நான் சூரியன், ஆனால் என்னைக் கண்டு கொள்ள மாட்டாய் நீ,
நான் உனது கணவன், ஆனால் அதை ஒப்புக் கொள்ள மாட்டாய் நீ.
நான் கைதி, ஆனால் என்னை விடுவிக்க மாட்டாய் நீ,
நான் தலைவன், ஆனால் எனக்குக் கீழ்ப்படிய மாட்டாய் நீ.
நான் உண்மை, ஆனால் என்னை நம்ப மாட்டாய் நீ,
நான் நகரம், ஆனால் அதில் வசிக்க மாட்டாய் நீ.
நான் உனது மனைவி, உனது குழந்தை, ஆனால் என்னைப் பிரிந்து விடுவாய் நீ,
நான் அந்தக் கடவுள், என்னைப் பிரார்த்திக்க மாட்டாய் நீ.
நான் உனது ஆலோசகன், ஆனால் நான் சொல்பவற்றைச் செவிமடுக்க மாட்டாய் நீ,
நான் உனது நேசத்துக்குரியவன், எனக்கு துரோகம் செய்வாய் நீ.
நான் வெற்றிவாகை சூடியவன், ஆனால் என்னைக் கொண்டாட மாட்டாய் நீ,
நான் புனிதப் புறா, என்னைக் கொன்று விடுவாய் நீ.
நான் உனது வாழ்க்கை. ஆ’னால் என்னை அப்படி அழைக்க முடியாத நீ
உனது ஆன்மாவைக் கண்ணீரால் அடைத்து விடு, பிறிதெப்போதும் என்னைப் பழி சொல்லாதே.
மூலம்: I am the Great Sun (From a Normandy crucifix of 1632)by Charles Causley
எழுத்தாளரும் பள்ளி ஆசிரியருமான சார்ல்ஸ் காஸ்லே (24 ஆகஸ்ட் 1917 – 4 நவம்பர் 2003) இங்கிலாந்தின் கார்ன்வால் டிஸ்ட்ரிக்ட்டில் பிறந்தவர். அவரது எழுத்துகள் எளிமைக்கும் நேரடித் தன்மைக்கும் நாட்டுப்புறப் பாடல்களை ஒத்திருந்தமைக்கும் குறிப்பாகக் கவனம் பெற்றவையாகும். முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட காயங்களால் இவரது தந்தை மரணிக்கவும் 15வது வயதில் பள்ளிப் படிப்பைத் துறந்து குடும்பத்தைக் காப்பாற்ற அலுவலக ஏவலாளாகப் பணிக்குச் செல்ல நேர்ந்தவர். பின்னாளில் இரண்டாம் உலகப் போரின் போது கடற்படையில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். போர்க்கால அனுபவங்களைத் தனது கவிதைகளிலும், சிறுகதைகளிலும் பகிர்ந்திருக்கிறார். தான் படித்த பள்ளியிலேயே சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். காஸ்லேயின் பிற கவிதைகளின் பாடு பொருட்களாக இருந்தவை நம்பிக்கை, விசுவாசம், பயணம், நண்பர்கள் மற்றும் குடும்பம். போகவும், குழந்தைகளுக்காக இவர் எழுதிய கவிதைகள் பிரபலமானவை. 1951ஆம் ஆண்டில் தொடங்கி வாழ்நாளின் இறுதி வரையிலுமாகத் தொடர்ச்சியாக எழுதி, பல நூல்களை வெளியிட்டவர். பல விருதுகளைப் பெற்றவர். முக்கிய இலக்கிய அமைப்புகளில் உறுப்பினராகத் திகழ்ந்தவர். அரசு மற்றும் பல்கலைக் கழகங்களில் கெளரவப் பதவிகள் வகித்தவர்.
நிறைவான தமிழாக்கம்