இனி யாரும்
அவனிடம் போய்
எப்போது சொல்வாய் என்று கேட்காதீர்கள்.
ஒரு மெல்லிய மௌனத்தினை கொஞ்சம் கொஞ்சமாய்
மொழிபெயர்க்க தொடங்கியதிலிருந்து
அவனிடம் சொற்கள் இல்லை
இப்போது
அதை எப்படி பிரயோகிப்பது என்பதையும் மறந்துவிட்டான்.
தெரிந்தும் தெரியாமலும்
ஒரு பரிபூரண சுழியத்துக்குள்
உழன்றுகொண்டிருக்கிறான்
உங்களுக்கு இதெல்லாம்
ஒருவிதமான மிரட்சியாய் இருக்கலாம்
எந்தவித பரிச்சயமுமில்லாமல் இருக்கலாம்
ஆகையால் அவனை அப்படியே விட்டுவிடுங்கள்.
அவன் சின்ட்ரெல்லாவின் பிரதிபதிலுக்காக காத்திருக்கும் தேவகுமாரன்.
கொஞ்சமும் சுவாரஸ்யமற்ற
அந்த சபிக்கப்பட்ட காத்திருப்பு நாட்களை
கடத்த இயன்றவரை
இதுவரையிலும் அவளுக்காக காகிதத்தில் மையலிட்டு
காதலை எழுதி நிரப்பிக்கொண்டிருக்கிறான்
சிலவற்றை
பத்திரப்படுத்திக் கொள்கிறான்
சில சமயங்களில்
வெற்றுக் காகிதத்தை
முத்தமிட்டு சிரிக்கிறான்
இப்படியே மெல்ல நகர்கிறது
இவனது நாட்கள்
நீளும் இந்த இரவின்
சப்தமற்ற நிசப்தங்களைப் போல..
ஆம்
அவனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அவள் முடிவி்லா காலத்தின் தேவதைகளின் தேவதை சின்ட்ரெல்லாவின் பிரதி பதிலுக்காய்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்
தேவகுமாரன் என்று
அதனால்
இனி யாரும்
அவனிடம் போய்
எப்போது சொல்வாய் என்று கேட்காதீர்கள்