யாரால் உறுதியாய்க் கூறமுடியும்
யாரும் யாரைவிட்டும் போகவில்லையென
துயிலுக்கும் விழிப்பிற்குமிடையே
நீந்திச் செல்கின்றன காரன்னப் பறவைகள்
புனல்மேனியெங்கும் நீலப்பிரகாசப் பிரதிபலிப்பு
இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது உதயகாலம்
வல்லோனின் மோதிரத்திலிருக்கும் ரத்தினமென
ஜொலிக்கக் காத்திருக்கிறது விடிவெள்ளி
சப்தமின்றி நம்மெல்லாரின் சொப்பனத்திலும் மெதுவாக
ஒட்டப்படுகிறது ஒரு காணவில்லை சுவரொட்டி
பொழுது புலர்ந்துவிட்டாலோ
ஒரு ஆழப்புதைக்கப்பட்ட புதையலை
வேட்டையாடுபவனைப் போல
நாம் நம்மை தேடிச் சென்றாக வேண்டும்
அருமை வாசகரே, நீங்கள் தயாரா?