ஜே. பிரோஸ்கான்- இரவைத் தின்று ஏப்பமிடுதல், ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

ஜே. பிரோஸ்கான்

இரவைத் தின்று ஏப்பமிடுதல்
ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

இரவைத் தின்று ஏப்பமிடுதல்

பின்னோக்கிய ஆதி பரம்பரையின்
முதல் மூன்றுக்கு பின்னரான
பரம்பரையின் முதல் தலைமுறை நான்.
அன்று சூஃபிசம் பயிற்று வைத்த
ஏழாவது பரம்பரையின் இரண்டாம்
தலைமுறை என் உம்மம்மா.
மாயலிஷம் மந்திர உபாயம்
பெருகிப் பரவி நின்ற ஆதிக் காலமதில்
சூஃபிசம் வழியும் சொற்களால்
சைத்தானை விரட்டும் கலை
என் பரம்பரையின் குருதியில்
உயிரோட்டம் பெற்றிருந்த சேதி
நேற்றுக்கு முந்தைய நாள்
பரண் மேல தூசி படிந்திருந்த
ஆதி நூலொன்றில் உம்மம்மாவின்
மையெழுத்து எனக்கு அடையாளப்படுத்தியது.
நான் இப்போது
உறக்கத்திலிருக்கிறேன்
கனவின் முடிவில் நான்
சில ரகசியங்களைச் சொல்லாமல்
விழித்துக் கொள்ள வேண்டுமென்பதாக
எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.
நான் ரகசியங்களைச் சொல்ல வேண்டுமானால்
நீங்கள் என் உறக்கத்தை இன்னுமொரு
இரவு நீடித்து தர வேண்டும்.
..

ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

பருகி முடித்த ஒரு குவளை
பழரசத்திலிருந்து
தனியாகப் பிரித்தறிந்த
புத்தி ததும்பலை
அந்த இரவு வாசித்துக் கொண்டிருந்தது.
இசையால் நிறைந்த ஒவ்வொரு
ஆதி உம்மத்தும்
தத்தமது சந்தோசங்களை
பகிர்ந்தளித்துக் குதூகலித்து கொள்கிறது.
மது நிரம்பி வழியும்
ஆண் தேவதைகள்
ஆளுக்காள் நடன மாதுக்களை
ரப்பான் இசைப்பது போல்
மெல்லமாக வருடி ருசிக்கிறார்கள்.
ஆட்டமாவு பெரும் ரொட்டிகளும்
தடை செய்யப்பட்ட மிருக மச்சமுமென
விருந்தளிப்பு விழா நடந்தேறுகிறது.
அவ்வூரின் எதிர் வாசிகள்
அவசர அவசரமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஊர் எல்லையில் பதாதைகளை.
இங்கே மனிதர்கள் வாழுகிறார்கள், ஜாக்கிரதையென.
மேய்ச்சலுக்கேனும் ஆட்டு மந்தைகள்
அவ்வூரை நெருங்கியதில்லை.
கறி இறைச்சிகளாக
செல்வதை விடுத்துமென
ஆட்டிடையானொருவனின்
அரேபிய கதையொன்று முடிகிறது.

ஜே.பிரோஸ்கான்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.