நான் முதலில் பார்த்தது என் பெயரை. இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அவள் அந்த காகிதத்தை பிடித்துக்கொண்டிருந்தாள்.
“கூபோ ஸான்?” என்று நான் கேட்டவுடன். “ஹை”, “நீங்கள் தான்..” என்று என் பெயரை தப்பாக உச்சரித்தாள். நான் சிரித்தபடி, ‘எஸ்’ என்றேன்.
நரீதா விமானநிலையத்திலிருந்து நாங்கள் ஒரு ரயிலில் ஏறினோம். மணி இரவு ஏழு மணி. உயேனோ என்னும் ஸ்டேஷனில் ரயிலைவிட்டு இறங்கி இன்னொரு ரயிலை பிடித்தோம். வழி நெடுக எங்கும் வண்ண வண்ண மின்சார விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன. அதை தவிர சிக்னலுக்காக நிற்கும் வண்டிகளின் விளக்குகள். நான் இது போன்ற காட்சியை இதுவரை பார்த்ததில்லை. ஒரு நீளமான தெரு முழுக்க விளக்குகள். சுவரில் ஏதோ டிவி ஸ்க்ரீன் போன்ற ஒன்று படத்தை காட்டிக்கொண்டிருந்தது. அந்த தெருவில் எங்கும் இருட்டு என்பது இல்லை. குதூகலத்துக்காகவே உருவாக்கப்பட்ட தெரு போல் இருந்தது. மனிதன் சொர்க்க லோகத்தை மண்ணுக்கு கொண்டு வரும் முயற்சி இது என்று எண்ணிக்கொண்டே, “வாவ்” என்று உரக்க கூவினேன். கம்பார்ட்மெண்டில் ஒரு சிலர் என்னை திரும்பி பார்த்தார்கள். எனக்கு வெக்கமாக இருந்தது. அவளை பார்த்து, “ஐ ஆம் ஸாரி” என்றேன்.
அவள் புன்னகைத்தாள், “இட் இஸ் ஓகே. இது கின்சா. எப்பொழுதும் கோலாகலமாக இருக்கும். நான் இந்த தெருவை முதலில் பார்த்தபொழுது இப்படித்தான் கத்தினேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
“ஒ. நீ ஜபனீஸ் இல்லையா?”
மறுபடியும் சிரித்தாள். “நான் பிறந்து வளர்ந்தது ஒரு கிராமத்தில். படிப்பு முடிந்த பின் வேலைக்காக டோக்யோ வந்தேன்” என்றாள்
“ஜப்பானில் எல்லா இடங்களும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்”
அவள் மறுபடியும் சிரித்தாள். “ஜப்பான் கிராமங்களை பார்த்தால் டோக்யோ வேறு ஒரு உலகம் என்பது புரியும்” என்றாள்
நாங்கள் இறங்கவேண்டிய கவாசாகி ஸ்டேஷனில் வண்டி நின்றது. அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு நான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு சென்றோம். நான் செக் இன் செய்த பிறகு அவள் கிளம்பினாள். அடுத்த நாள் காலை வந்து என்னை அலுவலகத்துக்கு அழைத்து செல்வதாக சொன்னாள்.
“எல்லா ஜப்பான் பெண்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். நாளை உன்னை அடையாளம் கண்டுக்கொள்வேனா என்று சந்தேகமாக இருக்கிறது” என்று சொன்னவுடன் ‘களுக்’ என்று சிரித்துவிட்டு அந்த சிரிப்போடு இரண்டு முறை சிரம் தாழ்த்தி விடை பெற்று சென்றாள்.
அடுத்த நாள் காலை அவள் வந்து என்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்றாள். எனக்கு ஸ்டேஷனிலிருந்து நடந்து ஹோட்டலுக்கு நடந்து செல்ல வழி காட்டுவதற்காக மாலையில் என்னுடன் வந்தாள். நாங்கள் நடந்து செல்லும் வழியில் சாலையோரமாக சற்று வயதான பெண்மணி கையில் ஒரு ஹாண்ட்பாகுடன் நின்றுக்கொண்டிருந்தாள். மூஞ்சி முழுவதும் பவுடர் அப்பியிருந்தாள். யாருக்காகவோ காத்துக்கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டேன்.
“ஏன் இவ்வளவு பவுடர் பூசியிருக்கிறாள்? இங்கு மற்ற பெண்கள் எல்லாம் இது போல் பூசிக்கொல்வதில்லையே. இந்த வயதில் ஏன் இப்படி மேக்கப் செய்துக்கொண்டிருக்கிறாள்?” என்று கேட்டேன்
அவள் ஏதோ சொல்ல வாயெடுத்தாள் ஆனால் ஒன்றும் கூறவில்லை. அடுத்த நாள் ஜப்பானில் ஒரு வருடத்திற்கு மேலாக வேலை செய்துக்கொண்டிருந்த முருகானந்தத்திடம் இதை பற்றி கேட்டேன். “தெரிஞ்சாலும் நீ ஒண்ணும் செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டு உரக்க சிரித்தான். அன்று மாலையில் நான் திரும்பி செல்லும் பொழுது வேறொரு நடுவயது பெண்மணியை அதே இடத்தில் நிற்பதை பார்த்தேன். சாலையை கடந்து எதிர்புறமாக நடந்து சென்றேன்.
இரண்டு நாட்கள் கழித்து அவள் அலுவலகத்தில் என் மேஜை பக்கம் வந்தாள். “உன் அழகான முகத்தை பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன” என்றேன். சற்று நாணினாள். இரண்டு முறை தலையை குனிந்து ‘நன்றி’ என்றாள். ‘இந்த சனிக்கிழமை ஹகானோ என்னும் இடத்துக்கு செல்கிறோம். நீ வருகிறாயா?” என்று கேட்டாள். “நீ அழைத்தால் நான் எங்கு வேணாலும் வருவேன்” என்றேன். மறுபடியும் புன்னைகத்தப்படி இரண்டு முறை தலையை குனிந்து நன்றி சொல்லிவிட்டு சென்றாள்.
சனிக்கிழமை கவாசாகி ரயில் நிலையத்தில் அவளை சந்தித்தேன். அவள் தன காதலனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அவனை அறிமுகம் செய்தாள். (அவன் பெயர் எனக்கு மறந்துவிட்டது.) “யூ ஆர் லக்கி. இவ்வளவு அழகான பெண் உனக்கு கிடைத்திருக்கிறாள்” என்று சொன்னேன். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றாள் கூபோ. சிரித்துக்கொண்டே அவனிடம் ஜப்பான் மொழியில் ஏதோ சொன்னாள். அவன் சசிரித்தபடி என்னை பார்த்து “எஸ். எஸ்.” என்றான். இருவரும் ஒரே சமயத்தில் தலை குனிந்து நன்றி சொன்னார்கள். நானும் இரண்டு முறை தலை குனிந்தேன்.
“அந்த பெண்ணை பார்த்து எப்பவும் ஏண்டா ஜொள்ளு விடற. நீ வழியறதுக்கு ஒரு அளவே இல்லையா” என்று முருகானந்தம் ஒரு நாள் என்னிடம் கேட்டன். “சும்மா இருடா. நான் ஒண்ணும் வழியாலே”. “எவ்வளவு வழிஞ்சாலும் அந்த பெண் உன்னோடு வந்து பேசறா பாரு, அதுதான் ஆச்சரியமா இருக்கு. வேற பெண்கள் ஓடியிருப்பாங்க”. “ஒனக்கு பொறாமை” என்றேன்.
நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியிருக்கும். ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து, காப்பி கலந்து குடிப்பதற்கு தயாராக இருந்த போது யாரோ என் அரை கதவை தட்டினார்கள். நான் இரண்வாரங்களுக்கு முன் ஹோட்டலிலிருந்து ஒரு அபார்ட்மென்ட் ரூமுக்கு மாறியிருந்தேன். யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் கதவை திறந்தேன். கூபோ நின்றுக்கொண்டிருந்தாள். நான் குஷியாக “ஹாய்” என்று சொல்ல வாயெடுத்தேன். அவள் முகத்தை பார்த்தவுடன் மௌனமானேன். அவள் முகம் வாடியிருந்தது. அவளை எப்பொழுதும் இன்முகத்துடன் பார்த்தே பழகிவிட்ட எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. அவள் உள்ளே வரச்சொல்ல மறந்துவிட்டேன். “உள்ளே வரலாமா?” என்றாள். “வா வா வா” என்று அவளை உள்ளே அனுப்பி கதவை மூடினேன். அவளிடம் சென்று “என்ன நடந்..” என்று கேட்கும் முன் என்னை கட்டிக்கொண்டாள். கட்டிக்கொண்டவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன். இரண்டு நிமிடங்கள் கழிந்த பின், அவள் தன்னை விடுவித்துக்கொண்டு, “ஐ ஆம் ஸாரி. வெறி ஸாரி” என்று சொல்லிக்கொண்டே மூன்று நான்கு முறை தலை குனிந்து குனிந்து வணக்கம் செய்துவிட்டு, “நான் செல்லவேண்டும்” என்று சொல்லிவிட்டு கண்ணில் நீர் தளும்ப வேகமாக சென்றுவிட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இரவு முழுவதும் இதன் அர்த்தம் என்ன என்று யோசித்தபடியே வெகு நேரம் தூங்காமல் இருந்தேன்.
அடுத்த நாள் அவள் என் மேஜைக்கு வந்து எப்பொழுதும் போல் சிரித்த முகத்துடன், “என்னுடன் லஞ்ச் சாப்பிட வருகிறாயா?” என்றாள். அருகில் இருந்த ஒரு இட்டாலியன் ஹோட்டலுக்கு சென்றோம். “இங்கு ச்பாகேத்தி அருமையாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு இருவருக்கும் அதை ஆர்டர் செய்தாள். பிறகு, “நேற்று நடந்ததை மன்னித்துவிடு. ஏன் காதலன் என்னை விட்டு பிரிந்து விட்டான். எங்களுக்குள் நேற்று பெரிய சண்டை வந்தது. கடைசியில் அவனை நான் வேணாம் என்று சொல்லிவிட்டேன். அவனும் நீ இல்லாமல் என்னால் இன்னும் நன்றாக வாழ முடியும் என்று சொல்லிவிட்டு சென்றான். எனக்கு அப்பொழுது யாரிடமாவது சென்று அழ வேண்டும் போல் இருந்தது. உன் ஞாபகம் வந்ததால் உன்னிடம் வந்தேன்” என்றாள். “ஒ. அப்படியா? எதற்காக உங்களுக்குள் சண்டை?” என்றேன். “காதலர்களுக்கு சண்டை சகஜம் தான்” என்றாள். “என்ன சண்டை?” என்று மறுபடியும் கேட்டேன். “நத்திங்” என்றாள்.
அவளை தினமும் பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ என்னுடன் இருக்கும் பொழுது அவளுக்கு மன நிம்மதி கிடைக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். அவளும் மறுபடியும் எப்பொழுதும் போல் சிரித்தபடி பழகினாள்.
ஒரு நாள் இரவு டின்னெருக்கு அவள் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு ஜபனீஸ் ரெஸ்டாரன்டுக்கு சென்றோம். எங்களுடன் அவள் தோழி ஒருத்தி வந்தாள். அவர்கள் ஏதோ ஆர்டர் செய்தார்கள். நான் “எனக்கு வெஜிடேரியன் ஆர்டர் செய்யுங்கள்” என்றேன். “ஒ. நீ வெஜிடேரியனா?” என்று அந்த தோழி கேட்டாள். “இல்லை. ஆனால் ஜப்பானில் மாமிசம் சாப்பிடுவது கடினமாக இருக்கிறது. உப்பு காரம் எதுவும் இருப்பதில்லை. எங்கள் ஊரில் நல்ல மசாலா கலந்த சாப்பட்டை சாப்பிட்டுவிட்டு இங்கு இதை சாப்பிட முடியவில்லை. இந்த விஷயத்தில் எங்கள் ஊர் உங்கள் ஊரைவிட மேலானது” என்றேன். அந்த தோழி சிரித்தாள். “எந்த ஒரு பண்டத்த உண்ணும் போதும் அதன் சுவை தான் நாம் அறிய வேண்டும். எங்கள் சமையல் இந்த கொள்கையை கொண்டது. நீங்கள் எல்லா பண்டங்களிலும் மசாலா சுவையை தான் காண்கிறீர்கள். அதற்கு தான் உங்களால் உண்மையை சட்டென்று கண்டு பிடிக்க முடிவதில்லை. எல்லாவற்றையும் மசாலா மறைக்கிறது” என்று கூறிவிட்டு சிரித்தாள். “அவள் தத்துவத்தில் டாக்டரேட் வாங்கியவள். அதனால் அப்படி பேசுகிறாள். நீ தவறாக நினைக்காதே” என்றாள் கூபோ. “அப்படியில்லை. இந்தியாவில் உண்மையை பற்றி ஆராய்ந்த பல தத்துவ ஞானிகள் இருக்கிறார்கள். வேதம் கொடுத்த ரிஷிகள், சங்கரர், ராமானுஜர், மாதவசாரியார்” எனக்கு இவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள் என்று தெரியாவிட்டாலும் எல்லா பெயர்களையும் அடுக்கினேன். “இவர்கள் எல்லாம் மாமுனிவர்கள்” என்றேன். “அவர்கள் மசாலா இல்லாத சாப்பட்டை சாப்பிட்டிருப்பார்கள்” என்று கூறிவிட்டு அந்த தோழி சிரித்தாள்.
“அவள் சொல்லுவதெல்லாம் நீ பொருட்படுத்தாதே. அவள் எப்பொழுதும் அப்படிதான் எல்லோருடனும் வாக்குவாதம் செய்வாள்”. டின்னருக்கு பின் கூபோவுடன் அவள் வீட்டிற்கு வந்திருந்தேன். இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. “அதை விடு. அதை நான் அப்பொழுதே மறந்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு விளையாட்டாக, “உனக்கு அடுத்த காதலன் கிடைத்தானா இல்லையா?” என்று கேட்டேன். அவள் சிரித்துக்கொண்டே, “விரைவில் கிடைப்பான் என்று நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை பார்த்தாள். “உன் போன்ற அழகான பெண்களுக்கு காதலர் கிடைக்கவில்லை என்றால் என்ன தேசம் இது. ஜப்பானிய ஆண்களுக்கு அழைகை மதிக்க தெரியாது போலிருக்கிறது”. “ஜப்பானிய காதலான் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே” என்றால். “அதவும் சரிதான். இங்கு அமெரிக்கர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றேன். “சரி, நான் கிளம்பவேண்டும். விடை பெறுகிறேன்”.
“மணி பதினொன்றை தாண்டிவிட்டது. நீ இங்கேயே படுத்துக்கொள். நாளை சண்டே தானே. மெதுவாக எழுந்து ரூமுக்கு செல்லலாம்” என்றாள். “ஐயோ வேண்டாம். நான் இங்கு இருந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் ஏதாவது தவறாக நினைத்துக்கொள்வார்கள்.” “இங்கு யாரும் ஒன்றும் நினைத்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை.” “ஆனால் எனக்கு உன்னை பற்றி கவலை இருக்கிறது. யாரும் உன்னை பற்றி தவறாக நினைக்ககூடாது. நான் இப்பொழுது செல்கிறேன். நாளை ஆபீஸில் சந்திப்போம்” என்று புறப்பட்டேன். செல்லும் முன், “நீ இந்த ட்ரஸில் ஒரு ஏஞ்சல் போல் இருக்கிறாய்” என்றேன். அவளுக்கு மகிழ்சியை அடக்கிக்கொள்ள முடியவில்லை. என்னை சட்டென்று கட்டிக்கொண்டு ‘தாங்க்யு, தாங்க்யு” என்றாள்.
நாங்கள் தினமும் சந்திப்பதும், ஒன்றாக சாப்பிட போவதுமாக இன்னும் ஒரு மாதம் கடந்தது. டோக்யோவில் பல இடங்களை எனக்கு காட்டினாள். இப்பொழுது நான் இந்தியா திரும்பும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. “நீ சென்று விட்டு மறுபடியும் வருவாயா?” என்று கேட்டாள். “ஆம். ஒரு மாதம் கழித்து வரவேண்டும். வந்து இங்கு மூன்று மாதம் வேலை செய்யா வேண்டும்”
“அப்படியென்றால் இந்த பிரிவு நிரந்தரமில்லை” என்று சிரித்துக்கொண்டே கூறினாள். “நீ செல்வதற்கு முன் நான் உன்னால் மறக்கமுடியாத பரிசு ஒன்றை கொடுக்க போகிறேன்.”
“அப்படியா. என்ன அது”
“நீ ஊருக்கு என்று கிளம்புகிறாய்?”
“வரும் சனிக்கிழமை”
“நான் வெளிக்கிழமை மாலை உன் ரூமுக்கு வந்து அந்த பரிசை கொடுக்கிறேன்”
வெள்ளிகிழமை மதியம் நண்பன் மோகன்ராஜ் ரூமுக்கு வந்திருந்தான். நான் பாக் செய்ய உதவி செய்துவிட்டு அடுத்த நாள் வழி அனுப்பிவிட்டு செல்வதற்காக வந்திருந்தான்.
மாலை ஏழு மணி அளவில் அழைப்பு மணி ஒலித்தது. கதவு சற்று திறந்து வைத்திருந்தேன். கதவை திறந்து கூபோ ரூமுக்குள் நுழைந்தாள். வேகமாக என்னை நோக்கி வந்தாள். அவள் ரொம்ப மகிழ்சியாக இருந்தாள் என்று அவள் முகம் காட்டியது. அப்பொழுது பாத்ரூமை விட்டு மோகன்ராஜ் வெளியே வந்தான். அவனை கண்டதும் அவளுக்கு தூக்கி வாரி போட்டது போல் இருந்தது.
நான் உரக்க சிரித்துவிட்டேன். “பயப்படாதே. இவன் என் நண்பன். என்னுடன் இன்று இரவு இருந்துவிட்டு நாளை என்னை வழியனுப்ப வந்திருக்கிறான்.”
“ஒ” என்றாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து விட்டிருந்தது. பயத்திலிருந்து இன்னும் அவள் மீளவில்லை என்று நான் நினைத்துக்கொண்டேன்.
நான் சாமான்களை பெட்டிக்குள் அடக்கிக்கொண்டு அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவள் அதிகம் பேசவில்லை. ஊர் திரும்பி செல்லும் உற்சாகம் என்னிடம் இருந்தது. நான் பேசிக்கொண்டே வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஞாபகம் வர, “நீ ஏதோ எனக்கு அன்பளிப்பு கொடுக்க போவதாக சொன்னாயே? என்ன அது” என்றேன்.
அவள் முகம் குழப்பத்தில் இருந்தது போல் எனக்கு தோன்றியது. அவள் தன் கைப்பைக்குள் தேட ஆரம்பித்தாள். ஒரு பேனாவை எடுத்து, “இது நான் சிறு வயது முதல் உபயோகித்த பேனா. இதை பத்திரமாக வைத்துக்கொள்” என்றாள். நான் மறக்கமுடியாத பரிசு என்றால் ஏதோ காஸ்ட்லி ஐடம் இருக்கும் என்று நினைத்தருந்தேன். இதை கண்டவுடன் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அது என் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும், “உனக்கு பிடிக்கவில்லையா?” என்று கேட்டாள். “இல்லை இல்லை நன்றாக இருக்கிறது”, என்றேன்.
“நான் குளித்துவிட்டு வருகிறேன். நீ எங்களுடம் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு செல்” என்றேன். “இல்லை நான் இப்பொழுது கிளம்ப வேண்டும். எனக்கு வேறு வேலை இருக்கிறது”.
நான் லுங்கியில் இருந்ததால் மோகன் அவளுடன் வெளியே சென்றான். அவளை ஸ்டேஷன் வரை விட்டுவிட்டு வருவதாக சொன்னான். நான் குளித்துவிட்டு வெளியே வந்தபொழுது மோகன் ரூமில் இருந்தான். “ஏன்டா. அந்த பெண் ரொம்ப கோவத்துல இருந்தா. என்னை கூட வரவேண்டாம்னு ரொம்ப கறாரா சொன்னா. அவ குரலை கேட்டா அழுதுவிடுவா போல இருந்தது. சரின்னு நான் அவளோட போகல”
“அவ எப்போவும் சிரிச்ச மாதிரி தான் இருப்பா. கோவமா எதுவும் பேசமாட்ட. நீ எதாவது அவகிட்ட பேசினாயா?”
“நான் பேசவே இல்லடா”
இந்தியாவுக்கு திரும்பிய பிறகு கூபோவுடன் தொடர்பு அறுந்து போனது. என்னை வேறு ப்ராஜெக்ட்டுக்காக அமெரிக்கா அனுப்பினார்கள். மூன்று வருடங்களுக்கு மேல் அமெரிக்காவில் வேலை செய்தேன். ஒரு நாள் மதியம் உணவு உண்ணும் பொழுது சட்டென்று அவள் எதற்காக அன்று மோகனிடம் கோபமாக பேசினாள் என்பது புரிந்தது.