அபத்தக் கவிகளும் அற்ப மதுவும் 

 
உடலை உருக்கி 
சொற்களில் 
வடிக்கும் வாதை 
கரைந்து நெளிந்து உருமாறி 
கனவுகள் 
வழியும் ரசவாதம் 
கோடியிலொருவனாய் 
கற்ற வித்தை 
 
ஆயிரமாயிரம் வருடம் 
கோடானுகோடி பாக்கள் 
கொட்டித் தேடி 
சலித்து வடித்து 
சுவை தேர்ந்து 
உயர்த்தும் சமூகம் 
அரற்றுவது ஒன்றே 
 
அற்ப மது 
தனியொருவனின் முயக்கம் 
 
பீடம் தேர்ந்த 
நீயோ 
எங்களில் கோடியிலொருவன்  
பேசாப் பொருள் 
பேசத் துணிந்தவன் 
 
பணயப் பொருளாய் 
உயிரைத் தொலைப்பவன் 
 
கூறவந்தது முடிந்ததா 
தவறற்ற மொழியின் 
தேர்வு 
நிச்சயப்படுத்தப்பட்டுவிட்டதா 
திரும்பிப் பார்ப்பதற்கும் 
எதிர்நோக்குவதற்கும் 
உன் தடம் 
குழப்பமின்றி 
பதிக்கப்பட்டுவிட்டதா 
 
இல்லையெனின் 
உன் அற்ப மது
உன்னோடு 
எங்கள் ஆதங்கம் 
எங்களோடு 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.