இரா கவியரசு
காய்கின்றன
உள்ளாடைகள்
வெறியோடு
அணிந்து பார்க்கிறது
திரும்பத் திரும்ப
அவிழ்க்கும் மனம்
கனமுள்ள உடலைத்
திணிக்கின்றன கண்கள்
நிலைகுலைந்து சொட்டுகின்றன மௌனங்கள்
துணியாக வெட்டியவனுக்கு,
தைத்தவனுக்கு,
பொம்மைக்கு அணிவித்தவனுக்கு,
விற்கும் போது
திறந்து காட்டியவனுக்கு,
நெருடல்கள் ஏதுமற்று
இயல்பாகவே இருந்தது
அதற்குள்
துடித்துக்கொண்டிருந்த இதயம்
பார்க்கப்பட்டதில்லை
திருடி
ரகசியமாக
பூட்டிய அறைக்குள்
முகர்ந்து பார்க்கும்போது
அந்தரங்கம் தொட்ட
அவமானத்தில்
சுருண்டு கொள்கிறது
வண்ணங்கள்
வெளிறிப் போகின்றன
வக்கிரத்தின் பெருமூச்சில்
நிம்மதியாக
உறங்குகின்றன
யாரும் அணியாத
உள்ளாடைகள்