குளத்தின் மீது பிரதிபலிக்கும் மரத்தின் மீது கல்லெறிகிறாள். கல்லேதும் விழாமலே கல் விழுந்ததைப் போல குளம் சலனமடைகிறது. மரமோ அசைவற்ற குளம் போல நிற்கிறது, கிளைவிரித்து. வந்தமர்ந்த காக்கைகள் வெயில் உலர்த்திக்கொண்டு வழக்கம்போல பழங்களை கொத்திச் சென்றன. குளத்திலிருந்து இலைகள் சில உதிர்ந்து மரத்தின் மீது மிதந்தன. அப்போது கூட அவளெறிந்த கல் திரும்பவில்லை.