மராத்திமொழி கவிதைகள்
மூலம் : கிஷோர் கதம் – சௌமித்ரா
ஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்
தமிழில் : தி. இரா. மீனா
1.
வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு கடினமானவையாக இருக்கப் போகின்றன
நீ திரும்பிப் பார்க்கும்போது
உன்னால் ஒரு வெறுமையான வாழ்க்கையையாவது பார்க்கமுடியும்,
ஆனால் வரப்போகும் நாட்களை நினைத்துப் பார்க்கும்போது
நீ ஒரு பார்வையற்றவன் என்பதை உணர்கிறாய்.
பாதங்கள் சாலையில் தயங்கிப் போகின்றன .
எனவே சாலைகளின் திசைகள் நம்முடையவை
இப்போது உன் காலடிக்கான இடத்தை நீ பார்க்கக் கூடமுடியாது
இப்போது சுவாசிக்குமளவே காற்றை நினைக்கமுடியும்
காலையில் உன் கண்கள் திறக்குமேயானால்
நீ தூங்கினாய் என்று நினைத்துக்கொள்
நிழல் உன்மீது விழுந்தால்
கடைசியாக அந்த மரத்தைப் பார்த்துக்கொள்.
தலைக்கு மேல்பறக்கும்
பறவையிடம் திரும்பிவருவதற்கான உறுதிமொழியையை எதிர்பார்க்காதே.
இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் போது
என் கண்கள் பனிக்கின்றன.
நேற்று நடந்த அல்லது அதற்கு முன்தினம் நடந்த
அல்லது சில வருடங்களுக்கு முன் நடந்த துயரங்களுக்காக அல்ல என் கண்ணீர்
வரப்போகும் நாட்களுடன் வரவிருக்கும் துன்பங்களுக்கானவை அவை .
உண்மைதான் !
வரவிருக்கும் நாட்கள் எவ்வளவு
கொடுமையானவையாக இருக்க வேண்டும்….
2.
ஓ, கடவுளே !
நீ எங்கேயாவது இருக்கிறாயா?
நீ உண்மையாகவே இருக்கிறாயா?
தனிமையான தவிர்க்கமுடியாத
இந்த நீண்ட நீண்ட சாலை எனக்கு வேண்டாம்
உன் இருப்புடனும் இருப்பின்மையுடனுமான
பரபரப்பு எனக்கு வேண்டும்.
நீ விரும்பினால் வந்து விட்டுப் போகலாம்
ஆமாம்,நீ எங்கேயிருக்கிறாய்?
எனக்கு உன்மீது நம்பிக்கை வரவேண்டும்.
நீ இருக்கிறாயா அல்லது இல்லையா
என்று தெரியாமல்
நீ இருப்பதாகவே நினைத்து நான் வாழ்கிறேன்.
நமக்குள்ளே நடக்காமலே இருக்கின்ற
எல்லாமும் எனக்கு நினைவிலிருக்கிறது.
உன் இருப்பு இருப்பின்மை எனும் நாடகத்தில்
என் இருப்பு உன்னுடையதாகிறது,
ஆனால் நான் மனிதன்
என்னை அப்படியே இருக்கவிடு,
நீயும் என்முன் மனிதனாய் வா.
நான் தனியாக இருக்கிறேன்.
நீ எங்கிருந்தாலும் வா
உண்மையில் நீ எங்கேயாவது இருந்தாக வேண்டும்.
இருக்கிறாய் அல்லவா?
oOo
நன்றி : Marathi Poetry 1975—2000 Sahitya Akademi 2013