அலாதியாய் வெடிக்கும் காற்று
அசைவற்ற
என் தனிமையையும்
என் மௌனத்தையும்
இசைக்கத் தொடங்குகிறது.
ஆர்ப்பரித்த
என் ஆழி
கனா தந்த என் யாக்கை
எல்லாம் வாசனையற்றும்
உயிரற்றும்
இவ்வுலகில் வீழ்ந்து கிடக்கின்றன
வலிமையான போராட்டம்
தொடங்கியிருக்கிறேன்.
நேரிடையான சம்பவங்களின்
நிழல்களுக்குள்
ஆழமாய் வீழ்த்தப்பட்ட
பால்யம் என்கிற
துரோகத்தின் துன்பியம்
நிலமெங்கும் வழியத்தொடங்கியதன்
கோத்திரம் புரியவில்லை
அன்பின் மூதாதையத்தை
அளவீடு செய்யத் தெரியாத
நபராகவே நான் வாழ்ந்திருக்கிறேன்
என்கிற பின்னணி நாகரீகத்தை
பின்னரே அறிந்தேன்.
உயர்ந்த அன்பின்
மதுக் கோப்பை எங்கும்
நுரை தள்ளியபடி
தனிமை முளைத்து நின்ற கதை
நேற்று அறைக்குள் புகுந்த
சர்ப்பமொன்றின் விஷத்துளியிலிருந்து
நான் கவனிக்கத் தொடங்குகிறேன்.