ராஜேஷ் ஜீவா
அழுகின்ற குழந்தைக்கு
விளையாட்டு காட்ட
மியாவ் மியாவ் என்றவன்
பின்னர் உற்றார் ஊராரிடமும்
பூனை மொழியில் பேசினான்
கனைத்தும் செருமியும்
பெருங்குரல் எழுப்பியும்
பழைய குரல் திரும்பவில்லை
அவனைப் பார்க்கும் வேளைகளில்
தெருநாய்கள் உர்ரென்று முறைக்க
வீடு இருக்கும் காம்பவுண்டில்
எலித்தொல்லையே இல்லையென
மனைவி பெருமை பேசினாள்
மருந்துக்கும் புன்னகைக்காத
உயரதிகாரி சூத்தைப்பல் தெரிய
நேற்று சிரித்தே செத்தார்
வீட்டுப்பூனையொன்று
குளித்து தலைசீவி பவுடர் பூசி
அலுவலகம் போய் வருவதை
ஊர்ப்பூனைகளும்
காட்டுப்பூனைகளும்
பேசிக்கொள்வதாய் கேள்வி