு வண்டி பின்புறம் இருந்த தகர சீட் போட்ட ஓட்டலில் தாலி சாப்பிட்டேன். ரொட்டி கேட்கக் கேட்க கொடுத்தாங்க பிறகு கொஞ்சம் சோறும் சாப்பிட்டுட்டு காசு கொடுத்து விட்டு திரும்ப ரயில் நிலையம் வந்து படுத்துக்கொண்டே பார்த்தேன். என் வயது ஒத்த பிள்ளைகள் வழியில் வருபவர்களிடம் வயிற்றைக் காட்டி கை நீட்டிக் கொண்டிருந்தனர்.

பசியில் ஒரு முறை, பிச்சை எடுக்கப் போறேன் என்று சொன்னதும் அன்று என்னைக் கடுமையாக வாயிலும் முதுகிலும் அடித்த அம்மா ஞாபகம் வந்தது. அடுத்தடுத்து வரிசையாக தம்பி தங்கை ஞாபகம் வந்து தேம்பி அழ ஆரம்பித்து பிறகு அமைதியாகி சுற்றுமுற்றும் பாரத்தேன்.

சன்னமாக வீசிக்கொண்டு இருந்த காற்று ரயில் நிலையத்தில் புகுந்து குப்பைக் கூளங்களை அள்ளி எறிந்து பிளாஷ்டிக் பாட்டில்களை உருட்டிப் போட்டது. அப்பிள்ளைகள் கையேந்துவதை விட்டு விட்டு பாட்டில்களை பொறுக்க போட்டியிட்டனர்

மழை என் கண்ணீரைப் போல் சிறாக ஆரம்பித்து ஒரே லயத்தில் பெய்து தீர்த்தது. இரவானதும் அதே கடையில் பூரி பாஐி சாப்பிட்டேன் கடையில் இருந்த அக்கா, என்ன ஊர்?. என்று விசாரித்தார்கள். பதில் சொல்லாமல் பயந்து வந்து விட்டேன்

அன்று இரவு கொசுக்கடியில் தூக்கம் வரவில்லை எழுந்து ரயில் நிலையத்தில் சுற்றிச் சுற்றி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆலமரம் ஒன்று பெரும் விழுதுகள் விட்டு மண்ணில் ஊன்றி நின்று கொண்டிருந்தது. பிச்சையெடுத்த பிள்ளைகள் அம்மரத்தடியில் இருந்தனர்.

விடியற்காலை அலகாபாத் செல்லும் ரயில் புறப்படப் போவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். எனக்கு வீடு, அம்மா, டிடிஆர் அடித்தது எல்லாம் ஞாபகம் வந்து என்ன ஆனாலும் போகக்கூடாது என்று வைராக்கியமும் வந்தது.

விடியும்வரை ரயில்கள் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டு இருந்தேன் பசிக்க ஆரம்பித்ததும் பைப்பில் தண்ணீர் பிடிச்சு குடிச்சேன்

காசு தீர்ந்தது. அதுவரை இருந்த தைரியம் போய் பசியும் கவலையும் வந்து பயமாக இருந்தது. என்ன செய்யலாம் என்று பார்த்துக் கொண்டு வெளியில் வந்து நான் வழக்கமா சாப்பிட்ட கடைக்கு[ப் போனேன். அங்க மழைத் தண்ணி வந்து தேங்கி நிற்க்குது. அந்த அக்காவும் சேட்டும் தண்ணிய வாளி வாளியா மொண்டு கொண்டு இருந்தாங்க.

நான் அந்த அக்காவிடம், “தீதி எனக்கு வேலை ஏதாவது கொடுங்க”ன்னு கேட்டேன்

அவங்க சேட்டைப் பார்த்தாங்க.

சேட்டு, “நீ என்ன வேலை செய்வே?”ன்னு கேட்டாரு

“நீங்க சொல்ற வேலைய செய்வேன் சேட்டு”ன்னு சொன்னேன்

அப்ப இந்த தண்ணீரைச் சுத்தமாக எடுன்னாரு

தீதிகிட்ட ஒரு பழைய பிளேட்ட கேட்டு வாங்கி ஒரு வாய்க்கால் சின்னதாக நோண்டி தண்ணீர் ஓடற மாதிரி பள்ளத்தில் விட்டேன். தேங்கி நின்னதை மட்டும் வாளியில் மொண்டேன்.

சேட் ஸ்டவ பத்த வைச்சு சாயா போட்டு ஒரு கிளாஸ் சாயாவும் தண்ணியும் கொண்டு எதிர்த்தாப்ல இருந்த மரத்தில் ஊத்திட்டு வந்தாரு

மூன்று கிளாசு சாயா ஊத்தினாரு. எனக்கும் தீதிக்கும் கொடுத்துட்டு அவரும் குடிச்சாரு

தீதி, “உனக்கு எப்படி இந்த மாதிரி தண்ணி போவ வைக்க தெரிஞ்சது?”ன்னு கேட்டுச்சு

“எங்க வீட்டுல மழைநாட்களில் தண்ணீ வீட்டு உள்ள வந்துடும் அப்ப அம்மாவும் நானும் இது மாதிரி செய்வோம்”

பிறகு என்னைப் பத்தி கேட்டதும் அதுவரை நடந்தத எல்லாம் மறைக்காமல் சொன்னேன். வேலை வேணும் என்று கேட்டவுடன் தீதி, “நீ இங்கேயே இரு”ன்னு சொல்லுச்சு

அந்தச் சின்னக்கடையை சுத்தம் பண்ண ஆரம்பித்து டேபிள் துடைத்து பாத்திரம் கழுவி சாயா போட்டு ஆலூ உறிச்சு மசலா பிசைந்து சமோசோ, ஐாங்கிரி, பூரி, சப்பாத்தி சுட்டு எம்மேலேயும் சுட்டுக்கிட்டு எல்லாம் வேலையும் கத்து இரண்டு வருசம் அங்க இருந்தேன். மாசம் 1800 ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுத்தாரு என்னை தீதியும் சேட்டும் நல்லா பார்த்துக்கிட்டாங்க.

ஆனால் எனக்குதான் புடிக்கல டீ குடிச்சுட்டு வரவங்க நூறு ரூபாய் கொடுப்பாங்க. நான் அத மாத்த ஒவ்வொரு கடையா போவனும் சில்லறை கேட்டா கெட்ட வார்த்தையில் திட்டுவாங்க சமயத்தில் அடிப்பாங்க. ஏதாவது வேற வேலை கிடைச்சா மாறனும் நிறைய சம்பாதிக்கனுமின்னு இருந்தேன்.

அப்பத்தான் பாட்டியலா அவுட்டர்ல ஒரு பிளாஸ்டிக் கம்பேனிக்கு ஆள் தேவை நாலாயிரம் ரூபாய் சம்பளம்ன்னும் கம்பேனி சாப்பிட, தங்க இடம் குடுக்குறத, சினிமாவுக்கு போன இடத்தில தெரிஞ்சுக்கிட்டேன். தீதிகிட்டயும் சேட்டுகிட்டயும் ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வரேன்னு சொன்னேன். அவங்க ஒத்துக்கிட்டு போய் வர டிக்கெட்டுக்கு பணமும் கொடுத்தாங்க.

அவங்ககிட்ட சொல்லிட்டு கிளம்பி ரயில்வே ஸ்டேஷன் உள்ளே நுழைந்து எதிர்ப்புறம் நடந்தேன். விசாரித்து அந்த கம்பேனிக்கு போக பொழுதாயிடுச்சு. கேட் அருகே போனபோது கூர்க்கா உள்ளே என்னை விடவில்லை. அப்படியே சோர்ந்து ஓரமாக உட்கார்ந்துட்டேன். கொஞ்ச நேரத்துக்கு பிறகு அந்த கூர்க்கா, “என்ன, நீ இன்னும் போவலையா?”ன்னு கேட்டாரு

“இல்லை, நான் வேலைல சேரணும் எனக்கு இங்கு யாரையும் தெரியாது நீங்க கொஞ்சம் உதவுங்க ஜி,”ன்னு கேட்டேன்.

உனக்கு என்ன வேலை தெரியும்னு கேட்டாரு எனக்கு கம்பேனி வேல எதுவும் தெரியாது ஏதாவது லேபர் வேலை கிடைச்சா செய்யலாம்னு வந்தேன், என்று சொன்னேன் அப்புறம் அவரு என்ன உள்ள இட்டுப் போயி தேஐ் பகதூர்கிங்கற நேப்பாளிட்ட விட்டாரு. அந்த நேப்பாளி இவரு தம்பிதான் இவரு பேரு ராம்பகதூர். அப்புறம் எனக்கு நல்ல தோஸ்த்தாயிட்டாரு.

நான் நினைச்ச மாதிரி வேலை இல்ல. என்னை தேஜ் பகதூர் பிளாஷ்டிக் பழசு எல்லாம் வகை பார்த்து தனித்தனியா பிரிக்கற வேலையில விட்டாரு. எனக்கு சரியாகச் செய்ய வரல. தினம் திட்டுதான். என்னடாது இப்படி வந்து மாட்டிப்புட்டமேன்னு நினைச்சப்ப தீதி ஞாபகம் வந்துடுச்சி. ஒரு மாசம் முடிஞ்சதும் ஒரு ஞாயிற்றுக்கிழமை கிளம்பி தீதியையும் சேட்டையும் பார்க்க போனேன்.

அங்கு ஒரு கடை இருந்ததுக்கு அடையாளம் சிறிதும் இல்ல. சுத்தமாக மண் எல்லாம் நிரவி புது வேலி வச்சி ரயில்வே சிம்பல் போட்ட போர்டு இருக்கு. பக்கத்தில் இருந்த கடைகளும் இல்ல. ரோட்டுக்கு மறுபுறம் இருந்த கடைகள் அப்படியே இருந்துச்சி. நான் அந்தப் பக்கம் போயி எனக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் விசாரிச்சேன். யாருக்கும் சரியா தெரியல. ஒரு பான்கடைல இருந்த பெரியவர் மட்டும், இங்கே இரண்டு நாள் தங்கியிருந்து கடை வைக்கப் பார்த்தாங்க தம்பி, போலிஸ் ரெய்டு வந்து எல்லாரையும் அடிக்க ஆரம்பித்ததும் போயிட்டாங்க, என்றார்.

தீதியிடம் சொல்லாமல் போனோமே என்று மனம் வேதனைப்பட்டு ரயில்வே ஸ்டேஷன் உள்ளே சென்று முன்பு அலைந்த இடத்தில் சுற்றிப் பார்த்தேன் ரயில் பாதையை அகலப்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருந்ததால் ரயில்கள் மிக மெதுவாக வருவதும் போவதுமாக இருந்தது. எப்போதும் தோன்றும், அம்மாவைப் பார்க்க வேண்டும், என்ற எண்ணம் அதிகமாகி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்க்கலாமா என்று முடிவு செய்ய முடியாமல் மிகவும் கவலை வந்து நேராக வழக்கமாக பார்க்கும் சினிமா தியேட்டர் சென்று படம் பார்த்துவிட்டு மாலை பிளாஷ்டிக் கம்பேனி போய் விட்டேன்.

என் பையை யாரோ பிரித்து ஏதோ தேடி இருக்கிறார்கள் ஆனால் இரண்டு வருடமாக நான் வாங்கிய சம்பளம் பணம் என் கால்சட்டையிலேயே வைத்து இருப்பேன். அது பத்திரமாக இருந்தது. அம்மாவை பார்க்க வேண்டும் என்ற நினைப்பை மாற்ற முடியவில்லை. அடுத்த வாரமே ராம்பகதூர் மூலமாக அவன் தம்பியிடம் இரண்டு வாரத்தில் வந்து விடுவதாகக் கூறிவிட்டு அலகாபாத் திரும்பினேன்.

ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வீடு செல்வதற்குள் ஒரு பக்கம் ஆர்வமும் அம்மாவைச் சந்திக்க பயமாகவும் இருந்தது. தூரத்தில் இருந்தே பார்த்து வரும்போது வீடு அருகே அம்மா நின்று ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இந்த இரண்டு வருடத்தில் மெலிந்து இருந்தார். நான் மெதுவாகத் தயங்கிச் சென்றேன். அந்தப் பெண் என் தங்கைதான். எனக்குதான் அவளை அடையாளம் தெரியவில்லை.

அவள் என்னைப் பார்த்ததும் கண்டுபிடித்து, அம்மா சோட்டாபாய்மா, என்று கூவி.என் கையைப் பிடித்து விட்டாள். அம்மாவுக்கு என்னைக் கண்டதும் ஆனந்த கண்ணீர். அவரது உணர்ச்சியும் முகபாவமும் எனக்கு புரிந்து விட்டது. எங்களை தவிக்க விட்டு சென்றாயே, என்று கேட்பது போல் இருந்தது.

அம்மா என்னைப் பார்த்து, ரொட்டிக்குதானே வீட்டை விட்டு ஓடினாய்?” என்று கேட்டார்.

அது உண்மைதான். ஆனால் பசிக்கு ஓடிய எனக்கு ஓட்டலில் வேலை செய்தபோது பசியே எடுத்ததில்லை. அதனால் எனக்கு பேச ஒன்றுமில்லை. பிறகு நடந்தது எல்லாம் ஒரு கனவு போல இருக்கிறது. சாப்பாட்டுக்குத் தேவையான மளிகை சாமான்கள் ஒரு மாதத்திற்கு வாங்கி வைத்து விட்டு அம்மா பேரில் ஒரு அக்கவுண்ட் பேங்கில் ஓப்பன் பண்ணி கையில் இருந்த பணத்தை போட்டுக் கொடுத்தேன்.

அக்கம்பக்கத்தில் வீட்டு வேலை செய்த தங்கைகளை தையல் பழக சேர்த்து விட்டேன். அவர்களுக்கு அது அதிர்ச்சி. ஆனால் நன்றாக கற்றுக் கொண்டால் வீட்டிலேயே தைக்கலாம், வேலைக்குப் போக வேண்டாம், என்றதும் அவர்களுக்கு மகிழ்ச்சி வந்து விட்டது, தம்பி பள்ளிக்குச் சென்று கொண்டு இருந்தான்

நீங்கள் நம்பமாட்டீர்கள், என் பதினாறு வயதில் நான் ஐம்பதாயிரம் சேர்த்து இருந்தேன். அம்மாவுக்கு நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சி. ஒரு போன் வாங்கிக் குடுத்து விட்டு வேலைக்கு விடைபெற்று திரும்பினேன்.

ஓட்டலுக்கு வரும் பலதரப்பட்ட மனிதர்களைப் பார்த்தும் அக்கம் பக்கம் நடப்பவற்றை கவனித்தும் ஒரு நாய் போல் இருந்தேன். காவலில் நன்றியோடும் அடிக்க வருபவரிடம் வாலை மடக்கி பம்மியும் தேவைப்படும்போது கோவத்தில் குறைக்கவும் பழகி இருந்தேன்.

வீட்டுக்குச் சென்று வந்த பிறகு எனக்கு வாழ்க்கை மேல் சிறிது நம்பிக்கை வந்திருந்தது.

பிளாஸ்டிக் கம்பேனிக்கு திரும்பியதும் தேஐ் பகதூர் முன்பணம் வாங்கிக் கொண்டு பத்திரத்தில் கையெழுத்து போட்டால் தன்னிடம் வேலை பார்க்கலாம், இல்லை என்றால் வேறு சேட்டு பார்த்துக்கொள், என்றார். எனக்கு முன் பணம் வேண்டாம், மாதம் மாதம் கொடுத்தால் போதும், என்றதற்கு ஒத்துக் கொள்ளவில்லை

நான் உள்ளுரிலிருந்து வேலைக்கு வருபவர்களுடன் சேர்ந்து கொண்டு தினக்கூலிக்கு வேலை செய்தேன்.

தேஜ்பகதூர் என் மேல் வஞ்சம் கொண்டு பார்க்கும்போது எல்லாம் தலையில் தட்டுவதும் திட்டுவதுமாக இருந்தான். நான் அவனைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட பதுங்கி வேலை செய்தேன். ஒரு நாள் என்னை, நீ ஒரு அலி, என்று சொல்லி அவன் திட்டிப் பேசும்போது என்னுடன் வேலை பார்ப்பவர்கள் பார்த்து வீட்டனர். பைய்யா என்று ஆரம்பித்து, கண்ணீரோடு அவன் தினம் வம்பு செய்வதைச் சொன்னதும் அவர்கள் அவனை அடிக்கப் போய் பெரிய பிரச்சினையாகிவிட்டது.

அதற்குப் பிறகு அவன் என் பக்கம் வருவது இல்லை. பிறகுதான் அவனது உண்மை சொருபம் தெரிந்தது. முன்பணம் கொடுத்து ஆட்களை கொத்தடிமை போல் வைத்திருக்கிறான் என்றும் நேபாளி பெண்களை வேலைக்கு கொண்டு வந்து பாலியல் தொழில் செய்வதாகவும் தெரிந்து கொண்டேன்.

அவன் இருக்கும் திசைக்கே போகாமல் அந்த கம்பேனியிலேயே பிளாஷ்டிக் தரம் பிரிக்க ஆரம்பித்து மோல்டு செய்வது, பேக்கிங், பைப் பிட்டிங் செய்து பிரசர் சோதனை செய்வது என்று சிறிது சிறிதாக ஒவ்வொரு வேலையும் கற்று பிளம்பிங் பார்ட்ஸ் செய்யும் மெஷின் ஆப்பரேட்டிங் கத்துக்கொண்டேன். சரியாக ஓரு வருடத்திற்குப் பிறகு எனது பதினெட்டு வயதில் ஆப்ரேட்டர் ஆனேன். சம்பளம் இரண்டு மடங்கு ஆகியது. நாய் மாதிரி எப்போதும் வேலை செய்வதால் என்னை நிறைய பேருக்குப் பிடிக்கவில்லை

ஓட்டலில் வேலை செய்யும்போது காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை செய்து பழக்கம். அதனால் எநத வேலை கொடுத்தாலும் நேரம் பார்க்காமல் செய்தேன். அதற்கு மேற்கொண்டு ஒரு தொகை பணம் கிடைக்கும்.

அங்கேயே இருந்து நன்றாக சம்பாதித்து இரண்டு தங்கைகள் திருமணமும் என் திருமணமும் நடத்தினேன். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. சரியாக இரண்டு வருடம் ஆகிறது, நான் ஊருக்குச் சென்றபோது நண்பன், “என்னையும் வேலைக்குச் சேர்த்து விடு,” என்று கேட்டு வந்தான் அதில் உள்ள கஷ்டங்களைச் சொன்னேன். அவன் புரிந்து கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து கூடவே நின்றதால் அழைத்து வந்து சேர்த்து விட்டேன்.

ஒரு வாரம் ஒழுங்காக வேலை பார்த்தான். வாரச் சம்பளம் வாங்கியவுடன் வேலைக்கு வரவில்லை. நன்றாக குடித்துவிட்டு உடம்பு வலி நாளைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு காசு கையிலிருக்கும் வரை வேலை செய்ய வில்லை. அது மட்டும் இல்லாமல் தேஜ்பகதூரின் ஆட்களோடு அவன் பழகுவதைப் பார்த்துவிட்டு கோபம் வந்து அங்கெல்லாம் போகக்கூடாது என்று கண்டித்து என் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பிறகு வேலை செய்ய ஆரம்பித்து அந்த வார சம்பளம் வாங்கியவுடன் நண்பனை கையோடு அழைத்துச் சென்று டிக்கெட் எடுத்துக் கொடுத்து, நீ பத்திரமாக ஊர் போய்ச் சேர், எனக்கு நிறைய கடன் இருக்கு இந்த மாதிரி குடிப்பது என்றால் ஊரிலேயே வேலை பார்த்து உன் மனம் போல் செய், என்று சொல்லி வந்து விட்டேன்.

ஆனால் அவன் போகவில்லை. இரவே திரும்ப வந்து தேஜ்பகதூரிடம் இருந்த ரூபா என்ற பெண்ணை இரவோடு இரவாக கூட்டிக்கொண்டு சென்று விட்டான்.அவர்கள் குழுவாகச் சேர்ந்து என்னை மிரட்டி அவனது அட்ரஸ் மற்றும் போன் நம்பரை கேட்டனர்.

நேற்றே அவனை ஊருக்கு அனுப்பிவிட்டுதான் இரவு திரும்பினேன், அவன் திரும்பிவர வாய்ப்பு இல்லை நீங்கள் சொல்வதை நம்ப முடியாது, என்று சொன்னவுடன் தேஜ்பகதூரும் அவனது ஆட்களும் என்னை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்

காலை நேரம் ஆதலால் வேலைக்கு வந்த ஆட்கள் தடுத்து விலக்கி விட்டனர். அதற்குள் என் முகமெல்லாம் குத்தும் அடியும் வாங்கியதில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருந்தது. கூட்டம் கூடியதில் தேஐுக்கு வேண்டிய ஆட்களே அதிகம். எல்லோரும் கூடி தேஜூவின் பெண்ணைக் கொண்டு வந்து விட்டு நஷ்ட ஈடும் கொடுத்தால் அங்கு வேலை செய்யலாம், இல்லை என்றால் நடப்பவற்றுக்கு நாங்கள் பொருப்பில்லை, என்றனர்.

பெண் விஷயமென்பதால் யாரும் உதவ முன்வரவில்லை. தேஜ் என்னிடம் உனக்கு ஒரு வாரம் அவகாசம் தருகிறேன், அதற்குள் வந்து விடவேண்டும் இல்லை என்றால் நான் உன்னை விடமாட்டேன், என்றான்.

அதற்குள் நிர்வாகத்துக்கு தெரிந்து வந்து விட்டார்கள். ஒரு மணி நேரத்தில் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்றனர். பெண்ணைக கொண்டு ஒப்புவித்தால் உனக்குச் சேர வேண்டிய பணம் கிடைக்கும், இல்லை என்றால் அந்தப் பணம் முழுவதும் அந்த பெண் குடும்பத்தினருக்கு கொடுத்து விடுவோம், என்றனர்.

தேஜ்பகதூருக்கு மேல்மட்டம் அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அவன் மூலமாக நேபாளி் குடும்பங்கள் கொத்தடிமையாக வேலை செய்து வந்ததால் என் பேச்சைக் கேட்க யாரும் இல்லை. என்னிடம் பிரியம் காட்டிய இரண்டொருவர், தாமதிக்காமல் போய்ப் பார்த்து அழைத்து வா, என்றனர்.

அதுநாள் வரை வேலையைத் தவிர வேறு எதிலும் ஈடுபடாமல் சேணம் கட்டிய குதிரை போல் இருந்த எனக்கு நண்பனின் செயல் மிக அதிர்ச்சியளித்து மனம் நம்ப மறுத்தது.

அவன் அப்படி செய்திருக்கக்கூடாது. நாம் அவனை அழைத்து வந்து நம்ப வைப்போம் என்று கிளம்பினேன். ரயிலில் வரும்போது வெகு நாட்களுக்குப் பிறகு பசி தெரிந்தது. கதவு ஓரம் நின்று வெளிப்புறம் பார்த்துக் கொண்டு வந்தேன். எதிர்காற்று முகத்தில் அடித்தபோது முகமெல்லாம் அடி வாங்கியதில் வலி தெரிந்தது. நான் யாரையும் அடித்தது இல்லை. காலமெல்லாம் அடி வாங்கவே பிறந்து இருக்கிறோமோ என்று வருத்தத்தில் அப்படியே எதிர்ப்புறம் சென்ற ரயிலில் ஒரு நொடி பாய்ந்து விடலாமா, என்று தோன்றியது.

திரும்பி உள்ளே சென்று கண்ணை மூடி அமர்ந்து விட்டேன். அந்தப் பெட்டி முழுவதும் பீகாரிகள் ஏறியிருந்தனர் எல்லோரும் கட்டிடத் தொழிலாளர்கள். குஜராத்தில் வேலை செய்வதற்கு வந்து கொண்டிருந்தனர். நீரைத் தேடும் வேர் போல அவர்கள் செல்லும் இடம் பற்றியும் வேலை பற்றியும் தெரிந்து கொண்டேன். மனம் நிலையில்லாமல் தவித்தது நண்பனைப் பார்த்தால் நன்றாக திட்டி, அடித்தாலும் ஆத்திரம் தீராத ஆவேசம் உள்ளே கனன்று கொண்டு இருந்தது.

மறுநாள் மாலை அலகாபாத் இறங்கி நேராக நண்பன் வீட்டிற்கு சென்றேன். வாசலில் அவன் அம்மா அப்பா அமர்ந்திருந்தனர் என்னை, வா பேட்டா, என்று அழைத்து அமர வைத்தனர்.

பேட்டி, பேட்டி…, என்று நண்பனின் அம்மா அழைத்ததும் உள்ளே இருந்து நல்ல மங்களகரமான முகத்துடன் வெளியில் வந்த பெண் முகம் என்னை கண்டதும் வாடி விட்டது. நான் புரிந்து கொண்டேன்

“சஞ்சய், இங்கே பாரு எவ்வளவு அழகாக இருக்கிறாள். இது போல் மருமகள் எனக்கு கிடைக்க நான் எவ்வளவு தவம் பண்ணியிருக்க வேண்டும்! எல்லா வேலையும் செய்கிறாள். என் மகன் அதிர்ஷ்டக்\காரன்,” என்றார் அம்மா.

“பேட்டி, அண்ணனிடம் ஆசி வாங்கிக் கொள்,” என்று சொன்னதும், “சதா சுகி ரோ” என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

சதிக் ரீ

தி வேல்முருகன்

அந்த மிகப்பெரிய பள்ளத்தில் எச்சரிக்கையை உணர்த்தக் கட்டியிருந்த கொடி தோரணம் போல் காற்றில்  ஆடி படபடத்தது.எனக்கு சமிபத்தில் வாசித்த வடகொரியா பற்றிய செய்தியும் என் நன்பன் ரீயும் ஞாபகம் வந்தனர்.

அன்று கொரியன் ரீ முகத்தில் அன்று சிறிதும் களை இல்லை. குவைத்தின் மே மாத 50 டிகிரி வெயில் அவனது சிவந்த முகத்தை குங்குமச் சிவப்பாக்கி அதன் மேல் புழுதியைப் பூசியிருந்தது.

உலர்ந்து போயிருந்த வாயைத் திறந்து, சதிக் குவைத்தி ஆப்ரேட்டர்  எல்லோருடைய கேட் பாசையும் வாங்கிக கொண்டு, வேலையை நிறுத்திச் சென்று விட்டான், என்ன செய்வது என்று தெரியவில்லை, என்னை போன் செய்து  கூப்பிடுகிறார்கள், நீ கொஞ்சம் வர முடியுமா, நாம் போய்  பார்த்து விட்டு வரலாம், இன்று வேலை நடக்கவில்லை என்றால் மதியம் திட்டமிட்டபடி  காங்கீரிட் போடமுடியாது, என்று அவன் சொன்னதும் எனக்கு காச்மூச் என்று தேவையில்லாமல் கத்தும் கிளையன்ட் குவைத்தியின் ஞாபகம்தான் வந்தது

“ஏன் இப்பதானே அங்கிருந்து வந்தோம், என்ன  பிரச்சினையாம் கொஞ்சம் கேளு, நான்
மேனேஐரிடம் சொல்லிட்டு வரேன்,” என்றபோது எனக்கும் சூப்பர்வைசரிடமிருந்து போன் வந்தது.

“கொரியன்கள் இருவர் வேலை  செய்யும்போது சண்டை போட்டுக் கொண்டதால் கேட்பாஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு வேலையை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் பர்மிட்டில்  கையெழுத்து போட்டிருக்கும் உங்களை உடனே வரச் சொல்றான், சீக்கிரம் வாங்க,” என்றதும் எனக்கும் கவலை வந்து விட்டது

கொரியனை ஏற்றிக்கொண்டு வண்டியை எடுத்தேன்.

காலை மணி 6:10க்கு  ஸ்டார்ட் செய்த வண்டி. சாஐியை கொண்டு வந்து யார்டில் விட்டு, வேறு வண்டியில் சென்று வேலை செய்ய பர்மிட் எடுக்க GC 10 க்குச் போக சொல்லி விட்டு நான் சென்று GC 5 க்கு வேலைக்கு பர்மிட் எடுத்து சூப்பர்வைசரிடம் கொடுத்து வேலையை சொல்லி விட்டு திரும்ப சைட்டாபிஸ் யார்டு அப்போதுதான் வந்திருந்தேன்.

திரும்ப அவ்வளவு தூரம் போக வேண்டும். என்னதான் வண்டியில் சென்றாலும் வெட்டியாக அலைவதற்கு மனம் சோர்ந்தது அதுவும் மதியம் மீட்டிங் வேறு இருக்கிறது.
கிளையண்ட் ஒரு வெறிநாய் மாதிரி. அவன் முகத்தைக் கொண்டு ஒரு தீர்மானத்துக்கும் வரமுடியாது

வகை தொகையில்லாமல் பொறியில் மாட்டியது போல் இருந்தது இந்த கம்பேனிக்கு வந்ததிலிருந்து ஒன்றும் சரியில்லை. வெறும் வாய்ஐாலத்தை நம்பி இன்டர்வியூ சென்ற அன்று    பாவப்பட்ட உன்னி சொன்னான், “அண்ணாச்சி, என்கிட்ட எந்த டிகிரியும் டிப்ளாமாவும் இல்ல. எல்லா வேலையும் மனசு கொண்டு படிச்சதாக்கும் நீங்க ஒத்துக்கிட்டு வாங்க நான் கூட இருக்கேன். பிடிக்கலனா வேற வேல தேடலாம் தெய்வம் ஒன்னு இருக்குல்ல,” என்று.

தெய்வம் இருக்குதான் ஆனால் அது இல்லாதவர்களைத்தான் அதிகம் சோதிக்கிறது.. மேனேஐர் என்ன நினைத்து இந்த கம்பெனிக்கு வந்தாரோ, அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் தந்திரமாக வேலை வாங்கி விடுவார். அவர், “ என்ன செய்யறிங்க?, சும்மா கில்லி மாதிரி இருக்கனும் அந்த வேலை என்ன ஆச்சு? நான் சொன்ன வேலைய பாத்திங்களா? இப்ப இந்த வேலையும் அதோடு சேர்ந்து முடிங்க, ம்ம்… போங்க போங்க…” என்று சொல்லிக்கொண்டே போவதைக் கேட்கும் நபர் மகுடியை பார்த்தாடும் பாம்பு போல் சொல்ல வந்ததையும் கேட்க வந்ததையும் மறந்து உடன் கிளம்பி விடுவார்..

ஆனால் அவரது செயல்பாடுகள் மேலும் மேலும் அவருக்கு துன்பத்தையே அளித்தன. எங்களிடம் சொன்னது எதையும் அவரால் செய்ய  இயலவில்லை. கம்பெனிக்கு புதிய ஆட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஆகி மொத்த சிவில் கட்டுமான வேலைகளையும் வெளி கம்பெனி ஆட்களை கொண்டுதான் செய்ய வேண்டும் என்று முடிவாகி விட்டது

அப்படி வந்தவர்கள்தான் வடகொரியர்களும் பலுசிஸ்தான்காரர்களும். சாஐிக்கு இந்தி சரளமாக வரும். அவன் நல்ல உயரமும் கூட அதனால் அவனிடம் பலுசிஸ்தானிகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன். .பிளான்ட் ஏரியாவில் கையால்தான் மண்ணை வெட்டி அள்ள வேண்டும். சவுல் கொண்டு பலுசிஸ்தானிகள் அள்ளி எரியும் வேகம் இயந்திரங்களுக்கு இணையாக இருக்கும். எனக்கு அரபி மற்றும் இந்தி ஒரளவு தெரியும் அதை வைத்துக் கொண்டு மேனேஜர் சொல்லும் வேலைக்கேற்ப்ப கில்லியாட்டம் ஆடிக் கொண்டிருந்தேன்..

சிந்தனை பலவிதமாக ஒடி கொண்டிருப்பதைக் கலைத்து, ரீயின் முகத்தைப் பார்த்தேன். அவரது 50 வயதுக்குரிய தோற்றம் கவலையில் பொலிவிழந்து வாடியிருந்தது. ஐந்தரை அடி உயரமும் விசாலமான  அறிவின் வெளிப்பாடான நெற்றியும் முடி அடர்ந்த புருவமும் அதன் இறக்கத்தில் நாலு கோடுகளும் மேலும் தட்டையான அந்த முகத்தில் ஒரு கோடு போட்டாற்போன்ற வாயும் அதற்க்கேற்ப மூக்கும் அமைந்து வயது தெரியா உழைப்பினால் இளமையாகத் தெரிந்தார்.

வாரத்தில் முதல் நாள் சனிக்கிழமை மாத்திரம் பளிச்சென்று வருவார்கள் பிறகு அப்படியே வேர்வையோடு குளிக்காமல்  வருவார்கள் சாஐியும் டிரைவரும் இவர்களை அருகே அமர விடமாட்டார்கள் நான் அப்படி எதுவும் செய்வது இல்லை அவர்களுக்கு என்ன
தண்ணீர் கஷ்டமோ என்று விட்டுவிடுவேன். அதுவும் ரீ அருகே அமரும்போது ஊற வைத்த ரேஷன் அரிசி வாடைதான் வரும்.  பழகிவிட்டது. வண்டி முழுவதும் அந்த ஊறல் வாடைதான்

வண்டி மெயின் ரோடிலிருந்து இறங்கி GC 5வை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது
ரீயிடமிருந்து, “சதிக்”, என்று சத்தம்

“என்ன?” என்றேன்.

வலதுபுறம் ரோட்டோரம் இருந்த எண்ணெய்க் கிணற்றை நோக்கி கை காட்டினார்.

அத்திசையை நோக்கினேன் கருநீல கலரில், முழுவதும் கவராலால் மறைக்கப்பட்ட, தாடி
வைத்த உருவம். தலையில் சிவப்பு கலரில்  ஹெல்மெட் அணிந்திருந்தவர், இரண்டு கைகளையும் ஆட்டி எங்களைக் கூப்பிட்டார்.

சாலையை திரும்பிப் பார்த்துவிட்டு வண்டியை  எண்ணெய் கிணற்றை நோக்கித் திருப்பி சற்று  பாதுகாப்பான தூரத்திலேயே நிறுத்திவிட்டு  ஹெல்மெட்டும் கையுறையும் அணிந்து கொண்டு அவரிடம் சென்றோம்.

எங்களை நோக்கி சைகையால்  எண்ணெய் கிணற்றில் இருந்து வந்த ஆயில் லைனின் கன்ட்ரோல் வால்வு வீலைச் சுற்றி மூடச் சொன்னார். கிராஸ் மறை ஏறியிருந்ததால் அதைச் செய்வது எளிதாக இல்லை. ரீ சீராக முன்னும் பின்னுமாக ஆட்டிச் சுற்றியபோது எளிதாக வந்து விட்டது.

ரீ என்னிடம் ஆயில் கிணற்றைக் காட்டி, “அது என்ன? அந்த லைன் எங்கு செல்கிறது?” என்று கேட்டபோது நான் ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ரீயின் அந்தச் சின்னக் கண்களைப் பார்த்ததும் என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

“ரீ, இது ஆயில் கிணறு நாம் செல்கிறோம் அல்லவா, அந்த இடம் குவைத்தின் மிகச்
செறிவான எண்ணெய் வளப்பகுதி ஒவ்வொரு 200 மீட்டருக்கும் இது போல் கிணறுகள் இருக்கு பாரு. நீ இப்போது திருகினாயே அது கிணற்றிலிருந்து வரும் எண்ணெய் லைன்தான்.  இது நேராக GC க்கு போகும். அங்கு குருடாயில், கேஸ் மற்றும் தண்ணீர் தனியாக பிரித்து டேங்க் பார்ம் அனுப்பி விடுவார்கள்.. அங்கிருந்து ஏற்றுமதியாகும்”

‘ம்ம்… நிறைய பணம்,” என்றார் ரீ. பிறகு, “சதிக் நீ எப்படியாவது பேசி கேட் பாஸை வாங்கி விடு,” என்றார்.

நான் மவுனமாக தலையாட்டினேன்.

நேற்றே அந்த பவுன்டேஷன் காங்கீரிட் முடிய வேண்டியது. மொத்தம் மூன்று பவுன்டேஷன்கள் ஒன்று ஒன்றாக மாற்றிபம்ப் வழியாக காங்கீரிட் போட்டுக் கொண்டு இருந்தோம் ரீயின் ஆட்கள்தான் வேலை செய்தனர். ரீ மேற்பார்வையிட்டு வேலை சொல்லி கொண்டு இருந்தார். நான் கிளையண்டுடன் பேசிக் கொண்டு இருந்தேன்

காங்கீரிட் முடிந்து கடைசியில் இருந்த சின்ன ஐாக்கி பம்ப் பவுன்டேஷனில் காங்கீரிட் இட மேல் இருந்த யானையின் துதிக்கைப்போல் தொங்கிய பூம்பிளேசர் பைப்பை இருவர் தள்ளி கொண்டு  வந்திருக்கின்றனர். அப்படி தள்ளும்போது முட்டுச்சட்டங்களில் காங்கீரிட் தொப் தொப் என்று விழுந்ததில் சின்னதாக ஒரு அசைவு. வேறோன்றுமில்லை, காங்கீரிட் முழுவதும் போட்டுவிட்டு வைப்ரெட்டர் போட்டு தளர்த்தி காங்கீரிட்டை இருவரும் நிரவி ஒருவர் மாற்றி ஒருவராக கீழே இறங்கியதும் ஒரு பெருமூச்சு விடுவது போல் ஒரு சத்தம் அவ்வளவுதான் பனியனை மேல்  நோக்கி கழட்டுவது போல் பலகைகள் பெட்டி போல் மேலே தூக்கிக்கொண்டன.

காங்கீரிட் நாலாபுறமும் இளகி தரையில் கொட்டிய எண்ணெய் போல் ஒடுகிறது
நாங்கள் பார்த்துக் கொண்டு இருந்தபோதே நடந்து விட்டது அதுவரை சிரித்துப் பேசிக் கொண்டு இருந்த கிளையன்ட் அவரது நிஐ ஒநாய் முகத்தை காட்டிச் சென்றார்.. நாங்கள் மவுனமாக ஆடுகள் போல் நின்றோம்.

இந்த பிரச்சனைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ரீ வந்த நாள் அப்போது  ஞாபகம் வந்தது ரீதான் முதலில் பஸ்ஸிலிருந்து இறங்கினார் அவர்கள் மேனேஜர் வந்து அறிமுகப்படு்த்தும்போது, இவர்களை வைத்து எப்படி வேலை செய்யப் போகிறோம், என்று  கவலையாக இருந்தது. ஆனால் ரீ அதற்கு  வாய்ப்பே தரவில்லை. அவரது குழுவினர் அனைவருமே தேர்ந்த வேலைக்காரர்கள் வேலை முடிந்தால் அளவுகள் மிகத் துல்லியமாக இருக்கும் கிளையண்டிடம் அவர்களால் பிரச்சினை இருந்தது இல்லை. கொரியர்களைப் பற்றி. எல்லோரிடமும் பெருமையடித்து கொண்டிருந்தேன்.

முதல் முறையாக பங்கம் வந்து விட்டது.  வருத்தத்தில் இருந்த என்னைத் தட்டி, என்ன,
என்று கேட்பது போல் சைகை செய்தார். ஒன்றும் இல்லை என்று தலையாட்டி விட்டு,
வெளியேறிய காங்கீரிட் எவ்வளவு இருக்கும் என டிராயிங் பார்த்து கால்குலேட்டரில் போட்டுக் கொண்டி.ருந்தேன். என் எதிரே வந்த ரீ உற்றுப் பார்த்துவிட்டு காற்றிலே விரலால் கம்போசர் போல் எழுதி விட்டு கையில குறிப்பது தெரிந்தது.  எனக்கு கால்கேட்டரில் விடை 3.16 என்று இருந்தது. ரீ தன் கையைக் காட்டினார் அதில் 3.16 என்று இருந்தது.

“ரீ, எப்படி எப்படி எனக்கும் சொல்லிக்கொடு”, என்றதும், ரீ அவர்கள் மொழியில் ஏதோ சொன்னார்  அவர் குழுவினர் அனைவரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தமாக இருந்தது

எல்லோரும் சாப்பிடக் கலைந்தனர். பெரும்பாலும் அரிசி சாதம்தான். தண்ணீரோடு சேர்த்து தர்மோக்கூலரில் வைத்திருந்தனர். வெஞ்சனம் போல் தொட்டுக் கொள்ள அவித்த முட்டை, பச்சை வெங்காயம் மற்றும் தக்காளி அவ்வளவுதான் .எல்லோரும் ஒன்றாகதான் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

நான் வருத்தத்தோடு இருப்பதைப் பார்த்த ரீ, அதிலிருந்து ஒரு முட்டையை உரித்துக் கழுவி  கொண்டு வந்து என்னை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.  நான், “வேண்டாம் நீ அந்தக் கணக்கைச் சொல்லிக் கொடு அப்பத்தான் சாப்பிடுவேன்,” என்றதும் ரீ, வருத்தத்துடன் கூறினார்,

“எங்கள் மொழியில் உள்ள இந்த கணக்கு போடும் முறையைப் உன்னால் கற்றுக் கொள்ள முடியாது தயவு செய்து புரிந்து கொள். மேலும் நான் உன்னிடம் அதிகம் பேச முடியாது ஏன் என்றால் நான்  கண்காணிக்கும் இவர்கள் என்னையும் கண்காணிக்கின்றனர் .நாங்கள் ராணுவ  பயிற்சி முடித்தவர்கள். ஓரளவு எல்லா வேலையும் கற்றுள்ளோம் என்னை தயவு செய்து வேறு எதுவும் கேட்காதே.. நீ என் சதிக் என்றால் இதைச் சாப்பிடவேண்டும்,”

என்று முட்டையை வைத்து விட்டுச் சென்று விட்டார்.

நான் திரும்பிப் பார்த்தேன். ரீ அவர்களிடம் ஏதோ சொல்லுகிறார் அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கின்றனர். நான் முட்டையை அவர்கள் கண் முன்னே தின்றேன்.

வண்டி Gc 5ஐ  நெருங்கியது. ஓரங்கட்டி நிறுத்திவிட்டு ஹெல்மெட் அணிந்து வேலையாட்களைப் பார்க்கச் சென்றோம். நல்ல கடுமையான வெயில் உக்கிரமாக அடித்துக்கொண்டு  இருந்தது ரோட்டில் கானல் தெரிந்தது காற்று சிறிதுகூட இல்லை.. அதற்குள்ளேயே வேர்வை தலையிலும் முதுகிலும் தோன்ற ஆரம்பித்து விட்டது  அங்கிருந்த ஸ்டோரேஐ் டேங்க் ஓரம் அருநிழலில் கால்நீட்டி அமர்ந்து ஆட்கள் ரீயைப் பார்த்ததும் எழுந்து கொண்டனர்.தப்பு பண்ணிய இருவர் மட்டும் கையைக் கொண்டு முக்கோணம் போல் கழுத்தை கட்டிக் கொண்டு நின்றனர்.

ரீ அவர்கள் மொழியில் கிட்டத்தட்ட உருமினார். அவர்கள் பயந்து நடுங்குவதைப் பார்த்தால்  என்னவிதமான தண்டனை தருகிறார் என ஊகிக்க முடியவில்லை. இருவரையும் பார்க்க மிக பரிதாபமாக இருந்தது

நான் அப்போது ரீயைப் பார்த்தேன். மிகுந்த வருத்தத்துடன் கோபமாக தெரிந்ததார்  இன்று இந்த வேலையை முடித்துவிட வேண்டும்  மேலும் கிளையண்ட்டுக்கு கேட்ப்பாஸ் பிரச்சினையும் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவலையாக இருந்தது.

சரி நாம் சென்று ஆப்ரேட்டரிடம் விளக்கம் சொல்லி கேட் பாசை வாங்குவோம் இங்கு நின்று ஆவப்போவது ஒன்றுமில்லை என்று கன்ட்ரோல் பில்டிங் உள் நுழைந்தேன். அங்கு நின்றிருந்த எங்களது சூப்பர்வைசரை வெளியே அனுப்பி விட்டு ஆப்ரேட்டர் ரூம் உள் நுழைந்தேன்.

முழுவதும் குளுகுளு வசதி செய்யப்பட்டு ஜில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது

வயதான ஆப்ரேட்டர் ஒரு நொடி என்னைப் பார்த்துவிட்டு திரும்பி எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் சீட்டாட்டத்தை தொடர்ந்தார். அவருக்கு எதிரில் அரைவட்ட டேபிளில் வரிசையாக பதிக்கப்பட்டிருந்த மானிட்டரில் கன்ட்ரோல் புரோகிராம் டிஸ்ப்ளே ஆகிக்கொண்டு இருந்தது. அவர் ஸ்பேடு ஆட்டினுக்கு ஐோடியை தேடிக்கொண்டு இருந்தார். மேலும் இரண்டு இளம் ஆப்ரெட்டரும் சற்று தள்ளியிருந்த  கம்யூட்டரில் எதிர் புறம் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் இருந்த மிகப்பெரிய கண்ணாடி சுவரில் GC 5 மொத்தமும் தெரிந்தது.

நான் செய்த வணக்கத்திற்கு பதிலோ அல்லது நீ யார் என்றோ கூட கேட்கவில்லை.
நான் அமைதியாக அவர் முகத்தைப் பார்த்து க் கொண்டு நின்றேன் நிமிடங்கள் ஒடிக்
கொண்டு இருந்தன.

“சார் அவர்கள் இது போலெல்லாம் எப்போதும்  நடந்து கொண்டதில்லை இதுதான் முதல் தடவை எங்களுக்கு அந்த வேலையை முடித்துக் காங்கீரிட் இடவேண்டும் இல்லை என்றால் எங்களால் கிளையன்டை சமாளிக்க  முடியாது நீங்கள் கொஞ்சம் பெரிய மனது பண்ணி உதவ வேண்டும்,” என்றதற்கு  அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.

சரி நாம் மேலும் கெஞ்ச வேண்டும் என எதிர்பார்க்கிறார், என்று நினைத்து திரும்பவும் சொல்ல தொடங்கியதும், “ஸ்டாப் இட்!”  என்று கத்தினார். அவர்  கண்கள் முழுவதும் ஏளனமும் வெறுப்பும் நிறைந்திருந்தது..டீ கொண்டு வந்த பங்காளதேஷி முகம் கலவரத்தைக் காட்டியது.. இளம் ஆப்ரேட்டர் இருவரும் தலையைத் தூக்கிப் பார்த்து  தொடர்ந்தனர்.

உள்ளுணர்வு. “போய் விடு, போ” என்றது. கேட்காத நான் திரும்பவும், “சார்…” என்றேன்.

“கெட் அவுட்!”

“சார்…”

“தர முடியாது நீ போய் உன் கிளையண்ட்டை அழைத்து வா,” என்று என்னைத் தள்ளிக்கொண்டு ரூமுக்கு வெளியில் விட்டு கதவை அறைந்து சாத்தினார். படீர் சத்தத்துடன் கதவு மூடிக்கொண்டது என் முகத்தில் அடித்ததுப்போல் இருந்தது. அதிச்சியாகி இந்த சின்ன பிரச்சினையை இவ்வளவு பெரிதாக ஆக்குறானே,.
கிளையண்ட் குவைத்தி இப்போது எங்கே இருக்கிறானோ சும்மாவே அவன் வெறிநாய் இப்போது என்ன செய்வது தெரியவில்லையே, என்று திரும்பி வெளியில் வந்தேன்.

ரீயும் ஆட்களும் நின்று கொண்டிருந்தனர்.  கேட் பாஸ் கிடைக்கவில்லை என்று உதட்டைப் பிதுக்கியதும் எல்லாருடைய முகமும் வாடியது. .சாப்பாட்டு நேரம் தாண்டிக்
கொண்டிருந்தது. யாருக்கும் சாப்பிடும்  எண்ணம் இல்லாமல் என் முகத்தைப் பார்த்து கொண்டு இருந்தனர். நான், என்ன செய்யலாம், என்று வண்டியை திறந்து மோபைலை எடுத்தேன். வரிசையாக மிஸ்டு கால்கள் கிடந்தன.

பின்னால் ஒரு வண்டி வந்த சத்தம் கேட்டது

ரீ என் முதுகில் தட்டினார்

திரும்பினேன் அப்போது நாங்கள் காலையில்  பார்த்த கன்ட்ரோலர் உள்ளே சென்று கொண்டிருந்தார். எனக்கு குழப்பமாக இருந்தது நான் யோசித்ததைப் பார்த்து ரீ என்னிடம், “நான் கேட்கிறேன் நீ என்னை அழைத்துச் செல் நீ பேச வேண்டாம் நான் பேசுகிறேன்,” என்றார்.

சரி வயதில் மூத்தவர் என்ன நடக்கிறது பார்ப்போம், என்று அழைத்துக்கொண்டு திரும்பவும் உள்ளே சென்று ஆப்ரேட்டரிடம் செல்லாமல் வலதுபுறம் இருந்த கன்ட்ரோலர் ரூம் சென்றென் வாசலில் நின்று ரீ கம்பீரமாக கமாண்டோ போல் வணக்கம் சொன்னார்
என் வணக்கம் எனக்கே கேட்கவில்லை.

திரும்பிய கன்ட்ரோலர் எங்களை அடையாளம் கண்டுகொண்டு உள்ளே அழைத்தார்.

நான் நடந்தவற்றைப் பணிவாக சொன்னேன்.

கன்ட்ரோலர் ஆப்ரேட்டரின் மேல் அதிகாரி ஆதலால் அவரை வரச்சொல்லி இன்டர்காமில்
அழைத்தார்.. என்னை முறைத்துக் கொண்டே உள்நுழைந்த ஆப்ரேட்டர் காதில் அந்த வருடம் புதிதாக வந்த புளூடூத் காதில் கொம்பு முளைத்தது போல் வினோதமாக தெரிந்தது.

யாரிடமோ தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்த அவர், பிறகு பேசுவதாக சொல்லிவிட்டு
கடுமையாக என்னை பார்த்தார். பின்னர், கன்ட்ரோலரிடம் அலட்சியமாக, “இவர்கள் இருவரும் சைட்டில் இல்லை. அங்கு நடந்தது உங்களுக்குத் தெரியாது மறுநாள் காலை போலிசோ அல்லது செக்யூரிட்டியோ வரும்படி ஆயிருக்கும்.  நல்லவேளை நான் பார்த்து தடுத்து விட்டேன்” இவர்களின் மேலதிகாரிகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். வந்தால் தரலாம், அது வரை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த ரீ பேச ஆரம்பித்தார்.

“சார் வணக்கம்.  என் பேர் ரீ. வட கொரியாவிலிருந்து வேலைக்கு வந்திருக்கிறேன்.. அவர்கள் எல்லாம் எனது ஆட்கள்தான் நான்தான் அவர்களின் லீடர். நீங்கள் சொல்வது போல் அவர்கள் சன்டை எல்லாம் போட்டுக் கொள்ளவில்லை..  தயவு செய்து என் கையைப் பாருங்கள் அவர்களில் வயது குறைந்த அந்தச் சின்னவன்  சட்டங்களை முதுகில் அடுக்கி கொண்டு திரும்பும்போது வயது மூத்தவன் மேல் சட்டம் தட்டியிருக்கிறது. அதனால் அந்த மூத்தவன் சின்னவனை தள்ளியிருக்கிறான். அவர்களுக்குள் எந்த சண்டையுமில்லை நீங்கள்தான் பெரிதாக  நினைத்துக் கொண்டு விட்டீர்கள்”

“ரீ இப்படி கோமாளி போல் அவர்கள் முன்னால் செய்ததால் என் மனம் தவித்து அவமரியாதை செய்வார்களோ என்று அஞ்சியது  நல்ல வேளை, எதுவும் நடக்கவில்லை.. நான் அவர்கள் கண்களைப் பார்த்தேன். இருவர் கண்களும் ரீ  மேல் நிலைகுத்தி இருந்தது.

ரீ தொடர்ந்தார்.

“நான் பொதுமான தன்டனையைச் சொல்லி விட்டேன். இப்போது நீங்கள் கிளையண்ட்டை கூப்பிட்டு வரச் சொல்லியுள்ளீர்கள் அவர் வந்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகிவிடும். ஏன் என்றால் இந்த காங்கீரிட் நேற்றே முடிய வேண்டியது. துரதிருஷ்டவசமாக அந்த எகிப்திய காங்கீரிட் பூம் பிளேசர் ஆப்ரேட்டர் யானையின் துதிக்கை போல் தொங்கிய அந்த பைப்பை தாங்கு கட்டையில் விழும்படி காங்கீரிட்டை பிடித்து விட்டதால் கட்டைகள் நெகிழ்ந்து இடம் மாறியதால் பலகை திறந்து கொண்டு காங்கீரிட் எல்லாம் வெளியேறி விட்டது அதனால் இதோ நிற்கிறாரே இந்த லீடரும் நானும் எனது ஆட்களும் மேலும் மேலும் தண்டிக்கப்படுகிறோம்.

“நான் இன்று போல் எப்போதும் எனது ஆட்களைப் பேசியது இல்லை. அதுவும் குற்றமிழைக்காத அவர்களுக்கு ஆத்திரத்தில் தண்டனை சொல்லிவிட்ட நான் எப்படி உறங்குவேன் என்று தெரியவில்லை.”

“அப்படி என்ன தண்டனை?” என்று கேட்டார் கன்ட்ரோலர்

சிறிது செருமி ரீ தொண்டையைச் சரி செய்து கொண்டார்.

“சார் நாங்கள் அதிகாலை 5 மணிக்கு எழுந்து வரிசையாக ஒவ்வொருவராக காலைக் கடனை முடித்து  6 மணிக்கு பஸ் ஏறி 7 மணிக்கு வந்திறங்கி வே;லை தொடங்குகிறோம் .  தொடர்ந்து வேலைதான் 12 மணிக்குதான் சாப்பாட்டுக்கு கலைவோம் அதுவரை வெறும் தண்ணீர்தான்  பிறகு இரவு சாப்பாடு 9 மணிக்குதான் இடையில் எங்களுக்கு ஒன்றும் கிடையாது.. நான் இன்று இரவு அவர்களுக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி விட்டேன்,”  என்று அவர் சொல்லி நிறுத்தியதும் பல நாட்டினரும் வந்து சேவை செய்வதனால் சுல்தானைப்போல் வாழும் இருவரும் அதிர்ந்து பார்த்தனர். இருவருக்கும் முகம் வாடி விட்டது என்ன சொல்வார்களோ என்று நான் அதிர்ச்சியோடு ரீயை பார்த்தேன்

ரீ தொடர்ந்து, “சார் என்னை நம்புங்கள் நாங்கள் பல ஆயிரம் மைல் தூரம் தாண்டி இங்கு வேலை செய்வது எதற்கு தெரியுமா உங்களுக்கு? எங்கள் அரசுதான் எங்களை இங்கு வேலை செய்ய அனுப்பி உள்ளது. நாங்கள்  வேலை செய்வது அரசுக்குதான் செல்லும்
மக்கள் எல்லாருக்கும் கிடைப்பதுதான் எங்களுக்கும் சிறிதும் அதிகம் கிடைக்காது”,, என்று சொல்லிவிட்டு அமைதியாகி விட்டார்.

ஆப்ரேட்டரும் கன்ட்ரோலரும் எழுந்து விட்டனர்,

ரீ, “சதிக்” என்று சின்னதாகப் புன்னகைத்தார்…

சதிக் என்றால் நண்பன்….