ஹூஸ்டன் சிவா கவிதைகள்

ஹூஸ்டன் சிவா

புகைப்படம்

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
கடக்கும் கணம்
துள்ளும் சிறுமி
எத்துப் பற்கள்
மின்னும் கண்கள்
பறக்கும் கூந்தல்
மிதக்கும் மழைத்துளிகள்
காலம் இமைக்கவில்லை
இன்னும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்

oOo

தனியில்லை

இன்று அதிகாலை துயில் விழிப்பில்
விழிகளில் நீர் கோர்த்து வழியவில்லை
சுயபச்சாதாபத்தில்
எப்போதும் போல்
தனிமையில் வராது போனது ஏனென்று
யோசித்து பின் உறங்கி மதியம் எழுந்து
கண்ணாடியில் முகம் பார்க்கையில்
விழிகளில் நீர் கோர்த்து வழிந்தது
சுயபச்சாதாபத்தில்
எப்போதும் போல்
தனிமையில் வராது இனி

oOo

தகப்பன் பிள்ளை

நீண்ட நெடிய தகப்பன்களைக்
கண்டு வியக்கும் பிள்ளைகள்
அத்தகப்பன்களின் தோள்களிலேறி
நின்று பயக்கூச்சலிடுகிறார்கள்
கீழே தம் அம்மாக்களைக் கண்டு
கூவிக் கொக்கரிக்கிறார்கள்
பின் அம்மாக்களின் மார்ப்பகங்களில்
முகம் புதைத்து உறங்குகிறார்கள்
கனவுகளில் அத்தகப்பன்களை
வெல்கிறார்கள் சண்டைகளில்
கொல்கிறார்கள் சிலசமயம்
விழித்தவுடன் விதிர்த்து அழுது
ஓடுகிறார்கள் அத்தகப்பன்களிடமே

2 comments

Leave a reply to saravanan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.